Sunday, June 4, 2017

Kaaterskill Falls

வீட்டிலிருந்து ஒரு மணிநேரத்தில் கேட்ஸ்கில்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 79m உயர இரண்டடுக்கு அருவி Kaaterskills Falls. நியூயார்க் மாநிலத்தில் உயரமான அருவியும் கூட. வருடத்தின் வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு அழகினைச் சுமந்து செல்லும் அருவியை கண்டு களிக்க மக்கள் கூட்டமும் நன்கு இருக்கும். மலைகளும் மரங்களும் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் அருவி. பனி உருகி மழைக்காலத்தில் அருவியில் நீரோட்டம் அதிகமாகவும், கோடையில் குறைந்தும் சில நேரங்களில் வறண்டும் போவதுண்டு. இலையுதிர்காலத்தில் வண்ண மரங்களுடனும், பனிக்காலத்தில் பனி சூழ்ந்தும் இருக்கும். சமீபத்திய பெருமழையில் பாறைகள் கீழே உருண்டு சாலையை செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். அருவியின் கீழிருந்து மேல் செல்ல ஒரு மைல் செங்குத்தான மலைப்பாதையில் சிரமப்பட்டுத் தான் ஏற முடிகிறது. குழந்தைகளைத் தோளில் சுமந்து செல்லும் குடும்பங்கள், வளர்ப்பு நாய்கள் துள்ளிக் குதித்தோட செல்பவர்கள் என அனைத்து வயதினரும் நடைபயணம் செல்ல அழகான ஒரு இடம். மழைக்காலத்தில் மட்டும் ஈர கற்களை கவனித்து செல்ல வேண்டி இருக்கும். இரு வருடங்களுக்கு முன் மலையிலிருந்து வழுக்கி விழுந்து ஒரு பெண் இறந்ததாக செய்திகள் வந்தது. தற்போது இரண்டாவது அடுக்கிலிருந்து மிகவும் செங்குத்தான பாதைகள் சீரமைக்கப்பட்டு அங்கிருக்கும் கற்களைக் கொண்டே படிகளாக்கி இருக்கிறார்கள்.

கோடையில் குழந்தைகளுடன் வந்திருந்த பொழுது அவர்களும் ஆனந்தமாக குளித்து விளையாடி இருக்கிறார்கள். முதல் தளம் வரை சென்று வருவது வழக்கம். சரி, இந்த முறை அருவியின் உச்சி வரை சென்று பார்ப்பதென முடிவெடுத்து நாற்பது ஐம்பது படிகளை சிரமப்பட்டு ஏறி மேலே சென்றால் இன்னும் இருபது நிமிடங்கள் மேலேறிச் செல்ல வேண்டும். சிரமமான பாதை தான் என்றவுடன் 'கலிஃபோர்னியாவில் கடும் வெயிலில் மலையேறின அனுபவம் தந்த பயத்தில் ஐயோ நான் வரலைப்பா. நீங்க போயிட்டு வாங்க. நான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன்' என்று அனுப்பி விட்டு போவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டே ஹாய், ஹலோ சொன்னவர்களை சிரித்துக் கொண்டே கடந்து எப்படியோ நானும் அருவியின் மேல் தளத்திற்கு வந்து சேர்ந்தேன்.

என்னை எதிர்பார்க்காத சுப்பிரமணியும் அம்மா, யூ மெய்ட் இட் என்று சொல்லவும், நல்ல வேளை நீ வந்து விட்டாய். இல்லையென்றால் உன்னை கீழே வந்து அழைத்துச் செல்லலாம் என்றிருந்தேன். ஒன்றும் சிரமம் இல்லியே? இவ்வளவு நல்ல இயற்கை காட்சியை பார்க்கத் தவறி இருப்பாய்.

ஆம், அழகான கேட்ஸ்கில்ஸ் மலையின் அடர்ந்த பசுமைக் காடுகளும், அருவியும் ,பறவைகளும், வன மலர்களும் நிச்சயமாக பார்க்க வேண்டியதே. நல்லவேளையாக 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ'வென்று ஐயப்பன் பாடல்களை மனதில் பாடிக் கொண்டே நானும் மலையேறிவிட்டேன். 

அன்று மட்டும் 2.6மைல்கள் மலையேறி நடந்திருந்தாலும் ஐந்து மைல்களுக்கு மலையேறின களைப்பு! அதிசயமாய் வியர்த்துக் கொட்டியது!

வழியெங்கும் 'குளுகுளு' 'சிலுசிலு' தென்றல் சாமரம் வீசியதில் மலையேற்றம் இனிமையான பயணமாக அமைந்ததில் பரம திருப்தி.

அப்பகுதி விளைநிலங்களில் ஸ்டராபெரிஸ் செடிகள் பழங்களுடன் இன்னும் சிறிது நாட்களில் அறுவடைக்குத் தயாராக! கால்நடைகளுக்கான சோளத்தை கிடங்குகளில் அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். அருவி இருக்குமிடம் சிற்றூருக்கே உரித்த அழகுடன் மனதை கொள்ளை கொள்ளும். எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஊரும் கூட! இனிமையான நாளை கழித்திட்ட இன்பத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.


No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...