Friday, November 24, 2017

எதுவும் கடந்து போகும்

 விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்த பொழுது என்னைக் கடந்து சென்றவர் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்து யோசனையுடன் சென்றார். காலம் கோலத்தை மாற்றி விட்டிருந்த காரணத்தால் அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. ஆனால் எனக்கு அவரைத் தெரிந்து விட்டது. சில மனிதர்களை மறக்க முடியாது. நம் வாழ்வின் அங்கமாக சில காலம் அவர்களும் பயணித்திருப்பார்கள். அப்படித்தான் என் வாழ்வில் அந்தப் பெண்மணியும். அவரைப் போல சிலரால் தான் சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்து சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியும் வந்தது எனக்கு என்று நினைத்தது உண்டு.

வாழ்க்கையே படிப்பினை தானே!

எதிர்பாரா சுனாமி போல பிரச்னைகள் ஒரே நாளில் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட தினத்தில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ளவே நாட்கள் ஆன நிலையில் வாழ்க்கையும் சிரித்த வேதனையானதொரு தருணத்தில் கற்றுணர்ந்த பாடங்களில் இதுவும் ஒன்று.

பொருளாதார நெருக்கடியிலிருந்து குடும்பம் மீள வழி தெரியாமல் பெண்ணாக எதிர்கொண்ட பிரச்னைகளும் ... அதுவரை எவ்வித கவலையுமின்றி  வாழ்ந்து வந்திருந்த எனக்கு கண்முன்னே கனவுகள் சிதறும் வாழ்க்கை கற்றுத் தந்த வலிமிகுந்த நாட்களில்... வாழ்வா, சாவா போராட்டத்தில் சாவது எளிதாகவும், வாழ்வது கடினமானதாகவும் உணர்ந்த தருணம் தான் எத்தனை கொடியது! இகழ்ச்சிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள், தூற்றல்கள், வழக்குகள், புறப்பேச்சுகளைக் கடந்து வருவது அவ்வளவு எளிதல்லவே!

எதிர்பாரா நேரத்தில் முகத்திலறையும் பிரச்னைகளைக் கையாளும் மனவலிமை மட்டும் இல்லாதிருந்தால் இந்தப் பதிவும் தான் இருந்திருக்குமா?

ஒவ்வொரு விடியலும் எத்தகைய கொடிய நிகழ்வுகளைக் கொண்டு வருமோ, பிரச்னைகள் எந்த ரூபத்தில் வரப்போகிறதோ, உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நாட்களுமாய்... போதும் இந்த வாழ்க்கை. முடித்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்த பொழுது வாழ்ந்து சாதிக்க வேண்டுமென்ற வெறியை ஏற்றிக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை அவர்கள் என் வாழ்க்கையை எவ்வளவு அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று! புறக்கணித்தவர்களையும், அவமதித்தவர்களையும் பழிவாங்கிட வாழ்ந்து சாதிப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தோணவில்லை.

தினம்தினம் கேட்காமல் கிடைத்த வரமாய் மலையெனப் பிரச்னைகள் வளர்ந்த பொழுது எதிர்கொள்ளத் தெரியாது மனம் வலித்தாலும் தீர்வை நோக்கியே எண்ணங்களைச் செதுக்கியதில் அருமையான மனிதர்களும் அவர்களின் வழிகாட்டுதலில் விடைகளும் தெளிவாகத் தெரிந்தது.

ஒவ்வொரு பிரச்னைகளும் விஸ்வரூபம் எடுக்கும் பொழுதெல்லாம் மனதில் எதிர்மறை எண்ணங்களைப் புகுத்தாமல் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவ்வளவு எளிதில் வாய்க்காவிடினும் காலம் செல்ல செல்ல கற்றுக் கொண்டதில் வாழ்க்கையின் அற்புதக்கணங்களை ஆராதிக்கும் மனமும் என்னையறியாமல் என்னுள் புக... வலியுடனான வாழ்க்கையில் பிரச்னையென்று ஒன்றிருந்தால் தீர்வென ஒன்றிருக்கும் என்ற படிப்பினையும் உணர்ந்த பொழுது வாழ்க்கை எளிதாகித்தான் போனது. வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன திடத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். என் தடாலடி முடிவுகள் பலருக்கும் பிடிக்காத பொழுதும் என் மனதிற்கு சரியெனபட்டதைச் செய்வதில் என்றுமே தயங்கியதில்லை. படித்த திமிர், வேலை பார்க்கும் திமிர், சொல்பேச்சு கேட்பதில்லை... புரியாத மனிதர்கள் பேசியது வருத்திய பொழுதும் என் வாழ்க்கை, என் முடிவு என் கையில்... என்னை நானே உணர, வாழ்க்கை அர்த்தமுள்ளதானது.

போலிச்சிரிப்பு, குத்தல் பேச்சு, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் முதுகில் குத்துபவர் சூழ் உலகில் இன்றும் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைப் புன்னகையுடன் எளிதில் கடந்து விட முடிகிறது. அவர்களும் பல வழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள். நான் கடந்து வந்த பாதையை அறியாத மூடர்கள்!

என்னைச் சுற்றி இருந்த நல்ல உறவுகள், நண்பர்கள் கிடைக்கப் பெற்றதே வரம். பிரச்னையுள்ளவர்களைச் சுற்றி இத்தகைய மனிதர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். நாம் தான் இனம் காணுவதில்லை. இன்று ஒன்றுமில்லாத விஷயங்களைப் பெரிதாக்கி வாழ்க்கையை தொலைப்பவர்களைப் பார்க்கையில் பாவமாக இருக்கிறது. பிரச்னைகளிலிருந்து மீளும் வழியைத் தேடாமல் பழியை யார் மீதாவது போடுவதிலும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் தனக்குத் தான் இப்படி வாய்த்திருக்கிறதென கழிவிரக்கம் கொண்டு வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் முக்கியத்துவத்தை அறியாமல் பொருட்களின் மேல் அதிகப்பற்றும் மனிதத்தின் மேல் நம்பிக்கையையும் இழந்தவர்கள் வருந்துவதில் பயனில்லை என்பதை உணரும் நாளில் அவர்களும் வாழ ஆரம்பித்திருப்பார்கள்.

வாழ்க்கை ஒருஅற்புதம். எனக்கு அந்தப் புரிதல் பத்தொன்பாவது வயதில் ஆரம்பித்தது. கல்லூரிப்படிப்பைத் தொடருவதே கடினமாக இருக்க, முகத்தில் புன்சிரிப்புடனும் மனதில் பூகம்பத்துடனும் நாட்களை கடக்க வேண்டிய சூழ்நிலை! கல்லூரிச்சூழல் மட்டுமே ஆறுதலாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்த காலம் அது! மன அமைதி வேண்டிச் சென்ற திருப்பரங்குன்றம் கோவில் மயில் மண்டபமும் மீனாட்சி அம்மன் கோவில் ஆடி வீதிகளும் அறியும் அன்றைய என் மனநிலையை! குழப்பங்களுடன் சென்று தீர்வுகளுடனும் திடமனதுடனும் வெளிவந்த அந்நாட்கள் ... என்னுள் இருந்த வலிமையை வெளிக்கொணர்ந்த வலிமிகு நாட்கள்!

தோல்வி மற்றும் ஏமாற்றத்தின் சுவையறிந்ததாலோ என்னவோ வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்ற பாடத்தையும் வாழ்க்கைச் சக்கரம் என்றும் ஓரிடத்தில் நிலையாய் நிற்பதில்லை என்ற உண்மையையும் புரிந்து கொண்டேன். இன்று நினைத்தாலும் பெரும்வலியுடன் பெருமிதமாக இருக்கிறது. அன்று சிறுமைப்படுத்துவதாய் நாக்கில் நரம்பில்லாமல் பேசி இன்று சிறுமைப்பட்டுப் போன மனிதர்கள் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. உணர்ந்த பொழுதில் வாழ ஆரம்பித்து... பிரச்னைகளை எதிர் கொள்வதில் இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம். அறிந்திட்டேன். கடந்து வந்த பாதையை மறக்கிலேன். கற்றுத் தந்த பாடங்களையும் மனிதர்களையும் மறக்கிலேன். உணர்த்திட்ட மனிதர்களுக்கு நன்றி!

அரவணைத்துச் சென்று நல்வழிக்காட்டிய உறவுகளும், அபய கரம் நீட்டிய உண்மையான நண்பர்களுமே என் வாழ்வின் வரம்.

Count your blessings not problems நான் அறிந்து கொண்ட பாடம்!































































No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...