Monday, December 18, 2017

மதுரைக்குப் போகாதடி...

விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் அங்கு காணும் காட்சிகள் பல கேள்விகளை எழுப்புவதோடு மட்டுமில்லாமல் ஏமாற்றத்தோடு மனதை உறுத்தவும் தவறுவதில்லை.

மதுரை விமானநிலையத்தில் தரையிறங்கும் பொழுதே வறண்டு கிடக்கும் நிலங்கள் மழையின்றி தவிக்கும் மதுரையைப் பறைசாற்றி வரவேற்கும் பொழுதே மனம் கனக்க ஆரம்பித்து விடும். மரங்கள் இல்லாத மதுரையில் கட்டடங்களுக்கு குறைவில்லை. விளைநிலங்களை அழித்து நகரை விரிவுப்படுத்துகிறார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் அதிக விலைக்கு வாங்குவதால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற குற்றச்சாட்டில் சிறிது உண்மை இருந்தாலும் தன் தகுதிக்கு மீறிய சுமையை சுமந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது மதுரை. விமானநிலைய எல்லையை விட்டு வெளிவந்த உடனே கண்ணில் தெரிவதெல்லாம் சாலையோர குப்பைக்கிடங்குகள். சுற்றி மொய்க்கும் ஈக்கள், பன்றிகள் கூட்டம். எல்லை வரை பரந்து வளர்ந்திருக்கும் குடியிருப்புகள்! மழை நீர் குட்டையாக தேங்கி குப்பையுடன் கலந்து பரப்பும் துர்நாற்றத்தை வெகு எளிதாய் கடந்து செல்லும் மனிதர்கள் ஆச்சரியம் என்றால் குப்பையைக் கிளறி பிளாஸ்டிக் குப்பைகளையும் சேர்த்து உண்ணும் கால்நடைகள்...சொல்ல வார்த்தைகள் இல்லை. சுவாச் பாரத் திட்டத்தை மதுரையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியினரே செயல்படுத்தவில்லையோ? மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை கொண்டு செல்வதில் சுணக்கம் ஏன்? பள்ளிகளில், வீடுகளில், அலுவலகங்களில் இருந்து தொடங்கலாமே? ஊர் கூடி தேர் இழுத்தால் முடியாத காரியம் என்று ஒன்று உண்டா? என்று உணரப் போகிறோம் நாம்?

வில்லாபுரத்திலிருந்து அவனியாபுரம் வரை ஊரும் விரிந்து கால்வாயை அடைத்து கட்டடங்களும் பரந்து மனிதர்கள் நடமாட்டமும்,  இருசக்கர வாகனங்களின் இரைச்சலும், பள்ளிப் பேருந்து, வேன்களில் புளிமூட்டைகளாக மழலைப்பட்டாளங்களும் அதிகாலையில் பயணிக்க...சாலையோர நடைபாதைகளையும் ஆக்கிரமித்திருந்த கடைகளை கடக்கும் மனிதர்களை உரசிக்கொண்டே செல்லும் மனிதாபிமானமற்ற ஷேர் ஆட்டோ வண்டிகளும்...புகையை இலவசமாக முகத்தில் வீசிக்கொண்டே கடந்து செல்லும் லாரிகளும்...மாசுக் கட்டுப்பாடு வாரியம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? சமீபத்தில் அதிகமாக கேள்விப்பட்டது ஆஸ்துமா, தோல்வியாதிகள் மற்றும் அலர்ஜியால் மக்கள் படும் அவதிகளை!

சாலையில் பயணிக்கும் மனிதர்களுக்குத் தான் எத்தனை அவசரம்? விடாமல் காது செவிடாகும் வரை ஒலிப்பான்களை அலற விடுகிறார்கள். தலைக்கவசம் எதற்கு என்று சிலர் மாட்டிக்கொண்டு செல்லும் ஹெல்மெட்களைப் பார்த்தால் தோன்றுகிறது. அவர்களும் பாவம் தான்! காலையில் அதுவும் உக்கிரமான மதுரை வெயிலில் வியர்த்து விறுவிறுக்க... குண்டும் குழியுமாக சாலைகள். அதைச் சரிசெய்தாலே சாலை விபத்துகள் பலவற்றைத் தடுக்கலாம்.

வேகமாக பைக்கில் அடுத்தவரை முந்திச் செல்பவர்களையும், பின்வரும் வாகனங்களைப் பற்றின பிரக்ஞை ஏதுமின்றி நினைத்த இடத்தில் வண்டிகளை நிறுத்தி தொடருபவர்களை விபத்துக்குள்ளாக்கும் அவலங்களுக்கு என்று தான் விடிவு காலம் பிறக்குமோ?

மீட்டர் என்பது தேவையில்லாத ஒன்று. நாங்கள் சொல்வது தான் கட்டணம் என்று அநியாயமாக வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களை கேட்பாரில்லையா? இவர்களின் பின்னணியிலும் அரசியலே! ஆனால் ஜீரோக்கள் பேசுவதோ கேரளாவைப் பார். கர்நாடகாவைப் பார் என்பது தான்.

சாலையோர காபிக்கடைகளில் வடை, பஜ்ஜி, சொஜ்ஜியை சாப்பிட்டு விட்டு 'அசால்ட்டாக' தெருவில் தூக்கியெறியும் குப்பைகளை மொய்க்க காத்திருக்கும் ஈக்களும், மிச்சம் மீதிக்காக குப்பையை வளைய வரும் நாய்களும், காஃபி சாப்பிட்ட வாயை கொப்பளித்து குப்பையில் துப்புகிறேன் என்று வழிப்போக்கர்களின் மேல் இலவச எச்சிலையும் நோயையும் பரப்பும் பீடை மனிதர்களுக்கு குறைவில்லை. நடந்து சென்று கொண்டிருப்பவர்கள் எப்பொழுது எச்சில் துப்பி விடுவார்களோ என்ற பயத்துடன் தான் கடக்க வேண்டியுள்ளது. படித்தவர், படிக்காதவர் என்ற பாரபட்சமின்றி போட்டி போட்டுக் கொண்டு துப்பித் தொலைக்கிறார்கள். இல்லாத புது நோய்கள் வராமல் என்ன செய்யும்? இதில் சிங்கப்பூர் பற்றி வாய்கிழிய பேசும் படங்களுக்கு குறைச்சலில்லை.

வீட்டில் கழிப்பறை இருந்தும் தெருவில் உச்சா போகும் குழந்தைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கும் அம்மாக்கள்...என்றுதான் விபரீதங்களைப் புரிந்து கொள்வார்களோ? நடமாட்டம் குறைந்த தெருமுக்குகள் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்கும் இடமாக இன்று வரை இருக்கிறது. மாலைவேளைகளில் அம்மம்மா, அப்பப்பா என்று தன் பெரிய குடும்பத்துடன் உலா வரும் பன்றிகளுக்கும் குறைவில்லை. பன்றிக்காய்ச்சல் வராமல் என்ன செய்யும்?

ரேஷன் கடைகளை விட கூட்டம் அள்ளுகிறது தீரா விடத்தின் புண்ணியத்தால் விளைந்த மதுபானக் கடைகளில்! அழுக்கு கைலி, சவரம் செய்யாத முகம், குளியல் காணாத தேகம், குடித்து குடித்தே குடும்பத்தை அழித்து ஒழிந்து போகிற இவர்கள் உயிரோடு இருந்து தான் ஆக வேண்டுமா? தன்னிலை அறியாமல் குடித்து அலங்கோலமாக தெருவில் புழுதியில் பார்க்கவே அருவருப்பாக... கடைகளும் ஜனசந்தடி மிக்க தெருக்களில், தெருமுனைகளில் கடைகளை வைத்திருக்கிறார்கள். மக்களைப் பற்றின துளிக்கவலையும் இல்லாத கேடுகெட்ட அரசாங்கம்!
தெற்குமாசிவீதி முழுவதும் மனிதர்கள் நடமாட முடியாத அளவிற்கு வாகனங்களால் நிரப்பப்பட்டு... திருவிழா நாட்களில் கேட்கவே வேண்டாம். எங்கிருந்து இவ்வளவு மக்கள் மதுரைக்கு வந்திருக்கிறார்கள்? எங்கு பார்த்தாலும் கூட்டம். பெரிய பெரிய கடைகளின் ஒளிவெள்ளத்தில் உஷ்ணம் கூடியது போல் தோன்றியது எனக்கு மட்டும் தானா?

எண்ணிக்கையில்லா துணிக்கடைகள், நகைக்கடைகள், துரித உணவகங்கள்...அப்பப்பா! எங்கும் கூட்டம்! பரவாயில்லையே மக்கள் செலவு செய்யும் அளவிற்கு வசதி வந்து விட்டிருக்கிறது தான்! விளக்குத்தூண் பகுதிகளில் சாலைகளைக் கடக்க உயிரை கையில் பிடித்துத் தான் செல்ல வேண்டியிருந்தது. சென்னை சில்க்ஸ் கடை அமைந்துள்ள மேல பெருமாள் மேஸ்திரி வீதிச்சாலை முழுவதும் கரடு முரடான கற்கள் மட்டுமே. அந்த தெருவில் பல உயர்ரக உணவகங்களும் தங்குமிடங்களும். குறுகிய சாலையில் பல நூறு வண்டிகள். எப்பொழுது யார் வந்து இடித்து விட்டு கண்டுக்காமல் போவார்களா என்ற பயத்துடன் தான் நடக்க வேண்டியிருக்கிறது. மழை பெய்தால் அங்கு நீந்தித்தான் செல்ல வேண்டும். அதிசயமாக மதுரையில் மழை வந்தாலும் நிலத்திற்குச் செல்ல முடியாதவாறு வீட்டைச்சுற்றி சிமெண்ட் போட்டு மூடி வைத்திருக்கிறார்கள் அறிவாளிகள். தெருவே வெள்ளத்தில் மிதக்கிறது. தோண்டிப்போட்ட சாலைகள் குண்டும் குழியுமாக. மழை நாட்களில் எங்கு கால் வைக்கிறோம் எங்கு போய் விழுவோமோ என்ற திகிலுடனே வெளியில் செல்ல, சென்றவர்கள் உயிருடன் வீடு திரும்பும் வரை பயத்துடனே இருக்க வேண்டியுள்ளது.

ஆதார் கார்டு அலுவலகத்தில் ஒரே கணினி. அதுவும் பாவம் வேலை செய்யவில்லை. வேலைகளை விட்டு கார்டு வாங்க வந்தவர்கள் வரிசையில் காத்திருந்தார்கள். மாற்றங்களை அறிமுகப்படுத்தும் பொழுது ஏற்படப்போகும் இடறுகளையும் மனதில் கொண்டு நடக்க வேண்டிய விஷயங்களை விட்டேத்தியாக செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள். யாரைக் குற்றம் சொல்வது?

வங்கிகளில் வேலை பார்ப்பவர்கள் இப்பொழுது தான் நிம்மதி பெருமூச்சு விடுவது போல் இருந்தார்கள். ஒரே இரவில் நடந்த அதிரடி மாற்றங்களின் பொழுது அதிக நேரம் உழைத்து கஷ்டப்பட்டாலும் நாட்டு நலனுக்காக செய்வதில் திருப்தி இருந்ததாக அகமகிழ்ந்தார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விகிதத்தில் அலுவல் அதிகாரிகள் இல்லை. பல வேலைகளையும் ஒரு சிலரே செய்ய வேண்டிய நிலையில் எள்ளும் கொள்ளுமாக படிக்காத பாமரர்களிடம் வெடித்துக் கொண்டிருந்ததைக் காண்கையில் தொலைந்து போன மனிதத்தை எண்ணி வருந்தியது மனம்.

கோவில்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. அனைவரையும் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கோவிலில் பணம், பதவியிலிருப்பவர்களுக்கு அநேக சலுகைகள்! வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய பொறுமையும் நேரமும் இல்லை. சாதகப்படுத்திக் கொள்கிறார்கள் கோவிலை கொள்ளையடிப்பவர்கள். கோவில் நிலங்களையும் சொத்துக்களையும் முறையாகக் கையாண்டாலே கோவிலில் பல நற்பணிகளை யாருடைய நிதியையும் எதிர்பார்க்காமல் செய்ய முடியும். செய்வார்களா கொள்ளைக்காரர்கள்? அவர்களிடமிருந்து மீட்க முடியுமா கோவில் நிலங்களையும் கோவில்களையும்? எங்கும் அரசியல்!

வீதி தோறும் பழைய சோறு கேட்டு வரும் பிச்சைக்காரர்களைக் காணவில்லை. கோவில் வாசலில் இருப்பவர்களுக்கு இலவச மதிய உணவு கிடைப்பதால் அங்கு சிறு கூட்டம் நிரந்தரமாக குடி கொண்டிருக்கிறது.
வறண்டு போன வைகை நதியை குப்பைக்கிடங்காக மாற்றி விட்டிருக்கிறோம். அதன் பின்னே பல லட்சங்கள் பெறுமானமுள்ள குடியிருப்புகளில் காற்று வாங்க வெளியில் உட்கார முடியாததற்கு காரணம் கொசுக்கள் மட்டுமல்ல. கூடவே வரும் துர்நாற்றமும் கூட. மழை நாட்களில் வீட்டுக்கதவை திறக்க முடியாத அளவிற்கு பெரும்நாற்றம் நதியில் சேர்ந்திருக்கும் கழிவுநீரிலிருந்தும் குப்பையிலிருந்தும். சகித்துக் கொண்டு சொந்த வீட்டுக்குள்ளேயே சிறைக்குள் வாழ வேண்டிய அவலம். வறண்ட வைகை ஆற்றுப்படுகையோ மனதை பிசைகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாலைவனம் ஆகும் நிலைமையை கண்டு விடுவேனோ என்ற அச்சமும் மழைநீரைச் சேமிக்கும் வழிவகைகளும் நிலத்தடி நீரை பெருக்கும் விழிப்புணர்வுமற்ற சமுதாயமும் அடுத்த தலைமுறைக்கு சொல்லும் நீதி தான் என்ன?

அதிகப்படியான பணத்தைக் கட்டி பெரிய பெரிய பள்ளிகளுக்கு குழந்தைகளைப் படிக்க அனுப்பும் பெற்றோர்கள் என்ன ஏது என்று புரியாமல் தெரியாமல் குழந்தைகளால் முடியாத ப்ராஜெக்ட்களை செய்து கொடுப்பதில் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்று பள்ளிகளைக் கேட்பதுமில்லை. பள்ளிகளும் குறைவான மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்த்து விடச் சொல்கிறார்களாம். நடைமுறைக்கல்வி என்பதே கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. படிப்பவர்களும், படிக்க வைப்பவர்களும் , படிப்பை போதிப்பவர்களும் பணத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது எங்கு நம் சந்ததியினரை கொண்டு செல்லும் என்று யோசிக்க கூட முடியாத நிலைமையில் தான் இருக்கிறோம்.

வருடங்கள் பல கடந்திருந்தாலும் எங்கும் எதிலும் ஒழுங்கில்லை. யாருக்கும் எதைப்பற்றியும் கவலையில்லை. அனைத்திற்கும் பழகியிருக்கிறார்கள். கரண்ட் போனால் சொல்லாமல் கட் பண்ணி விட்டானே என்று தான் வருத்தம் மக்களுக்கு. எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும் மனப்பக்குவம் வந்திருக்கிறது. அரசியல்வியாதிகளின் வெற்றியில் இதுவும் ஒன்று. கூசாமல் கை நீட்டி பணம் வாங்கி ஓட்டுப்போடும் நமக்கிற்கு எதையும் கேட்டுப் பெறவேண்டும் என்ற உரிமையும் மறந்து போய் விட்டிருக்கிறது.

என்ன பேசினாலும் நேற்று வரை இங்கிருந்தவள் தானே? இன்று ஏதோ புதிதாக குற்றம் கண்டுபிடிக்கிறாய். வெளிநாட்டிற்குச் சென்றாலே இப்படித்தான் என்பதில் மட்டும் யாரும் மாறவில்லை. எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது இது தானோ? எதற்கெடுத்தாலும் அரசியலை விமரிசிப்பவர்கள் மாற்றங்கள் தனி மனிதரிடமிருந்து, ஒவ்வொருவர் வீட்டிலிருந்து ஏற்பட்டால் தான் நாட்டிலும் ஏற்படும் என்பதை உணருவார்களோ?

வீட்டிற்கு ஒரு என்ஜினீயர், ஆளுக்கொரு சொந்த வீடு, போட்டி போட்டுக் கொண்டு தகுதிக்கு மீறிய பள்ளிகளில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து அல்லாடும் குழந்தைகளுடன் அல்லல்படும் பெற்றோர்கள், ஏதோ ஒன்றிற்காக ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய நிர்பந்தத்தில் வாழ்க்கை, இந்தியா முன்னேறுகிறதோ இல்லையோ தனிமனித வாழ்க்கையின் தரம் குறைந்து... சுரண்டலும், குப்பையும், அதிகாரவர்க்கமும், அடிமைத்தனமும் கூடித்தான் போயிருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை உணரும் பொழுது இயற்கைவளங்களை கொள்ளையடித்த சமூகத்திடம் எல்லாவற்றையும் இழந்து நிற்பது உறுதி.

உணர்வுகளுடன் இருந்த மதுரை உணர்ச்சியற்றுப் பாழாகி நிற்பதை வேதனையுடன் கடந்து வர மட்டுமே முடிகிறது. இயற்கையுடன் மனிதர்களும் மாறிக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அன்பிற்கு குறைவில்லாத உறவுகள், பொக்கிஷமாக நான் சுமக்கும் காலம் கடந்த பசுமையான நினைவுகள் மட்டுமே இன்றும் என் பிறந்தகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.































3 comments:

  1. உஜெ கா3முக் துமி ஹவ்டன் ஜவள்ளன் முஸுனா.
    விஸேஷுனும் வடொ க2ள்ளத்தக் அவீஸ் திர்னொ.

    ReplyDelete
  2. மருதமான மதுரை எல்லாம் பழங்கனவாகிப் போனது..

    ReplyDelete
  3. மருதமான மதுரை எல்லாம் பழங்கனவாகிப் போனது..

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...