Sunday, April 29, 2018

மதுரையின் திருவிழா – மக்களின் திருவிழா

ithutamil.com ல் வெளிவந்த கட்டுரை
APR 20, 2016



இதோ இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது மாமதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதி நிறைவுக்கு வந்திருக்கிறது. நேற்று திருக்கல்யாணம் கண்ட சொக்கநாதரும், மீனாட்சியும் இன்று காலை மதுரை வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி தேரோடியிருக்கிறார்கள். திருவிழாவின் இரண்டாம் பகுதியாக, நாளைக் காலையில் இந்த விழாவின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான கள்ளழகர் மதுரைக்குள் வருகிறார். அடுத்த நாலைந்து நாட்களுக்கு அவர் போகும் இடமெல்லாம் அமளிதுமளியாகும்.

திருவிழாக்கள் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை, இயல்பைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு. அந்த வகையில் திருவிழாக்களின் நகரம் என்றால் அது எப்போதும் மதுரைதான். வருடம் முழுக்க ஏதாவது ஒரு திருவிழா அதற்கேயுரிய தன்னியல்போடு, கொண்டாட்டங்களோடு நடந்துகொண்டே இருக்கும்.

பங்குனி மாதமே இந்த மெகா திருவிழாவிற்கான வேலைகள் ஆரம்பித்துவிடும். மீனாட்சிஅம்மனும்,சுந்தரேஸ்வரரும் ஊர்வலம் போகும் வாகனங்களை மராமத்துச் செய்து வர்ணம் பூசிக் கொண்டிருப்பார்கள். இன்னொருபுறம் தேரோட்டத்திற்குத் தேரை அலங்கரிக்கும் வேலைகள், கோவில் மண்டபங்கள், சுவருக்கு வர்ணமடித்தல், வீதிகளை, விளக்குகளை சரிசெய்தல் எனப் பரபரப்பாக வேலைகள் களைகட்டிவிடும்.

பங்குனி மாதத்தின் கடைசி வாரத்தில் காப்புக்கட்டி, கொடியேற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத்திருவிழாவின் முதல்பாதி அஃபீஷியலாய் துவங்கும். இந்த விழாவின் நோக்கம் மங்கையர்கரசியாம் மதுரை மீனாட்சியைப் பட்டத்து அரசியாக்கி, திக்கு விஜயம் செய்வித்து, எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவபெருமானுடன் திருமணக்கோலம் காணச் செய்வதுதான்.

திருவிழாவின் அடுத்த பகுதியாக அழகர் கோவிலில் அருள்பாலிக்கும் சுந்தரராஜபெருமாளாகிய அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு மதுரையை நோக்கி வருவதுதான். மதுரையில் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகிரிஷிக்கு மோட்சம் அளித்த பின்னர், அடுத்த மூன்று நாட்கள் நகரின் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களை மகிழ்வித்து பூப்பல்லக்கு கண்டு ஊர் திரும்புவதோடு சித்திரைத் திருவிழா நிறைவுக்கு வரும்.Madurai Music
இந்தக் காலகட்டத்தில் மதுரையையே அலைக்கழிக்கும் வெயிலுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனாலும் அதற்கெல்லாம் அசந்து விடுவார்களா மதுரை மைந்தர்கள்? வெயில் கொளுத்தினாலும், தண்ணீர்ப் பஞ்சம் இருந்தாலும், நகரமே இருட்டில் மூழ்கினாலும் கூட்டம் கூட்டமாகக் உறவினர்கள், நண்பர்கள் சூழக் கோவிலுக்குச் செல்வதில் தான் என்னே ஆனந்தம்!

மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவின் முதலாம் நாள் அம்மை அப்பன் கற்பகவிருட்ச வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் வந்து அருள் புரிவார்கள். இரண்டாம் நாள், பூத வாகனம் மற்றும் அன்ன வாகனத்திலும், மூன்றாம் நாள் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்திலும், நான்காம் நாள் தங்கப்பல்லக்கிலும், ஐந்தாம் நாள் தங்கக்குதிரை வாகனத்திலும், ஆறாம் நாள் ரிஷப வாகனத்திலும், ஏழாம் நாள் யாளி, நந்திகேசுவரர் வாகனத்திலும் என்று வெள்ளி, தங்க வாகனங்களில் சொக்கநாதர், அன்னை மீனாட்சியின் ஊர்வலம் கோலாகலமாக பவனி வர,
எட்டாம் நாள் மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுப் பட்டாபிஷேகம் முடிந்து கையில் கோலுடன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் மதுரையின் மகாராணியைக் காண கூட்டம் அம்மன் கோவிலில் ஆரம்பித்து , விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலமாசி, வடக்கு மாசி வீதிகளில் குழந்தைகளுடனும் சுற்றங்களுடனும் முன் கூட்டியே வந்து இடத்தைப் பிடித்துக் கொண்டு காத்திருக்கும். ஒன்பதாம் நாள் அம்மனின் திக்விஜயம். அன்று இந்திர விமானத்தில் வந்து தெரு முக்குகளில் அம்மன் திக்பாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலமானது.
இப்படி ஒவ்வொரு நாளின் விழாவிற்கும் ஒரு தாத்பரியம் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித அலங்காரம் என்று அம்மன் உலா கோலாகலமாக நடக்க, உச்சமாக அன்னையின் திருக்கல்யாணம்!
தாலி
மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாண நாளன்று திருமணமான பெண்கள் அனைவரும் புதுப்புடவையையோ அல்லது நல்ல உடையையோ அணிந்து கொண்டு வீட்டில் பூஜை செய்து விட்டுத் தங்கள் தாலிக்கயிற்றையையும் மாற்றிக் கொள்வார்கள். பல பெண்களும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சுமங்கலிகளுக்கு புது மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் கொடுத்து மகிழ்வார்கள். மதுரை மக்களின் பெரும்பகுதியினர் அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று அம்மனின் திருமணத்தை நேரில் தரிசனம் செய்து ஆசி பெற்று, விருந்தும் சாப்பிட்டு விட்டு மனம்,வயிறு நிறைய வீடு திரும்புவார்கள். இப்பொழுது நேரிடையாகவே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புச் செய்து விடுவதால் கோவிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் நேரில் சென்று வந்த திருப்தி!

திருக்கல்யாணத்தன்று மாலை பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மனையும், சொக்கநாதருடன் காட்சி தரும் கோலத்தையும் பார்க்க மாலை ஏழு மணியிலிருந்தே சேரும் கூட்டம் நேரமாக ஆக நகரக் கூட இடமில்லாமல் பிதுங்கி வழியும். பெண்களைக் குறிவைக்கும் இடி மன்னர்களிடம் இருந்தும், ஆண்களைக் குறிவைக்கும் பிக்பாக்கெட் திருடர்களிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டே கூட்டத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்கள், வெடி சத்தம் கேட்டவுடன் ஒரு தள்ளுமுள்ளுடன் அம்மனை எதிர் நோக்க, போலீஸ் பந்தோபஸ்காரர்களும் திமிரும் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருப்பார்கள்.

முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாகப் பவனி வர, விநாயகர், முருகனைத் தொடர்ந்து மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித, பன்னீர்ப் பூக்கள் வாசம் அந்த இடத்தையே மணக்க வைக்க, சிவபெருமானுடன் வரும் அன்னையை, தம்பதி சமேதரராய்ப் பார்த்து மனமுருகி வணங்க, அதனைத் தொடர்ந்து வரும் அழகு பூப்பல்லக்கு ஆடி அசைந்து வர, சர்வ அலங்காரபூஷிதையாகப் பவனி வரும் மீனாக்ஷி அன்னையின் அழகைக் காண கண் கோடி வேண்டும். அம்மனின் அழகுப் பூப்பல்லக்கை பார்த்த திருப்தியுடன் மறுநாள் காலை வரவிருக்கும் திருத்தேரைக் காண வீடு திரும்பும் கூட்டம்.
சித்திரைத் திருவிழா தேர்மீனாக்ஷி அம்மன் கோவில் தேர் அழகான வேலைப்பாட்டுடன் பெரிய சக்கரங்களுடன் விளக்குத்தூண் அருகில் இருக்கும் தேர்முட்டியில் தான் வருடம் முழுக்க நின்று கொண்டிருக்கும். திருவிழா நேரம் நெருங்க நெருங்க இந்தத் தேரை சுத்தம் செய்து சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். அன்னை மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் அதிகாலையில் மக்கள் கூட்டம் அம்மன் திருத்தேரில் ஊர்வலம் வருவதைக் காண ஒட்டுமொத்த மதுரையும் வெளிவீதிகளில் குவிந்திருக்கும்.

வெடிச் சத்தம், முரசு சத்தத்துடன், மேளதாளம் முழங்க ஆடி அசைந்து வரும் அந்தப் பிரமாண்ட தேர் பார்க்கும் எவரையும் வசீகரிக்கும். வாழை மரங்கள் இருபுறமும் கட்டி, தென்னை ஓலைகளால் செய்த மாலைகளும் துணிகளால் செய்த சிவப்பு நிறத் தோரணங்களும், மணிகளும், தேரை இழுக்கப் பெரிய வடங்களும், ‘ஹர ஹர மஹா தேவா’ என்று ஒரே குரலில் சொல்லிக் கொண்டே அதை இழுக்கும் மாணவர்கள், பெரியவர்கள், குழந்தைகள்.. வாழ்வின் மிக ரம்மியமான தருணங்கள் அவை.

தேரின் உச்சியில் படப்படத்துக் கொண்டிருக்கும் கொடியும், கால்களைத் தூக்கிக் கொண்டு இருக்கும் வெள்ளைக் குதிரைகளும், ஒருவர் சாமரம் வீசிக் கொண்டே வர, மைக்கில் ஒருவர் கூட்டத்தை எச்சரிக்கை செய்து கொண்டே வர, அழகு தேவதையாய் தேரில் அம்மன் வரும் அழகையும், இன்னொரு தேரில் அம்மன், சொக்கநாதருடன் தம்பதி சமேதரராக வலம் வரும் காட்சியும் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

தேரைக் காண தெற்குமாசி வீதியில் மக்கள் கூட்டம் அலை மோதும். மாடிகளில், தெரிந்தவர்கள் வீட்டு வாசல்களில் என்று எங்கும் மக்கள் கூட்டம் ‘ஜேஜே’ என்றிருக்கும். தேர் வரும் வழியில் மின்சாரம் தடை செய்யப்பட்டு மின்சார வயர்கள் மேலே தூக்கப்பட்டு எந்தவித தடங்கலும் இல்லாமால் சென்று கொண்டிருக்கும் தேர் திடீரென்று கூச்சலுடன் நின்று விடும். அதை மீண்டும் இழுத்துப் போவதற்குள் ஒரு வழியாகி விடும். ஆனாலும் என்ன, ஆடி அசைந்து வரும் தேரை பார்த்த திருப்தியில் வரும் வழியில் பந்தலில் நீர் மோரோ, பானகமோ குடித்து விட்டு, சில இடங்களில் பொங்கலும் கொடுப்பார்கள் அதையும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு திருவிழா கதைகளை பேசிக்கொண்டே வீடு திரும்பும் மக்கள் கூட்டம்!



அம்மனும், சுவாமியும் வருவதற்கு முன்பும், வந்து சென்ற பின்பும் குழந்தைகள் இருக்கும் இடங்களில் அவர்கள் கண்பட ஜவ்வு மிட்டாய் விற்பவர்கள், விதவிதமான பலூன்கள், வாட்ச் மிட்டாய், தள்ளு வண்டியில் வேக வைத்த வேர்க்கடலை, மாங்காய், கீழமாசி வீதி, தெற்குமாசி வீதிகளில் இருக்கும் ஜிகர் தண்டா கடைகளில் கூடும் கூட்டமும் என்று அந்நாட்கள் வியாபாரிகளுக்கும் கொண்டாட்டமான நாட்களே!
கள்ளழகர்மதுரையில் தேரோட்டம் நடக்கிற அதே நாளில் அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜபெருமாள், கள்ளழகர் வேடம் தரித்து பல்லக்கில் மதுரைக்கு கிளம்புவார். அழகர் மதுரைக்கு கிளம்புவதே தனித்திருவிழாவாய் சொல்ல வேண்டும். அத்தனை ஆர்பாட்டமாய் இருக்கும். மதுரைக்கு வரும் வழியெங்கும் கூடவே மக்கள் வெள்ளம் அவரைத் தொடர்ர்ந்துவரும். ஒவ்வொரு ஊரிலும் மண்டகபடிகளில் எழுந்தருளி மரியாதையை ஏற்றுக் கொண்டு மதுரை எல்லைக்கு மறுநாள் காலையில்தான் வந்து சேர்வார்.
மதுரையின் எல்லையான மூன்றுமாவடியில் கள்ளழகரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் உற்சவம்தான் “எதிர்ச்சேவை”. மதுரையே திரண்டுவந்து கள்ளழகரை வரவேற்பது கண்கொள்ளாக் காட்சி. அதிகாலையில் ஊருக்குள் வரும் கள்ளழகர் அடுத்த ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்து சேர இரவாகிவிடும் என்றால் அழகருக்கான வரவேற்பும், உற்சாகமும் எப்படியானதாக இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

Kallazhagar in Vaigaiசித்திரை மாதத்தின் முழுநிலவு நாளில், அதிகாலையில் அழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்வுதான் சித்திரைத் திருவிழாவின் க்ளைமேக்ஸ். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து லட்சோப லட்சம் மக்கள் வைகயாற்றில் திரண்டிருக்க, தங்கக்குதிரை வாகனத்தில், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்தவராய், பட்டுடுத்திய அழகர் ஆற்றில் இறங்கும். கண்கொள்ளா காட்சியின் அழகும், சிலிர்ப்பும் அனுபவித்தே அறியவேண்டியது. அழகர் அணிந்து வரும் பட்டின் நிறத்தை வைத்துத்தான் அந்த ஆண்டின் மழை மற்றும் விவசாய விளைச்சலை தீர்மானிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

ஹனுமான், கருடன் வேடம் போட்டுக் கொண்டவர்கள், தண்ணீரை பீய்ச்சிக் கொண்டே ஆற்றில் இறங்கும் அழகரை தீர்த்தவாரி செய்து குளிர்விக்கும் கோமாளிகள், நாமம் போட்டு துளசி மாலை கட்டி நாட்டுசக்கரை மற்றும் பொடித்த ஏலக்காய் போட்டு வாழை இலையால் மூடிய சொம்பில் சூடம் வைத்து அழகரை மனமார வேண்டி நிற்பவர்கள் என வைகையில் மக்கள் வெள்ளம் கரை புரளும்.

பெருமாளைப் பார்த்தவுடன் அவசர அவசரமாக சூடம் கொளுத்தி காற்றில் அணையாமல் கோவிந்தா, கோவிந்தா கோஷத்தோடு சேவித்து சர்க்கரையை அங்குள்ளவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு அவர்கள் சர்க்கரையும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு சிநேக புன்னகையுடனும், பெருமாளைப் பார்த்த திருப்தியுடனும், ஓசியாகக் கிடைக்கும் விசிறி, தொன்னை வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் வாங்கி அங்கேயே ஒரு பந்தலில் உட்கார்ந்து சாப்பிட்டு சிறிது இளைப்பாறி விட்டு வருபவர்களும் உண்டு. பெரியப் பெரிய நாமம் போட்ட உண்டியல்கள், விசிறிகள் புடை சூழ அழகரும் வைகையில் ஒவ்வொரு மண்டபத்திலும் எழுந்தருளுவார்.
Kallazhagar Kovil
அன்று இரவு முழுவதும் வண்டியூரில் நடக்கும் தசாவதார அலங்காரத்தையும் கண்குளிரப் பார்த்து விட்டு கள்ளழகராகத் திரும்பி மலை ஏறும் வரை அவரின் தரிசனத்திற்காக வழியெங்கும் காத்திருக்கும் மக்கள் திருவிழாவை இனிதே முடித்த திருப்தியில் வருடம் முழுவதும் திருவிழாவிற்குக் குறைவில்லாத மதுரையில் வைகாசி விசாகத்திற்காகத் தயாராவார்கள்.

என் மதுரையில் இருந்து இன்றைக்கு நான் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் தள்ளியிருந்தாலும் கூட, இந்த திருவிழாக்காலத்தின் பசுமையான் நினைவுகள் என்னை இன்னமும் மதுரையில்தான் வைத்திருக்கின்றன. பதினோரு நாட்கள் மதுரை வீதிகளில் பவனி வரும் அம்மனின் தரிசனம், பாட்டி வீடு, உறவுகளின் வரவு என்று கலகலக்கும் நாட்கள். அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாளன்று குடும்பத்துடன் தரிசனம் கண்டு அன்றைய பொழுதை மண்டபங்களில் கழித்தது. கூட்டத்தில் தொலைந்து விடாமலிருக்க அப்பாவின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு சென்றது, வைகையில் மக்கள் வெள்ளத்தைக் கண்டு பிரமித்தது, அன்று நாங்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்த அப்பாவின் நினைவுகள்…
ம்ம்ம்.. இன்றில்லை, என்றைக்குமே எனக்கு மதுரைத் திருவிழா, ஒரு மகத்தான பெருவிழாதான்.
புகைப்பட உதவி: Guna Amuthan
– லதா

Tuesday, April 17, 2018

கற்றதனாலாய பயன்

ithutamil.com ல் வெளிவந்த கட்டுரை...
MAR 12, 2014

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘திருத்தப்பட வேண்டியவர்கள்‘ என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நமது கல்வியமைப்பு, அதன் தேர்வு முறைகள், விடைத்தாள் திருத்தும் முறைகளில் நிலவும் அபத்தங்களைச் சொல்லும் கட்டுரை அது.
பரிட்சை
இதன் நீட்சியாக, நமது கல்விமுறையின் இந்தப் பக்கங்களை ஒரு மாணவியாகவும், பின்னாளில் ஒரு கல்லூரி ஆசிரியையாகவும் கடந்து வந்த எனது அனுபவத் தெளிவுகளைப் பகிர்வது சரியாக இருக்கும் என்பதால் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மாணவியாக இருந்த காலத்தில் பரிட்சை ஹாலில் சில மாணவ மாணவியர் செய்யும் திருட்டுத்தனங்கள், அது தொடர்பான குறும்புகள், அவர்களைக் கண்டுபிடிக்க ஆசிரியர்கள் சுற்றிச்சுற்றி வந்ததெல்லாம் இப்போதும் நன்கு நினைவில் இருக்கிறது. பின்னாளில் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது பல கல்லூரிகளுக்கும் தேர்வு மேற்பார்வையாளராகச் சென்ற போது எதிர் கொண்ட அனுபவங்கள் இந்தப் பிரச்சினையின் இன்னொரு பக்கத்தையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

தேர்வு மேற்பார்வையாளராகச் செல்வதில் எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அதை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். வேண்டா வெறுப்புடன் முதன் முதலாக சென்ற கல்லூரியில் பெரிய ஹாலில் நான்கைந்து ஆசிரியர்களுடன் சேர்ந்து மேற்பார்வை பார்க்க வேண்டி வந்தது. வர்த்தகம், ஆங்கில இலக்கியம், B.B.A மாணவ, மாணவிகள் நிறைந்திருந்த அந்த ஹாலில் நுழைந்தவுடன் சம்பிரதாயமாக முகமன் சொல்லி விட்டு பேராசிரியர் ஒருவர் தேர்வு நியமனங்களை அவர்களுக்கு விவரிக்க ஆரம்பித்தார்.
பரிட்சைநானும் மற்ற ஆசிரியர்களும் ஹால் டிக்கெட் சரியாக இருக்கிறதா, அவர்களுக்குரிய இடத்தில் அமர்ந்திருக்கிறார்களா என்று சரி பார்த்துக் கொண்டே வந்தோம். நகத்தைக் கடித்தபடி சில மாணவர்கள், கடவுளை வேண்டியபடி சிலர், கலங்கிய முகங்கள், அவசர அவசரமாகப் பதட்டத்துடன் உள்ளே நுழைபவர்கள் என்று நவரசங்களுடன் மாணவ மாணவியர்கள். பலரும் ஆண்டவனின் அருளை வேண்டி விபூதி குங்குமத்துடன் பக்தி மயமாக காட்சியளித்தனர்.
சரியாக முதல் மணி ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு விடையெழுதும் பேப்பர்களை கொடுத்துக் கொண்டே வந்தோம். பல மாணவர்கள் நட்புடன் சிரித்துக் கொண்டும், சிலர் தெனாவெட்டாகவும் விடைத்தாள்களை வாங்கி அவர்கள் நம்பரை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே நாங்கள் கேள்வித்தாளையும் கொடுக்க ஆரம்பித்தோம்.

பரபரவென்று தான் படித்தது ஏதாவது கேட்டிருக்கிறார்களா என்ற பதைபதைப்புடன் மாணவ, மாணவிகள் கேள்வித்தாளைப் புரட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிலர் ஒரு பக்கம் எழுதி கூட முடித்திருப்பார்கள்.

நெற்றியைத் தடவிப் பார்த்து ஏமாற்றத்துடன் ஹால் முழுவதையும் நோட்டமிடும் மாணவர்களும், ஒன்றுமே எழுதாமல், எப்படா அரை மணி நேரம் கழியும் பேப்பரை கொடுத்து விட்டு ஓடலாம் என்று பொறுப்பற்ற சிலருமாய் கணங்கள் கரையும்.

சில கில்லாடிகள் கையில் கிறுக்கி வைத்துக் கொண்டும், துண்டுப் பேப்பர்களில் எழுதி வைத்துக் கொண்டும் மேலும் கீழும் பார்த்தபடி எப்படி வெளியே எடுத்து எழுதுவது என்ற தீவிர யோசனையில்!

பிட் அடித்தல்
அன்று தான் தேர்வு கண்காணிப்பாளாராக என்னுடைய முதல் அனுபவம். மற்ற ஆசிரியர்கள் அவர்கள் கடமை முடிந்தது என்று ஆளுக்கொரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் புத்தகங்களை வைத்துக் கொண்டு படிக்கவும் செய்தார்கள்.

எனக்கோ பயங்கர அதிர்ச்சி!

நானும் என்னைப் போல் ஒரு சிலரும் மாணவர்களுக்கு கூடுதல் விடைத்தாள்களைக் கொடுத்துக் கொண்டே வந்தோம். சில ஆசிரியர்கள், “ஏன் சும்மா சும்மா சுத்தி வர்றீங்க? அவங்க பாட்டுக்கு எழுதுவாங்க? நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று சொன்னாலும்.. எனக்கு அது சரியாகப்படாததால் என் வேலையைத் தொடர்ந்தேன். அப்போது ஒரு மாணவன், “உங்களுக்கு எவ்வளவு பணம் வேணா தர்றேன். பிட் அடிங்க விடுங்க” என்றானே பார்க்கலாம்!!

இவனெல்லாம் எதுக்கு படிக்க வரணும்? என்ன ஒரு திமிர்த்தனம்? பரிட்சை ஹாலில் எக்சாமினரிடமே பேரம் பேசும் கொழுப்பு எங்கிருந்து வந்தது? எல்லாம் பணம், பதவி கொடுக்கும் திமிரு என்ற ஆத்திரத்தில் பொங்கியெழுந்தேன். “ஒழுங்கு மரியாதையா பேப்பரைக் கொடுத்திட்டுப் போனா இத்தோட முடிஞ்சுரும். இல்லைன்னா மூணு வருஷத்துக்கு உன்னால பரிட்சை எழுத முடியாது” என்றவுடன் பேப்பரைக் கொடுத்து விட்டு முணுமுணுத்துக் கொண்டே போனது அந்த புறம்போக்கு!

இந்த முதல் அனுபவம் தந்த எரிச்சல் அடுத்தடுத்த வருடங்களில் அதிகமாகிக் கொண்டுதான் போனதே தவிர குறைந்தபாடில்லை.இப்படியெல்லாம நடக்கிறதே என்கிற என்னுடைய ஆதங்கத்தை மற்ற ஆசிரியர்களுடன் பகிரிந்தபோது, யாரும் எனக்கு ஆறுதலாகவோ, ஆதரவாகவோ பேசவில்லை என்பதுதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இதற்குப் பழகிப் போயிருந்தனர்.

சிலரோ ஒரு படி மேலே போய், “நீங்க இப்பத் தான வந்திருக்கீங்க! போகப் போகப் புரியும். கண்டுக்காதீங்க” என்று முதுகெலும்பில்லாமல் சொல்லவும் ( அப்படிச் சொன்ன சிலர் இன்று உயிருடன் இல்லை ), ‘சே! இவர்களுடன் இருந்தால் எனக்கும் கெட்ட பெயர் வந்து விடும்’ என்று மேலதிகாரியிடம் சொல்லி இனி இருபது-முப்பது மாணவர்கள் இருக்கும் ஹாலில் போடுங்கள் என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொல்லி விட்டேன்.
பரிட்சையில் பெண்கள்
பெண்கள் என்றால் பிட் அடிக்க மாட்டார்கள் என்கிற என் அசட்டு நம்பிக்கையும் அடுத்தடுத்த அனுபவங்களில் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ரொம்ப பெரிசுப்படுத்த வேண்டாம் என்று மேலதிகாரியே அந்த மாதிரி பெண்களை ஹாலை விட்டுப் போகச் சொல்லி விடுவார். அவர்களும் ஏதோ நம் மீது தப்பு இருப்பதைப் போல முணுமுணுத்துக் கொண்டே வெளியே போவார்கள். எல்லோரும் இப்படி இல்லை ஆனால் கணிசமான எண்ணிக்கையில் இது நடந்தது. மாணவிகள் என்றால் கடைசி நிமிடம் வரை எழுதுவார்கள். ஒரு சில மாணவிகள் உண்ணாமல், உறங்காமல் விடிய விடியப் படித்து விட்டு பரிட்சை ஹாலில் மயங்கி விழுந்த நிகழ்வுகளும் உண்டு.

சில மாணவர்கள் ஒன்றுமே எழுதாமல் அடிஷனல் ஷீட்ஸ் மட்டும் வாங்கிக் கட்டி விடுவார்கள். ஆரம்பத்தில் இது ஏன் என்று எனக்குப் புரியவேயில்லை. பிறகு தான் தெரிந்தது, யார் விடைத்தாளைத் திருத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து வாங்கி பதில் எழுதி விடுவார்கள் என்று புரிந்தது. அன்றிலிருந்து எழுதாத பக்கத்தை அடித்து விடுங்கள் என்று சொல்லி சரிபார்த்து வாங்க ஆரம்பித்தேன். அதற்கும் அந்த மாணவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. வேறு வழியில்லாமல் செய்து விட்டுப் போனார்கள்!

ஒரு கட்டத்தில் நான் தான் மேற்பார்வையாளர் என்று தெரிந்ததும், என் முன்னாலயே, “இன்னிக்கு அரியர்ஸ் தான்டா” என்று முணுமுணுத்துக் கொண்டும், “மேடம் நீங்க அதோ அந்த ஹாலுக்குப் போகலாமே” என்று சலித்துக் கொள்பவர்களும், இன்னும் சிலரோ, தேர்வு ஹால் வரை வந்து என்னைப் பார்த்தவுடன் “ஹி ஹி ஹி இன்னைக்கு நான் தேர்வே எழுதல. யாரு முகத்துல முழிச்சேனோ!?” என்றும் புலம்பிக் கொண்டும் போய் விடுவார்கள். நீ எவன் முகத்துல முழிச்சா எனக்கென்ன என்று கடைசிவரை என் வேலையில் கடுமையைக் கடைபிடித்தேன். தாங்கள் செய்வது தவறு என்பதைக் கூட உணராமல், குறைந்த பட்சம் குற்றவுணர்வு கூட இல்லாமல் என் முகத்துக்கு நேரே, ” உங்களுக்கென்ன அவார்டா கொடுக்கப் போறாங்க?” என்று கேட்ட மாணவ மாணிக்கங்களும் உண்டு!

அரியர்ஸ் தேர்வுகள் பொதுவாக மதியம்தான் நடக்கும். ஒரு முப்பத்தைந்து மார்க் வாங்க முடியாதவர்கள் பலரும் என்னைக் கண்டவுடன், ‘இந்த வருஷமும் போச்சா??’ என்று எழுந்து போன கதைகள் நிறைய உண்டு.

என்னுடைய கெடுபிடி என் சக ஆசிரியர்கள் சிலருக்கே எரிச்சலாகி இருக்க வேண்டும். ‘கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க’ என்று மறைமுகமாய் அச்கறுத்தியவர்களும் உண்டு.

‘சே! என்ன மாதிரி சமூகம்?’ என நொந்து கொண்ட தருணங்கள் அவை.

பரிட்சை ஹாலில்தான் இப்படியான அனுபவங்கள் என்றால் விடை திருத்தும் பணி இன்னும் மோசம். வீட்டிற்கு வரும் விடைத்தாள்களில் இடைச்சொருகலாக, ‘எனக்கு உடம்பு சுகமில்லாமல் போய் விட்டது, மற்றபடி நான் நன்கு படிப்பவன். என்னை நம்பி என் குடும்பமே இருக்கிறது. தயவு செய்து என்னை பாசாக்கி விடவும்’ என்று சொந்தக் கதை சோக கதை எல்லாம் எழுதி நெக்குருக வைப்பார்கள். அதிலும் சில அதிபுத்திசாலிகள் எனக்கு 35 மார்க் போட்டால் நீங்கள் கேட்கும் தொகையை உடனே அனுப்பி வைக்கிறேன் என்று ப்ளாங்க் செக் ஆஃபர் கொடுத்திருந்த கொடுமையை இங்கே சொல்லியாக வேண்டும்.



வீட்டிற்கு வரும் விடைத் தாள்களில்தான் இந்த இம்சை என்று விடைத்தாள் குழுவாகத் திருத்தும் இடத்திற்குச் சென்றால் அங்கும் வேறு மாதிரியான சங்கடங்கள். மார்க் போடச் சொல்லி சிலர் மாணவர்களின் நம்பர்களுடன் வந்து, “கொஞ்சம் இந்த நம்பருக்கு..” என்று தலையைச் சொரியும் இடைத் தரகர்கள். அதற்கு வக்காலத்து வாங்கும் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள். என்னுடைய கடுமை காரணமாகவோ என்னவோ ஒரு கட்டத்தில் அவர்களே வெறுத்துப் போய் விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் இருந்து என்னை முழுமையாக விடுவித்து விட்டார்கள். மிகவும் நிம்மதியாய் உணர்ந்த நாட்கள் அவை.

ஒரு மாணவனால் நூற்றிற்கு முப்பத்தைந்து மதிப்பெண் கூட பெற முடியாமல் போவதற்கு என்னக் காரணங்கள் இருக்க முடியும்? நம்முடைய கல்வி அமைப்பின் அடிப்படையில் கோளாறா? பெற்றோர் மற்றும் சமூக நிர்பந்தங்களுக்காக ஒரு மாணவன் தனக்கு விருப்பம் இல்லாத பாடங்களைப் படிக்க நேர்வதாலா? பணமும், பதவியும் இருந்தால் தங்களால் எதையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்கிற ஆணவமா!?

இதற்கெல்லாம் மாணவர்களை மட்டுமே குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை என நினைக்கிறேன். ஒரு காலக்கட்டத்தில் திறமைக்கு மட்டுமே இருந்த அங்கீகாரம் இன்றைக்கு பணத்தை விட்டெறிந்தால் கிடைக்கக் கூடியதாக மாற்றிய வகையில் அரசைத்தான் முதல் குற்றவளியாகக் கூறுவேன். எல்லோருக்கும் கல்வி அவசியம்தான். அதே நேரத்தில் அந்தக் கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொண்டதுதான் இத்தனை பின்னடைவுக்கும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இலவசங்களுக்கு செலவழித்த தொகையில் அரசாங்கமே அயிரக்கணக்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி கல்வியை தனியார் மயமாவதைத் தடுத்திருக்கலாம். நுகர்வு கலாச்சாரத்தில் பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்குமென்பதற்கு ஆதர்ச உதாரணம் இப்போதைய நமது கல்வி அமைப்புதான்.

நிறைய ஆதங்கத்தோடு இந்த நிறைவுப் பத்தியை எழுதுகிறேன். ஒரு நாட்டின் வளர்ச்சி, ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பன எல்லாம் அங்கே கிடைக்கும் கல்வியினால் மட்டுமே சாத்தியமாகும். அந்த வகையில் நாம் மிக வேகமாய் ஒரு சரிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நிலையிலாவது ஒவ்வொருவரும் உணர்ந்து அதற்கான தீர்வுகளை யோசிக்கவும் செயல்படுத்தவும் ஆரம்பிக்க வேண்டும்.

– லதா

Sunday, April 15, 2018

விட்டு விலகி...

100 நாட்கள் முகநூலை விட்டு விலகியிருப்பது தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் பிறகு பழகி விடுகிறது. வெறுப்பரசியல், காழ்ப்புடன் பகிரப்படும் உண்மையற்ற தகவல்கள், வெளிவேஷ மனிதர்களின் பொய் பேச்சுகள், கண்ணில் படும் தகவல்களையெல்லாம் படித்து அல்லாடாமல் மனம் அமைதியாக, விட்டு விலகி இருத்தலும் அவசியமாகிறது.
இது தொடர வேண்டுமென்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பதிவிடும் நண்பர்களின் பதிவுகளைப் படிக்காமல் கடந்து விடுதலே நலம் என்ற முடிவே நல்லது.
மன நிம்மதி முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் சமூக வலைதளங்களிலருந்து ஒதுங்கி இருப்பதே நன்று. அதே நேரத்தில் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளும் உண்டு. நல்ல மனிதர்களின் அறிமுகம், சிலரின் அறிமுகத்தால் தெரிய வரும் அரும்பெரும் தகவல்கள், புத்தகங்களின் அறிமுகம் என அவரவர் ரசனைகளும் ஆர்வங்களும் தொடர ஒரு நல்வாய்ப்பு உருவாவதால் இக்காலத்தில் வாழ்வின் அங்கமாகி விட்ட சமூக வலைதளங்களலிருந்து முற்றிலும் விடைபெறுவது சாத்தியமற்றுப் போகிறது.
என்னைப் பொறுத்தவரை முகநூலென்பது பொழுது போக்கவும் முடிந்தால் ஏதாவது நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் மட்டுமே. அதனால் விலகிடலும் எளிதாகிறது.
உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்க, சீராக அதன் பணிகளைச் செய்ய விரதம் இருப்பது போல், மனதிற்கும் தேவை இத்தகைய முகநூல் விரதம்.(எனக்கு).
இங்கு வாராதிருந்த நாட்களில் தனி மடலில் தொடர்பு கொண்டவர்களுக்கும், நலமா என அக்கறையுடன் கேட்டுக் கொண்டவர்களுக்கும் என் நன்றிகள்.
அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🙂🙂🙂
அன்பே சிவம்ம்ம்🙂

சுவிட்சர்லாந்து

NOV 21, 2013





மனிதன் தன் கலை ஆர்வத்தினாலும், உழைப்பினாலும் உருவாக்கிய செயற்கை அழகும், அற்புதங்களும் பார்த்த மாத்திரத்தில் நம்மை வாய்பிளக்க வைத்தாலும் கூட, இயற்கை தன் போக்கில் உருவாக்கி வைத்திருக்கும் அழகின் முன்னால் அவை யாவும் இரண்டாம் பட்சம்தான்.

ஒரு காலத்தில் இந்த இயற்கையோடும் அதன் எழிலோடும் இணைந்து வாழ்ந்திருந்த நாம், கால ஓட்டத்தில் நம் தேவைகளை முன்னிறுத்தி இயற்கையை அழித்தே நம் வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைய தலைமுறை இயற்கையை அதன் அழகைக் கனவிலும், காலண்டரிலும் மட்டுமே பார்த்து ரசிக்கும் துர்பாக்கிய நிலைமைக்கு வந்துவிட்டது.பரபரப்பான நம் வாழ்க்கைச் சூழலில் இயற்கைக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.

இயற்கை என்று சொன்னாலே மலையும், மலை சார்ந்த பிரதேசமும்தான் நம் மணக்கண்ணில் விரிகிறது. மலை தன்னுள்ளே அழகையும், அதன் ரகசியங்களையும் கொட்டிக் குவித்து வைத்திருப்பதை அதனூடே பயணித்துப் பார்த்தால் மட்டுமே அறியவும், அனுபவிக்கவும் முடியும். அந்த உணர்வுகளை வெறும் வார்த்தைகளில் எழுதி விட முடியாது.

சுற்றுலா என்கிற பெயரில் நகரங்களை சுற்றியது போதும், மலைகளின் மேலே ஏதாவது ஒரு ஊரில் தங்க வாய்ப்பு கிடைக்குமானால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து, என் கணவர் ஜெர்மனியில் இருக்கும் நண்பர் முருகனிடம் சொல்ல, அவரும் தேடிப் பார்த்து ஓர் இடத்தைத் தேர்வு செய்து கூறினார்.

சுவிட்சர்லாந்தில் Lake Lucerne அருகில் பிராம்பொடென் என்ற இடத்தில் உள்ள மலை தான் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்த இடம். இதற்காக முருகனுக்கும், செல்விக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். கனவுகளிலே வந்து கொண்டிருந்த மலைகளை நேரில் தரிசித்த பொழுது உண்டான உற்சாகத்தில் அவ்வளவு தூரம் பயணித்த அலுப்பும், களைப்பும் ஓடியேப் போச்சு.

டிரெஸ்டென், ஜெர்மனியிலிருந்து ஆஸ்திரியாவைக் கடந்து பத்து மணி நேர சாலைப் பயணத்திற்குப் பிறகு ஆல்ப்ஸ் மலைகள் நம் கண் முன்னே விரியத் தொடங்கும் போதே மனம் ஒரு நிலையில் இல்லை.சுவிட்சர்லாந்தின் எல்லையில் நாட்டைச் சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு நகரங்களின் ஊடே பயணிக்க ஆரம்பித்தோம். காரை ஒட்டி வந்த கணவருக்கோ ‘ஏன்டா கியர் போட்ட வாடகை வண்டியை எடுத்தோம்?’ என்று ஒவ்வொரு நொடியையும் நொந்து கொண்டே வர, ‘அப்பாடா நான் தப்பித்தேன்’ என்று குழந்தையாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த முருகனின் காரைத் தொடர்ந்து போனதால் வழி தவறவில்லை. ஓரிடத்தில் பளிச்சென்று யாரோ எங்கள் காரைப் படம் எடுத்த மாதிரி இருந்தது. பிறகு தான் செல்வி, நீங்கள் வேகமாகக் காரை ஓட்டி இருப்பீர்கள், உங்கள் காரைப் படம் எடுத்து விட்டார்கள். அதற்கான கட்டணம் உங்களுக்கு வந்தாலும் வரலாம் என்று பீதியைக் கிளப்பி விட, ‘ஆஹா இந்த செலவு வேற இருக்கா!! இனிமே கவனமா ஓட்டணும்’ என்று சொல்லிக் கொண்டோம்.

மெதுவாக சாலைகளில் ஆள் நடமாட்டம் குறைந்து, மெல்ல மெல்ல மலைகள் சூழ ஆரம்பிக்க, ஆங்காங்கே சலசலவென்று நீரோடைகள் எங்களைத் தொடர ஆரம்பித்தன. எதை விடுவது, எதை எடுப்பது எனத் தெரியாமல் ஆங்காங்கே வண்டியை நிறுத்திப் படங்கள் எடுத்துக் கொண்டே மலைகளின் மேல் ஏற ஆரம்பித்தோம். இருட்டவும் துவங்கி இருந்தது.

கடைசி நிமிட GPS சொதப்பல்களில் மலை முகடுகள் வரைச் சென்று சாலைகள் இல்லாமல் எப்படியோ அதல பாதாளத்தில் விழாமல், நாங்கள் தங்கப் போகும் வாடகை விடுதியின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டோம். அவர் நீங்கள் இன்னும் மலை ஏறி மேலே வர வேண்டும் என்று சொல்ல, இருட்டு நேரத்தில் இப்படி ஒரு இடத்தில் தப்பு செய்து விட்டோமோ என்று பயந்து கொண்டே ஒரு வழியாக விடுதி வந்து சேரும் பொழுது இரவு நேரமாகி விட்டது. சுற்றிலும் மலைகள் மலைகள் மட்டுமே.

பக்கத்தில் வீடுகள் இல்லை. வரும் வழியில் அசை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த சில மாடுகளை மட்டுமே பார்த்தோம். லேசாகக் குளிர்வது போல் இருந்தது. வீட்டு உரிமையாளர் அழகாக தலையை ஆட்டி ஆட்டி முருகன், செல்வியிடம் ஜெர்மனில் பேச, நாங்களும் அவர்கள் பேசுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தப் பெண்மணி அவர் அப்பாவின் உதவியுடன் அந்த வீட்டை கட்டியதாகச் சொன்ன போது, ஆஹா இந்த மலையில் வீடு கட்டுவதே ஒரு சவாலான வேலை.. அதையும் இவரே செய்தார் என்று சொன்ன போது இன்னும் ஆச்சரியமாக இருந்தது.

என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொல்லி விட்டு வெளியில் இருந்த விறகுக் கட்டைகளை அடுப்பில் போட்டு சிறிது நேரத்தில் வீடு கதகதப்பாகி விடும் என்று கூறி விட்டு அவர் கிளம்ப, பயணக் களைப்பில் கையில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போனோம்.

காலையில் மேய்ச்சலுக்கு கிளம்பிய ஆடுமாடுகளின் கழுத்தில் கட்டியிருந்த வித்தியாசமான மணி எழுப்பிய ‘கிணிங் கிணிங்’ ஓசை எங்கள் தூக்கத்தைக் கலைத்தது. ஜன்னல் வழியே பார்த்தால், சுற்றிலும் நெருக்கமாய் பச்சைப் பசலேன்று மலைகள், நிற்கட்டுமா, போகட்டுமா என யோசித்துக் கொண்டிருக்கும் சூரியன், மலைகளின் மேல் பட்டும் படாமலும் ஒரு மெல்லிய பனித்திரை….. வாவ்!

குளித்து முடித்து எனக்கான டீயையும் போட்டுக் கொண்டு வெளியில் வந்தால் ‘சில்’லென்ற இதமான குளிர் வருட, காலைப்பனியில் புற்கள் ஜொலிக்க, தொலை தூர மலைகளில் செம்மறியாடுகளும், கொழுத்த மாடுகளும் அதன் கழுத்தில் பெரிய பெரிய மணிகளும் , மலைகளில் அந்த மணிகளின் எதிரொலியும், சுத்தமான காற்றும் என்று அந்த நிமிடங்களில் அனுபவித்த ஒவ்வொன்றையும் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத சுகானுபவங்கள் !!

அதற்குள் குழந்தைகளும், கணவரும், செல்வி, முருகனும் எழுந்து வந்து, “ஆஹா, என்ன ஒரு அருமையான இடம், நேற்று இரவு எப்படி பயந்து கொண்டே வந்தோம்!” என்று பேசி மகிழ்ந்தபடியே காலை உணவை முடித்து வீட்டை விட்டு Lake Lucerne பார்க்க கிளம்பினோம்.





இந்த ஊரை ஒரு சொர்க்கம் என்று சொன்னால் அது மிகையில்லை. வளைவும் நெளிவுமாய் ஒரு கார் மட்டுமே பயணிக்கக் கூடிய மலைப் பாதைகள், குப்பைகள் இல்லாமல், சுத்தமாய் துடைத்து விட்டாற்போல பராமரிக்கப்படும் சாலைகள். சாலையின் இருமருங்கிலும் கொட்டிக் கிடக்கும் அழகை காணக் கண் கோடி வேண்டும்.

வேறென்ன வேண்டும்!


படங்கள்: விஷ்வேஷ் ஓப்லா


லதா

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...