Wednesday, May 9, 2018

திரும்பிப் பார்க்கிறேன் - கோடை விடுமுறை

இன்று பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் குழந்தைகளை கோடை விடுமுறை வகுப்புகளுக்கு அனுப்ப,  குழந்தைகளும்  நீச்சல், பெயிண்டிங், தையல் என்று தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. வீட்டில் இருக்கும் பெற்றோரும் தங்களால் இயன்ற அளவு குழந்தைகளுக்குப் பள்ளிப் பாடங்களைத் தவிர்த்து  வேறு மொழிகள், கைவினைப்பொருட்கள் தயாரித்தல் என்று அவர்களின் பொழுதுகளை பயனுள்ள வகையில் கழிக்க ஆவன செய்கிறார்கள். இன்றைய கணினி உலகில் படிப்பதற்கும் அவரவர் ஆர்வத்திற்கேற்றவாறு புதிய விஷயங்களை அறிந்து கொள்ளவும் எளிதாக சில குழந்தைகளுக்கு நன்கு பொழுது போகிறது. பணம் செலவழித்து வகுப்புகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அமையாத குழந்தைகள் களைப்பு தீரும் வரை விளையாடி பொழுதைப் போக்குகிறார்கள்.

என்னுடைய பள்ளி வயதில்...

வெயில் கொடுமையை விட கோடை விடுமுறையில் வீட்டில் கழியும் வறட்சியான பொழுதுகள் தான் கொடுமையானது. பத்தாம் வகுப்புத் தேர்வுகளை முடித்து முடிவுகள் நன்றாக வர வேண்டுமே என்று தவித்துக் கொண்டிருந்த விடுமுறை அது. அந்த லீவில் அப்பா செய்த ஒரு முடிவு, எங்களின் ஆங்கில உச்சரிப்பினை சரி செய்ய, தவறில்லாமல் பேசிப் பழக, படித்ததைப் புரிந்து கொள்ள, அவர் எடுத்த ஆயுதம், தி ஹிந்து ஆங்கில நாளேடு வடிவில் வில்லனாய் அடியெடுத்து வைக்க, காலையில் எழுந்ததும் படிக்க வேண்டும், சத்தமாக வாசிக்க வேண்டும், அவர் கேட்கும் ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருள் சொல்ல வேண்டும். பக்கத்திலேயே அகராதியை வைத்துப் படிக்க...சில நேரங்கள் தண்டனையாய் கழிய...
அது வரை தெருவில் விளையாட எந்தத் தடையும் இருந்ததில்லை. ஆனால் திடீரென்று இனி வெளியில் போய் பசங்க கூட விளையாடக் கூடாது. பெண்ணாய் பிறந்ததன் முதல் பலனை(!) அனுபவித்த நாள்.

ஏன், எதற்கு?

சொன்னா கேட்டுக்கணும். அவ்ளோ தான். கூட விளையாடிவர்களைத் தவிர்க்க ஆரம்பித்து, ஜன்னல் வழியே தம்பிகள் அவர்களின் நண்பர்களுடன் விளையாடுவதை வேடிக்கை பார்க்க ..நான் பெண்ணாக வளர்கிறேன். இனி விரும்பிய மாதிரி எல்லாம் சுற்ற முடியாது என்று ஒரு தடுப்புச்சுவர் கேட்காமலே எழுப்பப்பட்டு...ஏன் பெண்ணாகப் பிறந்தேனோ? இந்த உரிமைகள் கூடக்கிடையாதா?... புரியாத வயதில் கேட்டாலும் பதில் கிடைக்காத பல பொழுதுகள் ஏக்கங்களுடனே கழிய...
போரடிக்குதும்மா, வெளியில போய் விளையாடவும் விட மாட்டேங்குறீங்க என்று கோபத்தை அம்மாவிடம் காட்டினால், வாங்க தாயம் விளையாடலாம், பல்லாங்குழி விளையாடுங்க, சொட்டாங்கல்லு, கேரம் போர்டு என்று பெண்களை முடக்கவே அதிதீவிரமாகக் கண்டெடுத்த விளையாட்டுகளும் சலிப்பைத் தர...
சுத்துப்பத்துத் திரையரங்குகளில் வெளிவந்த படங்கள், அதுவும் தீவிர பரிசீலனைக்குப் பிறகு பார்க்க அழைத்துச் செல்வார்கள். சில பாடல்கள் கேட்க முடியாது. விரச வரிகள் என்று தடை. ஆக மொத்தம், வானொலியின் துணையுடன் பல பொழுதுகள் இன்பமாகக் கழிய...
வாரந்திரப் பத்திரிக்கைகள் தான் அந்நாளைய ஆபத்பாந்தவன்! முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஒரு வரி விடாமல் படித்து முடிப்பதற்குள், விரல் நகங்களும் காணாமல் போய்...எப்படா அடுத்த வாரம் வரும் என்று காத்திருக்கையில்...
மாமா, பெரியம்மா மகள்களுடன் அரட்டை அடித்து, பெரியவர்கள் கேட்டால் திட்டுவார்கள் என்று சன்னமான குரலில் கிசுகிசுக்களைப் பேசி, சத்தம் போட்டு சிரித்து, அவர்கள் சொல்லும் ஜோக்ஸ்களைக் கேட்டு 'சீசீசீ' என்று மாலை முழுவதும் ஒருவரை ஒருவர் வெட்கத்துடன் கடந்த பொழுதுகளும் ...
பாட்டியுடன் விடுமுறையில் செல்லும் கோவில், குளங்கள் இனிமையாக கழிய...
அப்பா, கதை புக்ஸ் வாங்கணும். போரடிக்குது...அதெல்லாம் எதுக்கு? போய் அடுத்த வருஷம் படிக்கப் போற மேத்ஸ் புக்க படி. போ. மத்தவங்க எல்லாரும் அமைதியா இருக்காங்க. எப்ப பாரு, போரடிக்குதுன்னுட்டு... 
சே! ஏன் தான் இந்த வீட்ல வந்து பிறந்தேனோ?
மீண்டும் வானொலியிடமே தஞ்சம்...

ஒரு வழியாக பள்ளி திறந்தவுடன் ஏதோ விடுதலை கிடைத்தது போல் துள்ளிக் குதித்து ஓடினாலும் முதல் வாரத்திலேயே படிக்கும் வேலைகள் அதிகரிக்க எப்போது விடுமுறை வரும் என்று மீண்டும் மனம் ஏங்க ஆரம்பித்து விடும்.

😔😩😔😩

இப்படியாகத் தான் எங்களுடைய விடுமுறைகளும் கழிந்தது 

இன்றைய குழந்தைகள் 


No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...