Wednesday, June 20, 2018

Wild mushrooms




மழைக்காலத்தில் மரங்களின் கீழும் அதன் தண்டுப்பகுதிகளிலும் பூத்திருக்கும் காளான்கள் சூழலியலில் பெரும்பங்கு வகிக்கிறதாம். சில காட்டு காளான்கள் விலங்குகளுக்கு உணவாகவும் மரங்களுக்குத் தேவையான கனிமங்களை அளித்து தனக்குத் தேவையான உணவினை மரங்களிலிருந்தும் பெற்றுக் கொள்கிறது. கொத்துக்கொத்தாக பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில், ஈரப்பத சூழ்நிலையில் வளரும் காளான்களும் தான் எத்தனை அழகு!

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

வட அமெரிக்கா வந்த புதிதில் பிளாஸ்டிக் கப்புகளில் தயிர், வெண்ணெய், ஜூஸ், பால் என்று கடைகளில் வரிசையாக அலங்காரமாக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன். மதுரையில் இருந்த வரையில் தயிர் வாங்குவதெல்லாம் பாத்திரத்தில் தான் அதுவும் அன்றன்று. இப்பொழுது தயிரை வீட்டிலேயே தோய்க்கிறார்கள். பால் கூட கண்ணாடி போத்தல்களில் வந்து கொண்டிருந்தது பிறகு பாக்கெட் பால் என்று பிளாஸ்டிக் பைகளில் வர ஆரம்பித்து விட்டிருந்தது. அம்மா காய்கறி வாங்கி வர மஞ்சள் பையும், வயர் கூடையும் தான் வைத்திருந்தார். நானும் கூட ஊரில் இருந்த வரை. இங்கோ பெரிய பெரிய பிளாஸ்டிக் கேன்களில் பால், தயிர்... என்று பிளாஸ்டிக் சகலத்திலும் வியாபித்திருக்கிறது.காய்கறிகளை, பழங்களை வாங்கி பிளாஸ்டிக் பையில் போட குறைந்தது ஐந்தாறு பைகள் தேறும். பால், தயிர், வெண்ணை, சீஸ், பிரட், முட்டை எல்லாமே பிளாஸ்டிக் உறைகளில். இவை எல்லாவற்றையும் போட்டு எடுத்துச் செல்ல மேலும் சில பிளாஸ்டிக் பைகள். ஒரு குடும்பம் மட்டுமே அத்தனை பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு வாரத்தில் குப்பையில் சேர்க்கிறதென்றால்...ஒரு தெரு, ஒரு நகரம், ஒரு மாநிலம், ஒரு நாடு??? தலையைச் சுற்றுகிறது.

ரத்தப் பரிசோதனைகக்கூடங்களில், மருத்துவமனைகளில், விமான நிலையங்களில், உணவகங்களில் ... கேட்கவே வேண்டாம். அளவே இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்கள்.

எங்கு தான் இல்லை? பார்க்கும் இடங்களில் எல்லாம் இந்த மக்காத குப்பைகள் தான்! எப்படி ஒழிப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நம் பங்கிற்கு மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் முனைப்போடு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தாலன்றி எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நம்மால் முயன்ற வரை சிறு சிறு விஷயங்களில் கவனம் கொண்டால் பிளாஸ்டிக் குப்பைகளை முடிந்தவரை தவிர்க்கலாம். முறையாக மறுசுழற்சி செய்யலாம்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டங்களில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு ஆறுதலாக இருந்தது. கண்டிப்பாக அனைத்து மாவட்டங்களும் முறைப்படுத்த வேண்டிய ஒன்று. இங்கும் கலிஃபோர்னியாவில் சிறிது முயற்சி செய்கிறார்கள்.

நாம் தான் சுற்றுப்புறச்சூழலை மாசுப்படுத்தி இயற்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையும் நம் வருங்கால சந்ததியினரைப் பற்றின கவலையும் ஏதுமின்றி பொறுப்பற்றுத் திரிகிறோம்.

தமிழ்நாட்டு அரசின் சமீபத்திய பிளாஸ்டிக் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்து செயல்படுத்துவதும் மக்கள் நம் கையில் தான் உள்ளது.

மக்காத குப்பைகளுடன் வாழ்ந்து வரும் நமக்கு அதன் அழிவுகள் ஏற்படுத்தும் அபாயங்கள் உணரும் காலம் நெருங்கி விட்டதை அறிவோமா?

பள்ளிக்கூடம் திறந்தாச்சு !!!!

பழசு தான்ன்ன்ன்ன்... இதெல்லாம் கடந்த காலமாகி விட்டது. குழந்தைகளும் வளர்ந்து விட்டிருக்கிறார்கள்....

பள்ளிக்கூடம் திறந்தாச்சு !!!!

இந்த மாதம் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் . பெற்றவர்களுக்கு செலவுகள் அதிகமான திண்டாட்டம். ஆம், பள்ளிகள் திறந்ததினால் நண்பர்களையும், புது வகுப்பு ஆசிரியர்களையும் பார்க்க போகும் ஆவல் குழந்தைகளுக்கு. வகுப்பு கட்டணம் , புத்தகம், நோட்டுக்கள் இத்யாதி செலவுகள் என்று பெற்றோரின் பர்சை பதம் பார்ப்பதால பெற்றவர்களுக்கு கவலை அளிக்கும் மாதம்.

அந்த வகுப்புக்குரிய புத்தகங்கள், தேவையான நோட்டுக்கள், பேனா, பென்சில், காம்பஸ் பாக்ஸ், அழி ரப்பர் என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டுக்கொண்டு, அரசமரம் முக்கிலிருக்கும் மணீஸ் ஸ்டோருக்கு அம்மாவுடன் நான், அக்கா, தங்கை மற்றும் தம்பிகள் போய் விடுவோம். அதற்குப் பக்கத்திலிருக்கும் சாந்தி ஸ்டோர்சில் அவ்வளவாக கூட்டம் இருக்காது 😞

முதலில் , புத்தகங்கள் வாங்குவோம். எனக்கு எப்பொழுதும் புது புத்தகத்தை முகர்ந்து பார்ப்பது பிடிக்கும். அந்த ப்ரெஷ் இங்க் வாசனை நன்றாக இருக்கும். பிறகு, நோட்டுக்கள், வண்ண வண்ண அட்டைகளுடன். பிரவுன்ஷீட் பேப்பர் ரோல், எல்லா நோட்டுக்களுக்கும் அட்டை போடுவதற்கு. மறக்காமல், லேபல் (பறவைகள், மலர்கள் மற்றும் பல வடிவங்களில்) , பேனா (இங்க் அல்லது பால்பாயிண்ட் ), இங்க் பாட்டில், ஸ்கெட்ச் பேனாக்கள், கேமல் காம்பஸ் பாக்ஸ் , வாசனையுள்ள அழிரப்பர் , பென்சில்கள் என்று எங்கள் எல்லோருக்கும் வாங்கிக்கொண்டு, ஜெம்ஸ்/ true nice பிஸ்கட் என்று கொறிக்க ஏதாவது ஒன்றையும் வாங்கிக்கொண்டு பெரிய தொகையை கட்டி விட்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்து சேர்வோம். சில சமயங்களில், கடைப் பையனே வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்.

அப்பா வந்தவுடன், நோட்டுக்களுக்கு அட்டை போட பிரவுன் ஷீட் , லேபல் , பேனா, கோந்து/ சாதம் சகிதம் உட்கார்ந்து விடுவோம். இதெல்லாம் , குடும்பமாக செய்வதால் ஒரு குதூகலம் எப்போதும் இருக்கும். என் நோட்டுக்கு தான் முதலில் அட்டை போட வேண்டும் , இல்லை என்னுடையது தான் என்று எல்லோரும் சண்டை போட்டுகொண்டிருக்கும் பொழுது, போடவா வேண்டாமா என்ற அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து , அமைதியாக அவரவர் நோட்டுக்கள் வரும் வரை காத்திருப்போம். நோட்டை பிரவுன் ஷீட் மேல் வைத்து, அழகாக மடித்து, முனைகளை வெட்டி உள்ளே செருகி விட, சில நிமிடத்தில் பளிச்சென்று, நோட்டுக்கள் அழகாகிவிடும். பிறகு, எங்களுக்கு பிடித்த லேபல்களுடன், காத்திருப்போம். ஒவ்வொருவருடைய நோட்டிலும் லேபல்கள் ஒட்டி, சிறிது காய்ந்த பிறகு , பெயர், வகுப்பு, பாடம் எல்லாம் எழுதி முடித்த பிறகு , அந்த வருடம் வாங்கிய புதிய புத்தகப் பையில் எல்லாவற்றையும் நேர்த்தியாக அடுக்கி, ஒரு முறை தோளில் போட்டு அழகு பார்த்த திருப்தியுடன் அதை ஓரத்தில் வைத்து விடுவோம்.

புத்தகங்களை, அம்மா பைண்டிங் பண்ண கொடுத்து விடுவார். அந்த பைண்டிங் பிரஸ் போக எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் என்றால், அங்கு இருக்கும் வினோதமான மெசினும், இங்க் வாசனையும் தான். ஒவ்வொரு பக்கமாக அவர்கள் அந்த மெசினில் வைத்து லாவகமாக வெளியே எடுத்து போடுவதும், ஒரு பக்கம் பைண்டிங் வேலையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். அவர்களுக்கு பணம் கட்டிவிட்டு, வீடு வரும் வரை புத்தகத்தின் மேலிருக்கும் optical illusion அட்டையை பர்ர்த்துக் கொண்டே வீடு வரும் வரை சுற்ற விட்டு வழியில் தெரிந்த நண்பர்களிடமும் காண்பித்து ஒரு வழியாக புத்தகப் பையில் வைத்து விட்டு , அடுத்த நாள் பள்ளிக்கு சென்று எல்லோரிடமும் காண்பிக்க வேண்டும் என்ற சுகமான நினைவுடன் அந்த நாள் இனிதே முடியும்.

இன்றும் கூட, என் குழந்தைகளுக்கு பள்ளி திறப்பதற்கு முன் தேவையானவைகளை வாங்க கடைகளுக்குச் செல்லும் பொழுது அதே குதூகலத்துடன் நானும் என் மகளும் செல்கிறோம்!!!!

திரும்பிப்பார்க்கிறேன்...சுப்பிரமணி

சுப்பிரமணியின் பள்ளியில் 'Senior Portraits 2019 ' என்று அடுத்த வருடம் பள்ளி முடிந்து செல்லப் போகும் மாணவ, மாணவியரை விதம்விதமாக ஸ்பெஷல் புகைப்படங்களை எடுக்க ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு விபரங்களை அனுப்பி, அவனும் இந்தா ரெஜிஸ்டர் செய்கிறேன் அந்தா ரெஜிஸ்டர் செய்கிறேன் என்று கடைசி நிமிடத்தில் பதிவு செய்து பள்ளி விட்டு வந்ததும் குளித்து முடித்து தயாராகி அவனே இஸ்திரி போட்ட வெள்ளைச் சட்டை , இஸ்திரி போடாமல் ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த பேண்ட், தலையை படிய வாரி...

என்னடா! அப்போவோட வெள்ளைச்சட்டைய போட்டுட்டு வந்து நிக்கிற? உன்னோடது எங்க?

அது எங்க இருக்குன்னு தெரியலைம்மா. சத்தம் போடாத! அப்பா திட்டுவாரு😧😧😧

ஹா! இதுக்குத்தான் நீயே அயர்ன் பண்ணிக்கிறேன்ன்னு சொன்னியாக்கும். அதானே சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? உன்னோட...😡😡😡

சரி, சரி... எப்படி சிரிச்சு போஸ் குடுக்குறதுன்னு சொல்ற மாதிரி சிரிச்சு வையி.

போய் மூஞ்சிய கழுவிட்டு கொஞ்சம் பவுடர போட்டுக்க.

இப்பத்தான் குளிச்சேன்.

குளிச்ச மூஞ்சி மாதிரியா இருக்கு?😯

பவுடர் எங்கம்மா?

அது சரி!

என்னடா முன் பதிவுன்னுட்டு இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைக்கிறாங்க. என்னை விட என் பக்கத்தில் பொறுமையில்லாமல் உட்கார்ந்திருந்த 'வெள்ளையம்மா' மகனிடம் புலம்பிக் கொண்டே இருந்தார். அடிக்கடி அவன் தலையை கோதி ‘டை’ சரி பண்ணி, அவன் ஏதோ சிபிஐ ஆஃபிசர் போல் தலையில் ஜெல் தடவி அழகாக சட்டையை இன் செய்து ... பார்றா எவ்வளவு நீட்டா வந்திருக்கான். நீயும் வந்திருக்கியே? அழுக்கு மூஞ்சி!

அவருடைய பெண் இரு வருடங்களுக்கு முன்பு தான் பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். இவனை கல்லூரிக்கு அனுப்பத்தான் பயமாக இருக்கிறது என்றார். ஓஹோ! உங்க வீட்டு சுப்பிரமணியா அவன்? எனக்கும் தான் என் பையனை அனுப்ப பயமாக இருக்கிறது என்று இரண்டு பேரும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருக்கிறோம் என்பதை அடுத்தடுத்து பேசிய விஷயங்களிலிருந்து தெரிந்து கொண்டோம்.

பெண் குழந்தைகளை பயமில்லாமல் அனுப்பி விட முடிகிற காலமாகி ஆண் குழந்தைகளை நினைத்து அதிகம் கவலைப்படுகிறோம்! என்னவோ போடா மாதவா!😔😔😔

எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுப்பிரமணி கைபேசியுடன். ஏண்டா உன் சட்டை இவ்வளவு கசங்கியிருக்கு? அயர்ன் பண்ணியா இல்லியா? அப்பாட்ட கொடுத்திருந்தா நல்லா பண்ணியிருப்பார் இல்ல?

ஹிஹிஹி! நான் வயிறு வரைக்கும் தான் அயர்ன் பண்ணினேன். அதுவரைக்கும் தான படத்தை எடுப்பாங்க!😮😮😮

ஐயோ கடவுளே! எப்பேர்ப்பட்ட அறிவுஜீவி? முழுச்சட்டையை அயர்ன் பண்ணாத சோம்பேறி!

நல்ல வேளையாக படத்தை எடுக்கும் ஸ்டூடியோ ஆட்களே வெள்ளைச்சட்டையைக் கொடுத்து மானத்தைக் காப்பாற்றி விட்டார்கள்.

8 போஸ்களுக்கு ஒரு விலை, 16, 32 போஸ்களுக்கு ஒவ்வொரு விலை! இருப்பதிலேயே மினிமம் 8 போஸ்கள். இது போதும்டா. பொண்ணுங்கன்னா அர்த்தம் இருக்கு. ஒவ்வொரு ஆங்கிள்ல வித்தியாசமா தெரிவாங்க. பசங்களுக்கு இதுவே ஜாஸ்தி. எந்த ஆங்கிள்லயும் ஒரே மாதிரித்தான் இருப்பீங்க.

எதைப் பற்றியும் கவலைப்படறவன் இல்ல என் சுப்பிரமணி. ஒரு போஸ் கூட அவனுக்கு ஓகே தான்.

இங்க பாரு, அவங்க சொல்ற மாதிரி ஒழுங்கா தலைய ஆங்கிள்ல வச்சு இப்படி சிரிக்கணும். எங்க சிரி?

அய்யே! இதுக்கு நீ சிரிக்காமலே இருக்கலாம். நல்லா சிரிடா. பல்லை காட்டாத.

அவன் ஸ்டூல் மீது உட்கார்ந்து ஃபோட்டோகிராபர் சொல்ல சொல்ல ஒவ்வொரு கோணத்திலும் படமெடுக்க, பின்னிருந்து நான் மூன்றாம் பிறை கமல்ஹாசனாய் இப்படி சிரிடா , சட்டைய கொஞ்சம் இழுத்து விட்டுக்கோ, கூன் போடாம நிமிந்து உட்காரு என்று அடுத்தடுத்து சைகையில் சொல்ல... கையில் பட்டம் வாங்கிய மாதிரி தொப்பியெல்லாம் போட்டுக் கொண்டு ஒரு க்ளிக். போடாமல் ஒரு க்ளிக் இப்படி பல போஸ்களில் க்ளிக் க்ளிக் க்ளிக் ... இந்தப் படம் சுமாரா வந்திருக்கு. அது நல்லா இருக்கு என்று அங்கேயே கணினியில் பார்த்து... படம் எடுத்தவரையும் டென்ஷானாக்கி ... 😛

இதில் ஒரு படம் அவனுடைய 'இயர் புக்'கில் போட வாங்க வேண்டும். கொள்ளைக்காசு சொல்வார்கள்.

அங்கு வந்திருந்த அவன் வயதுப்பெண்களில் சிலர் இளமை பொங்க இயற்கை அழகுடன் ....செதுக்கிய சிற்பம் போல் மாசு மருவில்லாத முகத்துடன் ஒரு மாணவி.... மிடில் ஈஸ்டர்ன்... அழகென்றால் அவளல்லவோ பேரழகி! அனாவசிய மேக்கப் இல்லை. சிரித்தால்... அபிராமி! அபிராமி! நெற்றி, கண்கள், மூக்கு, இதழ்கள்... செதுக்கி வைத்த சிற்பம் போல்! சில மாணவிகள் ஓவராக மேக்கப் போட்டுக் கொண்டு மிகவும் செயற்கையாக.... ஆனாலும் அந்த அழகுப்பதுமை! சான்ஸே இல்லை... ஹாலிவுட் தேவசேனாக்கள் அவளிடம் பிச்சை எடுக்க வேண்டும். பெண்கள் தான் ஒவ்வொரு பருவத்திலும் எத்தனை அழகு! அதுவும் பதின்பருவப் பெண்கள்...நான் இப்படி வருகிற போகிற மாணவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இந்த பசங்கள் எல்லாம் கைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!

ஒரு வழியாக எடுத்த படங்கள் வந்து விட்டது. ஒரு சில படங்களைத் தவிர எல்லா படங்களிலும் ரகுராம் ராஜன் மாதிரி சிரிச்சு வச்சுருக்கான் எம் புள்ள.

அமெரிக்காவும் என் ஆரம்ப நாட்களும்...மிஷிகன் அனுபவங்கள்

அமெரிக்கா வந்த புதிதில் நாங்கள் தங்கி இருந்ததோ மிக்ஷிகனில் Farmington Hills என்றொரு நகரத்தில். என் வேலையிடமோ Grand Rapids என்ற பக்கத்து நகரத்தில். கார் ஓட்டத் தெரியாத நாட்கள். நான் மட்டும் அங்கு தங்கி இருக்க வேண்டிய சோதனையான காலம்! அதுவரை குழந்தை, கணவரை விட்டு நாட்கணக்கில் தனியாகச் சென்றதில்லை. மதுரையில் இருந்தவரை என் வீடு, அம்மா வீடு என்றிருந்து பழக்கப்பட்ட எனக்கு குழந்தையை விட்டுத் தனியாக இருக்க வேண்டியிருக்கே என்ற கவலை. எப்படி இருக்கப்போகிறேனோ என்ற பதட்டம். அதுவும் தனியாக ரூம் எடுத்து ஹோட்டலில் :( ஒரே அழுகை. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ என்று எரிச்சல்.

அந்த நாளும் வந்தது. விதியை நொந்து கொண்டே பயத்துடன் நான் மட்டும் அந்த அறையில். உணவை ஆர்டர் செய்தால் பெரிய தட்டு நிறைய... அமெரிக்க உணவுகள் பழக்கமில்லாததால் சாப்பிடவும் தெரியாது அப்போது. பாதி சாப்பிட்டு மீதியை அப்படியே வைத்து விட்டு கொஞ்ச நேரம் டிவி பிறகு புத்தகத்தைப் படித்தாலும் தூக்கம் மட்டும் வருவேனா என்று அடம்பிடிக்க...நேரம் செல்ல செல்ல ஒருவித பதற்றம்...

விளக்குகளை அணைத்து விட்டு கண்ணை மூடினால், வெளியில் பேசிக்கொண்டே நடந்து செல்பவர்களின் சத்தம் வேறு பயத்தை கொடுத்தது. அப்படி ஒரு பயந்தாங்கொள்ளி நான் :( உடனே, எல்லா விளக்குகளையும் போட்டு விட்டு, துணைக்கு டிவியையும் ஆன் பண்ணி...தனிமை தந்த பயத்தைப் போக்க மிகவும் சிரமப்பட்டேன்...அதிகாலையில் தூக்கம் வர கண்ணை மூடினால், எழுப்பி விடச் சொன்னீர்களே என்று ரிசெப்ஷனிஸ்ட் எழுப்பி விட, சிவந்த கண்களுடன் அவசரஅவசரமாக தயார் செய்து கொண்டு காலை உணவை சாப்பிடச் சென்றால் muffins, cupcakes, bread, bagels, cereals , பழங்கள், ஜூஸ் , காஃபி என்று அழகாக பரப்பி வைத்திருந்தார்கள். சாப்பிடத் தெரிந்த ஒரே ஐட்டம் cornflakes மட்டுமே. அரையும்குறையுமாக சாப்பிட்டு விட்டு மதியத்திற்கு ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை கொஞ்சம் லவட்டிக் கொண்டு...வாடகை காருக்காக காத்திருந்தேன்.

நினைத்த நேரத்தில் பேசிக்கொள்ள இன்றைய செல்ஃபோன் காலமும் கிடையாது. காலையில் கணவரிடமிருந்து போன் வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இப்படியெல்லாம பயப்படுவே, யூ ஆர் எ ஸ்ட்ராங் வுமன் அப்படி இப்படின்னு டயலாக் வேற ... இப்படி சொல்லி சொல்லியே என்னைய ஒரு வழி பண்ணிட்டாங்களேன்னு எனக்குள்ள பயங்கர வருத்தம். சந்தோஷமா ஆபீஸ் போ. புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. யூ வில் பி ஆல்ரைட். அப்புறம் நீ எங்களடோ பேசுறதுக்கு கூட நேரமிருக்காது...ன்னு வேற சொல்லி எரிச்சல் படுத்த...சரி நான் போயிட்டு வாரேன். கார் வந்துடுச்சு. குழந்தைய பத்திரமா பார்த்துக்கோங்கன்னுட்டு கிளம்ப...

ஓட்டிக் கொண்டு வந்தவரோ ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர். அவர்களைப் பார்த்தாலே எனக்கு ஒரு இனம் புரியாத பயம் :( அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வது வேறு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. படபடக்கும் இதயத்தோடு ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தேன். புது இடம், புது மக்கள்...அலுவலகத்தில் ஏதோ ஒரு தேவ பாஷையில் அவர்கள் பேச. சுத்தம். ஆங்கிலப்படம் பார்ப்பது போல் இருந்தது. கைநிறைய படிவங்கள். ஒரு மண்ணும் புரியலையே?!

ஹெல்த் இன்சூரன்ஸ், லாங் டெர்ம் டிசபிளிட்டி இன்சூரன்ஸ், 401K...இத்யாதி இத்யாதிகள்...கடவுளே இந்த குப்பைகளை என்னிக்கு படிச்சு என்னிக்கு ...'திருதிரு'வென நான் முழிப்பதை பார்த்த அந்த சைஸ் ஜீரோ வெண்ணிற மங்கை, ஒன்னும் அவசரமில்லை. மெதுவா படிச்சிட்டு அடுத்த வாரம் கொடுத்தா போதும்னு சொன்னதுக்கப்புறம் தான் அப்பாடாவென்றிருந்தது.

எப்படி இப்படி 'சிக்'கென்று இருக்கிறாள்! அழகா மேக்கப் போட்டிருக்காளே. என்ன வயசு இருக்கும்? கல்யாணம் ஆகியிருக்குமா? அழகா இருக்கே அவ போட்டிருக்க ஷூ! என் கவலைகள் திசை திரும்ப...

புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களை ஒரு ஹாலில் உட்கார வைத்தார்கள். அங்கே போனால்...ஐயோ அம்மா...இம்பூட்டு தேசிகளா ??? நடுநடுவே கொஞ்சம் மானே தேனேன்னு போட்டுக்குற மாதிரி ரெண்டு சைனீஸ், மூணு அமெரிக்கன்ஸ்...

நானாக யாரிடமும் சென்று பேசத் தயங்குவேன். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் தயங்குவார்கள். அது வேற விஷயம் :) முதலில் என்னிடம் அறிமுகப்படுத்தி பேசியவர் ஒரு தெலுங்குக்காரர். இதற்கு முன் ஏதோ ஒரு ஊரில் வேலை பார்த்திருக்கிறார். இப்பொழுது தான் அமெரிக்கா வந்திருக்கிறீர்களா என்று ஆச்சரியப்பட்டு நாங்கள்லாம் சீனியர்ஸ் லுக் கொடுத்து கொஞ்சம் இலவசமாக அறிவுரைகளையும் அள்ளித் தெளித்து விட்டு நகர...

அமைதியாக உட்கார்ந்திருந்தேன். பிறகு கனடாவிலிருந்து வந்திருந்த ஒரு கனேடிய பெண், PhD முடித்த சைனீஸ், கொஞ்சம் வயதானவர்கள் என்று பலருடனும் பேசிய பிறகு, ஹாய் ஐயாம் ஸ்ரீதேவி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவரிடம்...ஹாய் என்றேன். வேர் ஆர் யூ ஃப்ரம்? இந்த கேள்வி இன்று வரை என்னை திக்குமுக்காடச் செய்யும். அன்றும் நான் யோசித்துக் கொண்டிருக்க அவரே, இன் இந்தியா என்றவுடன், ஹி ஹி ஹி...மதுரை, தமிழ்நாடு என்றவுடன்...ஹேய் ...எனக்கு சேலம்னு சிக்சர் அடிச்சாரே!!! எனக்கா அவ்வளவு சந்தோஷம்! அமெரிக்காவுல, வேலை பார்க்கிற இடத்துல தமிழ்ல பேச முடியுது...அபிராமி அபிராமின்னு சோ ஹேப்பி!

நீங்க மதுரையா? என் கணவரும் மதுரை தான். ஆஹா!! மதுரை வேறயா?? அதுவரையில் இருந்த தனிமை உணர்வு மெல்ல மெல்ல விலகிச் செல்ல...எப்படா சாயங்காலம் வரும். கணவரிடம் சொல்ல வேண்டுமே என்று பரபரத்து... அவருக்கும் கொஞ்சம் டென்ஷன் விலகியது அவர் பேச்சிலிருந்து தெரிய...

அடுத்த நாளே ஸ்ரீதேவி அவர் கணவர் கண்ணனை அறிமுகப்படுத்த, அவருக்கும் என்னைப்ப் பார்த்ததில் மதுரையிலிருந்து வந்திருக்கும் பெண் என்று ஒரே பாசம். படித்த விவரங்கள், ஊர் பற்றி பேச ஆரம்பித்து அவர்கள் வீட்டுக்குத் தினமும் டின்னருக்கு அழைத்துச் செல்ல... மொழி, ஊர் பாசம்ன்னா என்னன்னு தெரிய ஆரம்பித்தது.

எப்படா வெள்ளிக்கிழமை வரும் என்று (அன்றிலிருந்து இன்று வரை) காத்திருப்பேன். முதல் பஸ் பயணம் அமெரிக்காவில். மீண்டும் படப்படப்பு. தூங்கிடக்கூடாதே என்று கவலை. பஸ்சில் ஏறினால் நான் மட்டும் தான் ப்ரவுன் நிறத்தில்! இரண்டு மூன்று வெள்ளை அமெரிக்கர்கள். டெட்ராய்ட் செல்லும் அந்த வண்டியில் நிறைய சாமுவேல் ஜாக்சன்களும், ஜானெட் ஜாக்சன்களுமாய்...அய்யோ...ஒரே நேரத்தில் இவ்வளவு கருப்பு அமெரிக்கர்களை கண்டதும் பயம். அவர்கள் பார்க்க கொஞ்சம் என்ன, நன்றாகவே முரட்ட்ட்ட்ட்ட்டுத்தனமாக இருந்தார்கள். பெரும்பாலான ஆண்களின் கண்கள் 'விஜயகாந்தின் கண்கள்' போலவே சிவப்பா... பெண்களோ பேய் நகங்களுடன். பெரிய பெரிய உதடுகள்...கண்களும் பெரிதாக...அது என்ன முடியா? ...அப்படி ஒரு சுருட்டை. உட்கார அதிக இடமெடுத்துக் கொண்டு...நானோ ஒடுங்கிக் கொண்டே ஒருத்தியின் அருகில்...குடித்து விட்டு வந்திருப்பாளோ? சிகரெட் வேற புகைத்திருப்பாள் போலிருக்கே! குடலை குமட்டும் நாற்றம். இடம் மாறி உட்காரலாம் என்றால்...எதுவுமே பிடிக்கவில்லை. எப்படா ஊர் போய்ச் சேருவோம் என்று இருந்தது.

நடுநடுவே வண்டி நிற்க, கறுப்பாக பயங்கரமாக இருந்தவர்கள் சிலர் இறங்க, பயங்கர கருப்பாக இருந்த சிலர் ஏற...இவர்களுடன் பயணித்த நேரங்களில் 'டப் டப்' என்று அனாயசமாக துப்பாக்கி எடுத்து கொன்று போடும் படங்கள் மனதில் நிழலாட... கடவுளே, ஏன் இதெல்லாம் இப்ப ஞாபகத்துக்கு வந்து தொலையுது? போராட்டத்துடனே ஊர் வந்திறங்கியதும்...குழந்தையையும், கணவரையும் பார்த்தவுடன் தான் அப்பாடா என்றிருக்கும்.

. நான் தனிமையில் பயணம் செய்து அநியாயத்திற்கு மாட்டிக்கொண்ட ராஜபாளையம்-விருதுநகர்-மதுரை பயணம் மூளையில் மின்னலடிக்க...இன்று நினைத்தாலும் குலை நடுங்கும் அந்த அனுபவம் போலில்லாமல், பஸ் பயணங்களில் மனிதர்களை, அவர்களின் நடை உடை பாவனைகளை என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து...நன்றாக குடித்து விட்டு வந்தாலும் 'கம்'மென்று அமைதியாக, வாந்தி கீந்தி எடுக்காமல், முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் பெண்களை நோண்டாமல், கண்களால் கற்பழிக்காமல், கண்ணிருந்தும் குருடர்களாக இடித்துக் கொண்டு ஏறாமல்...அமைதியான பயணம் பிடிக்க ஆரம்பித்தது

பயந்தாங்கொள்ளியாக இருந்த என் ஆரம்பகால நாட்கள் அவ்வளவு உவப்பானதாக இல்லை தான். ஆனாலும் எனக்குப் பிடித்திருந்தது.

😀😀😀

சிந்திப்போமா?

//இந்த வெயிலிலும் நாம் ஷுவும், டையும் மாட்டிக்கொண்டு அலைவதே அடிமைத்தனத்தின் மிச்சம்தான்!//
படித்ததில் மிகவும் பிடித்தது.
பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு ஏன் இந்த 'டை' அலங்காரங்கள் எல்லாம்? அதுவும் இந்த கொளுத்துகிற வெயிலில்! மதுரை போன்ற குப்பை சூழ் மாநிலங்களில் வெள்ளைச் சீருடை போன்றதொரு கொடுமை வேறு! ஒரு முறை வெளியில் சென்று வந்தாலே நிறம் மாறி விடும் முகமும் ஆடைகளும்! என்று இந்த பள்ளிகளின் பொறுப்பளர்களுக்கு அறிவு வந்து பெற்றோரின் வேதனையை குறைப்பார்களோ தெரியவில்லை. பணத்தை மட்டுமே குறி வைத்து கொள்ளையடிக்கும் கூடாரங்களில் இதையெல்லாம் எதிர்பார்ப்பது தவறோ?
அதை விட கொடுமை முழுக்கைச்சட்டை! வேலைக்குச் செல்பவர்கள் என்றால் அப்படித்தான் உடையணிய வேண்டும் என்ற அடிமைச்சிந்தனை மாறவே மாறாது போலிருக்கு!
அதைவிட கொடுமை கல்யாண ரிசப்ஷனுக்கு கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு நீயா நானா கோபிக்கு போட்டியாக! முடியலடா சாமிகளா! என்ன தான் மாமனார் காசுல ஓசியில ட்ரெஸ் வாங்கிக்கிட்டாலும் இப்படியா? ஒரு நியாயம் வேண்டாமா?
துணிக்கடைகளில் sweat pant, jacket எல்லாம் விற்கிறார்கள் ஓகே. படங்களில் ஜோசப் விஜய் போல நடிகர்கள் போட்டு ஆடுகிறார்கள் என்றால் பணம் வாங்கி நடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்காக அதே மாதிரி உடையை அணிந்து கொண்டு...
நாம் வாழும் இடம், தட்பவெப்பத்திற்கு ஏற்றவாறு என்று உடை அணியப்போகிறோம்? இந்த வெட்டி அலப்பறைகள் தேவையா?
இந்த விஷயத்தில் சேட்டன்கள் பரவாயில்லை. இன்னும் வேட்டி , அரைக்கைச்சட்டை என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.

Naledi


தெற்கு ஆஃப்ரிக்காவில் தந்தத்திற்காக ஒரு பெண் யானையை கொன்றதால் அனாதையான அதன் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளும், தன்னார்வலர்களும் பராமரித்து வருவதை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. நலெடி என்ற அந்த குட்டி யானை பவுடர் பால் குடிக்கும் அழகும் (வேதனையும் தான் 😞 ) , ஆற்று நீரில் புரண்டு விளையாடுவதும், தன்னைப் பராமரிப்பவர்களுடன் கொஞ்சுவதுமாய் குழந்தையாக குதூகலமாக உலா வர, கவனித்துக் கொள்பவர்களும் அன்புடன் சீராட்டுவதைப் பார்க்க நன்றாக இருந்தாலும் வேதனையாக இருந்தது. நலெடி ஓரளவு உடல் தேறியதும் அதை மீண்டும் காட்டில் அதன் குடும்பத்தில் விட, அவர்கள் நலெடியின் அக்கா யானையைக் கூட்டி வர, இந்த குட்டி யானையோ மனிதர்கள் பின்னால் பதுங்கி நிற்க, அவள் அக்காவோ அருகில் வருவதும் பின்னால் செல்வதுமாய் பின்பு ஒரேடியாக மறுத்து காட்டிற்குள் செல்ல... அனைவருக்கும் சோகம். பிறகு ஒரு பெரிய யானைக்குடும்பத்தை அழைத்து வர, அதில் ஒரு குட்டி யானை முன் வந்து துதிக்கையை நீட்ட, தயக்கத்துடன் நலெடியும் தன் தும்பிக்கையை நீட்டி ஒருவருக்கொருவரின் அறிமுகமாய் , நம்பிக்கையை கொடுத்து மெதுவாக அவர்களுடன் சேர்ந்து பெரிய யானைகள் நடுவே காடு நோக்கி நடக்கத் தொடங்க, பராமரிப்பாளர்களின் கண்களில் ஒரே பரவசம். பார்ப்பவர்களுக்கும் தான்! அந்த குட்டி யானைக்கு தீங்கு நேராமல் இருக்கிறதா என்று கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அன்பான குடும்பங்களுடன் அழகாக வாழ்ந்து மலைப்பை உண்டாக்கும் இப்பெரும் விலங்குகளை தந்தத்திற்காக கொல்பவர்களையும் அந்த நீச்ச செயலை ஊக்குவிப்பவர்களையும் என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். மனிதர்கள் உருவில் இத்தகைய கொடிய விலங்குகளுடன் வாழும் துர்பாக்கியம் நமக்கு😔 வெறும் பகட்டுக்காக காட்டில் சுதந்திரமாக திரியும் உயிரினங்களைக் கொல்லும் இந்த கொலைபாதகர்களை நினைத்தாலே மனம் குமுறுகிறது. தாயை இழந்து பல குட்டி யானைகள் தவிக்க மனிதர்களாக வெட்கி நிற்கிறோம்.





😞Naledi


குழந்தைகள் பல விதம்!

பள்ளியில் வருட இறுதித்தேர்வு அட்டவணை போட்டவுடன் ஒரு பிரிண்ட் எடுத்து இந்தாம்மா என்று ஃப்ரிட்ஜ் மேல் ஒட்டி வைத்து எந்தெந்த நாளில் என்னென்ன தேர்வுகள், நேரம் என்பதையெல்லாம் சொல்லி விட்டு மகளும் படிக்க ஆரம்பித்து விடுவாள். மிக நன்றாக படிப்பவள் தான். ஆனாலும் கேள்வி கேளு, சரியா பதில் சொல்றேனா என்று பதட்டமாகவே இருப்பாள். திடீரென நடு இரவில் எழுப்பி, தனியாக படிக்க பயமாக இருக்கிறது. என் அறையில் படுத்துக்கோ என்று நானும் என்ன நடக்கிறது ஏது நடக்கிறதென புரியாமலே தூக்க கலக்கத்தில் அவள் படுக்கையில் 'பொத்' என்று விழும்பொழுது எதிர் வீட்டு ஜன்னல்களில் தெரியும் விளக்குகளும் சொல்லாமல் சொல்லும் அங்கு விழித்திருந்து படிக்கும் பெண் குழந்தைகளை!
இவ்வளவு நேரம் முழித்திருந்து படிக்கிறாளே பசிக்காதோ என்று தூங்கிக்கொண்டே சாப்பிட ஏதாவது எடுத்திட்டு வரவா? இல்ல சூடா டீ போட்டுக் கொடுக்கவா என்று கேட்டால், உனக்குச் சிரமமில்லை என்றால் எனக்கு ஹார்லிக்ஸ் போட்டுக் கொடும்மா என்று புத்தகத்தின் மேலிருந்து கண்ணை எடுக்காமல் பதில் வரும். நானும் கீழே சென்று ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுத்து விட்டு விட்ட இடத்திலிருந்து தூக்கத்தைத் தொடருவேன். காலையில் அலாரம் அடித்தும் தூங்கிக் கொண்டிருப்பாள். பாவம், எத்தனை மணிக்கு குழந்தை தூங்கினாளோ? மெதுவாக எழுப்பி டீ போட்டுட்டு வர்றேன். எந்திரிக்கிறியா? பைவ் மினிட்ஸ் மாம் என்பாள். எதிர் வீட்டிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அவளை எழுப்பி விட்டு நான் மீண்டும் தூங்கி விடுவேன்.
இப்படித்தான் தேர்வு நடக்கும் நேரத்தில் நானும் மகளும் அல்லாடிக் கொண்டிருப்போம். தேர்வுக்கு முந்தைய இரவே பென்சில்களை கூர்மையாக சீவி அழிரப்பர் இத்யாதிகளை எடுத்து வைத்து விட்டுத் தான் தூங்குவாள். திட்டமிட்டுச் செய்வதில் கில்லாடி அவள்! பெருமையாக இருக்கும்.
டேய், ஸ்கூல்ல எக்ஸாம் ஸ்கெடுல் போட்டாங்களாம். தெரியுமா?
உனக்கெப்படி தெரியும்ம்மா? 😧😧😧
ம்ம்ம்ம்...ஈமெயில் வந்துச்சுடா எனக்கு. உனக்கு வரலை ? எப்ப படிக்க போற?
படிக்கலாம்ம்ம்ம்... சொல்லும் பொழுதே வாசலில் மணி அடிக்கும்.
இந்தா வர்றேன்... அவ்வளவு தான். நான் மட்டும் அட்டவணையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.
இங்கிலீஷ்ல படிக்கிறதுக்கு என்னம்மா இருக்கு?
சரி, மேத்ஸ்?
அதெல்லாம் படிப்பாங்களா?
பின்ன எதைத் தான் படிப்பாங்க?
பிஸிக்ஸ், சோஷியல் ஸ்டடீஸ் தான் படிக்க வேண்டியிருக்கும்.
அப்ப அதையாவது படிச்சுத் தொலைக்க வேண்டியது தான?
இப்ப படிக்கிறேன். கொஞ்ச நேரம் போகட்டும் என்று ராகு காலம், அஷ்டமி, நவமி எல்லாம் பார்த்து ஒரு வழியாக ரோபோ சிட்டி ஸ்டைலில் புத்தகத்தைத் திறந்து குறுக்கு நெடுக்காக பார்வையை ஓட விட்டு.... அம்மா பசிக்குது.
இப்ப தானடா படிக்க ஆரம்பிச்ச? அதுக்குள்ள பசிக்குதாக்கும் சொல்லிக் கொண்டே தோசைக்கல்லை எடுத்து வைத்து நான் என் கடமையைத் தொடர...
மெதுவாக சாப்பிட்டு முடித்து... ரிலாக்ஸ் பண்ண டிவி பார்த்து, வெளியில் சென்று விளையாடி விட்டு.... ரெவ்யூ பாக்கெட் எடுத்துட்டு வா என்றவுடன் சிறிது நேரம் டாம் அண்ட் ஜெர்ரியாக ஓடியவனை... கேள்வி கேட்டால் ஒரு வார்த்தை தான் பதிலாக வரும்.
என்னடா?
அதை வச்சு நான் எழுதிடுவேன்மா! அடுத்த கேள்விய கேளு.
பாதி கேள்விகளுக்குத் தெரியும்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா இப்ப தெரியலைங்கிற மாதிரியே யோசிப்பான்.
நாளைக்கு வேண்டிய பென்சில், பேனா, அழிரப்பர்லாம் எடுத்து வச்சிக்கிட்டியா?
ம்ம்ம்ம்.... எடுத்து வைக்கிறேன்.
அவ்வளவு தான். எனக்கு முன்னாடியே தூங்கப் போய் நான் எழுந்த பிறகு சாவகாசமாக எழுந்து வந்து நியூஸ் பார்த்துக் கொண்டே ஆற அமர சாப்பிட்டு...கடைசி நிமிடத்தில் பென்சிலைத் தேடி, முனை சீவி.... கோபம் தலைக்கேறினாலும் பரிட்சைக்குச் செல்லும் முன் அப்செட் செய்ய வேண்டாம் என்று எனக்கு நானே....ஷின் சான் மாதிரி 'அமைதி அமைதி அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி'ன்னு கையை கட்டிக்கொண்டு சுத்தி சுத்தி வர வேண்டியதுதான்.
சாந்தமு லேது...சவுக்கியமு லேதுங்கிற மாதிரி விஷமத்துடன் சிரித்துக் கொண்டே காருக்குள் ஏறுவான் சுப்பிரமணி.
என்ன பரீட்சைன்னு ஞாபகம் இருக்கா?
ஓ! நல்லா ஞாபகம் இருக்கேம்மா.
தூங்கிடாதேடா! நல்லா பண்ணு.
தேங்க்ஸ்
எழுதி முடித்தவுடன் வரும் குறுஞ்செய்தியில் 'ஈஸி பீஸி'. மதிப்பெண்கள் வரும் பொழுது தான் உண்மை நிலவரம் தெரியும். அப்பொழுதும் தன் மீது தவறு அல்ல. பேப்பரைத் திருத்தியவர் மீது தான், சிஸ்டம் சரியில்லை என்று 'எஸ்' ஆகி விடுவான்.
வழக்கம் போல் 'ஙே’😔
திட்டமிட்டு படிக்க ஒரு குழந்தை. திட்டங்களே இல்லாமல் படிக்குது ஒரு குழந்தை.
காட் இஸ் கிரேட்!
எழுத நேரமே இல்லைம்மா எவ்வளவு மார்க் வரும்னு தெரியல என்று சொல்வாள் செல்லல்ல்ல மகள். . நான் எழுதி முடிச்சு நல்லா தூங்கிட்டேன்ன்ன்ன்ன். நல்லா எழுதியிருக்கேன்னு தான் நினைக்கிறேன்.... இது சுப்பிரமணி 😞
குழந்தைகள் பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!
ஹ்ம்ம்... இப்படி பொலம்ப வச்சிட்டியேடா மாதவா!

திரும்பிப்பார்க்கிறேன் - அப்பா!

திருச்செந்தூர் முருகனைத் தரிசித்து விட்டு திருநெல்வேலியில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன திருப்பதி ஊரில் சரவண பவனில் மதிய உணவை முடித்துக் கொள்ளலாம் என்று அங்கே சென்றோம். உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வறட்சியுடன் கூடிய தோட்டங்களை கடந்து தனியாக ஒரு சாலை. அதற்குள் செல்ல கட்டணம் வேறு வசூலிக்கிறார்கள்! கேட்டால் தனியார் பராமரிப்பாம்! அந்த உணவகத்திற்குச் செல்ல காசு கொடுத்து உள்ளே சென்றது கொடுமையென்றால் சரவண பவன் உரிமையாளர் சொந்த ஊராம். சாப்பாடு விலையும் அதிகம். தரமும் குறைவு. கார், பஸ், வேன் என்று கூட்டம் அள்ளுகிறது. பின் வேறு எப்படி இருக்கும்? உணவகத்தின் எதிரே தங்கும் விடுதியும் கட்டி வைத்திருக்கிறார்கள். அருகே திருப்பதி பெருமாள் கோவிலும் கட்டி வைத்து அங்கும் கூட்டம்.
நாங்களும் சாப்பிட்டு முடித்து விட்டு வாசலில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம். கோவில் என்றால் கடைகள் இருக்க வேண்டுமென்பது கட்டாயமாயிற்றே! இரண்டு மூன்று கோவில் கடைகளில் சாந்துப் பொட்டு முதல், கண்ணாடி வளையல்கள், தோடு இத்யாதிகள், கிரிக்கெட் மட்டை, பந்து, சிறு குழந்தைகள் விரும்பும் அத்தனை பொருட்களும் அங்கிருந்தன. ஒரு சிறுவன் ஒவ்வொரு பொருளாக கேட்டு வாங்கிப் பார்த்து கடைசியில் கையோடு அவன் அப்பாவை அழைத்து வந்து அவரும் ஒவ்வொன்றாக பார்த்து விலைகளைக் கேட்டு யோசித்தவாறே பேரம் பேசி எதுவும் படியாமல் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றார். மகன் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு. தான் கேட்டு வாங்கிக் கொடுக்கவில்லையே என்று அழுத படி அந்தப் பையனும் முரண்டு பிடித்துப் போவதைப் பார்க்க பாவமாக இருந்தது. அந்த அப்பாவிற்குத் தானே தெரியும் அவ்வளவு செலவு செய்ய முடியாதென்று!
என் அம்மா சும்மா இருக்காமல் நீ கேட்குறதுக்கு முன்னாடியே அப்பா உனக்குப் பிடிச்சத வாங்கி கொடுத்துருவார் என்றார். உண்மை தான். நான் கேட்காமலேயே பலதும் எதிர்பாராத நேரங்களில் எனக்கு வாங்கிக் கொடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறார் அப்பா. ஆனால் ஒரு முறை கோவில்கடையில் நான் கேட்ட பொருளை வாங்கிக் கொடுக்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணி விட்டார். நானும் ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணிப் பார்த்ததில் வர வர வம்பு அதிகமாகிட்டே போகுது. சொல்ற பேச்ச சுத்தமா கேட்குறதில்ல வீட்டுக்குப் போனவுடனே முதுகுல நாலு வச்சா தான் சரியா வருவே அது இதுவென்று அவர் கத்த நான் முரண்டு பண்ண...அம்மா சமாதானம் பண்ண...கோபத்துடன் கோவிலை விட்டு வந்த நாளை அம்மாவிற்கு ஞாபகப்படுத்தினேன். அப்படி ஒரு நாள் தான் நடந்தது. அதை மட்டும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறாய். எந்த ஊருக்குச் சென்றாலும் உனக்குப் பிடித்தவைகளை வாங்காமல் அப்பா வந்ததில்லை. அதையெல்லாம் மறந்து விட்டாயே என்று கோபித்துக் கொண்டார்.
அதையெல்லாம் நானும் மறக்கவில்லைம்மா. ஆனாலும்...அன்று நான் கேட்டு வாங்கிக் கொடுக்காதது மட்டுமில்லாமல் சாப்பிடச் சென்ற ஆரிய பவானில் கூட அவர் சொன்னதைத் தான் சாப்பிட வேண்டும் என்று அன்று நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டுக் கொண்டே வந்தோம். இந்த அப்பாக்களுக்கு எப்பொழுது கோபம் வரும், எப்பொழுது செல்லம் கொஞ்சுவார்கள் என்பதே தெரியாது. என்னையெல்லாம் கோபித்தால் எனக்கும் கோபம் வரும் என்று நானும் பதிலுக்குப் பதில் பேச, அதில் அவருக்கு இன்னும் கோபம் அதிகமாகும். இருவரின் சுபாவம் தெரிந்ததால் அம்மா தான் பாவம் நடுவில் கிடந்து தத்தளிப்பார். வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாப்பிட பிடிக்கும் என்று ஜன்னலோர சீட்டிற்குத் தாவினால் அங்கே உட்காரக் கூடாது. என் முன்னால் உட்காரு என்று சொன்ன கணத்திலிருந்து எனக்கு அப்பாவிடம் பேசக் கூட பிடிக்கவில்லை. சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீம் கேட்டால், மசாலா பால் தான் குடிக்க வேண்டும் என்று ஆரம்பித்து நான் வாந்தியெடுப்பேன் என்று மிரட்டியும் அதை குடிக்க வைத்து...அப்பப்பா... இனி உன்னோட நான் ஹோட்டலுக்கெல்லாம் வர மாட்டேன் என்று அப்பாவிடம் சொல்லி விட்டு மூஞ்சியைத் திருப்பி பேசாமல்... நான் கேட்ட பொருள் வாங்கிக் கொடுக்கும் வரை அவரைத் தவிர்த்து...ஞாயிறன்று மதியம் திகர்தாண்டா பாய் கொண்டு வரும் ஐஸ்கிரீம் வாங்கித் தரும் வரை தொடர்ந்த போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்ததில் அம்மாவுக்குத் தான் நிம்மதியாக இருந்திருக்கும். இனி அடம் பிடிக்க மாட்டேன், சொல் பேச்சு கேட்பேன் என்று சொன்னால் தான் ஐஸ்கிரீம் என்று அங்கும் கண்டிஷன் போட...இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு...ஹ்ம்ம்... எப்படியெல்லாம் செல்லமாக வளர்ந்து அரட்டி உருட்டி மிரட்டி இருந்திருக்கேன்.
கல்யாணம் பண்ணி வச்சு பாதிய தொலைச்சு சுப்பிரமணிய பார்த்ததுக்கப்புறம் அவனோட அரட்டல் உருட்டல் மிரட்டலுக்குப் பயப்படற மாதிரி ஆகி வாழ்க்கை ஒரு வட்டம்னு தெரிந்து போச்சுடா மாதவா!
ஹ்ம்ம்...
விட்டுச் சென்ற
நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அப்பா!

அக்கா Vs தம்பி

சென்ற வார நீயா நானாவில் அக்கா Vs தம்பி உறவைப் பற்றின விவாதம். பல தம்பிகளும் திருமணமாகி அக்கா சென்று விட்ட வீடு வெறுமையாகி விட்டது. தனிமையாக உணர்கிறோம். தன் உணர்வுகளைப் புரிந்து கொண்ட உறவு தனக்காக பெற்றோரிடம் வாதிடும் அன்பான அக்கா என்று உருக...அக்காக்கள் அம்மாவின் இடத்தில் இருந்து தம்பிகளை கண்காணிப்பதும் நல்லது கெட்டது எடுத்துச் சொல்வதும் தம்பிகளின் திருமணத்திற்குப் பின்னும் தங்கள் பேச்சை கேட்க வேண்டுமென்ற அதிக எதிர்பார்ப்புகளுடன். அவரவர் குடும்பம் என்றான பின் அக்காக்கள் கொஞ்சம் ஒதுங்கி இருப்பதே நல்லது. வருகிற மகாராணிகள் பலரும் எளிதாக நாத்தனார்களை முழுங்கி ஏப்பம் விடுவதில் கில்லாடிகள்!

தாலி கழுத்தில் ஏறிய அடுத்த நொடியே என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்று பாடி அவனை அவன் குடுபத்திலிருந்து பிரிப்பதிலேயே நவீன பெண்கள் பலரும் குறியாக இருக்கிறார்கள். தனக்கு மட்டுமே , தன் குழந்தைகளுக்கு மட்டுமே செலவுகள் செய்ய வேண்டும். கணவனின் உடன்பிறந்தவர்கள், அம்மா, அப்பாவிற்காக ஒரு ரூபா செலவு செய்தால் கூட பத்ரகாளியாகி விடுகிறார்கள்.

நாத்தனார் மேல் உண்மையாக பாசம் கொண்டிருக்கும் சில அபூர்வ பெண்களும், இருப்பது போல் பாசாங்கு செய்யும் பலரும் இருக்கிறார்கள் தான்! பாவம் நம் தம்பி. பெண்டாட்டி சொல்பேச்சு கேட்க வேண்டிய நிலைமை. அவனாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் அக்காக்கள் தான் பலரும்! நீ எதற்கு அவளுக்கு அடிபணிய வேண்டும். நீ ஆண்பிள்ளை என்று தூபம் போட்டு குடும்பத்தில் நிம்மதியை கெடுக்கும் சில அக்காக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அக்கா தம்பி உறவு என்பது அக்கா திருமணமாகி செல்வது வரை மட்டுமா? இல்லை தம்பிக்கு திருமணம் நடக்கும் வரை தானா? அவரவர் குடும்பம் என்றான பின் முன்பு போல் அந்த பந்தம் தொடர்வது கடினம் தானோ?


🤔🤔🤔

என்ன தான் நடக்கிறது?

//கல்லூரி திறந்த முதல் நாள் அன்றே பட்டாக் கத்தியுடன் திரிந்த மாணவர்களைக் கைது செய்தது குறித்து இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கோடை விடுமுறைக்குப் பின்னர், நேற்று (ஜூன் 18) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. சென்னையில், முதல் நாளே பட்டாக்கத்தி மற்றும் பட்டாசுகளுடன் கல்லூரிகளுக்குச் சில மாணவர்கள் வந்திருந்தனர். விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதால், பேருந்து மற்றும் ரயில்களில் மாணவர்கள் கலாட்டா செய்யக்கூடும் என்பதால், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும், கல்லூரி திறந்த முதல் நாளிலேயே, தங்கள் பையில் பட்டாக்கத்தியுடன் வந்த பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.//
இந்தச் செய்தியைப் படித்தவுடன் வருத்தமாகவும் கோபமாகவும் இருந்தது. கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு எப்படியெல்லாம் சிந்தனை சிதறி இருக்கிறது! முதலாண்டு மாணவர்களை பயமுறுத்தவா? மற்ற கல்லூரி மாணவர்களுடன் போட்டியா? இவர்களெல்லாம் மாணவர்கள் தானா? மூளை மழுங்கியவர்கள் மட்டுமே கத்தி எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் செல்ல முடியும். புத்தகத்தைச் சுமந்து செல்ல வேண்டியவர்கள் செய்யும் செயலே அல்ல. இந்த வெட்டி மனிதர்கள் தான், தானும் வாழாமல் அடுத்தவனையும் வாழ விடாமல் அரசியல்வியாதிகளின் கைகளில் சிக்குண்டு சமுதாயத்தை சீரழிக்கும் இழிபிறவிகள். புரையோடிய சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகள் எதிர்நோக்கவிருக்கும் பிரச்னைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய துரதிருஷ்ட நிலைமையில் தான் இன்றைய பெற்றோர்கள்!
மாணவர்கள் போர்வையில் வலம் வரும் இக்கிருமிகளை இனம் கண்டு தகுந்த தண்டனையை வழங்க வேண்டும். தங்களை நெருங்காதவாறு மாணவர்களும் இவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருந்து மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பை உணர வேண்டிய காலகட்டமிது!
ஓம்!

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு

ஹையா! ஸ்கூல் முடிஞ்சிருச்சு! இனி காலையில எழுந்திருக்க வேண்டாம். நல்லா தூங்கலாம்மா. உனக்கும் வேலைகள் மிச்சம். நோ ஹோம்ஒர்க்! படிக்கவே வேண்டாம். ஜாலி ஜாலி! நேற்று தேர்வு எழுதி முடித்து விட்ட வந்த கையோடு இனி தேவையில்லை என்று தலையைச் சுற்றி கத்தை கத்தையாக பேப்பர்களை எறிந்து விட்டு சுத்தம் செய்த திருப்தியோடு நண்பர்களுடன் விளையாட ஓடி விட்டான். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கோடை விடுமுறையில் ... இனி எல்லாம் இன்ப மயம் தான் 🙂

ஒவ்வொரு வருடமும் பள்ளி முடியும் வரை இவன் பத்திரமாக சென்று வரவேண்டுமே என்று மனமெல்லாம் திக் திக் திக். இந்த வருடமும் பள்ளி ஆரம்பித்த ஓரிரு மாதங்களில் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறேன் பேர்வழி என்று காலை முறித்துக் கொள்ளாத குறை மட்டும் தான். டாக்டரும் இனி ஒரு மாதத்திற்கு ஒடவோ விளையாடவோ கூடாது என்று தடை செய்ததில் பல விளையாட்டுப் போட்டிகளையும் இழக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் இயற்பியல் பாடத்தில் தடுமாறி திடீரென இரண்டாவது செமஸ்டரில் அப்பாடத்தின் மேல் அப்படியொரு ஈர்ப்பு! கல்லூரியில் இயற்பியல் எடுக்கலாம் என்றிருக்கிறேன் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு பிடித்திருக்கிறது! என் மகனா நீ! எனக்குப் பிடிக்காத பாடமாயிற்றே! அவ்வப்போது கணினி சம்பந்த பாடங்களில் சந்தேகங்களை கேட்டுக் கொண்டு நல்ல பிள்ளை போல் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். பள்ளி விடுமுறை அளிக்கவில்லை என்றால் கவலையே இல்லை. இவனே எதையாவது சாக்கு போக்கு சொல்லி லீவெடுத்துக் கொண்டு... தோதாக அலர்ஜி, காய்ச்சல், சைனஸ் படுத்த வேறு வழியில்லாமல் நாங்களும் வீட்டிலேயே இரு என்று சொல்ல... ஜாலி தான். காலை அவனாகவே அலாரம் வைத்து எழுந்தது இந்த வருடத்தின் முதல் சாதனை என்றால் வழக்கமாக பள்ளியில் இருந்து உங்கள் மகன் பத்து நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டான். இனியும் எடுத்தால் தேர்வு எழுத முடியாது என பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வரும் மிரட்டல் கடிதம் வராமல் இருந்தது மெடிக்கல் மிரக்கிள் தான்!

இந்த ஒரு வருடத்தில் மட்டும் நான்கு முறை பள்ளியில் குண்டு இருக்கிறது, துப்பாக்கி இருக்கிறது என்று பீதியை கிளப்பி...அப்பப்பா!

வரிசையாக தேர்வுகள் வரும் போகும். இவன் மட்டும் எப்பொழுதும் போல்.எனக்கென்ன மனக்கவலை என்றிருப்பான். நடுநடுவே நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா ரேஞ்சில் அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் 'கௌரவ' யுத்தத்தில் மறக்காமல் எனக்கு அளிக்கவிருந்த பண்டரிபாய் வேடத்திலிருந்து நான் தப்பித்துக் கொள்ள மிகுந்த பிரயத்தனப்பட்டு எப்படியோ பிழைத்துக் கொண்டது என் அதிர்ஷ்டம்! பள்ளியிலிருந்து இசைநிகழ்ச்சிக்காக மாசச்சூசெட்ஸ் , பெனிசில்வேனியா மாநிலங்களுக்குச் சென்று வரும் வரை... பத்திரமாக வந்து சேர வேண்டுமே என்ற வேண்டுதல் தான். சென்ற இரு இடங்களிலும் மாணவர்களின் இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு 'தீம் பார்க்'கிற்கும் அழைத்துச் சென்றார்கள். மாசச்சூசெட்ஸ்லிருந்து வரும் பொழுது தீம் பார்க்கில் கீழே விழுந்ததில் காயத்துடன் வந்தான். பெனிசில்வேனியா போகிறானே நாமும் நான்கு நாட்கள் எங்காவது போகலாம் என்று நினைத்தால் எங்கேயும் போயிடாதேம்மா. ஒரு வேளை எமெர்ஜென்சியிலருந்து உனக்கு ஃபோன் வந்தாலும் வரலாமென்று...வேடிக்கையாக எதைப் பேசுவது என்று இல்லை? அவ்வளவு தான்! தூக்கமும் போய் அவன் வீடு வந்து சேரும் வரை...பத்திரமாக வந்து சேர வேண்டுமே என்ற நினைவு தான். குறுஞ்செய்தி அனுப்பினால் பதில் வராது. அதற்காக ஒரு நாள் காத்திருக்க வேண்டும். பொறுப்பே இல்லை உன் பையனுக்கு என்று என்னிடம் 'தையா தக்கா' என்று கணவர் வேறு என்னைக் கோபித்துக் கொள்ள... வழக்கம் போல் ஞே!

ஊர் வந்து சேர்ந்தவன் வரும் பொழுதே காய்ச்சல், சளி, இருமல் இத்யாதிகளையும் கூடவே அழைத்து வந்திருந்தான். அவனுக்குச் சேவகம் பண்ணியே களைத்துப் போனேன்! அப்படி இப்படி என்று ஒரு வாரத்திற்கு டபாய்த்ததில் பள்ளி முடிய இரண்டு நாட்களே இருந்தது. தேர்வு அட்டவணை வந்து வகுப்பில் ரெவ்யூ வேறு ஆரம்பித்து விட்டது. இவனால் போக முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு. ஒரு வாரத்தில் கடைசி நிமிட பாடங்களை அடித்தேன் பிடித்தேன் என்று சொல்லிக் கொடுப்பார்கள். இவனும் இரவு விழித்திருந்து முடிக்க வேண்டிய வேலைகளை முடித்தாலும் பள்ளி இறுதி நாளில் இவன் தவற விட்ட வகுப்புத்தேர்வுகள் , வீட்டுப்பாடங்கள் ஏழு காத்திருந்தது. வியாழன் இரவு உறங்கச் செல்லுமுன் தூங்காமல் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்த்தால்... தலை மேல் கையை வைத்துக் கொண்டு 'உஸ்ஸு புஸ்ஸு'வென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அம்மா எனக்கு கொஞ்சம் சுடுதண்ணியில தேன் கலந்து கொடுக்கிறியா? ஆஹா! ஏதோ பிரச்னை போல! கொடுத்து விட்டு நானும் அவனருகில் அமர்ந்து என்னாடா பிரச்னை?

நாளைக்கு எனக்கு டெஸ்ட், குயிஸ்னு ஏழு இருக்கும்மா. குரலில் ஒரு நடுக்கம்.

படிச்சியா இல்லியா?

இன்னும் இருக்கு. இந்த பிஸிக்ஸ் பாடம் மட்டும் எதுவும் புரியல. டெஸ்ட்ல எல்லாருமே குறைச்சு வாங்கியிருக்காங்க. கிளாஸ் ஆவெரேஜே 70 தானாம்!

ஓஒ! ஏன் டீச்சர்ட்ட உன் சந்தேகங்களை கேட்டிருக்க வேண்டியது தானே?

இன்னைக்குத்தான் எல்லா பவர்பாயிண்ட்டும் பார்த்தேன். ஒன்னும் புரியல. நேத்து வரை மத்த பாடங்களுக்கான வேலைகளை முடிச்சேன். இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை .

கிட்டத்தட்ட அழுதே விட்டான். நான் பார்த்தாலும் எனக்கு ஒன்றும் விளங்கப் போவதில்லை. . ஹ்ம்ம்.... பாவம் உடம்பும் படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வளவு அப்செட்டாக வேறு இருக்கிறானே என் செல்ல சுப்பிரமணி!

ஒன்னு செய், முதல்ல உன் டீச்சருக்கு ஒரு ஈமெயில் அனுப்பு. சொல்லும் பொழுது மணி இரவு 10.30.

அனுப்பி? இரண்டு நாள் என்ன பண்ணினேன்னு கேட்டா?

முதல்ல மெயில் அனுப்புடா.

என்னன்னு ?

சுகமில்லாததால ஒரு வாரம் நான் ஸ்கூலுக்கு வரலை. அப்ப நடத்திய பாடங்களைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. நாளை நடக்கவிருக்கும் எனக்கான டெஸ்ட்ஐ அடுத்த வாரம் வைத்துக் கொள்ள முடியுமான்னு கேட்கச் சொன்னா... பாதி தான் கேட்டு மெயில் அனுப்பியிருந்தான். சரி, மத்த பாடங்களைப் படி. நீ முடிக்கிற வரைக்கும் நானும் இங்கேயே உட்கார்ந்திருக்கேன் என்று சொல்லிவிட்டு தூக்கத்துடனும் கவலையுடனும் அவனருகிலேயே அமர்ந்திருந்தேன்.

எனக்குப் பயமா இருக்கும்மா. நான் இந்த டெஸ்ட்ல நல்ல மார்க் வாங்கலைன்னா?

அதுக்கு என்ன பண்ண முடியும். முடிஞ்சவரைக்கும் படி. ஆல்வேஸ் கிவ் யுவர் பெஸ்ட்னு சொன்னாலும் கவலையாகவே இருந்தான்.

இந்த டெஸ்ட் எவ்வளவு முக்கியம் என்று எங்களுக்கும் தெரியும். எனக்கும் கவலையாகி அவன் ஆசிரியருக்கு நானும் தனி மடல் எழுதி இந்த டெஸ்ட் மதிப்பெண்கள் அவனுக்கு மிகவும் முக்கியம். அடுத்த வருட பாடத்தேர்விற்கு இதைத்தான் நம்பி இருக்கிறான். எனக்கும் இந்த பாடங்களில் அவனுக்கு உதவ முடியவில்லை. நாளை அவன் சந்தேகங்களை தீர்த்து வேறு நாளில் டெஸ்ட் வைத்து அவனுக்கு உதவுங்கள் என்று மெயிலைத் தட்டி விடும் பொழுது இரவு 11 மணி.

இன்னும் தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? கேட்டுக் கொண்டே வந்த கணவரும் அமைதியாக இருப்பவனைப் பார்த்து நான் வேண்டுமானால் பவர்பாயிண்ட் பார்த்து முடிந்தால் சொல்லிக் கொடுக்கிறேன் என்றவரையும்... அவன் இருக்கும் நிலைமையில் விட்டேத்தியாக எதையாவது சொல்லப் போய் புது பூதம் கிளம்பி விட்டால்... வேண்டாம். நான் அவன் டீச்சருக்கு மெயில் போட்டிருக்கிறேன். பார்க்கலாம்.

அப்ப சரி! சீக்கிரம் படிச்சு முடிச்சிட்டு தூங்குங்க.

அவன் வேலைகளை முடித்து தூங்கச் செல்கையில் மணி 12.30.

என்னம்மா இன்னும் பதில் வரலை?

அனுப்பினதே லேட்டு. உன் டீச்சர் தூங்கியிருப்பாங்க. இதுல உனக்கு பதில் வேற போடணுமா?

எனக்கும் குழப்பமாகவே இருந்தது. முருகா! நாளை நன்கு விடிய வேண்டுமே.

வெள்ளிக்கிழமையென்றால் துள்ளலாக பள்ளிக்குச் செல்பவன். முதல்முறையாக சோகத்தை அப்பிக் கொண்டு செல்கிறானே அதுவும் வகுப்புகள் முடியும் இறுதி நாளில் என்று ஒரே வருத்தம். உன் டீச்சர் டைம் கொடுப்பார். கவலைப்படாதே!

ம்ம்ம்... இன்னும் பதில் வரலைம்மா.

நேரா அவர்கிட்ட போய் பேசிப்பாரு. அவர் புரிஞ்சிப்பார். கவலைப்படாதே. மத்த டெஸ்டலாம் நல்லா பண்ணு. நானும் அவருக்குப் ஃபோன் பண்றேன்.

அனுப்பி விட்டு எனக்கும் வேலை எதுவும் ஓடவில்லை. அடிக்கடி மெயில் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நேரம் அந்த வகுப்பு முடிந்திருக்க வேண்டுமே?

என்னடா? என்னாச்சு?

அடுத்த வாரம் தான் டெஸ்ட். நான் மிஸ் பண்ணின பாடங்களை திங்கட்கிழமை எடுக்கிறேன்னு சொல்லிட்டார். செவ்வாய்க்கிழமை டெஸ்ட். ஐ ஆம் ஓகே நௌ. தேங்க்ஸ் மாம்.

ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடா...

பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொழுது ஒரு கையை பிடித்துக் கொண்டு நன்றி சொல்கிறேன் பேர்வழி என்று... நேத்து ரொம்ப பயந்துட்டேன் தெரியும்மாம்மா?

பயந்து என்ன பண்ண? அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கணும். பயந்தா யோசிக்க முடியாது. தலையில கைய வச்சிக்கிட்டு புலம்ப தான் முடியும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு இருக்கு. மறந்துடாத!

ம்ம்ம்... தேங்க்ஸ்ம்மா.

கைய விடுடா. வண்டிய ஓட்டணும்.

மீண்டும் அவன் முகத்தில் சிரிப்பை பார்த்த பின்பு தான்...

பெத்த மனம் பித்துன்னு சும்மாவா சொன்னாங்க?

வீட்டிற்கு வந்த பிறகு தான் அவன் ஆசிரியரிடமிருந்து வந்த பதிலைப் பார்த்தேன். கவலைப்பட வேண்டாம். சுப்பிரமணியுடன் பேசி விட்டேன். டெஸ்ட் அடுத்த வாரம் தான். அதற்குள் அவன் தவற விட்ட பாடங்களை விளக்கி விடுகிறேன். ஹேவ் எ நைஸ் வீக்கெண்ட். அப்பாடா! நிலைமையைப் புரிந்து கொண்டு என்ன அழகாக ஆறுதலாக எழுதியிருக்கிறார். வாழ்க வளமுடன்!

நானும் நன்றி சொல்லி பதில் அனுப்பி விட்டு நிம்மதியானேன்!

எப்படியோ இந்த வருடத்தை ஒட்டியாகி விட்டது. அடுத்த வருடத்தை நினைத்தால் தான்...

டேய்! காலேஜ் போய் பார்த்துட்டு வரணும்.

ஆமாப்பா! போகணும்.

எப்ப?

இப்ப தான லீவு விட்டிருக்கு. இனிமே தான்.

அந்த 'இனிமே' எப்பங்கறது அவனைப் படைச்ச ஆண்டவனுக்கே வெளிச்சம்!

எப்படி இருக்கிறான் பாரு உன் பிள்ளை? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?

😞

எனக்கென்ன மனக்கவலை...என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலைன்னு... தூங்கிக்கிட்டு இருக்கு சுப்பிரமணி! இவன் ஒவ்வொரு வருஷமும் படிச்சு முடிக்கிறதுக்குள்ள... நானும் எத்தனை போஸ்ட் தான் போடறது?

ஹம்ம்ம்ம்ம்....

Hooray, hooray, it's a holi-holiday
What a world of fun for everyone, holi-holiday
Hooray, hooray, it's a holi-holiday
Sing a summer song, skip along, holi-holiday
It's a holi-holiday... ன்னு அவனோட சேர்ந்து பாட வேண்டியது தான்🙂

திரும்பிப் பார்க்கிறேன் -மலர்களே மலர்களே

பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தான் இலைகளைப் பற்றி படிக்க ஆரம்பித்ததாக நினைவு. இலைகளின் வெவ்வேறு வடிவங்கள், அதன் பெயர்கள், படங்கள் என்று நோட்டில் வரையும் பொழுதே மனமும் மரங்களில் பார்த்த இலைகளை நினைத்துக் கொள்ளும். பள்ளி வளாகத்திலிருக்கும் மரத்து இலைகளைப் பறித்து நோட்டின் இரு பக்கங்களுக்கு இடையில் வைத்து அது காய்ந்தவுடன் வேறொரு நோட்டில் ஒட்டி அந்த இலைகளைப் பற்றின சிறு குறிப்புகளுடன் ஒரு சிறிய தொகுப்பே என்னிடம் இருந்தது. அந்த வருடம் முழுவதும் புது மரங்களைக் கண்டால் இலையைப் பறித்து அதனைப் பற்றின விவரங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகமிருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பில் தாவரவியல் வகுப்பெடுத்தவர் ஆசிரியை திருமதி மீனாட்சி. குட்டையாக குட்டியாக 'துறுதுறு'வென்று இருப்பார். வகுப்பிற்கு ஒரு துள்ளலுடனே வருவார். அவருடைய வகுப்பில் தான் மலர்கள், மகரந்தச்சேர்க்கை, மலர்களின் பாகங்கள் என்று ஆர்வத்துடன் அவர் சொல்லிக் கொடுக்க நாங்களும் நன்கு கேட்டுக் கொண்டோம். அவருக்குத் தான் கற்ற கல்வியின் மேல் இருந்த காதல் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கும் வர வேண்டுமென்ற ஆசையில் உருகி உருகி எடுத்த பாடம் என்னைப் போன்ற பலருக்கும் அவர் வகுப்பின் மேல் அலாதிப் பிரியமே வந்து அவர் வழியில் மலர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வெறியும் கூடி... பள்ளியின் பின்னால் சென்று தெப்பக்குளம் வரை நடந்து சாலையோர மரம், செடி, கொடிகளில் பூத்திருக்கும் மலர்களைக் கொய்து வகுப்பில் அதைப் பற்றி கேள்வி கேட்டு... டீச்சருக்கும் எங்கள் ஆர்வம் கண்டு ஒரே ஆனந்தம்! மலர்களை ஆராய்வது இதழ்களின் எண்ணைக்கையில் தொடங்கி அதன் வடிவங்கள், நிறங்கள் என்று அது சார்ந்த குடும்ப பெயர் தெரிந்து கொள்வது வரை நீளும். அழகர்கோவில் ட்ரிப் சென்று அங்கிருக்கும் மரங்களைப் பற்றி நடந்து கொண்டே பாட்டனி டீச்சர் விவரித்துக் கொண்டே வர, அந்தப் பயணம் தான் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது!ரெக்கார்ட் நோட்டில் அழகாக படங்கள் வரைந்து அதிக மதிப்பெண்கள் பெற்று விட வேண்டும் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். பொறுமையாக அழகாக வரைவது என்றால் அவ்வளவு பிடிக்கும். ஹ்ம்ம்... எங்கு தொலைத்தேன்?


இன்று ஒவ்வொரு மரங்களையும், இலைகளையும், மலர்களையும் காணும் பொழுது மீனாட்சி டீச்சரின் 'துறுதுறு' முகமும் எத்தனை இதழ்கள், என்ன வண்ணம், இலைகள் எந்த வடிவில் இருக்கின்றன, இதன் பெயர் என்ன, எந்த குடும்பத்தைச் சார்ந்திருக்கும் என்ற கேள்விகளும் ஞாபகங்களும் வரத் தவறுவதில்லை. ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் அவர் எடுத்த வகுப்புகளும் பாடத்தின் மேல் ஆர்வத்தை தூண்டிய விதமும் இன்றும் என்னுள் இருப்பதை உணரும் போது இத்தகைய ஆசிரியர்கள் தான் வரமாய் வந்தவர்கள். வாழ்க்கை முழுவதும் நம்மோடு வாழ்பவர்கள் என்று எண்ணிக் கொள்வேன்.


காலம் கடந்தாலும் சிறு வயது ஆர்வங்கள் மட்டும் குறைவதே இல்லை.


நான் க்ளிக்கிய சில பல wildflowers படங்கள்...

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...