Wednesday, June 13, 2012

ரயில் பயணங்களில் - 2

அந்தச் செய்தி...... 😞😞😞😞😞

காலை நேரத்தில் ரயில் தண்டவாளம் அருகே ஒதுங்க சென்ற ஒருவர் சந்தேகத்திற்கிடமாக ஒரு பொருளை தண்டவாளத்தில் பார்த்து, சரியான நேரத்தில் போலீசுக்கு தகவல் சொல்லி, அவர்களும் விரைந்து(!!!) வந்து, bomb ஒன்றை உறுதிப்படுத்தியதால், அந்த வழியாகப் போகும் அனைத்து ரயில்களும்( நான்கு ரயில்கள் என்று நினைக்கிறேன்) நிறுத்தப்பட்டன. குண்டு வைத்த நிலையிலிருந்து சிறிது உருண்டு போனதால் அன்று வெடிக்கவில்லை :) விஷயம் தெரிந்ததும் முதலில் எந்தவித அசம்பாவிதம் நடக்க விடாமல் தடுத்த அந்த முகம் தெரியாத மனிதருக்கும், கடவுளுக்கும் மனதிலே நன்றி சொல்லிக் கொண்டேன். அப்போது bomb வைத்து தண்டவாளம் தகர்ப்பது தீவிரவாதிகளால் அடிக்கடி நடந்து கொண்டிருந்தத காலம் (இன்று, இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கும் கொடுமை !!!). அதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் மதுரைப் பக்கத்தில் தண்டவாளம் தகர்க்கப்பட்டு கோர விபத்து நடந்து இருந்தன. பல உயிர்களும் , பல சேதாரங்களும் அன்று நிகழ்ந்தன. அப்பப்பா, எவ்வளவு கொடூரத்திலிருந்து தப்பித்திருக்கிறோம். இன்று நினைத்தாலும் 'பகீர்' என்று இருக்கிறது! ஆரம்பத்தில், யாரோ ஒருவர் 'ஏதோ குண்டு வச்சுட்டு போயிருக்காங்க, சரியா வேலை செய்யமால் போய் விட்டதால் நாமெல்லாம் தப்பித்தோம்' என்று

போகிற வாக்கில் சொல்லிக் கொண்டே போக , எல்லோர் முகமும் பீதியில்😔 அனைவரும் ஒரு வித சோகத்துடனும் இன்று நம் தலை தப்பித்து விட்டது என்ற நிம்மதியுடனும் பயணத்தைத் தொடர்ந்தோம். படங்களிலும், தினசரி செய்திகளிலும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சிகளை நேரில் அனுபவிக்கும் போது தான், அதன் கொடுமையும், வலியும் புரிகிறது! அன்று தப்பித்தது எங்கள் அதிர்ஷ்டம் தான். இல்லை என்றால், இன்று இதை உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்க நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் 😓

பிறகு, பழனி மலை தாண்டி, (மனதிற்குள்ளேயே பழனி மலை முருகனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன் ) கோயம்புத்தூர் சேர்ந்தவுடன் தான் அப்பாடா என்று இருந்தது. போன மச்சான் திரும்பி வந்தான் என்ற மாதிரி, போன உயிரும் அப்போதுதான் திரும்பி வந்தது. அதற்குள், நிவி கனடா வந்து சேர்ந்து விட்டோமா என்று கேட்டு மனதை லேசாக்கினாள்☺ அதற்கு அடுத்த இரு வாரங்களில் மீண்டும் சென்னைக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு, நானும் என் கணவரும் புறப்பட மனதில் மிகுந்த பயத்துடன் ரயிலில் ஏறி அமர்ந்தோம். ஒரு போலீஸ் அதிகாரி கையில் ஒரு அட்டைபெட்டியை எடுத்துக் கொண்டு எங்கள் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து பேசிக் கொண்டே வந்தார். என் கணவர் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் சொல்லும் போது அவர் சிரித்துக் கொண்டே , இந்த பெட்டியில் இருப்பது என்ன தெரியுமா என்று கேட்டார் ?????? நாங்கள் விழித்துக் கொண்டே என்ன என்று கேட்ட பொழுது, அந்த bomb , செயலிழக்கச் செய்து சென்னையில் உள்ள ஆய்வு நிலையத்திற்கு எடுத்துச் செல்வதாகவும், பயப்பட வேண்டியதில்லை என்றும் அவர் பாட்டுக்குச் சொல்லிவிட்டு தூங்கச் சென்று விட்டார். ஆனால், எனக்கு தான் தூக்கம் போய்விட்டது. இப்போதும் , நான் ரயிலில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுவேன் :(

ஒரு வழியாக விசா, விமானப் பயணச் சீட்டு கிடைத்து கனடா புறப்படும் அந்த நாளும் வந்தது. அதுவரை கனவாகவே இருந்த நாட்டிற்கு போகப் போகிறோம் என்ற ஆசை ஒரு பக்கம், அங்கு போய் எப்படி குப்பை கொட்டப் போகிறோம் என்ற பயம் ஒரு பக்கம். அம்மா, அப்பா, அக்கா, தங்கை, தம்பிகளை விட்டு முதன் முதலில் பிரிந்து வேறு நாடு, வேறு கண்டத்திற்குப் போகிறோம் என்ற நினைப்பும், அழுகையும், தனியாக குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறோமோ என்ற புதிருடனும் வழியனுப்ப வந்த எல்லோரையும் பார்த்து கண்ணீரில் நனைந்த கன்னங்களுடன் விடை பெற்றுச் சென்றதையும், அந்த ரயில்வே பிளாட்பாரம் நினைவுறுத்திக் கொண்டே இருக்கும்.

குழந்தைகளுடன் USA லிருந்து மதுரை போகும் போது தம்பியுடனும், அப்பாவுடனும் ரயில் பிரயாணம். நேர மாற்றத்தினாலும்  இயல்பாகவே ரயிலில் தூங்கப் பயப்படுவதினாலும் இப்பொழுதெல்லாம் கண்ணயர்வதில்லை. என் தம்பி நல்ல டிபன் வாங்கிக் கொண்டு வந்திடுவான். குழந்தைகளும் நன்றாக சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டோ, விளையாடிக் கொண்டோ, தூங்கிக்கொண்டோ மதுரை வந்து சேர்வது சுகமான பயணமாகிவிட்டது. சூடாக பால் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, குழந்தைகளுக்கும் டம்ளரில் ஆத்திக் கொடுக்க , மதுரைப் பயணம் ஆரம்பித்து விடும். நடந்த நிகழ்ச்சிகளை பேசிக் கொண்டே ஆடும் ரயிலில் மதுரை எப்படா வரும் என்று மூடிய ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவேன். எப்படா பொழுது விடியும் என்று காத்திருக்கும் நேரத்தில், 'சார் சூடான காப்பே.. டீ என்ற குரல்  விடிந்து விட்டதையும், சிறிது நேரத்தில், திருச்சி, பழங்கள் விற்கும் கொடை ரோடு, திண்டுக்கல் திராட்சை தோட்டம், வாழை, தென்னை, நெல்லு என்று கண் குளிர சோழவந்தான், பாத்திமா கல்லூரி, மெஜுரா கோட்ஸ் மில், வைகை பாலம், கடைசியில் மதுரை ஜங்ஷன் என்ற அறிவிப்பு பலகையையும் பார்த்தவுடன் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை விவரிக்கவே முடியாது.

இந்தியாவில் காலை நேரத்து வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பது மிகவும் ஆனந்தமாக இருக்கும். நாய்கள் அப்போது தான் விழித்தெழுந்து , காலை முன்னோக்கி வைத்து சோம்பல் முறிப்பதையும், ஆடு, மாடு, கோழிகள் இரை தேட செல்வதையும், வீட்டு வாசலில் பெண்கள் சாணி தெளித்துக் கோலமிடுவதையும்!!!! (கிராமங்களில் ), சோம்பேறித்தனமான ஆண்கள் வேப்பங்குச்சியையோ, கையினிலாலோ பல் தேய்த்துக் கொண்டிருப்பதையும், பம்ப் செட்டுகளில் குளித்துக் கொண்டிருப்பதையும்,
சொம்பில் தண்ணீர் தூக்கிக் கொண்டு போவதையும், நகரம் நெருங்க,நெருங்க ரயில்வே கிராசிங்கில், சைக்கிள், பைக், வேன், பஸ், கார், ஆட்டோ, வியாபாரம் செய்பவர்கள் என்று பலவிதமான மனிதர்களும் ரயில் போகும் வரை காத்திருப்பதையும், அந்த காலை வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நடமாடும் மனிதர்களையும் பார்த்துக் கொண்டே மதுரை போய்ச் சேர்வது சுகம் தானே ???



முன்பெல்லாம் குடிசை வீடுகள் ரயில் பாதையை ஒட்டி நிறைய இருக்கும். இப்போது காரை வீடுகள் அதிகம் கலர் கலராக தென்படுகிறது !அதே மாதிரி, முன்பு குடிசையுனுள் எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். இப்போதெல்லாம் குண்டு பல்புகளோ, டியூப் லைட்டுக்களையோ பார்க்க முடிகிறது. நல்ல முன்னேற்றம் தான்!

மதுரை ஒன்றாம் நம்பர் பிளாட்பார்மில் சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பைக் கேட்டு, எங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பத்தைப் பார்த்தவுடன், வேக வேகமாக கையை ஆட்டி விட்டு, ரயில் நின்றவுடன் தாவிக் குதித்து ஓடும் போது இருக்கும் சுகமே சுகம். குழந்தைகளும் ஐங்கேர் அம்பா(பாட்டி), மாமா.. என்று கத்திக் கொண்டே அவர்களிடம் ஓடுவார்கள்! 
அவர்களும், குழந்தைகள் நன்கு வளர்ந்து விட்டார்கள் , நீ கொஞ்சம் பூசினாப் போல இருக்கே (குண்டாகிவிட்டதை ,என் மனம் புண்படாதவாறு!!) என்று பேச ஆரம்பித்து போர்ட்டரைப் பிடித்து, சாமான்களை வண்டியில் ஏற்றி, விடு ஜூட் ஒரு நல்ல ரெஸ்டாரெண்டுக்கு!!!!

என்னுடன் பயணித்த அனைவருக்கும் மிகவும் நன்றி !!!!!!

No comments:

Post a Comment

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...