Tuesday, July 26, 2022

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

"ராக்கெட்ரி" திரைப்படம் வெளியாகிறது என்றவுடன் உள்ளூர் திரையரங்குகளில் திரையிடப் போகிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. கண்ட கருமாந்திரப் படங்களைப் போடுகிறார்கள் அத்திப் பூத்தது போல் பல மொழிகளில் வெளியாகும் ஒரு நல்ல படம். அதுவுமில்லாமல் "எண்டே மாதவா" வின் தயாரிப்பில் உருவான பயோ-பிக். ரசனை கெட்ட உலகமடா மாதவா என்று ஒடிடியில் வெளியாகும் நாளுக்காக காத்திருந்தோம். நேற்று அமேசான் பிரைமில் எதையோ தேட போய்,

'ஆ! ராக்கெட்ரி படம் வந்துடுச்சு. வாங்க பார்க்கலாம்' என்று வேலைகளை முடித்து விட்டு தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து படம் முடியும் வரை எழுந்திருக்கவில்லை. 

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

என சுப்ரபாதத்துடன் துவங்கும் முதல் காட்சியிலேயே பிரம்மாண்ட அண்டம் சுழலும் காட்சி ஈர்த்து விட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஏன் இவருடைய கதை ? ஒரு தேசப்பற்று மிகுந்த விஞ்ஞானியை எப்படி உடல், மனதளவில் நொறுங்க வைத்து நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க நினைத்திருக்கிறார்கள் என்ற உண்மைக்கதையைப் படமாக நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார் நடிகர் மாதவன்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் நம்பி நாராயணின் திறமையை ஊக்குவித்து ஒரு குருவாக வழிநடத்தியிருக்கிறார். அமெரிக்காவின் உயர்தர பல்கலையில் படிக்கும் காலம் முடியும் முன்னரே பட்டப்படிப்பை முடித்து திறமைக்கேற்ப அமெரிக்க விண்வெளி மையத்தில்( நாசா) கை நிறைய சம்பளத்துடன் கௌரவமான வேலை கிடைத்தும் தாய்நாட்டிற்குத் திரும்புகிறார் நம்பி நாராயணன். இஸ்ரோவில் ராக்கெட் தயாரிக்க வேண்டிய நுட்பங்கள் தெரிந்தும், வசதியும் போதிய நிதியும் இல்லாமல் ஃபிரான்ஸ் நாட்டுடன் கூட்டு சேர்ந்து குடும்பங்களை விட்டு பல விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக சோதனையை முடித்து திரும்புகிறது இவருடைய தலைமையிலான குழு. ராக்கெட் தயாரிக்க தேவையான பொருட்களை சோவியத் ரஷ்யாவிலிருந்து அந்நாடு சிதறுவதற்குள் இந்தியாவிற்கு கொண்டு வந்து விட, அங்கிருந்து ஆரம்பிக்கிறது நம்பியின் வாழ்க்கையைத் துண்டாடும் காட்சிகள். நேர்க்காணல் மூலம் படக்காட்சிகளை அமைத்திருந்தது சிறப்பு.

1994ல் இஸ்ரோவில் பணிபுரிந்த பொழுது ​​நாராயணன் இந்தியாவின் விண்வெளித் திட்டம் குறித்த ரகசியத் தகவலை பாகிஸ்தானிற்கு விற்க இரண்டு மாலத்தீவு நாட்டினரிடம் பகிர்ந்து கொண்டதாக பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். 1996ல் சிபிஐ மற்றும் 1998ல் இந்திய உச்ச நீதிமன்றத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தள்ளுபடி செய்யப்பட்டன. ஏப்ரல் 2021ல் இந்திய உச்ச நீதிமன்றம் இவருடைய கைதின் சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்று திரு.நாராயணன் அவர்களுக்கு கேரள அரசு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்கியது.
 
விஞ்ஞான வளர்ச்சிக்காக நாடு செலவழிப்பது தேவையற்றது என்று கூவி மூலைக்கு மூலை சிலைகளை வைத்துக் கொண்டு திரியும் கூட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் அவசியத்தை உணர்ந்து பல சிரமங்களுக்கிடையில் உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரித்து இன்று அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே வியக்கும் வகையில் நம் தேசமும் முன்னேறியிருப்பதில் இவருடைய பங்கும் அளப்பரியது. இந்தியாவில் ராக்கெட் அறிவியலின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து இந்திய அரசாங்கம் நாராயணனுக்கு 2019 ஆம் ஆண்டில் நாட்டின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.

இத்தனை படித்த நேர்மையான மனிதர் மீது களங்கம் சுமத்தி குடும்பத்தை அலைக்கழித்து தான் என்ன தவறு செய்தோம் என்றே புரியாமல் அவரை மனச்சோர்வுக்கு உள்ளாக்கிய மத்திய காங்கிரஸ், மாநில கம்யூனிஸ்ட் அரசாங்கம் மனிதாபிமானற்றது என்பதைக் காட்சியாக காண மனம் பதைபதைக்கிறது. 1996ல் பாஜக ஆட்சிக்காலத்தில் தான் இவருக்கு நீதி கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் நாராயணன் மற்றும் சிலரை பொய்யாக சிக்க வைத்த குற்றச்சாட்டில் 17 முன்னாள் கேரள போலீஸ் மற்றும் ஐபி அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 15 வருடங்களில் 684 இஸ்ரோ விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தெரிகிறது. அணு மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறுவதைத் தடுக்க மேலைநாடுகளின் சதியாக அதற்கு நம்நாட்டு எட்டப்பன்கள் உதவி இருப்பதைத் தான் காட்டுகிறது . இந்திய ஊடகங்கள் இந்தச் செய்திகளுக்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவை பெரும்பாலும் ஒரு கட்சிக்கு அதுவும் தேசத் துரோகிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. கடைசிக் காட்சியில் கண்களில் நீர் வழிய "ஜெய்ஹிந்த்" என்று நம்பி நாராயணன் அவர்கள் கூறும் பொழுது வசனம் பேசி உணர்ச்சிகரமாக அதுவரை நடித்த சூர்யாவின் வாயிலிருந்து "ஜெய்ஹிந்த்" வராதது எந்த அளவிற்கு நம் நாட்டின் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறது தேசத்துரோகிகள் கூட்டம் என்று தெரிகிறது. நமக்கு எதிரிகள் வெளியில் இருப்பதை விட உள்நாட்டில் தான் அதிகம். அவர்களால் தான் இத்தகைய மாமனிதர்களுக்கு அச்சுறுத்தல் என்ற நினைவே வெட்கமாகவும் வேதனையாகவும்இருக்கிறது.

ஒரு டாலர் அதிகம் கிடைத்தால் கூட வேலையை மாற்றிக் கொள்ள நினைக்கும் மனம் படைத்த மனிதர்கள் வாழும் காலத்தில் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம், வசதி வாய்ப்புகள் கிடைத்தும் அனைத்தையும் நிராகரித்து தேசத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த உன்னத மனிதர்களுள் ஒருவர். தன்னுடைய குருவின் நினைவாக வெற்றிகரமாக இயங்கி வரும் "விகாஸ்
என்ஜினை உருவாக்கின மாமனிதர். தெய்வ பக்தியும் தேசப்பற்றும் மிக்க சில நம்பி நாராயணன்களால் தான் பல தேச துரோகிகளையும் மீறி இந்தியா தன்னிறைவு பெற்ற நாடுகளின் வரிசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இவர் போன்ற மனிதர்களே நம் வருங்கால சந்ததியினருக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள். தமிழக அரசு இப்படத்தைப் பள்ளிகளில் திரையிடலாம் அல்லது வரி விலக்கு அளித்து கௌரவிக்கலாம். செய்வார்களா?

கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். அமேசான் ப்ரைமில் காண கிடைக்கிறது.

ஒரு நல்ல மனிதரின் வாழ்க்கையை அற்புதமாக படமெடுத்த "எண்டே மாதவன்" கதாசிரியராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, "நம்பி நாராயணனாக" மிளிர்ந்திருக்கிறார்.

வாழ்த்துகள் மாதவன் 💖💖💖

Thursday, July 21, 2022

The Magic of your first work friends

 சமீபத்தில் 'நியூயார்க் டைம்ஸ்'ல் வெளிவந்த "The Magic of your first work friends" கட்டுரையில் வீட்டிலிருந்து வேலை செய்வதால் புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் இழக்கும் பல விஷயங்களை அலசி இருந்தார்கள். அதில் முக்கியமாக வேலையிடத்து நண்பர்கள். முதன்முதலில் பணியில் சேரும் பொழுது நம் அலைவரிசையுடன் ஒத்து வரும் நண்பர்கள் அமைந்து விட்டால் வேலைக்குச் செல்வதில் ஒரு நாட்டம் உருவாகி விடும். புத்துணர்ச்சியுடன் ஒரு வித உத்வேகத்துடன் பணிக்குச் செல்லும் மனநிலையில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியான பொழுதுகளாக இருக்கும். பணியில் திருப்தியும் மனஉளைச்சல் இல்லாத  நாட்களுமாய் வாழ்க்கையும் வீறு நடை போடும். அலுவலகத்திற்குச் சென்று புது நபர்களைச் சந்தித்து நண்பர்களாகி தொடரும் பந்தம் அனுபவித்தே உணர்வது. நம் நாட்டில் இப்படிப்பட்ட உறவு வீடு வரை தொடரும். அமெரிக்காவில் பெரும்பாலும் வேலையிடத்து நண்பர்கள் வேலையிடத்தில் மட்டுமே. ஆனால் வீட்டு விஷயங்களில் இருந்து சொந்தப் பிரச்னைகள் வரை நன்கு பேசுவார்கள். நமக்கிருக்கும் மனக்கிலேசமோ என்னவோ வீடு வரை வெகு சிலரை மட்டுமே அனுமதிக்கத் தோன்றும். இதெல்லாம் கோவிட் காலத்திற்கு முன். பழைய ஆட்கள் மட்டும் எப்பவும் போல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

புதிதாக சேர்ந்தவர்கள், வருகிறார்கள். வேலை செய்கிறார்கள். போய்க் கொண்டே இருக்கிறார்கள். யாரும் யாருடனும் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை. ஏன் தான் அலுவலகத்திற்கு வருகிறோமோ என்ற முகபாவம் தான் பலருக்கும்! அதுவும் இந்த தலைமுறை என்றால் சோகமாக தனியாக இருப்பது போல் தோன்றுவது எனக்குத்தானோ?

இன்று வரையிலும் சந்திப்புகள் டீம்ஸ் அல்லது ஜூம் என்றாகி விட்டதால் இடைவேளைகளில் நடக்கும் கலாட்டா பேச்சுக்கள் சிரிப்புகள் எல்லாம் தொலைந்து தான் போயிருக்கிறது.

சமீபத்தில் அலுவலகத்தில் புதிய முகம் ஒன்று. அமைதியாக சோகமாக இருந்தார் அந்த இளைஞர். ஒரே தளத்தில் வேலை செய்வதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு. வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்றார்! இப்படி பல முகங்கள்! 

நேற்று இரு இந்திய பெண்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரை எங்கேயோ பார்த்த ஞாபகம். அனேகமாக கோவிலாகத் தான் இருக்க வேண்டும். அதற்குள் அந்தப் பெண்ணே சிரித்துக் கொண்டு தன்னை அறிமுகப்படுத்தி "உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேன்." என்று ஸ்னேகத்துடன் அவரைப்பற்றி பேசி விட்டுச் சென்றார். 

புதிதாக அணியில் சேர்ந்திருக்கும் நபர் அவருடைய அலுவலகத்தில் ரூபிக்ஸ் கியூப் பல அளவுகளில் விதவிதமாக வைத்திருப்பார். நேற்று அழகாக ஒன்றை வைத்து மண்டையைக் குடைந்து கொண்டிருந்தார். 

"என் மகனுக்கும் கணவருக்கும் ரூபிக்ஸ் கியூப் பிடிக்கும்." என்றவுடன் முகம் மலர்ந்து பேச துவங்கி விட்டார். அவரும் வேலைக்குச் சேர்ந்து ஐந்தாறு மாதங்கள் ஆகி விட்டது. இது வரை பேசியதில்லை. ஒவ்வொருவர் ஒவ்வொரு நாட்கள் வந்து செல்வதால் யாருக்கும் மற்றவரைப் பற்றின அறிமுகப்படலம் கூட நடக்கவில்லை என்று நினைக்கிறேன். நேற்று தான் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டோம். 

"நீங்கள் என்ன மொழியில் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். 

"ஆஹா! நாம யாருக்கும் புரியாதுன்னு தைரியமா சௌராஷ்டிரால பேசுறத ஒட்டு கேட்கறானுவோ"😀😀😀 நல்ல வேளை ! ஒன்னும் புரியாது 😎

நினைத்துக் கொண்டே என் தாய்ப்பாஷையைப் பற்றி, தமிழைப் பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் ஆப்கான் மொழி பஷ்டோ படித்தவராம். அதனாலேயே ராணுவத்தில் வேலையும் பார்த்திருக்கிறார்! 

"ம்ம்ம்ம். ஜாக்கிரதையா இருக்கணும் போலயே!" 

சிறிது நேரம் ஆப்கானிஸ்தான் பற்றி பேசி விட்டு வேலைகள் பக்கம் பேச்சு திரும்பியது. அவர் புதிதாக ஒரு வலைத்தளத்தைக் காண்பித்து அங்கிருக்கும் விவரங்கள் நன்றாக இருக்கிறது. நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. என்று புதிய பாதையைக் காண்பித்தார்.  நானும் குறிப்பெடுத்துக் கொண்டு திரும்பினேன்.

இன்று காலையில் என்னைக் கண்டதும் ஏதோ யோசித்தவராக "காலே வணக்கம்" என்றார் சிரித்த முகத்தோடு.

அட! பரவாயில்லையே!

நானும் "நன்றி" சொல்ல, கூகுளாண்டவர் உதவினார் என்று இந்த நாளை இனிமையாக்கினார்.

என் வண்டிக்கு அருகே ஒரு வயதான பெண்மணியும் அவர் வண்டியை நிறுத்துவார். தினமும் காலையில் முகமன் சொல்லிக்கொண்டு அன்றைய காலைப்பொழுதைப் பற்றி சிறிது நேரம் அளவளாவுவோம். அங்கிருக்கும் பாதுகாவலர் காலை ஆகாயத்தை, சூரிய பகவானை எடுத்த படங்களைக் காண்பிப்பார். எலிவேட்டரில் பயணிக்கையில்"நல்ல வேளை இன்னும் ஒரு நாள்  தான் இருக்கிறது வார இறுதிக்கு" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு செல்லும் மனிதர்களுடன் அருகில் இருக்கும் குழந்தைகள் டே கேர் சென்டருக்குச் செல்லும் சின்னஞ்சிறு மழலைகள் பூ போன்ற கைகளை அசைத்தவாறு செல்லும் அழகு என்று ஏகப்பட்ட காட்சிகள் கிடைக்கும்!

என்ன தான் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது சுகமாக இருந்தாலும் சின்ன சின்ன உரையாடல்கள், நலம் விசாரிப்புகள், வம்பு தும்புகள் என்று இருந்தால் தானே நன்றாக இருக்கிறது? 

அலுவலகம் முடிந்து மாலையில் வீடு திரும்பியவுடன் அன்று பள்ளியில் நடந்த நிகழ்வுகளை குழந்தைகளும் அலுவலகத்தில் நடந்தவற்றை நாங்களும் பேசிக் களித்த தருணங்கள் தான் எத்தனை இனிமையாக இருந்தது! 

ஆன்லைன் சந்திப்புகளில் இவையெல்லாம் சாத்தியமில்லையே! மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனைக் கூண்டுக்குள் அடைத்து வைப்பது போல தான் வீட்டிலிருந்து வேலை பார்க்கச் சொல்வதும். அதுவும் பெண்களுக்கு கூடுதலாக சமையல் வேறு😓

ஆமாம்! பெட்ரோல் விற்கிற விலையில் அலுவலகம் வந்து செல்ல கூடுதல் செலவு தான். வெயில் 100 டிகிரி வாட்டுகிறது தான். யாரவது தும்மினாலோ இருமினாலோ பயம் வரத்தான் செய்கிறது. அதற்காக எத்தனை நாட்கள் "தெனாலி" மாதிரி பயந்து கொண்டிருக்கப் போகிறோம்? பல கட்டடங்களும் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது. ஒரு அலுவலகம் என்றால் அதைச் சுற்றி உணவகங்கள், வண்டி நிறுத்தும் இடங்கள், கடைகள் என்று பலருடைய பொருளாதார வாழ்க்கையும் இரண்டற கலந்திருக்கிறது. கொரோனாவால் அவர்கள் பலத்த நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். என்று மீளுவோமோ தெரியவில்லை! 

அமெரிக்கா இந்த பயத்திலிருந்து வெளியில் வந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்ய பழகி விட்ட மனிதர்கள் பெருகிவிட்டார்கள் என்பது தான் உண்மை!

என்னவோ போடா மாதவா!


Wednesday, July 20, 2022

சாதிகள் இல்லையடி பாப்பா

 "தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி?" சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் இப்படியொரு கேள்வி! 

யார்  பெயரில் பல்கலை இருக்கிறதோ அவர் சாதியை ஒழித்தார் தீண்டாமையை ஒழித்தார் பெண்விடுதலைக்காக போராடினார், பெண் மறுமணத்தை ஆதரித்தார் என்று திராவிட போராளிகள் ஆவேசமாக பேசித்திரிவார்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? 

இன்று சாதி பார்த்து தான் தேர்தல் வேட்பாளர்களே திராவிடக்கட்சிகளில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தீண்டாமை ஒழிப்பை பிளாஸ்டிக் இருக்கை மூலமும் திருமா கட்சியினர் திமுக அரசியல்வாதிகள் வீட்டில் உட்காராமல் கைகட்டி அடிமையாக நின்ற கோலத்தில் பல்லிளிக்கிறது ராமசாமியின் தீண்டாமை. பெண் மறுமணத்தை ஆதரித்தார் என்றால் மணியம்மையை ஏன் வீரமணியின் பொறுப்பில் விட்டுச் சென்றார். அவருக்கு ஏன் வீரமணி மறுமணம் சேய்து வைக்கவில்லை என்று கழகத்தார் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் இதெல்லாம் புரூடா என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் கொடுத்த காசிற்கு மேலேயே கூவுவார்கள்.

தற்பொழுது தேர்வில் நடந்த கூத்து தான் இந்த தீரா விடர்களின் உண்மையான முகம். இதிலிருந்து தெரிவது என்ன? தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ராமசாமி சாதியை ஒழித்திட்டார் என்றால் இந்த கேள்வி ஏன் இங்கு எழுகிறது?

அந்த கேள்வித்தாளில் அத்தனை முரண்பாடுகள்! கேள்விகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் கேட்டு அதற்கான பதில் தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள் இந்த "பஹூத்தறிவுவியாதிகள்". இவர்கள் தான் ஹிந்தி மொழியால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று நாடகம் போடும் திருடர்கள்.

இந்த கேள்வித்தாளை அமைத்தவருடைய கல்வி அறிவு என்ன? இவர்களைப் போன்றவர்கள் பாடங்கள் சொல்லிக் கொடுத்து வெளிவரும் மாணவ சமுதாயத்தின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அவன் பாதம் வணங்கிய ராம்சாமி கூட்டம் திராவிட அடிமைகளைத் தானே வளர்த்துக் கொண்டிருக்கிறது! எத்தனை வெட்கக்கேடான செயல் இது!

இந்த கூத்தை மறைக்க அரங்கேறும் அருவருக்கத்தக்க திராவிட அரசியல் நாடகங்களை என்று தமிழன் உணருகிறானோ அன்று தான் உண்மையான "விடியல்" நமக்கு.

இங்கு யாருக்கும் வெட்கமில்லை😡

Tuesday, July 19, 2022

அழியாத கோலங்கள்

ஜூன் மாதம் ஆல்பனி ஹிந்து கோவிலின் ஆண்டு விழாவை ஒட்டி கோலமிடுவது என்று முடிவானது. கோவில் வாசலில் இரண்டு பெரிய கோலங்களுடன் ஆரம்பித்து கோவிலைச் சுற்றி கோலங்கள் இட நண்பர்கள் பலரும் வண்ணம் தீட்ட விருப்பம் தெரிவித்தார்கள். மாலையில் துவங்கி இரவு பத்து மணி வரை சிரித்துப் பேசி குழுவாக வேலை பார்த்த பொழுது தாய்நாட்டில் இருப்பது போல் இருக்கிறது என்று நண்பர்கள் பலரும் ஆனந்தமாக இருந்தது சிறப்பு. கோலம் போடும் பெண்களுக்கு ஈஷ்வரும் நண்பர்களும் சுவையான காஃபி, ஐஸ்கிரீம் என்று கூடவே உதவியாக இருந்தார்கள். குழந்தைகளும் வண்ணம் பூச உதவி மகிழ்ந்தார்கள். சனிக்கிழமைகளில் காலை 7-10.30 மணி வரை கோலமிட்டது புது அனுபவம். சிலுசிலு காற்றில் இளம்வெயிலில் எம் எஸ் சுப்புலட்சுமியுடன் பாடிக் கொண்டே கேட்டுக் கொண்டே செய்த இந்த மாபெரும் கோல வேலை மறக்க முடியாத அனுபவத்துடன் இனிதே நிறைவடைந்தது. மனதுக்குப் பிடித்த செயலைச் செய்த திருப்தியுடன் குடும்பங்களுடன் கொண்டாடியும்  மகிழ்ந்தோம்.

கோவிலில் சந்திக்கும் பலரும் கோலங்கள் தங்கள் அம்மாவை, இளமைப்பருவத்தை, வீட்டு விசேஷங்களை, ஊரை ஞாபகப்படுத்துவதாகஅழகிய சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்கள். 

"இப்பொழுது தான் கோவில் வாசல் அழகாக இருக்கிறது" என்று சிலரும்,

 "தென்னிந்திய கோவில்களுக்குச் செல்வது போல இருக்கிறது" என்று வட இந்தியர்களும் 

"நாங்கள் அன்று நினைத்தை இன்று நீங்கள் செய்து விட்டீர்கள்" என்று ஐம்பது வருடங்களுக்கு முன் கோவிலை நிர்மாணிக்க உதவிய பெரியவர்களும் மனந்திறந்து பாராட்டினார்கள். 

எல்லோரும் பாராட்டி விட்டால் அந்த செயல் முற்றுப்பெற்றதாகி விடுமா என்ன😁 வேலையில் பங்கெடுத்துக்கொள்ளா விட்டாலும் இலவச அறிவுரை கொடுக்க நம் மக்களுக்கா சொல்லிக் கொடுக்க வேண்டும்? ஆனால் நல்ல நண்பர்கள் துணையோடு எடுத்த வேலையை திருப்தியுடன் முடித்துக் கொடுத்தோம். அழகான கோலங்களைப் பார்த்துக் கொண்டே அவரவர் இஷ்ட தெய்வத் திருநாமங்களை மனதில் சொல்லிக்கொண்டு ஆறு முறை கோவிலை வலம் வந்தால் ஒரு மைல் தொலைவு நடந்திருப்போம். மனதில் அமைதியும் குடிகொண்டிருக்கும்.

ஒரு மழைநாளில் அழியாத கோலங்களை அழகாக ஒளிப்பதிவு செய்து கொடுத்தார் என்னவர்😎🙏🙏🙏🙏👇👇👇

கோவில் கோலங்கள்

எதிர்பாராத இந்த இனிய அனுபவம் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம்!

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா🙏🙏🙏


Monday, July 18, 2022

மெட்ராஸ் பலகை ரொட்டி

‘மெட்ராஸ் பலகை ரொட்டி’, சௌராஷ்ட்ரா மக்களின் ‘பொல்கா ரொட்டி’. யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முன்பு சென்னைக்குச் சென்று வருபவர்கள் கொண்டு வருவார்களாம். பின்பு மதுரையில் எங்களவர்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். மைதா மாவு, வெண்ணெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து செய்யப்படும் சுவையான ரொட்டி. “கடுக் முடுக்” என பல்லைப் பதம் பார்க்கும் எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம். ஆரம்ப காலங்களில் இரண்டு , மூன்று ‘பொல்க்கா ரொட்டி’களை ஊருக்கு வரும் பொழுது எடுத்துக்கொண்டு வருவேன். ரெசிபி கிடைக்குமான்னு தேடீட்டு இருக்கேன். தெரிஞ்சவங்க சொல்லுங்க🙏🙏🙏


ஈமோஜி😜😂🙂

முகபாவனைகளும் உடல்மொழியும் ஒருவரின் பேச்சை துல்லியமாக மற்றவரிடத்தில் கடத்தி விடும். ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் ஈமோஜிக்கள் அப்பணியைச் செவ்வனே செய்கிறது. என்ன? ஏற்கெனவே தப்பில்லாமல் சேர்ந்தாற்போல நாலு வார்த்தை எழுதத் தெரியாதவர்களும் பொருத்தமான ஈமோஜியைப் போட்டு விட்டு சொல்ல வந்ததைச் சொல்லி விட முடிகிறது.

"நான் ஒன்று சொல்ல வேண்டும். சரியான ஈமோஜி தான் கிடைக்கவில்லை" என்ற புலம்பல்களும் கேட்கத்தான் செய்கிறது😜 இன்னும் நிறைய ஈமோஜிக்கள் வேண்டும்ம்ம்ம்ம்🙂 

 சீரியசாக சொல்லிவிட்டு சிரிப்பு ஸ்மைலியைத் தட்டி விட்டு சிரிப்பு போலீஸாகி தப்பித்துக்கொள்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். 

வார்த்தைகளில் உணர்வுகளை முற்றுப்புள்ளியாக்கிய ஈமோஜியை கொண்டாடும் நாள்😜😂🙂 Happy Emoji Day! (ஜூலை 17)

Monday, July 4, 2022

சுதந்திர தினம்

கல்வி, வேலை என அமெரிக்காவிற்குள் காலடி வைக்கும் பலரும் தொடக்கத்தில் அந்நிய நாட்டிற்குள் தங்களுடைய வாழ்க்கை ஒரு சில வருடங்களுக்குத் தான். வேண்டிய வரையில் பணத்தை ஈட்டியவுடன் தாய் நாட்டிற்குத் திரும்பிவிடும் கனவுடனே வருகிறார்கள். மேற்படிப்பு முடித்தவர்கள் வேலை தேடி இந்நாட்டின் வேலைவாய்ப்புகளிலும் , வசதிகளிலும் ஒன்றிட , வேலை கிடைத்து வந்தவர்கள் இந்நாட்டின் வாழ்க்கைமுறையிலும் குழந்தைகளுக்கான வசதி, வாய்ப்புகள், வெளிப்படையான சுரண்டல்கள் இல்லாத அரசாங்க நடவடிக்கைகள் என்று பல விஷயங்களில் நாட்டம் கொண்டு இங்கேயே தங்கி விடுகிறார்கள். விசா காலம் முடிவதற்குள் நிறுவனங்கள் மூலமாக க்ரீன் கார்ட் வாங்கும் வரையில் இருக்கும் அச்சம், பதட்டம் எல்லாம் கைகளில் க்ரீன் கார்ட் கிடைத்தவுடன் பஞ்சாய் பறந்து விடுதலை பெற்ற உணர்வு கிடைத்து விடுகிறது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்நாட்டின் மைந்தர்களாக குடியுரிமைப் பெற விண்ணப்பிக்கவும் முடிகிறது.

நானும் க்ரீன் கார்ட் கிடைத்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு குடியுரிமைக்காக விண்ணப்பிக்க , ஈஷ்வரோ தயங்கினார். நம்முடைய இந்திய குடியுரிமையை இழந்து விடுவோமே என்று வருத்தம். அம்மா வீட்டை விட்டு திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டிற்கு வந்துவிட்டால் அம்மா வீடு இல்லை என்று ஆகிவிடுமா? அதெல்லாம் நாம் எப்பொழுதும் இந்தியர்கள் தான். அது இது என்று சமாதானப்படுத்தியும் ஒத்துக் கொள்ளவில்லை. 2008ல் பொருளாதாரா நெருக்கடி ஏற்பட்டு வேலையிடத்தில் அமெரிக்க குடிமகன்/ள்களுக்கும், க்ரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் தான் முன்னுரிமை என்ற பேச்சு அடிபட்டவுடன் 'நான் அப்ளை பண்ணப் போறேன். நீங்க யோசிச்சு முடிவெடுங்க' என்று விண்ணப்பித்து பணமும் கட்டி சில நாட்களில் தபாலில் கேள்வி-பதில் அடங்கிய புத்தகமும் , CD யும் வந்து சேர்ந்தது.
ஆஹா! இத வேற படிக்கணுமா? அமெரிக்காவைப் பற்றின அடிப்படை தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டிருந்த அப்புத்தகத்தில் நாட்டின் வரலாறு, கொள்கைகள், தலைவர்கள் , தேசிய கீதம் என்று பலவும் இருந்தது. படிக்கவும் ஆர்வமாக இருந்தது. நண்பர்கள் பலரும் "நாங்க வெளியில போறப்ப வண்டியில CDய ஓட விட்டு படிச்சிட்டே போவோம்" என்று கூறியதைக் கேட்டவுடன் அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லையே இதற்கு ஏன் இவ்வளவு ஸீன் போடுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு கைரேகைகளை எடுக்க ஒரு நாள், நேர்முகத்தேர்வுக்கென ஒரு நாள் என்று அடிக்கடி வீட்டிற்கு அருகில் இருந்த Homeland Security அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. நேர்முகத்தேர்வு நாளன்று என்னைப் போல் சிலர் அங்கிருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் ஆங்கிலம் தெரியுமா? புரியுமா? எப்படி இவர்களைத் தேர்வு செய்வார்கள் என்று மண்டைக்குள் வேண்டாத குடைச்சல்

என் பெயரை அழைத்தவுடன் சம்பிராதய கேள்விகள். புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே கேள்விகள் கேட்க ஆரம்பித்து ஐந்து கேள்விகளுக்கும் 'டான் டான் டான்' என்று பதில்கள் அளித்தவுடன் "உங்க ஆங்கிலம் தெளிவாக இருக்கிறது. நன்றாக பேசுகிறீர்கள்" என்றார் கேள்வி கேட்ட நக்கீரன்.
நாங்கல்லாம் யாரு தெரியும்ல? என்று நமக்கு நாமே ஒரு பாராட்டுப் பத்திரத்தை மனதுக்குள் வாசித்துக் கொண்டே கைகுலுக்கி விடைபெறும் பொழுது "Welcome to America." சிரித்துக் கொண்டே வழியனுப்பினார்.

அவ்வளவு தானா? இனி “அம்ரீக்கா எண்டே புகுந்த நாடு. ஆல்பனி எண்டே ஊரு” டமுக்கு டிப்பா ஹையாலோ ஏ சிங்கி ஏ சிங்கா என பாடிக் கொண்டே வீட்டுக்குள் வர, சுப்பிரமணிக்கு ஒரே ஜாலி. அம்மா நீயும் நானும் அமெரிக்கன்ஸ் என்று ஆனந்த கூத்தாடினான். எனக்கு அப்பாடா இனி வேலையிடத்தில் பிரச்னை இல்லை என்று நிம்மதியாக இருந்தது.

விரைவிலேயே அரசாங்க முறைப்படி நீதிபதியின் முன் அமெரிக்க குடியுரிமைப் பிரமாணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்கள். அந்த நாளும் வந்தே விட்டது. அன்று பார்த்து சுப்பிரமணிக்கு வாந்தி, காய்ச்சல் என்று படுத்த நான் மட்டும் தனியாக போக வேண்டிய நிலை. ஆரம்பித்திலேயே ஈஷ்வர் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இப்பொழுது நல்ல சாக்கு கிடைத்து விட்டது. யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று நானும் கிளம்பி விட்டேன்.

அன்று பார்த்தா பேய் மழை கொட்ட வேண்டும்? எனக்குப் பழக்கமில்லாத ஊர் மற்றும் தெருக்கள். புது ஊர் என்றாலே வரும் பதட்டமும் சேர்ந்து கொள்ள, எங்கு வண்டியை நிறுத்துவது என்று ஒரே குழப்பம். சுற்றிச்சுற்றி வந்தாலும் வண்டியை நிறுத்த இடமில்லை. பல தெருக்கள் தாண்டி நிறுத்தி விட்டு நான் வரும் வரையில் வண்டி பத்திரமாக இருக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது.

அந்த ஹாலுக்குள் நுழையும் பொழுது நன்கு நனைந்திருந்தேன். நல்ல கூட்டம். இத்தனை மக்கள் இன்று குடியுரிமை பெறுகிறார்களா! இது எப்பொழுது முடிய? கவலையும் சேர்ந்து கொண்டது.

ஸ்மார்ட்ஃபோன் பிரபலமாகாத காலம். ஈஷ்வரிடம் நான் வந்து சேர்ந்து விட்ட தகவலைச் சொல்லி விட்டு ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன். தூரத்தில் நண்பர் குடும்பம் ஒன்றைக் கண்டதும் சிறிது ஆறுதல். பல நாட்டு மக்கள், பல மொழிகளை பேசிக் கொண்டு முகத்தில் புன்னகையுடன்! இந்தியர், பாகிஸ்தானியர், எந்த நாடு என அறிய முடியாத வகையில் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு மனிதர்கள் கூட்டம், வெள்ளை,கருப்பு, சிகப்பு, பழுப்பு, பிரவுன் என பல நிறங்களில்! குழந்தைகளுடன், பெற்றோர்களுடன் , உறவினர்களுடன், நண்பர்களுடன் வந்து அன்றைய நாளை கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருக்க, நான் மட்டும் அனாதையாக இருப்பது போல் தோன்றியது. வாழ்க்கையின் பல காலகட்டங்களில் நான் தனித்தே இருந்திருக்கிறேன். அந்த நினைவுகளும் வந்து செல்கையில் தலையெழுத்தை எண்ணி கண்கள் வியர்க்கத்தான் செய்தது நம்மை அனாதையாக எண்ணிக் கொண்டால் இந்த துயரம் பனி போல் விலகிவிடும் என்று தெரியும். அப்படித்தான் நினைத்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அந்நகர மேயரும், தலைமை நீதிபதியும், கவுன்சிலரும் மேடையேற, அருகில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் ஜூனியர் தோன்றி அன்று குடியுரிமை பெரும் மக்களுக்கு
வாழ்த்துகள் சொல்லி வரவேற்றுப் பேசினார். பிறகு ஒவ்வொருவராக தேசியக் கொடியைச் சாட்சியாக வைத்து பிரமாணம் செய்து கொண்டோம். ஒரு சான்றிதழ் அதற்குச் சாட்சி. மகிழ்ச்சியாக இருந்தது. கடந்து வந்த கடினமான பாதைகள் அப்படி. இன்று வரையில் இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து வாழ்கிறேன். இனியும் வாழ்வேன்.

குழந்தைகள் இந்நாட்டின் மைந்தர்களாக வளர, வளர எங்களுக்கும் இந்நாட்டின் மீதான பற்றும் கூடிக்கொண்டு வருகிறது. இன்றைய நாளில் பெருமையுடன் தேசியக்கொடியை வீடுகளில் ஏற்றி தாய்நாட்டின் சுதந்திரத்தைக் கட்சி பேதமின்றி கொண்டாடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். நாட்டிற்கு அச்சுறுத்தல் என்றால் கட்சி, இனம், நிற பேதமின்றி ஒற்றுமையாக குரல் கொடுத்து எதிரியை வீழ்த்த நினைக்கும் அங்கிள் சாமிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில நல்ல விஷயங்களும் உள்ளது.

எல்லோரும் கொண்டாடுவோம்ம்ம்ம்...

O say does that star-spangled banner yet wave
O'er the land of the free and the home of the brave?

Happy 4th of July!


Saturday, July 2, 2022

ஜூன் போனால் ஜுலை காற்றே

கோடை ஆரம்பமாகி நீள்கிறது பகல் பொழுதுகள். ஆம் இனி வரும் நாட்களில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருக்கும். காலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை கூடஇது தொடரும். விடுமுறையில் இருப்பதால் குழந்தைகளும் 'ஓடி விளையாடு பாப்பா' என்று தெருவில் பெருங்குரலெடுத்து நண்பர்களுடன் விளையாடி மகிழும் இனிய காலம். 

வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகளும், பழங்களும் , பூக்களும் பூத்துக் குலுங்க, பறவைகளும் ,அணில் , முயல்களும் துள்ளியோடும் அழகில் மனம் மயங்கும் பருவம். மழைக்காலத்தில் வருகை தந்த பறவைகள் கூடுகள் கட்டி கொஞ்சிக் குலாவி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகளுக்கு இரை தேடி ஊட்டி வளர்ந்து பறக்கும் வரை சீராட்டிப் பாராட்டும் பொறுப்பான காலம். மழையுடன் பல வண்ணப்பறவைகளின் இனிய இசையில் மனமும் மயங்கும் வசந்த காலம். பார்க், பீச் என்று மக்கள் குடும்பமாக கோடை விடுமுறையைக் கொண்டாடி உறவினர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்திருக்கும் நாட்கள் மனதிற்கும் இனிமை. தாய் நாட்டுக்குச் செல்பவர்கள் விமான நிலையத்தை நோக்கிப் படையெடுக்க, பெற்றோர்களை ஊரிலிருந்து வரவழைத்து வெளிநாட்டைச் சுற்றிக் காண்பிக்க தாத்தா, பாட்டிகள் பேரக்குழந்தைகளுடன் அகமகிழ்ந்து வெளிநாட்டு வாழ்க்கையின் சுவாரசியத்தை அனுபவிக்கும் இனியதொரு காலம். வியர்வையும் புழுதியும் கொசு, பூச்சிக்கடிகளும் உடலைப் பதம் பார்க்க நீச்சல் குளங்களில், நீர்நிலைகளில் கூட்டம் அலைமோதும்.
 
நானும் நினைத்திருந்ததுண்டு! நாம் தான் வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி என்று பழகி விட்டதால் இந்த வட அமெரிக்கர்கள் ஏன் இப்படி கோடை கோடை என்று கொண்டாடுகிறார்கள் என்று!
பள்ளி திறக்கும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் இப்பருவம் பின் மெதுவாக குளிர்ப்போர்வையை சுமக்க ஆரம்பிக்கும். படுக்கையிலிருந்து எழ அடம்பிடிக்கும் குழந்தைகளைப் போலவே சூரிய பகவானும் வானில் உலா வர மறுத்து இருள் விலகா காலையில் மாணவச்செல்வங்கள் பள்ளிக்குச் செல்வார்கள். காலைக்குளிர் புற்களில் வைரமாக ஜொலிக்க இளம் தென்றல் சாமரம் வீச கோடைக்கால துணிமணிகளுக்கு விடை கொடுத்து விட்டு ஸ்வெட்டர், சாக்ஸ், ஷூ என்று இலையுதிர் காலத்திற்குத் தயாராக வேண்டும். கோடை மலர்கள் மலர்ந்து உதிர்ந்து இலையுதிர்காலத்தில் பூக்கும் மலர்கள் வீடுகளை அலங்கரிக்கும். கோடை வரை பாடித்திரிந்த பல பறவைகளும் புலம் பெயர சில துயில் கொள்ள ஆரம்பிக்கும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைச் சுமந்து செல்லும் வண்டிகள் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி எரிச்சல் படுத்தும் பருவமும் கூட! விடியலில் தொடங்கி மாலை மங்கும் நேரம் செல்வது கூட தெரியாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பெற்றோர்களும் பம்பரமாகச் சுழல... மரங்களின் இலைகள் வண்ணங்களுடன் வலம் வர அக்டோபர் மாதம் பிறந்திருக்கும். 

காற்றில் தவழ்ந்து வரும் குளிரும் பனிமூட்டமும் காலை நேரத்தை அழகூட்ட மரங்களின் வண்ண இலைகள் நகரையே மெருகூட்ட, மழையும் காற்றும் இலையுதிர்காலத்தை தொடங்கி வைக்க...அது ஒரு அழகிய கனாக்காலம்! நவம்பரில் குளிர் சற்று அதிகமாகி தேங்க்ஸ்கிவிங் , கிறிஸ்துமஸ் விழா நாட்களின் உற்சாகத்துடன் மக்கள் வலம் வர, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் மெதுவாக வெண்பனியினால் சூழ... வசந்த காலத்திற்காக காத்திருக்கும் மனது!

வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் மழை , குளிர், பனி, பனிமழை, ஐஸ் என்று வீட்டுக்குள் முடக்கி விடுவதால் வசீகரன் வானில் உலா வரும் நாட்களைக் கொண்டாடுகிறார்கள். கொண்டாடுகிறோம். கொண்டாடுகிறேன்!
 
இப்பொழுது தெரிந்து விட்டது கோடையின் மகத்துவம்!
மழைக்காலத்திற்கு விடை கொடுத்து வரவேற்போம் கோடையை
ஜூன் போனால் ஜுலை காற்றே ....

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...