Saturday, August 15, 2020

குறைந்த தண்டனை, அதிக நீதி

இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தொற்று நோய்ப் பரவல், வேலையில்லா திண்டாட்டம் , பொருளாதார பாதிப்புகளுடன் “Black Lives Matter” இயக்கமும் அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்களையும் போராளிகளையும் தீவிரமாக எதிர்த்து முடக்குவதில் இருக்கும் அரசியலின் அடக்குமுறை மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.


மே 25, 2020 அன்று மினியாபொலிஸ் நகரில் கருப்பர் இனத்தைச் சார்ந்த ஜார்ஜ் ஃப்லாய்டின் மரணம் காவல்துறையினரின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நானூறு ஆண்டுகளாய் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இந்த பாதகச் செயலுக்கெதிரான போராட்டத்தில் கருப்பர்கள் பாதிப்புக்குள்ளாகுவதும் அதனை ஆளும் அரசு கண்டுகொள்ளாமல் செல்வதும் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும் இம்முறை சம்பவத்தை நேரில் கண்ட மனிதர்களின் காணொளி வைரலாகப் பரவி மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. ‘Black Lives Matter’ கோஷங்கள் நகர வீதிகளில் முழங்க, இன்றைய தலைமுறையினரின் பேராதரவும் ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமும் அமெரிக்க காவல்துறையின் கோரமுகத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

பதினாறாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்ட கருப்பர்கள் இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றிருந்தாலும் இனவாதமும் நிறபேதமும் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே இன்று வரையில் நடத்திக் கொண்டிருக்கிறது.

அதிபராக ஒபாமா இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டதும் நாட்டில் சமத்துவம் நிலவுவதைப் போல தோன்றினாலும் நிறபேதம் என்பது அனைத்து துறைகளிலும் ஊடுருவியுள்ளது. “KKK” (Ku Klux Klan) போன்ற வெள்ளையின ஆதிக்க குழுக்களின் வெறுப்பரசியல் இன்று வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தினசரி வாழ்வில் இனவெறியுடன் நடக்கும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டு தானிருக்கிறது . அதுவும் டொனால்ட் ட்ரம்ப் அதிபரான பின் சிறுபான்மையினருக்கு எதிரான ஆதிக்க மனோபாவ அமெரிக்கர்களின் குற்றங்கள் பெருகியிருக்கிறது. இதற்கான இரு அடிப்படை காரணிகள் ‘சிஸ்டெமிக் ரேஸிசம்’ மற்றும் ‘சிஸ்டமேட்டிக் ரேஸிசம்’ என்பதாகும்.

தனி மனிதரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ நிற பேத அடிப்படையில் தாழ்வாகப் பார்ப்பதும் அவர்களைக் குறித்த தவறான கண்ணோட்டத்தில் பிரிவினையை உருவாக்கிக் கொள்ளுதலே ‘சிஸ்டெமிக் ரேஸிசம்’.

“இந்த நாட்டில் இருக்க விரும்பாவதர்கள் , இந்நாட்டை வெறுப்பவர்கள் தாராளமாக அவரவர் சொந்த ஊருக்கே கிளம்பலாம்.” அமெரிக்க அதிபரின் ட்வீட் இது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் சபையின் நான்கு சிறுபான்மை உறுப்பினர்களைப் பார்த்துச் சொல்லி இருக்கிறார் இந்த உலகத்தலைவர். ஏதோ இவர் ஒருவர் மட்டுமே இப்படிப் பேசவில்லை. அமெரிக்காவில் இனவெறியும் நிறவெறியும் எப்பொழுதுமே இருந்து கொண்டிருந்தாலும் இப்பொழுது முற்றிலும் மாறிய சந்திரமுகியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

நினா தவுளுரி என்ற இந்திய வம்சாவளிப்பெண் 2014ல் ‘மிஸ் அமெரிக்கா’ பட்டம் வாங்கியதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவள் மீதும் இந்தியர்கள் மீதும் இனவெறியர்கள் வன்மத்துடன் வசைபாடிக் கொண்டிருந்தார்கள்.

அடிமைகளாக இருந்த கருப்பர்களைக் குறிக்க வெள்ளையர்கள் பயன்படுத்திய “நிக்கர்” என்ற வார்த்தை சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் வயதான ஒரு வெள்ளை அமெரிக்கப் பெண்மணி கருப்பினத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் விதத்தில் பேச, காவல்துறையினரின் தலையீட்டால் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டார் வெள்ளையினத்தவர். சமீபத்திய நாட்களிலும் நாட்டின் பல நகரங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்தது.

கூடைப்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரு கருப்பின பள்ளி மாணவர்களின் பைகளைச் சோதனை செய்து போதைப்பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என சட்டத்திற்குப் புறம்பாக காவல்துறையினர் நடந்து கொண்டதும் கூட சிஸ்டெமிக் ரேஸிசமே. இன்று கருப்பின குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பத் தயங்குவதும் காவலர்களைக் கண்டு அஞ்சும் நிலைமையும் ஏற்பட்டிருப்பது நிறவெறியால் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடிய நேரத்திலும் , இரட்டைக்கோபுர தாக்குதலின் போதும் இந்தியர்களை “கோ பேக் டு யுவர் கண்ட்ரி” என்று சொன்னவர்கள் இன்று சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸுக்காக ஆசியர்களை வசை பாடிக்கொண்டிருப்பதற்கும் இனவெறியே காரணம்.

பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வாழும் நியூயார்க் போன்ற பெருநகரங்களிலேயே இப்படியென்றால், மிட் வெஸ்ட்ல் இவர்கள் ஆதிக்கம் கொண்டுள்ள சிறுநகரங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அமெரிக்கர்கள் பலரும் இணக்கத்துடன் வாழ வேண்டுமென விருப்பப்பட்டாலும் ஆதிக்க மனோபாவம் கொண்ட சிலரால் வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

வெளித்தோற்றத்தில் எல்லாம் இயல்பாகத் தெரிந்தாலும் அமெரிக்கச் சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறவெறி ஊறிக் கிடக்கிறது.

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களில் பெரும்பான்மையினர் கருப்பர்கள், லட்டினோ மற்றும் சிகப்பிந்தியர். கல்லூரிப்பட்டம் பெற்றிருந்தாலும் வேலைவாய்ப்புகளில் வெள்ளையர்களுக்கே முன்னுரிமைகளும் அளிக்கப்படுகிறது. அலுவலகங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும் உயர்பதவிகளில் இருப்பவர்களும் வெள்ளையர்களே.

நாட்டின் மக்கள் தொகையில் 13% கருப்பர்கள் இருந்தாலும் சிறைக்கைதிகளில் 40% இருப்பதும், ஒரே குற்றத்திற்கு வெள்ளையர்களுக்கு குறைவாகவும் கருப்பர்களுக்கு அதிக தண்டனையும் நீண்ட சிறைக்காலமும் வழங்கி நீதிமன்றங்களும் பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது. செய்யாத குற்றங்களுக்காக கருப்பர்கள் அதிக அளவில் தண்டனைகளை அனுபவிப்பதாக மிஷிகன் மாநில சட்டக்கல்லூரிப் பேராசிரியர் பார்பரா ஓ ப்ரையன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் அவசர மருத்துவ சேவை, மருத்துவமனைகளில் வசதி வாய்ப்புகள் குறைவாகவும் 67% மருத்துவர்கள் கருப்பின நோயாளிகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், ஒரே கல்வித்தகுதி இருந்தாலும் கருப்பின மருத்துவர்களுக்கு அதிக அளவில் ஆராய்ச்சி மானியங்கள் மறுக்கப்படுவதாகவும் ‘தேசிய சுகாதார ஏற்றத்தாழ்வுகள் அறிக்கை’ சுட்டுவதும் ஸிஸ்டெமிக் ரேஸிசத்தின் அங்கமே.

வண்டி ஓட்டுபவர்களில் வெள்ளையர்களை விட கருப்பர்கள் அதிகமாக காவல் துறையினரால் நிறுத்தப்படுவதாகவும் பாதசாரிகளின் மரணங்களில் கூட கருப்பர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாக 2017ல் நெவாடா பல்கலை நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது. சமீபத்திய ஜார்ஜ் ஃப்லாய்ட்ன் மரணமும் அதனைப் போன்ற பல மரணங்களும் காவல்துறையினர் சிறுபான்மையினரிடம் நடந்து கொள்ளும் அராஜகத்தால் தொடருவது.

‘ஃபெடரல் ரிசர்வ் ஆய்வு’ ஒன்று தேசிய அளவில் செல்வ வளங்கள் தொண்ணூறு சதவிகிதம் வெள்ளை அமெரிக்கர்களிடமும் 2.6 சதவிகிதம் மட்டுமே கருப்பர்களிடம் உள்ளதாகக் கண்டறிந்துள்ளது. சிறுபான்மையினரை விட வெள்ளை அமெரிக்கர்கள் அதிக அளவில் சொத்துக்கள் , குடும்ப வருமானம் கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிக வருமான வசதி உள்ளவர்கள் குடியிருப்பு பகுதிகளில் கருப்பினத்தவரைக் காண்பதும் அரிது. இப்பாகுபாடுகளைக் களைவதன் மூலமே ஒன்றிணைந்த மக்கள் சமுதாயம் உருவாகும் என சமூக இயக்கங்கள் இன்று வரை போராடிக் கொண்டிருக்கின்றன.

சமூகத்தில் புரையோடியிருக்கும் இனவாதத்தை அரசு எந்திரங்கள் மூலமாக அரசியல் தலைவர்கள் இலைமறைகாய் போல் கருப்பர்களுக்கு எதிராக இயக்க உதவுவதே ‘சிஸ்டமேட்டிக் ரேஸிசம்’ . “War on Crime”, “War on drugs”, “Law and Order” போன்ற குறிப்பான பதங்கள் சிறுபான்மையினரைக் குறிவைத்தே உருவாக்கப்பட்ட வார்த்தைகள். குடியரசு மற்றும் ஜனநாயக அதிபர்கள் பலரும் அதை தாரக மந்திரமாகவே கருப்பர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். க்ளிண்டனும் ஒபாமாவும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. சிறுபான்மை மக்களின் நலனுக்காகச் செலவிடுவதைக் காட்டிலும் இருமடங்கு காவல்துறை, சிறைச்சாலை, நீதித்துறைகளுக்காக அரசு செலவிடுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் இமானுவேல் மற்றும் கேப்ரியல் குறிப்பிட்டுள்ளார்கள். இனப் பிரிவினையை அரசு அதிகாரங்கள் மூலமாக வெற்றிகரமாக மேற்கொள்ளும் அரசியல்வாதிகள் இன்று வரையிலும் தொடருவதும் பாகுபாட்டைக் குறைக்கும் வழிகளை மேற்கொள்வது போல் தெரிந்தாலும் மறைமுகமாக அடக்கியாள்வது தொடருவதும் கருப்பின மக்களின் தொடர் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகியிருக்கிறது.
தற்போது நடந்து கொண்டிருப்பது கருப்பர்களுக்கும் வெள்ளை அமெரிக்கர்களுக்குமான போராட்டம் மட்டுமல்ல. அனைத்து சிறுபான்மையினரும் இணைந்து ஆதிக்க மனோபாவ வெள்ளையினத்தவரை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டம். “Black Lives Matter” இயக்கம் பற்றிப் பேசவே அஞ்சும் இந்தியர்கள் ஏராளம். அது கருப்பர்களுக்கானபிரச்னை என்று எளிதில் கடந்து விடுவதும் முறையானதல்ல. நம் குழந்தைகளுக்காக, அவர்களின் வருங்கால சந்ததியினருக்காக நம்முடைய பங்களிப்பும் இப்போராட்டங்களில் அவசியமாகிறது. பல்வேறு துறைகளில் முன்னேறிக்கொண்டே இருபத்தியொன்றாம் நூற்றாண்டை நோக்கி வீறு நடை போடும் உலகில் நிற, இன பேதங்கள் தொடர்வதும், பணக்காரன் ஏழை என்ற பிரிவினையையும் மீறி நிறபேதம் கொண்டு வெறியுடன் அலையும் அவலமும் அதனால் மக்கள் பாதிக்கப்படுவதும் மனித இனத்திற்கே வெட்கக்கேடான விஷயம். இதிலிருந்து மீள்வது கடினமென்றாலும் அரசின் போக்கில், முடிவுகளில் மாற்றங்கள் வர வேண்டும். தற்போதைய தொற்றுநோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களும், வேலையிழந்தவர்களும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் சிஸ்டெமிக் மற்றும் சிஸ்டமேட்டிக் ரேஸிசத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியம். அதற்கு அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து பாதிக்கப்பட்ட மக்களின் புனரமைப்புத் திட்டங்களுக்காக நிதிகளை ஒதுக்கிட அரசு முன்வர வேண்டும் என சமூக மாற்றத் திட்டங்களை வரையறுக்கும் மையத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் டொரியன் வாரன் குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆரம்பத் திட்டங்களை “Black Lives Matter” போராட்டத்திற்குப் பின் பல மாநிலங்களும் முன்மொழிந்துள்ளது வரவேற்கத்தக்கது. பேதங்களைக் குறைத்தாலே நாடு வளம் பெறும். நாட்டு மக்களும் முன்னேறுவர். குற்றவாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலை மாறி நாட்டின் பிரஜைகள் அனைவரும் பாரபட்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். 

பிரிவினையை ஒழித்து சமூக மாற்றங்களைக் கொண்டு வர ஒத்துழைக்கும் மாநகர, மாநில, தேசிய அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. 2020 நவம்பர் தேர்தலில் அதற்கான சாத்தியங்கள் இருக்கும் என்று நம்புவோம்.

Monday, August 3, 2020

விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்!

அமெரிக்க மக்களின் ‘ப்ளாக் லைவ்ஸ் மாட்டர்’ இயக்கத்தின் பெரும் பாய்ச்சல்



இவ்வருட துவக்கத்திலிருந்தே கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரியால் அச்சமும், பொருளாதாரச் சீர்குலைவும், வேலையில்லா திண்டாட்டமும், நாட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நவம்பர் மாத அதிபர் தேர்தல் எதிர்பார்ப்புகளைக் கூட மறந்து வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கையில் மினசோட்டா மாநிலம் மினியாபொலிஸ் நகரில் மே 25 அன்று நடந்த நிகழ்வு நாட்டைப் பிளவுபடுத்தியுள்ளது வேதனையானது.

அமெரிக்க கறுப்பர் இனத்தைச் சார்ந்த 46 வயதான ஜார்ஜ் ஃப்லாய்ட் $20 கள்ள நோட்டைக் கொடுத்ததாகக் கடையில் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைத்தும் மூச்சு விட முடியவில்லை என ஃப்லாய்ட் மன்றாடியும் மயங்கி விழும் ஃப்லாய்டுக்காக பாதசாரிகள் காவல்துறையினரிடம் கெஞ்சிய போதும் அவரின் கழுத்துப் பகுதியில் அழுத்தியபடி அமர்ந்திருந்த அதிகாரி டெரெக் ஷாவின் மற்றும் உடலை அழுத்திப் பிடித்திருந்த மற்ற மூன்று அதிகாரிகளும் 8 நிமிடம் 46 நொடிகள் வரை தங்கள் பிடியைத் தளர்த்திக் கொள்ளவே இல்லை. விசாரணையை நேரில் கண்டவர்கள் காவல்துறையினரின் அராஜக காணொளியை வைரலாக்க, மக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். அவசர மருத்துவ உதவி ஊர்தி வருவதற்குள் ஃப்லாய்ட் மரணித்திருந்தார். கறுப்பர் மேல் வெள்ளை அமெரிக்க காவல்துறையினர் நடத்திய நிறவெறியின் கொலைத்தாக்குதலாக கறுப்பர்களும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் போராட, இன்று நாடே இரண்டுபட்டிருக்கிறது.

அராஜக முறையில் விசாரணை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மினியாபொலிஸ் நகரில் கடையடைப்புகளும் தாக்குதல்களும் தீ வைப்புகளும் தொடருவது செய்திகளில் வெளிவர, கறுப்பர்கள் அதிகமாக இருக்கும் மற்ற நகரங்களிலும் கலவரங்கள் தொடர்ந்து கோவிட்19 பிரச்னையை மறந்தே போனார்கள் மக்கள்.

சாலைகளில் போராட்டம் செய்பவர்களால் வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுமோ என்ற பதட்டமும் ஆவேசமான மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட, வேறு வழியின்றி காவல் அதிகாரி ஷாவின் மேல் கொலை வழக்கைப் பதிவு செய்து மற்ற மூன்று அதிகாரிகளையும் வேலையில் இருந்து நீக்கியது மினியாபொலிஸ் காவல்துறை.

திட்டமிடாத கொலை(செகண்ட் டிகிரி மர்டர்) என்று ஷாவின் மேலும் அதற்கு உடந்தையாக இருந்த மற்ற மூன்று அதிகாரிகள் மீதும் கொலைவழக்குப் பதிவாகும் வரை நாடு முழுவதும் கலவரங்கள் தொடர்ந்தது. அமைதியான போராட்டங்களில் வன்முறையினரால் கடைகளையும் உடமைகளையும் இழந்தவர்கள் பொது மக்களே. இதனால் அதிருப்தியடைந்த மக்களின் கோபம் போராட்டக்காரர்களின் மீது திரும்பியது. மாநிலங்களில் வன்முறைப் போராட்டங்கள் தொடர்ந்தால் ராணுவத்தால் அடக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அரசின் அலட்சியப்போக்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அரசியலாக்கப்படுவதற்குள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எட்டு நாள் போராட்டமும் தற்காலிக முடிவுக்கு வந்திருக்கிறது.

வைரஸ் காரணமாக நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்னையுடன் அதிதீவிரமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இனவெறி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர நான்கு அதிகாரிகளின் மீதும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் காவல் துறையின் அடாவடித்தனத்தையும் நிற பேதத்தையும் மக்கள் உணர்ந்து கருப்பு அமெரிக்கர்களுக்கு அதிக அளவில் வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு பெருகியதும் இப்போராட்டத்தை வழிநடத்திய “Black Lives Matter” இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும். 2013ல் தொடங்கிய இவ்வியக்கம் ஆதிக்க வெள்ளையர்களால் பாதிக்கப்பட்ட கறுப்பர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இயங்கி வருகிறது.

இந்த ஒரு மரணம் மட்டுமே இன்று நாட்டைப் பிளவுப்படுத்தவில்லை. தொடர்ந்து கறுப்பர்களின் மேல் நடத்தப்படும் வன்முறைகளும் அநீதியும் இப்போராட்டங்களைத் தீவிரமாக்கியுள்ளது. நாணயத்தின் இருபக்கம் போலவே சிலர் காவல்துறைக்கு ஆதரவாகவும் பலர் எதிராகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிறவெறியும் இனவெறியும் கொண்டு காவல் துறை செயல்படுகிறது என மக்கள் நினைப்பதை ஊர்ஜிதப்படுத்துவது போல கறுப்பர்களுக்கு எதிரான காவல்துறைக் குற்றங்கள் பெருகிக்கொண்டு வருவதும் இம்மாபெரும் ஊர்வலங்களுக்கு காரணமாயின.

பருத்தி, புகையிலைத் தோட்ட வேலைகளுக்காக 16ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்ட இருபது கருப்பர்கள் பரம்பரை அடிமைகளாக பல்வேறு இன்னல்களுடன் வெள்ளையர்களுக்குச் சேவகம் செய்திருக்கிறார்கள். பெண்கள் மீதான வன்முறைகளும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட குழந்தைகளும் ஆண்களும் அவர்களுக்கு எதிரான சட்டங்களும் பிணைக்கைதிகளாகவே வாழ வேண்டிய கட்டாயம். இவர்களால் தெற்கு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி அரசியல் ஆதிக்கமும் பெற்று வெள்ளையர்களுக்குச் சாதகமான சட்டங்களை அரசே இயற்றியுள்ளது.

1777ல் வெர்மாண்ட் மாநிலம் முதன் முதலாக அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அளித்தது. 1863ல் ஆபிரகாம் லிங்கன் தென் மாநிலங்களில் வெள்ளையர்களிடம் அடிமைகளாக இருந்தவர்களுக்கு விடுதலைப் பிரகடனத்தை அறிவித்து 3.5 மில்லியன் கறுப்பர்கள் விடுவிக்கப்பட்டாலும் டெக்சாஸ் மாநில அடிமைகளுக்கு 1865ல் ஜூன் 19 அன்று தான் அதிகாரப்பூர்வமாக விடுதலை கிடைத்தது. வரலாற்று சிறப்பு மிக்க அந்நாளே “Juneteenth” என நாடு முழுவதும் கறுப்பர்கள் விடுதலை தினமாக கொண்டாடப்படுகிறது.

13th Amendement முற்றிலும் அடிமைத்தனத்தை ஒழித்தாலும் குற்றம் செய்தவர்களை அடிமைகளாகத் தொடர அனுமதித்தது. இதனால் செய்யாத குற்றங்களுக்காகவும் சிறு தவறுகளுக்காகவும் குற்றவாளிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் கறுப்பர்களே. இவர்களை மீண்டும் அடிமைகளாக நடத்தும் வகையில் சட்டங்களை இயற்றியதும் வெள்ளையர்களின் மேலாதிக்கமே.

விடுதலை பெற்றிருந்தாலும் 1865-1965 வரை “ஜிம் க்ரோ” சட்டங்கள் (கறுப்பர்களுக்கான குறியீடுகள்) பள்ளி, மருத்துவமனை, பேருந்து மற்றும் பொது இடங்களில் வெள்ளையர்களுக்கு முன்னிலையும் அதிகாரமும் தரும் வகையில் நிற பாகுபாடு தொடர்ந்தது. 1866ல் KKK (Ku Klux Klan) அமைப்பு கறுப்பர்களுக்கு எதிரான கொள்கைகளுடன் தென் மாநிலங்களில் நிறுவப்பட்டது. கறுப்பர்கள் வணிகம், நிலம் வாங்குவதை தடை செய்வதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை தங்களைச் சார்ந்திருக்குமாறு செய்ததும் குற்றவாளிகளை அடிமைகளாகப் பயன்படுத்தி கறுப்பர்களிடையே அச்சத்தை உருவாக்கிய இவ்வமைப்பினர் ஆண்டுகள் பல கடந்தும் இன்று வரை அதே காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதும் அரசியல் தலைவர்களின் ஆதரவு பெற்றிருப்பதும் ஃப்லாய்ட் மரணம் அதனைப் பறைச்சாற்றுவதாலேயே இந்தப் போராட்டம் அவசியமாகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என 14th Amendmentல் கூறினாலும் பல வருடங்களாக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவதும் போதை மருந்து குற்றங்களுக்காக கைது செய்யப்படுவதும், அதிக அளவில் சிறைக்குச் செல்வோரும் கருப்பு அமெரிக்கர்களாக இருக்கிறார்கள். குற்றங்கள் ஒன்றாக இருப்பினும் கறுப்பர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வெள்ளை அமெரிக்கர்களுக்கு குறைவான தண்டனையும் என்றே நீதிமன்றங்களும் பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது. செய்யாத குற்றங்களுக்காக கறுப்பர்கள் அதிக அளவில் தண்டனைகளை அனுபவிப்பதாக மிஷிகன் மாநில சட்டக்கல்லூரிப் பேராசிரியர் பார்பரா ஓ ப்ரையன் தனது அறிக்கையில் தெரிவித்துளளார். “நியூயார்க் சென்ட்ரல் பார்க்” வழக்கில் செய்யாத குற்றத்திற்காக பல ஆண்டுகள் சிறைத்தண்டனைகள் அனுபவித்த ஐந்து சிறுபான்மையின சிறுவர்களை உண்மையான குற்றவாளியை (வெள்ளை அமெரிக்கர்) கண்டறிந்த பிறகு தவறை உணர்ந்து நீதிமன்றம் விடுதலை செய்தது. இன்று வரை அதிபர் ட்ரம்ப் அவர்களை கொடூரமான கொலையாளிகள் என்றே கூறி வருவதும் வெள்ளை அமெரிக்க ஆதிக்க மனோபாவம் தான். நாட்டின் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவரே நிறவெறியைத் தூண்டுபவராக இருப்பதும் மீண்டும் பழைய வரலாற்றை நினைவில் கொண்டு வருவதால் உருவாகிய அச்சத்தின் விளைவே இப்பெரும் போராட்டம்.

அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது என 15th Amendmentல் சொல்லப்பட்டாலும் கறுப்பின மக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதிகாரம் என்றும் வெள்ளையர்களிடமே இருக்கும் வகையில் அரசும் சட்டங்களும் சிறுபான்மையினருக்கு எதிராகவே இருந்துள்ளது. 89 ஆண்டுகளுக்குப் பிறகு 1954ல் பள்ளிகளில் இன பாகுபாடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்ற சட்டம் அமலாக்கப்பட்டது. பொது இடங்களில், கல்வி நிலையங்களில் கறுப்பின மக்களைப் பிரித்தாள்வது 1964ல் தான் முடிவுக்கே வந்திருக்கிறது. 1965ல் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் அலபாமா மாநிலத்தில் செல்மா நகரில் இருந்து மோன்ட்கமேரி வரை நடந்த போராட்டத்திற்குப் பிறகே அன்றைய அதிபர் ஜான்சன் கறுப்பர்களுக்கு வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளார். அதற்குப் பின்னும் இனவாதமும் நிறபேதமும் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த , பல வருடப் போராட்டங்களின் வாயிலாகவே தங்கள் உரிமைகள் ஒவ்வொன்றையும் பெற்றிருக்கிறார்கள். சமூக உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங், மால்கம் X மற்றும் பல தலைவர்களையும் படுகொலைகள் செய்ததும் கறுப்பினரை அச்சுறுத்தவே.

இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற கறுப்பின வீரர்களுக்கும் எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை. கல்வி, வணிகம், நிலம் மறுக்கப்பட்ட நிலையில் ஏழைகளாகவே பல ஆண்டுகள் தொழிற்சாலைகளில், தோட்டங்களில் வாழ்க்கையைத் தொடர, போதை மருந்து, கொலை, கொள்ளைக்குற்றங்கள் பெருகும் வாய்ப்புகளை மறைமுகமாக ஏற்படுத்தியதும் வெள்ளையர்களின் அரசே. அலுவலகங்களில் முக்கிய பொறுப்புகளில் இன்றும் இந்தியர்களும் ஆசியர்களும் அமெரிக்க கறுப்பினர்களை விட அதிக அளவில் இருக்கிறார்கள். இந்த தலைமுறையினர் பலரும் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து முன்னேறி வருவது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

இன ஒடுக்குமுறைகள் தகர்க்கப்பட்டு வேற்று நிறத்தவரும் குடியுரிமைப் பெறுவதற்கும் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்கும் 1960களில் நடந்த சமூக உரிமைப் போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. 1965ல் கொண்டு வரப்பட்ட “ஹார்ட் செல்லர் ஆக்ட்” ஆசியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த மக்களுக்கு சட்டபூர்வ குடியேற்ற அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தவர்கள் பலரும் குடியுரிமை பெற்றுள்ளோம்.

கறுப்பர்களுக்கு எதிரான அரசியல் நகர்வுகளை வெள்ளை அதிபர்கள் பலரும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் துல்லியமாகத் திட்டமிட்டு கையாண்டிருக்கிறார்கள். கறுப்பர்கள் என்றாலே கொள்ளையர்கள், கொலையாளிகள், தீங்கு விளைவிப்பவர்கள், படிப்பறிவு இல்லாத முரடர்கள் என்ற எண்ணத்தை அரசியல் வாயிலாக இன்று வரையில் எவ்வாறு வெற்றிகரமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை “13th” வரலாற்று ஆவண திரைப்படத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.

கறுப்பினத்தவரின் உழைப்பால் எழுந்த வெள்ளை மாளிகையில் 2008ல் ஒபாமா அதிபராக பதவி ஏற்ற நாளில் கறுப்பின சமூகம் தங்களுக்கான அங்கீகாரமும் மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவும் நிறைவேறிவிட்டதாகவே கொண்டாடினார்கள். 1971ல் அதிபர் நிக்சனால் கொண்டு வரப்பட்ட “War on Drugs” சட்டம் ரீகன், (சீனியர்) புஷ், கிளிண்டன், (ஜூனியர்) புஷ் அதிபர்களைத் தொடர்ந்து ஒபாமா ஆட்சிக்காலத்திலும் கறுப்பின மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 2010ல் ஒபாமாவின் “Fair Sentencing Act” சிறு நிவாரணம் அளித்திருந்தாலும் தனியார் சிறைகள் இயங்க, சிறுபான்மையினரைக் கைது செய்வதும் சிறு குற்றங்களுக்கு பெருந்தண்டனையும் என சமூக அநீதி தொடர்கிறது.

2017ல் அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் ஆதிக்க வெள்ளை அமெரிக்க மனோபாவத்துடன் நிற வெறியைத் தூண்டும் விதத்தில் அறிக்கைகள் விடுவதும் காவல்துறையினரின் வன்முறைகளுக்கு ஒத்துழைப்பதும் கறுப்பின மக்களின் வாழ்க்கையில் அச்சத்தை ஏற்படுத்தியதன் தாக்கமே மீண்டும் போராட்டங்களாக உருவெடுத்திருக்கிறது. அடிமைகளாக இந்நாட்டிற்கு வந்த நாட்களிலிருந்து தொடரும் தாக்குதல்களுக்கு நிவாரணமும் நீதியும் பாதுகாப்பும் கிடைப்பதற்காகப் போராடும் மக்களுடன் இன்றைய தலைமுறையினர் இணைந்து செயல்படுவது பாராட்டப்பட வேண்டியது.

சமீபத்திய போராட்டங்களின் தீவிரத்தையு ம் மக்களின் உணர்வுகளையும் கோபத்தையும் புரிந்து கொண்ட மாநில, உள்ளூர் அரசுகளும் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டு வர தீர்மானித்திருக்கிறது. பல மாநிலங்களும் காவலர்கள் எதிராளியின் கழுத்தை நெரித்து விசாரணை நடத்துவதை தடை செய்திருக்கிறது. காவல்துறைக்கு ஒதுக்கும் வருடாந்திர நிதியில் சிறு பகுதியை அத்துறையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமூக சேவைகளுக்காகவும் செலவிடப் போவதாக நியூயார்க் நகர மேயர் பில் டே பிளாசியோ உறுதி அளித்துள்ளார். கறுப்பர்களின் உணர்வுகளைப் புண்படுத்ததும் ஆதிக்க மனோபாவ வெள்ளை அமெரிக்கர்களின் சிலைகள் அலபாமா, டென்னெசீ, விர்ஜினியா மாநிலங்களில் இருந்து அகற்றப்படுகிறது. இன சார்பு கொண்டு தவறு செய்யும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கைகள், அவர்களை கண்காணிக்க தேசிய பதிவுச் சட்டங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது நாடு தழுவிய இப்போராட்டங்களுக்கு கிடைத்த சிறு வெற்றிகளாகும்.

தன்னுடைய ஆட்சியில் தான் கருப்பு அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் வன்முறைப் போராட்டம் செய்யும் குண்டர்களை காவல்துறை தண்டிக்கும் எனவும் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளதில் பலருக்கும் அதிருப்தியே. இன்று வரையில் காவல்துறையினரின் அத்துமீறலையும் இனவெறியையும் கண்டிக்காததும் போராட்டங்கள் தொடர்வதற்கு காரணமாக உள்ளது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவேன் என்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஐம்பது நாடுகளில் நடந்த ஊர்வலங்களும் உள்நாட்டில் கருப்பு அமெரிக்கர்களின் கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு மக்கள் தரும் பேராதாரவும் நிச்சயமாக காவல்துறையில் மாறுதலைக் கொண்டு வரும் என்ற சிறு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. இது கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் நடக்கும் போராட்டம் மட்டுமே அல்ல. சிறுபான்மையினருக்கும் வெள்ளையர்களுக்கும் நடக்கும் ஆதிக்க யுத்தம். குடியுரிமை பெற்ற அனைவரும் அமெரிக்க கறுப்பின வரலாற்றைத் தெரிந்து கொள்வதும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதும் அனைவரின் கடமை என்பதே என் எண்ணம்.

இன்று அரசியல், கல்வி, மருத்துவம், மற்றும் அரசுப்பணியிடங்களில் வெகு சில கறுப்பின மக்களே பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள். அரசின் கல்விச்சலுகைகள்

மூலம் படிப்பு, பொருளாதாரத்தில் முன்னேறி எதிர்கால தலைமுறையினரை போதைமருந்து, கொலை, கொள்ளை சமூக விரோதிகளிடமிருந்து காத்து நாட்டில் சம உரிமை பெற்ற குடிமக்களாக உயர்த்தும் நாளில் வரலாற்றுப் போராட்டங்களும் அர்த்தமுள்ளதாகும்.

மார்ட்டின் லூதர் கிங்-ன் கனவும் நிறைவேறும்.

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...