Friday, December 6, 2019

நடிகையர் திலகம்

திரையில் தோன்றும் தங்களது ஆதர்ஷ நடிக , நடிகையைர் பிம்பங்களின் மேல் தோன்றும் தீராக்காதல் நடிப்பையும் மீறி அவர்கள் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளிலும் ஒன்றிட அதிதீவிர ரசிகர்களால் மட்டுமே முடியும். சிவாஜி, எம். ஜி.ஆர் காலந்தொட்டு நடிகர்களைப் பற்றின தகவல்களை அறிந்து கொள்வதில் இருந்த நாட்டம் இன்று வரை தொடருவதும் இன்றைய சமூக வலைதளங்களில் ஒத்த ரசனையுடையவர்கள் எதிராளியைக் கலாய்த்து காய்ச்சு எடுக்கும் வரை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆண்களின் திரை உலக ராஜ்ஜியத்தில் சில பெண் நடிகைகளும் கோலோச்சிய காலத்தில் தெலுங்கு, தமிழ் என இரு மாநிலங்களிலும் தனது இயல்பான வசீகர நடிப்பால் பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைத் திரைப்படமாக தெலுங்கில் 'மகாநடி' என்ற பெயரிலும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளிவரப் போவதாக வந்த செய்தி அறிந்த நாளில் இருந்து அந்தப் படத்தைக் காண ஆவலுடன் இருந்தவர்கள் பலர். அதனைத் தொடர்ந்து வந்த செய்திகளும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளும் இத்திரைப்படத்தினைப் பார்க்கும் ஆவலைத் தூண்ட, நடிகையர் திலகம் திரையிடப்படாத இடங்களில் தெலுங்கு மகாநடியையாவது பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்தோரில் நானும் ஒருத்தி.

நமக்குத் பிடித்த ஒருவரை நினைத்தவுடன் அவர் நம்முள் ஏற்படுத்திய பாதிப்புகளின் பிரதிபலிப்புகள் நம்மை அறியாமலேயே நினைவிற்கு வரும். சாவித்திரி என்றவுடன் பலருக்கும் பாச மலரில் வந்த அன்புத் தங்கையாக, களத்தூர் கண்ணம்மாவின் தவிக்கும் தாயாக, பாத காணிக்கையின் அன்பின் திருவுருவமாக, மஹாதேவியின் அரசியாக, மாயாபஜாரின் அழகு காதலியாக, நவராத்திரியில் நடிகர் திலகத்திற்கு இணையாக, ஜெமினி கணேசனின் ரீல் காதலியாக  நடித்த படங்களில்  பலவித உணர்ச்சிகளை அழகாக வெளிக்காட்டி அருமையாக நடித்து மக்களின் மனதில் இன்றும் குடியிருப்பவர் நடிகை சாவித்திரி .

வீட்டுக்கருகில் இருந்த  திரையரங்குகளில் பார்த்த பழைய படங்களில் அதிகம் சாவித்திரி நடித்த படங்களே. மாயா பஜாரில் பெண் உடலில் புகுந்த ரெங்காராவாக அதகளம் பண்ணி இருந்த காட்சிகள், பாச மலரில் அண்ணன் மேல் அதிக அளவில் பாசம் கொண்ட தங்கையாக அந்த ஒரு  பாடலில் அவர் தேம்பி அழுது  பல அக்கா, தங்கைகளுக்குத்  தங்கள் அண்ணன் தம்பிகளை  நினைத்து  கண்ணீர் வர,  உடல் பெருத்திருந்தாலும் திருவிளையாடலில் பார்வதியாக , மகாதேவியில் எம்ஜியாருடன் அரசியாக, பாத காணிக்கையில் அமைதியான குணவதியாக, களத்தூர் கண்ணம்மா, கற்பகம், பாவ மன்னிப்பு  என்று அவர் படங்கள் நீண்டு அவர் கோமாவில் மரணித்த செய்தி வரை நினைவிலாட,

தமிழில் 'நடிகையர் திலகம்' படத்தைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்து தெலுங்கில் வெளியான 'மகாநடி'யைப்  பார்க்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலை. அம்மா காலத்திய நடிகை என்றாலும் எங்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகை. அதனால் சாவித்திரியின் வாழ்க்கையை எப்படிப் படமாக எடுத்திருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகம். சப்டைட்டிலுடன் படத்தைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை. தாய் பாஷையில் பேசும் பல சொற்கள் தெலுங்கிலிருந்து வந்திருக்கிறதெனவும் அறிந்து கொண்டேன்.

படத்தின் டைட்டில் காட்சிகளும்  பின்னணி இசையும் பழைய படத்தினைக் காணப் போகும் சூழலுடன் ஆரம்பிக்க, முதற் காட்சியே அவரை யார் என்று தெரியாமல் மருத்துவமனையில் தரையில் கிடத்தும் காட்சியில் 'உச்' கொட்ட வைத்து ஆரம்பித்தது. துள்ளித்திரியும் குழந்தைப்பருவ காட்சிகளில் தந்தையை நினைத்து ஏங்கும் குழந்தையாகவும், துறுதுறுவென பேசிக்கொண்டே இருக்கும் இளம்பெண்ணாக நடனம், நாட்டியம், நாடகம் என வசீகரமான  வெகுளிப்பெண்ணாக இருந்திருப்பதாக தெரிகிறது. பட வாய்ப்புகளுக்காக சென்னைக்கு வருபவரின் முகத்தில் தெரியும் ஆச்சரியங்கள், ஜெமினி கணேசனின் அறிமுகம், அவர் எடுத்த படம் ஒன்று பத்திரிகையில் வெளியாகி அதன் மூலம் எல்.வி.பிரசாத் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வசனம் சரியாக பேசத்தெரியாத பெண் நடிக்க லாயக்கில்லை என்று அவரை நீக்கி பின் வேறொரு படத்தில் அப்படிச் சொன்னவரே இவரை வைத்துப் படம் எடுக்க, வசனங்களில் அதன் உச்சரிப்புகளில் நடிப்பில் அவர் செலுத்தும் அக்கறையில் அவர் ஒரு பெரிய நடிகையாக நட்சத்திரமாக உலா வருவார் என பெரிய திரைப்பட ஜாம்பவான்கள்  ஆருடம் சொல்லியது அவர் உழைப்புக்கும் நடிப்பிற்கும் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்!


தந்தையின் அன்பிற்கு ஏங்கியவருக்கு நடிக்க, பேச, கார், குதிரை ஓட்ட என்று ஜெமினிகணேசனின் நெருக்கத்தில் அவருடன் காதலாகிப் போனாலும் ஏற்கெனவே திருமணமானவர் என்ற செய்தி கேட்டு கலங்கி நிற்க, யாருக்கும் தெரியாமல் ஜெமினி கட்டிய தாலியுடன் சில நாட்கள், பின் தன் அன்னை, வளர்த்த தந்தை, பெரியம்மா சொந்தங்களை விட்டு ஜெமினியின் முதல் மனைவி வீட்டில் ஓரிரவில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து அவருக்கான வளர்ச்சியில் பங்களா, நகைகள் என்று ஆடம்பரமாக வாழ்ந்தாலும் பிறருக்கு உதவுவதில் தயங்காத குணம் என்பதற்கு சாவித்திரியும், மகளும் அணிந்திருந்த நகைகளை இந்திய அரசாங்கத்திற்கு அளித்து தன்னுடைய பரந்த மனப்பான்மையையும் தாய்நாட்டின் மேல் கொண்டிருந்த அக்கறையையும் தன்னுடன் பணிபுரியும் தொழிலார்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் நம்பி தன் சொத்துக்களை இழந்தது என்று அவருடைய தயாள குணத்தைப் படத்தில் காட்டி இருந்தார்கள்.

காதலாகி கசிந்துருகி ஜெமினி கணேசனுடனான வாழ்க்கை செல்வச்செழிப்புடன் வளர, தமிழ் தெலுங்குப் பட உலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து வெற்றி பெற்று அதே பிரபலத்தால் ஏற்படும் மனத்தாங்கலில் தொடங்கி ஜெமினி கணேசனின் பெண் சபலத்தால் பிரிய நேர்ந்து அத்துயரை கடக்க அவரிடம் சேரும் குடிப்பழக்கம் மெல்ல மெல்ல அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட...

நாற்பத்தைந்தாவது வயதில் செல்வங்களையும் இழந்து உறவுகளின் போர்வையில் வலம் வந்து தன்னை ஏமாற்றியவர்களின் துரோகத்தையும் ஜீரணிக்க முடியாமல் தன்னை அழித்துக் கொண்டே தன்னுடைய முடிவை நோக்கிச் சென்று  பத்தொன்பது மாத காலம்   மீண்டு வர முடியா கோமாவில் முடிந்த அவருடைய வாழ்க்கை...பலரையும் கண்கலங்க வைக்கிறது!

திரைத்துறையின் பல உயரிய விருதுகளைப் பெற்றிருந்தாலும் ரசிகர்களின்  உள்ளங்களில் இன்றும் கொலு வீற்றிருக்கும் நடிகையர் திலகம் சாவித்திரியின் பிறந்தநாளாம் இன்று. ம்ம்ம்ம்ம்... பெயரைக் கேட்டாலே நிழலாடும் அந்த அழகிய பாந்தமான முகம்...

"பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் எல்லாமுமே இருக்கிறது!"

தண்ணிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர்தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்...


















ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...