Saturday, June 27, 2020

Misaeng: Incomplete Life


முதல் முறையாக நான் பார்த்த காதல் கதையாக இல்லாத வேறொரு கதைக்களம் "Misaeng: Incomplete Life". அலுவலகத்தில் குழுக்களிடையே நடக்கும் அரசியல், பயிற்சிக்கு வந்த இளம்பட்டதாரிகள் பணிபுரியும் இடத்தில் பெரும் அனுபவங்கள், நிர்வாகத்தின் குளறுபடிகள், அறிவாளியாக, திறமைசாலியாக இருந்தாலும் பெண்களை மதிக்காத ஆண்கள் என்று நாம் காணும் நிகழ்வுகளைக் கொண்டு நகரும் மிக அழகான தொடர்.

கனவுகளுடன் இளம் கதாநாயகன். சாந்தமான எல்லோருக்கும் நல்லதையே நினைக்கும் புஜ்ஜி பாய். கியூட் 😍 கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான முகமும் நடிப்பும். மேலதிகாரியாக நடித்தவருக்கு நிஜமாகவே ரத்தக் கொதிப்பு வந்திருக்கும் அப்படியொரு நடிப்பு! பலரும் சபாஷ் போட வைக்கிறார்கள்.

நகரத்தில் நடக்கும் கதை. அலுவலகத்தின் பின்னால் இருக்கும் தோட்டமும் மாடியும் அழகு. பிரச்சினகள் வரும் பொழுது அங்கே தான் கூடுகிறார்கள். அனைத்துக் கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருந்தார்கள்.

மேலிடத்து சிபாரிசின் மூலம் பயிற்சிப் பெற வந்த இளைஞனைத் தன்னை வேவு பார்க்க வந்ததாக தவறாகப் புரிந்து கொள்ளும் மேலதிகாரி அவனை அவமானப்படுத்த, பயிற்சி பெற வந்திருக்கும் சக பட்டதாரிகளின் கிண்டலுக்கும் கேலிக்குள்ளானாலும் அவர்களிடையே தோற்காமல் வெற்றிப் பெற வேண்டும் என்று முயற்சித்து இறுதியில் வெற்றியும் பெறுகிறான். நிறுவனத்தை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நெருக்கடியிலிருந்து மீட்டிருந்தாலும் கதாநாயகன் வேலையில் நிரந்தரமாக முடியாத நிலை. கடைசி நாள் வரை தன் வேலைகளைத் திறம்பட செய்து முடித்து 'உச்' கொட்ட வைத்து விடுகிறான். சக ஊழியர்களும் மேலதிகாரியும் தன்னை அங்கீகரித்து விட்டார்கள் என்பதே அவனுடைய வெற்றியாக இருக்கிறது.

கல்லூரி முடிந்த அடுத்த வாரமே சிபாரிசில் வேலைக்குச் சேர்ந்த என்னிடம் முசுடுத்தனமாகவே இருப்பார் அந்த மேலதிகாரி. வேலை எதுவும் சொல்லியும் கொடுக்காமல் கட்டுக்கட்டாக ஃபைல்களைக் கொடுத்து படிக்கச் சொன்னார். அங்கிருந்த ஐவரில் நான் மட்டுமே பெண். என்னோடு வேலை செய்த மற்றொரு இளைஞன் கல்லூரியில் என்னுடைய சீனியர் மாணவன். அன்று தான் அவரும் என் தாய்மொழி பேசுபவர் என்று அறிந்தேன்! வேலையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுத் தந்தது அவர் தான். ஆனால் என் மேலதிகாரி மட்டும் என் மேல் புகார் பட்டியல் வாசித்துக் கொண்டே இருந்தார். நானும் பொறுத்துப் பார்த்தேன். நேராக நிர்வாகத்தலைவரிடம் சென்று வேலையும் கொடுக்காமல் புகார் சொல்லும் அதிகாரியைப் பற்றி நான் புகார் செய்ய, அவர் வந்து கண்டித்த பிறகே கொஞ்சம் அடக்கி வாசித்தார். 50-60 பேர் வேலை செய்யும் அலுவலகத்தில் நான்கே பெண்கள் தான். என்னுடைய துறையில் நான் மட்டுமே. அலுவலக அரசியல் எனக்குப் புதிது. எதையும் கண்டு கொள்ளாமல் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தாலும் சிடுசிடு மனிதர்களைக் கண்டு வெறுத்திருக்கிறேன். காலம் செய்த கோலம்! சிலர் கணவரின் நெருங்கிய உறவினர்களாகி விட்டிருக்கிறார்கள்😊

இன்று வரை அந்த சிடுமூஞ்சி அதிகாரி ஏன் அப்படி நடந்து கொண்டார் என்றே தெரியவில்லை. பிறகு வேறு வேலைக்கு நான் மாறி விட்டேன். அங்கே பெண்களை வேலைக்குச் சேர்த்தால் திருமணம், குழந்தைகள் என்று அடிக்கடி லீவு போடுவார்கள் என்று இத்தொடரில் வரும் வசனத்தை நேரிலேயே கேட்டிருக்கிறேன். வேலைக்கு வரும் பெண்களை ஆண்களுக்குப் போட்டியாக நினைத்த காலம் அது! ஆண்களின் சிந்தனையில் இப்பொழுதாவது மாற்றங்கள் வந்திருக்கிறதா தெரியவில்லை.

அலுவலகத்தைச் சுற்றி நடக்கும் கதை என்றாலும் இத்தொடரில் அதிகமாக குடிக்கிறார்கள். கொரியன் தொடர்களில் கொஞ்சம் உயர ரக உணவகம் என்றால் தனியறையில் கதவு மூடியபடி பெரிய மேஜையில் பரப்பி வைத்திருக்கும் உணவு வகைகள் என்று நன்றாக இருக்கிறது. உணவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்காத தொடர் 😑 நிறைய காஃபி குடிக்கிறார்கள். கண்ணுக்கு உறுத்தாத வெள்ளை, நீல நிற சட்டைகளையே அலுவலகத்திற்குப் போட்டுச் செல்வார்கள் போலிருக்கு. நம்மூர் ராமராஜன் ஸ்டைல் அடர்வண்ணச் சட்டைகள் எல்லாம் பார்க்க முடியவில்லை. சிக்கென்று இருக்கிறார்கள் ஆண்கள்! தொடர்களிலும். குண்டான கொரியன் மக்களைப் பார்பபது அரிதோ?

அலுவலகம் என்பது நாம் கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டதை வைத்து திறம்பட வேலை செய்து நம்மை நிரூபிக்கும் இடமும். அதற்கான தகுதியும் திறமையும் வளர்த்துக் கொள்ள சக அலுவலர்களும், நன்கு புரிந்து கொண்ட மேலதிகாரியும் அமைவது வரம். நமக்கான நண்பர்கள் அமைந்து விட்டால் சொர்க்கம் தான். கதாநாயகனைப் புரிந்து கொண்ட குழுவினரும், மேலதிகாரியும் தொடக்கத்தில் உதாசீனம் செய்தாலும் பின்பு நண்பர்கள் ஆவதும் என சில இடங்களில் கலங்க வைக்க்கிறது இத்தொடர்.

இருபது பாகங்கள் என்றாலும் பழைய நினைவுகளைக் கிளறியதாலோ என்னவோ ரசித்துப் பார்க்க முடிந்தது.

































Wednesday, June 24, 2020

Selma

Amazon.com: Watch Selma | Prime Video

கறுப்பின மக்கள் தங்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றிருந்தாலும் சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகள் அத்தனை எளிதாக கிடைத்து விடவில்லை. ஒவ்வொரு உரிமைகளையும் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வகையில் ஓட்டுப் போடும் உரிமையை எவ்வாறு பெற்றார்கள் என்பதைத் தான் இப்படம் சொல்கிறது.

கறுப்பின மக்களின் சமூக உரிமைகளுக்காக குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் காந்தியின் அறவழிப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார்.  அவருடைய தலைமையில் பல போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. அதில் ஒன்று அலபாமா மாநிலத்தில் செல்மா நகரில் இருந்து மாண்ட்காமெரியை நோக்கி நடைபெற்ற ஊர்வலம். இந்த ஊர்வலத்தின் மக்கள் சக்தியே ஆட்சி செய்பவர்களிடமிருந்து அவர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. வெள்ளை அமெரிக்கர்களின் அதிகார துஷ்பிரயோகங்களையும்  அடக்குமுறைகளையும் மீறி நடந்த மாபெரும் போராட்டத்திற்குப் பிறகே அன்றைய அதிபர் ஜான்சன் கறுப்பின மக்களின் ஓட்டுப்போடும் உரிமைக்கான சட்டத்தை இயற்றியுள்ளார்.

உரிமைக்கான போராட்டங்கள் வலி மிகுந்தது. பலரின் தியாகமும் தகுதியான தலைவனின் வழிநடத்தலும் போராட்டங்களின் வெற்றிகளுக்கு காரணியாக அமைகிறது. செல்மா ஊர்வலமும் அந்த வகையில் வரலாறு படைத்திருக்கிறது.

இன்று வரையில் தங்கள் சமூக நீதிக்காக போராடும் மக்களைப் புரிந்து கொள்ளவும் அமெரிக்காவின் குடிமக்களாக அதன் வரலாறைத் தெரிந்து கொள்ளவும் இத்தகைய படங்களின் அறிமுகம் நல்லது.  புலம்பெயர்ந்தவர்கள் கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படமும் கூட.

நெட்ஃப்ளிக்ஸ்ல் காணலாம்.

American Son


நான்கே நான்கு கதாபாத்திரங்களுடன் ஒரே ஒரு இடத்தில் நகரும் கதை. படம் முழுவதும் கொட்டும் மழையின் பின்னணி. இரவு மூன்று மணியிலிருந்து காலை விடியும் வரை நான்கைந்து மணி நேரத்திற்குள் நடக்கும் காட்சிகள்.

இன்றைய கால கட்டத்தில் நடக்கும் சமூக நிகழ்வுகளும், பெற்றோரின் பயமும், சொந்த வாழ்க்கையின் ஏமாற்றங்களும், குமுறல்களும், பொதுச்சேவையில் இருப்போரின் நிர்பந்தங்களும் என அழகான வசனங்களுடன் அற்புதமாக நடித்திருந்தார்கள் நான்கு நடிகர்களும்.

ஒரு திரைப்படத்துக்கு அடிப்படையே நல்ல திரைக்கதை. நடிப்பவர்கள் அதனைச் செம்மைப்படுத்துகிறார்கள். இன்று அமெரிக்காவில் நடந்து கொண்டு இருக்கும் நிறவெறிப் ப்ரச்னை அம்மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் பயமும் பதட்டமும் படம் முழுவதிலும் அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

“American Son” நெட்ஃப்ளிக்ஸில் காண கிடைக்கிறது.

Friday, June 5, 2020

சுற்றுப்புறச்சூழல் தினம்

சுற்றுப்புறச்சூலைப் பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஜூன் 5ம் நாள் சுற்றுப்புறச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தை முன்னிட்டு பல நாடுகளிலும் கருத்தரங்குகளும் விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் வாழும் பூமியை வாழ தகாத அளவிற்கு மாசடைய நாமும் காரணமாகிக் கொண்டிருக்கிறோம். மேலைநாடுகள் அதிக சிரத்தையுடன் மாசுக்கட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர முயலும் வேளையில், நம் நாட்டில் அப்படியொரு துறை இருக்கிறதா என்ற கேள்வியும் அதன் அபாயங்களை அறிந்தும் மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என்ற வருத்தமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

நாம் உண்ணும் உணவில், குடிக்கும் நீரிலிருந்து சுவாசிக்கும் காற்றில் கூட மாசு கலந்திருக்கிறது. சுவாசக்கோளாறுகள், நுரையீரல் தொற்றுநோய்கள், மூச்சு விட சிரமப்படுபவர்கள், தோல் வியாதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிச்சென்று மருந்து, மாத்திரை உதவிகளுடன் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். காரணம் தெரிந்தாலும் கையறு நிலை தான். தொழிற்சாலைகள், கால்நடைகள், பெருகி வரும் வாகனங்கள், கழிவுப்பொருட்களால் வெளியேறும் புகைக்காற்றில் நச்சுத்தன்மை கூடி காற்று மணடலத்தை அசுத்தப்படுத்தி வருகிறதென்னவோ உண்மை. எப்படி கட்டுப்படுத்துவது என்பதைத் தான் மனிதர்களின் அறியாமையாலும் பேராசையாலும் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.

கழிவுகளைக் கொட்டி நீர்நிலைகளை மாசுப்படுத்தி அந்த நீரில் விளையும் காய்கறிகளை உண்டு அதனால் ஏற்படும் உடற்சீர்கேடுகள் பல. ஒரு பிளாஸ்டிக் தடையைக் கூட நம்மால் முறையாக செயல்படுத்த முடியவில்லை. ஆதரிக்க இயலவில்லை. அதன் ஆக்கிரமிப்புகள் நீர் நிலைகளில் ஆரம்பித்து விலங்குகளின் வயிற்றில் சென்று அவர்களின் உயிரைக் கொல்லும் வரை நீண்டிருக்கிறது.

அரசை மட்டுமே குறை கூறுவதால் பயனொன்றும் இல்லை. வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தினை முறையாக செய்கிறோமோ? அதுவும் இல்லை. இருக்கின்ற மரங்களையும் வெட்டிப் போட்டுக் கொண்டு பொட்டல் காட்டில் மழைக்காக ஏங்கி நின்று என்ன பயன்? நிலத்தடி நீரை உயர்த்த வேண்டிய அனைத்து வழிகளையும் அதிகரித்து வரும் வறட்சியும், நீளும் கோடையும், உஷ்ணக்காற்றும், பருவம் தவறிப் பொழியும் மாரியுமாக இயற்கை நம்மை எச்சரித்தாலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக சுயலாப சிந்தனையுடன் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.

வட அமெரிக்கா வந்த புதிதில் பிளாஸ்டிக் கப்புகளில் தயிர், வெண்ணெய், ஜூஸ், பால் என்று கடைகளில் வரிசையாக அலங்காரமாக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன். மதுரையில் இருந்த வரையில் தயிர் வாங்குவதெல்லாம் பாத்திரத்தில் தான் அதுவும் அன்றன்று. இப்பொழுது தயிரை வீட்டிலேயே தோய்க்கிறார்கள். பால் கூட கண்ணாடி போத்தல்களில் வந்து கொண்டிருந்தது பிறகு பாக்கெட் பால் என்று பிளாஸ்டிக் பைகளில் வர ஆரம்பித்து விட்டிருந்தது. அம்மா காய்கறி வாங்கி வர மஞ்சள் பையும், வயர் கூடையும் தான் வைத்திருந்தார். நானும் கூட ஊரில் இருந்த வரை அப்படித்தான் இருந்தேன் . இங்கோ பெரிய பெரிய பிளாஸ்டிக் டப்பாக்களில் பால், தயிர்... என்று பிளாஸ்டிக் சகலத்திலும் வியாபித்திருக்கிறது. காய்கறிகளை, பழங்களை வாங்கி பிளாஸ்டிக் பையில் போட குறைந்தது ஐந்தாறு பைகள் தேறும். பால், தயிர், வெண்ணை, சீஸ், பிரட், முட்டை எல்லாமே பிளாஸ்டிக் உறைகளில். இவை எல்லாவற்றையும் போட்டு எடுத்துச் செல்ல மேலும் சில பிளாஸ்டிக் பைகள். ஒரு குடும்பம் மட்டுமே அத்தனை பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு வாரத்தில் குப்பையில் சேர்க்கிறதென்றால்...ஒரு தெரு, ஒரு நகரம், ஒரு மாநிலம், ஒரு நாடு??? தலையைச் சுற்றுகிறது.

ரத்தப் பரிசோதனைக்கூடங்களில், மருத்துவமனைகளில், விமான நிலையங்களில், உணவகங்களில் ... கேட்கவே வேண்டாம். அளவே இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்கள். இன்று கோவிட்19ஆல் முக கவசங்களும், கையுறைகளும் உலகம் முழுவதும் புழங்க, எங்கு தான் இல்லை? பார்க்கும் இடங்களில் எல்லாம் இந்த மக்காத குப்பைகள் தான்! எப்படி ஒழிப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நம் பங்கிற்கு மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் முனைப்போடு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தாலன்றி எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நம்மால் முயன்ற வரை சிறு சிறு விஷயங்களில் கவனம் கொண்டால் பிளாஸ்டிக் குப்பைகளை முடிந்தவரை தவிர்க்கலாம். முறையாக மறுசுழற்சி செய்யலாம்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டங்களில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு ஆறுதலாக இருந்தது. கண்டிப்பாக அனைத்து மாவட்டங்களும் முறைப்படுத்த வேண்டிய ஒன்று. இங்கும் கலிஃபோர்னியாவில் சிறிது முயற்சி செய்கிறார்கள். நியூயார்க்கிலும் தடை கொண்டு வந்த பிறகு நிம்மதியாக இருக்கிறது.

நாம் தான் சுற்றுப்புறச்சூழலை மாசுப்படுத்தி இயற்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையும் நம் வருங்கால சந்ததியினரைப் பற்றின கவலையும் ஏதுமின்றி பொறுப்பற்றுத் திரிகிறோம். தமிழ்நாட்டு அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்து செயல்படுத்துவதும் மக்கள் நம் கையில் தான் உள்ளது.

சமீபத்திய விமான பயணத்தின் பொழுது தான் எத்தனை நெகிழிப்பொருட்களை நம்மை அறியாமல் பயன்படுத்தி மக்காத குப்பைகளை உருவாக்க நாமும் காரணியாக இருக்கிறோம் என்பதை நினைக்கும் பொழுது குற்றவுணர்ச்சியாக இருந்தது. தண்ணீர் கேட்டால் ஒரு ப்ளாஸ்டிக் கப்பில் கொடுத்தார்கள். ஒவ்வொரு முறையும் புதுப்புது கப்பில். இல்லையென்றால் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில். விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனைகள் முடிந்த பிறகு தண்ணீர் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொள்வதால் என்னால் இப்போதைக்கு இந்த ஓரிரு ப்ளாஸ்டிக் கப்களை மட்டுமே தவிர்க்க முடிகிறது.

அமெரிக்காவிற்குள் பயணிக்கும் பொழுது கடலை, ரொட்டி என்று பிளாஸ்டிக் உறைக்குள் இருக்கும் சிற்றுண்டி கொடுப்பார்கள். தண்ணீர் குடிக்க ஆளுக்கொரு ஒரு கப். வாய் துடைத்துக் கொள்ள சிறு பேப்பர் டவல். இந்த மூன்று குப்பைகளையும் அள்ள பெரிய பிளாஸ்டிக் குப்பை பை. இதைத்தவிர, பயணியர் வாங்கி குடித்த கோக், பெப்சி, மேற்படி ஐட்டங்களுக்கான அலுமினிய கேன்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள். கழிவறையில் பயன்படுத்தும் பேப்பர் பொருட்கள். பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக், பேப்பர் குப்பைகள். சில மணி நேர பயணங்களில் நம்மை அறியாமலே அத்தனை குப்பைகளைச் சேர்த்து விடுகிறோம்.

நீண்ட நெடுந்தூர பயணங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. விமானம் ஏறிய சில மணிநேரங்களில் குடிப்பதில் இருந்து உணவிற்காக வரும் ப்ளாஸ்டிக் டிரேயில் சிறிது சிறிதாக ஏகப்பட்ட நெகிழிப் பொருட்கள். உணவைச் சாப்பிடும் முள் கரண்டி, கத்தி, கரண்டி எல்லாம் மறு சுழற்சி செய்ய முடியாத பொருட்களே! உணவிற்குப் பின் சிற்றுண்டி, மீண்டும் காஃபி, டீ, மதுபானங்கள் என்று ஒரு விமானப் பயணத்தில் மட்டுமே எத்தனை குப்பைகளை நாமே உருவாக்குகிறோம்? ஒரு நாள் மட்டுமே எத்தனை விமானங்கள் பறக்கிறது? எத்தனை மனிதர்கள் பயணிக்கிறாரகள் உலகமெங்கும்? நினைத்தாலே குப்பை உலகம் கண்ணில் மிதக்கிறது :(

ஒவ்வொரு விமானப் பயணியும் சராசரியாக 1.4கிலோகிராம் குப்பைகளை தங்கள் பங்கிற்கு சேர்ப்பதாகவும், உள்ளூர் விமானக் குப்பைகள் சில மட்டுமே மறுசுழற்சிக்குச் செல்வதாகவும், வெளிநாட்டு விமானக் குப்பைகளை பாதுகாப்பு மட்டும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் அடிப்படையில் எரித்து விடுவதாகவும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. எரிப்பதால் விளையும் தீமைகளையும் நாம் புறக்கணித்து விடுகிறோம் :( பல நாடுகளும் விமானத்தில் கொண்டு செல்லும் மீத உணவுகளையும் அதன் கொள்கலனைகளையும் கூட எரித்து விடுகிறதாம்.

குறைவான விலை, பயன்படுத்த எளிது, சுகாதாரம் போன்ற காரணங்களுக்காக நெகிழிப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் அதன் பின்விளைவுகளை நாம் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக எவர்சில்வர் கரண்டி, முள்கரண்டி, கத்தியை பயன்படுத்த முடியாது. கனமான பொருட்களால் எடை அதிகமாக எரிச்செலவும் கூடி விடுவதால் விமான நிறுவனங்களுக்கு ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடே எளிதாக இருக்கிறது.

உலக வெப்பமயமாதல் பற்றின விழிப்புணர்வு காரணமாக மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தலாமே என சிலர் விமான நிறுவனங்களைக் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். பயன்படுத்திய கழிவுகளை அகற்றுவதும் அவ்வளவு எளிதல்ல. அதற்கும் விமான நிறுவனங்கள் அதிக விலையைக் கொடுக்கிறது.

இதற்கு என்ன தான் தீர்வு?

விமான நிறுவனங்களும் உலக வெப்பமயமாதலைக் கருத்தில் கொண்டு
சில நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டினைக் குறைக்கவோ, மறுசுழற்சி செய்யவோ முனையலாம். பயணிகளும் நிறுவனங்களிடம் முறையிடலாம். மாற்றம் எங்காவது ஓரிடத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். இயற்கையை அழிக்கும் நாம் தான் அதற்கான தீர்வையும் வருங்கால சந்ததியினருக்காக கண்டடைய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.

மக்காத குப்பைகளுடன் வாழ்ந்து வரும் நமக்கு அதன் அழிவுகள் ஏற்படுத்தும் அபாயங்கள் உணரும் காலமும் நெருங்கி விட்டதை அறிவோமா?

விழிப்புணர்வும் அடுத்த தலைமுறையின் மீது அக்கறையும் இருந்தால் மட்டுமே நம்மால் முடிந்தவரை இயற்கையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளையும் வாழ வைக்க முடியும்.

நம்மை அழிவிலிருந்து காத்து வந்தவைகளை அழித்துக்கொண்டே வருகிறோம் எந்தவொரு பிரக்ஞையில்லாமல்! கடமையை உணர்ந்து பொறுப்பாக செயல்பட வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது. கடக்க வேண்டிய தூரம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதுவரையிலும் காத்திருக்குமா இயற்கை?

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளென பிரித்து மறுசுழற்சிக்கு உதவி இத்தினத்தை முன்னிட்டு பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதைக் குறைக்க முயலுவோம்.

நம் பங்கிற்கு நாமும் இப்பிரபஞ்சத்திற்கு உபகாரமாக இருக்க முயற்சிப்போம்.

Thursday, June 4, 2020

One Spring Night

கொரியன் டிராமா வரிசையில் அடுத்து நான் பார்த்து ரசித்தது "One Spring Night". சில தொடர்களைப் பார்க்க பார்க்க பிடிக்கும். சில தொடர்களைப் பார்த்தவுடன் பிடிக்கும். ஆரம்பக்காட்சியே வசந்தகால செர்ரி மலர்கள் அடர்ந்த சாலையில் பயணிக்கிறது. அதுவே போதுமானதாக இருந்தது இத்தொடரைக் காண.

குடும்பத்தோடு இணைந்த காதல் கதைக்களம். பெரும்பாலான இந்தியன் அப்பாக்கள் போல பெண்களுக்கு அவர் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க நினைக்கும் அப்பா கதாபாத்திரம். மனைவியிடமும் ஒரே அதிகாரம். பெண்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்காகப்  பேசும் அழகான அம்மா. மூன்று பெண்கள். ஒரு அழகான சுட்டிப்பையன். அவர்களைச் சுற்றி நடக்கும் வாழ்க்கை. இப்படிக்கூட அழகாக ஒரு தொடரை எடுக்க முடிகிறது. ஹ்ம்ம்...

கணவனால் சித்திரவதை செய்யப்படும் பெண் நன்கு படித்து நல்ல வேலையிலும் இருப்பவர். திருமண உறவிலிருந்து வெளிவர நம்மூர் பெண்களைப் போலவே அவருக்கும் அத்தனைப் பிரச்னைகள். மேலைநாடுகள், முன்னேறிய நாடுகளில் கூட பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகம் என்பதை இத்தொடரில் காண முடிகிறது.

பல வருடங்களாக டேட்டிங் செய்பவனிடமிருந்து சிறிது சிறிதாக விலகும் பெண். காதலியை இரண்டாம்பட்சமாக நடத்துவதும் அவள் விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வன்முறையில் இறங்குவதுமாய் அவளைக் காதலிக்கிறேன் என்று சொல்லியே காயப்படுத்திக் கொண்டே இருக்கும் முன்னாள் காதலன்.

பொறுப்பற்ற ஆனால் அன்பான மூன்றாவது பெண்.

இவர்களிடையே தென்றலாய் வருகிறான் கதாநாயகன். ஒரு பெண்ணிடம் தன் விருப்பத்தைச் சொல்லி அவள் விருப்பத்திற்காக காலத்திற்கும் தவமிருக்கும் கதாபாத்திரம். அந்த சிரிப்பழகனே தான் காதல் நாயகன். காதலிக்கு ஒன்று என்றால் எப்படி துடிதுடிக்கிறான்? ச்ச்சோ ஸ்வீட் பாய் 😍

ஒரு குழந்தைக்குத் தந்தை. அவனையா திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? என்னிடம் இல்லாதது அப்படி என்ன தான் அவனிடம் இருக்கிறது என்று எகிறும் முன்னாள் காதலனிடம், அன்பு மட்டுமே அவனிடம் இருக்கிறது அது மட்டுமே போதும் என்று போராடும் நாயகி.  நாயகனிடம் சேர எத்தனை தடங்கல்கள்?

இத்தொடரிலும் நல்ல நண்பர்கள். அருமையான கதைக்களம். அழகான ஒளிப்பதிவு. செர்ரி மலர்கள், பச்சை மரங்கள், செடிகள், கொடிகள் என கண்களுக்கும் விருந்தாக காட்சிகள். பின்னணியில் வரும் பாடல்களும் தாலாட்டுகிறது.

எஸ். கிம்ச்சியும், நூடுல்ஸும் உண்டு😉 குடும்பத்தோடு உணவருந்துகிற காட்சிகள் இல்லாத தொடரகளே இல்லை. பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

குடும்பம், காதல், அழுகை, செண்டிமெண்ட் என இருந்தாலும்
எந்த விகல்பமுமில்லாமல் எவ்வித எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தாமல் இயல்பான காட்சிகளோடு ஆனந்தமாக ஒரு தொடரை அளிக்க முடிகிறது. ஹ்ம்ம்ம்...தமிழ்நாட்டில் தான் அந்த கொடுப்பினை இல்லை😞😞😞

இனி எண்ட தேசம்... சவுத் கொரியா 💖💗💕

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...