Sunday, August 30, 2015

வெள்ளிவிழா கொண்டாட்டம் - 2


இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு என் கல்லூரி நண்பர்கள் ஒன்று கூடும் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் முதல் நாள் நிகழ்வு மதுரையின் புறநகரில் உள்ள ஓர் திருமண மண்டபத்தில் ஏற்பாடாகி இருந்தது. ஆகஸ்ட் மாதத்திலும் அக்கினி வெயிலில் மதுரையே தகித்துக் கொண்டிருந்தது.ஒரு காலத்தில் ஆளரவமே இல்லாத பரவை இன்று பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது ஆச்சர்யமாய் இருந்தது.. ராஜனின் மனைவி சிவபாலாவோடு நான் மண்டபம் போய் சேர்ந்த போது எங்களுக்கு முன்னரே நண்பர்கள் பலர் வந்து சேர்ந்திருந்தனர். நுழைவாயிலில் நுழையும் போதே உற்சாகம் தொற்றிக் கொண்டது. எங்கெங்கும் சந்தோஷம் சுமந்த முகங்கள். பார்த்தவர்கள், பழகியவர்கள், பயந்தவர்கள் என திரும்பின பக்கமெல்லாம் ஆச்சர்யம், உற்சாகம், பெருமிதம்…..மொத்தத்தில் பழைய நாட்களுக்கு திரும்பிப் போன உணர்வு.

தாமோதரனின் மனைவி சுஜாதாவிடம் பேசி விட்டு அப்ளைட் சைன்ஸ் செந்தில்முருகனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். முகநூலில் அறிமுகமான ராஜசேகர்( மெக்கானிக்கல்) வாங்க வாங்க, திகர்தண்டா சாப்பிடுங்க என்று சொல்லவும் தான் அங்கிருந்த பல ஸ்டால்களையும் கவனித்தேன்!

அதற்குள் சிரித்துக் கொண்டே ராஜியும் வந்து சேர வழக்கமான சம்பாஷணைகள்! முகநூலில் தொடர்பிலிருப்பதால் புதிதாக பார்ப்பது போல் இல்லாமல் 'கலகல'வென பேசிக் கொண்டிருக்கையில் ராஜியின் கணவரும் வந்து சேர, அறிமுகம் செய்து கொண்டோம். அந்த நேரத்திற்கே காபி, திகர்தண்டா, இளநீர் ஸ்நாக்குகள் தயாராக இருக்க, பின் என்ன? ஆரம்பிக்க வேண்டியது தான் என்று இளநீரில் ஆரம்பித்தோம் நானும், ராஜியும் :)

பட்டு வேட்டி தழைய தழைய கட்டிக்கொண்டு விருமாண்டி ஸ்டைலில் சரவண குமார்! உமா, ஜெசிந்தா என்று எல்லோரிடமும் பேசி விட்டு இதற்கு மேல் வெயிலில் நிற்க முடியாது, உள்ளே போகலாம் என்று குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்குள் நுழைந்தோம்.

உள்ளே நுழைந்தவுடன் ரெஜிஸ்ட்ரேஷன் முடிந்து மீனாட்சிசுந்தரம் ஹாய் சொல்ல, அவர் மனைவியுடனும் பேசி விட்டுத் திரும்பினால், அதோ! என் கேங்!

கன்னக்குழி சிரிப்புடன் அருணாதேவி ஸ்வர்ணாஆஆஆ என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள். உமா தேவி, சுகந்தி, டெல்லா  யாரும் மாறவேயில்லை. நான் மட்டும் தான் மாறி விட்டேனோ?? மேகலா அன்று பார்த்த அதே முகம்!  சதீஷ், கிஷோர், ஸ்ரீனிவாசன், குகராஜன், சரவணன், முரளி, ராதா...காலம் அவர்களை மாற்றவில்லை போலும்! வரதகணபதியை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

பேசிக்கொண்டிருக்கும் பொழுது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே?? ஹே! ராஜசேகர்! அமெரிக்காவில்சந்தித்துக் கொள்ளவே அரிதானஆள் சர்ப்ரைஸாக வந்து நிற்க, அட! அப்ப நீ சொன்னது உண்மை தான் போலிருக்கே! மூன்று நாள் மட்டும் இந்தியா வருகிறேன் அதுவும் நிகழ்ச்சிக்காக, அதுவும் ராஜன் இந்த நிகழ்ச்சிக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார் என்று தெரிந்ததால் ... என சொல்லும் போது கூட, ஆமா, போன மாதம் விடுமுறைக்கு இந்தியாவுக்குப் போனவன் திரும்ப இந்தியாவுக்கா?? நீ அங்க வந்ததற்கப்புறம் தான் நம்புவேன் என்று சொல்லி இருந்தேன். இந்நிகழ்ச்சிக்காக மேகலாவும் ஒரு வாரத்திற்கு வந்திருந்தாள்.
அனைவரையும் பார்த்ததில் ஒரே குஷியாகி விட்டது எனக்கு.  'பளிச்'சென்றிருந்த கம்ப்யூட்டர் சைன்ஸ் குரூப்புடன் ஐக்கியமாகி எப்ப வந்தீங்க, யார் வந்திருக்கா? வராதவர்களை நினைத்து அவர்களும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பேசினோம்.

இந்தியாவில் இருந்து கொண்டே பலராலும் வர முடியாமல் போனது துரதிர்ஷ்டமே!

காலங்கள் மாறி பலரும் பலவிதத்திலும் உருமாறி இருந்தாலும் சிலர் மட்டும் அதே இளமைத் தோற்றத்துடன் இருந்தார்கள்!!!  முகநூல் நண்பர்களுடன் நேரில் அளவளாவியது மகிழ்ச்சியாக இருந்தது.

எண்பதுகளின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதையும் மீறி நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சியின் குரல்கள் அரங்கம் முழுவதும்! நல்ல காற்றோட்டத்துடன் வெளிச்சமான பெரிய அரங்கம் தான்! அலங்கரிக்கப்பட்ட வட்ட மேசை, நாற்காலிகள். சிலர் குடும்பத்துடன் வந்திருந்தாலும் பெரும்பாலோர் தனியாகவே வந்திருந்தார்கள். குடும்பத்துடன், துறை வாரியாக படங்களை எடுக்க ஏற்பாடுகள் செய்திருந்தார்கள் .

இதற்கிடையில் கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஒரு தத்துபித்து நிகழ்ச்சியும் மேடையில் அரங்கேறிக் கொண்டிருந்தது. அதையும் வேறு வழியில்லாமல் வேடிக்கை பார்த்தார்களோ அல்லது விரும்பி பார்த்தார்களோ ஒரு கூட்டம் ரசித்துக் கொண்டிருந்தது :(

தங்கள் வாழ்க்கைத்துணைக்காக வந்திருந்தவர்கள், மகளுடன் வந்த பெற்றோர்கள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டும், மற்றவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டும் இருக்க, குழந்தைகள் சிலர் அமைதியாகவும் சிலர் ஓடிக்கொண்டும் இருந்தார்கள்.

வெளிநாட்டிலிருந்து வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்கு வந்தவர்களை மேடையேற்றி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் குமரேஷிடம் கலைநிகழ்ச்சிகள் நடத்தியவர் வேடிக்கையாக கேட்கிறேன் பேர்வழி என்று நீங்கள் காதலித்து இருக்கீர்களா என்றவுடன் பார்க்கணுமே, குமரேஷை?!!! மீண்டும் அவர் குமரேஷிடம், கல்லூரியில் படிக்கும் போது நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என கேட்கவும் கூட்டத்திலிருந்து குடும்பத்தில் குழப்பத்தை பண்ணிடாதீங்க என சத்தம் வர...குமரேஷ் 'நோ' சொல்லிவிட்டு அறிமுகப்படுத்திக் கொண்டவுடன், அடுத்தவரிடமும் அதே கேள்வியை அந்த வடிவேலு வேடம் போட்டவர் கேட்க, ராஜன் மேடைக்கு வந்து இந்த மாதிரி கேள்விகள் வேண்டாம், இனி அவர்களாகவே அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும் என்று வடிவேலுவை மேடையிலிருந்து கீழிறக்கி விட்டார்.

பிறகு கணினியியல் துறை மாணவ, மாணவிகளின் அறிமுகப்படலம் ஆரம்பமாயிற்று. சிவில் துறையிலிருந்து நிறைய மாணவிகள் வந்திருந்தார்கள். உமா நிறைய மெனக்கெட்டிருந்தது தெரிந்தது. எலெக்ட்ரானிக்ஸ் துறையில் தான் குறைந்த அளவில் மாணவ, மாணவியர் வந்திருந்தனர். எலெக்ட்ரிக்கல் துறையில் வெகு சிலரை மட்டுமே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது! மெக்கானிக்கல் துறையில் நிறைய மக்கள் வந்திருந்த மாதிரி இருந்தாலும், இரு வகுப்புகளில் இருந்து வந்தவர் எண்ணிக்கை குறைவு தான் என்று நினைக்கிறேன். ஒரு வழியாக அறிமுகப்படலம் முடிந்தது.

சிலர் மேடையேற அநியாயத்திற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சில கற்றறிந்தவர்களிடம் எப்படி தன்னடக்கத்துடன் இருப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டேன் மனதில்! என்ன ஒரு தன்னடக்கம்!

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜன், தாமோதரன், அரவிந்தன், கேப்டன் மேடைக்கு வர அனைவரும் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். ராஜன் தன் மனைவிக்கும், மகள்களுக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொண்டு அவர்களின் ஆதரவால் தான் தன்னால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய முடிந்தது என்று அவர்களுக்கும் நன்றி கூறி, வந்திருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

தொடர்ந்து குழந்தைகளுக்கு வாட்ச் பரிசாக வழங்கப்பட, குதூகலாத்துடன் வாங்கிக் கொண்டார்கள். மீண்டும் கலை நிகழ்ச்சிகள் தொடர, நண்பர்களுடனான பேச்சுக்கள் மீண்டும், சிலர் வெளியில் சென்று ஸ்நாக்ஸ் சாப்பிட...நாங்களும் ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

மதிய உணவிற்கு கீழே செல்லலாம் என்றவுடன் மொத்த கூட்டமும் இறங்கி கீழ்தளத்திற்குச் சென்றோம். பல வகையான சைவ, அசைவ உணவு வகைகள் இரு மூலைகளில் அழகாக வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவரவர் வேண்டியதை வாங்கிக் கொண்டு சாப்பிட அமர்ந்தோம். சுவையான நல்ல சாப்பாடு! திருப்தியாகச் சாப்பிட்டோம். ஒன்றுமே சாப்பிடாத ராஜன் அனைவரிடமும் சாப்பிட்டாச்சா, நல்லா இருந்துச்சா...என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

உமா, சாருசீலா, சாருமதி, ராதாவுடன் சிறிது நேரம் பேசியதில் நன்கு பொழுது போனது. மீண்டும் மதிய நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. தாமோதரன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எடுத்த படங்களைப் போட்டு ( ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாடல் பின்னணியில் ஒலிக்க) இது கல்லூரியில் எந்த இடம் ஞாபகமிருக்கிறதா என பழைய நினைவுகளை கிளற பலவும் பெண்கள் போகாத இடங்களாகவே இருந்தது!
குழந்தைகள் விரும்பினால் அவர்களும் கலைநிகழ்ச்சிகள் நடத்தலாம் என்றவுடன் ஒரு அழகிய கீபோர்ட் ப்ரோக்ராம் நடந்தது. யாருடைய குழந்தை என்று நினைவில்லை. ஒரு குழந்தை பாடியது. சந்திரமோகனின் மகள் உடம்பை வில்லாக வளைத்து அருமையான யோகா வித்தைகளை செய்து கூட்டத்திலிருந்தோரை வியப்பூட்டினார்.

வெளியில் சூடான வடை, மிளகாய் பஜ்ஜி போட ஆரம்பித்திருந்தார்கள். கும்பகோணம் டிகிரி காஃபியுடன் ...ம்ம்ம்...யம்மி :)

முரளிதரனின் மனைவி முரளிதரன் கணவனாக வாய்த்த அதிர்ஷ்டத்தை சிலாகித்துப் பேசியதை நாங்களும் கேட்டுப் புளங்காகிதம் அடைந்தோம். பாவம், முரளிதரன் தான் வெட்கத்தில்!!! அவர் மனைவி விடுவதாய் இல்லை. பேசிக் கொண்டேடே....இருந்தார். நாங்களும் கேட்ட்டுக் கொண்டேடே இருந்தோம். ஸ்ரீநிவாசன், ராதா இருவரும் கல்லூரி நாட்களை நினைவுகூர்ந்து மேகலாவை கலாய்க்க ...நன்றாகவே பொழுது போனது. துறைத்தலைவர் அய்யாதுரையை மாணவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள். அவரும் இவர்கள் விரித்த வலையில் எப்படி வீழ்ந்தார்...கேட்கவே ஆச்சரியமாக இருந்தது! அடப்பாவிகளா என்று மாணவர்களையும், அட இப்படியுமா இருப்பார் மனிதர் என்று துறைத்தலைவரையும் நினைக்க வைத்தது!

மீண்டும் அரங்கில் நுழைந்தால் மேடையில் சிலர் அந்த வடிவேலு சொல்ல சொல்ல ஆடுகிறேன் பேர்வழி என்று அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் நடனம் தான் ஆடுகிறோம் என்று நினைத்தார்களோ என்னவோ! சிறிது நேரம்அந்த காமெடி நடன அவஸ்தையை அவர்கள் குடும்பங்களும் வெட்கப்பட்டுக் கொண்டேகண்டு களித்தார்கள்.

இந்த களேபரத்தில் அரவிந்தனின் கேமரா தொலைந்து பலமுறை அறிவித்தும் கிடைக்கவில்லை.

இதனூடே ராஜன் கையில் ஒரு லிஸ்டை வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆட்களாக தேடிச் சென்று வெள்ளிவிழா நினைவுப்பரிசுகளை வழங்க, ஆர்வத்துடன் அனைவரும் பிரித்துப் பார்த்து, எதிர்பாராத அசத்தலான பரிசை கண்டு பிரமித்துத் தான் போனார்கள்! அந்த நினைவுப்பரிசிற்காக நாட்பகலாக உழைத்த ராஜனுக்கு பெரிய மனசு தான்! ஏதோ கடையில் விற்பதை வாங்கி வேலையை முடிக்காமல் இவ்வளவு மெனக்கெட பெரிய மனது வேண்டும் தானே? அப்படி ஒருவர் நமக்கு கிடைத்திருப்பது நம் அதிர்ஷ்டமே!

ஒரு வழியாக கலைநிகழ்ச்சிகள் முடிவடைய, குடும்பங்களும் களைப்படைய, நாளைக்கு நாங்கள் வர மாட்டோம் என்று குழந்தைகளுடன் சில குடும்பத்தலைவிகளும் குழந்தைகளும் அன்றே உறுதி மொழியும் எடுத்து விட்டார்கள்! அவர்களுக்கு பயங்கர போர் அடித்து விட்டது போல!

சிறிது நேரத்தில் சுவையான இரவு உணவு -இட்லி, இடியாப்பம், பரோட்டா பரிமாறப்பட்டது. திருப்தியாக அதையும் சாப்பிட்டு முடிக்க, சிலர் அன்றே ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை. மற்றவர் எல்லாம் மறுநாள் கல்லூரியில் காலை ஒன்பது மணிக்குச் சந்திப்பது என்று நண்பர்களுடன் பேசி விட்டுக் கிளம்பினோம்.

பல நாட்கள் தூங்காத களைப்பும், அன்றைய நாள் விருந்துக்காக அதிகாலையில் கடைக்குச் சென்று வேண்டிய அசைவ ஐட்டங்களை வாங்கிக் கொண்டு வந்ததோடு மட்டுமில்லாமல் மீண்டும் ஐம்பது எலுமிச்சம்பழங்கள் வாங்க யாரையும் அணுகாமல் பரவையிலிருந்து தானே மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்குச் சென்று வாங்கி வந்து கொடுத்து அனைவரும் திருப்தியாக சாப்பிட்டார்கள் என்று தெரிந்தும் தான் சாப்பிடாமல் இரவு வரை அலைந்த ராஜன் ரியல் ஹீரோ!

இந்த வெள்ளிவிழா அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்று ராஜன் நினைத்தபடியே இனிமையாக முடிவுற்றது அந்நாள்.



























Friday, August 21, 2015

வெள்ளிவிழா கொண்டாட்டம் - 1

கல்லூரிப்பருவம் பெரும்பாலோனோர் வாழ்விலும் ஒரு வசந்த காலம்! ஆம், அது ஒரு கனாக்காலம் என்று இருபத்தைந்து வருடங்கள் கழிந்த பின்னரும் களிப்புற வைக்கும் காலம். எதைப்பற்றின கவலையுமின்றி நண்பர்களுடன் பேசி துள்ளித் திரிந்த நாட்கள் மீண்டும் வருமா? அசை போட்டு பார்க்கும் மனம் சொல்லாமல் சொல்லும் ஆயிரமாயிரம் இனிய நினைவுகளை!

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு கல்லூரிப் படிப்பு என்பது ஒரு கனவோ என்ற குடும்ப பின்னணி! பத்தாம் வகுப்புடன் என்னுடன் பள்ளியில் பயின்ற பல பெண்களுக்கும் திருமண வாழ்க்கை! நல்ல வேளை, என் பெற்றோர்கள் அந்த தவற்றைச் செய்யவில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படிக்க ஊக்கமளித்து கல்லூரி வரை அழைத்தும் வந்து விட்டார்கள்! ஆனாலும், அவர்கள் சொன்ன கல்லூரிக்கும், படிப்பிற்கும் தான் தலையாட்ட வேண்டியிருந்தது. அதுவும் எனக்குச் சாதாகமாக அமைந்தது என் அதிர்ஷ்டமே!

என்ன, வீட்டை விட்டு சிறிது காலம் ஹாஸ்டல் வாழ்க்கை வாழ வேண்டும், தனித்து என் வாழ்க்கையை நானே தீர்மானிக்க வேண்டும் என்பது அன்றைய என் இள வயது அவா. அது நடக்கவில்லை. அப்போதைய பெற்றோர்களின் பயம் போலும்! உணர்ந்து நானும் மதுரையில் இருக்கும் கல்லூரியில் படிப்பது என்ற என் முடிவையும் மாற்றிக் கொண்டேன். வேறு வழியில்லையே! 'ஆஊ' என்றால் கல்யாணம் பண்ணி வைத்து விடுவேன் என்ற மிரட்டல் வேறு.

ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்து மருத்துவம், பொறியியல், விவசாயத்துறை நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராக மெஜுரா கல்லூரி நடத்திய தாம்ப்ராஸ் கோச்சிங் வகுப்புக்களுக்கும் சென்று ஒரு வழியாக தேர்வும் எழுதியாயிற்று.

அம்மாவுடன் முதன் முதலில் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்ப படிவம் வாங்க சென்ற நாளில் விஸ்தாரணமான கல்லூரியின் அமைப்பும், ஆண், பெண் இணைந்து படிக்கும் சூழ்நிலையும், ஓங்கி வளர்ந்து நின்ற ஆலமரங்களும், பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் வழியெங்கும் கூடவே வந்த பச்சைப்பசேல் விளைநிலங்களும் நான் கண்டிராதவை. இவ்வளவு தூரம் தினமும் நடக்கணுமோ? என்னுள் எழுந்த கேள்வியுடன் ம்ம்ம்...நன்றாகத் தான் இருக்கும் என எனக்கு நானே நினைத்துக் கொண்ட வேளையில் கல்லூரியில் சேருவதற்கு முன்பே என்னை எதிர் கொண்ட சீனியர் மாணவர்கள் கேட்ட கேள்விகள் கொஞ்சம் பயமுறுத்தின. என்னை விட என் அம்மாவிற்குத் தான் பயமாகிப் போனது. படப்படப்புடன் அறிவுரைகளும் ஆரம்பமாகியது.

கல்லூரி இது தான் என்று தெரிந்த நாளிலிருந்து கல்லூரிக் கனவுகள்! அட்மிஷன் நாளன்று அப்பா, அம்மாவுடன் நானும் அக்காவும் படப்படப்புடன் பிரின்சிபால் அறை வாசலில் காத்திருந்த நேரங்களில் பல வித எண்ண ஓட்டம். நம்மை குழப்புவதற்கென்றே ஒரு கூட்டம் தான் இருக்குமே! பன்னிரெண்டாம் வகுப்பில் படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பார்கள் என்று வேறு சொல்லி விட்டதால் பயம் கூடி விட்டது. பெயரை சொல்லிக் கூப்பிட்டவுடன் உடல் சில்லிட அறைக்குள் நுழைந்தால் பெரிய மேஜையின் முன் அன்றைய முதல்வர் டாக்டர்.மரியலூயிஸ். அவருடன் பேராசிரியர் S.R. பாலகிருஷ்ணன் என்று நினைக்கிறேன். a/c அறையில் குளிரா, நடுக்கமா...தெரியவில்லை. நடுங்கிக் கொண்டே அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னேனா? என் குரல் எனக்கே கேட்கவில்லை!

மார்க்சீட், நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் , இன்ன பிற படிவங்களை வாங்கிக் கொண்டு எதிலோ கையெழுத்திட்டவாறே வெல்கம் டு TCE என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னவுடன், தப்பிச்சோம்டா சாமி என்று பாய்ந்து வெளியேறினேன். அடுத்து அக்காவின் அட்மிஷனும் முடிந்தது. அப்பா, அம்மாவிற்கு ஒரே ஆனந்தம்! ஆம், தன் பெண்கள் கல்லூரிக்கு அதுவும் இன்ஜினியரிங் கல்லூரிக்குச் செல்ல போகும் பெருமை அவர்களிடத்தில்! நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அம்மாவின் அறிவுரைகள். பத்திரமா போயிட்டு வரணும். யாரிடமும் வம்பு வளர்த்துக்க கூடாது. நீங்கள் இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும். தனியாக எங்கும் செல்லக் கூடாது. ஐயோ, அம்மா...என்று நான் சொல்லும் வரை தொடர்ந்த அந்த அறிவுரைகளை இன்று என் மகளுக்குச் சொல்லும் பொழுது தான் என் அம்மாவின் பயமும், அக்கறையும் புரிகிறது!

வந்தே விட்டது அந்நாளும்! கல்லூரிக்குச் செல்லும் முதல் நாள். நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்குல்ல? கேட்ட அம்மாவிற்கு தலையை ஆட்டி பதிலளித்துக் கொண்டே சீக்கிரமாகவே எழுந்திருந்து, சுவாமி கும்பிட்டு, அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு நானும் அக்காவும் நேரத்திற்கு மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் கல்லூரி பஸ்சிற்காக காத்திருந்தோம். கண் முன்னே கூட்டமாக வந்த 14A பஸ் திகிலாக, இனி வருடம் முழுவதும் கல்லூரி பஸ் தான் என்று அன்றே தீர்மானிக்க வைத்தது!

அப்படி ஆரம்பித்த பயணம் இன்று இருபத்தைந்து வருடங்களைக் கடந்து விட்டிருக்கிறது! இதோ ராஜனிடமிருந்து அழைப்பிதழ். மீண்டும் கல்லூரி நினைவுகளில் மூழ்க வேண்டும். காலம் மாறி விட்டது. கடந்து வந்த பாதைகள் மாறி விட்டது. அதனால் என்ன? எனக்கென்று சில நேரம், எனக்கென்று ஓரிரு நாட்கள்...அசை போட என்றும் பசுமையாய் என் நினைவுகள் என்னுடனே பயணிக்க, நானும் தீர்மானித்து விட்டேன், கல்லூரி வெள்ளி விழா கொண்டாட்டத்திற்குச் செல்வதென...












Thursday, August 13, 2015

ஆடிப்பெருக்கு - உலா ...

நாளைக்கு ஆடிப்பெருக்கு! அம்மா சொன்னவுடன், கோவிலுக்குப் போய் மீனாக்ஷியை தரிசனம் செய்து விட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன். காலையில் நேரத்திற்குச் சென்றால் கூட்டத்தைச் சமாளித்து விடலாம். தங்கை மகளும் வருகிறேன் என்றவுடன் கிளம்பி விட்டோம். வெளியில் கூட்டம் அவ்வளவாகத் தெரியவில்லை! செக்யூரிட்டியை கடந்து கோவில் உள்ளே நுழையும் போதே சந்தனம், பூக்களின் மணம் வர, அம்மா, மாலை வாங்கிட்டு போங்க, அர்ச்சனை தட்டு, சுவாமிக்கு அர்ச்சனை என்று முகத்திற்கு எதிரே நீட்டிய தட்டுக்களையும், மாலைகளையும் கடந்து உள்ளே சென்றால் அதிகாலையிலிருந்து வந்த மக்கள் கூட்டம், கூட்டம் கூட்டமாக!!!

அதிகாலை நேரமாதலால் கடைகள் மூடியிருந்தது. கடைகள் இல்லாத கோவில் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது!

உறவினர்கள் சூழ வெட்கப்பட்டுக்கொண்டே புது மணப்பெண்கள், மணமகன்கள் என சுற்றுப் பிரகாராங்களில் கூட்டம். தாலி பெருக்குவது நடந்து கொண்டிருந்தது. பெரிய விசேஷம் தான் போலிருக்கு! எங்களிடையே அந்தப் பழக்கம் இல்லாததால் வேடிக்கை பார்த்துக் கொண்டே அவர்களை கடந்தேன். விபூதி பிள்ளையார் நவீன 'மொழுமொழு' விபூதியில் குளித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கோபுரத்தின் பின்னணியில் எழும் சூரிய பகவானை பார்த்து விட்டு அம்மன் சன்னதி கூட்டத்தில் இணைந்தோம்.


நீண்ட வரிசை!!! இந்த வரிசையில் நின்றால் எப்போது பார்ப்பது? மலைப்பாகத் தான் இருந்தது! மேடம், ஐம்பது, நூறு ரூபாய் டிக்கெட் இருக்கு. சீக்கிரம் அம்மனை பார்த்துடலாம். எவ்வளவு சீக்கிரம்? இந்தா, வரிசை நகர்ந்துட்டே இருக்கு பாருங்க. ம்ம்ம்... இருக்கட்டும். இந்த வரிசையையும் கொஞ்சம் சீக்கிரம் நகர்ற மாதிரி செய்யலாமே!! வளைந்து வளைந்து சென்றது வரிசை. ஜாலியாகச் சுவரில் இருந்த திருவிளையாடற்புராண சித்திரங்களைப் படித்துக் கொண்டே ஒரு வழியாக சன்னதிக்குள் வந்தாகி விட்டது. பெரிய பெரிய மின்சார விசிறிகளை ஆங்காங்கே வைத்திருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது! அந்தக் காலை நேரத்திலும் அப்படி வியர்த்தது! அநேக பெண்களும் தலை குளித்து, வாச மலர்களைச் சூடி, சிலர் மஞ்சள் பூசிய முகத்துடனும், புத்தாடையுடனும், புது நகையுடனும் 'பளிச்'சென்று இருந்தார்கள்.

அம்மனை நெருங்க ஏசியின் குளிர் நன்றாகத் தான் இருந்தது. நடுநடுவே கரைவேட்டிக்கு, போலீஸ்காரர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று ஒரு கூட்டம் தனி வரிசையில் சென்று அம்மனை மறித்து நின்று அனைவரின் வயிற்றெரிச்சலையும் வாங்கி கட்டிக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக அம்மனின் தரிசனம் கிட்டியது. அழகி அவள்!!!

வைர கிரீடமும், வைர கிளியுடனும் வாசனை மலர்களுடன் தீபாராதனையில் ஜொலிக்க...திவ்ய தரிசனம் !!! குங்குமத்தை வாங்கிக் கொண்டு கூட்டத்தை விட்டு ஒதுங்கினோம். தட்டில் விழும் காணிக்கையில் குறியாக இருக்கிறார்கள் சில பட்டர்கள் :(

முக்குறுணி விநாயகரை தரிசிக்கச் செல்லும் வழியில் சூடான வெண்பொங்கலை தொன்னையில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்! மிளகு, நெய் வாசம் சுண்டி இழுத்தாலும் கணேஷா என்று பிள்ளையாரை பார்க்க அவ்விடத்தைக் கடந்தோம். சுவாமி சன்னதியில் கூட்டம் இல்லை. நிம்மதியாக நீண்ட நேரம் அங்கு நின்று தரிசனம் செய்ய முடிகிறது. சரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி, பிட்சாடனர், லக்ஷ்மி தரிசனம் அமர்க்களமாக இருந்தது. சித்தர் எண்ணை காப்பு அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தார். துர்க்கையும் எலுமிச்சை பழ மாலையுடன்!

சுற்றுப்பிரகாரத்தில் காளி, வீரபத்ரர், திருக்கல்யாண கோலத்துடன் அம்மன் , வெண்ணையில் மூழ்கிய ஹனுமான், நவக்கிரகங்கள் எல்லோரையும் தரிசித்தாயிற்று !! பார்வதி- குட்டி யானையின் ஆசிர்வாதமும் ! கோவில் கடையில் பிரசாதம்...அப்பம், முறுக்கு, புளியோதரை நிறைய இருந்தது. வெளியில் வந்து பொற்றாமரைக்குளத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். நல்ல கூட்டம்! பலரும் கோபுரத்துடன், குளத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்! சூரிய ஒளியில் கோபுரம் ஜொலித்துக் கொண்டிருந்தது! இம்முறை செவ்வாடை, ஐயப்ப பக்தர்கள் கூட்டம் இல்லாதது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது!



தூண்கள் எல்லாம் 'sandblasting' செய்யப்பட்டுச் சிலைகள் வழுவழுப்பாக இருந்ததில் அதன் சுயத்தை இழந்திருந்தது. புதிதாக தூண்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பராமரிப்பு வேலைகளும் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. கோவிலில் குடிகொண்டிருக்கும் புறாக்களும், வௌவால் கூட்டங்களும் குறைவில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தது!

அம்மா, அப்பா, பாட்டி, பெரியம்மாவுடன் எத்தனை முறை வந்திருக்கிறேன்? பாட்டி வீடு அருகிலிருந்ததால் சொற்பொழிவுக்கூட்டங்களுக்கும் வந்திருக்கிறோம். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் கோவில்! ஆடிப்பெருக்கன்று கோவிலுக்குச் சென்று வந்ததில் பரம திருப்தி!

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...