Monday, September 25, 2023

ஒரு மனிதன் ஒரு காடு ஒரு உலகம்

ஒரே ஒரு மனிதனால் இந்த உலகத்தில் என்ன சாதித்து விட முடியும் என்று நாம் ஒவ்வொருவரும் நினைத்து எதையும் செய்யாமல் இருக்கிறோம். அப்படி நினைத்திருந்தால் காந்தியால் இந்திய மக்களை ஒன்றிணைத்திருக்க முடிந்திருக்காது. நமக்கு விடுதலையும் கிடைத்திருக்காது. ஆனால் மனிதன் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று பலரும் பலதுறைகளில் சாதித்துக் காட்டியுள்ளார்கள். காட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தற்பொழுது 64 வயதான 'ஜாதவ் பயேங்'. 30 ஆண்டுகளாக மரங்களை நட்டு 550 ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை உருவாக்கி 'இந்தியாவின் 'வன மனிதன்' என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

'மொலாய் ரிசர்வ்' என்ற 1,000 ஹெக்டேரில் அமைந்துள்ள காடு இந்தியாவின் இரண்டாவது பெரிய நதியான பிரம்மபுத்ராவில் உள்ள மாஜூலித் தீவில் இருக்கிறது. ஆற்றின் வெள்ளப்போக்கில் ஏற்படும் மணல் அரிப்பால் அதன் மொத்த பரப்பளவு குறைந்துகொண்டே வந்து கடந்த 70 ஆண்டுகளில் பாதிக்கு மேல் சுருங்கிவிட்டது. இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அது மூழ்கிவிடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதை எதிர்த்து மக்கள் போராட, 1980ஆம் ஆண்டில் கோலாகாட் மாவட்டத்தின் அஸ்ஸாம் வனப்பிரிவு பிரம்மபுத்திரா ஆற்றின் மணல் திட்டு ஒன்றில் 200ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டத்தைத் தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக இந்தத் திட்டம் 1983ல் கைவிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதவ் பயேங் தனிமனிதனாக மரங்களை நட ஆரம்பித்து தற்போது 550 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்து நிற்கிறது. முதலில் மூங்கில் மரங்களை நட்டவர் பிறகு வெவ்வேறு மரங்களையும் செடிகளையும் நட்டு காலப்போக்கில் மரத்திலிருந்து விழும் விதைகளை வைத்தே காட்டை உருவாக்கியுள்ளார். காடு உருவானதும் விலங்குகளும் பறவைகளும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களும் இடம் பெயர்ந்து அவருடைய கனவை நனவாக்கியுள்ளது. இவரால் உருவாக்கப்பட்ட 'மொலாய் காடு' நியூயார்க் நகரத்தில் உள்ள சென்ட்ரல் பூங்காவை விடப் பெரியது. தற்பொழுது இந்தக் காட்டில் புலிகள், காண்டாமிருகங்கள், மான்கள், முயல்கள், குரங்குகள், கழுகுகள் உட்பட பல வகையான பறவைகளும் வாழ்ந்து வருகிறது.

2008ஆம் ஆண்டு 100காட்டு யானைகள் கொண்ட கூட்டம் வழிதவறி ஜாதவ் காடுகளுக்குள் நுழைந்தபோதுதான் அரசாங்கம் இந்தக் காட்டைப் பற்றியும் அதனை வளர்த்தெடுக்கும் ஜாதவ் பயேங் பற்றியும் அறிந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு மரத்தை நட்டு தான் வசிக்கும் தீவை காப்பாற்ற முயற்சிக்கும் இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரும் வனத்துறை ஊழியருமான பத்மஸ்ரீ ஜாதவ் "மொலாய்" பயேங்கின் நினைவாக 'மொலாய் காடு' எனப் பெயரிட்டு கௌரவித்தது.

2012ல் ஜாதவ் பயேங்கின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஜிது கலிதா என்பவர் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை விளக்கும் 'தி மொலாய் ஃபாரஸ்ட்' என்ற ஆவணப்படத்தை எடுத்தார். அது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டது. இவரை வைத்து எடுத்த பிற ஆவணப்படங்கள் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

16 வயதில் மரங்களை நடும் பணியைத் தொடங்கியவர் தன் இறுதி மூச்சு வரை தொடரும் என்று பணியை மேற்கொண்டு வருகிறார். தன் சிறுவயதில் நிழலில் ஒதுங்க இடமில்லாமல் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்த பாம்புகளைக் கண்டு மரங்களை வளர்க்கத் திட்டமிட்ட பயணத்தால் மணல் அரிப்பையும் ஓரளவு தடுத்து நிறுத்தியுள்ளார். இவருடைய ஊக்கமளிக்கும் கதையை சிறுகுழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் 'ஜாதவ் அண்ட் தி ட்ரீ பிளேஸ்' என்னும் புத்தகமாகவும் வீடியோவாகவும் வெளிவந்துள்ளது. தற்பொழுது மஹாராஷ்ட்ரா மாநில கல்வித்திட்டத்தில் பாடமாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. சபாஷ்! இதை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சுற்றுபுறச்சூழலைப் பற்றி மேடைக்கு மேடை வாய் கிழிய பேசுபவர்களை விட எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் உண்மையாக காரியத்தில் தம்மை ஈடுபடுத்தி சாதித்து வரும் சொற்பமான சில மனிதர்களுள் ஜாதவ் பயேங்கும் ஒருவர். இயற்கையை முற்றிலும் கைவிடும் மனிதம் இன்னும் வீழ்ந்து விடவில்லை என்ற நம்பிக்கையை விதைக்கும் இவரைப் போன்ற மனிதர்கள் தான் உண்மையான சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள். அவர்களை அறிந்து நம்மால் ஆன உதவியைச் செய்வோம். கற்றுக் கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துவோம். இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நமக்காக. நம் எதிர்கால சந்ததியினருக்காக!

வாழ்த்துவோம்! வணங்குவோம்!

இந்தச் சுட்டியை அனுப்பிய ஈஷ்வருக்கு நன்றி🙏


Forest Man



Friday, September 22, 2023

இதுதான் கருத்துச் சுதந்திரமா?

அடடா! ஏதோ நல்ல விஷயமா இருக்கும் போலிருக்கே என்று வாசிக்க ஆரம்பித்தேன். 'கடைசி விவசாயி' என்றொரு படம் வந்திருக்கிறது என்று இதன் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த வலைதளப்பதிவின் ஆசிரியர் நல்ல நோக்கத்தோடு படத்தையும் சமுதாயத்தில் நிலவி வரும் கொடுமையையும் சொல்லிக் கொண்டு வரும் வேளையில் அப்படியே 'ஜெயமோகர்' ஆகிவிடுகிறார்.

அதாவது,போராட்டம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக இதாண்டா சாக்கு என்று கடைகளைப் போட்டு அடிப்பார்களே! அப்படித்தான். சவுக்குசங்கருக்கும் இவருக்கும் என்ன விரோதமா? சரி, அவர் செய்யும் அரசியல் பிடிக்காது போலிருக்கு என்று நினைக்கலாம். கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரியை தாக்கி தன்னுடைய மனவிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்த நல்லவர்.

என்ன செய்வது? நமக்கு வாய்த்ததெல்லாம் நடுநிலை என்பதே என்னவென்று அறியாத மனநலம் குன்றிய இலக்கியவியாதிகள். சமூக கேடுகளைக் கேள்வி கேட்க பிராமணனை மட்டுமே பிராண்டும் அறிவிலிகள்.

இப்படித்தான் இலக்கியவாந்தி எடுக்கும் பலரும் இன்றைய தமிழுலகத்தில் ஆளும் கட்சிக்குச் சார்பாக 'சனாதனத்தை ஒழிக்க' முயலும் கூட்டத்துக்கு விளக்குத்தூக்கிக் கொண்டு அலைகிறார்கள். அதே சாக்கில், மனம் போன போக்கில், மனஅடுக்குகளில் ஒளிந்திருக்கும் அழுக்குகளை வாந்தி எடுத்துக் கொண்டு வருகிறார்கள். வட இந்தியர்களைத் திட்டுகிறார்கள். பிராமணர்களை வசைபாடுகிறார்கள். மறந்தும் கூட மாற்று மதத்தின் மூட நம்பிக்கைகளை மட்டும் கேள்விகேட்டுவிட மாட்டார்கள் இந்த அறிவுஜீவிகள்! எல்லாம் எதற்காக? ஆளும் கட்சியின் கருணைப்பார்வைக்காக. எச்சில் சோற்றுக்காக. எண் சாண் வயிற்றைக் கழுவ இந்த நாதாரிப் பிழைப்பு. தான் சொல்வதைக் கேட்க தலையாட்டி கூட்டம் இருக்கிறது என்ற இறுமாப்பு. இந்த வேலையைச் செய்வதற்கு..... கருமம்டா! உங்களையெல்லாம் இன்னுமா இந்த உலகம் நம்புது😡
 
தமிழகத்தில் ஒழிக்க வேண்டிய எத்தனையோ சாதீய, சமூக பிரச்னைகள் தலைவிரித்தாடுகிறது. அதைப் பற்றி என்றாவது வாயைத் திறந்திருக்குமா இந்த மூடர்கூடம்? எப்பேர்ப்பட்ட தைரியசாலிகள். 'செலெக்ட்டிவ் அம்னீஷியா' நோயாளிகள். இது தான் கருத்துச் சுதந்திரமா? ச்சை👿

Tuesday, September 12, 2023

மறக்குமா நெஞ்சம்?


ஒரு சாதாரண இசைநிகழ்ச்சியில் நடந்த அசாம்பாவிதங்கள் என்று கடந்து செல்ல முடியவில்லை. இன்று தந்தி டிவியில் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் நடந்த உரையாடலைக் காண நேர்ந்தது. அவர் பேசியதில் அத்தனை முரண்பாடுகள். வட இந்தியாவில் நடக்கும் ரஹ்மானின் இசைநிகழ்ச்சியை விட அதிக எண்ணிக்கையில் தென்னிந்தியாவில் இந்த "மறக்குமா நெஞ்சம்" நிகழ்ச்சியை நடத்தி விட வேண்டும் என 'யாரோ' தீர்மானித்திருக்கிறார்கள். அதற்கு பலிகடா ஆனது ஏஆர் ரஹ்மானின் ரசிகர்களும் குடும்பங்களும்😞.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ACTC நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹேமந்த் பொறுப்பற்றத்தனமாக பேசினார். இதுவரையிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் அனுபவம் இருப்பவருக்குத் திட்டமிட்டபடி 40,000 மக்கள் கலந்து கொள்ளவிருந்த இந்த நிகழ்ச்சியே முதல் நிகழ்ச்சி என்று கூறினார்.  

முதலில் இத்தனை பெரிய மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 25,000 பேர் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது காவல்துறை. அதற்கான காவலர்களே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருப்பார்கள். அப்படியென்றால் 40,000 பேர் வருவார்கள் என்று திட்டமிட்ட இந்த நிறுவனம் யாரை ஏமாற்ற நினைத்திருக்கிறது? இது கண்டனத்துக்குரியது மட்டுமில்லாமல் தண்டனைக்குரிய குற்றமும் அல்லவா? சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கிற்காக மீம் போடுபவர்களை நடுராத்திரியில் கைது செய்யும் காவல்துறையும் ஏவலாளியும் அமைதி காப்பது ஏனோ?

அடுத்து தேதி மாற்றத்தால் நடந்த குழப்பம் என்றார். பலரும் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் எண்ணிக்கையில் நடந்த குளறுபடியாம். ஆன்லைன் டிக்கெட் விற்பனை என்றால் எப்படி குழப்பமாகும்? ட்விட்டரில் பலரும் "கேன்சல் செய்யும் வசதியே அவர்களுடைய தளத்தில் இல்லை. எப்படி நாங்கள் செய்ய முடியும்" என்று புலம்பியிருக்கிறார்கள். பணத்தைக் கட்டி அனுமதிச்சீட்டு வாங்கியவர்களுக்கு மீண்டும் மறுதேதியிட்ட அனுமதிச்சீட்டு வழங்கியிருக்கிறார்கள். எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள் என்றால் தடுமாறுகிறார். ஆன்லைன் வர்த்தகத்தில் எப்படி குழப்பம் நடக்கும்? புரியவில்லை. அப்படியே நடந்திருந்தாலும் பழைய அனுமதிச்சீட்டுகளைக் கொண்டு வருபவர்களை இனம் காண முடியவில்லை என்றால் என்ன மாதிரியான நிறுவனம் இது? எதன் வகையில் மக்களை உள்ளே அனுமதித்தார்கள்? இது முழுக்க முழுக்க இவர்களின் அஜாக்கிரதையால் நடந்த தவறு. கஷ்டப்பட்டு ஒப்புக்கொள்கிறார். வேறு வழி?

25,000 பேருக்கு அனுமதி வாங்கி விட்டு 36,000 பேருக்கு டிக்கெட்டையும் விற்று 4,000 பேருக்கு காம்ப்ளிமெண்டரி டிக்கெட்டுகள் கொடுத்தார்களாம். மொத்தம் 40,000 கணக்கு. ஆனால் 45,000 பேருக்கு இருக்கை வசதிகள் செய்து வைத்திருந்தார்களாம். எத்தனை பெரிய அபத்தம்? காவல்துறைக்கு 'பெப்பே' காட்டியவர்களைப் பாவம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் வைத்திருக்கிறது இந்த அரசு.

45,000 இருக்கைகள் போட தெரிந்திருக்கிறது. அதற்கான கட்டமைப்புகள் இருக்கிறதா என்று பார்த்தார்களா? கூட்டத்தைச் சமாளிக்க போதுமான ஆட்களை போடாதது யாருடைய தவறு? 45,000 பேருக்கு எத்தனை பௌன்சர்கள், அனுமதிச்சீட்டை சரிபார்ப்பவர்கள், இவர்களை நிர்வகிப்பவர்கள் இருந்தார்கள்? பதில் இல்லை.

கார்களில் வருபவர்கள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில் வெறுமனே 8,000 வண்டிகள் நிறுத்தவும் 20,000 இரு சக்கர வண்டிகள் நிறுத்தவும் ஏற்பாடு செய்திருந்தார்களாம். நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வருபவர்கள் ஷேர் ஆட்டோவிலா வரப்போகிறார்கள்? அங்கு நிறுத்த வசதி இல்லையென்றால் தொலைவில் எங்காவது ஓரிடத்தில் நிறுத்தி மக்களைப் பேருந்தில் அழைத்து வர செய்திருக்கலாமே? இத்தனை வருட அனுபவம் இருக்கிறது என்பவருக்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கூட்டம் என்று தெரியாமல் போயிருக்கிறது பாருங்கள். அத்தனை அலட்சியம்!

நம் மக்களுக்கும் பொது இடங்களில் ஒழுங்காக வரிசையில் நின்று சென்றால் விரைவில் அரங்கிற்குள் செல்லலாம் என்ற அடிப்படை அறிவு என்பது அறவே கிடையாது. முண்டியடித்துக் கொண்டுச் சென்று தான் மட்டும் அல்லது தன் குடும்பம் மட்டும் முதலில் உள்ளே செல்ல வேண்டும் என்ற மனநிலை தான். திரையரங்குகளில் கூட அப்படித்தான் நடந்து கொண்டார்கள். அதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் மூச்சு விடச் சிரமப்பட்டிருக்கிறார்கள். கொடுமையெல்லாம் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி பதட்டத்துடன் பேசியத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது. இந்த வடு ஆறுமோ? பொறுக்கிகளை முட்டிக்கு முட்டி தட்டி அடிக்க காவல்துறை அங்கு இல்லை. இந்த நிறுவனம் பௌன்சர்களை வைத்திருந்ததாக சொன்னவர்கள் எத்தனை பேர் இந்த ஒழுங்கற்றவர்களை அப்புறப்படுத்தினார்கள்? அங்கு முறையிட கூட ஆட்கள் யாரும் இல்லை என்று சொல்வதற்கு கட்டுக்கடங்காத கூட்டம் வந்து விட்டது என்று சொல்கிறாரே தவிர உண்மையில் எத்தனை அனுமதிச்சீட்டு கள்ளச்சந்தையில் விற்பனை ஆகியிருக்கிறது? யார் விற்றிருக்கிறார்கள் என்று இவர்களுக்கும் மீறிய செயலாக பேசுகிறார். இருக்கலாம். அப்படியென்றால் அந்த 'கள்ள பார்ட்டி' யார் என்று கண்டறிய வேண்டியது யாருடைய கடமை?

யாருக்காக இப்படி விழுந்தடித்துக் கொண்டு நிகழ்ச்சியைப் பார்க்க வந்தார்களோ முதலில் அவரிடமிருந்த வந்த ட்வீட் தான் வேதனையைத் தருவதாக இருக்கிறது. உள்ளே வரமுடியாமல் போனவர்கள் அனுமதிச்சீட்டின் நகலை இவருக்கு அனுப்பினால் ஆவண செய்வாராம் A.R.ரஹ்மான். தனக்கு வெளியில் நடந்தது எதுவும் தெரியாது என்கிறார். ஓகே. அதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். இவரைப் பார்க்கவும் பாடுவதைக் கேட்கவும் தானே பணத்தைக் கொட்டி அங்கே வந்தார்கள். இதுவரையில் பாதிக்கப்பட்ட பெண்களிடமோ நிகழ்ச்சியைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்களிடமோ நடந்த தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க கூட மனமில்லாமல் இருக்கிறார். 'மன்னிப்பு' என்ற வார்த்தை அத்தனை கடினமானதா? இன்று இவருடைய சுயரூபம் தெரிந்த மனிதர்கள் பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

"வெளிநாடுகளில் எத்தனை கச்சேரிகளை நடத்தியுள்ளேன். இதுவரையில் இப்படியெல்லாம் நடந்ததில்லை." என்கிறார் ரஹ்மான். எப்படி நடக்கும்? இத்தனை பேர் அமர முடியும் என்றால் அத்தனை அனுமதிச்சீட்டுகள் மட்டுமே வெளிநாடுகளில் விற்க முடியும். அதிகமாக விற்று களேபரம் நடந்தால் லாடம் கட்டிவிடுவார்கள்.

காவல்துறையினரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியிருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், வண்டிகள் நிறுத்துமிடங்களில் ஏகப்பட்ட கலாட்டா. இடமில்லாதாதல் காவலர்கள் தான் வண்டிகளை நகர்த்திக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தால் தான் பாவமாக இருந்தது என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.இந்த நிறுவனம் ஏன் வண்டிகள் நிறுத்துமிடத்தில் போதுமான ஆட்களை நிறுத்தவில்லை? கேட்டால் எதிர்பாராத கூட்டம். கள்ளச்சீட்டு கூட்டம் என்று கதை கட்டுகிறார் இந்த ஹேமந்த். ஏற்கெனவே இதே போல் கள்ளச்சீட்டு கூட்டத்தால் கோயம்புத்தூரி்ல் இதே ரஹ்மானின் இசைநிகழ்ச்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது இவர் நடத்திய நிகழ்ச்சியில். அப்பொழுதே அதை கவனித்து சரிசெய்திருக்க வேண்டாமா ரஹ்மான்? இந்தப் பொறுப்பைக்கூட தன் விசிறிகளுக்காக செய்ய மாட்டாரா? இப்பொழுது  மீண்டும் ஒரு களேபரம் நடந்திருக்கிறது என்றால் யார் மீது குற்றம்? இவரைத் தண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்😡

பணத்தைத் திருப்பித் தருகிறோம் என்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மன உளைச்சலுக்கும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வரவும் என்ன செய்யப் போகிறார்கள்?

பணத்திற்காக பேயாய் அலையும் மனிதர்களிடம் மாண்பை எதிர்பார்ப்பது தவறோ?

இனி வரும் காலங்களிலாவது அரசும், காவல்துறையும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் பணத்திற்காகவும் புகழுக்காகவும் மட்டுமே இல்லாமல் நிகழ்ச்சியை வழங்குபவரும் பொறுப்புகளை கடமைகளை உணர்ந்து நடக்கட்டும். பொதுமக்களும் பொறுக்கிகளை இனம் கண்டு அநீதிகள் நடக்காத வகையில் விழிப்புடன் இருக்கட்டும்.

'மறக்குமா நெஞ்சம்' ஆறாத ரணமாகிப் போயிருக்கிறது!

The Courier

மேற்குலகிற்கும் ரஷ்யாவிற்குமிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நிகழ்ந்த நிகழ்வினை விறுவிறுப்பாக படமெடுத்திருக்கிறார்கள். காலத்திற்கேற்றவாறு வண்டிகள், நடிப்பவர்கள் உடைகள், ஆடைகள், தோரணைகள் என்று எப்படித்தான் பீரியட் படங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது. சமையல் அறையில் இருக்கும் பாத்திரங்கள் தொடங்கி சுவர் அலங்காரங்கள், அலுவலகங்களில் இருக்கும் தொலைபேசிகள் என்று சின்னசின்ன விஷயங்களில் கூட அத்தனை கவனம் செலுத்தியிருந்தார்கள். ஹாலிவுட் பீரியட் படங்களை மிஞ்சவே முடியாது என்பதற்கு இந்தப்படமும் ஒரு சான்று. செய்தித்தொடர்பு வளர்ச்சி அவ்வளவாக இல்லாத காலத்தில் உளவுத்துறை எப்படி எல்லாம்செயல்பட்டிருக்கும் என்று நினைத்தாலே பதட்டமாகத் தான் இருக்கிறது!

ரஷியா என்றாலே 'KGB' என்பதும் அதன் கொடுரமான தண்டனைகளும் நினைவிற்கு வரும். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யாவிற்கிடையே நடக்கும் செய்திப் பரிமாற்றங்கள். எப்படி சாத்தியாமாகிறது? நம்மைப் போல மனிதர்கள் எப்படி உளவு பார்க்கிறார்கள் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள். எப்படி படம் முடியுமோ என்று ஒவ்வொரு காட்சியையும் அதனோடு இழைந்து வரும் இசையும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறது. ஒரு நிமிடம் கூட கவனத்தைச் சிதற விடாமல் பார்க்க வைக்கும் படம். நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள். அனாவசிய காட்சிகள் இன்றி அழகாக கொண்டு சென்றது சிறப்பு.

ரஷ்யாவில் உயர் பதவியில் இருக்கும் நல்ல மனிதர் அவருடைய கனவு நகரத்தில் வாழ முடிந்தததா? இங்கிலாந்து தொழிலதிபர் KGBயிடம் மாட்டினாரா? இவர்களை இங்கிலாந்து, அமெரிக்க உளவுத்துறைகள் எவ்விதம் கையாண்டன என்று பதைபதைப்புடன் அருமையாக எடுத்திருந்தார்கள். பல நாட்களுக்குப் பிறகு பார்த்த ஒரு நல்ல படம்.

"The Courier" அமேசான் பிரைமில் காண கிடைக்கிறது.


The Banshees of Inisherin

 

படத்தின் சில காட்சிகளைப் பார்த்தவுடனே முழுப்படத்தையும் பார்த்தே தீருவது என்று நானும் ஈஷ்வரும் தீர்மானித்தோம். 2021ல் சென்று வந்த அயர்லாந்தை நினைவூட்டியது பெரும் காரணம் என்றாலும் இந்தப் படத்தில் நடித்துள்ள இரு நடிகர்களின் படங்களையும் பார்த்திருக்கிறோம் என்பதாலும் தான். தேர்ந்த நடிகர்கள். வேறு என்ன வேண்டும்?

ஆரம்பக்காட்சியே அமர்க்களமாக இருந்தது. அயர்லாந்தின் பரந்த நிலப்பரப்பும் ஜொலிக்கும் அட்லாண்டிக் கடலும் நீல வானமும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அழகிய பழங்காலத்து வீடுகளும் கற்களால் எழுப்பப்பட்ட சுற்றுச்சுவர்களும் காட்சிக்குக் காட்சி அழகு சேர்க்கிறது.அந்நாட்டு மக்களின் ஆங்கிலம் வேறு ராகத்துடன் பேச, கேட்க அழகாக இருந்தது. சப்டைட்டில் வசதி இருப்பதால் புரிகிறது மாதவா!

இங்கிலாந்தின் கீழ் அயர்லாந்து இருக்கும் பொழுது உள்ளூர் சண்டைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை. அங்குள்ள கிராமங்களில் கால்நடைகளை வளர்ப்பது தான் பிரதான தொழில். இங்கும் அப்படியே. நாங்கள் அங்குச் சென்றிருந்த பொழுது சிலரைச் சந்தித்துப் பேசுகையில் பலரும் கட்டிட வேலை செய்பவர்களாக இருந்தார்கள். நகர்ப்புறங்களுக்குச் சென்று வேலை செய்து விட்டு வீடு திரும்புவது வாடிக்கை என்று கூறினார்கள். ஒவ்வொரு ஊரிலும் தேவாலயங்கள் இருந்தது. இந்தப்படத்திலும் ஞாயிறு அன்று தேவாலயத்திற்குச் செல்லும் காட்சிகளில் மட்டுமே சில மனிதர்கள் வருகிறார்கள்.

நீண்ட கால நண்பர்கள் இருவரிடையே வரும் பிரிவினை. தான் என்ன தவறு செய்தோம் என்று புரியாத வெள்ளந்தியான கிராமத்து மனிதன். மன்னிப்பு கேட்டு நட்பை எப்படியாவது தொடர விரும்புபவன். "நீ ஒரு முட்டாள். உன்னோடு என் பொன்னான நேரத்தைச் செலவிட விரும்பவில்லை. இசையில் எதையாவது சாதிக்க விரும்புகிறேன்." என்று சில காரணங்களைக் கூறி திடீரென மாறிவிட்டிருக்கும் இன்னொருவன். இவர்கள் இருவரும் படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நடுவில் வேறு சில முக்கிய கதாபாத்திரங்கள்.

இந்த ஊரில் இரண்டு கொலைகள் நடக்கப்போகிறது என்று சூனியக்காரி தோற்றம் கொண்ட பக்கத்து வீட்டுக் கிழவி சொல்வது நடக்கிறதா? வெறுப்பு என்பது எந்த எல்லை வரைச் செல்லும்? மனித மனம் எப்படியெல்லாம் மாறும்? என்பதை அழகாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். அருமையான ஒளிப்படக்காட்சிகள் வேறு படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.

ஐரிஷ் பின்னணி என்றால் குடிக்கும் காட்சிகள் இல்லாமலா? மது அருந்துவது அவர்களின் கலாச்சாரத்தின் அங்கம். அதன் தொடர்பான காட்சிகளும் வசனங்களும் அருமை. பெரும் நடிகர்கள். அழகான ரசிக்கத்தகுந்த கவிதைகளைப் போல நகரும் காட்சி அமைப்புகள் என்று படத்தை ரசிக்க வைக்கிறது.


(Hulu) ஹுலுவில் வெளிவந்திருக்கிறது. கண்டுகளியுங்கள்😊

Monday, September 11, 2023

இரண்டாவது இன்னிங்ஸ் சாத்தியமா?

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான ப்ரைமரி தேர்தலில் வெற்றி பெறுபவரே எதிர்வரும் நவம்பர் 2024 அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட முடியும். தற்போது குடியரசுக்கட்சியின் சார்பில் பலர் களத்தில் இறங்கியிருந்தாலும் ஒரு சிலரே அதிக கவனம் பெற்று வருகின்றனர். இவர்களில் பல குற்றச்சாட்டுகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகியிருக்கும் முன்னாள் அதிபர் ட்ரம்ப், கடந்த தேர்தல் முடிவுகளில் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ், தொழில்நுட்ப தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர் விவேக் ராமசாமி, முன்னாள் சௌத் கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி, சௌத் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட், நியூஜெர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றைய தேதியில் ப்ரைமரி தேர்தல் நடந்தால் முன்னாள் அதிபர் ட்ரம்ப் தான் குடியரசுக்கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக வெற்றி பெறுவார். அவருக்கெதிரான சட்ட சிக்கல்களும் குற்றச்சாட்டுகளும் இருந்த போதிலும் தற்போதைய அதிபர் பைடனை எதிர்க்க சரியான போட்டியாளராக 59 சதவிகித குடியரசுக்கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என வால்ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது. 600 குடியரசுக்கட்சி ப்ரைமரி தேர்தல் வாக்காளர்கடையே நடந்த கருத்துக்கணிப்பில் ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸை விட ட்ரம்ப் 46 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில் இருந்ததை விட தற்போது ட்ரம்புக்கான ஆதரவு 11 சதவீதம் உயர்ந்துள்ளது! அப்போது 48 சதவீத குடியரசுக்கட்சியினர் அவரை முன்னணி வேட்பாளராக ஆதரித்தனர். அவர் மீதான வழக்குகளின் தீவிரம் அதிகரித்து அவரும் வேளையில் வாக்காளர்களின் ஆதரவும் கூடி வருவது எதிர்கட்சியினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் மீது பல குற்ற வழக்குகள் இருந்த போதிலும் அவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பைடன் அரசாங்கத்தால் போடப்பட்டுள்ளது என 60 சதவிகிதத்திற்கும் மேலான குடியரசுக்கட்சி வாக்காளர்கள் கூறியுள்ளனர். 2020 தேர்தலுக்குப் பிறகு ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடுத்த ட்ரம்ப்பின் நடவடிக்கையில் தவறு இல்லை. அவை "துல்லியமான வாக்கெடுப்பை உறுதி செய்வதற்கான சட்டபூர்வமான முயற்சிகள்" என்று ஏறக்குறைய 78 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 16 சதவீதம் பேர் ஜார்ஜியா மாநில வாக்கெடுப்பில் காங்கிரஸை சான்றளிக்க விடாமல் தடுக்க டிரம்ப் சட்டவிரோதமாக முயன்றதாகத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பிற்கு வாக்களிக்க அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் ஈடுபட்ட 48 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

டிசாண்டிஸ் 13 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், முன்னாள் சௌத் கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி 8 சதவீத வாக்குகளும் தொழில்நுட்ப தொழிலதிபர் விவேக் ராமசாமி மற்றும் நியூஜெர்சி முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோர் முறையே 5 மற்றும் 3 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தற்போது பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரைமரி தேர்தலில் வென்று அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மத்திய அரசின் முக்கிய பிரிவுகளை மாற்றியமைப்பதாகவும் சமூக பாதுகாப்பு வலைத்திட்டங்களைக் குறைப்பதாகவும் கூறியுள்ளார். பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடுக்க ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதாகக் கூறி தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதாகவும் சபதம் செய்துள்ளார்! நியூயார்க் நகரில் பிறந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ட்ரம்ப் 2016 அதிபர் தேர்தலுக்கு முன் ரியல் எஸ்டேட் டெவலப்பர் மற்றும் தொழிலதிபராக இருந்தவர். "தி அப்ரெண்டிஸ்" என்னும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரபலமானவர். நவம்பர் 2022ல் அதிபர் தேர்தலுக்கான முகாந்திரத்தைத் தொடங்கி விட்டார். அதற்கு முன்பே அவர் மீதான வழக்குகளும் தொடங்கி விட்டது. இருந்தும் பைடனுக்கு எதிராகவும் அமெரிக்காவின் சிக்கல்களைத் திறமையாக கையாள்வதில் சிறந்தவராகவும் அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது.

ஜனநாயக கட்சியினரால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சரிவை மாற்றியமைக்க ஃபுளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக மே 2023ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதிய தலைமுறை தலைவராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்பவர். தனது மாநிலத்தில் நிர்வாக அதிகாரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய ஒரு கடினமான தலைவராக அறியப்படுபவர். கொரோனா காலத்தில் பள்ளிகளை விரைவாக திறந்தது, முகக்கவசம், கோவிட் தடுப்பூசி தேவைகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்தது என பைடன் அரசின் கட்டுப்பாடுகளை மீறிய மாநில ஆளுநர் என்பதால் கட்சியினரிடையே அதிக கவனம் பெற்றவர். ட்ரம்ப்பிற்குத் தொடரும் ஆதரவால் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அதிபர் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்றவர். ஜட்ஜ் அட்வகேட் ஜெனரலாக (JAG) கடற்படையில் பணிபுரிந்தவர். அதிபர் ஜோ பைடன் மற்றும் காங்கிரஸில் ஜனநாயக கட்சியினரால் முன்வைக்கப்பட்ட பல பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்து நாட்டைப் பொருளாதார சீரழிவிலிருந்து மீட்கப்போவதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஃபுளோரிடாவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார் டிசாண்டிஸ். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் முக்கியமான தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வது தடுக்கப்படும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது துணை நிறுவனங்களுக்கு விவசாய நிலங்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவுடனான நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை மாற்றியமைக்கவும் திருடப்பட்ட அறிவுசார் முறைகளால் செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யவும் சீனாவின் முன்னுரிமை வர்த்தக நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்புகிறார். கல்வித்துறை, எரிசக்தித்துறை,
குடியேற்றப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளாக இடதுசாரி சிந்தனைக்கு எதிரான பல திட்டங்களையும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இவர் தீவிர வடதுசாரி சிந்தனை கொண்டவர். பல கொள்கைகளில் முன்னாள் அதிபருக்கு உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் இந்தியர்கள் பலரின் கவனத்தைப் பெற்றுள்ள இந்திய அமெரிக்கரான விவேக் ராமசாமி பிப்ரவரி 2023ல் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பிரகனப்படுத்தி போட்டியில் பங்கேற்றுள்ளார். தற்போது மூன்றாம் இடம் நோக்கி முன்னேறி வரும் விவேக் இடதுசாரி கொள்கைகளுக்கு எதிரானவராக, இளைய தலைமுறை வாக்காளர்களை குடியரசுக்கட்சியில் இணைப்பதில் தீவிரமாகச் செயல்படுபவர். ஊழலுக்கு எதிரானவர். 38 வயதான விவேக் குடியரசுக்கட்சியின் தேர்தல் களத்தின் இளைய வேட்பாளர். “Nation of Victims: Identity Politics, the Death of Merit, and the Path Back to Excellence” and “Woke, Inc.: Inside Corporate America’s Social Justice Scam.”புத்தகங்களை எழுதியவர். இந்து மதத்தைப் பின்பற்றுபவர். ஓஹையோ மாநிலத்தில் சின்சினாட்டி நகரில் பள்ளிப்படிப்பை முடித்து ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டமும் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். அவரது மனைவி, அபூர்வா, ஓட்டோலரிஞ்ஜாலஜியில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர், அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

"ரோவியண்ட் சயின்சஸ்" என்னும் உயிரி தொழில்நுட்பவியல் தனியார் நிறுவனத்தையும் 'Strive Asset Management' என்ற முதலீட்டு மேலாண்மை நிறுவனதையும் நிர்வகித்த தொழிலதிபர். சமூக ஆர்வலர். "அமெரிக்கா ஃபர்ஸ்ட் 2.0" என்பது இவருடைய அரசியல் தாரக மந்திரம். இன்று நாடு எதிர்கொண்டிருக்கும் மிக அழுத்தமான பிரச்சினைகள், இழந்த பொருளாதாரத்தை மீட்டு கம்யூனிச சீனாவிலிருந்து சுதந்திரம் பெறுவது வரை விவேக்கின் பார்வை தேசிய மறுமலர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

முன்னாள் சௌத் கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி குடியரசுக்கட்சியில் புதிய தலைமுறை தலைமைக்கு அழைப்பு விடுத்து பிப்ரவரி 2023ல் தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் தெற்கு எல்லையை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் ஹேலி, ப்ரைமரியில் வெற்றி பெற்றால் முதல் பெண் மற்றும் அதிபர் பதவிக்கு குடியரசுக்கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையைப் பெறுவார். 2004ல் சௌத் கரோலினா ஹவுஸுக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அம்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக 2011ல் அவர் பதவியேற்றபோது நாட்டின் இளைய ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார். முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக 2017ல் பதவியேற்று 2018 வரை தொடர்ந்தார்.

சௌத் கரோலினாவின் பாம்பெர்க்கில் இந்திய பெற்றோர்களுக்குப் பிறந்தார். கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு முடித்தவர் அங்கு தனது கணவர் மைக்கேல் ஹேலியைச் சந்தித்தார். சௌத் கரோலினா இராணுவ தேசிய காவல் படையின் சார்பாக 2013ல் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய மைக்கேல் தற்போது ஒரு வருட பணிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஹேலிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் ஒரு பாரம்பரிய பழமைவாதி. அமெரிக்க கடனை நிர்வகிக்கவும் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும் நட்பு நாடுகளுடான ஆதரவைப் பராமரிக்கும் கொள்கைகளை முன்வைக்கிறார். தனது கிறிஸ்தவ நம்பிக்கை, கருக்கலைப்பு, சிறார்களுக்கான பாலின மாற்ற சிகிச்சைக்கு எதிரான எதிர்ப்பைப் பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளார். ஜூன் 2023ல் GOP நியமனத்திற்கான தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதன்மை போட்டியாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் 2020 தேர்தலுக்குப் பிறகு தனது நடவடிக்கைகளுக்காக "ஒருபோதும் ஜனாதிபதியாக இருக்கக்கூடாது" என்று கூறினார். ஜோ பைடனின் வெற்றிக்கான காங்கிரஸின் சான்றிதழை மேற்பார்வையிடும் துணைத் தலைவர் என்ற முறையில், ஜனவரி 6, 2021 அன்று தேர்தல் முடிவை மாற்றுவதற்கான ட்ரம்பின் வேண்டுகோளை பென்ஸ் நிராகரித்ததால் இருவரும் வெளியேறினர். முன்னாள் வானொலி பேச்சு தொகுப்பாளரான பென்ஸ், 2012ல் இந்தியானாவின் 50வது ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினராக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியானா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர். அவருக்கும் அவரது மனைவி கரேன் என்பவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

முன்னாள் நியூஜெர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி இரண்டாவது முறையாக அதிபர் தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளார். ஜூன் 2023ல் நியூஹாம்ப்ஷயரில் உள்ள டவுன் ஹாலில் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கி ட்ரம்ப்பை நேரடியாக எதிர்கொள்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மற்ற முக்கியப் பிரச்சினைகளுக்கிடையில் அவரது சட்ட சிக்கல்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து GOP முன்னோடியை மீண்டும் மீண்டும் தாக்கிப் பேசிவருகிறார். முன்பு 2016 GOP ப்ரைமரியில் இருந்து வெளியேறிய பிறகு ட்ரம்ப்பை ஆதரித்து 2020 மறுதேர்தல் பிரச்சாரத்தின் போது அவருக்கு நெருக்கமான ஆலோசகராகப் பணியாற்றினார். 2020 தேர்தல் முடிவுகளைப் பற்றிய முன்னாள் ஜனாதிபதியின் தவறான அறிக்கைகள், முடிவுகளை மாற்றியமைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பிறகு ட்ரம்பை எதிர்த்து குரல் கொடுக்கும் குடியரசுக்கட்சி விமர்சகர்களில் ஒருவரானார். கிறிஸ்டி 2009ல் கார்டன் மாநிலத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை ஆளுநராகப் பதவி வகித்தவர் பிரிட்ஜ்கேட் ஊழல், 2017 மாநில அரசு பணிநிறுத்தம் எதிர்ப்பின் காரணமாக 2018ல் பதவியை விட்டு வெளியேறினார். 2002 முதல் 2008 வரை நியூஜெர்சியின் அரசு வழக்கறிஞராக ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ.புஷ்ஷின் கீழ் பணியாற்றினார். ஊழலில் கடுமையானவர் என்ற நற்பெயரைப் பெற்ற கிறிஸ்டி 1987ல் செட்டான் ஹால் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றவர். மேரி பாட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

சௌத் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட், செனட்டில் உள்ள ஒரே ஒரு கறுப்பின குடியரசுக்கட்சி உறுப்பினர். கொள்கை ரீதியான பழமைவாதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஸ்காட், மே 2023ல் அதிபர் தேர்தலில் தன்னை இணைத்துக் கொண்டார். 1994ல் சார்லஸ்டன் நகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2010ல் அமெரிக்க காங்கிரஸிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு சௌத் கரோலினா காங்கிரஸில் பணியாற்றினார். 2013ல் நிக்கி ஹேலி அவரை காலியாக இருந்த செனட் இருக்கையை நிரப்ப செனட்டராக நியமித்தார். செனட்டில் பால்மெட்டோ மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் கறுப்பின நபர் என்ற பெருமையைப் பெற்றார். வடக்கு சார்லஸ்டனில் பிறந்த அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவரான ஸ்காட், சார்லஸ்டன் சதர்ன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவர். திருமணமாகாதவர். ஒரே மாநிலத்தில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்பதால் நிக்கி ஹேலிக்கும் டிம் ஸ்காட்ட்டிற்கும் பலத்த போட்டி இருந்தாலும் தேசிய அளவில் அறிமுகமான ஹேலிக்கு கட்சியினரிடையே ஆதரவு கூடி வருகிறது.

இவர்களைத் தவிர நார்த் டகோட்டா கவர்னர் டக் பர்கம், டெட் குரூஸ் இன்னும் பலர் போட்டியில் இருந்தாலும் அதிக கவனம் பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர்கள் ட்ரம்ப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில் தான் அரசியலே உள்ளது. எப்படி பந்தை வீசினாலும் சிக்ஸர் அடிப்பதில் கில்லாடி முன்னாள் அதிபர் என்பதால் தான் சட்டப்பிரச்னைகளை மீறி கட்சியில் அவருக்கு இன்னும் ஆதரவு உள்ளது. அவரை வெல்வது தான் மற்ற போட்டியாளர்களுக்கு மிகச் சவாலாக இருக்கும்.

அதுவும் தவிர, அமெரிக்கத் தேர்தலில் கட்சி தன்னார்வலர்கள், பிரச்சார உட்கட்டமைப்பு, பணம், விளம்பரங்கள் போன்ற சில காரணிகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. இவற்றையெல்லாம் தாக்குப் பிடிக்க முடிபவர்களால் மட்டுமே தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியும். இதன் பொருட்டே பலரும் வேட்பாளர் போட்டியிலிருந்து நடுவில் விலகி விடுவார்கள். தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் மக்களைச் சந்தித்து தங்களுடைய கொள்கைகளை எடுத்துரைத்து ஆதரவைத் தேடி வருகிறார்கள். விரைவில் மாநிலங்களில் ப்ரைமரி தேர்தல்கள் நடைபெற உள்ளது.

எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பைடனை எதிர்க்கத் தகுதியான குடியரசுக்கட்சி வேட்பாளராக இதுவரையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் இருந்து வருகிறார். அவருடைய சட்ட சிக்கல்கள் இந்த தேர்தலின் முடிவை மாற்றுமா என காத்திருக்கும் எதிர்கட்சியினருடன் சேர்ந்து நாமும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ட்ரம்ப் ஆட்டத்தில் இருக்கும்பட்சத்தில் மக்களிடையே ஆதரவு குறைந்து வரும் ஜோ பைடனுக்கு சவாலான தேர்தலாகத் தான் இருக்கும்.






Friday, September 1, 2023

ஸ்மைல் ப்ளீஸ்!


மலையாளப் படங்களைப் போலவே மராத்தியிலும் பல அருமையான படங்கள் வெளிவருகிறது. என்னுடைய தாய் பாஷையை ஒத்திருக்கும் மொழி என்பதால் நல்ல படங்கள் என்றால் உடனே பார்த்து விடுவோம். சமீபத்தில் அமேசான் ப்ரைமில் பார்த்த படம் 'ஸ்மைல் ப்ளீஸ்'. புகைப்படம் எடுப்பவருடைய கதை என்பதும் இப்படத்தைப் பார்க்க ஆவலைத் தூண்டியது. மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கதையை நல்ல செய்தியுடன் கொண்டு வந்ததற்கே பாராட்டலாம். கதாபாத்திரங்களின் அலட்டல் இல்லாத நடிப்பு. அழகான காட்சியமைப்பு. திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும். இதில் கூடவே மறதி நோய் பற்றின சிறிது விழிப்புணர்வும் இருக்கிறது. சபாஷ்👍

'Still Alice' என்ற ஹாலிவுட் திரைப்படம் மறதி நோயால் பாதிக்கப்பட்டவருடைய வாழ்க்கையை அழகாகச் சித்தரித்திருக்கும். அதில் நடுத்தர வயது கதாநாயகி. ' ஸ்மைல் ப்ளீஸ்' படத்தில் மிகச் சிறிய வயதில் கூட இந்நோய் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதையும் அவரைச் சுற்றியுள்ள குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, நோயை எதிர்கொள்ள கதாநாயகி தடுமாறுவதையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஆழமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் 'அல்சைமர்ஸ்' என்று அங்கொன்று இங்கொன்றுமாக பரவலாக கேட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்நோயைப்பற்றி மக்கள் அறிந்து கொள்வதும் அவசியம். அதனால் இந்தப்படம் கவனம் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.

அவரவர் கனவைத் துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நோயாளிக்குத் தேவையான கவனத்தையும் அன்பையும் தர வேண்டிய அவசியம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. அந்நிலையிலும் அன்பானவர்ளின் ஆதரவால் கனவைச் சாதிக்க முடியும் என்ற நல்ல செய்தியுடன் நிறைவடைகிறது. அப்பாடா! நமக்கே ஆயிரத்தெட்டு சோதனைகள்! சோகமாக முடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது😊 

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை நண்பர்கள் மூலம் கேட்டறிந்திருக்கிறேன். 'Still Alice' படத்தைப் பார்த்தவுடன் எனக்கு அப்படியொரு நிலை வந்தால் எப்படி இருக்கும் என்று உண்மையிலேயே பயந்து போனேன். முன்னெச்சரிக்கையாக குழந்தைகளிடம் கூட பேசினேன். இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் குழப்பங்கள், ஏமாற்றங்கள், தனிமை, விரக்தியை பொறுமையாக கையாளும் மனப்பக்குவம் அவரைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு அவசியம். அழகான காட்சியுடன் படத்தை நிறைவு செய்ததற்கே விருது கொடுக்கலாம்😊

பொறுமை இருப்பவர்களும் வசதியுடையவர்களும் கிடைத்தால் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எஞ்சிய வாழ்க்கையை ஓரளவு நிம்மதியாக கழிப்பார்கள். மற்றவர்களின் நிலைமை பாவம் தான்😔 இவர்களைக் கையாளுவது அத்தனை எளிதல்லவென பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் மட்டுமே நன்கு அறிவர். நண்பர் ஒருவரின் தந்தை காணாமல் போய் அவரைக் கண்டுபிடிப்பதற்குள் குடும்பமே பதறிப்போனது. எதிரே நிற்கும் குடும்ப உறுப்பினர் யார் என்றே தெரியாமல் வேற்று மனிதருடன் பேசுவது போல் பேசும் அன்பானவர்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது😢

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிமென்ஷியா பாதிப்பு 7.4% என்று ஆய்வுகள் கூறுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட 8.8 மில்லியன் இந்தியர்கள் டிமென்ஷியாவுடன் வாழ்கின்றனர். ஆண்களை விட பெண்களிடையே அதிகமாகவும், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாகவும் இந்நோய்த்தாக்குதல் உள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அல்சைமர் சங்கம் வெளியிட்டுள்ளது😔

தமிழில் ஏன் இத்தகைய படங்கள் வருவதில்லை என்று யோசித்தால் புரியும். சாதியை ஒழித்து விட்டோம் என்று கொக்கரித்துக்கொண்டே கொம்பு சீவும் 'சாதீய' படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைமை மாறாத வரை நாம் மலையாளம், மராத்தி, இந்திப் படங்களைப் பார்ப்போம்.

2020ல் மராத்தியில் சிறந்த கதாநாயகிக்கான விருதை இப்படத்தில் நடித்த 'முக்தா பார்வே' பெற்றிருக்கிறார்👏


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...