Sunday, January 25, 2015

விமானத்தில் ஓர் நாள்...

பஸ், ரயில், விமான பயணங்கள் என்றுமே ஒரு அனுபவமாகவும், பல சுவாரசியங்களுடனும் இருக்கும். சமயங்களில் தொல்லையாகவும், எதிர்பாரா திருப்பங்களுடனும் இருந்தாலும் பயணத்தின் போது நாம் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் நடை, உடை, பாவனை, சம்பிராதாய பேச்சுக்கள் ...இன்னும் இப்படி எவ்வளவோ மனதை ஈர்க்கும் விஷயங்கள்! அந்த வகையில் பயணங்களை நான் மிகவும் ரசிப்பதுண்டு.

விடுமுறை முடித்து கலிஃபோர்னியாவிலிருந்து இரவில் பதினொரு மணிக்கு சிகாகோ நோக்கி விமானம் கிளம்பியது. மூடிய விமானத்திற்குள் மூச்சு திணறுவது மாதிரி இருந்தாலும் நடு சீட்டில் உட்காரும் பொழுது உண்மையாகவே அப்படி தான் இருந்தது. சே! வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வர கண்ணாடி சீட் கிடைக்கவில்லையே என்று ஒரு சின்ன எரிச்சல்! அந்த சீட்டில் உட்கார்ந்திருந்தவன் கல்லூரி படிக்கும் மாணவன் போல் இருந்தான். ஒரு சிநேக புன்னகையுடன் ஹாய் என்றான். பதிலுக்கு நானும் ஒரு ஹாய் சொல்லிக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன். கணவர், குழந்தைகள் அவரவர் இடங்களில். வலப்பக்கத்தில் வந்து அமர்ந்தவன் உட்கார்ந்த மறு நிமிடமே நித்யாதேவியின் அரவணைப்பில்!!! எப்படித்தான் இவர்களால் இப்படி தூங்க முடியுமோ??? கொடுத்து வைத்தவர்கள்!

சிறிது நேரத்தில் விமானமும் அன்ன நடையிட்டு ரன்வேயில் மற்ற விமானங்களைத் தொடர, என் அருகில் அமர்ந்திருந்தவன் சிறு குழந்தையின் உற்சாகத்துடன் தானாகப் பேசி சிரித்து ரசித்துக் கொண்டிருந்தான்! கடைசியில் சிக்னல் கிடைத்து விமானம் மேலெழும் பொழுது கண்களை இறுக மூடிக் கொண்டு எதையோ சொல்லிக் கொண்டே அடிக்கடி கைகளை கழுவுவது போல் ஏதோ ஒருவித டென்ஷனில் இருந்தான்! சடக்கென்று காலை கொஞ்சம் மேலே தூக்குற மாதிரி பண்ணுவான் பிறகு கீழே குனிந்து எதையோ தேடுவது போல் சிறிது நேரம். நான் பார்த்தால் ஒரு ஹி ஹி...

ஹார்ம்லெஸ் பட் நார்மலாக இல்லை என்று மட்டும் புரிந்தது. எனக்குன்னு எங்கிருந்து தான் வருவார்களோ! இனி தூங்கிய மாதிரி தான் என்று எண்ணிக் கொண்டேன்.

முன்வரிசையில் ஒரு கைக்குழந்தை திடீர் திடீரென அழுது மற்றவர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க, 'என்ன நடந்தாலும் தூங்குவோர் சங்கத்து ஆட்கள்' மட்டும் கண்களை இறுக்க மூடிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்! நடுநடுவே குளிர்பானங்களும் வந்து போய்க் கொண்டிருந்தது. விமானம் ஆட்டம் காணும் போதெல்லாம் விமானியின் எச்சரிக்கை மணி ஒளிர, தூங்குற ஜனங்களுக்கு என்ன கவலை? என்னைய மாதிரி கோட்டான்கள் தான் எப்படா விடியும் என்று காத்திருந்தோம். அடிக்கடி என் குழந்தைகள் தூங்குகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஒரு வழியாக அதிகாலையில் ஐந்து மணிக்கு சிகாகோவில் தரையிறங்கும் பொழுது லேசான பனித்தூறல்! என் அருகில் அமர்ந்திருந்தவன் ஹை! ஸ்னோ ஸ்னோ என்று திரும்பி என்னை பார்த்தவன் சிரித்துக் கொண்டே ஹி ஹி! ஐ ஆம் ஃப்ரம் நியூ ஆர்லியென்ஸ். நெவர் சீன் ஸ்னோ பிஃபோர் என்று மீண்டும் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருந்தான். அப்பாடா ! எஸ்கேப் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே இறங்கும் பொழுது தூக்கத்திற்கு கண்கள் ஏங்கியது!

சிகாகோவில் குளிருக்கா பஞ்சம்?? செம குளிர்! விமான நிலையத்தில் நுழைந்தவுடன் அதிகாலை என்பதே மறந்து போய் விட்டது. அந்த நேரத்திற்கே கடைகள் திறக்கப்பட்டு, எண்ணையில் பொறியும் சிக்கன், பீப், பேக்கன் மற்றும் பீட்சா வாசனையில் தூங்கிக் கொண்டிருந்த வயிறும் முழித்துக் கொண்டது. மகன் விழித்துக் கொண்டே பிரகாசத்துடன் கடைகளை நோட்டமிட்டுக் கொண்டு வர, வழி கேட்டு நடந்தோம் நடந்தோம் ஒரு அரை மைல் தூரத்திற்கும் மேல்...அவ்வளவு பெரிய்ய்ய்யய விமான நிலையம்!!!

'மினுக்மினுக்' வண்ண ஒளியில் கண்களை கவரும் விதத்தில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்! குழந்தைகள், வயதானவர்கள், உடல் ஊனமுற்றோர்களுக்கான வசதிகளுடன் கழிவறைகள், உட்காருவதற்கு வசதியான இருக்கைகள், பலவித உணவுக்கடைகள், தடுக்கி விழுந்தால் ஸ்டார்பக்ஸ் என்று விமான நிலையம் கலகலப்பாகவும், சுத்தமாகவும் இருந்தது. கலைநயத்துடன் கூடிய சிலைகள், ஓவியங்கள் என்று அழகாக அலங்கரித்து வைத்திருந்தார்கள். ஏனோ, சென்னை விமான நிலையம் இப்படி இல்லையே என்ற ஏக்கம் வந்தது :(

நடந்த நடையில் தூக்கமும் பிரியாவிடை கொடுக்க...இனி மூன்று மணிநேரம் காத்திருக்க வேண்டும். ஒவ்வொருவராக முகம் கழுவிக் கொண்டு வந்தாயிற்று. சுற்றிலும் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில்! வாயை திறந்து போட்டபடி, முகத்தை புத்தகத்தால் மறைத்தபடி, ஒரு கையை முட்டுக் கொடுத்தபடி, காலை நீட்டிக் கொண்டு இப்ப சரிந்துடுவாரோ என்று பயமுறுத்தியபடி ...இப்படி பல கோணங்களில் பலரும் தூங்கியபடி இருக்க...தூங்க மறந்த குழந்தைகள் கைகளில் பொம்மைகளுடன் சுற்றிக் கொண்டிருக்க அவர்களுடன் அரைத்தூக்கத்தில் பாவப்பட்ட பெற்றோர்கள்!

அந்த அதிகாலை நேரத்திலும் 'டிப்டாப்'பாக உடையணிந்தவர்களும், பார்த்தவரை கவரும் வண்ணம் உதட்டுச்சாயத்துடன் 'பளிச்'சென்ற மேக்கப்புடன் வளைய வரும் பெண்களும், அழுக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் இளைஞர்களும், காதில் ஹெட்ஃபோன், கையில் அலைபேசி, கணினியுடன் மற்றும் சிலரும் என்று வேடிக்கை பார்க்க அவ்வளவு மக்கள் கூட்டம்! பெண்கள் பலரும் 'UGG' பூட்ஸ் அணிந்திருந்தார்கள்!

என் தூக்கம் போயாச்சு! இனி என்ன செய்வது? அங்கிருக்கும் செல்ஃபோன் சார்ஜிங் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு சிறிது நேரம் நாட்டு நடப்பை பார்க்க வேண்டியது தான்! அதுவும் சிறிது நேரத்தில் போர் அடித்து விட்டது. இப்போது என்ன செய்வது? சுவர்களில் மாட்டி இருந்த படங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அத்தனையும் குளோபல் வார்மிங் சம்பந்தமாக பெரிய பெரிய புகைப்பட வல்லுநர்களால் எடுக்கப்பட்ட அழகிய படங்கள். பல வருடங்களுக்குத் தொடர்ச்சியாக ஐஸ்லேண்ட், அண்டார்டிகா , ஐரோப்பிய நாடுகளில் பனிமலைகள் உருகி நீர்மட்டம் உயர்ந்திருப்பதை புள்ளி விவரங்களுடன் படிக்க படிக்க பதட்டம் !!! அப்படியே அங்கிருந்த படங்களை பார்த்தும் படித்தும் முடித்தாயிற்று. கிளைமேட் சேன்ஜ் தற்போதைய ஹாட் டாபிக். படித்தால் கவலை தான் மிஞ்சுகிறது! எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் ?? யோசித்துக் கொண்டே வந்தால் இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது அடுத்த ஃபிளைட்டுக்கு !

திடீரென ஒரு அறிவிப்பு- கேட் மாறி விட்டது என்று! பாம்பே விமான நிலையம் கண்முன் வந்து சென்றது. திட்டிக் கொண்டே மீண்டும் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு ஓட்டம்! அங்கு ஏற்கெனவே இருந்த கூட்டத்துடன் ஐக்கியாமாயச்சு!

சொன்ன நேரத்திற்கு விமானமும் வந்து, வரிசை எண் படி உட்கார்ந்து இப்பொழுது எனக்கு ஜன்னல் சீட்! ஹையா!!! ஜாலி ஜாலி! பக்கத்தில் நின்றிருந்த விமானத்தை நீரில் கழுவி விட்டு கொட்டும் பனி உறைந்து விடாமல் இருக்க ஆன்டி-ப்ரீசிங் கெமிக்கலை ஸ்ப்ரே செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் குளிரில் பனிமழையில் நனைந்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்க்க கஷ்டமாக இருந்தது!

நாங்கள் இருந்த விமானத்திற்குள் இருவர் ஏறுவதும் இறங்குவதுமாய் எதை எதையோ சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்! விமான பணிப்பெண்ணும் எங்கெங்கு எக்ஷிட் இருக்கிறது, தண்ணீரில் விமானம் இறங்கி விட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்று சொல்லும் பொழுது, தண்ணீரில் விழுந்தால் குளிரிலேயே மர்கயா தான். ஆனாலும் ஒரு நம்பிக்கை- ஃப்லோட்டிங் சீட் இருக்கிறதா என்று சரிபார்த்தாயிற்று! மதியத்திற்குள் ஊருக்குச் சென்று விடலாம்! போனவுடன் நானும் மகளும் மெக்சிக்கன் உணவு சாப்பிடுவது என்றெல்லாம் கனவு காண ஆரம்பித்து விட்டோம் !

திடீரென ஒரு பெண்மணி வந்து விமானத்தில் எடை அதிகமாக இருக்கிறது. இரண்டு பேர் இறங்கினால் ஆளுக்கு $500 டிஸ்கவுன்ட் என்று ஆசை காட்ட , இருவர் இறங்கியும் இன்னமும் கிளம்புவேனா என்று அடம் பிடித்து நின்று கொண்டிருக்க...சிறிது நேரம் கழித்து அதே பெண்மணி விமானத்தில் ஏதோ மெக்கானிக்கல் கோளாறு இறங்குங்கள் என்று சொல்லி எல்லோரையும் இறக்கி விட்டார்கள். சிலர் டென்ஷன் ஆனார்கள்! என்ன பயன்?? அந்தப் பெண்மணி யாருடனோ பேசுவது போல் எங்களை விவரமாக தவிர்த்தார்.

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்...ஓடியே போயிற்று. அதற்குள் பனிமழையும் தீவிரமாக , வெதர் காரணம் என்று மேலும் இரண்டு மணி நேரங்கள்! யாரும் குரலை உயர்த்தி 'காச்மூச்' என்று கத்தவில்லை. பொறுமையாக உட்கார்ந்திருந்தார்கள்!!

இப்படியே போனால் என்ன செய்வது? இரவிற்குள் வீடு போய் சேருவோமா என்ற கவலை வந்து விட்டது. இதற்கு முன்னும் நியூயார்க்கில் எட்டு பத்து மணிநேரங்கள் மாட்டிக் கொண்ட அவஸ்தையான அனுபவமுண்டு. நினைத்தாலே பயமாக இருந்தது!

வானிலிருந்து அழகாக அசைந்து அசைந்து கீழிறங்கி பூமியை அலங்கரிக்கும் பனிமழையை வேடிக்கை பார்ப்பது தவிர வேறென்ன செய்ய முடியும் ? சிறிது நேரத்தில் எங்கும் வெள்ளைவெளேர் என பனியின் ராஜ்ஜியம்! விமானங்கள் வருவதிலும், இறங்குவதிலும் பிரச்னைகள் ஏற்பட்டு சிறு கலவரம்!

மக்கள் தரையில் அமர்ந்து கொண்டு கணினி மற்றும் கைப்பேசியில் தொலைந்திருந்தார்கள். என் அருகில் இருந்தவரின் மனைவி கடைக்குச் சென்று கொழுப்பில்லாத பால், வாழைப்பழம், க்ளூட்டன் ஃப்ரீ கேக் என்று கணவருக்கு கொண்டு வந்து கொடுத்தார். கணவர்களின் உடல்நலத்தில் மனைவிகளுக்குத் தான் எவ்வளவு அக்கறை???

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிக்கிட்டும் , ஃபேஸ்புக்ல பொலம்பிக்கிட்டும், எப்பத்தான் ஃபிளைட் வரும் என்று மக்கள் டென்ஷன் ஆக, இந்தா அந்தா என்று வந்து சேர்ந்தது ஒரு விமானம். கடவுளே, இதாவது பத்திரமாக எங்களை ஊர் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீடு வந்து சேரும் பொழுது மாலை நேரமாகி விட்டது. கலிஃபோர்னியா நேரப்படி மாலை தான் என்றாலும், நியூயார்க் நேரப்படி இரவு மலர ஆரம்பிக்க...

வந்தவுடன் மெக்சிக்கன் உணவு சாப்பிட்டுத் தூங்கியவர்கள் தான்...







































Wednesday, January 7, 2015

அவள் எனக்கா மகளானாள்...

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல நெகிழ்ச்சியான தருணங்கள். மனம் அசை போட்டு பார்த்திட இன்பமான நிகழ்வுகள். அப்படியான ஒன்று- 'கங்கிராஜுலேஷன்ஸ், நீ அம்மாவாக போற' என்று மகப்பேறு மருத்துவர்((நாத்தனாரும் கூட) கூறிய அந்நாள், வாழ்வில் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய நாள் என்று கூட சொல்லலாம்.

ஒரு உயிரை சுமக்கப் போகிறேன் என்ற நினைவே எனக்குள் ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஒருங்கே ஏற்படுத்தி இன்பத்தையும், பயத்தையும் கொடுத்தது. செய்தி கேட்ட அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம். அதுவரை என் இஷ்டத்திற்கு இருந்த வாழ்க்கை அன்று முதல் நான் செய்யும் ஒவ்வொன்றையும் என்னுள் வளரும் கருவை முன்னிறுத்தியே மாறிப் போனது. தலைச்சுற்றல், வாந்தி என்ற பிரச்னைகள் ஏதும் இல்லாவிட்டாலும் மனதளவில் ஒருவித மாறுதல்!

மெதுவா நட, பார்த்துப் போ, பைக்கில போகத்தான் வேணுமா ?? .. இப்படி பல கேள்விகளை பார்க்கிறவர்கள் என்னை பார்த்து கேட்ட பொழுது கூடுதல் கவனமும் பதட்டமும் என்னைத் தொற்றிக் கொள்ள...கை தானாகவே அடிவயிற்றை தொட்டுப் பார்த்து உனக்கு ஒன்றும் இல்லை. நான் கவனமாக இருப்பேன் என்று எனக்குள் நானே பலமுறை சொல்லிக் கொண்டேன்.

கணவரிடமும் இனிமேல் தடாலடியாக பைக்கை ஓட்ட வேண்டாம். இருவரும் பைக்கில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் அறிவுரை கூற அவர் இன்னும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள...

தங்கையும் மகப்பேறு மருத்துவராக இருந்தது மிக்க பலமாக இருந்தது. நான்காவது மாதத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்று தெரிந்தவுடன் டாக்டரும் கண்டிப்பாக பல வாரங்களுக்கு ஒய்வு தேவை என்று சொல்லி, எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பயத்தில் கழிந்த நாட்கள் என்னை ஆயாசப்படுத்தினாலும் அம்மா வீட்டில் என்னை கவனித்துக் கொள்ள ஆட்கள் இருந்தாலும் அனைவருக்கும் கவலையை தந்த நாட்கள் அவை.

ஒன்றும் செய்யாமல் படுத்தே இருப்பது ஒரு கொடுமை என்றுணர்ந்த நாட்களும் கூட! நான் எழுந்திருந்து நடந்தால் மெதுவா, பார்த்து என்று என்னைச் சுற்றி என் குடும்பத்து ஆட்கள் பதட்டத்துடன் என ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகவே கழிந்தது. ஒரு வழியாக மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு தான் நான் நானாகவே உணர்ந்தேன்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தையும் வளர, வயிறும் பெரிதாக, பார்த்தவர்களும் உனக்குப் பெண் குழந்தை தான் என்று சொல்லியே பூரிப்படைய வைத்தார்கள். ஏற்கெனவே செய்த ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் கணவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அந்நொடியிலிருந்து என்ன பெயர் வைப்பது, எப்படி அழைப்பது என்ற கனவு தான். வீட்டிற்கு வந்தவுடன் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் கண்ணில் பட, பெயரும் அன்றே முடிவானது :)

நாட்கள் செல்ல செல்ல விருந்துகளும் அதிகமானது. நான் எதன் மேலாவது ஆசைப்பட்டு சாப்பிடாமல் போனால் குழந்தைக்கு ஏதாவது ஆகி விட்டால்??? (நல்ல காரணம் எனக்கு கிடைத்து விட்டது... ) அதான், பருத்திப்பால் , பால்கோவா, பெங்காலி ஸ்வீட்ஸ்,ரசமலாய், ஜிலேபி, போளியல் இத்யாதிகள் முதல் வகைவகையான பிரியாணி விடாமல் சாப்பிட்டு...

தாழம்பு, மனோரஞ்சிதம் , பிச்சி, கொடிப்பிச்சி, மல்லிகை, முல்லை என்று மலர்களையும் சூடிக் கொண்ட அந்த நாட்கள் ...மனம் விரும்புதே :)

வளைகாப்பு செய்து எங்களுக்குப் பழக்கமில்லை என்று புக்ககத்தில் சொன்னாலும் தன் ஆசைக்காக கைநிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்து அழகு பார்த்தாள் அம்மா.

எட்டாம் மாதத்தில் இருந்தே பார்ப்பவர்கள் எல்லாம் எப்போ டெலிவரி என்று கேட்கும் அளவுக்கு நானும் மாறித் தான் போனேன்!

வேலை பார்த்த கல்லூரி மலை மேல் இருந்ததால் நடப்பதும் கடினமாகிப் போனது. கால் வீங்கினால் பார்லி தண்ணீர், காலையில் வெறும் வயிற்றில் பழைய சாதம் கரைத்த தண்ணீர், கால்சியம் மருந்துகள் , பழங்கள், காய்கறிகள், கீரைகள் என்று எனக்குப் பழக்கமில்லாத, பிடித்த, பிடிக்காத அனைத்தையும் என் குழந்தைக்காக, அவளின் நலனுக்காக என்று சாப்பிட ஆரம்பித்தேன்.

டாக்டரும் சிறுசிறு வேலைகள், யோகா, உடற்பயிற்சிகள் செய்தால் நல்லது என்றவுடன் தினமும் வீட்டை துடைப்பது என ஆரம்பித்தேன். மனதில் ஓடிய ஒரே விஷயம், நார்மல் டெலிவரி ஆக வேண்டும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நிறையவே மெனக்கெட்டேன்.

கேட்கும் பாட்டிலிருந்து படிக்கும் புத்தகம் வரை என ஒவ்வொன்றிலும் கவனம். கணவரும் எனக்குப் பிடித்த, அவருக்குப் பிடித்த பாடல்களை கிடார், புல்லாங்குழல் கொண்டு இசைக்க, குழந்தையின் அசைவை கண்டு களித்த கணங்கள் எல்லாம்...இனிமையானவை!

சுடச்சுட சாப்பிட்டாலோ, குடித்தாலோ குழந்தைக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாதே என்ற கவலை வேறு! கணவரின் நண்பர்கள் சர்ப்ரைஸாக குடும்பங்களுடன் வந்து சுவையான மீன் குழம்பும், வறுவலும் செய்த அந்த நாட்கள் மறக்க முடியாததொன்று!

பிரசவ நேரம் நெருங்குகையில் சாப்பாடு, தூக்கம் குறைந்து களைப்புடன் எப்போது குழந்தை பிறக்கும் என்று நாட்களை எண்ண ஆரம்பிக்க...

ஜனவரி முதல் வாரத்தில் ஒரு வெள்ளிகிழமையன்று நடக்க முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்த கல்லூரி முதல்வர் எப்போதிருந்து விடுமுறையில் போகிறாய் , நன்றாக ரெஸ்ட் எடுத்துக் கொள் என்று அன்புடன் சொல்ல... என்னை பார்ப்பவர்களுக்கு பயமாக இருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன்.

மாதம் ஒரு முறை டாக்டரைப் பார்க்க ஆரம்பித்து, நாட்கள் நெருங்க மாதம் இருமுறையானது. ஒன்பதாவது மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை சென்று பரிசோதித்துக் கொள்ள, டாக்டரும் குழந்தை நலமாக இருக்கிறாள், பயமே வேண்டாம் இன்னும் இரு வாரங்களில் உன் கைகளில் தவழுவாள் என்றவுடன் பயமும் பரவசமுமாய் வீடு வந்து சேர்ந்தோம்.

வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் பார்த்துக் கொண்டே ராபியா பிரியாணியையும் ஒரு கட்டு கட்டி விட்டு அப்பாடா என்று நிமிர்ந்தால் ஒரு இனம் புரியாத வலி வயிற்றில். டாக்டரை பார்த்து விட்டு தானே வந்தோம். இது ஒரு வேளை, false pain போல என்று எனக்குள் நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

சில நிமிடங்களில் 'விசுக்விசுக்' என்று உயிர் போகும் வலி. நிச்சயமாக இருக்காது. டாக்டர் தான் குழந்தையின் தலை திரும்பவே இல்லை. இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கிறது என்று சொன்னாரே! ஒரே குழப்பத்துடன் இருப்பதை பார்த்து கணவரும் என்னாச்சு , ஏன் டல்லாயிட்டே? ஆர் யூ ஆல்ரைட்? என கேட்டவுடன், வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. false pain போல என்றவுடன் பிரசவத்தை பற்றின புத்தகத்தை புரட்ட, அதில் சொல்லப்பட்டிருந்த அனைத்தும் என்னுள் நடப்பதை உணர்ந்தேன்.

எப்படி சாத்தியமாகும் என்று நினைக்கும் போதே உயிர் போய் மீண்டது போல் ஒரு வலி. அப்போதே இரவு 11 மணிக்கு மேல் ஆகி விட்டது. காலை வரை தாக்குப்பிடிக்க முடியும் என்ற நினைப்பு சிறிது சிறிதாக உடைந்து கொண்டிருந்தது. கணவருக்குப் பதற்றமும் தொற்றிக் கொள்ள, ஏற்கெனவே தயாராக வைத்திருந்த துணிகளை பையில் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே தாங்க முடியாத வலியில் துடிப்பதை பார்த்த என் கணவரும் பக்கத்து வீடுகளின் கதவை தட்டிப் பார்த்தும் பலனில்லாமால், என்னை தனியே விட்டுச் செல்ல பயந்து என்ன செய்வது என்று தவித்த தவிப்பு...அவருக்குள்ளும் பயம் தொற்றிக் கொண்டது.

தொலைப்பேசி, கைப்பேசியின் உதவியின்றி தொடர்பு கொள்வது எவ்வளவு சிரமம் என்று இன்று நினைத்தால் புரிகிறது!

ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில்! சரி, அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குப் போகலாம், பைக்கில் தான் போக வேண்டும் என்று கணவர் பயத்துடன் சொன்னாலும், அதெல்லாம் ஒன்னும் ஆகாது அம்மா வீட்டிற்கே போய் விடலாம். அங்கு தங்கை இருக்கிற தைரியத்தில் என்ன நடந்தாலும் அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் நடுஜாமத்தில் பைக்கில் மெதுவாக இப்ப எப்படி இருக்கு, இன்னும் கொஞ்ச தூரம் தான், வலி வந்தா சொல்லு என்று அவர் பேசிக் கொண்டே சென்றாலும் வலியின் தீவிரம் அதிகமாகிக் கொண்டே போவதை பல்லை கடித்துக் கொண்டு... வீடு போய் சேர்ந்தால் போதும் என்ற கவலையிலும் பயத்திலும் நான் அமைதியாகவே இருந்தேன்.

ஒரு வழியாக வீட்டிற்கு வந்தவுடன் சிரமப்பட்டு மாடியேறி ...அதற்குள் பதட்டத்துடன் குடும்பமே அல்லோலகப்பட, கீழ் வீட்டிலிருந்து வந்தவர்கள் விபூதி பூசி விட, அம்மா சீரகத்தண்ணீர் கொடுக்க, தங்கை ஊசி போட்டு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்று சொல்ல, வாடகைக்கார் பிடிக்க திருப்பரங்குன்றத்திற்கு கணவரும் தம்பிகளும் ஓட,  டிராபிக் இல்லாத கீழவாசல் வழியாக ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தோம்.

அப்பாவுக்குத் தான் என் மேல் கோபம். வரும் வழியில் பைக்கில் ஏதாவது ஆகி இருந்தால் என்று அந்த நேரத்திலும் என்னை கடிந்து கொண்டார் :(

பல வருடங்களாக பிரசவங்களைப் பார்த்து அனுபவமிக்க தாதி ஒருவர் தூக்கக்கலக்கத்தில் கதவை திறந்து விட்டு டாக்டருக்கு உறவினர்கள் என்று தெரிந்தபடியால் டாக்டருக்கும் சேதி சொல்லி விட்டார். அதற்குள் பெரியப்பா, பெரியம்மாவிற்கும் தகவல் சொல்லி அவர்களும் வந்து சேர்ந்து விட்டார்கள். கணவரும், தம்பியும் டாக்டர் வீட்டுக்கே சென்று விட்டார்கள். மணி இரண்டு, மூன்று என்று கரைய வலியின் தீவிரமும் கூடிக் கொண்டே வர, பெற்றவர்களுக்குத் தான் பொறுக்குமா? அவர்களுக்குத் தான் மகளின் வலியும், பிறக்கப் போகும் குழந்தையை பற்றின பயமும், எல்லாம் நல்லவிதமாக முடிய வேண்டுமே என்ற கவலையும்.

டாக்டர்களுக்கு இதெல்லாம் பழகிப் போன ஒன்று தான். அவரும் தங்கையிடம் பேசி உடனே வருவதாக கூறி, எல்லாவற்றையும் தயராக வைத்திருக்குமாறு நர்சிடம் சொல்லி விட்டார்.

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திருக்கு மாற்றி விட்டார்கள். டாக்டரும் வந்து விட்டார். பிரசவ வலியின் உச்சத்தில் எனக்கு சிசெரியன் பண்ணி விடுங்கள் என்று அழுத அழுகையில், டாக்டர் சிரித்துக் கொண்டே நார்மல் டெலிவரி தான் பண்ண வேண்டும் என்று சொன்ன நீயா இப்படி எல்லாம் பேசுகிறாய், பயப்படாதே, உன் தங்கையும் இருக்கிறாள். நான் இருக்கிறேன், எல்லாம் நலமாக முடியும், நீ ஒத்துழைத்தால் என்று பேசிக் கொண்டே ஏதேதோ ஊசிகள் போட்டு, ஒரு பெண்ணின் 'வலி'மை என்ன என்று உணர வைத்து...மயங்கும் வேளையில்...இதோ உன் குழந்தை என்று கைகளில் கொடுக்க,

புஷ்டி கன்னங்களுடன் அழுது கொண்டே ஒரு புதிய ஜனனம்...இனம் புரியாத ஒரு உணர்வுடன் கைகளில் தவழ்ந்த குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் கணவரும் வந்து சேர, அம்மாவும் சுடச்சுட காபி தர, அப்பாடி ஒரு பெரிய சுமையை இறக்கிய திருப்தியில் நான். தம்பிகளும், தங்கையும், அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா என்று மாறிமாறி குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கொஞ்சிய அந்த நாளிலிருந்து இன்று வரை பாட்டி வீட்டுச் செல்லம்  எனக்கு என்றுமே குழந்தையாகத் தான் தெரிகிறாள்.

வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும் அவள் மூலம் நான் கற்ற பாடங்கள் பல!

பல நேரங்களிலும் 'அவள் எனக்கா மகளானாள்...நான் அவளுக்கு மகளானேன்' என்று எண்ண வைத்து விடுகிறாள்!









ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...