Sunday, January 21, 2024

அமேசிங் பிரிட்டன் - 2- யார்க் , ஹேட்ரியன்ஸ் வால் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 310ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் இரண்டாவது பாகம்.  

யார்க் , ஹேட்ரியன்ஸ் வால் பயணக்குறிப்புகள்

பயணங்களின் சுவாரசியமே வழியில் காணும் காட்சிகள் தான். நாம் செல்லப்போகும் இடங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருப்போம். ஆனால் வழியில் எதிர்பாராத காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ளும். மழைமுகில்கள் தொடர, வழியெங்கும் பச்சைப்பசேல் புற்களும் மஞ்சள் நிற மஸ்டர்டு பூக்கள் பூத்துக் குலுங்கிய நிலங்களுமாய் மழைக்கால அழகு சாமரம் வீசிக்கொண்டிருந்தது. திகட்டத் திகட்ட ஷேக்ஸ்பியர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இடங்களைச் சுற்றிப்பார்த்து விட்டு பெரியப்பா மகள் வீட்டிற்குக் கிளம்பினோம். M69 சாலை வழியில் தென்பட்ட ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் நியூஇங்கிலாந்து மாநிலங்களிலும் உள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அமெரிக்கா வரை இருந்ததற்கான சாட்சி!

இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு குடியிருப்புப்பகுதிகள் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். அமெரிக்காவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலவமைப்பு. சிறியதாக, நேர்த்தியாக அணிவகுத்து நின்றிருந்த கற்கள் அல்லது செங்கற்கள் பதித்த வீடுகள். கஸின் வீட்டிற்கு நேரத்தோடு வந்து சேர்ந்து விட்டோம். அவர்களுடைய தனி வீடு கைக்கு அடக்கமாக இருந்தது. நிச்சயம் இந்திய அமெரிக்கர்கள் வசிக்கும் வீடுகள் இவர்களைப் பிரமிக்க வைத்திருக்கும்! பெரியப்பா மகளும் என் வயதினள். அவள் கணவர் அங்கு மருத்துவராகப் பணிபுரிகிறார். இவளும் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். விடுமுறை நாள் என்பதால் இருவரும் ஆற, அமர பேச முடிந்தது. மிக நன்றாகச் சமைப்பாள். சைவம், அசைவம் என்று அமர்க்களப்படுத்தியிருந்தாள். சாப்பிட்டு முடித்த பிறகு, பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். பேசுவதற்கு விஷயங்களா இல்லை? அதுவும் பெண்கள் இருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது😛 எல்லார் மண்டையையும் உருட்டிய பிறகு தூங்கச் சென்றோம்😂

மறுநாள் காலையில் மிகச்சீக்கிரமாகவே தயாராகி இறங்கி வருவதற்குள் தட்டு இட்லி, தோசை, பூரி, மசாலா என்று மதுரைக்குச் சென்று வராமலே அனைத்தும் சுவையுடன் மேஜை மீது காத்திருந்தது. நன்றாகச் சாப்பிட்டோம். அங்கிருந்து நாங்கள் செல்லவிருக்கும் ‘யார்க்’ நகரத்தில் பார்க்க வேண்டிய இடங்களையும் அதற்குப் பிறகான பயணத்தைப் பற்றியும் பேசி முடித்தோம். ஸ்காட்லாந்து சென்று திரும்பும் வழியில் மீண்டும் வீட்டிற்கு வந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்கள். பயணத்தின் போது நாங்கள் சாப்பிடுவதற்காக “புளியோதரை” கூடவே அவித்த தட்டைப்பயறு, சிப்ஸ், கடலை, ரொட்டி, பழங்கள் என ஒரு மூட்டை தயாராக இருந்தது. ஆகா! ‘குப்பா’ வீட்டுப்பெண் என நிரூபித்துவிட்டாளே என்று மனம் மகிழ்ந்தது. எங்கள் சமூகத்தினரின் புளியோதரையைச் சுவைத்தவர்கள் வேறு எந்த புளியோதரையையும் விரும்ப மாட்டார்கள். நாங்கள் விரும்ப மாட்டோம். அதனுடன் சைவ, அசைவ “சைட் டிஷ்கள்”, ஊறுகாய் வகைகள் என்று ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அதைப் பற்றி தனிக்கட்டுரையே எழுதலாம்!

பரிசுப்பொருட்கள், நொறுக்குத்தீனிகள் என்று மேலும் இரண்டு பெரிய பைகளுடன் அவர்களிடமிருந்து விடைபெற்று “யார்க்” நகரம் நோக்கிய பயணம் ஆரம்பமாயிற்று. குடியிருப்பு பகுதிகள் சிலவற்றில் ஒருபுறம் வண்டிகள் அணிவகுத்து நின்றிருக்க நெதர்லாந்து வீடுகளை நினைவுறுத்தியது. என்ன? அங்கு பார்க்கும் இடங்களில் எல்லாம் பசுமையும் கால்வாய்களும் இருக்கும். இங்கு கால்வாய்கள் இல்லை. அன்று தான் அந்நாட்டின் மன்னராக “சார்ல்ஸ்”ன் பதவியேற்பு விழா  நடைபெறுவதால் சாலைகள் ‘வெறிச்’சென்று இருந்தது. 

மழை மேகங்கள் தொடர, அழகான வானவில்லின் தரிசனமும் கிடைக்க, மனம் குழந்தையைப் போல குதூகலித்தது. மழைக்குப் பின்னே வானவில்லைத் தேடி படமெடுப்பது எங்களுக்குப் பிடித்த ஒன்று. அதுவும் இரட்டை வானவில் என்றால் அமெரிக்க நண்பர்கள் ‘பித்ருக்களின் ஆசீர்வாதம்’ என்று மகிழ்வார்கள். ரசித்தபடியே ஒன்றரை மணிநேரத்தில், புகழ்பெற்ற “York Castle”ஐச் சுற்றிப்பார்க்க வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

1068ல் கட்டப்பட்டுள்ள கோட்டை வளாகத்தில் நல்ல கூட்டம் இருந்தது. “யார்க் கோட்டை” அரச குடியிருப்பு, இராணுவம், சிறை உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோட்டையின் குறிப்பிடத்தக்க அம்சம் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட “Clifford’s Tower”. குன்றின் உச்சியில் இருக்கும் இந்த கோட்டை முதலில் மரத்தால் கட்டப்பட்டு பின் கல் கோட்டையாக உருமாறியுள்ளது. இங்கிலாந்தின் வடக்கில் நார்மன் இனத்தின் ஆதிக்கத்தின் அடையாளமாகச் செயல்பட்டு யார்க் நகரத்தையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இன்று பார்வையாளர்களைக் கவரும் இடமாக வரலாற்றினை அறிந்து கொள்ள உதவுகிறது.

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயங்கள், கோட்டைகள், மிகப்பெரிய கட்டடங்கள், குறுகிய தெருக்கள் என்று நடந்து சென்று பார்க்கும் இடங்கள் இங்கு ஏராளம். பேருந்து வசதிகளும் இருக்கிறது. அங்கிருந்து பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான “The Shambles” என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தெருவிற்குச் சென்றோம். 8வது நூற்றாண்டு கால வீடுகள், கடைகளைப் பராமரித்து வருகிறார்கள். அதைக் காண அத்தனை கூட்டம்! கற்கள் பதித்த குறுகிய, நீண்ட தெரு. கூட்டத்தோடு ஐக்கியமானோம். ஈஷ்வருக்கு அங்கே என்ன இருக்கிறது என்று மக்கள் இப்படி அடித்துப்பிடித்துக் கொண்டு வருகிறார்கள் என்று கேள்வி!

அங்கு இரு வீடுகளின் மேல் கட்டடங்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வது போல நிற்கிறது. அத்தனை குறுகலான தெரு. நெருக்கமான வீடுகள். மெடிவல் காலத்தில் கசாப்புக்கடைகளாக இருந்திருக்கிறது. தற்பொழுது காலத்திற்கேற்ப துணிகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகளாக உருமாறியுள்ளது. ‘ஹாரி பாட்டர்’ தொடரில் வரும் ‘Diagon Alley’ இந்தத் தெருவை வைத்துப் புனையப்பட்டது என்பதால் அங்கு ஒரு கடையை வைத்திருக்கிறார்கள். ‘ஹாரி பாட்டர்’ ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். உள்ளே சென்று வர நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்! எனக்குப் பிடித்தது முத்தமிட்டுக்கொள்வது போல நின்றிருந்த இரு கட்டடங்கள்! பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த தெருவின் சாராம்சத்தை மாற்றாமல் கட்டடங்களைப் பாதுகாத்து இன்றைய தலைமுறையினரும் கண்டுகளிக்க வசதிகள் செய்திருப்பது சிறப்பு. யார்க் என்றால் “The Shambles” என்றாகியிருக்கிறது.

அங்கிருந்து மிகவும் பிரபலமான ‘York Minister’ தேவாலயத்திற்குச் சென்றோம். தேவாலயங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ண கண்ணாடிகள் காண்போரை வசீகரிக்கும். உள்ளே ஓரிடத்தில் தொலைக்காட்சியில் பட்டத்து இளவரசரை மன்னராக்கும் சடங்குகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. தேவாலய பங்குத்தந்தைகள் புடைசூழ மன்னருக்கு லண்டன் மாநகரில் ‘வெஸ்ட்மினிஸ்டர் ஆபி’யில் முடிசூட்டு விழா அரங்கேறிக்கொண்டிருந்ததைப் பலரும் புளங்காகிதமாக பார்த்துக் கொண்டிருக்க, மகுடம் சூட்டும் விழாவை நாங்களும் சிறிது நேரம் பார்த்தோம். 

‘யார்க் மினிஸ்டர்’ தேவாலயத்தின் பிரம்மாண்டம், விரிவான வேலைப்பாடுகள் அனைத்தும் கவரும் விதத்தில் இருந்தது. ஐரோப்பிய நகரங்களில் மிக அழகான தேவாலயங்கள், அதுவும் ‘gothic’ கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட அனைத்தும் அழகு. நாங்கள் இதற்கு முன் சென்று வந்த ஐரோப்பியா நாடுகளிலும் இப்படி ஏகப்பட்ட பெரிய தேவாலயங்கள். சில இடங்களில் வழிபாடு செய்யும் இடமாக இருந்தாலும் பல பெரிய தேவாலயங்கள் பயணிகள் வந்து செல்லும் இடங்களாக, காட்சிப்பொருட்களாக மாறிவிட்டிருக்கிறது. மேற்குலகில் கிறித்துவம் வீழ்ந்து விட்டதோ? அதனால் தான் கிறித்துவத்தை கிழக்கில் நிறுவ துடிக்கிறார்களோ? அமெரிக்காவில் என்னுடைய அமெரிக்க நண்பர்கள் பலரும் தேவாலயங்களில் நடந்த/நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு ஏதிஸ்ட்டாக மாறிவிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் பேயாட்ட மதமாற்றக் காணொளிகளைக் கண்டு அதிர்ந்திருக்கிறார்கள்! இன்று வரையில் பங்குத்தந்தைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு அலைகிறார்கள். தொடர் சோகம்😌 இப்படி பல எண்ணங்களுடன் வெளியே வந்தால் தெருச்சந்திப்பில் நாட்டின் புதிய மன்னரை கௌரவிக்கும் பொருட்டு இசைவாத்தியங்கள் முழங்கிக்கொண்டிருந்தன. சிறிது நேரம் அதையும் கண்டுகளித்தோம். 

பிறகு அங்கிருந்த “ஷாம்பிள்ஸ் மார்க்கெட்” சதுக்கத்திற்குள் நுழைந்தோம். விதவிதமான உணவகங்கள், சாக்லேட் கடைகள்,பழங்கள், காய்கறிகள் சந்தை முழுவதும் நிறைந்திருந்தது. மதிய நேரம். உணவகங்களில் மக்கள் கூட்டம் ! பழங்களை வாங்கிச் சுவைத்துக் கொண்டே ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வெளியேறினோம். இங்கிலாந்து வரலாற்றில் ‘வைகிங்’ ஆட்சியாளர்களுக்கு இன்றியமையாத இடம் உள்ளது. அவர்களைப் பற்றின அருங்காட்சியகங்களும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல தீனி தான். காலையில் 11 மணியிலிருந்து மூன்று மணிவரை நடந்து நடந்து சுற்றிப்பார்த்தோம். சில பல படங்களை ‘கிளிக்’கிக் கொண்டோம். மொத்தத்தில் “யார்க் ‘ ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

அந்தக் குட்டி நகரத்திலிருந்து நெடுஞ்சாலைக்கு வருவதற்குள் பல குடியிருப்புப் பகுதிகளைக் கடக்க வேண்டியிருந்தது. சுத்தமான தெருக்கள், ஒரே மாதிரியான அடுக்கு வீடுகள் என்று எங்கும் எதிலும் இருந்த நேர்த்தி மேற்கத்திய நாடுகளுக்கே உரியது! அமெரிக்காவில் இல்லாத ஏதோ ஒரு அழகு இங்கிலாந்தில் இருக்கிறது. 

அடுத்து “Hadrian’sWall” என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்குப் பயணமானோம். இரண்டரை மணிநேரப் பயணம். வழியெங்கும் மஞ்சள் வண்ண ‘மஸ்டர்ட்’ மலர்கள் மலைகளில் வியாபித்திருந்தது அழகு. அதைப் பண்ணைகளில் வளர்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம்.

கருமேகங்களும் விடாப்பிடியாக எங்களைத் தொடர்ந்து கொண்டே வந்தது. நடுவில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி புளியோதரையைச் சுவைத்தோம். ஆகா! எங்கோ வனாந்தரத்தில் சுவையான வீட்டுச் சாப்பாடு! அம்மாவின் கைப்பக்குவதில் செய்தது போலவே அத்தனை சுவையாக! உப்பும், காரமும், புளிப்பும் சரிவிகிதத்தில்! தெய்வீகம்! கூடவே இன்ஸ்டன்ட் டீ மசாலா வேறு கஸின் கொடுத்திருந்தாள். சுடுதண்ணியைக் கலந்தால் டீ. அப்பவே சுடச்சுட! திவ்யம்! திவ்யம்! சுற்றிலும் பரந்த புல்வெளிகள்! செம்மறி ஆடுகள் இயற்கையாக விளைந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது அழகு!

அங்கிருந்த பசும்புற்கள் கூட அத்தனை அழகாக இருக்கிறது! ஓரிடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தைக் கடந்து விட்டிருந்தாலும் மீண்டும் திரும்பி வந்து சிறிது நேரம் நின்று ஆட்டத்தை ரசித்து விட்டுத் தொடர்ந்தோம். வெள்ளைச்சீருடையும் மேலே ஸ்வெட்டரும் அணிந்த கிரிக்கெட் வீரர்கள். பால்ய நினைவுகள் நிழலாடியது😎 மழை தூற ஆரம்பித்து விட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எங்களைத்தவிர யாரையும் சாலையில் காணவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். சாலை குறுகிக் கொண்டே வளைந்து வளைந்து சென்றது. பெரிய வண்டிகள் எதிரில் வந்தால் காத்திருந்து வழிவிட வேண்டிய அளவிற்குச் சிறிய சாலை! உட்கார்ந்து ரசிக்கத்தக்க இடங்கள் ஏராளம். ஆனால் வண்டியை எங்கும் நிறுத்த முடியாது என்பதில் சிறிது ஏமாற்றம் தான். ‘வியூபாயிண்ட்ஸ்’ வைக்கும் அளவிற்கு இடமில்லை. அதனால் ஓடும் வண்டியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். ஈஷ்வர் தான் பாவம்😔.

ஆளரவமே இல்லாத இடத்தில் ஜிபிஎஸ் காட்டிய வழியில் சென்று கொண்டே இருந்தோம். மரங்களில் இலைகள் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம். ஒருவேளை இலைகள் நிறைந்திருந்தால் அந்தப் பகுதியே மிக அழகாக இருந்திருக்கும். “தூறல் போடும் மேகங்கள் நானாக வேண்டும்” மனதிற்குள் ஒலிக்க, மேடும் பள்ளமுமாய் சென்று கொண்டிருந்தது சாலை. முடிவில் வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றது ஜிபிஎஸ். அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் பல மைல்கள் தொலைவிற்கு வளைந்து வளைந்து செல்கிறது சுற்றுச் சுவர். இதுதான் ஹேட்ரியன்ஸ் வாலா? அதற்குள் அதனைப் பற்றின தகவல்களை ஈஷ்வர் விவரித்திருந்தார். கைகாட்டி காட்டிய “ரோமன் ஃபோர்ட்”டின் உள்ளே செல்லும் பொழுது அலுவலகத்தை மூட தயாராகிக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த இரு பெண்கள்!

“நாங்கள் அம்ரீக்காவிலிருந்து இதைப் பார்க்க ஓடோடி வந்திருக்கிறோம்” என்றவுடன் அங்கிருந்த ரேஞ்சர்களுள் ஒருவர் அந்த இடத்தைப் பற்றின வரலாற்றை விரிவாகக் கூறினார். இங்கிலாந்தின் வட பகுதியில் ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரிட்டானியா மாகாணத்தை ஸ்காட்லாந்திடமிருந்து காத்துக் கொள்ள, கிழக்கு மேற்காக 73 மைல்களுக்கு (117 கிலோமீட்டர்) 15அடி உயரத்தில் கற்களால் சுவர் எழுப்பியிருக்கிறார் ஹேட்ரியன் என்ற ரோமானிய பேரரசர். பல இடங்களில் சுவற்றின் உயரம் குறைந்துவிட்டிருக்கிறது. ரோமானியர்கள் தாங்கள் எது செய்தாலும் அதை முறையாக ஆவணப்படுத்துவதில் கில்லாடிகள். தற்பெருமை மிக்கவர்கள். அதனால் வரலாற்றுப்பிழைகள் அவர்கள் வரலாற்றிலேயே இல்லை என்று அந்தப் பெண்மணி சிரித்தபடி கூறினார். அவர்கள் அப்படிச் செய்திருக்கா விட்டால் உண்மை நிலவரம் இத்தனை வருடங்களுக்குப் பிறகு நமக்கு எப்படி தெரியும்? வரலாறு முக்கியம்ல? அவர்களாவது உண்மையைப் பொறித்து வைத்திருக்கிறார்கள். நாம் பொய்களைத் தானே வரலாறு என்று படித்து இன்றைய தலைமுறையினருக்கும் கற்பித்துக் கொண்டிருக்கிறோம். பொய்களைக் கட்டமைத்து தமிழ்நாட்டில் ஆட்சி நடப்பதெல்லாம் … என்னவோ போடா மாதவா😡

‘ஹேட்ரியன்ஸ் வால்/ரோமன் ஃபோர்ட்’ யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இயங்குவதால் நன்கு பாதுகாக்கப்பட்டு பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறது. ரோமானியர்களின் கதைகளில் ஆர்வம் கொண்ட ஈஷ்வரும் கதைக்க ஆரம்பிக்க, நிஜமாகவே ஆர்வமுள்ளவர்கள் போல என்று நினைத்தாரோ என்னவோ ஒரு அரைமணி நேரமாவது எங்களுக்காகக் காத்திருந்து அந்த ரேஞ்சர் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருந்து ‘Northumberland National Park’ செல்லும் வழியைக் கூறி முடிந்தால் அதையும் பார்த்து விட்டுச் செல்லுங்கள் என்று கூறினார். கையில் கேமெரா இருப்பதைப் பார்த்து ஒரு பிரபலமான இடத்தைப் பற்றிக் கூறி அங்கே ஒற்றை மரம் இருக்கும். அழகான இடம். அதிகமான புகைப்படங்கள் எடுக்கப்பட்ட மரம். அங்கும் மறக்காமல் சென்று படமெடுத்துக் கொள்ளுங்கள் என்று அதனைப் பற்றின தகவல்களையும் வழியையும் கூறினார் .

அவருக்கு நன்றி கூறி விட்டு மழையில் நனைந்த படி சிறிது தூரம் சுவரோரம் நடந்து சென்றோம். வெளியே மழை ‘கொட்டோகொட்டெ’ன்று கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு இளம்பெண் கைகளை அசைத்துக் கொண்டே மழையில் துள்ளியபடி மனம் போன போக்கில் நடனமாடிச் சென்று கொண்டிருந்தது கொள்ளை அழகு! யாரைப் பற்றின கவலையேதும் இல்லாமல் கண்களை மூடியபடி நனைந்து சென்றவளின் ஆண் நண்பரும் குழாமும் முன்னே சென்று கொண்டிருந்தது. தன்னியல்பில் இருக்கும் பெண்கள் தான் எத்தனை அழகு! ம்ம்ம்ம்ம்….😍மழை தரும் பரவசம் நனைந்தவர்களுக்கு மட்டுமே புரியும் அதிசயம்💖

வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள். பரந்து விரிந்திருந்த பச்சைப்பசேல் புல்வெளி. மழை. அங்கிருந்து செல்லவே மனமில்லை. ஆனால் அந்தப் .பெண்மணி சொன்ன ஒற்றை மரத்தைப் பார்த்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து வண்டியை எடுத்துக் கொண்டு சாலைகளில் மீண்டும் பயணம். இருட்டிக் கொண்டு வேறு இருந்தது. நீண்ட சாலை. சென்று கொண்டே இருந்தது. சரியான பாதையில் தான் போகிறோமோ என்று சந்தேகம். யாரைக் கேட்பது? மனிதர்கள் யாரும் தான் கண்ணில் படவே இல்லையே😓 இப்பொழுது மழை முற்றிலுமாக நின்று விட்டிருந்தது.

விடுதி ஒன்று கண்ணில் பட்டதும் அங்கு இறங்கி நாங்கள் செல்ல வேண்டிய இடத்தைப் பற்றிக் கேட்டதும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் வரைபடம் ஒன்றைக் கொடுத்து அந்த இடம் எங்கிருக்கிறது என்று காண்பித்தான். நன்றி கூறி அங்கிருந்து செல்ல, மீண்டும் மழை. சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் என்று சிலரைப் பார்த்தவுடன் தான் அப்பாடா என்றிருந்தது! அந்த மழையிலும் மலையில் சைக்கிள் ஒட்டிக் கொண்டு செல்பவர்கள் நிச்சயம் பணியிலிருந்து ஓய்வெடுத்தவர்கள் போலத் தெரிந்தார்கள்.

எங்களுடைய பெரும்பாலான பயணங்களில் குறிப்பாக, ஐரோப்பாவில் தம்பதியர் சமேதமாக ஊரைச்சுற்றிப் பார்க்க வருபவர்கள் பலரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள். நாம் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாடினால் அவர்கள் அறுபதிலும் ஆசை வரும் என்று பாடுகிறார்கள். பொறாமையாக இருக்கிறது! “வயசான அக்காடான்னு ஒரு இடத்தில உட்காரணும்”என்று சொல்லாத ஆட்கள் இருக்கும் வரையில் இவர்கள் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருக்கிறார்கள். நாங்கள் பார்த்த மனிதர்களும் படு ‘ஃபிட்’டாக இருந்தார்கள். அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே மலையில் ஏறுவதும் இறங்குவதுமாய் தொடர்ந்தது எங்கள் பயணம்.

சாலையிலிருந்து சில மைல்களுக்கு நடந்து உள்ளே சென்றால் ஹேட்ரியன்ஸ் வால் அருகில் ‘சைகமோர் இடைவெளி’ மரத்தை அருகில் சென்று பார்க்கலாம். நேரமின்மை காரணமாக நாங்கள் சாலையில் நின்று படத்தை எடுத்துக் கொண்டோம். ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று பிரபலமாகியுள்ள இடத்தை நாங்கள் தவறவிடக்கூடாது என்று தகவல் மையத்தில் உள்ள ரேஞ்சர் உற்சாகமான குரலில் எங்களிடம் கூறியிருந்தார். இரண்டு மலைகளுக்கு இடையில் ஒரு அழகான இடத்தில் தனிமரமாக நின்றதைக் கண்டோம். அதிக புகைப்படம் எடுக்கப்பட்ட மரங்களில் ஒன்றாக இருந்ததில் ஆச்சரியமில்லை. தனித்து நிற்கும் மரங்கள் எல்லாம் ஒருவித அழகுடன் ஏதோ ஒன்றைக் கூறுவது போலவே இருக்கும். அல்லது எனக்கு அப்படித்தோன்றும். கலிஃபோர்னியாவில் பசிஃபிக் கடலோரத்தில் சைப்ரஸ் மரம் பாறையில் தனியே நின்று கொண்டிருக்கிறது. அதுவும் பிரபலமான இடம். ஆனால் மலை முகடுகளுக்கு நடுவில் இந்தத் தனிமையான மரம் அதீத அழகு! சில நேரங்களில் திரைப்படம் தயாரிப்பவர்கள் தேடிப்பிடித்து அழகழகான இடங்களைக் காண்பித்து விடுகிறார்கள். நல்ல வேளை! நாங்கள் தவற விடவில்லை. ரேஞ்சருக்கு நன்றி கூறிக்கொண்டோம். 

மீண்டும் மலைகள் சூழ்ந்த நீண்ட சாலைப் பயணம் . அங்கொன்றும் இங்கொன்றுமாக செம்மறியாடுகள் மலைகளில் ஹாயாக மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்க்க, பச்சை வண்ண சேலையில் வெள்ளைப் பூக்கள் போல அழகு💕

வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு சிறிது தூரம் அந்தச் சாலையில் நடந்து வந்தோம். அருகே தனியாக கற்கள் பதித்த பழைய வீடு ஒன்று இருந்தது. ஆங்கில புதினங்களில் பார்த்த படங்களை நினைவூட்டும். அதையொட்டிய சாலையில் நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லலாம். நாங்கள் வண்டியை எடுத்துச் சென்று பாதை குறுகியவுடன் படபடத்துத் திரும்பி வந்தோம். நாயுடன் வந்த பெண்மணி, “ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி விட்டேன். உங்கள் வண்டி பெரியதாக இருக்கிறது. எதிரில் வண்டி வந்திருந்தால் கஷ்டம். நல்ல வேளை! நீங்களே திரும்பி விட்டீர்கள்.” என்று கூறி சிறிது நேரம் அந்த இடத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். “நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்” என்று கூறி விடைபெற்றோம்.

இப்படியே நேராகச் சென்றால் இயற்கை எழில் கொஞ்சும் ‘Northumberland National Park’ வரும். அங்கு பலவிதமான மரங்கள், செடிகள், பறவைகள் இருக்கிறது என்று அவர் வேறு ஆசையைக் கிளப்பி விட்டார். நாங்களும் பாதி தூரம் வரை செல்லலாமா என்று கூட யோசித்தோம். ஆனால் திட்டமிடாமல் செல்வதில் அர்த்தமில்லை என்று ஆசைக்காக சாலையில் சிறிது தூரம் நடந்து விட்டு ஸ்காட்லாந்து நோக்கி வண்டியைத் திருப்பினோம்.

Friday, January 12, 2024

அன்னபூரணி

அன்னபூரணி, பார்வதியின் அம்சமான அன்னை. கையில் கரண்டியும் உணவுப்பாத்திரத்துடனும் காட்சி தருபவள். பலரும் தங்கள் வீடுகளில் வைத்து வழிபடும் தேவி அவதாரம். இந்தத் திரைப்படமும் ஒரு பெண் சமையல் வல்லுநரைப் பற்றினது என்பதால் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. நமக்குத் தான் சமையல் என்றால் பிடித்து விடுமே என்று பார்க்க ஆரம்பித்தேன்.

கதைப்படி, ஸ்ரீரங்கம் கோவிலுக்குத் தளிகை செய்து கொடுக்கும் பிராமண வீட்டில் பிறந்த பெண் ஒருத்திக்குச் சமையலில் அதிக ஈடுபாடு. சிறுவயதிலிருந்தே உணவின் சுவையை வைத்தே என்ன பதார்த்தம் என்று கண்டுபிடிக்கும் அளவிற்குச் சாமர்த்தியசாலி. தான் ஒரு சிறந்த சமையற்கலைஞராக வேண்டும் என்று கனவு காண்பவள். மேற்படிப்பு படிக்கச் செல்லும் பொழுது நண்பர்கள் கூட்டம் அவளுடைய கனவுப் படிப்பைப் படிக்கத் திருட்டுத்தனமாக உதவுகிறார்கள். வீட்டில் யாருக்கும் தெரியாமல் குற்றவுணர்வுடன் படிப்பவளுக்குச் சோதனை வருகிறது. அதாவது, வகுப்பில் அசைவ உணவைச் சமைக்க வேண்டும். "பெருமாள் என்னை மன்னிக்க மாட்டார்" என்று புலம்புபவளுக்கு அவளுடைய இஸ்லாமிய நண்பன் சமஸ்கிருதத்தில் வால்மீகி சொல்லியதாகக் கூறும் வசனங்கள் ஆகட்டும். "எந்தக் கடவுளும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று கூறவில்லை." என்று கூறும் இடங்கள் திராவிடத்தனமான வலிய திணிக்கப்பட்ட தேவையில்லாத ஆணிகள். சமையல் படிப்பில் அதையெல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள் என்று கூட தெரியாமல் தான் படிக்கக் கிளம்பினாளா அந்தப்பெண்? இப்படி இன்னும் நிறைய ஓட்டைகளைக் கேட்கலாம்.

சரி. அவன் கூறுகிறபடி எந்தக்கடவுளும் சொல்லவில்லை தான். அப்படிச்சொல்பவன், "நான் கூட பன்றிக்கறி சாப்பிடுகிறேன் பார். என் கடவுள் என்னை ஒன்றும் செய்ய மாட்டார்" என்று பேசும் வசனத்தை வைத்திருக்கலாமே? ஒரு காட்சியில் அவன் பன்றிக்கறி சாப்பிடுவது போல காட்டியிருக்கலாமே? அப்படி வைத்தால் அவர்களின் முகமூடி அங்கேயே 'டர்ர்ர்ர்ர்'ரென்று கிழிந்து தொங்கிவிடும். ஆனால் பிராமண கதாபாத்திரத்தை வைத்து எப்படி வேண்டுமானாலும் பேசலாம். காட்சிகள் அமைக்கலாம். அதையெல்லாம் விடக் கொடுமை, பிரியாணி செய்வதற்குப் பர்தா அணிந்து பாயில் அமர்ந்து நமாஸ் செய்வாளே இந்த அக்ரகாரத்துப் பெண். கொடுமையிலும் கொடுமை. பிரியாணி நன்றாக வரவேண்டுமென்றால் 'ஜாபர் பாய் பிரியாணி ரெசிபி'யைப் பின்பற்றினாலே போதும். எதற்கு இந்த முக்காடு வேஷம்?

ஒரு பெண் தன்னுடைய கனவை நனவாக்க சில பல கலாச்சார விதிமீறல்களைச் செய்ய வேண்டி வருகிறது. அதைக் கூட ஒத்துக் கொள்ளலாம். உலகத்தில் எங்காவது சிலர் செய்து கொண்டிருக்கலாம். திரைப்படம் தானே என்று சகித்துக் கொள்ளலாம். அதுவரையில் படம் நன்றாகத் தான் போகிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் தேவையில்லாத ஆணிகள் தான் இந்தப்படத்திற்கு ஆப்பு வைத்திருக்கிறது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தெலுங்கு பிராமணர். அமெரிக்காவில் சமையற்கலையைக் கற்க கல்லூரியில் சேர்ந்தார். அங்கே அவர் சாப்பிடாத அசைவ உணவுகளை வேறு வழியின்றி சமைத்தாகக் கூறியுள்ளார். அது தொழில் சார்ந்தது. அதனால் கற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். இது புரிந்துகொள்ளக்கூடியது தான். கல்லூரியில் எனக்குத் தெரிந்த பிராமண குடும்பத்தில் பிறந்த ஒரு மாணவன் நன்றாக அசைவம் சாப்பிட்டான். எங்களுக்குத் தான் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் ஊரார் அவனை ஒதுக்கி வைத்துவிடவில்லை. நிச்சயமாக அவன் பெற்றோருக்குத் தெரிந்து செய்திருக்க வாய்ப்பில்லை. இது அவன் மனம் சம்பந்தப்பட்டது.அவனுக்குச் சரியென்று பட்டதைச் செய்திருக்கிறான். இன்று எப்படி இருக்கிறானோ தெரியவில்லை. பல பிராமணர்களும் சாப்பிடுகிறார்கள். ஆனால் பெருமாளுக்குப் படைக்கும் உணவைச் சமைப்பவர் வீட்டுப் பெண்ணை கதாபாத்திரமாக்கி வேண்டுமென்றே வசனங்களை வைத்ததற்கு நல்ல பலனை அனுபவிக்கிறார்கள்.

படத்தைப் படமாகப் பாருங்கள் என்று இன்று இந்தப்படத்திற்கு வரும் எதிர்ப்பைக் கண்டிப்பவர்கள் யார் என்று பார்த்தால் "விஸ்வரூபம்", "பம்பாய்", "டாவின்சி கோட்" என இன்னும் பல படங்களுக்குத் திரையிட எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் சென்றவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களும் தான். தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளிச்சட்னி என்பது தான் இவர்களுடைய நிலைப்பாடு.

அவ்வளவு தைரியமான இயக்குநர் என்றால் இமாம் வீட்டுப்பெண் வீட்டிற்குத் தெரியாமல் இந்துப் பையனின் அறிவுரையைக் கேட்டுப் படிப்பது போலவும் "பன்றிக்கறியைச் சாப்பிடக்கூடாது என எந்த மதமும் கடவுளும் சொல்லவில்லை" என்ற வசனங்கள் வைக்கும் பொழுது தான் இவர்களுடைய சமூக நீதி முகமூடி வெளிச்சத்திற்கு வரும்.

இனி இந்து மதத்தவரின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் படங்கள் வந்தால் அதே வேகத்திலேயே அடுப்படிக்குள் போய் உட்கார்ந்து கொள்ளும் என்று இப்படத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். என்ன கொடுமை? நெட்ஃப்ளிக்ஸ்காரனே பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு எடுத்து விட்டான்.

இனியாவது நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படத்தைப் படமாக எடுங்கள்.

Saturday, January 6, 2024

12th Fail

'12th Fail' என்றொரு இந்தி திரைப்படம் ஹுலுவில் காண கிடைக்கிறது. உண்மையில் நடந்த சம்பவத்தை வைத்து திரைப்படமாக்கியுள்ளார்கள். மத்தியப்பிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தில் வாழும் குடியானவர்கள் குடும்பத்திலிருந்து ஒருவன் ஐபிஎஸ் ஆவது தான் கதை.

நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அதுவும் ஓரளவு வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு அவர்களுடைய கனவை நனவாக்குவதில் அதிக சிரமங்கள் இருப்பதில்லை. வேளாவேளைக்கு உணவும், பயிற்சிவகுப்புகளும் பெற்றோர்களே பார்த்துப் பார்த்து செய்து விடுவார்கள். ஏழைகள் நிலைமை தான் பெரும்பாடு. தற்காலத்தில் படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கும் மாணவ, மாணவிகள் கூட யாரிடமாவது பணத்தைக் கடனாகவோ இலவசமாகவோ பெற்று படித்து முன்னேறிவிடுகிறார்கள்.

எங்கோ ஒரு கிராமத்தில் இருப்பவனுக்கு நேர்மையான அதிகாரியாக வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் காக்கிச்சட்டை அணிந்து சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் வருவது அரிது. அப்படியே வந்தாலும் இந்த சமூகம் துணை நிற்குமா என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாமையே அவனுடைய கனவைச் சிதைத்து விடும். ஆனாலும் விடாப்பிடியாக கனவைத் துரத்துபவனால் தான் நினைத்த இடத்திற்குச் செல்ல முடியும். தடைகளைக் கடந்தால், கடினமாக உழைத்தால் மட்டுமே கீழ் நிலையிலிருந்து மேல்நிலைக்கு உயர முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டுகிறது இப்படம்.

கதாநாயகனின் தந்தை நேர்மையான அதிகாரி. ஊழலுக்குத் துணைபோக மாட்டார். அதனாலேயே வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவார். அதனால் குடும்பம் பல இன்னல்களுக்கு ஆளாகும். இதே போன்று நிஜத்தில் எங்களுடைய உறவினர் ஒருவருக்கு நடந்தது. அப்பொழுது அவர் தமிழ்நாட்டில் அரசுப் பொதுப்பணித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மேலும் கீழும் பதவியில் இருந்தவர்கள் ஏகமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். இவரோ நேர்மை, கண்ணியம் என்று இருந்ததால் அங்கிருந்த ஊழல் பேர்வழிகள் அவர் மீது இல்லாத பழிகளைச் சுமத்தி வேலையிலிருந்து நீக்கி விட்டனர். பல வருடங்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்து கடைசியில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வெளியானது. அதற்குள் அந்தக் குடும்பம் பட்ட சிரமங்கள் இருக்கிறதே! யாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது.

இந்தப்படத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கது. ஒன்று கதாநாயகனின் அப்பாவிற்கு நீதியே கிடைக்காது மனம் வெறுத்துப் போய்விடுவார். நேர்மைக்கு இங்கே வழி இல்லை என்று நினைத்தாலும் சில நேர்மையானவர்களால் தான் இன்றைய அரசாங்கமே இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் எத்தனை கோடிக்கணக்கில் ஊழல்கள் நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது. இலவசங்கள் என்ற பெயரில் மூடர்களின் வாயை அடைத்து ஊழல் ஆட்சி புரிபவர்களுடன் நேர்மையாக படித்து வந்த IAS, IPS அதிகாரிகள் படும் அவலம் இருக்கிறதே! கொடுமை. அவர்களில் பலரும் இந்த ஊழல் அரசியல்வியாதிகளைப் போலவே மாறிவிடுவது கொடுமையிலும் கொடுமை.

இரண்டாவது, IAS, IPS தேர்வுகளுக்குத் தயாராகி பட்டம் பெறுவது அத்தனை எளிதல்ல. அப்படிப் படித்து அரசியலுக்கு வந்த ஒருவரை தமிழ்நாட்டில் தகுதியற்ற தற்குறிகள் அவருடைய கல்வியை கேவலப்படுத்துவது அவர்களின் தகுதியைத் தான் வெளிப்படுத்துகிறது. அதுவும் அவர் கற்ற கல்வி "யுனெஸ்கோ உருட்டு புரட்டு ஆசாமியால் தான்" என்று புரூடா வேறு. ஒழுங்காக படித்திருந்தால் தானே இந்த அறிவற்ற ஜடங்களுக்கு அதன் கஷ்டம் புரியும். பொய்க்கதைகள் பேசி வரலாற்றைத் திரித்து சாதி, மதப்பிரிவினைகளை உண்டாக்கும் இந்த கேவலமான பிறவிகளுக்குத் தெரிந்ததெல்லாம் திருடுவது தான். அது அறிவானாலும் சரி. பணமானாலும் சரி.

இப்படிப்பட்ட சூழலில் நேர்மையாக வாழ, வழிகாட்டிட அதிகாரத்திற்கு வந்தால் தான் என்று கடும் போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற மனோஜ் குமார் ஷர்மா போன்ற மாணவர் சமுதாயம் பெருக வாழ்த்துகள்!

கதாநாயகனாக நடித்திருந்த விக்ராந்த்திற்குப் பொருத்தமான கதாபாத்திரம். கதாநாயகி மேதா ஷங்கரும் குறைவில்லாமல் நடித்திருந்தார். அம்மா, அப்பா, பாட்டி, தங்கை, நண்பன், அண்ணன் என்று அவரவர் கதாபாத்திரங்களில் அருமையாக நடித்திருந்தார்கள். மருமகளிடம் சண்டை போட்டாலும் மகன், பேரன், பேத்திகளிடம் அன்பாக வீட்டிற்கு ஒரு பாட்டி இருப்பார். படத்திலும் அப்படியே!

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் முன்னேற சிலர் முன்மாதிரிகளாக இருப்பார்கள். அப்படி ஒரு நேர்மையான அதிகாரியைக் கண்டவுடன் கதாநாயகனின் எண்ணங்களும் செயல்களும் மாறி தன்னுடைய கனவை நனவாக்கிக் கொள்கிறான். டாக்டர்.அப்துல் கலாம் தனக்கு மிகவும் பிடித்த மனிதர் என்று கதாநாயகன் கூறுவது போல் பலருக்கும் அந்த மாமனிதர் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு துவளாதவனே வெற்றி பெறுவான்.


படத்தில் கிராமத்துக்காட்சிகள் இயற்கையாக இருந்தது. இறுதிக்காட்சிகளில் அவர் எப்படியாவது வெற்றி பெற்றிட வேண்டும் என்று நம்மையும் நினைக்க வைத்து விட்டார்கள். நடுவில் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் நம்பிக்கையூட்டும் நல்ல திரைப்படம்.


அமேசிங் பிரிட்டன் - 1 - Stratford-upon-Avon


ஒவ்வொரு பயணமும் கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம்.பயணிக்கும் வழியில் நாம் காணும் மனிதர்கள், புகழ்பெற்ற இடங்கள், உணவு, உறைவிடம் என்று நாட்டுக்கு நாடு வேறுபடுவதும் வரலாறு, கலாச்சாரம் என்று அறிந்து கொள்ள முடிவதும் தான் பயணங்களின் சுவாரசியமே. எல்லா பயணங்களைப் போலவே பிரிட்டன் பயணமும் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. கடவுளுக்கு நன்றி. எங்களுடைய 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரை சொல்வனத்தில் தொடராக வெளிவருகிறது. முதல் பகுதியாக உலகின் தலைசிறந்த ஆங்கில இலக்கியவாதியான 'வில்லியம் ஷேக்ஸ்பியர் ' பிறந்து, வளர்ந்து., வாழ்ந்த ஊருக்குச் சென்று வந்த பயணக்குறிப்பை வாசிக்க இங்கே சொடுக்கவும்.


25 வருடங்களுக்கு முன் முதன்முதலாக பிரிட்டிஷ் ஏர்வேஸ்ல் சென்னையிலிருந்து டொரொண்டோ, கனடா செல்லும் வான்வழிப் பயணம். வழியில் லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் குளிரில் இறங்கி மறுவிமானத்திற்காக காத்திருந்த நினைவுகள் கண்முன்னே வந்து சென்றது. எங்களுடைய முதல் விமானப்பயணத்தில் சாப்பாடு பிடிக்காமல் எதை, எப்படி உண்பது என்று தெரியாமல் ஒரே வாந்தியும் மயக்கமுமாய் அந்நியமாய் உணர்ந்த அதே விமானநிலையத்தில் ‘கிரேட் பிரிட்டன்’ஐச் சுற்றிப் பார்க்க நானும் ஈஷ்வரும் இறங்கிய பொழுது அன்றைய மனநிலையிலிருந்து இன்று முற்றிலும் வேறுபட்டு நிற்பதை உணர்ந்து கொண்டிருந்தோம். காலம் தான் எப்படியெல்லாம் மனிதர்களை மாற்றிவிடுகிறது! இன்றோ விமானத்தில் கொடுத்த உணவுகளை எல்லாம் ஒன்று விடாமல் சாப்பிட்டேன்😆 “படத்தைப் பார்க்காமல் தூங்கு.” என்று ஈஷ்வர் சொன்னாலும் நன்றாக இரவு உணவைச் சாப்பிட்டு விட்டதால் தூக்கம் வரும் வரை எனக்குப் பிடித்த நடிகர்கள் நடித்திருந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் கண்ணயர்ந்தது போல இருந்தது அதற்குள் காலை உணவைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பசியில்லை. வெறும் மஃபின், காஃபி, பிஸ்கட் இத்யாதிகள். எடுத்து வைத்துக் கொண்டேன்.

ஆங்கில இலக்கியத்தில் தீராக்காதல் கொண்ட ஈஷ்வரின் கனவுப்பயணம் இது. தன்னுடைய ஆதர்ச ஆங்கில இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்து வளர்ந்த ஊரை, தான் படித்த இலக்கியங்களின் கதாபாத்திரங்கள் உலாவிய, கவிஞர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட ஏரிகளை, பூங்காக்களைக் காண வேண்டும் என்ற விருப்பத்தின் தூண்டுதலால் இங்கிலாந்து சென்று வரத் தீர்மானித்தோம். ஈஷ்வருடைய பெரியப்பா ஐரிஷ் பெண்மணியை மணந்து அங்கேயே குடியேறிவிட்டதால் அவருடைய வாரிசுகளையும் நேரில் சந்திக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதும் மற்றொரு காரணம். அது மட்டுமில்லாமல் தன்னுடைய இசைப்பயணத்தைத் தொடர ‘லண்டன் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக்’கிற்குச் செல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டு இன்றும் வருந்திக் கொண்டிருப்பவருக்கு இந்தப்பயணம் மிக முக்கியமானதால் திடீரென்று முடிவெடுத்து மே மாதம் கிளம்பி விட்டோம். எங்கள் இருவருக்கும் அழகான, பசுமையான இங்கிலாந்தின் கிராமப்புறங்களைக் காண வேண்டும் என்ற ஆசையும் கூடுதல் காரணம்.



‘யுனைடெட் கிங்டம்’ (UK) என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து பகுதிகளை உள்ளடக்கியது. ‘கிரேட் பிரிட்டன்’ என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து பகுதிகளை உள்ளடக்கியது என்று தெரிந்து கொண்டேன். பாஸ்டனிலிருந்து இரவு புறப்பட்ட விமானம் தாமதமாக காலை 9.45க்கு லண்டனில் இறங்க உடலை ஊடுருவும் ‘சில்ல்’லென்ற குளிரும் மழைமேகங்களும் எங்களை வரவேற்றது. ஆகா! இது நியூயார்க் குளிரை விட மோசமாக இருக்கிறதே! வானிலிருந்து அழகிய லண்டன் நகரம் மனதை ஈர்க்கிறது. நியூயார்க் நகரத்திற்கும் இதற்கும் எத்தனை வேறுபாடுகள்! அமெரிக்காவின் பிரம்மாண்டம் அதுவும் நியூயார்க் நகரின் உயர்ந்த கட்டடக்குவியல்கள் தரும் பிரமிப்பு இல்லாவிட்டாலும் குட்டி குட்டி கட்டடங்கள், வீடுகள், மரங்கள் வசீகரிக்கிறது. விமான நிலையத்தை விட்டு வெளியில் வருவதில் சிரமமில்லை. மனம் ஒவ்வொரு விஷயத்தையும் நியூயார்க் நகரத்துடன் ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது. வாடகை வண்டி இருக்கும் இடத்திற்குச் செல்ல ஷட்டில் பஸ் வரும் என்று காத்திருந்தோம்.

நம்முடைய ராசி என்னவென்றால் அருகில் நின்றவர்கள் எல்லாம் அவரவர் ஷட்டில் பஸ்சில் ஏறி ‘ஜல்’லென்று சென்று விடுவார்கள். நாம் மட்டும் அங்கே தவிப்புடனே இருப்போம். எங்களுக்கும் அன்று அப்படித்தான் நடந்தது. அந்த ஓட்டுநர் பஞ்சாபியர் அங்கேயே நின்றிருக்கிறார். நாங்கள் பலமுறை அழைத்தும் அவருடைய எண்ணைத் தராமல் வண்டி அங்கு தான் இருக்கிறது என்று அலைக்கழித்தார்கள். ஒருவழியாக அங்கிருந்து கிளம்பினோம்.



முன்பதிவு செய்திருந்த வாடகை வண்டியை எடுக்க ‘ஈரோப்கார்’ நிறுவனத்திற்குள் நுழைந்தால் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் கதைத்தவர்கள் நம் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் போலத் தெரிந்தார்கள். பிரிட்டிஷ் ஆங்கில பேச்சில் ஒரு கிறக்கம் இருக்கத்தான் செய்கிறது. நமக்குச் சுட்டுப்போட்டாலும் இந்திய ஆங்கிலமே ‘தகிடுதத்தோம்’ போடுகிறது😄 எப்படியோ சமாளித்து நியூயார்க்கில் வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். குழந்தைகளே இப்படி பேச வேண்டும் அப்படி பேச வேண்டும் என்று திருத்த முனைகிறார்கள். “இதெல்லாம் பிரிட்டிஷ் இங்கிலிஷ் தெரியுமா?” என்று அவர்களிடம் உதார் விட்டு யூகே ஆங்கிலத்தைக் கேட்டவுடன் தான் அடடா நாம் பேசுவதெல்லாம் இந்திய ஆங்கிலம் அதுவும் தமிழக ஆங்கிலம் என்று புரிந்தது😂

இந்த வாடகை வண்டி நிறுவனங்கள் நயமாகப்பேசி நாம் கேட்ட வண்டியைக் கொடுக்காமல் வேறு வண்டியை அதிக வாடகைக்கு நம் தலையில் கட்டிவிடுவதில் கில்லாடிகள்! ஏற்கெனவே அயர்லாந்து, நெதர்லாந்து நாடுகளில் ஷிஃப்ட் வண்டியை ஈஷ்வர் ஒட்டியிருந்தாலும் தானியங்கி வண்டியை எடுத்துக் கொள்வது பத்து நாள் பயணத்திற்கு நல்லது. அதுவும் ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ என்றதும் ஆசை யாரை விட்டது? உடனே ஒப்புக்கொண்டோம். வெளியிலிருந்து பார்க்க அம்சமாக இருந்தாலும் உள்ளே குனிந்து தாழ்வாக இருந்த இருக்கையில் அமரும் பொழுது தான் இது உபத்திரவமாக இருக்கப் போகிறது என்று உணர்ந்தோம். அமெரிக்காவில் உயரமான வண்டிகளை ஓட்டிப் பழகிவிட்டு இந்த மாதிரி வண்டிகளை ஓட்டுவதும் அமர்ந்து செல்வதும் கொஞ்சம் கொடுமையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? ஒவ்வொரு பயணத்திலும் ஒன்றை கற்றுக் கொள்கிறோம். இனி அடுத்த முறை வாடகை வண்டி எடுக்கும் பொழுது இருக்கை உயரமாக இருக்கும் வண்டியைக் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற வாடகைப்பணமும் உயரத்தில் தான் இருக்கும். வாழ்க்கையில் ஒன்றை விலைகொடுத்துத் தான் ஒன்றைப் பெற வேண்டியிருக்கிறது! ம்ம்ம்ம்…. ஒவ்வொரு முறை காரினுள் உட்காரும் பொழுது குழிக்குள் இறங்குவது போல் இருந்தது😧



இந்தியாவில் இருப்பதைப்போல பிரிட்டனிலும் இடதுபுறம் ஓட்டுகிறார்கள். பழக்கமில்லாதவர்களுக்குச் சற்று சிரமம் தான். அதனால் அந்தப் பக்கமெல்லாம் நான் போவதில்லை. பயணம் முழுவதும் சாரதி அவதாரம் ஈஷ்வருக்கே. ஹை ஜாலி ஜாலி. நன்றாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் படங்கள் எடுத்துக் கொண்டும் இருக்கலாம்😊 அந்த வண்டியில் கண்ட்ரோல்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் விரைவில் ஈஷ்வர் கற்றுக்கொண்டார். வண்டியில் ஏறிய நொடியிலிருந்து “தூங்கிடாத. நான் பழக்கதோஷத்துல வலது பக்கம் போயிடுவேன். நீ தான் கவனமா இருந்து சொல்லிட்டு வரனும்.” என்று கட்டளையிட, தொடக்கத்தில் கொஞ்சம் அப்படி இப்படி வண்டி சென்றாலும் சாலையில் இறங்கியவுடன் தான் பதட்டம் தொற்றிக் கொண்டது.

மிகவும் குறுகிய சாலைகள்! நல்லவேளை! நான் ஒட்டவில்லை😕 நாங்கள் இறங்கிய நேரம் போக்குவரத்து வேறு பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது! இதற்காகத்தான் காலை நேரத்தில் வந்து சேருகிற மாதிரி விமானச்சீட்டு வாங்கியிருந்தோம். எங்கள் நேரம்! விமானம் தாமதமாக வந்து இறங்கி நெரிசலில் மாட்டிக்கொண்டோம்.



அந்த வார இறுதியில் ‘பேங்க் ஹாலிடே’ என்று மக்கள் குறுக்குநெடுக்காக பயணித்துக் கொண்டிருந்தார்கள். ‘லாங் வீக்கெண்ட்’ என்று அமெரிக்காவில் சொல்வதைப் போல அரசு விடுமுறையைத் தான் ‘பேங்க் ஹாலிடே’ என்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அதுவுமில்லாமல் இங்கிலாந்தின் இளவரசராகவே வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்து விட்ட ‘சார்ல்ஸ்’ தன்னுடைய 74வது வயதில் மன்னராகப் பதவியேற்பதால் லண்டனை நோக்கி வரும் கூட்டத்திலிருந்து தப்பிக்க விமானநிலையத்திலிருந்து முதலாவதாக ‘Stratford-upon-Avon’ நகரத்திற்குச் செல்வதாகத் திட்டம். அதற்கு M25, M40 சாலைகள் வழியே செல்ல வேண்டியிருந்தது. அமெரிக்காவில் ‘ஹைவேஸ்’ என்பதை இங்கே ‘மோட்டர்வேஸ்'(M) என்றழைக்கிறார்கள். 70mph என்றவுடன் ஒரே குழப்பம்! கனடாவில் கூட கிமீ என்றிருக்குமே! இங்கு என்னடா மைல் என்றிருக்கிறதே என்று. மூன்று, நான்கு வழிப்பாதைகள் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்தது. எப்பொழுதும் இப்படித்தான் இருக்குமாம்!

பழக்க தோஷத்தில் இடப்பக்கத்து வண்டிகள் செல்லும் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈஷ்வரை “அந்தப் பக்கம் போங்க” என்று கையால் ஆட்டுரலில் மாவைத் தள்ளுவது போல் சைகையால் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. சாலையிலிருந்து வெளியே செல்ல அமெரிக்காவில் வலப்பக்கத்தில் வரும் ‘exit’கள் இங்கே இடப்பக்கத்தில் என்று சிறிது குழப்பம். நெடுஞ்சாலையின் இருபுறமும் நெருக்கமாக மரங்கள். பனிக்காலம் முடிந்து மழைக்காலத்தில் துளிர்க்கிற மரங்கள் பச்சை வண்ணங்களைப் போர்த்தித் தொடர்ந்து வந்தது அழகு! பச்சை வண்ணத்தில் தான் எத்தனை விதமான நிறங்கள்! அதுவும் துளிர் விடும் பருவத்தில் அத்தனையும் அழகு!



நெடுஞசாலையோரங்களில் பசும்புல்வெளிகள், மரங்கள் என்று கண்ணுக்கு குளுமையான காட்சிகள். வேலிகளுக்குப் பின்னால் செம்மறியாடுகள் பரந்த வெளியில் சுகமாகத் திரிவதைக் காண முடிகிறது. அயர்லாந்து சாலைகளில் கண்ட அதே காட்சி தான். என்ன? அங்கே கற்களால் சுற்றுச்சுவர்களை வேலியாகக் கட்டியிருந்தார்கள். இங்கு அப்படியில்லை. வழியெங்கும் கருமேகங்கள் கூடிவருவதும் விலகி மறைவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தது. நகரைத் தாண்டியவுடன் போக்குவரத்து நெரிசல் குறைந்து அமைதியாகிவிட்ட சாலைகளில் சிறிய கார்கள் தான் அதிகம் தென்பட்டது. இந்நேரம் அமெரிக்காவில் பெரிய பெரிய டிரக்குகளும் வேன்களும் கப்பல் போன்ற கார்களும் கடந்து போயிருக்கும்.அதனால் தான் சாலைகளும் பெரிதாக அகலமாக இருக்கிறது. ஐரோப்பா முழுவதுமே சிறு கார்கள் தான் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. சாலைகளும் அப்படித்தான். அயர்லாந்தில் குறுகிய சாலைகளில் ஓட்டுவது பெரும் சவாலாக இருந்தது போல் ‘கிரேட் பிரிட்டன்’ சாலைகளிலும் ஓட்டுவது சிரமமான வேலை தான்! பாவம் ஈஷ்வர்!

களைப்பாக இருக்கிறது என்று துரித உணவகங்கள் இருக்கும் எக்ஸிட்டை எடுத்து வண்டியை நிறுத்தினால் பர்கர் கிங், ஸ்டார்பக்ஸ், சப்வே , கேஎஃப்சி என்று ஒரே அமெரிக்க கடைகள் பெயர் தான் கண்முன்னே தெரிந்தது. உள்ளே சென்று இந்திய உணவகம் ஒன்றில் காஃபி வாங்கிக் கொண்டோம். சுவையாக இருந்தது. மாம்பழ லஸ்ஸியை தயார் செய்து வைத்திருந்தார்கள். அங்கே அதிக பிரபலம் போல! லேட்டஸ்ட் வண்டியில் செல்ஃபோனை இணைக்க புது கேபிள் ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்😌 அங்கு செல்பவர்கள் மறக்காமல் வாங்கிச்செல்ல வேண்டும். பவுண்டில் செலவழிக்கும் பொழுது கஷ்டமாகத் தான் இருந்தது.



என்ன கொடுமை! ‘ரெஸ்ட்ரூம்’கள் இல்லை, இல்லை ‘டாய்லெட்’கள் கூட சிறிதாக இருக்கிறது இங்கே! கைகழுவும் இடங்களில் எல்லாம் அனாவசியமாக காகிதங்கள் இல்லை. ஈரக் கைகளை உலர்த்தும் இயந்திரங்கள் மட்டுமே! அமெரிக்கா நம்மை எப்படில்லாம் கெடுத்து வைத்திருக்கிறது! என்னவோ போடா மாதவா! ஆசுவாசப்படுத்திக் கொண்டதில் கொஞ்சம் தெளிந்திருந்தோம். பெரியப்பா மகள் நாங்கள் வந்து சேர்ந்த விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

இரண்டு மணிநேரத்தில் ‘Avon’ ஆற்றங்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய ‘Stratford-upon-Avon’ நகரத்திற்கு வந்து சேர்ந்தோம். இங்கிலாந்தில் வண்டிகளை நிறுத்த இடங்களைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. ஒருவேளை பழகாத ஊர் என்பதால் அப்படித் தோன்றியதோ என்னவோ! தானியங்கி இயந்திரங்களில் காசுகளைப் போட்டு வாகனங்களை நிறுத்தும் வசதிகள் இருப்பதால் சட்டென்று உதவிக்கு ஆட்களைத் தேடுவதில் சிரமம் இருக்கிறது. எங்கும் தானியங்கி இயந்திரங்கள் பெருகி மனிதர்களை விட்டு விலகி கொண்டிருக்கிறோம்! ஹ்ம்ம்…



வண்டியை விட்டு இறங்கியவுடன் ஈஷ்வருக்கோ ஒரே குஷி!இருக்காதா பின்ன? அவருக்கு மிகவும் பிடித்த ‘ஷேக்ஸ்பியர்’ பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊருக்கல்லவா வந்திருக்கிறோம். அநேகமாக அவருடைய எல்லா நாடகங்கள், கதாபாத்திரங்கள், கவிதைகளைப் பற்றி நிறைய பேசியிருக்கிறார். மகளும் பள்ளியில் கவிதைகளைப் பற்றிப் பேசி போட்டிகளில் கலந்து கொண்டதால் இருவருக்கும் எப்பொழுதும் ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பேசுவதில் ஆர்வம் அதிகம். கல்லூரியில் பகுதி நேர ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் ஆர்வத்துடன் மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுத்திருக்கிறார். அதே ஆர்வத்துடன் வீட்டிற்கு வந்து எனக்கும்😭 அதுவும் ‘மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்’ பற்றி சிலாகித்துப் பேசிய நாட்கள் எல்லாம்…

ஆங்கில இலக்கியத்தில் வெகுவாக கொண்டாடப்படும் அந்த மாமனிதர் பிறந்து வளர்ந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தோம். கற்கள் பதித்த தெருவில் நுழையும் பொழுதே பயணிகள் கூட்டம் தெரிந்தது. ‘பேங்க் ஹாலிடே’ என்று சென்ற பக்கமெல்லாம் கூட்டம். ஹென்லி தெருவின் நுழைவாயிலில் ‘As you like it ‘நாடகத்தில் வரும் கதாபாத்திரம் ‘ஜெஸ்பெர்’ கோமாளியின் சிலையை வைத்திருக்கிறார்கள்.



“The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool” அடிக்கடி ஈஷ்வர் சொல்லும் வசனம். அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் நாம் யார் என்பது நமக்கே தெரிந்து விடும்😎அதைப் பற்றிப் பேசிக்கொண்டே அழகான தெருவிலிருந்த ஷேக்ஸ்பியர் பிறந்த வீட்டிற்குச் சென்றோம். நல்ல வசதியான குடும்பத்தில் தான் பிறந்திருக்கிறார். மேலைநாடுகளில் அருங்காட்சியகத்திற்குச் சென்றால் அங்கு பணிபுரிபவர்களுக்கு அதைப் பற்றின அடிப்படை ஞானம் இருக்கிறது. என்ன கேள்விகள் கேட்டாலும் தெளிவாகப் பதில் சொல்கிறார்கள். வாங்கிய கட்டணத்திற்குத் தரமான சேவை. நம் நாட்டின் சுற்றுலாத்துறைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியப்பாடம்.

அருங்காட்சியகம் முழுவதும் ஷேக்ஸ்பியரின் புதினங்கள், நாடகங்கள், அவரைப் பற்றின தகவல்களை வெகு அழகாக நேர்த்தியாக வைத்திருந்தார்கள். அங்கிருந்து அவரது வீட்டிற்குச் செல்ல வழிசெய்திருந்தார்கள்.



இங்கிலாந்து வீடுகளில் அழகான தோட்டங்களும் சிறிது புல்தரையும் இருக்கிறது. அமெரிக்காவில் புல்தரைகளுக்குத் தான் முதலிடம். அதற்குப் பிறகு தான் தோட்டங்கள். இங்கும் நுழைவாயிலில் அழகான பூந்தோட்டம். வளைத்து வளைத்துப் பூக்களைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். கற்கள் பதித்த தரை. 16ம் நூற்றாண்டாய்ச் சேர்ந்த பழைய வீட்டினை அழகாகப் பராமரித்து வைத்திருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் தந்தை ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதில் விற்பன்னராக இருந்திருக்கிறார். அவருடன் சில வருடங்கள் தங்கி தொழிலைக் கற்றுச் செல்லவும் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அறையாகச் சுற்றிவந்தோம். சமையல் செய்ய, சாப்பிட, பொதுவான அறைகள் கீழ்த்தளத்திலும் மாடியில் படுக்கையறைகளும் இருந்தது. அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த மரக்கட்டில்கள். பிறந்த குழந்தைகள் படுக்க சிறு தொட்டில். சிறுகுழந்தைகளுக்கான கயிற்றுக்கட்டில் பெற்றோரின் கட்டிலுக்கு அருகில். இளவயதினருக்குத் தனியறைகள் என்று வசதியான வீடு. கயிற்றுக்கட்டிலில் ஏற்படும் தொய்வைப் போக்கி சுகமாகத் தூங்க, ஒரு கருவியை உபயோகப்படுத்தி தினமும் கயிற்றை இறுக்குவார்களாம்.அப்படித்தான் ‘குட் நைட். ஸ்லீப் டைட்’ என்று உருவாகியிருக்கிறது என்று அந்த வீட்டைச் சுற்றிக் காண்பித்த பெண்மணி கூறினார். இது தெரியாமல் இத்தனை நாள் ‘ஸ்லீப் டைட்’ என்று கூறியிருக்கிறோமே! ம்ம்ம்… குழந்தைகளிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டேன்.

வீட்டுத் தோட்டத்தில் ஷேக்ஸ்பியருடன் அவர் காலத்தில் வாழ்ந்த சைனீஸ் எழுத்தாளர் டாங் ஷியாங் சிலை. அங்கே நமக்குத் தெரிந்தவர் சிலை ஒன்றும் இருந்தது. அட! நம்ம தாகூர்!



தன் ஆதர்ச நாயகனின் வீட்டின் முன், வீட்டினுள் நின்ற ஒவ்வொரு நொடியிலும் ஈஷ்வர் பரவசமாக இருந்தார். கண்ணில் தென்படும் இடங்களில் எல்லாம் அவருடைய புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தது. வாசிக்கையில் அவருக்குப் பல நினைவுகள்! அங்கிருந்து ஷேக்ஸ்பியர் படித்த பள்ளிக்கூடத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். கருமேகங்கள் வேறு கர்ஜித்துக் கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் மழை கொட்டும் அபாயம். தெருவில் இருந்த உணவகங்களில் நல்ல கூட்டம். தெரு முக்கில் கம்பீரமாக ஷேக்ஸ்பியரின் சிலை ஒன்று. சிலபல படங்களை எடுத்துக் கொண்டு தூறல் வருவது போல் இருக்கவே ஷேக்ஸ்பியரின் புதிய வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தோம்.

செல்லும் வழியிலேயே வானம் இடிந்து விழுவது போல கனத்த மழை! குடை பறந்து விடும் அளவிற்கு பலத்த காற்று. நாங்களும் ஒரு துரித உணவகத்திற்குள் நுழைந்து கொண்டோம். அங்கு நின்றதால் உணவு ஒன்றுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு ‘ஜோ’வென்று கொட்டும் மழையில் நனைந்து செல்லும் மக்களையும் அருகில் இருந்த தேவாலயத்தையும் மழையையும் ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்த ஒருவர் கட்டட வேலைக்காக அருகிலிருக்கும் நகரிலிருந்து வந்து செல்வதாகவும் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டார். மனிதர் பேசிய ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்தது.


அரை மணிநேரம் பெய்த கனமழை சட்டென்று தூறலாக மாற, ஓடிச்சென்று ‘சேப்பல்’ தெருவில் இருக்கும் ஷேக்ஸ்பியரின் புதிய வீட்டை அடைந்தோம். இங்குச் செல்ல ஏற்கெனவே சீட்டு வாங்கி விட்டதால் குழுவாகச் சேர்ந்து ஒருவர் அழைத்துச் சென்றார். அவருக்கு வயது 70க்கு மேல் இருக்கலாம். ஆனால் உற்சாகமாக இருந்தார். அந்த வீட்டைப் பற்றின முழுத்தகவல்களைச் சுவாரசியமாகக் கூறிய விதம் மிகவும் பிடித்திருந்தது. மதுரையில் திருமலை நாயக்கர் மகாலைப் பற்றின ஒரு தகவலைக் கேட்க விட்டேத்தியாக அங்கிருந்தவர் சொன்ன பதில் நினைவிற்கு வந்தது. ம்ம்ம்ம்ம்… நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. இங்கு வரும் பயணிகளிடமும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அங்கிருப்பவர்களுக்கும் மக்களுக்கு வேண்டிய தகவலைச் சொல்லிக் கொடுக்கும் ஆர்வமும் இருக்கிறது. அதுவும் பலரின் ஆதர்ச நாயகன் என்றால் அலட்சியமாக இருக்க முடியாது அல்லவா?



அந்த ஊரிலேயே 20-30 அறைகள் கொண்ட பெரிய வீடும் தோட்டமும் கொண்ட வீட்டை தன் குடும்பத்திற்காக கிளாப்டன் குடும்பத்தினரிடமிருந்து 1597ல் வாங்கியிருக்கிறார் ஷேக்ஸ்பியர். மரங்கள், செடி, கொடிகள் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்ததால் தோட்டங்களை அவரே பராமரித்திருக்கிறார். அதை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். அந்தக் காலத்தில் அதிக சம்பளம் பெற்றுக் கிடைத்த பணத்தில் முதலீடு செய்துள்ள வீட்டை யாரிடமிருந்து வாங்கினாரோ அந்த குடும்பத்தின் வாரிசுகளிடமே வீடு மீண்டும் சேர்ந்திருக்கிறது. ஷேக்ஸ்பியருக்குப் பின்னர் அவருடைய மகள், தன் கணவன், மகளுடன் அந்த வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அவருடைய மகள் எலிசெபத்திற்கு வாரிசுகள் இல்லாததால் வீட்டை மீண்டும் கிளாப்டன் குடும்பத்தினர் வாங்கி விட்டனர். அந்த வீட்டை ஷேக்ஸ்பியர் டிரஸ்ட் வாங்கி தற்பொழுது அவருடைய வாசகர்களும் பயணியர்களும் கண்டுகளித்துச் செல்லுமிடமாக மாற்றியுள்ளார்கள்.

அந்த ஊரிலிருந்த வீடுகள் எல்லாம் கண்களை உறுத்தாத வண்ணங்களில் மர வேலைப்பாடுகளுடன் சிறிய பூந்தொட்டிகளுடன் சுவிட்சர்லாந்து வீடுகளை நினைவூட்டியது. சுத்தமான தெருக்கள். மன்னரின் பதவியேற்பு விழாவிற்காக நகரம் தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சதுக்கங்கள். எங்கும் புது மன்னரின் புகைப்படங்கள், பரிசுப்பொருட்கள் என்று காட்சிகளுக்குக் குறைவில்லை.



காலத்தால் அழியாத காவியங்களைத் தந்த மனிதன் பிறந்து வளர்ந்த ஊர் இன்று சுற்றுலாவினர் தவறாமல் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. அங்கே அவருடைய நாடகத்தை எப்படியாவது ‘ராயல் ஷேக்ஸ்பியர் தியேட்டர்’ல் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தோம். சீட்டு கிடைக்கவில்லை. அந்த அரங்கையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தால் காட்சி நடந்து கொண்டிருந்ததால் அங்கிருந்தவர்கள் “லண்டனில் கூட இருக்கிறது. அங்கே பார்க்கலாம்.” என்று கூற, அங்கிருந்து வெளியேறினோம்.

அந்த இடத்தைச் சுற்றிப்பார்க்க 1/2 நாட்கள் போதும். விரைவிலேயே மூடி விடுகிறார்கள். சுற்றுலாவினர் சென்ற பிறகு அந்த இடமே வெறிச்சோடி இருக்கிறது. அங்கிருந்து பெரியப்பா மகள் வீட்டிற்குச் செல்ல இரண்டு மணிநேரம் ஆகும் என்பதால் விரைவில் ஷேக்ஸ்பியரின் மனைவி ‘ஆன் ஹாத்தவே’ வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்துக் கிளம்பிவிட்டோம். தூறலும் நின்று விட்டிருந்தது. லண்டனுக்கே உரிய இரண்டடுக்குப் பேருந்துகள் குறுகிய தெருவில் செல்வதைப் பயத்துடன் பார்த்துக் கொண்டே வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.



குறுகிய சாலைகளைக் கடந்து மரங்கள் அடர்ந்த பகுதியில் காட்டேஜ் லேனில் ‘ஆன் ஹாத்தவே குடில்’ உள்ளது. ‘thatched roof’ என்று சொல்லப்படும் வைக்கோல் வேய்ந்த கூரைகளுடன் அழகான சிறிய வீடு. தன் காதலியைச் சந்திக்க ஷேக்ஸ்பியர் ஆன் ஹாத்தவேவின் குடும்ப வீட்டிற்கு வந்து சென்றதால் இந்த வீடும் சுற்றுலாவினர் விரும்பிப் பார்க்கும் இடமாக மாறியுளளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுப் பல ஆண்டுகளாக மாறுதல்களைக் கண்டிருந்தாலும் படுக்கை அறை, உணவருந்தும் அறை , குடிசைத் தோட்டங்கள் என்று பலவும் சீராகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் சென்ற இடங்கள் அனைத்தும் வழிகாட்டிகள் தகவல்களைக் கூறி அழைத்துச் சென்றதால் சுவாரசியமாக இருந்தது. கட்டணம் வசூலித்தாலும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துரைக்கிறார்கள். சிறிது நேரம் அங்கிருந்த தோட்டத்தில் உலாவினோம். காதலியுடன் ஷேக்ஸ்பியர் நடந்த இடங்களாயிற்றே! தன்னை விட வயதில் மூத்த பெண்ணைக் காதலிப்பதே அன்றைய காலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கும். அதையெல்லாம் கடந்து நின்றிருக்கிறது அவர்களின் காதல்😍 ஆகா! காதல் என்பது எதுவரை…💞💞💞

அங்கிருந்து பெரியப்பா மகள் வீட்டிற்குப் புறப்பட்டோம். இரண்டு மணிநேரப் பயணம். அவளும் அழைத்து வீட்டிற்குச் செல்லும் வழிகளைச் சொல்லி விட, அன்றைய நாளின் களைப்பை ஷேக்ஸ்பியர் என்னும் பெருமனிதன் முற்றிலும் நீக்கி விட்டிருந்ததை வியந்து பேசிக்கொண்டே பயணித்தோம்.

(சஞ்சரிப்போம்)

 


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...