Showing posts with label யூடியூப். Show all posts
Showing posts with label யூடியூப். Show all posts

Tuesday, October 3, 2023

இந்தியாவின் திருவிழாக்கள்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் திருவிழாக்களுக்குக் குறைவே இல்லை. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு திருவிழாக்களைக் கொண்டாடி வருவதைச் செய்திகளிலும் பத்திரிகைகளிலும் படித்திருக்கிறோம். சிலபல படங்களையும் பார்த்திருக்கிறோம். ஆளாளுக்கு கையில் ஸ்மார்ட்ஃபோனுடன் அலையும் காலம் இது. அதுவுமில்லாமல் சுற்றுலா சென்று வரும் மக்களும் அதிகரித்து வருகின்றனர். இதனால் மற்ற மாநிலங்களைப் பற்றி அறியும் ஆவலும் அதன் தொடர்பான செய்திகளையும் அறிந்து கொள்ள முற்படுகிறார்கள். தாங்கள் கண்டவற்றை சமூக ஊடகங்கள் வாயிலாக மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள பல்வேறு பழக்கவழக்கங்கள், நடை, உடை, பாவனைகள், ஆடல், பாடல், கொண்டாட்டங்கள் என்று முற்றிலும் புதிய கலாச்சாரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.


சமூகஊடகங்களில் வரும் படங்கள், காணொளிகள் உலகமெங்கும் பரவி வெளிநாட்டினரும் கேமரா சகிதம் புறப்பட்டு வருகிறார்கள். எத்தனை அழகாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியுமோ வழங்குகிறார்கள். திருவிழாக்களை நேரில் காணும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உட்கார்ந்த இடத்திலிருந்தே காணும் வாய்ப்பு கிடைக்கிறது. மதுரையில் பத்து நாட்கள் நடக்கும் 'சித்திரைத்திருவிழா' போலவே வெளிமாநிலங்களிலும் கோலாகலமான பெருவிழாக்கள் நடைபெறுவதை அழகாக தொகுத்து காணொளிகளாக யூடியூபில் 'நேஷனல் ஜியோகிராபிக் இந்தியா' வழங்குகிறது. ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் ஒரு புதுத்தொடர். சமையற்கலை நிபுணரான மீகன் நன்றாக இந்திய உணவுகளைச் சாப்பிடுகிறார். பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு கூட்டத்தில் ஒருவராக சிரித்த முகத்துடன் விவரங்களை அறிந்து தொகுத்து வழங்குகிறார்.

முதலில் 'எண்டே கேரளா'வின் ஓணம் பெருவிழாவில் இருந்து துவங்கியிருக்கிறார்கள். 'The Festival of Abundance' அம்மாநிலத்தின் அழகுக்கோவில்கள், ஏங்க வைக்கும் 'பச்சைப்பசேல்' நிலப்பரப்பு, சேச்சிகளின் நடனம், சேட்டாக்கள் பம்பரமாய் சுழன்று ஓணம் விருந்தைத் தயார் செய்து மக்களுக்குப் படைப்பது, யானைகளின் அணிவகுப்பு, படகுப்போட்டி, பாரம்பரிய உடை, இசை, களரி ஆட்டம் என்று அங்குமிங்கும் நகரவிடாமல் விழாக்களைப் பற்றின சுவையான தகவல்களுடன் வழங்கியிருப்பது சிறப்பு.



'The Divine Colors of Holi' என்ற அடுத்த பாகத்தில் வட இந்தியாவில் மதுராவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலி திருவிழாவைப் பற்றி வண்ணமயமாக வழங்கியிருக்கிறார் மீகன். இத்தனை பிரம்மாண்ட விழாவை நேரில்பார்த்திருந்தால் கூட இத்தனை அழகாக இருந்திருக்குமோ? கூட்டத்தைக் கண்டு பயந்திருப்போம் என்று தான் தோன்றியது. மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது...!! ஆனால் உள்ளூர் மக்களின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி! திருவிழாக்கள் தரும் உற்சாகமே நம் வாழ்க்கையை மன அழுத்தத்திலிருந்து ஓரளவு நம்மைக் காப்பாற்றி வருகிறது. இவையெல்லாம் இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள்! பைத்தியமே பிடித்து விடும்.

இனம், மொழி, மதம் என பல வேற்றுமைகள் இருந்தாலும் இந்தியர்களாக இந்த மண்ணின் மகத்துவத்தை அறியும் தருணங்களில் பெருமையாக இருக்கிறது. வெளிநாடுகளில் இத்தகைய கலாச்சாரம் இல்லாதிருப்பதும் அவர்களுடைய விழாக்கள் பொருள்சார்ந்த வியாபாரமாக மாறிவரும் போக்கும் இருப்பதால் தான் மகிழ்ச்சியுடன் விழாக்களைக் கொண்டாடும் மக்களை, கலாச்சாரத்தை அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். வியக்கின்றனர். குறுகிய தெருக்கள், சிறிய கோவில்களில் வண்ணவண்ணப் பூக்களை, பொடிகளைத் தூவி ஹோலி கொண்டாடி கிருஷ்ணரை வணங்குவதை இதைவிட அழகாக எடுக்க முடியுமா? தெரியவில்லை.

அதுமட்டுமில்லாமல் அந்தந்த ஊர்களில் கிடைக்கும் உணவுகளைப் பற்றியும் அறிந்து அவர் சாப்பிடுகிறார். நமக்குத் தான் ஆகா! மனுஷன் வெளுத்து வாங்குறாரே! என்று பொறாமையாக இருக்கிறது😋 ட்ரோன் காட்சிகளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

'The Joyous Festivities of Eid' ஹைதராபாத், டெல்லி மசூதிகளில் நடந்த பெருவிழாவைப் பற்றியும் ஒரு பாகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். அங்கு கிடைக்கும் உணவுகளையும் இஸ்லாமிய திருவிழாக்கள் பற்றியும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்.

The Ancient Nagas Tradition இந்த வார தொடர். பெருவிழா என்றால் பத்துநாட்கள் மும்பையில் நடக்கும் விநாயகர் திருவிழா இல்லாமலா? விரைவில்...

இனிவரும் தொடர்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Tuesday, April 5, 2022

திபெத் சுற்றுலா பயண நிகழ்ச்சி

தொலைக்காட்சி, யூடியூப்ல் வரும்  பயண நிகழ்ச்சிகளை நான் விரும்பி பார்ப்பதுண்டு. இந்நிகழ்ச்சிகளில் வெறும் சுற்றுலாத்தலங்களை மட்டும்  சிலர் காண்பிப்பார்கள். சிலரோ, மக்களின் உணவு, உடை, நாகரீகம், பண்பாடு என்று பல விஷயங்களைத் தெரிவிப்பார்கள். நாம் செல்ல முடியாத உலகை இவர்கள் விவரிப்பதால் பார்ப்பதற்கும் ஆவலாக,  வெளிநாடுகளில் பார்க்க வேண்டிய இடங்களையும் தெரிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கும். அப்படி ஒரு நிகழ்ச்சி தான் 'ஜம்யங்' என்ற திபெத்தியர் வழங்கும் "ட்ராவல் திபெத்" குறுந்தொடர்கள். அத்தனை பொறாமையையாக இருக்கிறது. அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று நம் கண்களுக்கு விருந்தாக பல அருமையான தொடர்களைச் சுவைபட அளித்திருக்கிறார் மனுஷர்! உயர்ந்த மலைகள், பனி உருகியோடும் நீண்ட ஆறுகள், வண்ண வண்ண குளங்கள், நதிகள், பசுமை போர்த்திய விளைநிலங்கள், கட்டடங்கள், காடுகள், அழகு மடாலயங்கள் என நம்மைச் சுண்டி இழுக்கும் வகையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார். ஜம்யங்கின் குரலும், தொகுத்து வழங்கும் விதமும் தொடரை மேலும் இனிமையாக்குகிறது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாலோ என்னவோ அருமையான சாலைகள் நாடு முழுவதும் போடப்பட்டிருக்கிறது. பெருநகரங்களைத் தவிர கிராமங்களில் மக்கள் கூட்டம் இல்லை. அத்தனை வெள்ளந்தி மனிதர்களாக தெரிகிறார்கள். அவர்களின் விடியலே எழுந்தவுடன் உலக நன்மைக்காக வேண்டிக் கொண்டு வாசனை மூலிகைகளை வீட்டு வாசலில் இருக்கும் அடுப்பில் தூபம் போடுவதில் துவங்குகிறது. தனக்காக, தன் குடும்பத்திற்காக கோவில் கோவிலாக வேண்டிக்கொண்டு அலையும் சுயநலம் பிடித்த உலகில் இவர்களின் எளிய வாழ்க்கையும் அணுகுமுறையும் மனதிற்கு இதமாக இருக்கிறது.

கிராமங்களில் வசிப்போர் கால்நடைகள், பார்லி, காய்கறி, மலர்த்தோட்டங்கள் சூழ வாழ்கிறார்கள். கிடைக்கும் பாலில் வெண்ணெய், பாலாடைக்கட்டியை  அவர்களே தயாரித்து விடுகிறார்கள். பார்லி பவுடரில்  ரொட்டி சுடுவதும், வெண்ணையில் தேனீர் போடுவதும், காட்டு எருமைகளின் இறைச்சி, காய்கறிகளைக் கொண்டு செய்த சூப் என கிடைப்பதைக் கொண்டு அவர்களுடைய அன்றாட உணவு எளிதாக முடிந்து விடுகிறது. 

ஒவ்வொருவர் வீட்டிலும் புத்தர் வழிபாடு செய்ய ஒரு பூஜை அறை உள்ளது. தினமும் காலையில் எழுந்தவுடன் பூஜையறையில் கிண்ணங்களில் நீரை நிரப்பி வழிபடுகிறார்கள். அதற்காக நீரைப் பிடித்துக் கொண்டு வர காலையிலேயே கிளம்பி விடுகிறார்கள். வயதானவர்கள் கையில் ஒரு மாலையையோ உருளையோ வைத்து மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வீட்டு வேலைகளைப் பெண்கள் தான் கவனித்துக் கொள்கிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து 3000 மீட்டருக்கு மேல் இருப்பதால் குளிருக்கும், பனிக்கும் பஞ்சமில்லை. ஹீட்டர் வசதிகள் இல்லாமல் கிராமப்புற மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அதிசயமாக இருக்கிறது!

வீட்டிற்கு அருகே ஓடும் ஓடை, நதியிலிருந்து சுத்தமான நீரை எடுத்துப்  பயன்படுத்துகிறார்கள். மர அடுப்புகள் தான் பல இடங்களிலும். பெரிய வீடுகள் முதல் சிறு குடிசைகள் வரை இருக்கிறது. எங்கு பார்த்தாலும் புத்த மடாலயங்கள் தான்! இயற்கையுடனும் இறைவழிபாடுடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் இமயமலை அடிவாரத்தில் வாழும் திபெத்தியர். 

ஜம்யங் உலகின் அரிய மடலாயங்களுக்கு அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு தொடரும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல கொள்ளை அழகு. மக்கள் மிகவும் சாத்வீகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் புண்ணியத்தலங்களுக்கு குடும்பங்களுடன் செல்கிறார்கள். ஊர்கள் ஒவ்வொன்றும் அத்தனை நேர்த்தியாக , கட்டடங்கள் அழகிய வண்ணங்களில். படபடக்கும் கொடிகள் சூழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மடாலயங்கள், ஸ்தூபிகள், பொன்னால் செய்யப்பட்ட புத்தர்கள், பனிமலைகளுக்கிடையே எப்படி இவ்வளவு உயரமான மடாலயங்களை, தியான மண்டபங்களை கட்டினார்களோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது இத்தொடர் ஒவ்வொன்றும்.

இந்துக்கள் பலரும் தரிசிக்க நினைக்கும் கைலாச மலைக்கு கூட நம்மை அழைத்துச் செல்கிறார் ஜம்யங். முடிந்தால் நீங்களும் கண்டுகளியுங்கள்.  

Travel Tibet

ஆல்பனியிலிருந்து ஒரு மணிநேரத்தொலைவில் கேட்ஸ்கில் மலையடிவாரத்தில் 'வுட்ஸ்டாக்' என்ற சிற்றூர் இருக்கிறது. 1969ல் இங்கு நடந்த இசைத் திருவிழாவால் பிரபலமான ஊர். வியட்நாம் போரில் அநியாயத்திற்கு மக்களையும் பொருளாதாரத்தையும் இழந்து இளைஞர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு நிம்மதியைத்தேடி புகை, போதை, இசை என்று அலைந்து கொண்டிருந்த நேரத்தில் இங்கு நடைபெற்ற இசைத்திருவிழா வரலாற்றையே புரட்டிப் போடும் அளவிற்கு வெற்றி பெற்றது. பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்றுக் கொண்டதும் கட்டுக்கடங்காத கூட்டமும் இன்று வரையில் 'வுட்ஸ்டாக்' என்றதும் மக்களுக்கு நினைவில் வரும் நிகழ்வாக நியூயார்க் வரலாற்றில் அமைந்து விட்டது.  இன்று இசை, ஓவியக்கலைக்கூடங்கள் நிறைந்த அமைதியான ஊராக பல கடைகளுடனும் உணவகங்களுடனும் இயற்கை எழில் சூழ மக்கள் வந்து செல்லும் இடமாக மாறி விட்டிருக்கிறது. அங்கு முதல் முறை சென்றிருந்த பொழுது காபிக்கடையில் ஒருவர் இந்தியர்களா? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டு விட்டு ஐந்து நிமிட மலைஏற்றதில் அருமையான திபெத்தியன் மடாலயம் ஒன்றுள்ளது. கண்டிப்பாக பார்த்து விட்டுச் செல்லுங்கள் என்று செல்ல வேண்டிய வழியையும் கூறினார். அவர் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர். இந்தியா, நேபாளம், திபெத் சென்று வந்ததாக அவருடைய இனிய அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அந்தக் கடையில் வுட்ஸ்டாக் இசைத்திருவிழா அன்று எடுத்த பல படங்களை வைத்திருந்தார்கள். 

அவர் சொன்ன மடாலயத்தைத் தேடி மலையேறிச் சென்ற எங்களுக்கு அப்படியொரு ஆச்சரியம். வண்ண வண்ண கொடிகளுடன் அந்த இடமே ரம்மியமாக இத்தனை பெரிய கட்டடத்தைக் கட்டி வைத்திருக்கிறார்களே என்ற பிரமிப்புடன் உள்ளே சென்றால் மிகப்பெரிய தங்கமுலாம் பூசிய புத்தரின் சிலை, சிகப்பு, மஞ்சள், ஊதா வண்ணங்களுடன் ஓவியங்கள் தீட்டப்பட்ட சுவர்கள், விளக்குகள் என்று அந்த இடமே ஜெகஜோதியாக மின்னிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய அறையில் மக்கள் அமர்ந்து தியானிக்க வசதியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அவர்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகளும் அங்கிருந்தன. அருகே தாரா சந்நிதானத்தில் பூஜை நடந்து கொண்டிருந்தது. தாளத்துடன் முரசு ஒலியும்  இசைக்க துறவிகள் மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்தார்கள். அமைதியான சூழலில் அதனைக் கேட்பதற்கே அத்தனை ரம்மியமாக தியான நிலைக்கு அழைத்துச் சென்றது.

தலாய் லாமா ஆசியுடன் வட அமெரிக்காவில்  அமைந்துள்ள மிகப்பெரிய புத்த மடாலயம். மூன்று வருடங்களுக்கு முன் தற்போதைய மடாலய தலைவர் புதிய ஸ்தூபிகளை நிர்மாணிக்க வந்திருந்தார். அவர்களுடைய கலாச்சாரப்படி  ஆற்றை நோக்கிய மலை உச்சியில் இக்கோவில் அமைந்துள்ளது சிறப்பு. பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களும் அமெரிக்கர்கள் பலரும் இங்கு வந்து தியானித்து விட்டுச் செல்கிறார்கள்.  

கோவிட் தொற்றுப்பரவல் காலத்தில் மூடப்பட்டிருந்த மடாலயம் இரு வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரம் திறக்கப்பட்டது. 

Tibetan Moanstery, NY 

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...