Tuesday, May 28, 2013

கும்பகோணம் - வைத்தீஸ்வரன் கோவில்

வைத்தீஸ்வரன் கோவில் சிவபெருமான் நோய்களைத் தீர்க்கவல்லவர் என்று படித்திருக்கிறேன். மிகவும் பழமையான கோவில். வண்டி நிறுத்த இன்னும் வசதிகள் செய்யப்படவில்லை.

கோவிலுக்கு எதிரில் காபிக்கடைகளைத் தாண்டி ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு இறங்குவதற்குள் ஒருவர் வேகமாக வந்து இங்கு நாடி ஜோசியம் அருமையாக சொல்வார்கள் என்று பரபரத்தார்! எனக்கும் பார்த்தால் தான் என்ன என்று தோன்றினாலும் எதையாவது சொல்லி மனச்சஞ்சலம் வந்து விட்டால் என்று எண்ணிக் கொண்டு ஆர்வமில்லை என்று சொல்லி விட்டு கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்தோம். ஓரமாக பூக்கள் விற்பவர்களும் வரிசையாக கையேந்தி பிச்சை எடுப்பவர்களும் என்று கோவிலின் முன் கூட்டம்.

சின்னக் கோபுரம் தான். வைத்தீஸ்வரன் நடுநாயகமாக இருக்க, தையல்நாயகி அம்மன் அழகான அலங்காரத்துடன் இருந்தார். முருகன், விநாயகர், அங்காரகன், சூரியன், தன்வந்தரி என்று தனித்தனி விக்கிரகங்கள். ஓரளவு கூட்டமும் இருந்தது. கோவில் குளம், மரங்கள் என்று கோவில்சுற்றும் நன்றாக இருந்தது. நிறைய நேரம் செலவழிக்க முடியவில்லை.

கோவில் பிரசாதம் வாங்கிக் கொண்டு கும்பகோணம் நோக்கிப் பயணம். வரும் வழியில் மயிலாடுதுறை தாண்டி வரும் பொழுது சணல் கயிற்றில் செய்த கூடைகள், அமரும் இருக்கைகள் நிறைய விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக கும்பகோணம் வந்தவுடன் முதலில் தெரிந்த ஒரு ஹோட்டலில் நிறுத்தி ஒரிஜினல் கும்பகோணம் பில்டர் காபி குடித்தோம்*:) happy ஆங்கில வருடப்பிறப்பை ஒட்டி கடையை வண்ண பலூன்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்திருந்தனர். அங்கு ஆரம்பித்த காபி குடிக்கும் பழக்கம் மதுரை வரும் வரை நீண்டது. காபி சுவை பேஷ் பேஷ், அருமையாக இருந்தது. பூஸ்ட், ஹார்லிக்ஸ் கூட கடைகளில் கிடைக்கிறது!

கும்பகோணத்தில் நாங்கள் தங்கப் போகின்ற ஹோட்டல் வழி கேட்டு அங்குப் போனால், சமீபத்தில் தொலைக்காட்சியில் நடனப் போட்டியில் வென்ற ஜோடி ஆடுகிறது, இன்னொரு கூட்டம் பாடுகிறது என்று 'சர்வ' அலங்காரங்களுடன் இருந்ததைப் பார்த்து விட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மேனேஜரும் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று சொன்னவுடன் பேசமால் கோவில் பக்கம் இருக்கும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினோம்.

கும்பகோணம் உள்ளே நுழைந்தவுடன் நெரிசலான குறுகிய தெரு வழியாக குளத்தை தாண்டிப் போனால் எதிரே கோவில் கோபுரம்- சிவ,சிவ என்று பக்கவாட்டில் பார்த்தால் பெருமாள் கோவில்- கோவிந்தா கோவிந்தா*:) happy

தலை நிமிர்ந்து பார்த்தால் கோபுரங்கள்! இது தான் கும்பகோணம்!

விதவிதமான கடைகள். உயர்ந்த கட்டிடங்களில் நகை அணிந்த சீமாட்டிகளின் வண்ண விளம்பரங்கள், ஜோய் ஆலுக்காசுக்காக சிரித்துக் கொண்டே நடிகைகள். தமிழ்நாட்டைப் பறைசாற்றும் விதத்தில் ஜெனரேட்டர், இன்வேர்ட்டர் உதவியில் விளக்குகள். வந்தாரை வரவேற்கும் கொசுக்கள்*:( sad

ஒரு வழியாக ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு விட்டு சிறிது நேரம் புது வருட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஹோட்டல்களில் தவறாமல் கொசுவிரட்டியும் இருக்கிறது. ஏசியும் இருந்தது*:) happy

நடுநடுவே அம்மா, அக்கா, தங்கை, தம்பி, கணவர் என்று எல்லோருடனும் ஊர் வந்து சேர்ந்த தகவலை சொல்லி விட்டு, என் தம்பியும் இரவு உணவு முடித்து விட்டு வர, சூடான பாலையும் குடித்து விட்டு, அடுத்த நாள் போகப் போகிற சூறாவளி கோவில் பயணத்தை நினைத்துக் கொண்டே நாங்கள் தூங்கியும் போனோம்.

Monday, May 20, 2013

பாண்டிச்சேரி - கும்பகோணம்

பாண்டிச்சேரியில் நண்பர் வீட்டில் நல்ல சுவையான மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் பேசி விட்டு நாங்கள் கிளம்புகிறோம் என்றவுடன் அவர்களும் வருத்தத்துடன், இருந்து புது வருட நாளை அவர்களுடன் கொண்டாடி விட்டு போயிருந்திருக்கலாம் என்று சொல்லும் போது கஷ்டமாகத்தான் இருந்தது. எப்பொழுதும் காலில் சுடுதண்ணீரை ஊற்றிக் கொண்ட மாதிரி தான் எங்கள் விஜயம். இது வரை வந்து எங்களையெல்லாம் பார்க்க முடிந்ததே, மேலும் கும்பகோணம் ரோடுகளும் அவ்வளவு நன்றாக இல்லை என்று அவர்களே சமாதானப்படுத்திக் கொண்டு எங்களை வழியனுப்பி வைத்தனர்.

எனக்கோ புது வருட இரவுக்குள் கும்பகோணம் போய் சேர்ந்து விடவேண்டும் என்ற ஒரே கவலை தான். பாண்டிச்சேரி முழுவதும் புது வருடத்திற்கு தயாராகிக் கொண்டிருக்க, ஹோட்டல்கள் எல்லாம் தொங்கும் விளக்குகள், கலைநிகழ்ச்சிகள், ஜோடிகள் வந்து ஆடிப்பாடி ஆட்டம் போட்டுத் தங்கிச் செல்ல இன்ன விலை என்று பெரிய பெரிய போஸ்டர்களில் விளம்பரங்கள் என்று கலகலத்துக் கொண்டிருந்தன! போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிக் கொண்டிருந்தது. புது ஆண்டை வரவேற்க மக்களும் 'உற்சாக' மூடில் இருந்தார்கள்!!!

ஒரு வழியாக பாண்டிச்சேரியை தாண்டி கடலூர் போகும் சாலையை தொட்ட பிறகு நெரிசல் குறைந்த மாதிரி இருந்தது. மதிய நேரம், உண்ட மயக்கம், அமெரிக்க நேரப்படி தூக்கம் கண்ணைச் சொக்கினாலும், தூங்கினால் என் தம்பிக்கும் ஓட்டுவது சிரமம் என்று பேசிக் கொண்டே வந்தோம்.

என் தம்பியும் வரும் வழியில் வந்த தொழிற்சாலைகளைப் பற்றியும் முன்பு வேலைப் பார்த்த கம்பெனியின் தொழிற்சாலையும் அங்கு வந்த போது ஏற்பட்ட அனுபவங்களையும், எப்படி இன்று குடும்பத்தில் எல்லோருடைய வாழ்க்கையும் மாறி விட்டது என்று பேசிக்கொண்டே குண்டு குழி சாலைகளில் அந்தி சாயும் வேளையில் வந்தது நல்ல அனுபவம்.

வரும் வழியில், சிதம்பரம் கோவில் தெரிந்தது. ஆஹா, மிஸ் பண்ணிட்டோமே என்று வருத்தமாக இருந்தாலும், கோபுர தரிசனம் செய்து கொண்டே சீர்காழி கடந்து இருட்டுவதற்குள் வைத்தீஸ்வரன் கோவில் முன் வந்து நின்றோம்.

Sunday, May 12, 2013

முதல் மரியாதை - 2

என் அம்மாவின் அம்மா (ஐங்கேர் அம்போ/அயம்போ) வேறு குணாதியசங்களை கொண்டவர். கொஞ்சம் கண்டிப்பானவர். எவரையும் எளிதில் நம்பி விட மாட்டார்.

அவரோடு கீதாபவனம்,  திருவிழாக்களுக்கும், விடுமுறையில் குற்றாலம், பழனி, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், மாரியம்மன் தெப்பக்குளம், யானைமலை என்று கோவில்களுக்கும், திரைப்படங்கள் என்று பல இடங்களுக்கும் போயிருக்கிறோம். நிறைய கை வைத்தியம் தெரிந்தவர். சுவையாக சமைக்கவும் செய்வார்.

அவரின் வைர மூக்குத்தியும், தோடுகளும், வளையல்களும், காசை இடுப்பில் சொருகிகொள்ளும் விதமும், தாயம் விளையாடும் நேர்த்தியும், மற்றவர்களை கடிந்து கொள்வதிலும், பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஆட்களை பார்த்தவுடன் எடை போடுவதிலும், என்று என் அப்பாவின் அம்மாவிடமிருந்து பல வித்தியாசங்கள் இருந்தது.

ஒரு பெரிய குடும்பத்தை வளர்த்து ஆளாக்கிய விதத்தில் அவரின் ஆளுமை மிகவும் பிடிக்கும். கடைசி வரை யாரையும் அண்டி வாழாமல் தனியாகவே வாழ்வேன் என்று வாழ்ந்து காட்டிய அவருடைய மனதைரியம் ரொம்பவே பிடிக்கும்.

நல்ல தாத்தா, பாட்டிகளுடன் வளரும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், அந்த வாய்ப்பை தர மறுக்கும் மகனோ/மருமகளோ துர்பாக்கியசாலிகள்.

சில தாத்தா,பாட்டிகள் இருந்தும் இல்லாமலிருப்பதே மேல் என்ற நிலைமையும் உண்டு. அவ்வளவு அராஜகம்:( அவர்களை விட்டு ஒதுங்கி இருத்தலே நலம்.

சில வீடுகளில் நாலைந்து தலைமுறை சேர்ந்து இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி என்று!

கொடுத்துவைத்தவர்கள்!

அனைத்து தாய் உள்ளங்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்!



Friday, May 10, 2013

முதல் மரியாதை - 1

நம்மில் பலருக்கும் நம்முடைய தாத்தா, பாட்டிகளுடன் வாழ்ந்த வாழ்க்கை மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். எனக்கு அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா என்று இரு பாட்டிகளுடன் வாழ்ந்த வாழ்க்கையும் பல அனுபவங்களை கற்றுத் தந்தது. தாத்தாக்களை பார்க்க கொடுத்து வைக்கவில்லை.

என் பாட்டி (அப்பாவின் அம்மா) என்றதும் அவருடைய களையான முகமும், பெரிய பெல்ஜியன் வைரத்தோடுகளும், பட்டையான தங்க வளையல்களும், கழுத்தில் அணிந்திருக்கும் மூன்று வட தங்கச்சங்கிலியும், அந்த காலத்தில் வயதான பெண்கள்மகாரஷ்ட்ரிய பெண்கள் ஸ்டைலில் அணியும் பட்டுச்சேலையும், நெற்றியில் விபூதியுமாக இன்றும் அவர் முகம் நன்கு நினைவில் இருக்கிறது.

அவருக்கென்று ஒரு பெரிய கருப்புநிற மர பீரோ ஒன்று அவருடைய ரூமில் இருந்தது. அவருடைய தேவைகள் மிகவும் குறைவானதாகவே இருந்தது. அழகாக அவருடைய சேலைகளை அடுக்கி வைத்திருப்பார். இரண்டு சின்ன டிராயர்களில் அவருடைய நகைகள் இருக்கும். பீரோவின் சாவி அவருடைய கழுத்தில் இருக்கும் ஒரு செயினில் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்து அவருக்கு கண் பார்வை கிடையாது. ஆனால் வீடு முழுவதும் வளைய வருவார். ஒரு முறை வைரத்தோட்டை தவற விட்டு, வீடே அமளி துமளி ஆகி விட்டது. அம்மாவிற்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கி கொடுப்பது, பேச்சு துணை என்று அவருடைய பங்களிப்பு இருக்கும்.

தினமும் காலையில் குளித்து விட்டு தவறாமல் சூரிய நமஸ்காரம் செய்வார். பிறகு தாத்தா படத்தின் முன் சிறிது நேரம் வணங்கி விட்டு காலை சாப்பாடு சாப்பிடுவார். தன் ஒரே மகளை இளம் வயதில் திருமணம் செய்து கொடுத்து ஓரிரு வருடங்களிலேயே பறி கொடுத்தவர். அத்தையையும் படத்தில் தான் பார்த்திருக்கிறோம்.

நன்றாக ரசித்து ருசித்து சாப்பிடுவார். அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களாகட்டும், காய்கறிகளாகட்டும். தமிழகம், கேசவன், அம்சவல்லி பிரியாணியையும் விரும்பி சாப்பிடுவார். நாகலெட்சுமி, உட்லேண்ட்ஸ் என்று அரசமரம் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இருந்தும் தோசை, பூரி, சப்பாத்தி வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். இதைத் தவிர வீட்டில் செய்யும் பட்சணங்களையும் விரும்பி சாப்பிடுவார். நன்றாக சுவையாக சமைக்கவும் செய்வார் என்று அம்மா சொல்வார்.

வீட்டில் பாட்டி இருந்ததால் அவரைப் பார்த்து பேசி விட்டுப் போக என்று அடிக்கடி உறவினர்கள் வந்து போவார்கள். சிறிது நேரம் இருந்து பேசி ஒரு காபி குடித்து விட்டு எங்களுடனும் பேசி விட்டு போவார்கள். அவருக்கும் நன்கு பொழுது போகும். அவர்களும் தங்கள் மனக்குறைகளை சொல்ல, பாட்டியும் அவர்களுக்கு அறிவுரைகள் சொல்ல வந்தவர்களும் அன்பு பாராட்டிச் செல்வார்கள். வீட்டோடு சாயப்பட்டறையும் இருந்ததால், வேலைக்கார்களுடனும் அவர்களுடைய குசலம் விசாரித்துக் கொண்டிருப்பார்.

மாலை வேளைகளில், அவருடைய தோழிகளுடன் அல்லது உறவினர்களுடன் பேசவோ சிறிது தூரம் நடக்கவோ என்றால் அவர் கையை பிடித்து அழைத்துச் செல்வோம். அவருடன் பிறந்தவர்கள் குடும்பமும் அருகில் இருந்ததால் வீட்டு விசேஷங்களுக்குத் தவறாமல் பாட்டியுடன் போய் வருவோம். அப்பா, அம்மா எங்களை கண்டிக்கும் போதெல்லாம் ஆபத்பாந்தவனாய் அவர்களை கண்டிப்பார். அழுகிற எங்களுக்கு அறிவுரைகளும் சொல்லுவார். அனைவரையும் அணைத்து சென்றவர். என் மாமாக்கள், பெரியம்மாக்கள், பாட்டி என்று யார் வந்தாலும் அனைவரையும் அன்புடன் வரவேற்று பேசுவார்.

மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் பல குழந்தைகளை பெற்று, இழந்து, கடைசியில் என் அப்பா, பெரியப்பா மட்டும் மிஞ்சி மிகுந்த பாசத்துடன் வளர்த்தவர். பேரக்குழந்தைகள் மேலும் மிகுந்த அன்புடன் இருந்தவர். பல துயரங்களையும், அனுபவங்களையும் கண்டு கஷ்டப்பட்டுத் தன் வாரிசுகளுக்கு வீடுகள், நகைகள் என்று சொத்து சேர்த்து வைத்த புண்ணியவதி. மருமகளை மகளாக நினைத்தவர்.

அவர் சாப்பிடும் கரும்புத்துண்டிலிருந்து, பழங்கள், வெத்தலை வரை கேட்டு வாங்கி அவரை கஷ்டப்படுத்தியதும் உண்டு. அவருக்கு கால் அமுக்கி விடுவதும், மருந்து கொடுப்பதும், வெத்தலையை இடித்துக் கொடுப்பதும்  என்று அம்மா, அம்மா என்று அவரையே சுற்றிசுற்றி வந்த காலமும் உண்டு.

அவருடைய இறப்பு தான் என் வாழ்க்கையில் நான் பார்த்த முதல் இழப்பு. அவருடைய இறுதி நாட்களில் அவர் பட்ட கஷ்டங்களை பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. பள்ளி விட்டு வந்தவுடன் சொந்தங்கள் பாட்டி வாயில் கொஞ்சம் பால் ஊற்றுங்கள் என்று சொல்லும் பொழுது அழுது கொண்டே அவர் வாயில் பால் ஊற்றியதை நினைத்தால் அவர் உயிர் சீக்கிரம் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது.

அவர் இறந்த அன்று நடுக்கூடத்தில் அவர் உடலை சுற்றி அழுது கொண்டிருந்த சுற்றமும், அவர்களை பார்த்து நாங்களும் அழுது கொண்டே நின்றதும், அதுவரை அழுது பார்க்காத அப்பா அழுவதை பார்த்ததும், சரசரவென்று தாரை,தாரையாக அழுததும்...

இப்படி ஒரு பாட்டியின் அன்பு, அருகாமை என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

என் அம்மா மற்றும் பெரியம்மா வருகையினால் அந்த குறை சிறிது போயிருக்கிறது.

பாட்டி என்கிற உறவு மகத்தானது. அனுபவித்தவர்களுக்கு நன்கு புரியும்.

அனைத்து தாய் உள்ளங்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்!


Monday, May 6, 2013

அபூர்வ ராகங்கள்

இன்று மாலை என் மகன் படிக்கும் பள்ளி மற்றும் நாங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மற்ற ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

கிட்டத்தட்ட எண்பது மாணவ, மாணவிகளும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் ஆசிரியர்கள் என்று அந்த சின்ன ஆடிட்டோரியம் நிரம்பியிருந்தது. நானும் என் மகன் வகுப்பில் படிக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோருடன் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தேன்.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் இசைத்துறை தலைமை ஆசிரியர் இந்த மாணவர்கள் அளிக்கப் போகும் செவிக்குணவைப் பற்றி நான்கைந்து வரிகளில் அழகாக பேசி ஆரம்பித்து வைத்தார்.

வயலின் என்றாலே ஆசியர்களின் ஆதிக்கம் தான் போலும்-அழகான சீன, கொரிய , ஜப்பானிய மாணவிகளும், சில மாணவர்களும். போனால் போகிறதென்று சில இந்திய மாணவிகளும், அமெரிக்க மாணவ, மாணவிகளும். ஆசிரியர் ஒருவர் பியானோ பின்னிசைக்க, மாணவ, மாணவிகள் அழகாக பிடில் வாசிக்க, சிலர் அதில் லயித்து வாசிக்கும் போது அவர்களின் உடலசைவும் சேர்ந்து வாசித்தது கேட்க, பார்க்க அருமையாக இருந்தது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவர் பியானோ வாசித்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டனர். ஆரம்பமே படு ஜோர். அவர்கள் பியானோவில் கைவிரல்களை வைக்கும் அழகும், அதில் நர்த்தனமாடிய அவர்களின் விரல்களும், அந்த க்ராண்ட் பியானோவில் அந்த குழந்தைகள் லயத்துடன் வாசித்தது மிகுந்த பிரமிப்புடன் கேட்க சுகம், சுகமே! அவர்களும் சீன மாணவிகள் தான்.

என் மகன் வெஸ்டர்ன் புல்லாங்குழல் வாசிக்க, அவனுடன் ஆசிரியர் ஒருவரும் சேர்ந்து கொள்ள, சங்கீதம்-ன்னா கிலோ என்ன விலை என்று கேட்பவர்களையும் வசீகரித்தது :)

மூன்று மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சேர்ந்து புல்லாங்குழலில் (வெஸ்டர்ன் ) வாசித்த இசை ஏதோ ஐரிஷ் இசையை கேட்ட மாதிரியும், படங்களில் அரண்மனையில் ஆடிப்பாடும் பொழுது வாசிப்பது மாதிரியும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது.

தனியாகவும், குழுவாகவும் பாடிய 'ஒபேரா' ஸ்டைல் பாடல்கள் கேட்க நன்றாக இருந்தது. சிலது கேட்க கேட்கத் தான் பிடிக்குங்கற மாதிரி கேட்க கேட்க இனிமை.

நிகழ்ச்சியின் நிறைவாக மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்று பேர் ட்ரம்பெட் என்று பார்க்க அழகாக மூன்று பட்டன்களை மட்டுமே கொண்ட எளிய வாத்தியக் கருவியில் ஏற்ற இறக்கங்களுடன் ஒரு துள்ளலான இசையை கேட்க அவ்வளவு இனிமையாக இருந்தது.


இன்றைய மாலை ஆனந்த ராகம் பாடியது என்று சொல்லத் தான் வேண்டுமா?

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...