Tuesday, June 30, 2026

வெனிசுவேலா பேரிடர்

'அமெரிக்காஸ்' கால்பந்தாட்ட போட்டிகளில் லயித்திருக்க, ஜூன் 24ல் அடுத்தடுத்து தாக்கிய இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் வெனிசுவேலாவை பேரழிவுக்குத் தள்ளியுள்ளன. இன்றைய நிலவரப்படி, 1,943 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 10,571-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட இந்த இரட்டை நிலநடுக்கம் (Seismic Doublet), கடந்த நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுவேலா சந்தித்த மிகக் கடுமையான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பல அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட ஆறு நாட்களைக் கடந்தபோதும், மீட்புப் பணிகள் இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் வெனிசுலா மீட்புக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருப்பவர்களை கண்டறிய மோப்ப நாய்கள், வெப்ப உணர்வு கேமராக்கள், ட்ரோன்களுடன் கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் முதல் 72 மணி நேரம் கடந்திருந்தாலும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரை உயிருடன் மீட்கும் பணிகள் இன்னும் தொடர்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, சுமார் 68 லட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளன. தொடர் அதிர்வுகள் (Aftershocks) ஏற்படுவதால் பலர் தற்காலிக முகாம்களிலும் திறந்த வெளிகளிலும் தங்கியுள்ளனர். பல பகுதிகளில் குடிநீர், உணவு, மின்சாரம், சுகாதார வசதிகள் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை. பல மருத்துவமனைகள் சேதமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன. அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மருந்துகளுடன் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. தற்காலிக முகாம்களில் மக்கள் நெருக்கமாக தங்கியிருப்பதால் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) போன்ற நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.

பேரழிவின் தீவிரத்திற்கு நிபுணர்கள் பல காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். நாட்டில் பல பழைய கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை. கடலோரப் பகுதிகளில் உள்ள மென்மையான மண், நில அதிர்வை மேலும் அதிகரித்துள்ளது. அதுவும் தவிர, நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக வெனிசுவேலாவின் கட்டமைப்பு வசதிகள், அவசரகால மீட்பு அமைப்புகள், சுகாதாரத் துறை மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றன.

பல உலக நாடுகளும் அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளது ஆறுதல்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அதே நேரத்தில், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவி, பாதுகாப்பான தங்குமிடங்களை வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடனடி நிவாரண நடவடிக்கைகளைத் தாண்டி வெனிசுவேலாவின் நீண்டகால மறுகட்டமைப்பும், நிலநடுக்கத்தைத் தாங்கும் பாதுகாப்பான கட்டமைப்புகளை உருவாக்குவதும் அடுத்த பெரிய சவாலாக இருக்கும்.

ஒவ்வொரு பேரழிவும் நமக்கு ஒரு உண்மையை நினைவூட்டுகிறது. இயற்கையின் ஆற்றலுக்கு முன் மனிதன் எவ்வளவு தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அவன் இன்னும் அதன் ஒரு சிறிய அங்கமே. நகரங்களை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். ஆனால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாது. எனவே, பேரிடர் தயார்நிலை, பாதுகாப்பான கட்டுமானம், அறிவியல் ஆய்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலக நாடுகளின் மனிதாபிமான ஒத்துழைப்பு ஆகியவற்றில்தான் எதிர்காலத்தின் பாதுகாப்பு இருக்கிறது. வெனிசுவேலாவின் இந்த சோகம், மனிதகுலம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு வாழும் கணத்தையும் நன்றியுடன் கடந்து செல்வோம்.



Friday, June 26, 2026

மாறும் அமெரிக்கா, மாறும் கனவுகள்

ஹெச்1பி விசா மாற்றங்கள் அவசியமானது. நிறுவனங்கள் பலவும் இந்த விசாவை முறைகேடாக பயன்படுத்துவது தான் முதன்மைக்காரணம் என்றாலும் அளவுக்கதிகமாக வெளிநாட்டுக்காரர்களின் வருகையால் உள்நாட்டு மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற உள்ளூர் குரல்களைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது அரசு. "Land of oppurtunities" இனி வெறும் கனவாகி விடுமா என்று அஞ்ச வேண்டாம். மாறும் தொழில்நுட்பத்திற்கேற்ப நம்மை இன்னும் மெருகேற்றிக் கொண்டால் கனவும் நனவாகும். தற்பொழுது செயற்கை நுண்ணறிவு, இன்னும் சிறிது நாட்களில் 'குவாண்டம் பிஸிக்ஸ்' என்று மாறும். ஆனாலும் ஹெச்1பி விசாக்கள் தொடரும். மேற்கல்விக்காக மாணவர்களும் வந்து கொண்டு தானிருப்பார்கள்.
மேலும் வாசிக்க...

https://solvanam.com/2026/06/14/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

சில வருடங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்குச் செல்லும் பாதை மிகவும் தெளிவாக இருந்தது. இந்தியாவில் படிப்பு முடித்து அமெரிக்காவில் முதுகலைப் பட்டம், பிறகு OPT(Optional Practical Training) வேலை அனுமதி, பின்னர் H-1B வேலை விசா, இறுதியாக கிரீன் கார்டு. ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் “அமெரிக்க கனவு” இப்படித்தான் நனவாகிக்கொண்டிருந்தது. ஆனால் அதிபர் ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் “அமெரிக்காவுக்கே முன்னுரிமை”யின் குடியேற்றத் திட்டம், H-1B விசா முறைகேடு குறித்த அரசியல் விவாதங்கள் இந்த பாரம்பரிய பாதையை மாற்றத் தொடங்கியுள்ளன. திறமை, சம்பளம், பாதுகாப்பு ஆய்வு, குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தற்போதைய கொள்கை மாற்றங்களால் அமெரிக்காவிற்கு கல்வி கற்க வந்த/வரும் மாணவர்களும் வேலை கிடைத்துப் புலம்பெயர்ந்த திறமையான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். H-1B பணி விசாக்கள், F-1 மாணவர் விசாக்கள், OPT (விருப்பப் பயிற்சி), STEM OPT மாணவர் விசாக்கள், கிரீன் கார்டு வழிமுறைகளில் கொண்டு வந்துள்ள மாற்றங்களால் இந்தியர்கள் அதிகளவில் இதன் தாக்கத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அழுத்தம் பல ஆண்டுகளாக அதிகரித்து வருவது இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் குடியேற்றம், விசா முறையில் உள்ள மோசடிகளைத் தடுக்கவே கொள்கை மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசு கூறியுள்ளது. இதன் மூலம், உயர்திறன் கொண்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பு H-1B விசா பெரும்பாலும் சீரற்ற லாட்டரி முறையில் வழங்கப்பட்டது. இப்போது “யார் அதிக திறமைசாலி? யாருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது?” என்பதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க அரசு கொள்கைகளை நகர்த்துகிறது. இதனால் திறமையான இந்திய IT நிபுணர்களுக்கு வாய்ப்புகளும் உயர்கல்வி பெற்றவர்களுக்கு முன்னுரிமையும் கிடைக்கலாம். ஆனால், புதிய பட்டதாரிகளுக்கும் குறைந்த சம்பள வேலைகளுக்கும் H-1B கிடைப்பது கடினமாகலாம். இந்திய IT கன்சல்டிங் நிறுவனங்களுக்கும் சவாலான காலமாகி விட்டது.

திறமையான வெளிநாட்டு நிபுணர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான முதன்மை வழியாக H-1B விசா நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் 85,000 விசாக்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன. முன்பு சில நிறுவனங்கள் ஒரே நபருக்காக பல H-1B விண்ணப்பங்களை தாக்கல் செய்து லாட்டரியில் வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரித்தன. இப்போது USCIS “Beneficiary-Centric” முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு நபருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே. பல நிறுவனங்கள் விண்ணப்பித்தாலும் அந்த நபருக்கு ஒரே ஒரு பதிவு மட்டுமே கணக்கிடப்படும். இவ்வாறாக H-1B லாட்டரி முறையில் உள்ள துஷ்பிரயோகங்களைத் தடுத்து உயர்தரத் திறமை கொண்டவர்களைத் தேர்வு செய்வது, தேசிய பாதுகாப்பையும் பின்னணி சரிபார்ப்பையும் வலுப்படுத்துவது, அமெரிக்க தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப குடியேற்றக் கொள்கையை மாற்றுவது போன்ற அரசியல் காரணங்களும் இதில் உள்ளன.

அமெரிக்க அரசு தற்போது நிறுவனங்களிடம், உண்மையான வேலை இருக்கிறதா?, தேவையான சம்பளம் வழங்கப்படுகிறதா?, விண்ணப்பதாரரின் திறமை வேலைக்கு பொருத்தமா? என்பதை விரிவாக ஆய்வு செய்கிறது. பெருநிறுவனங்கள், அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பதிலாக மலிவான வெளிநாட்டுத் தொழிலாளர்களை நியமிக்கவும், ஊதியங்களைக் குறைக்கவும், தரத்தை விட எண்ணிக்கைக்கு வெகுமதி அளிக்கும் லாட்டரி முறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் H-1B விசாக்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்று ட்ரம்ப் நிர்வாகம் வாதிடுகிறது.

வெள்ளை மாளிகையின் பணியாளர் செயலாளர் வில் ஷார்ஃப், H-1B திட்டத்தை “நாட்டில் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா அமைப்புகளில் ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார். USCIS இயக்குநர் ஜோசப் பி.எட்லோ, இந்த மாற்றங்களை “ஒழுங்கு, பாதுகாப்பு, நேர்மை, ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ அணுகுமுறை” என்று விவரித்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

செப்டம்பர் 19, 2025 அன்று அதிபர் ட்ரம்ப் “சில குடியேறாத தொழிலாளர்களின் நுழைவு மீதான கட்டுப்பாடு” (“Restriction on Entry of Certain Nonimmigrant Workers”) என்ற தலைப்பில், செப்டம்பர் 21, 2025 முதல் அமெரிக்காவிற்கு வெளியே இருந்து தாக்கல்செய்யப்படும் எந்தவொரு புதிய H-1B மனுவிற்கும் ஏற்கனவே உள்ள அனைத்து கட்டணங்களுடன் பணி நிறுவனங்கள் $100,000 கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்த பிரகடனம் மேலும் நீட்டிக்கப்படாவிட்டால், செப்டம்பர் 21, 2026 வரை அமலில் இருக்கும் என்று பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அதனால் 2025 நிதியாண்டில் சுமார் 10,000 அங்கீகரிக்கப்பட்ட விசாக்களுடன் மிகப்பெரிய H-1B பயனாளியான அமேசான், இந்த விகிதத்தில் ஆண்டுக்கு $1 பில்லியன் செலவையும் சுமார் 5,500 ஒப்புதல்களுடன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) $550 மில்லியனையும் எதிர்கொள்ள நேரிட்டது. 2025 டிசம்பரில் ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் அந்தக் கட்டணத்தைத் தடுக்க மறுத்துவிட்டது. இதனால் “Body Shopping” அல்லது “Bench Consulting” போன்ற நடைமுறைகள் மேலும் சிரமப்படலாம்.

டிசம்பர் 23, 2025 அன்று, H-1B பதிவுகள் தேர்ந்தெடுக்கப்படும் முறையை முழுமையாக மாற்றியமைக்கும் ஒரு இறுதி விதியை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்தது. பிப்ரவரி 27, 2026 முதல் முன்பு இருந்த சீரற்ற குலுக்கல் முறைக்கு பதிலாக, முன்னுரிமை அளிக்கப்பட்ட தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அதிக ஊதியம் பெறும் உயர் திறன் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு விசாக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த விதி, 2027 நிதியாண்டின் H-1B உச்சவரம்புக் காலத்திற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. குறைந்த ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களை நீக்குவதே இதன் நோக்கமாகும்.

இதற்கு இணையாக, USCIS ‘புராஜெக்ட் ஃபயர்வால்’ என்ற ஒரு கடுமையான நடவடிக்கையையும் தொடங்கியது. இதன் கீழ், விசா முறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் நிறுவனங்களில் H-1B திட்ட முறைகேடுகள் குறித்து குறைந்தது 175 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஜனவரி 9, 2026 அன்று, ஜூன் 2023 முதல் ஜூன் 2025 வரையிலான பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, விரைவு வழிமுறையான பிரீமியம் செயலாக்கத்திற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக DHS அறிவித்தது. மார்ச் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு தாக்கல்செய்யப்படும் எந்தவொரு படிவம் I-907லிலும் இந்தப் புதிய கட்டணங்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது நிராகரிக்கப்படும்.

பொருளாதார வல்லுநர்கள் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ட்ரம்ப்பின் செப்டம்பர் மாதப் பிரகடனத்தைத் தொடர்ந்து, ஜெர்மன் முதலீட்டு வங்கியான பெரன்பெர்க், 2025ஆம் ஆண்டுக்கான அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 2%லிருந்து 1.5%ஆகக் குறைத்தது. ஆனாலும் அரசியல் ரீதியாக இந்த ஒடுக்குமுறை வேகம் பெற்று அதிவேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஹெச்1பி விசா மட்டுமல்லாது பல தசாப்தங்களாக அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த மென்சக்திக் கருவிகளில் ஒன்றாக விளங்கும் சர்வதேச மாணவர்களும் வியத்தகு முறையில் மாறியுள்ள புதிய சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். செப்டம்பர் 2, 2025 முதல் அனைத்து F-1 விண்ணப்பதாரர்களும் தங்கள் குடியுரிமை அல்லது வசிப்பிட நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நேரடி நேர்காணல்களில் கலந்துகொள்ள வேண்டும். இந்திய மாணவர்களுக்கு, இது ஏற்கனவே பணிச்சுமை மிகுந்த மும்பை, சென்னை, ஹைதராபாத், புது டில்லி, கொல்கத்தா தூதரகங்களில் காத்திருப்பு நேரங்களை அதிகரித்துள்ளது. நேர்காணலில் முன்பைவிட அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக, “ஏன் இந்த பல்கலைக்கழகம்? ஏன் இந்தப் பாடநெறி? படிப்பு முடிந்த பின் என்ன திட்டம்? படிப்புக்கான பணம் எங்கிருந்து வருகிறது” போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இருக்க வேண்டும். மேலும், நாட்டிற்குள் வருபவர்கள் எந்தவொரு தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக தகவல்களையும் ஆய்வு செய்கிறது அரசு.
இதனால் விசா செயல்முறை நீண்டு கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படுவதும் நேர்காணல் தாமதமாவதும் நடக்கிறது.

F-1 மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடரும் வரை தங்கியிருக்க அனுமதித்த, நீண்டகாலமாக இருந்துவரும் “தகுதி நிலைக் காலம்” (Duration Of Status, D/S) முறையானது தற்போது திருத்தப்பட முன்மொழியப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, நான்கு ஆண்டுகள் என்ற நிலையான அங்கீகரிக்கப்பட்ட தங்கும் காலம் கொண்டுவரப்படலாம். இது பட்டப்படிப்பின் நடுப்பகுதியில் உள்ள மாணவர்களுக்குப் புதிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

மாணவர் விசாக்களுக்கு $250 புதிய விசா நம்பகத்தன்மை கட்டணமும் முன்மொழியப்பட்டுள்ளது, இருப்பினும் அதைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பட்டப்படிப்பிற்குப் பின் பணி அனுபவம் பெற வழங்கப்படும் விருப்பப் பயிற்சி விசா(OPT)வும் தீவிரமான ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. STEM பட்டதாரிகளுக்கு மூன்றாண்டு கால நீட்டிப்பை வழங்கும் STEM OPTஐக் கட்டுப்படுத்தும் அல்லது முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு விதி 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணி வழங்கும் நிறுவனங்களும் மாணவர்களும், பணிக் கடமைகள், பயிற்சித் திட்டங்கள், இ-வெரிஃபை (e-Verify) தொடர்பான கடுமையான இணக்கத் தேவைகளை எதிர்கொண்டு வருகின்றனர். படிப்பு முடிந்தவுடன் OPT காலம் முடிவதற்குள் எப்படியாவது ஹெச்1பி விசா வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் மாணவர்கள் கடும் அழுத்தத்தில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதுவும் அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாட்டத்தில் இருக்கும் பொழுது உள்ளூர்வாசிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழலில் பல லட்சங்கள் செலவு செய்து கனவுகளுடன் காத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சோதனையான காலம் தான்.

மேலும், 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு F-1 விசா வழங்குவதற்கான தடைகளும் போடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா இல்லை. ஆனால், கட்டுப்பாடுகளின் இந்த விரிவாக்கம் அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் பணி புரிந்து தங்க முடியும் என்றால் நிரந்தர குடியுரிமை பெற வழிவகுக்கும் கிரீன்கார்டு ஒவ்வொரு நாட்டிற்கும் வருடாந்திர எண்ணிக்கை என்ற வரம்பில் உள்ளது. இந்தியர்களின் விண்ணப்ப எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை. சில பிரிவுகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பால் பலருக்கும் குடும்ப திட்டமிடல் சிக்கல்களும் வேலை மாற்ற சிரமங்களும் தொடர்கின்றன. க்ரீன்கார்டு செயல்முறையில் தற்போது பெரிய சட்ட மாற்றம் எதுவும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், ஆவணச் சரிபார்ப்பு அதிகரித்துள்ளது. சில விண்ணப்பங்களுக்கு கூடுதல் ஆய்வும் நடைபெறுகிறது. குடியேற்ற அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2026 விசா அறிக்கையின்படி, EB-2(Employment Based) இந்திய விசாவுக்கான இறுதி நடவடிக்கை தேதி ஜூலை 15, 2014 ஆகும். இதன் பொருள், 2014-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்பு தங்கள் I-140 மனுக்களைத் தாக்கல் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தற்போது கிரீன்கார்டு ஒப்புதலுக்குத் தகுதியுடையவர்கள். அதற்குப் பின் க்ரீன்கார்டுக்காக விண்ணப்பித்தவர்களின் காத்திருப்பு நீண்டு, கையில் கிடைக்க இன்னும் பல்லாண்டுகள் ஆகலாம்.

USCIS தரவுகளின்படி, சுமார் 395,958 அங்கீகரிக்கப்பட்ட இந்திய EB-2 வழக்குகள் தற்போது விசா எண்களுக்காகக் காத்திருக்கின்றன. மிகவும் தற்போதையதாக இருந்த (current) EB-1 வகையும் குறிப்பிடத்தக்க பின்னடைவைக் கண்டுள்ளது. இந்தியர்களுக்கான EB-5 முதலீட்டாளர் விசா கூட சாத்தியமான பின்னடைவு குறித்த எச்சரிக்கைகளை எதிர் கொண்டுள்ளது.

வரலாற்று ரீதியாக, பிற நாடுகளிலிருந்து பயன்படுத்தப்படாத விசா எண்கள், தேவைக்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்த பிரிவுகளுக்குச் சென்றபோது, ​​இந்திய EB-2, EB-3 விண்ணப்பதாரர்கள் பயனடைந்தனர். அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. பிற நாடுகளும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்ற விசா எண்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வதால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

பத்தாண்டுகள் நீடிக்கும் காத்திருப்புகளை எதிர்கொண்டுள்ள இந்திய கிரீன்கார்டு விண்ணப்பதாரர்கள் தற்பொழுது மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் திறமையான இந்தியத் தொழில் வல்லுநர்களைத் தீவிரமாகக் கவர்ந்து வருகின்றன.

2025 நிதியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து H-1B விசாக்களில் 70%-க்கும் அதிகமானவை இந்தியக் குடிமக்களுக்கே வழங்கப்பட்டன. ஆனால் மேற்கூறிய ட்ரம்ப் அரசின் விசா மாற்றங்கள், “அமெரிக்காவின் புத்தாக்கச் சூழலமைப்பிலும் பரந்த வேலைவாய்ப்புப் பொருளாதாரத்திலும் அலை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று இந்தியாவின் தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம்(NASSCOM) எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையில் இந்திய வல்லுநர்கள் எத்தகைய பங்களிப்பைக் கொண்டுள்ளனர் என்பதை உலகம் அறியும். மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் நிறுவனர்கள், பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களில் ஒரு விகிதாசாரமற்ற பங்கைக் கொண்டுள்ளனர். தற்போதைய இந்த அடக்குமுறையின் முரண் என்னவென்றால், அமெரிக்காவின் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு யார் அடித்தளமாக இருந்தார்களோ அவர்களையே குறிவைத்திருப்பது தான்.

இதன் புவிசார் அரசியல் பரிமாணங்கள் வாஷிங்டனுக்குத் தெரியாமல் இல்லை. பிரதிநிதிகள் ஜிம்மி பனெட்டா, அமி பெரா, சலூட் கார்பஜால், ஜூலி ஜான்சன் உள்ளிட்ட அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள், “அமெரிக்க-இந்திய உறவில் ஏற்படக்கூடிய எதிர்மறைத் தாக்கங்கள்” குறித்து எச்சரித்து, $100,000 H-1B கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அதிபருக்கு நேரடியாகவே கடிதம் எழுதினர். இந்தியா, அமெரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயகப் பங்காளியாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு ஒரு இன்றியமையாத எதிர்சக்தியாகவும், ஒரு முக்கிய தொழில்நுட்பக் கூட்டாளியாகவும் விளங்குகிறது. விசா கட்டணங்கள் காரணமாக அந்த உறவில் விரிசல் ஏற்படுவது ஆபத்து என்பதை வாஷிங்டனில் உள்ள சிலர் உணர்ந்துள்ளனர். கொள்கைகள் இன்னும் அதை பிரதிபலிக்கவில்லை என்றாலும் கூட.

H-1B விசா தேர்வுக்காகக் காத்திருப்பவர்கள், F-1 விசா வாய்ப்புகள் சுருங்குவதைக் காண்பவர்கள், கிரீன்கார்டு அறிக்கையில் முன்னுரிமைத் தேதியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் என வரிசையில் நிற்கும் இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கும் மாணவர்களுக்கும் அமெரிக்கா தனது கதவுகளை மூடவில்லை. ஆனால் அந்த கதவுகளுக்குள் நுழைவதற்கான விதிகளை மாற்றிக் கொண்டிருக்கிறது. “படிப்பு→OPT→H-1B→கிரீன்கார்டு” என்ற பழைய பாதை இன்னும் இருக்கிறது. ஆனால் அது முன்பைவிட மிகவும் போட்டி நிறைந்ததாகவும் அதிக கண்காணிப்பு கொண்டதாகவும் மாறி வருகிறது. இந்திய மாணவர்களுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையும் அதே நேரத்தில் ஒரு வாய்ப்பும் ஆகும்.

ஒரு காலத்தில் அமெரிக்கா என்பது வாய்ப்புகளின் நாடு மட்டுமல்ல, உலகின் சிறந்த திறமையாளர்களை வரவேற்ற திறந்த கதவாகவும் இருந்தது. இன்று அந்தக் கதவு திறந்தே இருந்தாலும் அதில் நுழைவதற்கான சாவி மாறியுள்ளது. அதிர்ஷ்டம், சரியான நேரம், சரியான நிறுவனம் என்பவற்றை விட திறமை, கல்வித் தகுதி, தொழில்நுட்ப நிபுணத்துவம், தெளிவான நோக்கம் ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்திய மாணவர்களுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் இது ஒரு தடையாக அல்ல, மாறாக தங்களை உலகத் தரத்திற்கு உயர்த்திக்கொள்ளும் அழைப்பாகும். அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள் மேலும் மாற்றமடையலாம். ஆனால், உலகின் சிறந்த திறமைகளுக்கான தேவை மட்டும் மாறாது. அந்தத் திறமைகளில் இந்தியர்கள் தொடர்ந்து முன்னணியில் இருப்பார்களா என்பதைத் தீர்மானிப்பது இனி கொள்கைகள் அல்ல. அவர்கள் மேற்கொள்ளும் தயாரிப்பும் தகுதியும் தான்.

Thursday, June 4, 2026

கொசுத்தொல்லை தாங்கலைடா மாதவா

சமீபத்தில் வாசித்த செய்தி ஒன்று.

கூகுளின் உயிரியல் அறிவியல் (Life Sciences) பிரிவான Verily, அடுத்த இரண்டு ஆண்டுகளில் கலிஃபோர்னியா & ஃப்ளோரிடா மாநிலங்களில் சுமார் 3.2 கோடி (32 மில்லியன்) வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்களை வெளியிட அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA)யிடம் அனுமதி கோரியுள்ளது. இந்தத் திட்டம் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை 2026 ஜூன் மாத தொடக்கம் வரை பதிவு செய்யலாம் என்றும் போட்டிருந்தார்கள்.

கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல், ஜிகா, சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் , வெஸ்ட் நைல் வைரஸ் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கம். 

Aedes aegypti என்ற இனத்தைச் சேர்ந்த ஆண் கொசுக்களின் உடலில் உள்ள Wolbachia எனப்படும் இயற்கையாகக் காணப்படும் பாக்டீரியா பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரிவதை தடுக்கும் ஆற்றல் கொண்டதால் கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற சோதனைகள் ஏற்கனவே சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டு கொசுக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவுகளைக் காட்டியுள்ளதாகவும் இது அமெரிக்காவில் இதுவரை முன்மொழியப்பட்ட மிகப்பெரிய கொசுக்கட்டுப்பாட்டு சோதனைகளில் ஒன்றாக அமைவதாகவும் கூகுள் கூறுகிறது.

வேடிக்கை என்னவென்றால் ஆண் கொசுக்கள் கடிக்காதாம். பெண் கொசுக்கள் தான் நம்மை அன்பாக விசாரிக்குதாம். என்ன கொடுமைடா மாதவா!

பேசாம மொக்க, மொக்க கொசுக்கள் இருக்குற கும்பகோணம், மதுரை பக்கத்துல இந்த ஆராய்ச்சியை பண்ண சொல்லணும் நம்ம சுந்தர் பிச்சையை.

அதுவும் மதுரையில ஆறு மணிக்கு கதவை சாத்தினா அது வேற வீட்டுக்குப் போயிடும்ங்கிற ஐதீகம்ல்லாம் இருக்கு. அதுவும் அப்படித்தான் வராம ராத்திரி தூங்கறப்ப காதுல வந்து 'கொய்ங்ங்ங்ங்ங்ங்ங்'னு கத்திட்டு ஊசி குத்தினா மாதிரி குத்திட்டு அந்த இடம் கொப்புளம் மாதிரி வீங்கி... இப்படி கைநிறைய வீர புண்களோட வண்டிய பிடிச்சு ஊருக்கு வந்து சேர்ந்தா போதும்னு...

இந்த கொசுத்தொல்லை தாங்கலைடா மாதவா.

 

வெனிசுவேலா பேரிடர்

'அமெரிக்காஸ்' கால்பந்தாட்ட போட்டிகளில் லயித்திருக்க, ஜூன் 24ல் அடுத்தடுத்து தாக்கிய இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் வெனிசுவேலாவை பேர...