Wednesday, September 25, 2013

திக்....திக்...திக்...3

இது நடந்தது 1998 ஆம் வருடம்.

என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் அவளுக்குத் தெரியும். ரயில் நகர ஆரம்பித்தவுடன் ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள். கால்நடைகள், பஸ்கள், வேன்கள், மனிதர்கள் என்று எல்லாவற்றையும் கடந்து வைகை ஆற்‌றின் மேல் போகும் பொழுது 'தடதட' என்ற சத்தத்தைக் கேட்டவுடன் பயந்து வாயிலில் விரலை சூப்பிக்கொண்டே என் மடியில் படுத்துக் கொண்டாள். என் தம்பியின் நண்பனின் குடும்பமும் பேச்சுத்துணைக்கு இருக்க நன்றாகவே ஆரம்பமானது அந்த பயணம்.

வைகைஆறு, மதுரா கோட்ஸ், பாத்திமா கல்லூரி தாண்டிய சில நிமிடங்களில் 'கிரீச்' என்று ரயில் சக்கரங்கள் தடவாளங்களில் உரசிக் கொண்டு அதிரடியாய் நிற்க, என்ன காரணம் என்று தெரியாமல் பலரும் முணுமுணுக்க, பல ரயில்களும் அங்கே நிற்கும் போது தான் ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் என்ன என்று தெரியவில்லை. ரயில் நகரும் அறிகுறி தெரியாமல் போகவே, ஆண்கள் சிலர் இறங்கி விவரம் கேட்க போனார்கள். போனவர்களும் வந்தார்களா, அதுவும் இல்லை. உட்கார்ந்திருந்த பயணிகளுக்குப் பொறுமை போய்க் கொண்டிருக்கும் பொழுது தான், ரயில் போகும் பாதையில் குண்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது :(

விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அனைவர் முகத்த்திலும் ஒரு பீதி. இனம் புரியாத மனக்கலக்கம்.

அன்று முகம் தெரியாத ஒரு மனிதர் ரயில்பாதையில் இருந்த பொருளைப் பார்த்து, சந்தேகத்தின் பேரில் போலீசை அழைத்து செய்தியை சொல்லி, அது வெடிகுண்டு தான் என்று தெரிந்ததும் போலீசும் அவர்கள் கடமையை செய்து பல இழப்புக்களும், சேதாராங்களும் நடக்காமல் பார்த்துக் கொண்டது நாங்கள் செய்த அதிர்ஷ்டம் தானே? அன்று அந்த மனிதர் தான் பலருக்கும் கடவுளாகத் தெரிந்தார், தெரிந்திருப்பார்.

அந்த நேரத்தில் வைகை, பாண்டியன் மற்றும் வேறு இரண்டு ரயில்கள் அந்த பாதையைக் கடக்கும், நிறைய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தலாம் என்ற கொடியவர்களின் திட்டம் கடவுளின் அருளால் நடக்காமல் போனது எங்களின் பாக்கியமே!

அதற்கு முன்பு தான் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு நடந்திருந்தது. அப்படி மட்டும் வெடித்திருந்தால் என்றோ தலைப்புச் செய்தியாகிப் போயிருப்போம் :(

எப்படியோ கோயம்புத்தூர் போய் எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு அடுத்த சில வாரங்களில் நானும் என் கணவரும் பாண்டியனில் சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தோம்.

ஒரு வித பயத்துடன் தான் நான் இருந்தேன். பெட்டியில் அனைவரும் சிநேகமாக பேசிக் கொண்டே இருக்கும் பொழுது, என் கணவரும் எங்களின் 'சமீபத்திய ரயில் பயணம்' பற்றிச் சொல்ல, எங்களுடன் இருந்த இருவர்(அப்போது தான் அவர்கள் போலீஸ் என்று தெரிய வந்தது!) அவர்களுக்கருகில் இருந்த ஒரு பெட்டியை காட்டி இது என்ன தெரியுமா என்று கேட்க, என்ன என்று ஆவலுடன் நாங்களும் கேட்க அவர்கள் பிரித்துக் காட்டினால் செயலிழக்கப் பட்ட அதே வெடிகுண்டு! என்ன தான் அவர்கள் பயப்படத்தேவை இல்லை என்று சொன்னாலும் என் தூக்கம் போனது போனது தான் :(

என்ன செய்ய? இன்றும் கூட ரயில் பயணம் என் தூக்கத்தை தொலைக்கும் ஒரு பயணம் தான்! சிறு வயதில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று ஒவ்வொரு நொடியையும் அனுபவித்த ரயில் பயணம் இன்று ஊர் போய் சேரும் வரை 'திக் திக் திக்' தான் !




Saturday, September 7, 2013

திக்... திக்... திக்...2

அது கார்த்திகை மாதம் 1996ஆம் வருடம்.

ராஜபாளையம் மகளிர் கல்லூரி- கணினியியல் துறை மாணவிகளுக்குத் தேர்வு கண்காணிப்பாளராக செல்ல வேண்டிய கட்டாயம். ஐந்து நாட்கள் மதுரையிலிருந்து போய் வந்து விடலாம் என்று நினைத்து அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

ராஜபாளையம் நாய், மாம்பழம் தவிர வேறு எதுவுமேஅந்த ஊரைப் பற்றித் தெரியாத நிலையில் பழங்காநத்தத்தில் இருந்து பேருந்தில் பயணம். ஜன்னல் பக்கத்து இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே திருப்பரங்குன்றம், திருநகர், ஆள் அரவமில்லாத கப்பலூர் வழியாக திருமங்கலம் தாண்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வரும் பொழுது பால்கோவாவின் மணமும் சுவையும் திரும்பி வரும் பொழுது வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இறங்கும் கூட்டத்தையும் முண்டியடித்துக் கொண்டு ஏறும் கூட்டத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, தூரத்தில் தெரிந்த ஆண்டாள் கோவில் கோபுரத்தையும் மனதில் வணங்கிக்கொண்டு ஒரு வழியாக ராஜபாளையம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்து விட்டேன்.

ஒன்பது மணிக்குத் தேர்வுகள் ஆரம்பித்துவிடும் என்று மனம் பரபரக்க, ஒரு ரிக்க்ஷாவில் ஏறி மகளிர் கல்லூரிக்குப் போக வேண்டும் என்று சொல்ல, போகும் வழியில் பெண் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் பல ஆட்டோ, ரிக்க்ஷாக்கள் திரை போட்டுக் கொண்டு போவதை பார்க்க வேடிக்கையாக இருந்தது! ஒரு வழியாக கல்லூரி வந்து சேர்ந்து நான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மதுரை காமராஜர் பல்கலையில் இருந்து வந்திருந்த கேள்வித்தாள் அடங்கிய பேப்பர் மிகவும் ரகசியமாக(!) வைக்கப்பட்டிருக்கும். தேர்வு கண்காணிப்பாளர் முன் தான் அதை பிரித்து கேள்விகளை மாணவிகளுக்கு கொடுக்க அவர்களும் எழுதி முடித்து விட்டுப் போக மீண்டும் பஸ் ஏறி பயணம். முதல் நாள் நன்றாகவே போனது.

இரண்டாம் நாள் மாலை மதுரைக்குத் திரும்ப பஸ் ஏறிப் புறப்பட்டு புழுதி பறக்க போய்க் கொண்டிருந்தது. நல்ல கூட்டம் வேறு. பனைமரங்களும், வறண்ட நிலங்களும், அங்கொன்று இங்கொன்றுமாய் தென்னை மரங்களும் என்று வேடிக்கைப் பார்த்த்துக் கொண்டே பஸ்சின் முதல் இருக்கையில் (கூட்டத்திலிருந்து தப்பிக்க!!!) உட்கார்ந்தால் கூட்டம் ஏறினாலும் சமாளித்துக் கொள்ளலாம், வேடிக்கையும் பார்க்கலாம் என்ற நினைப்பில் முதல் ஆளாய் ஓடிப் போய் இடம் பிடித்து ஏறி உட்கார்ந்து கொண்டேன். பஸ்சும் சிறிது நேரத்தில் புறப்பட்டு விட்டது.

சிறிது தூரம் தான்சென்றிருக்கும். திடீரென்று டிரைவர் பிரேக் போட்டு கண்டக்டரை எச்சரிக்கை செய்ய, எதிரில் பார்த்தால் தொலைவில் தீப்பந்தம், கம்பு, அருவா என்று கொலைவெறியுடன் ஒரு கூட்டம் பஸ்ஸை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் படத்தில் தான் பார்த்திருக்கிறேன். ஏன், எதற்கு ஓடி வருகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே,
டிரைவரும் பக்கத்தில் ஏதோ சாதிக் கலவரம் போல. பஸ்ஸைத் திருப்பி விடுகிறேன். அனைவரும் இறங்கி கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.

கண்டக்டரும், எல்லோரும் இறங்கி ஓடி விடுங்கள். பஸ்ஸை கொளுத்தி விடுவார்கள் என்று சொன்ன பொழுது தான் அவர்களின் தீவிரம் தெரிந்தது. கலவரக்காரர்களும் யாரை வெட்டி சாய்த்து தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று வெறியோடு ஓடி வருவதைப் பார்க்க...😢😢😢

எனக்கா அந்த ஊரில் யாரையும் தெரியாது. அவ்வளவு ஏன்? எங்கே நிற்கிறோம் என்று கூட தெரியாது! என் கூட சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு பல தாய்மார்கள். அனைவர் கண்களிலும் ஏதும் தப்பாக நடந்து விடக் கூடாதே என்ற பயம். குழந்தைகளுக்கு எப்படி தெரியுமோ, 'ஓ'வென்று அழ ஆரம்பித்து விட்டார்கள். அம்மாக்களுக்குப் பதட்டம். சே! நிம்மதியாக வேலை கூட செய்ய முடியவில்லையே என்ற கோபம் எனக்கு. நடத்துனரும் பணத்தை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கும் ஒரு சண்டை.

சில நிமிடங்கள் வரை நிம்மதியாக இருக்கிறது என்று நினைத்த என் வாழ்க்கை ஒரு சில விஷக்கிருமிகளால் நொடியில்...

ஓடி வந்து கொண்டிருந்தவர்களின் கண்களில் கொலைவெறி! அவர்களுக்கும் மற்றொரு சாதியினருக்கும் கைகலப்பு நடந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதையாவது செய்து கலகம் செய்ய அனல் பறக்க ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அன்று உயிருடன் திரும்பினால் அதுவே பெரிய விஷயமாக பட்டது எனக்கு.

எங்கிருக்கிறோம் என்று எதுவுமே தெரியாமல் உயிருடன் திரும்ப முடியுமா என்ற அச்சத்துடன் இறங்கி பணத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டு அழும் குழந்தைகளை இழுத்துக் கொண்டு தாய்மார்களும், வயதான தாத்தா பாட்டிகளும் கூட்டத்தோடு கூட்டமாக வந்த வழியில் ஓட ஆரம்பிக்க, பேருந்தும் திரும்பி வேகமெடுக்க, ஆத்திரத்துடன் அறிவில்லாமல் பொதுச் சொத்துக்களை நாசம் பண்ணக் கிளம்பிய கூட்டம் வெறித்தனத்துடன் தொடர அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்ற ஒன்றை மட்டுமே நினைத்துக் கொண்டு ஓடி ரோட்டிற்கு வந்து நின்றால், ஒரு பேருந்தும் நிற்கவில்லை. குடிகார வெறி பிடித்த கூட்டமோ மிக அருகில். பார்க்கவே அருவருப்பாக இருந்தது.

போனால் போகிறதென்று ஒரு பேருந்து நிற்க, கண்டக்டரும் விரைந்து ஏறுங்கள் என்று சொல்லிக் கொண்டே பின்னால் வரும் பேருந்துகளுக்கு சைகையால் நிறுத்தாமல் போங்கள் என்று சொல்லி எங்கள் வண்டியும் அந்த இடத்திலிருந்து கிளம்பி விட அப்பாடா என்றிருந்தது.

டிக்கெட் எடுக்கும் பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் வரை தான் பஸ் போகும். அதற்குப் பிறகு ஒரே கலவரம். மதுரைக்கு இப்போதைக்கு பஸ் எதுவும் கிடையாது என்று சொல்ல படபடக்கிற இதயத்துடன் என் அடுத்த பிரச்னை ஆரம்பமாகியது 😓😓😓

அதற்கு பின்பு தான் யோசித்தேன் எங்கே போய் தங்குவது என்று. நல்ல வேளை! நாங்கள் பசுமலையில் குடியிருந்த பொழுது வீட்டு உரிமையாளரின் அம்மா, தங்கை என்று அவர் குடும்பம் முழுவதும் அங்கிருப்பது நினைவில் வந்தது. நானும் ஒரு முறை அவர்களுடன் அங்கு சென்றிருக்கிறேன். குத்துமதிப்பாக நடந்து எப்படியோ அவர்கள் வீட்டுக்குப் போய் சேர்ந்து விட்டேன். பீதியில் இருந்த என்னைப் பார்த்து அவர்களும் பதறிப் போய், என்ன ஏதென்று விசாரித்து விட்டு, கைப்பேசி இல்லாத அந்த காலத்தில், அவர்கள் தயவில் தொலைபேசி மூலம் வீட்டுக்குத் தகவல் சொல்லி அவர்களையும் கலவரமூட்டினேன். இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் அங்கேயே இரவில் தங்கி அடுத்த நாளும் பயத்துடனே, ராஜபாளையம் போய் மீண்டும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தங்கி, ஒரு வழியாக தேர்வுகளை முடித்து விட்டு மதுரை வந்து சேர்ந்தேன்.

மதுரை வரும் பொழுது கார்த்திகைப் பெருநாள். திருப்பரங்குன்றம் ஜொலித்துக் கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கோபுரத்தை பார்த்தவுடன் அப்பாடா, பத்திரமாக மதுரை கொண்டு வந்து சேர்த்து விட்டாய் முருகா என்று வேலைப் பார்த்து கும்பிட்டபடியே அம்மா வீட்டுக்கு வந்து சேர, மகளும், கணவரும் அங்கே இருந்தார்கள். என் அக்காவும், பாவாவும் கூட பெரிய கார்த்திகை விருந்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரிடமும் நடந்த நிகழ்சிகளை சொல்லி முடித்து, அம்மா கையால் சமைத்த சூப்பர் சாப்பாட்டை சாப்பிட்டவுடன் தான் திருப்தியாக இருந்தது. பின் அனைவரும், ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் போன் பண்ணி, எங்கள் நன்றியையும் தெரிவித்துக் கொண்டோம். அந்த கார்த்திகைத் திருநாள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத திருநாளாகி விட்டது எனக்கு :(

இன்றும் பஸ் எரிப்பு, கலவரம் என்று படித்தாலே திக்... திக்... திக்...தான்.

யாரும் இந்த சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் வீடு திரும்பனுமே என்று மனம் அடித்துக் கொள்ளும்.

பொதுச் சொத்துக்களை நாசம் செய்யும் இந்த விஷக்கிருமிகளை இன்னும் சில வியாதிகள் தங்கள் சுயநலத்திற்காக வளர்த்துக் கொண்டிருப்பதும் அதை நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிவதும் தான் வருத்தும் விஷயம்.

Sunday, September 1, 2013

திக்...திக்...திக்...1

என்னுடைய வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த சில நிமிடங்கள்...

1993ஆம் வருடம், ஜனவரி மாதம் என்று நினைக்கிறேன். தெரிந்த ஒரு பெண்ணின் திருமணத்திற்காக காலையில் ஏழரை மணியளவில் மஞ்சனக்காரத்தெரு வழியாக தெற்குமாசி வீதிப் பக்கம் நடந்து போய்க் கொண்டிருந்தேன். கல்யாண மஹாலும் அதே தெருவில் தான். இப்போது நல்லி சில்க்ஸ், முன்பு கார்டன் சாரீஸ் இருந்த கடைக்கருகில் உள்ள காபி கடையில் பேப்பரை படித்துக் கொண்டே காபி குடிக்கும் கூட்டம் , தெருவோரத்தில் இருக்கும் இட்லிக்கடைகளில் ஆவி பறக்கும் இட்லிகளும், அதை சாப்பிடும் கூட்டமும் என்று சோம்பேறித்தனமாக மதுரையில் காலை புலர்ந்து கொண்டிருந்தது. பல பெண்களும் வாசலை கூட்டிப் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கடைகள் அதிகமிருக்கும் பகுதியால் காலை ஒன்பதரைக்கு மேல் தான் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

திடீரென்று பத்துப் பதினைந்து பேர் கொண்ட பெரிய கும்பல் ஒன்று டேய், நில்லுடா, ஓடாதே என்று சாலையை அடைத்துக் கொண்டு ஒருவனை விரட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். கலைந்த தலைமுடி, தாடி மூஞ்சிகள், ராஜ்கிரண் ஸ்டைலில் கட்டிய வேட்டி/கைலி என்று ஒரு பெரிய கூட்டம். இதில் யார் யாரை துரத்துகிறார்கள் என்று தெரியவில்லை. சரி ஏதோ முன்விரோதம் போல என்று வேடிக்கைப் பார்த்த்துக் கொண்டிருந்த மக்கள், நில்லுடா, வெட்றா அவனை என்று அருகில் கேட்டவுடன்,

காபி குடித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நிமிடம் கையில் கண்ணாடி டம்ளருடன் உறைந்து போய் நிற்க, அப்போது தான் தெரிந்தது விரட்டி வந்தவர்களின் கைகளில் இருந்த நீண்ட அருவா!!!  அவர்களிடம் இருந்த 'கொலைவெறி' நடுவில் எவர் புகுந்தாலும் வெட்டித் தள்ள தயங்க மாட்டார்கள் என்று தெரிந்தது. அவர்கள் ஒரு நிலையில் இல்லாமல் வெட்டிப் போட்டு விட்டு ஓடிப் போவதிலே கவனமாக இருந்தார்கள். அமைதியான  அந்த காலை நேரத்தில் அனைவரையும் இது நிஜமாகவே நம் கண் முன் நடக்கிறதா என்ற பயத்தை உண்டு பண்ணியதென்னவோ உண்மை தான்! 

நானும் 'சடக்'கென்று அருகில் உள்ள வீட்டு வாசலில் 'திக் திக்' என்று படப்படப்புடன் தஞ்சம் புக, என்ன நடக்கிறது என்று தெரியாமல் நடந்து போய்க் கொண்டிருந்த மக்கள் முழிக்க, அந்த கூட்டமும் நான் இருந்த தெருவை தாண்டி சிடிசினிமா தியேட்டர், விளக்குத்‌தூண் பக்கம் ஓடிப் போக சில நேர கலவரங்களுக்குப் பின் அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க, நானும் படப்படப்புடனே கல்யாண மஹாலுக்குச் சென்று விட்டேன்.


 அங்கே யாருக்கும் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் காலைச் சாப்பாடு, மாப்பிள்ளை வரவேற்பு, மணப்பெண் அலங்காரம் என்று பிஸியாக இருந்தார்கள். நானும் சிறிது நேரம் இருந்து பரிசைக் கொடுத்து விட்டு வேலைக்குச் சென்று விட்டேன்.

அன்று மாலை வந்த மாலைமுரசில் தான் காலையில் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை.அவனை கண்டந்துண்டமாக வெட்டித் தள்ளி விட்டு அந்த கொலைகார கும்பல் ஆளுக்கு வெவ்வேறு திசைகளில் ஓடி விட்டார்கள் என்று படித்த போது தான்...

இந்த ஓட ஓட விரட்டி கொலை செய்வது அப்போது தான் மாமதுரையில் தலை தூக்கிய காலம்!!! அன்று தங்களுக்குள் ஒருவனை போட்டுத் தள்ள ஆரம்பித்து பிறகு மக்களுக்கு நல்லது செய்து கொண்டிருந்த ஒரு கவுன்சிலர் பெண்மணியை அவர் இருந்த குடியிருப்பிலே போட்டுத் தள்ளி என்று தொடர்ந்து, காலை நேர நடையை முடித்துக் கொண்டு வருபவரை போடுவது என்று இன்று வரை தொடருவது தான் கொடுமை.


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...