Showing posts with label Multiple Facets of Madurai. Show all posts
Showing posts with label Multiple Facets of Madurai. Show all posts

Sunday, January 5, 2025

Multiple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தாலும் பழைய நினைவுகளைக் கிளறும் படங்களைப் பார்த்தால் மீண்டும் பால்ய காலத்திற்கே கொண்டு செல்லும் வலிமை படங்களுக்கு உண்டு. அப்படித்தான் திரு.மனோகர் தேவதாஸ்-ன் 'Mulitple Facets of Madurai' புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. 

அவர் கோரிப்பாளையம் என்ற பகுதியில் சிறிது காலம் வசித்திருக்கிறார். மேம்பாலம் ஏறுவதற்கு முன்பே மசூதி ஒன்று இருக்கும். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது. அங்குள்ள இறைச்சி சந்தை கழிவுகளை ஆற்றில் கொட்டி தண்ணீர் வராத வைகையை மாசுபடுத்தி வருகிறார்கள் பொறுப்பற்ற மக்களும் கண்டுகொள்ளாத மாநகராட்சியும். அப்பகுதியில் நடமாட முடியாதபடி நாஸ்தி பண்ணி வைத்திருக்கிறார்கள். யாருக்கும் எதைப்பற்றியும் அக்கறையில்லை. கவலையுமில்லை. வருங்கால சந்ததிகளுக்கு நாம் செய்யும் துரோகம் என்ற நினைவு அறவே இல்லை. சுரணை கெட்டுத்தான் போயிருக்கிறோம். 

அவருடைய குறிப்புகளில் இருந்து அப்பகுதி இப்பொழுது நிறையவே  மாறிவிட்டிருக்கிறது என்பது மட்டும் நன்கு தெரிகிறது. மேம்பாலம் (ஆல்பர்ட் விக்டர் ஓவர் பிரிட்ஜ் ) பாரம் தாங்காது என்று கீழ்பாலத்தை அதிகமாக பயன்படுத்தவேண்டிய நிலை தற்பொழுது. போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வைகையின் இருகரைகளையும் இணைக்கும் பாலங்கள் வரிசையாகக் காட்சி தருகிறது. ஆனாலும் மதுரையிலிருந்து கோரிப்பாளையம், செல்லூர் செல்பவர்கள் கீழ்பாலம் வழியாகத் தான் செல்ல வேண்டும். 

புழுதி பறக்க வாகனங்கள் செல்லூர் செல்ல கண்மாயை கடந்து செல்ல வேண்டும். பாவம் அதன் எதிர்புறத்தில் வாழும் மக்கள். கடந்து செல்லும் பொழுதே மூக்கை மூடிக்கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது. சாக்கடையாக்கி வைத்திருக்கிறார்கள். கண்மாய் முழுவதும் குப்பைகளைக் கொட்டி நீரின் நிறம் மாறி பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறது.  மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம். சாக்கடை தண்ணீர் சாலையெங்கும் ஓடி வாகனங்களின் சக்கரங்களில் சுற்றி ஊரெங்கும்...ச்சை! தீராத கொசுத்தொல்லை வேறு. ப்ளீச்சிங் பவுடர் "விலை என்ன தெரியும்ல" என்று மைதா/கோதுமை மாவைத் தூவி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அறிவுக்கழகம்.  மதுரையின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூட அக்கறை கிடையாது. கைநீட்டி காசு வாங்கி ஓட்டுப்போடும் கும்பல் இதைப்பற்றிக் கேட்கவே கூடாது. முடியாது. பெருமைக்கு நாம் வேண்டுமென்றால் 'தூங்கா நகரம்', 'உணவு நகரம்' என்று பீற்றிக் கொள்ளலாம். அதனுடன் இப்பொழுது 'துர்நாற்ற நகரம்', 'குப்பை நகரம்' என்ற அடைமொழிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். 

நல்லவேளை, இந்த மனிதர் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்கவில்லை. அவருடைய நினைவுகளில் இருந்து 2004ல் வரைந்த பாடத்தைப் பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது!

ஹ்ம்ம்... என்னவோ போடா மாதவா! 









Tuesday, December 10, 2024

Multiple Facets of Madurai - யானைமலை


மதுரையில் பிறந்து வளர்ந்தவர்கள் இந்த மலையைக் கண்டிப்பாகப் பார்த்திருப்பார்கள். வைகை ஆற்றைத் தாண்டி மேலூர் செல்லும் பாதையில் ஒரு யானை தும்பிக்கையை நீட்டி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் இருக்கும். என் சிறுவயதில் அந்தப் பிரம்மாண்டமான மலையை ஆச்சரியத்துடன் பார்த்த நினைவு இன்றும் இருக்கிறது. மாடிவீடுகள் அதிகம் இல்லாத காலத்தில் எங்கள் வீட்டு மாடியிலிருந்து தெரியும். அம்மா தற்போது இருக்கும் வீட்டு மாடியிலிருந்து கூட தெரிகிறது.

தூரத்திலிருந்தே தெரிந்து பேருந்துடன் கூடவே பயணிப்பது போலத் தொடரும் மலையடிவாரத்தில் தான் நரசிங்கம்பட்டி என்னும் கிராமம் இருக்கிறது. அங்கே தான் பிரபலமான நரசிங்கப் பெருமாள் குடைவரைக் கோவிலும் உள்ளது. மலையின் கீழே தாமரைப் பூத்துக் குலுங்கும் பெரிய குளம். மலை நிறைய மந்திகளின் அட்டகாசமும் அதிகமாக இருக்கும்.
 
என் சமூகத்து மக்கள் கோவிலில் திருநாட்களைக் கொண்டாட அடிக்கடி சென்று வரும் இடம். அங்கே சௌராஷ்டிரா சத்திரங்கள் இன்று வரையில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அருகில் உள்ள சிறு குன்றின்மீது முருகன் கோவில் இருக்கிறது. அதைப் பராமரிப்பவர்களும் எம் சமூகத்து மக்கள் தான். சிறிய கோவில் இன்று பெரிதாகக் கட்டப்பட்டுச் சிறப்பாக இருக்கிறது.

இளவயதில் கோடைவிடுமுறையில் பாட்டி அழைத்துச் செல்லும் இடங்களில் நரசிங்கம்பட்டியும் ஓன்று. மதுரையிலிருந்து வெகு தொலைவில் இருந்தது போன்ற பிரமை. இப்பொழுதெல்லாம் பைக்கில் கூட சென்று விட முடிகிறது. வைகை ஆற்றுப் பாலத்தைக் கடந்து விட்டால் போதும் தூங்குமூஞ்சி மரங்கள் சாலையின் இருபுறமும் அலங்கரிக்க, காவலர் குடியிருப்புகளைத் தாண்டினால், 'தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல' தான் 💕💕💕 அத்தனை பசுமையான விளைநிலங்கள் நிறைந்த இடமாக இருந்தது. இன்று நன்கு சுருங்கி ஏதோ சிறிது விளைநிலங்களை மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள். டிசம்பர் மாதம் சென்றால் கரும்புத்தோட்டங்களைப் பார்க்கலாம். வயல்வெளிகள் இன்றும் மனதை அள்ளுகிறது.

ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து குதிரை வண்டியில் ஏறி சத்திரத்திற்குச் செல்வோம். காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வீடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் கோழிகள், குஞ்சுகள், மாட்டுக்கொட்டகைகளைக் கடந்து சென்று, அங்குத் தங்கி கிராமத்து மண்வாசனையை நன்கு அனுபவித்திருக்கிறோம். இன்று அந்தக் கிராமத்தின் சுவடே காணவில்லை! ஓலைக்குடிசைகள் மறைந்து கல் கட்டடங்களாகி ஒத்தக்கடையா இது என்று மிரட்டுகிறது! மதுரையின் எல்லை விரிந்து கொண்டே செல்கிறது! ஆனாலும் அந்த பஜ்ஜி, வடை, காபிக்கடைகள் கொஞ்சம் நவநாகரீக ஸ்டைலில் இருக்கிறது😇😋 புழுதிபறக்க பேருந்துகள், காது வலிக்க ஒலிப்பானை அலற விட்டுச் செல்லும் லாரிகள், இரு சக்கர வண்டிகள் என்று போக்குவரத்து மிகவும் சவாலாக இருக்கிறது. எத்தனை அமைதியாக இருந்த ஊர் கால் நூற்றாண்டில் எப்படியெல்லாம் மாறிவிட்டிருக்கிறது! எங்கெங்கோ இருக்கும் பள்ளிகளின் வாகனங்கள் சீருடை அணிந்த குழந்தைகளை அழைத்துச் செல்ல மூலைமுடுக்குகள் வரை வருகிறது. தண்டாட்டி அணிந்த ரவிக்கை அணியாத பொக்கைவாய்ப் பாட்டிகளைக் காணவில்லை. கயிற்றுக்கட்டில், ஓலைவேய்ந்த குடிசைகள் எல்லாம் மாயமாய் மறைந்து கிராமங்கள் நகர வேடம் பூண்டு வலம் வருகிறது. நல்ல முன்னேற்றம் தான்!


ஒருகாலத்தில் சௌராஷ்டிரா மக்கள் பலரும் வயல்வெளிகள், தோப்புகள் என்று வாழ்ந்த இடம்! பாட்டிவீட்டு நிலங்கள் கூட அங்கே எங்கேயோ தான் இருந்தது. காலப்போக்கில் கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் அங்கிருந்தவர்களே குறைந்த விலைக்கு எடுத்துக் கொண்டார்கள்! அங்குச் சென்றால் இப்படி நினைவுகள் பல அலைமோதும்.

குளத்தின் உள்ளே சென்றால் தாமரைத்தண்டு காலை இழுத்து விட்டுவிடும் என்று பயந்து, பயந்து காலை உள்ளே விட்ட நாட்கள் எல்லாம் அத்தனை பசுமையாக நினைவில் ஆடியது. அருகிலே சுரங்க வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கும். அந்த வயதில் 'போரடிக்கிறது' என்ற சொல்லே தெரியாது. வேடிக்கைப் பார்த்துக் கொண்டு குரங்கு, கோழிகளுடன் விளையாடி, குளத்தில் நீராடி, விளையாடி மகிழ்ந்த நாட்கள் எல்லாம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... காலை, மாலை கோவிலுக்குச் சென்றுவருவோம். மின்விளக்கு, விசிறிகள் கூட சத்திரத்தில் இருக்காது. பிறகு விளக்கு, தண்ணீர் வசதிகள் வந்தது. எப்படித்தான் அங்குத் தங்கியிருந்தோமா? பாட்டி சமைக்க வேறு செய்வார்😊 எளிமையான உணவு தான் என்றாலும் சுவையாக இருக்கும். சோற்றை உருட்டிக் கொடுத்து ஏதாவது புராணக் கதைகளைச் சொல்லி, விசிறி வீசி எங்களைத் தூங்க வைப்பார். ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் இங்குச் சென்று அன்றைய நாளை அசை போட்டுவிட்டு வருவேன். பாவம் ஈஷ்வர்! நான் சொல்ற கதைகளைக் கேட்பது போல் நன்றாகப் பாவனை செய்வார்😉 அத்தனை முறை சொல்லியாகிவிட்டது!

குளத்தின் எதிரே இருந்த பிள்ளையார் அன்று அரச மரத்தின் கீழ் வெயிலில் அமர்ந்திருந்தார். இப்பொழுது அவருக்கும் ஒரு வீடு கிடைத்திருக்கிறது. வெயில்படமால் சுகமாக உள்ளே அமர்ந்திருக்கிறார்.

அங்கிருந்து சிறிது தொலைவில் இருக்கும் திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலுக்கும் சென்று வருவோம். இப்பொழுதும். பெரிய தடாகம். எதிரே யானைமலையின் அழகு தரிசனம். ஆகா! காண கண்கோடி வேண்டும். அந்தக்கோவிலும் அத்தனை அழகு. அதுவும் தாயாரின் அலங்காரம்💖 சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். சக்கரத்தாழ்வார் விசேஷம். சிறுகோவில் தான் என்றாலும் அழகான பெருமாள். அமைதியான கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

திரு.மனோகர் தேவதாஸ் அவருடைய பள்ளி வயதில் நண்பர் ஒருவருடன் யானை மலைமீதேறி சிறிது தூரம் வரை சென்று அங்கிருந்து அழகான பச்சைப்பசேல் வயல்வெளிகளையும் கிணற்றிலிருந்து நீரை எடுத்து வயலுக்குப் பாய்ச்சும் விவசாயிகளையும் பார்த்திருக்கிறார். மாடுகளைக் கொண்டு உழுவது தான் அன்றைய விவசாய நடைமுறை. நாங்களும் பார்த்திருக்கிறோம். இந்தத் தலைமுறையினர் அறிந்திராத பலவிஷயங்களில் இதுவும் ஒன்று. 1950களில் பார்த்ததை நினைவில் கொண்டு 1980களில் வரைந்திருக்கிறார். மீண்டும் அந்த உலகத்திற்கே கொண்டு சென்று விட்டது இந்தப்படம்.

சிறுவயதில் பார்த்த யானைமலை கொஞ்சம் உருவத்தில் சுருங்கியது போலத் தெரிகிறது. அங்கிருந்த குன்றுகளைப் பாளம் போட்டுத் தகர்த்திருக்கிறார்கள்😞 மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் வரும் பல கிரானைட் குன்றுகள், மலைகளை இப்படித்தான் பாளம் பாளமாக வெட்டி சாலையோரம் வைத்திருந்தார்கள். சகாயம் ஐபிஎஸ்சின் சகாயத்தால் சிறிது நாட்கள் "கிரானைட் திருடர்கள்" வாலைச் சுருட்டிக்கொண்டிருந்தனர்.

 யோக நரசிங்கப்பெருமாள் கோவில் குளத்தை மொத்தமாக குத்தகைக்கு விட்டிருக்கிறது கோவில் நிர்வாகம். பூக்களைப் பறிக்க முடியாது. கடந்த மாதம் அங்குச் சென்று விட்டு வந்த ஈஷ்வர் குளத்தை நாசமாக்கி வைத்திருக்கிறார்கள். குப்பையும் கூளமுமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டார்😌 நமக்கு எதன் அருமை தான் தெரிந்திருக்கிறது. அதுவும் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் தான் இத்தனை அலட்சியங்களுக்கும் காரணம். சொரணை கெட்டவர்களாகி விட்டோம் என்பது மட்டும் நன்கு புரிகிறது.

யானைமலைக்குச் சென்று அங்கிருக்கும் சமண சிற்பங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து 'அரிட்டாபட்டி' சென்ற கதையும் உண்டு.
 

Saturday, December 7, 2024

Multiple Facets of Madurai


இந்த வருட ஆரம்பத்தில் மதுரையில் தங்கியிருந்த நாட்களில் பல புத்தகக்கடைகளில் தேடியும் கிடைக்காத புத்தகம் இது. திரு.மனோகர் தேவதாஸைப் பற்றி அறிந்து கொண்ட நாளில் இருந்து அவருடைய புத்தகங்களை வாங்க முயற்சித்து வருகிறேன். சில புத்தகங்களைப் பொக்கிஷமாக வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகம் இது. நான் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றி ஒருவர் தீராக்காதலுடன் ஓவியங்களாக மையினால் தீட்டியிருக்கிறார். கூடவே, அதன் தொடர்புடைய விவரணைகளும் அழகு.

முதன்முதலில் இவரின் ஓவியங்களை நான் பார்த்தது மதுரையில் பிரபலமான 'ஜேஜே ரெசிடண்ஸி' தங்குமிடத்தில். உள்ளே நுழைந்ததும் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் பெரிய பெரிய சட்டங்கள் போட்ட படங்கள் நம்மை வரவேற்கிறது. மதுரையைப் பற்றின அழகான புகைப்படங்கள் பல இருந்தாலும் அதன் அழகை ஓவியமாக இப்படித் தீட்டியவர் யாரோ என்று ஒவ்வொரு படங்களையும் பார்த்தேன்.
அதற்குப்பிறகு தான் அவரைப்பற்றின தகவல்களைத் தெரிந்துகொண்டேன். ஆகா! புத்தகங்கள் எழுதியிருக்கிறாரே வாங்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது. இந்த முறை ஈஷ்வர் ஊருக்குச் சென்றிருந்த பொழுது பேராசிரியர் பிரேம்பாபுவின் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்திருக்கிறார்.
அடடா! நான் தேடிக்கொண்டிருக்கும் புத்தகமாச்சே என்று சொல்லியிருப்பார் போல. அவரும் அன்புப்பரிசாக கொடுத்துவிட்டார்.

நன்றிகள் பல பிரேம்பாபு சார்.

புத்தகத்தின் முதல் படமே அத்தனை தத்ரூபமாக இருக்கிறது. புதுமண்டபத்தில் இருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண வைபவ சிற்பத்தை தன்னுடைய மையினால் தீட்டியிருக்கிறார். இதே போன்ற அன்னையின் திருக்கல்யாண சிற்பம் அம்மன் கோவிலில் சுந்தரேஸ்வரர் சந்நிதியின் வெளிப்புறத்தில் காளிக்கு எதிரில் இருக்கும். அது தான் எனக்குத் தெரியும். புதுமண்டம் முழுவதும் கடைகள் இருந்ததால் இந்த அழகிய சிற்பத்தை நான் பார்க்கவில்லை போல. விரைவில் புதுமண்டபம் புதுப்பொலிவுடன் அருங்காட்சியமாகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம் பார்ப்போம்.

மதுரையில் பிறந்த மனோகர் தேவதாஸ், சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே கண்பார்வை கோளாறு இருந்தும் அற்புதமான படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். இவரின் மனைவி மஹிமா மைக்கேலும் ஒரு ஓவியக்கலைஞர். இவரின் வெற்றியில் சமமான பங்கு அவருக்கும் உண்டு.

இன்று அந்த மாமனிதர் இறந்த நாள். இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்களில் ஒருவர்.




அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...