Showing posts with label இந்திப்படம். Show all posts
Showing posts with label இந்திப்படம். Show all posts

Sunday, May 19, 2024

தானத்திலே சிறந்த தானம்


இன்று மதியம் 'ஆல்பனி இந்து கலாச்சார மைய'த்தில் ஒரு மணிநேர குறும்படம் 'Aye Zindagi'ஐ திரையிட்டார்கள். இதற்காகப் பல தன்னார்வலர்கள் பல நாட்கள் கடுமையாக உழைத்து சமூகத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொண்டார்கள். அதனால் நிறைய கூட்டத்தை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், வழக்கம் போல தேர்தல் என்றால் விடுமுறை என்று ஓட்டுப்போடாமல் ஓடிப்போகும் சமூகம் இதற்கும் கல்தா கொடுத்து விட்டிருந்தது. அங்கே சென்றால் எதிர்பார்த்த அளவிற்குக் கூட்டம் இல்லை. படத்தை இயக்கியவர் சிறுநீரக மருத்துவர். அவருடைய நண்பர், சிறுநீரக மருத்துவர். எங்கள் ஊரில் இருப்பவர். அவர் மூலமாக இத்திரைப்படத்தை இந்திய மக்கள் காணும் வகையில் இலவசமாகத் திரையிட்டார்கள்.

திரையிடுவதற்கு முன்பு இயக்குநரைப் பற்றின சிறு அறிமுகம். படத்தைப் பார்த்துவிட்டுக் கலந்துரையாடல் செய்வோம் என்று படத்தைப் போட்டார்கள். இந்திப்படம் என்று தெரியும். ஆனால் எதைப்பற்றியது என்று தெரியாது. நமக்கு நன்கு அறிமுகமான ரேவதி முதல் காட்சியில் பேசிய சில வசனங்களில் தெரிந்து விட்டது படத்தின் மூலக்கதை. அதை மக்களுக்கு உணர்த்த அருமையாக, எளிமையாக, உணர்வுபூர்வமாக எடுத்திருந்தார்கள். இது உண்மையாக நடந்த கதை. அதைப் படமாக்கிய விதம் அருமை.

உயிரின் விலை மதிப்பற்றது. அந்த உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின் ஏற்படும் இழப்பு சுற்றத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் உயிரற்ற உடலின் உறுப்புகள் வேறு சிலரை வாழ வைக்கும் வகையில் மருத்துவ உலகம் முன்னேறியிருக்கிறது என்பதும் இழப்பினால் தவிப்பவர்கள் அந்த கொடிய வேதனையில் எடுக்க வேண்டிய முடிவைப் பற்றிப் பேசி உறுப்புகளின் தானத்தைப் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இப்படம். ரேவதியின் நடிப்பு அருமை.

குடும்பத்தில் ஒருவருக்கு கொடும்நோய் வந்து விட்டால் எவ்வாறெல்லாம் குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள், மருத்துவச்செலவுகளுக்காக அவர்கள் படும் வேதனை என்று நன்றாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் கொடுமையான நாட்களில் நமக்கு ஆதரவாக நம்மைச் சுற்றி நல்லவர்கள் இருப்பதும் வரம். எல்லோருக்கும் அந்த கொடுப்பினை இருப்பது இல்லை. கண்ணீர் எட்டிப்பார்க்கும் காட்சிகள் இருந்தாலும் சுபமாக முடிந்ததில் திருப்தி. இசை, பாடல், காட்சிகள் என்று தேர்ந்த இயக்குநரைப் போல் ஒரு மருத்துவர் இயக்கியிருந்தது சிறப்பு. நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களில் அருமையாக நடித்திருந்தார்கள்.

படம் முடிந்ததும் அப்படத்தை எப்படி, எதற்காக எடுத்தேன் என்று இயக்குநர் டாக்டர்.அனிர்பன் போஸ் விளக்கமளித்தார். இன்று ஒருவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வாழ்கிறார் என்றால் ஒரு உயிர் இழப்பு நடந்திருக்கிறது என்று அர்த்தம். உயிரற்ற உடலால் இன்று தோல், திசுக்கள் வரை தானம் செய்யலாம். தானத்திலேயே சிறந்த தானம் இறந்த பிறகு நம் உடலின் உறுப்புகளை வேண்டுபவர்களுக்கு வழங்குவதே. இந்தியாவில் இத்தகைய உடல் உறுப்புகளுக்காகப் பலரும் காத்திருக்கிறார்கள். மனமுவந்து இறந்தவர்களின் குடும்பங்கள் ஒத்துழைத்தால் பலரும் இன்று வாழ முடியும். அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப்படம். இந்தக் கதையைப் பல பாலிவுட் இயக்குநர்கள் நல்ல கதை தான்ன்ன்ன்ன். ஆனால் என்று இழுத்தடித்திருக்கிறார்கள். லாபநோக்கில் படம் எடுப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் அலைந்து திரிந்து வேறு வழியின்றி அவரே இயக்கியிருக்கிறார். லண்டன் ட்ரினிடி கல்லூரியில் படங்களை இயக்குவது பற்றின அடிப்படை கல்வியையும் கற்றிருக்கிறார் இந்த மருத்துவர். கிட்டாரும் வாசிப்பாராம். சூப்பர் மருத்துவர்.

அமெரிக்காவில் இந்தியர்கள் அனைவரும் நன்கு படித்து சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கிறார்கள். பல தொண்டு நிறுவனங்களுக்கும் ஏராளமான உதவிகள் செய்து வருகிறார்கள். ஆனால் மற்ற நாட்டினரை விட குறைந்த அளவில் தான் உறுப்பு தான பதிவு செய்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். அதற்காக நாட்டில் பல இடங்களுக்குச் சென்று திரையிடுவதாகக் கூறினார். அதற்கு குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் அவரவர் குடும்பத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

இந்தியாவில் சென்னையில் MOHAN Foundation ( https://www.mohanfoundation.org) என்ற லாப நோக்கற்ற அமைப்பின் அமெரிக்க அமைப்பு தான் ttps://mohanusa.org/about-us/. அதற்காக தன்னாலான உதவிகளைச் செய்து வரும் ஆர்வலர்களில் ஒருவர் தான் நியூயார்க்கைச் சேர்ந்த மருத்துவரும் 'Aye Zindagi' படத்தின் இயக்குநருமான அனிர்பன் போஸ். 

நியூயார்க்கின் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் சமூக சேவை நிபுணர் மிஸ்.லோராவும் அமெரிக்காவில் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போர் பட்டியலில் அதிகம் பேர் குழந்தைகள் என்றும் ஒவ்வொரு நாளும் மாற்று உறுப்புகள் கிடைக்காமல் பலரும் இறந்து போகிறார்கள். இதில் சில மரணங்களையாவது நிச்சயம் நம்மால் தடுக்க முடியும். நாம் மனது வைத்தால் முடியும் என்று அனைவரிடமும் கேட்டுக் கொண்டார்.

காலத்தின் கட்டாயம் இத்தகைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

படம் பார்த்தவர்கள் பலரும் கேள்விகள் கேட்டனர். நானும் தமிழ்நாட்டில் மருத்துவ தாய், தந்தையர், விபத்தில் இறந்த தங்கள் மகனின் உறுப்புகளைத் தானம் செய்ததைச் செய்திகளில் படித்ததையும் மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனையின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் என் தந்தை, தெரிந்த உறவினர்கள் பலரும் இறந்த பிறகு கண் தானம் செய்ததைக் கூறினேன். மேலும், நாங்கள் இறந்த பிறகு எங்களுடைய உறுப்புகளைத் தானம் செய்வது குறித்தும் உயிலில் எழுதி வைத்திருக்கிறோம் என்றேன். அப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று அங்கிருந்தவர்கள் கேட்க, முடியும் என்று இயக்குநரும் அவருடைய நண்பரும் விளக்கமளித்தார்கள்.

அமெரிக்காவில் வாகன ஓட்டும் உரிமம் பெறும் விண்ணப்பத்தில், "விபத்தில் உயிரிழந்தால் உறுப்புகளைத் தானம் செய்ய சம்மதமா" என்று கேட்டிருப்பார்கள். இல்லையென்றால் உயிலில் தானம் செய்வதைக் குறிப்பிட்டு குடும்பத்தினரிடம் தெரிவித்து விடலாம்.

ஒரு நல்லவர் இருந்தால் பத்து தீயவர்கள் கைகோர்த்துக் கொண்டு தீய செயல்கள் செய்யாமல் இருப்பார்களா? சில கெட்ட நிகழ்வுகளும் 'organ harvesting' கொடுமைகளும் நடக்கத் தான் செய்கிறது. அதை தற்பொழுது புறக்கணிப்போம் என்று இயக்குனர் கூறி உறுப்புகளைத் தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமெரிக்கர் ஒருவருக்கு இந்தியாவில் இந்தியரின் இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில், இந்தியர் ஒருவருக்கு அமெரிக்கரின் இதயம் பொருத்தப்பட்டு இன்று இருவரும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்று அவர்கள் படத்தையும் முடிவில் காண்பித்தார்கள்.

இறந்த பிறகும் பிறருக்கு உதவ முடியும் என்றால் நல்லது தானே?



Sunday, May 12, 2024

ஆர்டிகிள் 370

சில அரசியல் நகர்வுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வதை விட ஆவணப்படங்கள் மூலமாகவோ அல்லது திரைப்படங்கள் வாயிலாகவோ தெரிந்து கொள்வது மக்களுக்கு எளிதாகி விடுகிறது. அந்த வகையில் சேர்ந்தது தான் 'ஆர்டிகிள் 370' திரைப்படம். அரசியல் குழப்பங்கள் நிறைந்த ஒரு வரலாற்றைப் படமாக எடுப்பதற்கு முன் அதனைப் பற்றின முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இயக்குநர் அந்த வகையில் தன் பங்களிப்பை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார். சர்ச்சையைத் தூண்டாத வகையில் இந்தப் படத்தைத் தயாரித்ததற்குப் படக்குழுவினருக்குப் பாராட்டுகள்.

ஒவ்வொரு காட்சியையும் வசனங்களையும் மிக கவனமாகக் கையாண்டு அரசியல் வரலாற்று நிகழ்வை கண்முன்னே தெளிவுற நிறுத்தியுள்ளது இப்படம். முக்கியமாக, ஏன் அரசியல் சாசனம் 370 பிரிவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதைத் தொடர் காட்சிகளாகக் கொண்டு சென்றிருப்பது மிகச்சிறப்பு. பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகள், ராணுவ வீரர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், உயிரிழப்புகள், அதைக் கண்டும் காணாமல் அரசியல் செய்யும் கட்சிகள், பிரிவினைவாதிகள் என்று அனைவரின் முகங்களையும் உரித்துக் காட்டுகிறது.

தற்போதைய அரசியல் சூழலில் மக்களுக்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது சில கட்சிகள். அதுவும் காஷ்மீர் விவகாரம் என்பது யாருமே எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் சிக்கல்கள் நிறைந்ததாக இருப்பதும் அதற்குக் காரணமானவர்கள் யார் யார் என்பதும் நாட்டை நேசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், உண்மை கசக்கத்தானே செய்யும்? பொய்ச்செய்திகளைப் பரப்பி மக்களைக் குழப்ப பார்க்கிறார்கள் எதிர்க்கட்சிகள். தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆர்டிகிள் 370 மீதான ரத்தை நிராகரிப்பதை ஒரு தேர்தல் வாக்குறுதியாகவே வைத்துள்ளது. படத்தில் சில குறைகள் இருப்பினும் வரலாறு அறியாத தலைமுறைக்கு இப்படத்தின் வாயிலாக உண்மையை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

நடிகர்களின் தேர்வும் நடிப்பும் அருமை. நெட்ஃப்ளிக்ஸ்ல் வந்துள்ளது.






Wednesday, May 1, 2024

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்




மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹூடா' கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார். 18 வயதில் தாய்நாட்டுக்காக உயிரை இழந்த தியாகிகளால் கிடைத்த விடுதலையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று உணர வேண்டும்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஸ்ரீ வீர் சாவர்க்கரைப் பற்றி பலர் எதிர்மறையான கருத்துக்களை அரசியல் ஆதாயத்துக்காகப் பரப்புவதை நாம் காண்கிறோம்.அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு இப்படத்தைப் பார்த்தால் உண்மை விளங்கும். காந்தியின் அஹிம்சா கொள்கைக்கு எதிரான கொள்கையைக் கடைப்பிடித்தவர். ஆங்கிலேய அரசிற்கு அச்சத்தை ஏற்படுத்தியவர். அதனாலேயே அந்தமான் சிறையில் இரண்டு முறை ஆயுள் தண்டனை பெற்றவர். சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகளை எவ்வளவு எளிதாக மறைத்து அவர் மேல் சேற்றை வாரி வீசிக்கொண்டிருக்கிறார்கள் அற்ப பதர்கள்!

ஒரு தூய்மையான,சுதந்திர தாகம் கொண்ட மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது அத்தனை எளிதல்ல. விடுதலைப் போராட்டங்களையும் அவருடைய வாழ்க்கையையும் பிணைத்து அழகான படமாகக் கொண்டு வந்ததில் முழு வெற்றியடைந்திருக்கிறது திரைப்படக்குழு. 'காலா பாணி' சிறையில் அவர் படும் கொடுமைகளைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

'இந்துத்துவா' விற்கு அவர் அளிக்கும் விளக்கம் தான் உண்மையானது. அதை வழக்கம் போல திராவிட பாணியில் உருட்டி பொய்யைப் பரப்பி வருகிறது தீராவிடம். படத்தைப் பார்த்தால் பல உண்மைகள் தெரிய வரும். அதை விட, அவரைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டால் அற்பர்களின் பொய் அம்பலமாகும். 

இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். மாணவர்கள் கண்டிப்பாக.

Monday, April 29, 2024

லாபதா லேடீஸ்


'Laapataa Ladies' என்றொரு இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. வெள்ளந்தி மனிதர்களை வைத்துப் பின்னப்பட்ட அழகான கதை. மேற்படிப்பு படிக்க ஆசைப்படும் பெண், கணவனுக்காக வாழ விரும்பும் படிக்காத பெண். இருவரும் ஓரிடத்தில் மாறி விட, தொலைந்த நாட்களில் தங்களது சுயத்தைக் கண்டடைவதை இத்தனை எளிமையாக, அழகாகச் சொல்லவும் முடியுமா? 

வடமாநிலங்களில் அதுவும் போதிய பின்தங்கிய கிராமங்களில் இல்லாத இளவயது திருமணம் என்பது நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியபடி துவங்குகிறது படம். புது மனைவி மீது தீராக்காதலுடன் 'ஐ லவ் யூ'  சொல்லி வெட்கப்படும் நாயகன் அனாயசமாக நடித்திருக்கிறார். அந்தச் சிறுபெண்ணும் வெள்ளந்தியாக பெண் என்பவள்திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்று வேலை செய்யவே படைக்கப்பட்டவள் போல அடுப்படி வேலைகள் அனைத்தையும் கற்று கணவன் பெயர் கூட சொல்ல வெட்கப்படுபவள். திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு கணவனுடன் ரயிலில் செல்கிறாள். அதே ரயிலில் அவர்களுடைய பெட்டியில் இன்னொரு மணமகனும் மணமகளும் இருக்கின்றனர்.

'கல்யாண மாப்பிள்ளை' என்றாலே கோட்டு சூட்டு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கிராமங்கள் வரை பரவியிருக்கிறது. பொருந்தாத உடையை அணிந்து அதில் யார் துணி உசத்தி? வரதட்சணை எவ்வளவு? என்ன கொடுத்தார்கள் என்று கேட்பது இன்னும் பெண்களுக்கு விடியல் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர் கிரண் ராவ். மாற்றார் முன்னிலையில் திருமணமான பெண்கள் தலையில் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் புழக்கத்தில் உள்ள வழக்கம்.  அதில் வரும் குழப்பத்தால் இறங்குமிடம் வந்ததும் தன் மனைவி என்று அதே பெட்டியில் பயணம் செய்த மணப்பெண்ணை இழுக்க கொண்டு இறங்கி விடுகிறான் அந்த இளைஞன்.

ஊருக்குச் சென்று ஆரத்தி எடுக்கும் பொழுது தான் தெரிகிறது அழைத்து வந்தது தன்னுடைய மனைவி அல்ல என்று. தன் மனைவியைத் தேட ஆரம்பிக்கிறான். பணத்தாசை பிடித்த உள்ளூர் காவல்நிலைய அதிகாரி வாயில் பீடாவை குதப்பிக்கொண்டே பேசி... உவ்வே... எங்களுடைய பீகார் பயணம் தான் நினைவிற்கு வந்தது. வெத்தலை போடுவதும் துப்புவதுமே முழுநேர வேலையாகச் செய்து எரிச்சலூட்டுகிறார்கள். கான்ஸ்டபிளாக வருபவர் இதற்கு முன்பு படத்திலோ நாடகத்திலோ பார்த்தாக நினைவு. இவர்கள் இருவரும் வரும் காட்சிகளின் வசனங்கள் 👌 மனைவியைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று பரிதாபமாக வந்து நிற்கும் இளைஞனைப் பார்த்து அவனிடமிருந்து பைசா தேறாது ஆனால் அவன் மனைவியாக வந்திருப்பவளிடமிருந்து கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போட்டு அவளைக் கண்காணிக்கும் காட்சிகளில் வரும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. 

யார் என்று தெரியாமலே மகன் தவறாக அழைத்து வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு அவள் கணவனைத் தேடுகிறார்கள்.மேற்படிப்பு படிக்க விரும்பும் சாதூரியமான பெண். தான் தங்கியிருந்த வீட்டில் மூத்த மருமகளின் திறமையைக் கண்டறிந்து அவளுக்கு உதவுகிறாள். திருமணமானாலே பெண்கள் தங்களுடைய ஆசைகளை மறந்து விட வேண்டும் என்பதை மாமியார் கதாபாத்திரத்தில் வருபவர் கூறும் பொழுது பல பெண்களும் அதை உணர முடியும். குடும்பம் குடும்பம் என்று கணவன், குழந்தைகளுக்காக வாழ்ந்து தங்களது ஆர்வத்தை, ஆசைகளைத் துறந்த பெண்கள் பலர். அதையும் அழகாகச் சுட்டிக்காட்டியது சிறப்பு. 

ஆண் என்றாலே மனைவியை அடிக்கலாம். வரதட்சணையை வெட்கமின்றி கேட்டு வாங்கலாம். பெண்ணைப் பெற்றவர்களை அவமானப்படுத்தலாம். பெண் என்பவள் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற அக்மார்க்தனமான அடாவடி  ஆணிற்கு மனைவியாக நடித்திருந்த பெண்ணும் நடிப்பில் அசத்தியிருந்தார். பெண்ணிற்குத் திருமணம் தான் முக்கியம் அதுவும் அவளுடைய கனவுகள், ஆசைகளைக் கேட்ட பிறகும் வீட்டில் திணிக்கப்படும் வன்முறை நாடகம் என்று பெண்களின் அவதியை ஒன்று விடாமல் காட்டியுள்ளார்கள்.

கணவனைத் தொலைத்தபிறகு நடைமேடையில் அழுது கொண்டு ஊர் பெயரும் தெரியாமல் பயந்த விழிகளுடன் நடித்திருந்த பெண்ணும் அமர்க்களம். அவருக்கு உதவுபவர்கள், அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து அந்தப் பெண் கற்றுக்கொள்வது என்று காட்சிகள் அழகாக நகர்கிறது.

நடைபாதையில் கடை வைத்திருக்கும் பெண், தன் சம்பாத்தியத்தில் கணவரும், மகனும் வாழ்ந்ததால் அவர்களை விரட்டி விட்டு நிம்மதியாக இருப்பதாகக் கூறுவார். அப்பொழுது அந்த வெள்ளந்திப் பெண், தனியாக இருக்க பயமில்லையா என்று கேட்பாள். பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நான் யாரையும் அண்ட விடுவதில்லை என்று போகிற போக்கில் முகத்திலறையும் உண்மைகளைச் சொல்லிக்கொண்டே போவது போல காட்சிகள் மிகச்சிறப்பு.

எப்போதாவது இப்படியொரு படத்தை இந்தியிலும் கூட எடுத்து விடுகிறார்கள். 

தமிழ்த் திரையுலகம் தான் கதையும் இல்லாமல் அதிக செலவுகள் செய்து யார்  யாரையோ திருப்திப்படுத்த அலங்கோலமாக படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! 


Saturday, January 6, 2024

12th Fail

'12th Fail' என்றொரு இந்தி திரைப்படம் ஹுலுவில் காண கிடைக்கிறது. உண்மையில் நடந்த சம்பவத்தை வைத்து திரைப்படமாக்கியுள்ளார்கள். மத்தியப்பிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தில் வாழும் குடியானவர்கள் குடும்பத்திலிருந்து ஒருவன் ஐபிஎஸ் ஆவது தான் கதை.

நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அதுவும் ஓரளவு வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு அவர்களுடைய கனவை நனவாக்குவதில் அதிக சிரமங்கள் இருப்பதில்லை. வேளாவேளைக்கு உணவும், பயிற்சிவகுப்புகளும் பெற்றோர்களே பார்த்துப் பார்த்து செய்து விடுவார்கள். ஏழைகள் நிலைமை தான் பெரும்பாடு. தற்காலத்தில் படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கும் மாணவ, மாணவிகள் கூட யாரிடமாவது பணத்தைக் கடனாகவோ இலவசமாகவோ பெற்று படித்து முன்னேறிவிடுகிறார்கள்.

எங்கோ ஒரு கிராமத்தில் இருப்பவனுக்கு நேர்மையான அதிகாரியாக வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் காக்கிச்சட்டை அணிந்து சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் வருவது அரிது. அப்படியே வந்தாலும் இந்த சமூகம் துணை நிற்குமா என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாமையே அவனுடைய கனவைச் சிதைத்து விடும். ஆனாலும் விடாப்பிடியாக கனவைத் துரத்துபவனால் தான் நினைத்த இடத்திற்குச் செல்ல முடியும். தடைகளைக் கடந்தால், கடினமாக உழைத்தால் மட்டுமே கீழ் நிலையிலிருந்து மேல்நிலைக்கு உயர முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டுகிறது இப்படம்.

கதாநாயகனின் தந்தை நேர்மையான அதிகாரி. ஊழலுக்குத் துணைபோக மாட்டார். அதனாலேயே வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவார். அதனால் குடும்பம் பல இன்னல்களுக்கு ஆளாகும். இதே போன்று நிஜத்தில் எங்களுடைய உறவினர் ஒருவருக்கு நடந்தது. அப்பொழுது அவர் தமிழ்நாட்டில் அரசுப் பொதுப்பணித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மேலும் கீழும் பதவியில் இருந்தவர்கள் ஏகமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். இவரோ நேர்மை, கண்ணியம் என்று இருந்ததால் அங்கிருந்த ஊழல் பேர்வழிகள் அவர் மீது இல்லாத பழிகளைச் சுமத்தி வேலையிலிருந்து நீக்கி விட்டனர். பல வருடங்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்து கடைசியில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வெளியானது. அதற்குள் அந்தக் குடும்பம் பட்ட சிரமங்கள் இருக்கிறதே! யாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது.

இந்தப்படத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கது. ஒன்று கதாநாயகனின் அப்பாவிற்கு நீதியே கிடைக்காது மனம் வெறுத்துப் போய்விடுவார். நேர்மைக்கு இங்கே வழி இல்லை என்று நினைத்தாலும் சில நேர்மையானவர்களால் தான் இன்றைய அரசாங்கமே இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் எத்தனை கோடிக்கணக்கில் ஊழல்கள் நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது. இலவசங்கள் என்ற பெயரில் மூடர்களின் வாயை அடைத்து ஊழல் ஆட்சி புரிபவர்களுடன் நேர்மையாக படித்து வந்த IAS, IPS அதிகாரிகள் படும் அவலம் இருக்கிறதே! கொடுமை. அவர்களில் பலரும் இந்த ஊழல் அரசியல்வியாதிகளைப் போலவே மாறிவிடுவது கொடுமையிலும் கொடுமை.

இரண்டாவது, IAS, IPS தேர்வுகளுக்குத் தயாராகி பட்டம் பெறுவது அத்தனை எளிதல்ல. அப்படிப் படித்து அரசியலுக்கு வந்த ஒருவரை தமிழ்நாட்டில் தகுதியற்ற தற்குறிகள் அவருடைய கல்வியை கேவலப்படுத்துவது அவர்களின் தகுதியைத் தான் வெளிப்படுத்துகிறது. அதுவும் அவர் கற்ற கல்வி "யுனெஸ்கோ உருட்டு புரட்டு ஆசாமியால் தான்" என்று புரூடா வேறு. ஒழுங்காக படித்திருந்தால் தானே இந்த அறிவற்ற ஜடங்களுக்கு அதன் கஷ்டம் புரியும். பொய்க்கதைகள் பேசி வரலாற்றைத் திரித்து சாதி, மதப்பிரிவினைகளை உண்டாக்கும் இந்த கேவலமான பிறவிகளுக்குத் தெரிந்ததெல்லாம் திருடுவது தான். அது அறிவானாலும் சரி. பணமானாலும் சரி.

இப்படிப்பட்ட சூழலில் நேர்மையாக வாழ, வழிகாட்டிட அதிகாரத்திற்கு வந்தால் தான் என்று கடும் போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற மனோஜ் குமார் ஷர்மா போன்ற மாணவர் சமுதாயம் பெருக வாழ்த்துகள்!

கதாநாயகனாக நடித்திருந்த விக்ராந்த்திற்குப் பொருத்தமான கதாபாத்திரம். கதாநாயகி மேதா ஷங்கரும் குறைவில்லாமல் நடித்திருந்தார். அம்மா, அப்பா, பாட்டி, தங்கை, நண்பன், அண்ணன் என்று அவரவர் கதாபாத்திரங்களில் அருமையாக நடித்திருந்தார்கள். மருமகளிடம் சண்டை போட்டாலும் மகன், பேரன், பேத்திகளிடம் அன்பாக வீட்டிற்கு ஒரு பாட்டி இருப்பார். படத்திலும் அப்படியே!

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் முன்னேற சிலர் முன்மாதிரிகளாக இருப்பார்கள். அப்படி ஒரு நேர்மையான அதிகாரியைக் கண்டவுடன் கதாநாயகனின் எண்ணங்களும் செயல்களும் மாறி தன்னுடைய கனவை நனவாக்கிக் கொள்கிறான். டாக்டர்.அப்துல் கலாம் தனக்கு மிகவும் பிடித்த மனிதர் என்று கதாநாயகன் கூறுவது போல் பலருக்கும் அந்த மாமனிதர் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு துவளாதவனே வெற்றி பெறுவான்.


படத்தில் கிராமத்துக்காட்சிகள் இயற்கையாக இருந்தது. இறுதிக்காட்சிகளில் அவர் எப்படியாவது வெற்றி பெற்றிட வேண்டும் என்று நம்மையும் நினைக்க வைத்து விட்டார்கள். நடுவில் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் நம்பிக்கையூட்டும் நல்ல திரைப்படம்.


Wednesday, July 5, 2023

Dum Laga Ke Haisha



நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைந்தால் வரம். இல்லையா? கிடைக்கின்ற வாழ்க்கையை வரமாக்கிக் கொள்ள வேண்டும். இது தான் 'Dum Laga Ke Haisha' படத்தின் கரு. அதை சமூகத்தில் புரையோடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை வைத்து மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள், 

படிக்காத ஒல்லிப்பையனாக அப்பாவிற்கு பயந்தவனாக ஆயுஷ்மான் குரானா நன்றாக நடித்திருக்கிறார். அப்பாவின் மிரட்டலுக்குப் பயந்து குண்டான, படித்த பட்டதாரிப் பெண்ணை வேண்டாவெறுப்பாகத் திருமணம் செய்து கொள்கிறார்.

அனைவரிடத்திலும் அன்பாக அதே நேரத்தில் ஆடல், பாடல் என்று சிரித்த முகத்துடன் கணவனின் அன்புக்கு ஏங்குபவராக, வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் சராசரிப் பெண்ணாக பூமி பட்னேகரின் நடிப்பும் அருமை. வீடுகளில் நடக்கும் பிரச்சினைகளைச் சுவையாகப் படத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பா கதாபாத்திரம் அந்த கால அப்பாக்களை பலருக்கும் நினைவுப்படுத்துகிறார். இந்தக்காலத்தில் அப்பாக்கள் மகன்களை மிரட்டுகிறார்களா என்ன?  அத்தையாக வருபவர் போல் வீடுகளில் ஒருவர் இருப்பார்😀

இன்றும் கூட குண்டாக இருக்கும் பெண்களின் நிலைமை கொடுமையானது. பெண் என்றால் ஒல்லியாக மெல்லிடையாளாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நவீன பாணி அடிமைத்தனம். இது பெண்களுக்குத் தான் அதிகம். உடல் ஆரோக்கியதிற்காக எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது வேறு. சமூகத்தின் கேலி, கிண்டல்களுக்குப் பயந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால் தான் நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்று நினைத்து சைஸ் ஸீரோவாக மெனக்கெட முயன்று கொண்டே இருப்பார்கள். மனஉளைச்சலுக்கும் ஆளாவார்கள். 

ஆணை விட பெண் அதிகம் படித்திருந்தாலும் உயர் பொறுப்பில் இருந்தாலும் அவளைச் சிறுமைப்படுத்த  சமூகம் தயங்குவதில்லை. அதை ஆங்காங்கே சிறுசிறு வசனங்கள் மூலம் அழகாகக் கூறியிருக்கிறார்கள். மிகப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய சமூகமே குண்டாக இருப்பதை அசிங்கம் என்பது போல் மக்களின் மனதில் விஷத்தைத் தூவிக் கொண்டிருக்கிறது. நாமும் அதற்குப் பலிகடாவாகிக் கொண்டிருக்கிறோம். இப்படத்தில் கதாநாயகியின் தம்பி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளின் உடல் எடையைச் சுட்டிக் காட்டுவான். யாரும் கண்டிக்காமல் இருப்பதையும் பார்க்கலாம்.  அதே போலத்தான் சமூக வலைதளங்களில், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில், திரைப்படங்களில் குண்டாக இருக்கும் பெண்களைப் பற்றின கேலியும் கிண்டலும் அதிகமாகி வருவதும் மனதளவில் பல பெண்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருவது தான் கொடுமை. இந்தப்படத்தில் அந்த மனநிலையை மாற்ற முயன்றிருக்கிறார்கள். 

செய்யும் தொழிலில் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் பொழுது அதற்கு மாற தடுமாறுவதையும் அழகாக எடுத்து இருந்தார்கள். நன்கு நினைவில் இருக்கிறது. மதுரையில் ஒலிநாடாவில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் காளான்கள் போல மதுரை டவுன்ஹால் தெருக்களில் சிறுசிறு கடைகள் முளைத்தது. பாடல்களைப் பதிவு செய்ய கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இருப்பார்கள். கடை உரிமையாளர்கள் பலரும் புது பணக்காரர்கள் ஆனார்கள். காலம் மாறியது. சிடிக்களில் பாடல்களைக் கேட்கும் தொழில்நுட்பம் வளர்ந்தது. அதில் மாற தயங்கியவர்கள் தொழிலில் நஷ்டமடைந்தார்கள். இன்று அந்தக் கடைகளே இல்லாது போய்விட்டிருக்கிறது. கதாநாயகனின் கடையும் அப்படித்தான் இப்படத்தில் ஒருகட்டத்தில் தேங்கி விடுகிறது. நன்றாக அதனைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இப்படி 'சபாஷ்' போட வைக்கும் காட்சிகள் இப்படத்தில் பல உண்டு.  

ஹரித்வார், ரிஷிகேஷ் என்று நாங்கள் சமீபத்தில் சென்று வந்த இடங்களை மீண்டும் படத்தில் பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது. குறுகிய தெருக்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நகரம், வீடுகள், கங்கா ஆற்றங்கரை என்று படம் முழுவதும் சாமரம் வீசும் காட்சிகள்.

பட நாயகன் ஷாகாவிற்குச் செல்வதாக காட்சிகளை அமைத்திருந்த இயக்குனருக்குப் பாராட்டுகள். இம்மாதிரியான காட்சிகளை இந்திப்படங்களில் தான் பார்க்க முடியும். அதிக செலவில்லாமல் ஓவர் மேக்கப், குத்தாட்டம், இரைச்சல் என்ற அக்கப்போருகள் இல்லாமல் நம் வீடுகளில் நடப்பதைப் போல் சாதாரணமாக அதுவும் நல்ல கதையுடன் அருமையாக ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்த இயக்குனர் ஷரத் கட்டாரியாவிற்கு 👏👏👏

இன்றும் பல திருமணங்களில் மனப்பொருத்தத்தை விட பணப்பொருத்தமே முதன்மையாக இருக்கிறது. திருமண உறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் அன்பினால் பலப்படுவது. அதை கதாநாயகன் உணரும் வேளையில் எல்லாம் சுபமே.

இனிமையான இந்தப் பாடல் இன்னொரு முத்தாய்ப்பு💕

Ye moh moh ke dhaage
Teri ungliyon se ja uljhe
Koi Toh Toh na laage
Kis tarah girah ye suljhe
Hai rom rom iktaara
Hai rom rom iktaara
Jo baadalon mein se guzre...

மிக நல்ல பொழுதுபோக்குப் படம். அமேசானில் காண கிடைக்கிறது.


அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...