
ஜூலை 4, 2026 அன்று தன்னுடைய 250வது சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தது அமெரிக்கா. அதன் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் பலருக்கும் உடனடியாக நினைவிற்கு வருவது ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் போன்ற பெயர்கள் தான். அவர்கள் முன்னின்று நாட்டை முன்னேற்றியவர்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் பலரும் அறிந்திராத ஒருவர், இந்நாட்டின் விடுதலைக்காகக் கடல் கடந்து, தன் சொந்த நாட்டு மன்னனை எதிர்த்து வெளிநாட்டுப் போரில் பங்கேற்று, அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரது பெயர் ‘மார்கி ட லஃபாயெட்’.
செப்டம்பர் 6 ,1757 ஆம் ஆண்டு பிரான்சின் உயர்குடி குடும்பங்களில் பிறந்தவர். வசதிகள் நிறைந்த சூழலில் வளர்ந்தவர். அவரால் ஒரு வசதியான ராணுவ வாழ்க்கையை எளிதாக அனுபவித்திருக்க முடியும். ஆனால் ஒரு பதின்பருவ இளைஞனாக, சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை ஆதரித்த அறிவொளி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.
அட்லாண்டிக் கடலுக்கு அப்பால், பிரிட்டனின் பதின்மூன்று அமெரிக்கக் காலனிகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தொடங்கியிருந்த நேரம். அவர்கள் அரசியல் சுதந்திரத்தை மட்டுமல்ல, தங்களைத் தாங்களே ஆளும் உரிமையையும் கேட்டுப் போராடிக் கொண்டிருந்தனர். ஃபிரான்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த மோதலில் நுழையவில்லை என்றாலும் 19 வயதான லஃபாயெட், அமெரிக்காவின் நிலைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டிய கொள்கைகளைக் கொண்டிருப்பதாக நம்பினார்.
பதினாறாம் லூயி மன்னரின் கட்டளைகளைப் புறக்கணித்து, தனது சொந்தப் பணத்தில் ரகசியமாக ஒரு கப்பலை வாங்கி 1777ல் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். தனது செல்வம், ராணுவ வாழ்க்கை, உயிரைக்கூட இழக்க நேரிடும் என்பதை முழுமையாக அறிந்திருந்தும் துணிந்து அந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
அமெரிக்கப் புரட்சி ஒரு கடினமான காலகட்டத்தில் இருந்த நேரத்தில் லஃபாயெட் ஃப்லடெல்பியாவிற்கு வந்து சேர்ந்தார். கான்டினென்டல் ராணுவத்திடம் தளவாடங்களும், பயிற்சியும், அனுபவமும் வாய்ந்த அதிகாரிகளும் பற்றாக்குறையாக இருந்தனர். லஃபாயெட் சம்பளம் எதுவும் கேட்காமல் தனது சேவைகளை வழங்க முன்வந்தார். அவரது அர்ப்பணிப்பையும் ராணுவத் திறனையும் அங்கீகரித்த கான்டினென்டல் காங்கிரஸ், அவரது வயதையும் பொருட்படுத்தாமல் அவரை மேஜர் ஜெனரலாக நியமித்தது.
அதன் பிறகு விரைவில் அவர் ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டனைச் சந்தித்தார்.
அவ்விருவருக்கும் இடையிலான உறவு, அமெரிக்கப் புரட்சியின் வரையறுக்கும் நட்புகளில் ஒன்றாக மாறியது. வாஷிங்டன் அவருக்கு ஒரு வழிகாட்டியாகவும் தந்தை போன்றவராகவும் ஆனார். லஃபாயெட்டும் தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த விசுவாசத்துடனும் வாஷிங்டனுக்குக் கிடைக்காத மகனாகவும் ஆனார் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செப்டம்பர் 1777ல் நடந்த பிராண்டிவைன் போரின்போது, அமெரிக்கப் படைகளின் பின்வாங்கலை ஒழுங்கமைக்க உதவிய வேளையில் லஃபாயெட் காயமடைந்தார். இருந்தும், போர்க்களத்தை உடனடியாக கைவிடாமல், தனது சக வீரர்கள் பாதுகாப்பான இடத்தை அடையும் வரை அவர்களுக்குத் தொடர்ந்து உதவினார். அவரது வீரச்செயல், அமெரிக்கப் படைகள் மற்றும் வாஷிங்டன் ஆகிய இருவரின் மரியாதையையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.
மேலும், வேலி ஃபோர்ஜில் நிலவிய கடுமையான குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குளிரில் பசி,நோயுடனும் போதுமான ஆடைகள் இன்றியும் தவித்த இருண்ட காலத்தில் அவர்களுடனே தங்கி இருந்தார்.
1779ல் ஃபிரான்சுக்குத் திரும்பி, போராடிக் கொண்டிருந்த அமெரிக்கப் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக ராணுவத்தையும் கடற்படையையும் விரிவுபடுத்துமாறு ஃபிரெஞ்சு அரசாங்கத்தை வெற்றிகரமாகச் சம்மதிக்க வைத்தார். அரசும் சம்மதித்து வீரர்களையும், கடற்படைக் கப்பல்களையும், ஆயுதங்களையும் பொருட்களையும் நிதி உதவியையும் அனுப்பியது.
இந்த ஆதரவுதான் போரின் போக்கை வியத்தகு முறையில் மாற்றி, அமெரிக்கச் சுதந்திரத்தைப் பெறுவதில் ஃபிரெஞ்சு அரசு காரணியாக அமைந்தது என்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
1781ல் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிய லஃபாயெட், வர்ஜீனியாவில் ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்த உதவினார். செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 19 வரை நடந்த யார்க்டவுன் முற்றுகை, அமெரிக்கப் புரட்சிப் போரின் கடைசி முக்கியத் தரைப்படைச் சண்டையாகக் கருதப்படுகிறது. இது ஜெனரல் சார்ல்ஸ் கார்ன்வாலிஸின் கீழ் இருந்த பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக ஃப்ராங்கோ-அமெரிக்கப் படைகள் பெற்ற மிக முக்கியமான வெற்றியாகும்.
தொடர்ந்து பல காலங்கள் நீடித்த போரினால் 1781ஆம் ஆண்டளவில் இரு தரப்பினரும் சோர்வடைந்திருந்தனர். அமெரிக்கா, ஐரோப்பா என இரண்டு முனைகளில் போரிட்டுக் கொண்டிருந்த பிரிட்டிஷார், தங்கள் துருப்புக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதில் சிரமப்பட்டனர். ஃபிரெஞ்சு அரசின் உதவி இருந்தபோதிலும், அமெரிக்கர்கள் உணவுப் பற்றாக்குறையையும் குறைந்த மன உறுதியையும் எதிர்கொண்டனர். ‘சரட்டோகா’ போர்களுக்குப் பிறகு, 1778ல் ஃப்ரான்ஸ் அமெரிக்கர்களுடன் முறையாகக் கூட்டணி அமைத்தது.
யார்க்டவுன் முற்றுகையின்போது, ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையிலான அமெரிக்கப் படைகள், ‘காம்ட ட ரோஷாம்போ’ தலைமையிலான ஃபிரெஞ்சு படைகளுடன் இணைந்தன. அதே நேரத்தில், அட்மிரல் ‘ட கிராஸ்’-ன் தலைமையிலான சக்திவாய்ந்த ஃபிரெஞ்சு கடற்படை, பிரிட்டிஷ் படைகள் கடல் வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுத்தது.
நிலத்திலும் கடலிலும் சூழப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் தளபதி சார்ல்ஸ் கார்ன்வாலிஸ் அக்டோபர் 19, 1781 அன்று சரணடைந்தார்.
அதைத் தொடர்ந்து 1783ல் பாரிஸ் உடன்படிக்கையுடன் போர் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தபோதிலும், யார்க்டவுன் பெரும் சண்டைகளைத் திறம்பட முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்கச் சுதந்திரத்தைப் பிரிட்டன் அங்கீகரிப்பதற்கு வழி வகுத்தது.
நவீன வரலாற்றில் வெற்றிகரமான சர்வதேச ராணுவ ஒத்துழைப்பின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக ‘யார்க்டவுன் போர்’ விளங்குகிறது.
அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு, லஃபாயெட் ஃப்ரான்சுக்குத் திரும்பினார். அங்கு அவர் அரசியலமைப்பு அரசாங்கத்தை ஆதரித்து ஃபிரெஞ்சு புரட்சியின் ஆரம்பக் கட்டங்களில் ஈடுபட்டார். தனிமனித உரிமைகளுக்காகப் போராடினார். மத சகிப்புத்தன்மையையும் அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து படிப்படியான விடுதலையையும் ஊக்குவித்தார். தன்னிச்சையான சிறைவாசத்தையும் எதிர்த்தார்.
இறுதியில், புரட்சிகர ஃபிரான்சின் அரசியல் கொந்தளிப்பு, அவர் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இது அந்தக் காலகட்ட அரசியல் சீர்திருத்தத்தின் சிக்கலான, ஆபத்தான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஃபிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு 1824ல் ஐந்தாவது அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்றோ, லஃபாயெட்டை மீண்டும் ஒருமுறை அமெரிக்காவிற்கு வருகை தருமாறு அழைத்தார்.
அப்பொழுது லஃபாயெட்டிற்கு கிடைத்த வரவேற்பு அசாதாரணமானதாக இருந்தது. 13 மாதங்களுக்கு, அமெரிக்காவை உருவாக்கியிருந்த 24 மாநிலங்கள் வழியாக அவர் பயணம் செய்தார். மாபெரும் மக்கள் கூட்டம் அணிவகுப்புகள், விழாக்கள், விருந்துகள் என பொதுக் கொண்டாட்டங்களுடன் அவரை வரவேற்றது. அமெரிக்கர்களுக்கு அவர் வெறும் ஒரு ஃபிரெஞ்சு தளபதியாக இருக்கவில்லை. அவர்களில் ஒருவராக ஆகிவிட்டார்.
1783ல் பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் பிரிட்டன் அமெரிக்காவை முறையாக அங்கீகரிப்பதற்கு முன்பு, பல ஆண்டுகள் கடுமையான போர்கள் தொடர்ந்தன. போர்க்களங்களில் லஃபாயெட்டின் தலைமைத்துவம், ஜார்ஜ் வாஷிங்டனுடனான அவரது நெருங்கிய கூட்டாண்மை, ஃபிரெஞ்சு அரசின் ஆதரவை வலுப்படுத்துவதில் அவர் பெற்ற வெற்றி ஆகியவை அமெரிக்கச் சுதந்திரக் கனவை நனவாக்க உதவின. அவரது சேவையைப் பாராட்டி, காங்கிரஸ் அவருக்குத் தாராளமான நிதி விருதையும் பொது நிலத்தையும் வழங்கி கௌரவித்தது. 2002ல் ஒரு சில தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்புரிமையான கௌரவ அமெரிக்கக் குடியுரிமையையும் வழங்கிச் சிறப்பித்தது.
எனவே, இந்த 250வது ஆண்டு நிறைவு விழா, அமெரிக்க “Founding Fathers” மட்டுமல்லாமல், அவர்களின் வெற்றியைச் சாத்தியமாக்கிய சர்வதேச நட்புறவுகளையும் கூட்டணிகளையும் கொண்டாடுகிறது. அந்தக் கூட்டாளிகளில், ‘மார்கி டி லஃபாயெட்டை விட வேறு எந்த வெளிநாட்டு ஆளுமையும் இவ்வளவு அன்புடன் நினைவுகூரப்படவில்லை.
இன்று அமெரிக்கா முழுவதும், நகரங்கள், மாவட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், தெருக்கள், பொது நினைவுச்சின்னங்களில் லஃபாயெட்டின் பெயர் நிலைத்து நிற்கிறது.
அவரது கதை, தைரியம், லட்சியவாதம், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் சின்னமாகத் தொடர்ந்து விளங்குகிறது. மிக முக்கியமாக, அமெரிக்காவின் பிறப்பு, சுதந்திரத்தை நாடிய அமெரிக்கர்களால் மட்டுமல்ல, அந்த லட்சியங்களுக்கு ஆதரவு தேவை என்று நம்பிய வெளிநாட்டு நண்பர்களாலும் வடிவமைக்கப்பட்டது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
மக்கள் தனிப்பட்ட வசதியை விட கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கும்போதும், நாடுகள் ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்படும்போதும் வரலாற்றின் மகத்தான தருணங்கள் எழுகின்றன. ஒரு இளம் ஃபிரெஞ்சு பிரபுவிலிருந்து அமெரிக்காவின் மிகவும் போற்றப்படும் நாயகர்களில் ஒருவராக உயர்ந்த அவருடைய பயணம், சுதந்திரம், நட்பு, பகிரப்பட்ட பொறுப்பு ஆகிய லட்சியங்கள் எல்லைகள் கடந்தும் நிற்க முடியும் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.
சுதந்திரமான எதிர்காலம் குறித்த ஒரு தொலைநோக்குப் பார்வைக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்களாலேயே நீடித்த மாற்றம் பெரும்பாலும் சாத்தியமாகிறது. அந்த வகையில் அமெரிக்கச் சுதந்திரத்திற்கு வித்திட்ட ‘லஃபாயெட்’டின் வரலாற்றை அறிந்து கொள்வதும் மிக முக்கியமானதாகிறது.




