Tuesday, February 24, 2026

அமைதி நடந்த அகண்ட நிலம்

சொல்வனம் இதழ் 361ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை அமைதி நடந்த அகண்ட நிலம் – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026

உலகின் மிகச் சக்திவாய்ந்த ஜனநாயக நாடு கடந்த சில ஆண்டுகளாக கடுமையான அரசியல் பிளவுகள், குடியேற்ற அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள், வேலைவாய்ப்பு, பொருளாதார அச்சங்கள், சந்தை ஏற்றத் தாழ்வுகள், ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் ஆவணங்கள் தொடர்பான கேள்விகள், முன்னாள், இந்நாள் அரசியல் தலைவர்களின் நடத்தைகள் குறித்த சர்ச்சைகள் போன்ற பல கலக்கங்களின் மையமாக இருந்து வருகிறது.

செய்தித் தலைப்புகள் பெரும்பாலும் மோதல், குற்றச்சாட்டு, விசாரணை, எதிர்ப்பு, எதிர்வினைகளால் நிரம்ப, மக்கள் சமூக ஊடகங்களில் கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்ததாகக் கூறினர். சிலர் மாற்றத்திற்கான ஆவலை வெளிப்படுத்தினர். அத்தகைய சூழலில் கோஷங்களும் கடும் விவாதங்களும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்த தருணத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிக்காமல், எந்த எதிர்ப்புக் கோஷமும் எழுப்பாமல், சில புத்த பிக்குகள் மெதுவாக, மௌனமாக நடக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் நடை வேகமானது அல்ல. அவர்களின் செய்தி கூச்சலானது அல்ல. ஆனால் அவர்கள் எடுத்த ஒவ்வொரு அடியும் ஒரு கேள்வியை எழுப்பியது.

“கலக்கத்தின் மத்தியில் அமைதி எங்கு தொடங்க வேண்டும்?”

அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சிதான் “Walk for Peace” எனும் 108 நாள் ஆன்மீகப் பயணம்.

2025 அக்டோபர் மாத இறுதியில் டெக்சாஸ் மாநிலம் ஃபோர்ட் வர்த் அருகிலுள்ள ‘Hương Đạo Vipassana Bhavana Center’ தியான மையத்திலிருந்து இந்தப் பயணம் தொடங்கியது. பயணத்தை வழிநடத்தியவர் மதிப்பிற்குரிய பிக்கு ‘பன்னகரா’. அவருடன் பிற நாடுகளில் இருந்தும் சுமார் 18 புத்த பிக்குகள் இணைந்தனர். புத்த மதத்தின் இரண்டு முக்கிய கிளைகளில் ஒன்றான “தேரவத பௌத்த”ப் பிரிவைச் சார்ந்தவர்கள். இலங்கை, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் இன்றும் நடைமுறையில் உள்ளது. “தேரவத” என்ற சொல்லுக்கு “மூத்தவர்களின் போதனை” என்று பொருள். சித்தார்த்த கௌதம புத்தரின் ஆரம்பக்கால போதனைகளைப் பாதுகாத்து வழிநடத்திச் செல்கிறது இந்தப் பிரிவு. ‘மகாயானம்’ மற்றொரு பிரிவாகும்.

பயணத்தை வழிநடத்திய மதிப்பிற்குரிய பிக்கு ‘பன்னகரா’அவர்கள் கூறியபடி, “உலகளவில் அதிகரித்து வரும் கோபம், பதட்டம், பிரிவு உணர்வு, அமைதியின்மை போன்ற சூழலில் மனிதர்கள் தங்கள் உள்ளார்ந்த அமைதியை மறந்து வருகிறார்கள் என்ற கவலை புரிந்தது. அமைதியை வெளியிலிருந்து திணிக்க முடியாது. அது உள்ளத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும்” என்ற புத்த மதக் கருத்தைச் செயலால் காட்ட வேண்டும் என்ற எண்ணமே அடிப்படை ஊக்கமாக, ஒரு மௌனப்பயணம் மேற்கொண்டதாக கூறினார். 108 நாட்கள். 2,300 மைல்கள். பல மாநிலங்கள் வழியாக (டெக்சாஸ் → லூசியானா → மிசிசிப்பி → அலபாமா → ஜார்ஜியா → கரோலினாக்கள் → விர்ஜினியா → வாஷிங்டன் டி.சி) 2026 பிப்ரவரி 10ஆம்தேதி தலைநகரை அடைந்தனர்.

தினமும் 15 முதல் 20 மைல்கள் வரை நடந்து ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே உணவருந்தினர். பலர் காலணியின்றி நடந்தனர்!

நவம்பர் 19, 2025ல் ஹூஸ்டன் அருகே நடந்த விபத்தில், ஒரு வாகனம் மோதியதில் சில பிக்குகள் காயமடைந்தனர். குறிப்பாக Maha Dam Phommasan அவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டதால் கீழ்கால் பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பழிவாங்கும் பேச்சோ குற்றச்சாட்டோ இல்லாமல், “கருணை, மன்னிப்பு” என்ற தங்கள் ஆன்மிகக் கோட்பாட்டை பிக்குகள் தொடர்ந்து வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவம் பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், பின்னர் அவர் மீண்டும் நடைக்குழுவில் இணைந்தது மக்கள் மத்தியில் புத்த பிக்குகளுக்கு ஆழமான மரியாதையையும் ஆதரவையும் உருவாக்கியது. பல நகரங்களில் வரவேற்புக்கூட்டமும் அதிகரிக்கத் துவங்கியது.

இந்தப் பயணம் ‘விபஷ்யனா’ தியானத்தின் ஒரு நீண்ட வடிவமாகக் கருதப்பட்டு ஒவ்வொரு அடியும் விழிப்புணர்வுடன் வைக்கப்பட்டது. கருணையையும் பொறுமையையும் வெளிப்படுத்தி உடல் கஷ்டத்தை ஏற்றுக்கொள்வது மன பயிற்சியின் ஒரு பகுதியே என்று தங்களின் நடைப்பயணத்தின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். விபஷ்யனா தியானத்தின் அடிப்படை கொள்கைகளான விழிப்புணர்வு, கருணை, அன்பு இவை சமூகத்தில் பரவ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நடந்தார்கள். தங்கள் நடைப்பயணம் அரசியல் எதிர்ப்பல்ல என்று அவர்கள் வழியெங்கும் தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தனர்.

சமூக ஊடகங்களில் இந்தப் பயணம் பரவலாகப் பகிரப்பட்டு பல இடங்களில் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பைப் பெற்றது. சிறிய நகரங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையோரங்களில் காத்திருந்தனர். பூங்கொத்துகள், பழங்கள், தண்ணீர், கம்பளிகள், வாழ்த்து அட்டைகளைக் கொடுத்து வணங்கி நின்றனர். தினமும் பல படங்களை சமூக வலைதளங்களில் போட்டு கண்ணீர் உருகினர். மிசிசிப்பி, அலபாமா, கரோலினா பகுதிகளில் குளிர்கால மழை, காற்று, பனி என்றிருந்தாலும் வழக்கமான தியான ஒழுங்கைத் தளர்த்தாமல் அவர்கள் நடையை மேற்கொண்ட மனஉறுதியைக் கண்டு விக்கித்து நின்றது அமெரிக்கா! லூசியானா, ஜார்ஜியா, தென் கரோலினா கிராமப்புறங்களில் குழந்தைகள் கேள்விகள் கேட்டபோது தியானத்தைப் பற்றிய எளிதான விளக்கத்தைச் சிரித்தபடி கூறியதும் கனிவுடன் தியான அமர்வில் பங்கேற்றவர்களுடன் உரையாடியதையும் பார்த்தவர்கள் உருகி உருகி பதிவுகளைப் போட, அவர்களைப் பின்தொடரும் கூட்டமும் பெருமளவில் அதிகரிக்க ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் “இவர்கள் யார்? எந்த இயக்கம்? அரசியல் தொடர்பா” என்று கேள்விகளை எழுப்பிய மக்களும் பிக்குகளின் அமைதி நடைப்பயண உரையைக் கேட்ட பின்பு மனம் மாறினர். எந்த அரசியல் கட்சியையும் எதிர்க்காமல், எந்த நிர்வாகத்தையும் குறிவைக்காமல், எந்த சட்டத்தையும் மாற்றக்கோரி கோஷமிடாமல், எந்த மதத்தையும் இழிவுபடுத்தாமல் மக்களின் அமைதியைத் தேடும் வழியை போதிப்பதை ஒன்றே நோக்கமாகக் கொண்டு தொடர்ந்தாலும் ஜியார்ஜியா மாநிலத்தில் ஓரிரு இடங்களில் தீவிர கிறிஸ்தவ கும்பல் எங்கள் இறைவன் ஏசப்பா பதாகைகளை ஏந்திக் கொண்டு கூச்சலிட்டதும் ஒருவர் தொடர்ந்து வந்து அவர்களை இடைமறிக்க, “உங்கள் பாதையில் நீங்கள் செல்லுங்கள். எங்கள் பாதையில் நாங்கள் அமைதியாகச் செல்கிறோம்” என்று தொடர்ந்து பன்னகரா கூறிக்கொண்டே சென்றதைப் பார்த்த ஊடகவாசிகள் பலரும் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுவதாகப் பதிவிட்டனர். கண்டனங்களையும் தெரிவித்தனர். இது தான் அமெரிக்கா.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவைத்தொடர்ந்து மாநில காவல்துறையினரின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருந்தது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதுவும் குடியேற்ற அமலாக்கத்துறையின் அராஜகத்தைக் கண்டு மனம் கொந்தளித்துப் போயிருந்தவர்களுக்கு இது மிகவும் ஆறுதலைத் தந்தது என்று கூட சொல்லலாம்.

இப்படியாக இந்த நடைப்பயணம் பெரும் ஆதரவுடனும் ஆச்சரியத்துடனும் கடும் பனியிலும் தொடர, பிப்ரவரி 10,2026ஆம் தேதி தலைநகர் வாஷிங்டன் டி.சி.யை புத்த பிக்குகள் அடைந்தனர். அவர்கள் நகருக்குள் நுழைந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து வரவேற்றனர். பலரும் அமைதியாகப் பின்தொடர்ந்து சென்றனர். அந்தக் காட்சியே அத்தனை அழகாக இருந்தது.

Washington National Cathedral-ல் நடைபெற்ற இடைமத நிகழ்வில் பல மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர். பிற மதத் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டுவந்த Interfaith நிகழ்வுகள் குறித்து உள்ளூர் அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டியதாகச் செய்திக் குறிப்புகள் தெரிவித்தன. அமைதி, கருணை, பொறுமை குறித்து கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இது மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் அடையாளமாகப் பலராலும் பார்க்கப்பட்டது.

American University-ல் பெரிய அளவிலான தியான உரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். “அமைதி உள்ளத்தில் இருந்து தொடங்க வேண்டும்” என்ற மையச் செய்தி மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அரசியல் கேள்விகளுக்கு நேரடி கருத்து வழங்காமல் ஆன்மீக விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது. இங்கு நடந்த Mindfulness, தியான நிகழ்வு மாணவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

பிக்குகள் சில காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்து ‘Vesak’ தினத்தை கூட்டாட்சி விடுமுறை நாளாக அங்கீகரிக்க வேண்டுகோளையும் வைத்தனர்.

பெரும்பாலான தேசிய ஊடகங்கள் அவர்கள் வாஷிங்டனை அடைந்தபின் தான் செய்திகளை வெளியிட்டன. ஆனால் ஆரம்ப கட்டத்தில் பரவலான நேரடி ஒளிபரப்பு குறைவாக இருந்தது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். பயணம் தொடங்கிய டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளூர் செய்திச் சேனல் ‘WFAA-TV’ (டாலஸ்-இல் உள்ள ABC இணைப்பு சேனல்) பயணம் தொடங்கிய செய்தியை ஆரம்பத்தில் “local human-interest story” வகையில் வெளியிட்டுள்ளது.

இது மோதலோ, அரசியல் போராட்டமோ அல்ல. ஊடகங்கள் பெரும்பாலும் மோதல் மையப்படுத்தப்பட்ட செய்திகளுக்குத் தான் முன்னுரிமை அளிக்கும். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக ஒரு பிரபலமானவரின் அம்மா தொலைந்து போனதைப் பற்றி பேசிய ‘ப்ரைம் டைம் abcnews உலகச் செய்திகள்’ மறந்தும் கூட அமைதிப்பயணத்தைப் பற்றியோ புத்த பிக்குகளைப் பற்றியோ வாய் திறக்கவில்லையே?! மக்களும் தங்கள் அதிருப்தியை ஊடகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

பயணம் வாஷிங்டன் டி.சி.யை அணுகியபோது தேசிய, பிராந்திய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. ‘FOX 5 DC’ வாஷிங்டன் பகுதியில் அவர்கள் வருகையை நேரடியாக ஒளிபரப்பியது. அதே சமயம், ‘AP News’ அவர்கள் வாஷிங்டனை அடைந்தபின் விரிவான செய்தி வெளியிட்டது. AP செய்தி வெளியானதும், பல தேசிய, சர்வதேச ஊடகங்கள் அதனை மேற்கோள் காட்டின. ஆனால் சமூக ஊடகங்களில் முதலில் ‘Huong Dao Vipassana Bhavana Center’ன் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலமாக மட்டுமே செய்திகள் வெளியானது.

இந்த நீண்ட நடைப்பயணத்தின் மத்தியில், மனிதர்களின் மனங்களை வென்ற இன்னொரு “சின்னப் பாத்திரம்” கூடவே பயணித்தது. அது தான் ‘அலோகா’ என்ற பைரவர். இந்தியாவில் பிக்குகள் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபொழுது அவர்களுடன் கூடவே பயணித்திருக்கிறது. இப்பொழுது அமெரிக்கப்பிரஜையாகி இங்கும் இவர்களுடன் கம்பீரமாக நடந்தது. அது ஒரு சாதாரண செல்லப்பிராணி மட்டும் அல்ல. அமைதியின் சின்னம் போல மாறியது. அதற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது. சும்மாவே செல்லப்பிராணிகள் என்றால் இங்கே உயிரை விடுவார்கள். இப்பொழுது கேட்கவா வேண்டும்? சில நேரங்களில் அது முன்னால் ஓடி வழிகாட்டுவது போல இருந்தது. சில நேரங்களில் சந்நியாசிகளின் அருகில் நடந்து அவர்களின் வேகத்தைப் பின்பற்றியது. வெயில், மழை,  குளிர், கூட்டம் என எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருந்ததைப் பார்த்து பேசாமல் இதற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசை வழங்கலாம் என்று ஊடகங்களில் கொண்டாடினார்கள். குழந்தைகள் அதனைத் தொட்டு மகிழ, “Peace Dog”, “Dharma Dog”, “Walking Monk’s Companion” போன்ற பெயர்களில் அது வைரலானது. வாஷிங்டன் டிசி சென்றபோது, பல புகைப்படங்களில் அந்த நாய் முன்புறம் அல்லது பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தது பலராலும் கவனிக்கப்பட்டது. அலோகா இந்த இயக்கத்திற்கு ஓர் உயிர்த்தன்மையை சேர்த்தது என்றே கூறலாம். அரசியல், கருத்தியல் வாதங்களை விட, இந்தச் சிறிய, எளியகாட்சியால் பெரும்பாலான மக்கள் ஈர்க்கப்பட்டனர்.

அது எந்த அரசியல் வாசகமும் பேசவில்லை. எந்த பேனரும் தூக்கவில்லை. ஆனால் ஒரு செய்தியை மட்டும் சொல்லாமல் சொன்னது. “அமைதி பேச வேண்டியதில்லை. அதன் இருப்பே போதுமானது.” 

அதுவே இந்த நடைப்பயணத்தின் ஆழமான தத்துவம்.

இதனால் அரசியல் மாற்றங்கள் நிகழுமா?

அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் சட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தும். ஆன்மீக இயக்கங்கள் நெறி,மனச்சாட்சி, கருணை போன்ற சொற்களை உரையாடலுக்குள் கொண்டு வரும். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் மனநிலையை உணர வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த 108 நாள் நடைப்பயணம் நமக்கு உணர்த்தியதெல்லாம் அமைதி எப்பொழுதும் வெளிப்படாது. அது ஒரு செயல். ஒரு நிலை. ஒரு நடையைப் போல மெதுவாகப் பரவி மனங்களைக் கனிவாகச் சேர்க்கிறது. கருணை என்பது செயலில் தெரியும். காயமடைந்த பிக்குகளை வழியனுப்புதல், நாயைப் பாதுகாப்பு வாகனத்தில் கொண்டு செல்லுதல், மக்களுக்கு நேரில் அன்பு காட்டுதல் போன்றவற்றின் மூலமாக பிக்குகள் அதை உணர்த்திக் கொண்டே இருந்தனர். பொறுமை வெறும் வார்த்தை அல்ல. அது 2,300 மைல்கள் நடந்து உரைத்த ஒரு நிகழ்வு.
“உள்ளார்ந்த அமைதி இல்லாத இடத்தில் எந்த சட்டமும், அதிகாரமும் உலகத்தை மாற்ற முடியாது. மாற்றம் ஆரம்பமாகும் இடம் உங்கள் மனம்.”

அதுவே இந்த நடைப்பயணத்தின் மெய்நிகர் செய்தி.

கோபம், குழப்பம், வெறுப்பு, பிரிவுகளால் நிரம்பிய உலகில் ஒரு மென்மையான நடையோடு, ஒரு மௌனமான பார்வையோடு, ஒரு சின்ன அன்புத் துளியோடு மனங்களை மாற்ற முடியுமென்று அவர்கள் நமக்கு நினைவூட்டியிருக்கிறார்கள். 

நாம் அனைவரும் உணர வேண்டியதும் அதுவே. உள்ளார்ந்த அமைதியை முதலில் வளர்த்தால் உலகெங்கும் அது பரவும். 

Shāntiḥ paramo dharmaḥ.
அமைதியே மிகச் சிறந்த தர்மம்.








அரசியலின் விலை: அழியும் விளைச்சலும் விவசாயியும்




சொல்வனம் இதழ் 360ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை : அரசியலின் விலை: அழியும் விளைச்சலும் விவசாயியும் – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026


அமெரிக்காவின் விவசாயப் பண்ணைகள் அதன் சொந்த மக்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், தானியங்கள், இறைச்சி, பால் மற்றும் பிற உணவுப்பொருட்களை உலக சந்தைகளுக்கும் வழங்கி வருகின்றன. அதுவும், சோளம், சோயாபீன்ஸ், கோதுமை ஆகியவற்றின் பரந்த வயல்கள் நீண்ட காலமாக மிகுதியையும் நிலைத்தன்மையையும் அடையாளப்படுத்தினாலும் இந்த பிம்பத்திற்குப் பின்னால், அமெரிக்க விவசாயம் மெதுவாக உருவாகிக்கொண்டிருக்கும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதைச் சமீபத்தில் ஊடகச் செய்திகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள், நிலையற்ற உலகளாவிய வர்த்தகம், காலநிலை உச்சநிலைகள், தொழிலாளர் பற்றாக்குறை, மாறிவரும் அரசாங்கக் கொள்கைகள் ஒரு காலத்தில் நம்பகமானதாகக் கருதப்பட்ட ஒரு அமைப்பைச் சீர்குலைத்துள்ளன.

பல தலைமுறைகளாக உலகை உணவூட்டிய அமெரிக்க விவசாயிகள், உழைப்பு நிச்சயம் மதிக்கப்படும் என்ற நம்பிக்கையில் விதை விதைத்தவர்கள். இன்று அந்த நம்பிக்கை சிதறிக் கொண்டிருக்கிறது. விளைந்த பயிர்களை வாங்குபவர் இன்றி களஞ்சியங்கள் நிரம்பியிருக்க, விலையோ படுபாதாளத்தில்! மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் இப்போது தங்களின் உழைப்பின் மதிப்பு வாஷிங்டனில் எடுக்கப்படும் அரசியல் முடிவுகளால் நிர்ணயிக்கப்படுவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மழையும் வெயிலும் மட்டுமே விவசாயத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்த காலம் முடிந்து, இன்று வர்த்தக வரிகள், அரசியல் மோதல்கள், உலகளாவிய போட்டிகள் ஒரு விவசாயியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதில் இருப்பது அரசியல் அன்றி வேறு எதுவும் இல்லை.

சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ்-ல் வெளியான கட்டுரை ஒன்றின் சாராம்சத்திலிருந்து அறிந்து கொண்ட வருத்தமான செய்தி தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.

அதிகளவில் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. முக்கிய பயிர்களில் சோளம், சோயாபீன்ஸ், கோதுமை, அரிசி, பருத்தி ஆகியவை அடங்கும். கால்நடை வளர்ப்பில் மாட்டிறைச்சி, கோழி, பன்றி இறைச்சி, பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தியில் பெரும்பகுதி ஏற்றுமதி சார்ந்தது. அதாவது விவசாயிகள் நிலையான சர்வதேச சந்தைகளைப் பெரிதும் நம்பியுள்ளனர்.

‘மிசிசிப்பி டெல்டா’ அமெரிக்காவின் மிகவும் வளமான விவசாயப் பகுதிகளில் ஒன்றாகும். இங்குள்ள விவசாயிகள் பயிர் விலைகளில், குறிப்பாக அரிசியில் கடுமையான சரிவை எதிர்கொண்டு வருகின்றனர். பல விவசாயிகள் தங்கள் பயிர்களை வளர்ப்பதற்கான செலவை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு விலைகள் மிகவும் குறைவாக இருப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

‘ஜாக் வெஸ்டர்ஃபீல்ட்’ என்ற நெல் விவசாயி, 2.2 மில்லியன் பவுண்டுகள்(கிட்டத்தட்ட 997903.214 கிலோ) அரிசியுடன் சிக்கித் தவிப்பதாகவும் அவரால் லாபகரமாக விற்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதிக உள்ளீட்டு செலவுகள், பலவீனமான சந்தைகள் விவசாயிகளுக்கு எந்த சாத்தியமான வழிகளையும் இல்லாமல் செய்துள்ளன.

அமெரிக்கா விதிக்கும் வர்த்தக வரிகள் (tariffs) பல நேரங்களில் பிற நாடுகளின் பதிலடி வரிகளைத் தூண்டி அதன் முதல் பாதிப்பு விவசாயத்தில்தான் தெரிகிறது. அமெரிக்க அரிசி, சோயா பீன் போன்ற பயிர்களுக்கு வெளிநாடுகளில் விலை உயர்வதால், வாங்குபவர்கள் பிரேசில், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாறுகிறார்கள். இதனால் அமெரிக்காவின் வேளாண் ஏற்றுமதி குறைந்து விற்கப்படாத பயிர்கள் நாட்டுக்குள் குவிந்து, சந்தையில் oversupply உருவாகியுள்ளது. அதன் விளைவாக விலைகள் உற்பத்திச் செலவிற்கும் கீழே சரிந்து நிதி இழப்பாக மாறியுள்ளது.

அதே நேரத்தில், கட்டண வரிகள், வர்த்தக மோதல்கள் காரணமாக உரம், இயந்திரப் பாகங்கள், எரிபொருள் போன்ற விவசாய உள்ளீடுகளின் விலைகளும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஒரே நேரத்தில் குறைந்த விற்பனை விலை, உயர்ந்த உற்பத்திச் செலவு என்ற இரட்டை சிக்கலில் சிக்கியுள்ளார்கள்.

அரசியல் ரீதியாக, இறக்குமதி வரிகள் “தேசிய பாதுகாப்பிற்காக”, “உள்நாட்டுத் தொழில்கள் பாதுகாப்பிற்காக” என ட்ரம்ப் முழங்கினாலும், அதன் உடனடி பலி ஏற்றுமதி சார்ந்த விவசாயிகள் தான். இதன் காரணமாக பயிர்களை விற்கவே முடியாத நிலையில் சில விவசாயிகள் நஷ்டத்தில் விற்பதற்குப் பதிலாக பயிர்களை அழிக்கவோ, அழுக விடவோ பரிசீலித்து வருகின்றனர். “பயிர்களை அழிக்க அரசு இழப்பீடு வழங்க வேண்டும். விலைகளை நிலைப்படுத்த உற்பத்தியைக் குறைக்க வேண்டும்” என்ற யோசனைகளையும் பரிசீலிக்கின்றனர். இது 1980களின் விவசாய நெருக்கடியில் பயன்படுத்தப்பட்ட ஒரு நடைமுறை தான். மிசிசிப்பியின் வரிசை பயிர்களின் மதிப்பு 2024 முதல் 2025 வரை 9% சரிந்தது. அதே நேரத்தில் 2025ம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த விவசாய உற்பத்தி $9.5 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உணவு பற்றாக்குறையால் அல்ல, வர்த்தக அரசியலால் உருவான சந்தை சிதைவு.

இந்த நெருக்கடி ஒரே இரவில் உருவாகவில்லை. வானிலை, சந்தை சுழற்சிகளால் மட்டுமே என்றும் இதைக் குறுக்கி விட முடியாது. அரசாங்க கொள்கைகள் – குறிப்பாக வர்த்தகம், தொழிலாளர், எரிசக்தி, சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை என அனைத்தும் தீர்க்கமான பங்கைக் கொண்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் கீழ், விவசாயம் பரந்த அரசியல் மற்றும் பொருளாதார உத்திகளில் ஒரு மைய அரங்கமாகவும் மாறியுள்ளது. உள்நாட்டுத் தொழில்களையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளாக விளம்பரப்படுத்தப்பட்ட கட்டண வரிகள், குடியேற்ற அமலாக்கம், ஒழுங்குமுறை மாற்றக்கொள்கைகளால் விவசாயத்தில் அவற்றின் விளைவுகள் சிக்கலாக, சீரற்றவையாக, ஆழமாக உணரப்பட்டு வருவதை தினமும் வெளிவரும் செய்திகள் நிரூபித்து வருகின்றன.

இங்கு இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயம் மூலதனம் மிகுந்ததும் கூட. உலகின் பல பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் பாரம்பரிய சிறுதொழில் விவசாயத்தைப் போலல்லாமல், அமெரிக்க விவசாயம் மேம்பட்ட இயந்திரங்கள், வணிக உள்ளீடுகள், கடன் அமைப்புகள், காப்பீட்டுத் திட்டங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை நம்பியுள்ளது. இதன் விளைவாக, விலைகள், வட்டி விகிதங்கள், வர்த்தகக் கொள்கை, எரிசக்தி செலவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நவீன விவசாயத்திற்குத் தேவையான நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ உள்ளது. தற்பொழுது அதிகரித்து வரும் நிலத்தின் விலைகளால் சிறு/புதிய விவசாயிகள் இந்தத் துறையில் நுழைவதும் கடினமாகியுள்ளது. பாசனத்திற்குத் தேவையான நீர் மழைப்பொழிவு, ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர்நிலைகளைச் சார்ந்திருப்பதால் வறட்சி, அதிகப்படியான பயன்பாடு, காலநிலை மாற்றம் ஆகியவை நீர் கிடைக்கும் தன்மையைக் குறைக்கின்றன. அதுவும் குறிப்பாக மேற்கத்திய மாநிலங்களில் நீர் உரிமைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் வணிக கலப்பின அல்லது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட விலை உயர்ந்த விதைகளையே வாங்குகிறார்கள். இந்த விதைகள் அதிக மகசூல் பெறவும் பூச்சிகள், வறட்சியை எதிர்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு பெரும்பாலும் சட்டப்பூர்வமாக மீண்டும் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரிய விதை நிறுவனங்களைச் சார்ந்திருப்பதை அதிகரிக்கின்றன.

நவீன விளைச்சலுக்கு அவசியமான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்களும் பயிர்களைக் காக்கும் களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகளும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் வெளிநாட்டுச் சந்தைகள், சுரங்கம், சர்வதேச வர்த்தகத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் மட்டுமில்லாமல் புவிசார் அரசியல் இடையூறுகளால் இயக்கப்படும் விலை உயர்வுகள் நேரடியாக விவசாயச் செலவுகளை உயர்த்துகின்றன.

தற்பொழுதைய நவீன விவசாய உலகம் டிராக்டர்கள், அறுவடை, நடவு இயந்திரங்கள், நீர்ப்பாசன அமைப்புகள், டிஜிட்டல் கருவிகள் என விலை உயர்ந்த இயந்திரங்களைச் சார்ந்துள்ளது. பொதுவாக கடன்கள் மூலம் அதற்கான நிதியளிக்கப்பட்டாலும் அதன் வட்டி விகிதங்கள், கட்டணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பல அமெரிக்க பண்ணைகள் புலம்பெயர்ந்த, பருவகால தொழிலாளர்களை, குறிப்பாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களுக்கு நம்பியுள்ளன. ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கையால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடு.

இதைத்தவிர, பெரும்பாலான விவசாயிகள் வானிலை, விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயங்களை நிர்வகிக்க, வங்கிக் கடன்கள், அரசாங்க ஆதரவு கடன், பயிர் காப்பீட்டுத் திட்டங்களைச் சார்ந்துள்ளனர்.

மேலும் நீர்ப்பாசனம், இயந்திரங்களை இயக்க தேவையான டீசல் எரிபொருள், விவசாய சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்துக்கான எரிசக்தி விலை ஏற்ற இறக்கம், உள்கட்டமைப்பு சிக்கல்கள், தொழிலாளர் இடையூறுகள் என அனைத்தும் நேரடியாக பண்ணை லாபத்தை பாதிக்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் பலவித சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டு வருவதால் மூலதனமும் தொழில்நுட்பத்தை அணுகக்கூடிய பெரிய விவசாய வணிகங்களும் மட்டுமே விரிவடைந்து வருகின்றன. அதே நேரத்தில் சிறிய, நடுத்தர குடும்ப பண்ணைகள் உயிர்வாழவே போராடுகின்றன. பண்ணைகளை ஒருங்கிணைப்பதால் கிராமப்புற சமூகங்களும் குறைந்து வருகின்றன.

நீண்ட காலமாக நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் அமெரிக்காவின் விவசாயப் பண்ணைகள் முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை தற்பொழுது எதிர்கொண்டுள்ளன. வாக்காளர்கள் தொடர்ந்து குடியரசுக் கட்சியின் தலைமையை ஆதரித்து வரும் மையப்பகுதிகளில் கூட விரக்தி தெளிவாகத் தெரிகிறது. பயிர் விலைகளை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்ட எத்தனால் கொள்கைகள், கட்டுப்பாடு நீக்கம், மானியங்களுக்கு ஆதரவளிப்பதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். போராடும் விவசாயிகளுக்கு குறுகிய கால நிவாரணமாக 12 பில்லியன் டாலர் உதவி போன்ற திட்டங்களை அவருக்கு வாக்களித்த அயோவா, மத்திய மேற்கு விவசாயிகள் பெரிதும் பாராட்டுகிறார்கள். கிராமப்புற பிரச்சினைகளில் ட்ரம்ப்பின் கவனத்தையும், உதவிக்கும் பலர் நன்றி தெரிவித்தாலும் தீர்க்கப்படாத வர்த்தகம், சந்தை சவால்கள் குறித்து விரக்திகள் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

“அவர் எங்களைப் பற்றி பேசுகிறார் என்பது முக்கியம் என்றாலும் பயிர்களுக்கான தேவையைக் கொண்டுவரும் ஒப்பந்தங்கள் தான் எங்களுக்கு அவசியம்” – மத்திய மேற்கு தானிய விவசாயி.

“அவருடைய நிவாரண நிதி உதவியது. ஆனால் செலவுகள் இன்னும் அதிகமாக உள்ளன. சந்தைகள் நிலையானவை அல்ல.” – அயோவா சோள விவசாயி.

“இங்கு அரசியல் பிரச்சினை அல்ல. தொழிலாளர்களுக்கான அணுகலும் நியாயமான வர்த்தகமும் தான்.” – அரிசோனா விவசாயி

பண்ணை மாநிலங்களில் ட்ரம்ப்பிற்கு விசுவாசம் வலுவாக இருந்தாலும் பொருளாதார அழுத்தங்கள் பொறுமையைச் சோதிக்கின்றன. கணிக்கக்கூடிய சந்தைகள், உயிரி எரிபொருள் தெளிவு, தொழிலாளர் நிலைத்தன்மையைத் தான் விவசாயிகள் விரும்புகிறார்கள்.

அமெரிக்க விவசாயத்தின் எதிர்காலம் இன்று குறுக்குவெட்டு பாதைகளின் சந்திப்பில் நின்றுள்ளது. குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக உலக சந்தைகளுடன் மோதும் ஒரு பாதை; விவசாயியை மையமாக வைத்து நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் கட்டியெழுப்பும் மற்றொரு பாதை. விவசாயி உதவித் தொகைகளால் மட்டுமே வாழ வேண்டியவன் அல்ல. அவன் உழைப்புக்கான நியாயமான விலையை எதிர்பார்க்கும் மனிதன். உலகை உணவூட்டும் மண், அரசியல் போர்க்களமாக மாறும்போது, அதன் விளைவுகளைச் சுமப்பது வயல்களில் நிற்கும் மனிதர்களே.

உணவு நிறைந்த நாட்டில் பயிர்களை அழிக்க வேண்டிய நிலை உருவாகிறதென்றால், சிக்கல் உழைப்பில் இல்லை. அதை வழிநடத்தும் வர்த்தக அரசியலில் தான் என்பது நிரூபணமாகிறது. விவசாயியின் வாழ்வையும் சந்தையின் கணக்கையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து விவசாயிகளின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு.

விவசாயம் நசுங்கும் போது நாடுகள் செழிப்பதில்லை என்ற வரலாற்று உண்மையை அமெரிக்கா மீண்டும் உணருமா அல்லது தன் உணவுப் பாதுகாப்பையும் விவசாயியின் வாழ்க்கையையும் உலக அரசியலின் விலையாகச் செலுத்துமா என்பதே தற்போதைய கேள்வி.

பனிக்குரங்கு பஞ்ச்

பிப்ரவரி 10ஆந் தேதி வரை அமெரிக்காவில் நடைப்பயயணம் மேற்கொண்ட துறவிகளும் அவர்களுடைய செல்லப்பிராணி 'அலோகா'வும் சமூகவலைதளங்களில் மக்களுடைய சிறப்பான ஆதரவைப் பெற்றிருந்தனர். கடந்த சில வாரங்களாக ஒரு குட்டிக்குரங்கு வலம் வந்து கொண்டிருக்கிறது. என்னாச்சோ? ஏதோச்சா ? என்று மக்கள் விடிய, விடிய அதன் க்ஷேமத்தை எண்ணி பதிவுகள் போட, ஜப்பானில் இருந்து மக்களும் அக்குரங்கைப் பற்றின தகவல்களைத்தர, நமக்கு எப்படியோ பொழுது போய்விடுகிறது.

அதாகப்பட்டது, ஜப்பான் நாட்டின் சிபா மாகாணத்தில் உள்ள Ichikawa City Zoo and Botanical Garden விலங்குக் காட்சிச்சாலையில் சமீபத்தில் பிறந்த குட்டிக் குரங்கு தான் பாஞ்சி. ஜப்பானின் குளிர்ந்த மலைப்பகுதிகளில் வாழும் Japanese macaque இனத்தைச் சேர்ந்த பனிக்குரங்கு. ஆனால் பாஞ்சியின் வாழ்க்கை பிறந்த முதல் நொடியில் இருந்து சாதாரணமாக அமையவில்லை.
பாஞ்சி பிறந்த சில நேரங்களிலேயே அவன் தாயால் கைவிடப்பட்டான். குரங்குகளின் உலகில் இது அரிதான சம்பவம். தாயின் மார்பில் ஒட்டிக்கொண்டு பாதுகாப்பு பெற வேண்டிய வயதில் பாஞ்சி தனிமையில் இருந்தான். பெரிய குரங்குகள் தாக்கவும் விலங்குக் காட்சிச்சாலையின் பராமரிப்பாளர்கள் அவனை உடனே காப்பாற்றினர். பாட்டிலில் பால் ஊட்டி, இரவும் பகலும் கவனித்துக் கொண்டனர். தனிமையில் வாடிய பாஞ்சி அடிக்கடி அழுதான். தாயின் உடல் வெப்பம் இல்லாத வெறுமையை உணர்ந்தான். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக பராமரிப்பாளர்கள் ஒரு மென்மையான சிறிய ஆரங்குட்டான் பொம்மையைக் கொடுத்தனர்.

அதை அவன் இறுக்கமாகத் தழுவிக் கொண்டான். அது வெறும் பொம்மை இல்லை. அவனுக்கு அது தாயின் மார்பு. பாதுகாப்பு. ஆறுதல்.எல்லாமே.

அவன் தூங்கும்போதும் அதையே பற்றிக் கொண்டிருந்தான். நடக்கும்போதும் அதை எடுத்துச் சென்றான். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதும் உலகம் முழுவதும் மக்கள் மனம் உருகினர்.

ஒரு சிறு குரங்கு, ஒரு பொம்மையை தழுவி அமைதியைத் தேடும் காட்சி மனிதர்களின் இதயத்தை ஆழமாகத் தொட்டது. பாஞ்சியின் வீடியோக்கள் வைரலானபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவனைப் பார்க்க விலங்குக் காட்சிச்சாலைக்கு வந்தனர். பலர் அவனுக்காக வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள், ஊக்கச் செய்திகள் அனுப்பினர்.

மனிதர்களால் வளர்க்கப்பட்ட குட்டிகள், தங்கள் இனத்தவருடன் பழக சற்றுக் காலம் எடுத்துக்கொள்வது இயல்பு. பாஞ்சியும் அதைப் போலவே மெதுவாக மற்ற குரங்குகளுடன் பழகத் தொடங்கினான். முதலில் அவனை ஒரு பொருட்டாக குரங்குகள் கூட்டம் மதிக்கவில்லை. அவனைத் துன்புறுத்த, வேகமாக ஓடி வந்து பொம்மையிடம் தஞ்சம் புக, இப்படியே பல நாட்கள் சென்றது. இறுதியில் ஒரு குரங்கு அவனுக்குத் தாயாக அரவணைத்துக் கொள்ள எல்லாம் சுபம். மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட... இன்றும் அவனைப் பற்றின படச் செய்திகளுடன் தான் நாட்கள் நகர்கிறது.

அவன் மெதுவாக சமூகத்தின் ஒரு அங்கமாக மாறிக் கொண்டிருக்கிறான்.

அவன் ஒரு சாதாரண குரங்கு அல்ல. "பாசம் இன்றி எந்த உயிரும் முழுமையில்லை" என்ற உண்மையை உலகுக்குக் கூறும் ஓர் உயிர்.


பாஞ்சியின் கதை ஒரு விலங்கு சம்பவம் மட்டுமல்ல. அது மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு. குழந்தை பிறக்கும் போது அது தாயை முழுமையாக சார்ந்திருக்கும். தாயின் தொடுதல் பாதுகாப்பை உருவாக்கும். பாசமின்றி வளர்ச்சி முழுமையடையாது. தனிமை உயிரை சிதைக்கும். ஒரு சிறிய ஆறுதல் கூட வாழ்க்கையை தாங்கும் வலிமை தரும்.

அதனால் தான் பொம்மை கூட அவனுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தந்ததால் தான் யாரையும் தொடவிடாமல் தூக்கிக் கொண்டு அலைகிறான்.

மனிதர்களும் அப்படித்தானே?

நாம் அனைவரும் ஏதோ ஒன்றைத் தழுவி வாழ்கிறோம். அது நமக்கு "நீ தனியாக இல்லை" என்று உணர்த்துகிறது.


பாஞ்சி இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய பயணம் தொடர்கிறது. ஆனால் அவன் ஏற்கனவே உலகுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுத்துவிட்டான்: 

உறவு இல்லாமல் உயிர் இல்லை.
பாசம் இல்லாமல் பாதுகாப்பு இல்லை.
தொடுதல் இல்லாமல் நம்பிக்கை இல்லை.

ஒரு சிறு குரங்கு , ஒரு மென்மையான பொம்மை , ஒரு உலகளாவிய உண்மை, கூத்தாடுகிறது இணையம்.

Friday, February 6, 2026

Can This Love Be Translated?


 “Can This Love Be Translated?”

பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந்தாலும்  'Hometown cha-cha-cha' தொடரின் கன்னக்குழி நாயகன் தான் இதிலும் கதாநாயகன். எப்படி பார்க்காமல் இருக்க முடியும்? காதல் கதை வேறு :)

ஆரம்பமே படு அமர்க்களமாக ஆரம்பித்தது. அதிலும் ஜப்பானின் குறுகிய தெருக்கள், அழகிய இடங்கள் என்று ஆஹா! பார்க்க வேண்டிய நாடல்லவா அது. மிகவும் சாதாரணமாக நிகழும் ஒரு சந்திப்பு. அதைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொண்டிருக்கும் நாயகன், நாயகி. வெள்ளந்தி நாயகி(கொரியன் தொடர் நாயகிகள் பெரும்பாலும் அப்படிதான் இருப்பதாக கதையை அமைக்கிறார்கள்!)  சிறு சிறு தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவள். ஒரே இரவில் அவள் நடித்த கதாபாத்திரத்தால் உலகப்புகழ் பெறுகிறாள். அவளை வைத்து வெவேறு நாடுகளில் சந்திக்கும் இருவரைப் பற்றின கதை மூலமாக காதலைப் பற்றி அலசும் வித்தியாசமான கதை. வளைத்து வளைத்து காதலை மையமாக வைத்து தொடர்களை எடுப்பதில் கில்லாடிகள் இந்த கொரியன் தொடர் இயக்குனர்கள்!

பல மொழிகள் பேசும் வித்தகன் நம் கதாநாயகன். ஒரு தொலைக்காட்சி 'ரியாலிட்டி ஷோ' தொடருக்காக கதாநாயகிக்கும் ஜப்பான் கதாநாயகனுக்கும் மொழிபெயர்ப்பாளனாக 'கிம் சென் ஹோ', அதான் நம் கன்னக்குழி அழகன். முக்கோண காதல் இல்லாமலா? ஜப்பான் நாட்டுக்காரர் தான் மற்றொரு கதாநாயகன். வேண்டா வெறுப்பாக நாயகியுடன் நடிக்கத் தொடங்கி அவள் வசம் தன்னை மெதுவாக இழக்கும் கதாபாத்திரம். கதாநாயகிக்கு கன்னக்குழி நாயகன் மேல் காதல். அவனோ ஒரு தலைக்காதலில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவன். மெதுவாக நாயகியின் மீது அவனுக்கும் நாட்டம் வருகிறது. ஆனால் அவன் முழுமையாக தன்னை காதலிக்கவில்லை என்று நாயகி விலக, நாயகன் தொடர, குழப்பம் இருவருக்கும்.

உண்மையான காதல் உணர்வுப்பூர்வமானது. அனைத்தையும் தாண்டி தனக்கே தனக்கு என்று உரிமை கொண்டாடும். தனக்கான உரிமை அங்கு இல்லை என்று தெரிந்தவுடன் உடனே ஒதுங்கி ஓரத்தில் நின்று "எங்கிருந்தாலும் வாழ்க" என்று பாடினாலும் அவளை/அவனைத் தொடர்ந்து சென்று கொண்டுதானிருக்கும். இந்தக் கதை, “காதலை மொழிபெயர்க்க முடியுமா?” என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால் அது மொழியிலிருந்து மொழிக்கான மாற்றமல்ல — மனதிலிருந்து மனதுக்கான பயணம்.

இந்தத் தொடர் ஒரு வழக்கமான காதல் கதை என்றால் இல்லை. இங்கே தவறான புரிதல்கள், வாழ்க்கையின் உண்மையான பிரதிபலிப்புகள் என்று கொஞ்சம் ஆழமாகவே செல்கிறது. ஒரு வார்த்தையைச் சொல்லும்போது நாம் என்ன வெளிப்படுத்துகிறோம்? சொல்லாமல் விடும்போது என்ன மறைக்கிறோம்? முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாமலேயே உண்மையான காதல் சாத்தியமா?

இத்தகைய கேள்விகளுடன் பயணிக்கிறது கதை.

உள்ளார்ந்த பயங்கள், பண்பாட்டு கட்டுப்பாடுகள், தனிப்பட்ட நினைவுகளால் நாயகர்களும்  நாயகியும் சுழல, ஒருவர் உணர்ச்சிகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த, மற்றொருவர் அமைதியிலேயே உண்மையைச் சொல்கிறார். 

இயற்கை ஒளியில் எடுக்கப்பட்ட நீண்ட காட்சிகள், அழகான பின்னணி இசை  என அனைத்தும் இத்தொடருக்குப் பலம். பல தருணங்களில் உரையாடல் முடிந்த பின்னரும் சொல்லப்படாத வார்த்தைகள் பார்வையாளரின் மனதில் பேசத் தொடங்கும் விதத்தில் மிக நெருக்கமான உணர்வைத் தருகிறது.

பல மொழிகளுக்கிடையில் வாழும் மக்களுக்கு, குடிபெயர்ந்தவர்களுக்கு, எல்லைகளைத் தாண்டிய உறவுகளில் இருப்பவர்களுக்கு  இந்தத் தொடர் மிகவும் நெருக்கமாக இருக்கும். ஒரு மொழியைத் தெரிந்தும், ஒரு மனதைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் அந்த வலி உலகெங்கும் பொதுவானது. காதல் எப்போதும் தெளிவான முடிவைத் தராது. புரிதல் பல சமயம் பாதியிலேயே நிற்கும். ஆனால் முயற்சியே காதலின் ஒரு வடிவம் என்ற உண்மையை நேர்மையாகச் சொல்கிறது.

நாயகனும் நாயகியும் பாடலைக் கேட்டுக் கொண்டே செல்லும் காட்சியில் , "இனி இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் என் ஞாபகம் தான் உனக்கு வரும்" என்று நாயகி சொல்லும் காட்சியும் அதற்குப் பின் அந்தப் பாடலைக் கேட்கும் மற்றொரு காட்சியில் முன் நடந்த காட்சிகளை நினைத்து பார்ப்பதும்... காதல்ல இதெல்லாம் சகஜமப்பா மொமெண்ட்கள் :)

Can This Love Be Translated?

சொல்ல வந்ததைச் சொல்லாமல் சொற்கள் தோல்வியுறும் தருணங்களிலும் ஒருவர் என்றும் அருகில்  இருக்கிறாரா என்பதைச் சொல்லும் கதை.

இப்படி ஒரு அழகான கதையை ஒவ்வொரு எபிசோடுகளிலும் காண்பித்த விதம் கொள்ளை அழகு. காட்சிக்கு காட்சி ஒளிப்பதிவில் அதகளப்படுத்தியிருக்கிறார்கள். கனடாவின் கால்கரி, Banff National Park , ஜப்பான், இத்தாலி, சவுத் கொரியா என்று ஜொள்ளு விட்டுக் கொண்டு பார்க்கும் படி காட்சிகளும் இடங்களும் அருமை. இப்படித்தான் இவர்களின் தொடர்களைப் பார்க்க வைக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களுடன் சிறு கதாபாத்திரங்களின் கதைகளும் அருமையாக கோர்க்கப்பட்டு முழு தொடராக பார்க்கவும், ரசிக்கவும் விதத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எப்படி இப்படி அருமையான கதையுடன், பாத்திரப்படைப்புகளுடன் இவர்களால் மட்டும் தொடர்கள் எடுக்க முடிகிறதோ!


Tuesday, February 3, 2026

வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு

சொல்வனம் இதழ் 358ல் வெளியான என்னுடைய கட்டுரை
வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு – சொல்வனம் | இதழ் 359 | 25 ஜன 2026

எண்ணெய் வளம், இயற்கை எழில், எதிர்கால நம்பிக்கை நிறைந்திருந்தும் பொருளாதார முடக்கத்தாலும் அரசியல் குழப்பங்களாலும் உழலும் ஒரு தேசமாக வெனிசுவேலா இன்று பேசுபொருளாகியிருக்கிறது. பல ஆண்டுகளாக நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு நாடு இப்போது திடீரென்று புவிசார் அரசியல் மோதல்களில் ஒன்றின் மையத்தில் வந்து நிற்கிறது. அங்கு என்ன நடக்கின்றது உலகளவில் ஏன் முக்கியமானது போன்ற கேள்விகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் பலருக்கும் எழுவது இயல்பானதே.

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலா, வடக்கே கரீபியன் கடல், மேற்கே கொலம்பியா, தெற்கே பிரேசில், கிழக்கே கயானா நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது. முக்கிய கப்பல் பாதைகளுக்கு அருகில் உள்ளது மட்டுமல்லாமல் அமெரிக்காவிலிருந்து சில மணிநேர விமானப் பயணத்தில் இந்நாட்டை அடைய முடியும் என்பதும் சவுதி அரேபியாவை விட உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை இந்த நாடு கொண்டுள்ளதும் இதன் சிறப்பம்சங்களாகும்.

எண்ணெய் இருப்புகளால் வெனிசுவேலா ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது. பல தசாப்தங்களாக எண்ணெய் வருவாய் ஒன்றே நாட்டின் பல்வேறு சமூக திட்டங்கள், உள்கட்டமைப்பு, அரசு அதிகாரத்திற்கு நிதியளித்தது. அதுவே நாட்டின் பொருளாதாரம் முழுவதையும் ஒரு வளத்தையே ஆபத்தான முறையில் சார்ந்திருக்கவும் செய்தது. ஆனால் அதன் எண்ணெய் தொழில்துறையின் நீண்டகால தவறான மேலாண்மை, அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு, மிகை பணவீக்கத்தால்(hyper inflation) பொருளாதாரம் அதலபாதாள வீழ்ச்சி அடைந்தது. அதனால் உற்பத்தி சரிந்தது. அடிப்படை உணவு, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டது. மில்லியன் கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல, அப்பிராந்தியம் முழுவதும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கியது.

வெனிசுவேலாவின் தற்போதைய பிரச்சினைகள் ஒரே இரவில் தோன்றவில்லை.

அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவிற்கு நிலையான எண்ணெய் சப்ளையராக, லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது வெனிசுவேலா. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அங்கே வலுவான முதலீடுகளைக் கொண்டிருந்தன. வெனிசுவேலா அரசாங்கங்களும் சந்தை சார்பு, அமெரிக்க சார்பு கொள்கைகளைப் பின்பற்றின. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா அரசு ஒரு ‘மாடல்’ ஜனநாயகமாகக் கருதப்பட்டது.

அதுவே 1999க்குப் பிறகு வியத்தகு முறையில் மாறியது.

1998ம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹ்யூகோ சாவேஸ் 1999ம் ஆண்டு பதவியேற்றார். கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவால் சோஷியலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டவர் ஏகாதிபத்தியத்தை, குறிப்பாக அமெரிக்காவை எதிர்த்தார். நாட்டின் எண்ணெய் மற்றும் முக்கிய தொழில்கள் மீது அமெரிக்காவின் அதிகாரத்தை எதிர்த்து தன்னுடைய அரசின் வலுவான கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆரம்பத்திலிருந்தே சாவேஸ் அமெரிக்காவை ஒரு கூட்டாளியாகப் பார்க்காமல் அரசியல் எதிரியாகவே வரையறுத்தார். எண்ணெய் வளங்கள் நாட்டின் சமூக நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணினார். அதைச் செயல்படுத்தும் விதமாக எண்ணெய் வளங்களை தேசியமயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் (அமெரிக்க நிறுவனங்கள் உட்பட) சிறுபான்மை உரிமையை ஏற்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. எண்ணெய் வருவாய் கொண்டு மக்களுக்கு இலவச சுகாதாரம், உணவு மானியங்கள், வீட்டுவசதி திட்டங்களைக் கொண்டு வந்தார். நாடும் செழிப்பாக இருந்தது. நட்பு நாடுகளுக்கு(கியூபா, கரீபியன்) மலிவான எண்ணெய் வழங்கப்பட்டது.

பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா அமெரிக்கா?



ஏப்ரல் 2002ல், ராணுவ ஆதரவுடன் இரண்டு நாட்கள் நீடித்த ஆட்சிக் கவிழ்ப்பில் சாவேஸ் சிறிது காலம் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டார். ஆட்சிக் கவிழ்ப்பை ஊக்குவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்களை அமெரிக்கா ஆதரிப்பதாகவும் சாவேஸ் குற்றம் சாட்டினார். நேரடி ஈடுபாட்டை மறுத்தாலும் வெனிசுவேலா சிவில் சமூகத்திற்கும் எதிர்க்கட்சி குழுக்களுக்கும் நிதியளித்து குறுகிய கால இடைக்கால அரசாங்கத்தை விரைவாக வரவேற்றது அமெரிக்கா. ஆனால் சாவேஸ் முன்பை விட வலுவாக மீண்டும் ஆட்சிக்குத் திரும்பினார். அமெரிக்கா மீது அவருக்கு ஆழ்ந்த அவநம்பிக்கை ஏற்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு பேச்சும் தீவிரமடைந்தது. இந்த கட்டத்திலிருந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வெளிப்படையாக விரோதமாக மாறியது.

உலகளவில் அமெரிக்க செல்வாக்கை எதிர்க்க சாவேஸ் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். கியூபாவுடன் ஒரு இறுக்கமான கூட்டணியை உருவாக்கினார். ரஷ்யா (ஆயுதங்கள், ராணுவ ஒத்துழைப்பு), சீனா (எண்ணெய்-கடன் ஒப்பந்தங்கள்), ஈரான், அமெரிக்கா தலைமையிலான நிறுவனங்களுக்குச் சவாலாக 10 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ALBA(Bolivarian Alliance for the Peoples of Our America ) போன்ற பிராந்திய முகாம்களை உருவாக்கினார். 2006ல் ஐ.நா.வில், சாவேஸ் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷை “the devil” என்று குறிப்பிட்டார். இது இரு நாட்டின் உறவுகள் எவ்வளவு வெளிப்படையாக விரோதமாக மாறிவிட்டன என்பதற்கான அடையாளமாகும்.

அமெரிக்காவும் லத்தீன் அமெரிக்காவில் ஒரு ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் சக்தியாக, சர்வாதிகார ஜனரஞ்சகத்தை ஊக்குவிப்பவராக, ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் ஒரு தலைவராக சாவேஸை சித்தரித்தது. ஆனாலும் சாவேஸின் பெரும்பாலான ஆட்சியின் போது முழுமையான பொருளாதாரத் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ராஜதந்திர உறவுகள் பதட்டமாக இருந்த போதிலும் எண்ணெய் இறக்குமதியை மட்டும் அமெரிக்கா குறைக்கவில்லை.



உச்சக்கட்ட விரோத நிலையிலும் கூட வெனிசுவேலா அமெரிக்காவிற்கு எண்ணெயை விற்க, அமெரிக்காவும் அதை வாங்கிக் கொண்டே இருந்தது. இரு பொருளாதாரங்களும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன. அரசியல் ரீதியாக விரோதமான ஆனால் பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்ட விசித்திர உறவு அப்பொழுது இருந்தது.

2000களின் முற்பகுதியில், அதிபர் ஹ்யூகோ சாவேஸின் கீழ் நாடு ஒரு சோஷியலிசப் பொருளாதார ‘மாதிரி’யை ஏற்றுக்கொண்டது. எண்ணெய் வருவாய்கள் நலத்திட்டங்களுக்கும் மானியங்களுக்கும் நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டன. இது ஆரம்பத்தில் வறுமையைக் குறைத்தாலும், பொருளாதாரம் பெரிதும் மையப்படுத்தப்பட்டதில் தனியார் தொழில்துறைகள் பலவீனமடைந்தன. எண்ணெய் வருமான லாபங்கள் திறமையாக மற்ற துறைகளில் முதலீடும் செய்யப்படவில்லை.

2013ல் சாவேஸின் மரணத்திற்குப் பிறகு அவரின் கீழ் துணை அதிபராகவும் அமைச்சராகவும் இருந்த ‘நிக்கோலஸ் மதுரோ’ அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். சாவேஸின் ஐக்கிய சோஷியலிசக் கட்சி (PSUV) ஆதிக்க சக்தியாகத் தொடர்ந்தது. மதுரோ முதலில் ஏப்ரல் 2013ல் எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரில்ஸை எதிர்த்துப் போட்டியிட்ட தேர்தலில் சாவேஸின் வெற்றிகளை விட மிகக் குறைவான வித்தியாசத்தில் வென்று வெனிசுவேலா  அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய சகாப்தத்தின் ஆட்டநாயகன் ஆனார்.

அப்பொழுது அமெரிக்க-வெனிசுவேலா  உறவுகள் மோசமாக சேதமடைந்திருந்தன. விரைவில், உலகளாவிய எண்ணெய் விலைகள் சரிந்தன. அரசாங்கத்தின் வருமானத்தின் பெரும்பகுதி எண்ணெய் விற்பனையின் லாபத்தைச் சார்ந்திருந்ததால், வெனிசுவேலா  கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பதிலாக, செலவுகளை ஈடுகட்ட பணத்தை அச்சிட்டது அரசாங்கம். இது மிகை பணவீக்கத்தைத் தூண்டி ஊதியங்களை கிட்டத்தட்ட பயனற்றதாக மாற்றியது. உணவு, மருந்து, அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. பொதுச் சேவைகள் மோசமடைந்தன. காலப்போக்கில் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இது நவீன வரலாற்றில் மிகப்பெரிய இடம்பெயர்வு நெருக்கடிகளில் ஒன்றை உருவாக்கியது. உண்மையான சரிவும் கடுமையான அமெரிக்கத் தடைகளும் சாவேஸுக்குப் பிறகு தான் வந்தன.



2018 தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முக்கிய எதிர்க்கட்சி நபர்கள் போட்டியிட தடை விதிக்கப்பட்டதாக இந்தத் தேர்தல் பல வெளிநாட்டு பார்வையாளர்களாலும் எதிர்க்கட்சித் தலைவர்களாலும் நம்பகத்தன்மை இல்லாததாக கருதப்பட்டு “மதுரோ பதவி விலக வேண்டும். ஒரு இடைக்கால அரசாங்கம் அமைத்து சர்வதேச அளவில் மேற்பார்வையிடப்பட்ட தேர்தல் மூலம் புதிய அரசாங்கம் அமைய வேண்டும்” என எதிர்க்கட்சிகள் போராடின. அரசாங்கம் இந்தக் கூற்றுக்களை மறுத்து வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிராக தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதாக வாதிட்டது. ராணுவம், நீதிமன்றங்கள், காவல்துறை, தேர்தல் அமைப்புகளின் மீது முழு கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக் கொண்டார் மதுரோ. சர்வதேச அழுத்தம் அங்கே ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் தோல்வியடைந்ததால் மக்கள் சோர்வடைந்தனர். எதிர்க்கட்சி ஒற்றுமையும் பலவீனமடைந்தது.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எதிர்க்கட்சி நாடாளுமன்றத் தேர்தல்களைப் புறக்கணித்தது. மதுரோவின் கூட்டாளிகள் வென்றனர். வெனிசுவேலா விற்குள் எதிர்க்கட்சித் தலைவர் குவைடோவின் அரசியலைத் திறம்பட முடிவுக்குக் கொண்டுவந்தனர். எதிர்க்கட்சி தலைமையிலான தேசிய சட்டமன்றம் மதுரோவின் ஜனாதிபதி பதவி சட்டவிரோதமானது என்று அறிவித்தபோது, நாடு ஒரு அரசியலமைப்பு நெருக்கடியில் சிக்கியது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் மதுரோவுக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைமையை அங்கீகரித்தன. அந்த தருணத்திலிருந்து வெனிசுவேலா  அதிகாரப் போட்டியின் மையமாக உருவெடுத்தது.

ஜூலை 28, 2024 அன்று நடந்த தேர்தல் நவீன வெனிசுவேலா  வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்தல்களில் ஒன்றாக அமைந்தது.



2025ல் நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ(ட்ரம்ப்பிற்கு அமைதிக்கான தன்னுடைய நோபல் பரிசை கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறியவர்!) தலைமையிலான எதிர்க்கட்சி மக்களின் பேராதரவில் வெகுவாக வளர்ந்து வந்தது. ராணுவத்தின் துணையோடு எதிர்ப்புகளை அடக்கி கட்டுப்பாட்டைப் பராமரித்த மதுரோவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சி போராடியது. மரியா முன்னணி எதிர்க்கட்சித் தலைவராக முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் மாநில அதிகாரிகளால் பொதுப் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரால் முறையாக தேர்தலில் போட்டியிட முடியாததால் Democratic Unitary Platform Party வேட்பாளர் கோன்சாலஸை ஆதரித்தார்.

இந்தத் தேர்தலிலும் மதுரோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். கோன்சாலஸ் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அவர்களின் சொந்த எண்ணிக்கைத் தாள்கள் காட்டுகின்றன என்று கூறி எதிர்க்கட்சிகள் அதிகாரப்பூர்வ முடிவை நிராகரித்தது. அதைத் தொடர்ந்து பல மாதங்களாக எதிர்ப்புகள் நீடித்தன. எதிர்க்கட்சியின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்காவும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளும் எட்முண்டோ கோன்சாலஸை சட்டப்பூர்வமான அதிபராக அங்கீகரித்தன. மதுரோவின் விசுவாசிகளால் தேர்தல் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையும், கட்டுப்பாடு இல்லாமையும் விமர்சிக்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து  2025ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் வெனிசுவேலாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பை  பயங்கரவாதிகள் எனவும் ‘கார்டெல் ஆஃப் தி சன்ஸ்’ உட்பட போதைப்பொருள் வலையமைப்புகளை போதைப்பொருள் பயங்கரவாதிகள் என பறைசாற்ற, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் கடுமையாக மோசமடைந்தன. ஜனநாயகம், மனித உரிமைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக எண்ணெய் மற்றும் நிதி தடை விதித்தது மட்டுமில்லாமல், அரசின் கட்டமைப்புகள் போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு உதவுவதாகவும், அமெரிக்க பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.



பாதுகாப்புப் படைகளையும் குற்றவியல் குழுக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் வாஷிங்டன் அவர்களுக்கு எதிராக ராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறியது. மதுரோவின் அரசாங்கத்திற்கு ஜனநாயக சட்டபூர்வமான தன்மை இல்லை என்றும் புதிய மாற்றம் ஜனநாயக நிர்வாகத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் வாதிட்டு மதுரோவையும் அவரது மனைவியையும் ஜனவரி 3, 2026 அன்று நாடு கடத்தி அமெரிக்காவிற்குச் சிறைக்கைதிகளாக அழைத்து வந்தது ட்ரம்ப் அரசு.

வெனிசுவேலாவின் மகத்தான எண்ணெய் இருப்பு, சீனா, ரஷ்யா, ஈரான், கியூபா போன்ற நாடுகளுடனான அதன் கூட்டணி, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுக்கு முரணாக இருப்பதாலேயே அமெரிக்கா அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச அளவில் விமர்சித்தாலும் அமெரிக்க பாதுகாப்பும் வெனிசுவேலா அரசின் முறையற்ற நிர்வாகத்தையும் கவனத்தில் கொண்டே மதுரோ நாடு கடத்தப்பட்டதாக வெள்ளைமாளிகை கூறி வருகிறது.

எந்தவொரு தீர்வும் வெனிசுவேலாவின் விருப்பத்தையும் சர்வதேச சட்டத்தையும் மதிக்க வேண்டும் என்று பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் அடாவடி நடவடிக்கைகளையும் ஒருதலைபட்ச தலையீட்டையும் கண்டித்து அமைதியான அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி வருகின்றன. லத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.

கொலம்பியா, பிரேசில் போன்ற அண்டை நாடுகள் மதுரோவின் ஆட்சியை விமர்சித்தாலும், பிராந்திய ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு சர்வதேச விதிமுறைகளின்படி நடந்து கொள்ளுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளன. ராணுவத் தலையீடும் பலத்தைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களும் மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சர்வதேச கடமைகளை மீறுவதாக ஐ.நா. கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 

மதுரோவை வெனிசுவேலாவின் சட்டப்பூர்வமான அதிபதியாக சீனா அங்கீகரித்து, தடைகள், அரசியல் அழுத்தம் மூலம் அவரை நீக்குவதற்கான வெளிப்புற முயற்சிகளை நிராகரிக்கிறது. மற்றொரு நாட்டின் உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு ஈடுபாட்டை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அமெரிக்கத் தடைகள், எதிர்க்கட்சித் தலைவர்களை அங்கீகரிப்பது போன்றவை வெனிசுவேலாவின் தேசிய இறையாண்மையை மீறுவதாகக் கருதுகிறது. 2000களின் நடுப்பகுதியிலிருந்து சீனா வெனிசுவேலாவிற்கு பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களைக் கடனாகக் கொடுத்துள்ளது. அது பெரும்பாலும் எண்ணெய் ஏற்றுமதி மூலம் திருப்பிச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி மாற்ற முயற்சிகளுக்குப் பின்னர் தைவான், ஹாங்காங், ஷின்ஜாங் மீதான சீனாவின் அழுத்தத்தை எதிர்க்க இதை அமெரிக்கா பயன்படுத்தப்படலாம் என்பதில் சீனா எச்சரிக்கையாக உள்ளது. மதுரோ அரசாங்கம் சீனாவின் நீண்டகால முதலீடுகளைப் பாதுகாத்து வருவதாலும் அமெரிக்காவின் அரசியலை சீனா எதிர்க்கிறது. தலைமை மாற்றங்கள், உள் அரசியலமைப்பு செயல்முறை மூலம் மட்டுமே நிகழ வேண்டும் என்று வாதிடுகிறது.

ரஷ்யாவும் மதுரோவை உறுதியாக ஆதரிக்கிறது. அமெரிக்கத் தடைகள், ராஜதந்திர அழுத்தத்தை சட்டவிரோதமானது. ஸ்திரமின்மைக்கு இட்டுச் செல்கிறது என்று கண்டிக்கிறது. உலக அரசியலில் குறிப்பாக, லத்தீன் அமெரிக்காவில், வரலாற்று ரீதியாக அமெரிக்காவின் செல்வாக்கை எதிர்க்கும் நோக்கில் வெனிசுவேலாவை ரஷ்யா ஆதரிக்கிறது. ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களையும் பாதுகாப்பு உபகரணங்களையும் வெனிசுவேலா வாங்கியுள்ளது. வரையறுக்கப்பட்ட ராணுவ ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப ஆதரவையும் ரஷ்யா வழங்கியுள்ளது. ரஷ்ய நிறுவனங்கள் அங்கே எண்ணெய் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. மேலும், ஈராக், லிபியா, யுகோஸ்லாவியாவில் அமெரிக்கா தலைமையிலான தலையீடு நீண்டகால உறுதியற்ற தன்மைக்கு வழிவகுத்தது போல வெனிசுவேலாவும் அதே விதியை எதிர்கொள்ளக்கூடும் என்று வாதிடுகிறது. இந்த நெருக்கடியை “பொருளாதாரப் போர்” என்றும் வெனிசுவேலாவின் வீழ்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரத் தடைகள்தாம் காரணம் என்றும் வலியுறுத்துகிறது.

மதுரோவின் வலிமையான கூட்டாளிகளில் ஒன்றான கியூபா வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளை அந்நிய நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கண்டித்து, “அரசு பயங்கரவாதம்” என்று கூறியிருக்கிறது. வெனிசுவேலா பல ஆண்டுகளாக கியூபாவிற்கு மானிய விலையில் எண்ணெய் வழங்கி வருகிறது. அதற்குப் பிரதிபலனாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்பு ஆலோசகர்களை கியூபாவும் அனுப்பியுள்ளது. பொருளாதாரத் தனிமைப்படுத்தல் மூலம் தங்களை அழித்தது போல் சோஷியலிச அரசாங்கங்களை அழிக்கும் முயற்சியாக இதை வகைப்படுத்துகிறது. வெனிசுவேலா எண்ணெயை கியூபாவின் எரிசக்தி சார்ந்திருப்பதால் கியூபாவிற்கும் கொடுமையான காலமாகத் தான் இனி இருக்கப்போகிறது.

நிகரகுவா, பொலிவியா,வட கொரியா, ஈரான், சிரியா நாடுகளும் இதை முன்னோடியாக வைத்துக் கொண்டு நாளை தங்கள் நாடுகளும் தாக்கப்படுமோ என்று அஞ்சி தடைகளை கண்டித்து கூட்டு அறிக்கைகளை வெளியிடுகின்றன.

இதற்கெல்லாம் பயப்படுபவரா பெரியண்ணன்? எதிரி நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் அருகாமையில் கூடாரம் போட்டு தங்கியிருப்பது தன் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரானது என்பதாலும்  வெனிசுவேலாவை கட்டுக்குள் கொண்டு வர துடிக்கிறார் அங்கிள் சாம்.

இதுநாள் வரையில் சர்வாதிகார ஆட்சியினால் 7 மில்லியன் மக்கள் பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் உணவு, மருந்து, மருத்துவம், கல்வி குறைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு குறைந்து அடுத்த தலைமுறைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் அதிரிபுதிரி நடவடிக்கைகளால் வெனிசுவேலா மக்களுக்கு என்ன பயன்?

பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் விரைவான அரசியல் தீர்வோ உடனடி பொருளாதார முன்னேற்றமோ அல்ல. சட்டபூர்வமான தேர்தலும், ஆட்சியாளர் தேர்வும், பொருளாதரத் தடைகள் நீங்கி வர்த்தகம், பயணத்தை அனுமதிக்கும் அமெரிக்க கொள்கைகள் தான். மிகச்சிலரே அமெரிக்கா தலைமையிலான தீர்வுகளையும், ராணுவ தலையீடு, விரைவான ஜனநாயக மாற்றத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க நடவடிக்கைகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை மோசமாக்கினால் எதிர்ப்புகள் வளரும். நிலைத்தன்மையை மேம்படுத்தினால் ஆதரவு அதிகரிக்கும்.

வெனிசுவேலாவைப் பொறுத்தவரை, மையக் கேள்வி இனி “அமெரிக்காவின் செயல்பாடுகள் சரியா, தவறா?” என்பதல்ல.

“இனி அவர்கள் மீண்டும் கண்ணியத்துடன் வாழ அமெரிக்காவும் மற்ற நாடுகளும் உதவுமா?” என்பதுதான்!

ஒரு கொலையிலிருந்து உருவாகும் புதிய அரசியல் மதம்


உலகிற்கு ஜனநாயகத்தின் அடையாளமாக விளங்கிய அமெரிக்கா, இன்று தன் உள்ளார்ந்த அமைதியையே இழந்து நிற்கிறது. அரசியல் உரைகள் நிதானத்தை இழந்து கோபமாக மாறியுள்ளன. நம்பிக்கைகள் மதமாகவும், மதம் அரசியல் ஆயுதமாகவும் மாறிவிட்டது. சட்டம், சமநிலை அதிகாரப் பிரிவு என்றிருந்த அமெரிக்க அரசியல், இன்று உணர்ச்சி, பயம், அடையாள அரசியல், மத நம்பிக்கைகளால் வழிநடத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல்கள் இனி கொள்கை விவாதங்களாக இல்லாமல், “நாம்” மற்றும் “அவர்கள்” என்ற எதிர்மறை முகாம்களுக்கிடையிலான மோதல்களாக மாறி விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அரசியலமைப்பு மதத்தையும் அரசையும் பிரித்துப் பார்க்கச் சொன்னாலும், நடைமுறையில் அந்த எல்லை மங்கத் தொடங்கியுள்ளது. அரசியல் வன்முறை, மதம், அரசு அதிகாரம் ஆகியவை ஒன்றோடொன்று கலக்கும் ஆபத்தான தருணம் தற்பொழுது உருவாகியுள்ளது.

இந்தப் பின்னணியில் நிகழ்ந்த ‘சார்லி கிர்க்’கின் கொலை, ஒரு தனிநபரின் மரணத்தைத் தாண்டி, அரசியல் அதிகாரம், மத உணர்ச்சியை எவ்வாறு பயன்படுத்துகிறது, ஒரு மனிதனின் மரணம் கூட தனிப்பட்ட துயராக இல்லாமல் எவ்வாறு ஒரு இயக்கத்தின் புனிதச் சின்னமாக மாற்றப்படுகிறது என்பதற்கான முக்கியமான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

யார் அந்த ‘சார்லி கிர்க்’?

அவர் ஒரு அமெரிக்க வலதுசாரி அரசியல் செயல்பாட்டாளர். ‘Turning Point USA’ என்ற தொண்டு அமைப்பின் கூட்டமைப்பாளர். பிரபல ஊடக பேச்சாளர். 18 வயதிலேயே அரசியல் இயக்கத்தைத் தொடங்கி, பல ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கிய தேசிய வலதுசாரி இளைஞர் குழுவைக் கட்டியெழுப்பியவர். கிறிஸ்துவ மத நம்பிக்கைகளை அரசியல் உரைகளுடன் கலந்து பேசிய உணர்ச்சிப்பூர்வமான உரையாடல்கள், சமூக ஊடக செயல்பாடுகளால் விரைவிலேயே மிகவும் பிரபலமானவர். அவரது கருத்துகள் பெரும் ஆதரவையும் கடுமையான எதிர்ப்பையும் பெற்றன. அதிபர் ட்ரம்ப்புடனும் MAGA இயக்கத்துடனும் வலுவாக இணைந்து சமூக, அரசியல் விவாதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

செப்டம்பர் 10, 2025 அன்று யூட்டா மாநிலம் ஓரெம் நகரில் உள்ள Utah Valley University வளாகத்தில் Turning Point USA அமைப்பின் நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தினரின் முன்னிலையிலேயே துப்பாக்கிச்சூட்டில் பலியானார். அப்போது அவருக்கு வயது 31. இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசியல் வன்முறை, மத–அரசியல் பேச்சு, பொது பாதுகாப்பு குறித்து தீவிர விவாதங்களைத் தூண்டியது.

அவர் இறந்த பிறகு அவர் மனைவி எரிக்காவுடன் சேர்ந்து நிறுவிய Turning Point USA என்ற அமைப்புடன் இணைந்து ட்ரம்ப் அரசே ஒரு பிரமாண்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மிகுந்த உணர்ச்சிப் பொழிவுடன் இயேசு கிறிஸ்துவை நினைவூட்டும் மதப் படிமங்களுடன் அரசியல் எதிரிகளைக் குறிவைக்கும் கடுமையான போர்முனை பேச்சுகளுடன் நடைபெற்றது. ‘சார்லி கிர்க்’ ஒரு தியாகியாக உருவகப்படுத்தப்பட்டார்.

இந்த நிகழ்வு அமெரிக்க அரசியலில் ஒரு ஆபத்தான திருப்பத்தை உருவாக்கியிருக்கிறதா? அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படை விதியை நடைமுறையில் மெதுவாகத் தகர்த்துக் கொண்டிருக்கிறதா? டொனால்ட் ட்ரம்ப் பேசும் “பழிவாங்கல்” அரசியலுடன், பல்வேறு மதக் குழுக்கள் தங்கள் நம்பிக்கைகளை இணைத்துக்கொள்வது நல்லதா? இந்தச் சூழலில் தான் அமெரிக்காவைச் சேர்ந்த போப் லியோ XIV ட்ரம்ப் நிர்வாகத்தின் சில கொள்கைகளை “கிறிஸ்துவத்துக்கு எதிரானவை” என்று கடுமையாக கண்டித்துள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தச் சட்டம்(First Amendment), “காங்கிரஸ் எந்த மதத்தையும் அரசு மதமாக நிறுவும் வகையில் சட்டம் இயற்றக்கூடாது. மதச்சுதந்திரத்தையும், கருத்து, ஊடக சுதந்திரத்தையும் தடுக்கும் சட்டங்களையும் இயற்றக்கூடாது” என தெளிவாகக் கூறுகிறது. தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், ட்ரம்ப் நிர்வாகம் இந்தச் சட்டத்தை நேரடியாக மீறவில்லை. ஏனெனில் காங்கிரஸில் எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை.

ஆனால் இங்கே தான் முக்கியமான விஷயம் தொடங்குகிறது.

“ஒரு ஜனநாயக சமூகத்தை வழிநடத்துவதில் சட்டங்களைவிட மக்களின் பழக்கவழக்கங்களும் மனநிலைகளும் தான் மிக முக்கியமானவை” என 19ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் அலெக்ஸிஸ் டொக்வில் கூறிய ஒரு ஆழமான உண்மையை MAGA தலைவர்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றனர். அதாவது, மக்கள் எதை நம்புகிறார்கள், எதைப் புனிதமாகக் கருதுகிறார்கள், எதை உணர்ச்சியோடு ஏற்கிறார்கள் என்பவை தான் சட்டத்தைவிட அரசியலை அதிகம் மாற்றும் சக்தி கொண்டது.

அதனால் தான் ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக,
ஒரு மதச் சடங்கு போன்ற அரசியல் நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதையும் உணர்ச்சியையும் நேரடியாக MAGA குழுவினர் தாக்கினர். என்ன தான் அமெரிக்க அரசியலில் மதத்தின் தலையீடு இல்லை என்று சொல்லிக்கொண்டாலும் அடிமைகள் காலந்தொட்டு எப்போதும் அதன் பங்கு இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனாலும் அமெரிக்க அரசு இதுவரை தன் அடக்குமுறை அரசியல் நடவடிக்கைகளுக்கு நேரடியாக “கடவுளின் அனுமதி” உண்டு என்று இவ்வளவு வெளிப்படையாகக் கூறியதில்லை. இந்தத் தருணத்தில், “கிர்கியனிட்டி”(Kirkianity, கொல்லப்பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டாளரை மையமாகக் கொண்ட ஒரு மதம்) நடைமுறையில் அரசு மதமாக மாறியிருக்கிறது.

அதிபரின் துணை தலைமைச் செயலாளர் ஸ்டீபன் மில்லர் , “சார்லி இறந்த அன்று தேவதைகள் அழுதனர். அந்தக் கண்ணீர் இன்று நம் இதயங்களில் தீயாக மாறியுள்ளது. அந்தத் தீ, எதிரிகள் புரிந்துகொள்ள முடியாத ஒரு கோபமாக எரிகிறது” என்று நினைவஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் கூறினார். இது கிறிஸ்தவ மதத்தின் மையமான “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு” என்ற போதனைக்கு எதிரானது. கிர்க்கின் மனைவி எரிகா, தன் கணவனைச் சுட்டுக் கொன்றவரை மன்னிப்பதை தன் உரையின் மையமாக வைத்து, “நான் மன்னிக்கிறேன். இயேசு அப்படித்தான் செய்தார். வெறுப்புக்குப் பதில் வெறுப்பு அல்ல” என்று பேசினார். ஆனால் ட்ரம்ப் அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். “நான் என் எதிரிகளை வெறுக்கிறேன். அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்பவில்லை. என்னுடைய நீதித்துறை தீவிர இடதுசாரி வன்முறையாளர்கள் மீது விசாரணை நடத்தும். கொலையின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து தண்டனை கொடுக்கும். இது மன்னிக்கும் மதம் அல்ல. போர்முனை மதம்” என்று அதே மேடையில் முழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் நிகழும் மாற்றங்கள் நாட்டின் எதிர்காலம் எந்த திசையில் நகர்கிறது என்பதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

“ஒரு அரசு மதத்தின் ஆதரவைத் தன் பலமாக நம்பும்போது பலவீனமானதாக மாறிவிடும்” என்ற ‘டொக்வில்’-லின் எச்சரிக்கையைப் பற்றி MAGA இயக்கத்தின் “பண்பாட்டுப் போராளிகள்” கவலைப்படவில்லை. அவர்களின் ஒரே இலக்கு, மதத்தின் பெயரால் “பண்பாட்டு ஆதிக்கம்” (Cultural Hegemony) செலுத்துவது மட்டுமே.

அமெரிக்காவில் பல மதங்கள், பல பிரிவுகள், பல நம்பிக்கைகள் இருப்பது இதுவரையில் அரசுக்கு ஒரு பலமாகவே இருந்து வருகிறது. மதம் கோட்பாட்டு ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்ததால் அரசுக்குப் போட்டியாக இருக்க வேண்டிய ஒருங்கிணைந்த ஒற்றுமையை அது ஒருபோதும் அடைய முடியவில்லை. டொக்விலின் பார்வையில் இந்த மத வேற்றுமையே அரசுக்குப் போட்டியாக ஒரு மதம் உருவாகாமல் தடுத்து, அரசு தோல்வியுற்றபோது மக்களுக்கு ஆறுதல் வழங்க உதவியது. ஆனால் இரு அடிப்படைவாத குழுக்களால் இந்த நிலை தற்போது மாறிவருகிறது.

முதலாவதாக, அடிப்படைவாத சுவிசேஷகர்கள். நீண்ட காலமாக நவீனத்துவத்தின், மதச்சார்பற்றவர்களின் எந்தவொரு சமரசத்தையும் எதிர்ப்பவர்கள். வெள்ளை ஆண் மேலாதிக்கம், ஓரினச்சேர்க்கை, திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு, கருக்கலைப்புக்கு எதிரான பிற்போக்குத்தனமான கருத்துக்கள் கொண்டுள்ளவர்கள். இவர்கள் பெரும்பாலும் கீழ் சமூக அடுக்குகளிலும் ஆழமான தெற்கின் “பைபிள் பெல்ட்” போன்ற சில பகுதிகளிலும் மட்டுமே பரவலாக MAGAவின் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இருப்பவர்கள்.

இரண்டாவதாக, நோட்ரேடேம் பேராசிரியர் பேட்ரிக் டெனீன், ஹார்வர்ட் சட்டப் பேராசிரியர் அட்ரியன் வெர்மியூல் உள்ளிட்ட ‘உயரடுக்கு’ பொது நல கன்சர்வேட்டிவ் கத்தோலிக்க சிந்தனையாளர்கள். புதிய ஒப்பந்தம், சிறந்த சமூகம், கிளிண்டன்-ஒபாமாவின் புதிய தாராளமயம் போன்ற பல்வேறு போர்வைகளில் தாராளவாத அரசின் தலையீடுகள் காரணமாக அமெரிக்காவில் சமூக ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற சுவிசேஷகர்களின் நம்பிக்கையை இவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும், சார்லி கிர்க்கின் திருப்புமுனை போன்ற ஒரு கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தைப் பற்றி எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். கிர்கியனிட்டிக்கு மாறாக, இந்த ‘We the People’ குழு, பாவத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை, சட்டங்கள், பழைய மத கட்டுப்பாடுகள் மூலமே சமூக ஒழுங்கிற்கான தீர்வு என்பது சாத்தியப்படும் என்ற நம்பிக்கை. இது ஜனநாயகமயமாக்கல், தொழில்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றால் ஏற்பட்ட எழுச்சிகளுக்கு முன்னர் அதாவது, நவீன காலத்திற்கு முந்தைய காலத்தில் வகுக்கப்பட்ட ஒரு பிணைப்பு கோட்பாடாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தச் சிந்தனை உச்ச நீதிமன்ற மட்டத்தில் கணிசமான செல்வாக்கையும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு பழமைவாத குழுக்களும் எப்படியாவது அறிவியல் கண்டுபிடிப்புகளை நிறுத்திவிடுவார்களோ என்று பழமைவாத கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப செல்வந்தர்களே அஞ்சுகிறார்கள். என்ன ஒரு முரண்! செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி தொழில்கள், அணு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அச்சம் எழத்தானே செய்யும்?

எவாஞ்சலிக்கர்களின் உணர்ச்சி, கத்தோலிக்கர்களின் சட்ட அறிவு, தொழில்நுட்ப முதலாளிகளின் பணம் இந்த மூன்றையும் இனம் கண்டு கொண்ட ட்ரம்ப், சார்லி கிர்க்-கின் இறப்பை வைத்து இந்தக் கூட்டணியை வெளிப்படையாக ஒரு மதமாகவே மாற்றிவிட்டார்.

இது ஆபத்தான முடிவு.

இந்தப் புதிய அரசியல்–மத கலவை, அமெரிக்காவின் மத–அரசு பிரிவை சிதைக்கிறது. வெறுப்பை “அன்பு” என மறைக்கிறது. பழிவாங்கலை “நீதியான கோபம்” என அழைக்கிறது. கொல்லப்பட்ட ஒருவரை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் மதம் எந்த சமுதாயத்துக்கும் நல்லதல்ல. ‘கிர்கியனிட்டி’, MAGA இயக்கத்தில் உருவாகும் ஒரு அரசியல் மதம். பன்முக அமெரிக்காவின் ஆன்மாவுக்கு அந்நியமானது.

இன்றைய அமெரிக்காவில் நிகழ்ந்து கொண்டிருப்பது சாதாரண அரசியல் மோதலோ அல்லது ஒரு கொலையின் பின் எழுந்த துயரமோ அல்ல. அது மத நம்பிக்கையை அதிகாரத்தின் கருவியாக மாற்றும் முயற்சி. துக்கத்தை நீதியாகவும், பழிவாங்கலைப் புனிதமாகவும் மாற்றும் ஆபத்தான திருப்பம். வரலாறு மீண்டும் மீண்டும் எச்சரித்திருப்பது ஒன்று தான்: அரசு தன்னை தெய்வீக மொழியில் அலங்கரிக்கத் தொடங்கும் போது, எதிர்ப்பும் விமர்சனமும் குற்றமாக மாறிவிடும். மதமும் அரசும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படை உண்மை, ஒரு சட்ட வரியாக அல்ல, ஒரு பாதுகாப்புச் சுவராகவே உருவாக்கப்பட்டது. இந்தப் புதிய அரசியல்–மத எழுச்சி ஒரு தற்காலிக தீப்பொறியா, அல்லது நீண்ட நிழலா என்பது சட்டங்களால் அல்ல; மக்களின் மனச்சாட்சியாலும், அவர்களின் கோபத்தையும் நம்பிக்கையையும் வேறுபடுத்திக் காணும் ஞானத்தினாலும் மட்டுமே தீர்மானிக்கப்படும்.

மானிடம் தழைத்தோங்க இந்த மத–அரசியல் எழுச்சி விரைவில் அணைந்து போக வேண்டும். நம்பிக்கை, அன்பு, மனிதநேயம் ஆகியவை மட்டுமே இந்த குழப்பத்தைத் தாண்டி நாட்டையும் மக்களையும் மீட்டு நிலைத்திருக்கும்.

அமைதி நடந்த அகண்ட நிலம்

சொல்வனம் இதழ் 361ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை  அமைதி நடந்த அகண்ட நிலம் – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026 உலகின் மிகச் சக்திவாய்ந்த ஜன...