Tuesday, February 3, 2026

வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு

சொல்வனம் இதழ் 358ல் வெளியான என்னுடைய கட்டுரை
வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு – சொல்வனம் | இதழ் 359 | 25 ஜன 2026

எண்ணெய் வளம், இயற்கை எழில், எதிர்கால நம்பிக்கை நிறைந்திருந்தும் பொருளாதார முடக்கத்தாலும் அரசியல் குழப்பங்களாலும் உழலும் ஒரு தேசமாக வெனிசுவேலா இன்று பேசுபொருளாகியிருக்கிறது. பல ஆண்டுகளாக நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு நாடு இப்போது திடீரென்று புவிசார் அரசியல் மோதல்களில் ஒன்றின் மையத்தில் வந்து நிற்கிறது. அங்கு என்ன நடக்கின்றது உலகளவில் ஏன் முக்கியமானது போன்ற கேள்விகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் பலருக்கும் எழுவது இயல்பானதே.

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலா, வடக்கே கரீபியன் கடல், மேற்கே கொலம்பியா, தெற்கே பிரேசில், கிழக்கே கயானா நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது. முக்கிய கப்பல் பாதைகளுக்கு அருகில் உள்ளது மட்டுமல்லாமல் அமெரிக்காவிலிருந்து சில மணிநேர விமானப் பயணத்தில் இந்நாட்டை அடைய முடியும் என்பதும் சவுதி அரேபியாவை விட உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை இந்த நாடு கொண்டுள்ளதும் இதன் சிறப்பம்சங்களாகும்.

எண்ணெய் இருப்புகளால் வெனிசுவேலா ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது. பல தசாப்தங்களாக எண்ணெய் வருவாய் ஒன்றே நாட்டின் பல்வேறு சமூக திட்டங்கள், உள்கட்டமைப்பு, அரசு அதிகாரத்திற்கு நிதியளித்தது. அதுவே நாட்டின் பொருளாதாரம் முழுவதையும் ஒரு வளத்தையே ஆபத்தான முறையில் சார்ந்திருக்கவும் செய்தது. ஆனால் அதன் எண்ணெய் தொழில்துறையின் நீண்டகால தவறான மேலாண்மை, அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு, மிகை பணவீக்கத்தால்(hyper inflation) பொருளாதாரம் அதலபாதாள வீழ்ச்சி அடைந்தது. அதனால் உற்பத்தி சரிந்தது. அடிப்படை உணவு, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டது. மில்லியன் கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல, அப்பிராந்தியம் முழுவதும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கியது.

வெனிசுவேலாவின் தற்போதைய பிரச்சினைகள் ஒரே இரவில் தோன்றவில்லை.

அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவிற்கு நிலையான எண்ணெய் சப்ளையராக, லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது வெனிசுவேலா. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அங்கே வலுவான முதலீடுகளைக் கொண்டிருந்தன. வெனிசுவேலா அரசாங்கங்களும் சந்தை சார்பு, அமெரிக்க சார்பு கொள்கைகளைப் பின்பற்றின. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா அரசு ஒரு ‘மாடல்’ ஜனநாயகமாகக் கருதப்பட்டது.

அதுவே 1999க்குப் பிறகு வியத்தகு முறையில் மாறியது.

1998ம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹ்யூகோ சாவேஸ் 1999ம் ஆண்டு பதவியேற்றார். கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவால் சோஷியலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டவர் ஏகாதிபத்தியத்தை, குறிப்பாக அமெரிக்காவை எதிர்த்தார். நாட்டின் எண்ணெய் மற்றும் முக்கிய தொழில்கள் மீது அமெரிக்காவின் அதிகாரத்தை எதிர்த்து தன்னுடைய அரசின் வலுவான கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆரம்பத்திலிருந்தே சாவேஸ் அமெரிக்காவை ஒரு கூட்டாளியாகப் பார்க்காமல் அரசியல் எதிரியாகவே வரையறுத்தார். எண்ணெய் வளங்கள் நாட்டின் சமூக நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணினார். அதைச் செயல்படுத்தும் விதமாக எண்ணெய் வளங்களை தேசியமயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் (அமெரிக்க நிறுவனங்கள் உட்பட) சிறுபான்மை உரிமையை ஏற்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. எண்ணெய் வருவாய் கொண்டு மக்களுக்கு இலவச சுகாதாரம், உணவு மானியங்கள், வீட்டுவசதி திட்டங்களைக் கொண்டு வந்தார். நாடும் செழிப்பாக இருந்தது. நட்பு நாடுகளுக்கு(கியூபா, கரீபியன்) மலிவான எண்ணெய் வழங்கப்பட்டது.

பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா அமெரிக்கா?



ஏப்ரல் 2002ல், ராணுவ ஆதரவுடன் இரண்டு நாட்கள் நீடித்த ஆட்சிக் கவிழ்ப்பில் சாவேஸ் சிறிது காலம் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டார். ஆட்சிக் கவிழ்ப்பை ஊக்குவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்களை அமெரிக்கா ஆதரிப்பதாகவும் சாவேஸ் குற்றம் சாட்டினார். நேரடி ஈடுபாட்டை மறுத்தாலும் வெனிசுவேலா சிவில் சமூகத்திற்கும் எதிர்க்கட்சி குழுக்களுக்கும் நிதியளித்து குறுகிய கால இடைக்கால அரசாங்கத்தை விரைவாக வரவேற்றது அமெரிக்கா. ஆனால் சாவேஸ் முன்பை விட வலுவாக மீண்டும் ஆட்சிக்குத் திரும்பினார். அமெரிக்கா மீது அவருக்கு ஆழ்ந்த அவநம்பிக்கை ஏற்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு பேச்சும் தீவிரமடைந்தது. இந்த கட்டத்திலிருந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வெளிப்படையாக விரோதமாக மாறியது.

உலகளவில் அமெரிக்க செல்வாக்கை எதிர்க்க சாவேஸ் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். கியூபாவுடன் ஒரு இறுக்கமான கூட்டணியை உருவாக்கினார். ரஷ்யா (ஆயுதங்கள், ராணுவ ஒத்துழைப்பு), சீனா (எண்ணெய்-கடன் ஒப்பந்தங்கள்), ஈரான், அமெரிக்கா தலைமையிலான நிறுவனங்களுக்குச் சவாலாக 10 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ALBA(Bolivarian Alliance for the Peoples of Our America ) போன்ற பிராந்திய முகாம்களை உருவாக்கினார். 2006ல் ஐ.நா.வில், சாவேஸ் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷை “the devil” என்று குறிப்பிட்டார். இது இரு நாட்டின் உறவுகள் எவ்வளவு வெளிப்படையாக விரோதமாக மாறிவிட்டன என்பதற்கான அடையாளமாகும்.

அமெரிக்காவும் லத்தீன் அமெரிக்காவில் ஒரு ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் சக்தியாக, சர்வாதிகார ஜனரஞ்சகத்தை ஊக்குவிப்பவராக, ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் ஒரு தலைவராக சாவேஸை சித்தரித்தது. ஆனாலும் சாவேஸின் பெரும்பாலான ஆட்சியின் போது முழுமையான பொருளாதாரத் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ராஜதந்திர உறவுகள் பதட்டமாக இருந்த போதிலும் எண்ணெய் இறக்குமதியை மட்டும் அமெரிக்கா குறைக்கவில்லை.



உச்சக்கட்ட விரோத நிலையிலும் கூட வெனிசுவேலா அமெரிக்காவிற்கு எண்ணெயை விற்க, அமெரிக்காவும் அதை வாங்கிக் கொண்டே இருந்தது. இரு பொருளாதாரங்களும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன. அரசியல் ரீதியாக விரோதமான ஆனால் பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்ட விசித்திர உறவு அப்பொழுது இருந்தது.

2000களின் முற்பகுதியில், அதிபர் ஹ்யூகோ சாவேஸின் கீழ் நாடு ஒரு சோஷியலிசப் பொருளாதார ‘மாதிரி’யை ஏற்றுக்கொண்டது. எண்ணெய் வருவாய்கள் நலத்திட்டங்களுக்கும் மானியங்களுக்கும் நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டன. இது ஆரம்பத்தில் வறுமையைக் குறைத்தாலும், பொருளாதாரம் பெரிதும் மையப்படுத்தப்பட்டதில் தனியார் தொழில்துறைகள் பலவீனமடைந்தன. எண்ணெய் வருமான லாபங்கள் திறமையாக மற்ற துறைகளில் முதலீடும் செய்யப்படவில்லை.

2013ல் சாவேஸின் மரணத்திற்குப் பிறகு அவரின் கீழ் துணை அதிபராகவும் அமைச்சராகவும் இருந்த ‘நிக்கோலஸ் மதுரோ’ அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். சாவேஸின் ஐக்கிய சோஷியலிசக் கட்சி (PSUV) ஆதிக்க சக்தியாகத் தொடர்ந்தது. மதுரோ முதலில் ஏப்ரல் 2013ல் எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரில்ஸை எதிர்த்துப் போட்டியிட்ட தேர்தலில் சாவேஸின் வெற்றிகளை விட மிகக் குறைவான வித்தியாசத்தில் வென்று வெனிசுவேலா  அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய சகாப்தத்தின் ஆட்டநாயகன் ஆனார்.

அப்பொழுது அமெரிக்க-வெனிசுவேலா  உறவுகள் மோசமாக சேதமடைந்திருந்தன. விரைவில், உலகளாவிய எண்ணெய் விலைகள் சரிந்தன. அரசாங்கத்தின் வருமானத்தின் பெரும்பகுதி எண்ணெய் விற்பனையின் லாபத்தைச் சார்ந்திருந்ததால், வெனிசுவேலா  கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பதிலாக, செலவுகளை ஈடுகட்ட பணத்தை அச்சிட்டது அரசாங்கம். இது மிகை பணவீக்கத்தைத் தூண்டி ஊதியங்களை கிட்டத்தட்ட பயனற்றதாக மாற்றியது. உணவு, மருந்து, அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. பொதுச் சேவைகள் மோசமடைந்தன. காலப்போக்கில் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இது நவீன வரலாற்றில் மிகப்பெரிய இடம்பெயர்வு நெருக்கடிகளில் ஒன்றை உருவாக்கியது. உண்மையான சரிவும் கடுமையான அமெரிக்கத் தடைகளும் சாவேஸுக்குப் பிறகு தான் வந்தன.



2018 தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முக்கிய எதிர்க்கட்சி நபர்கள் போட்டியிட தடை விதிக்கப்பட்டதாக இந்தத் தேர்தல் பல வெளிநாட்டு பார்வையாளர்களாலும் எதிர்க்கட்சித் தலைவர்களாலும் நம்பகத்தன்மை இல்லாததாக கருதப்பட்டு “மதுரோ பதவி விலக வேண்டும். ஒரு இடைக்கால அரசாங்கம் அமைத்து சர்வதேச அளவில் மேற்பார்வையிடப்பட்ட தேர்தல் மூலம் புதிய அரசாங்கம் அமைய வேண்டும்” என எதிர்க்கட்சிகள் போராடின. அரசாங்கம் இந்தக் கூற்றுக்களை மறுத்து வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிராக தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதாக வாதிட்டது. ராணுவம், நீதிமன்றங்கள், காவல்துறை, தேர்தல் அமைப்புகளின் மீது முழு கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக் கொண்டார் மதுரோ. சர்வதேச அழுத்தம் அங்கே ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் தோல்வியடைந்ததால் மக்கள் சோர்வடைந்தனர். எதிர்க்கட்சி ஒற்றுமையும் பலவீனமடைந்தது.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எதிர்க்கட்சி நாடாளுமன்றத் தேர்தல்களைப் புறக்கணித்தது. மதுரோவின் கூட்டாளிகள் வென்றனர். வெனிசுவேலா விற்குள் எதிர்க்கட்சித் தலைவர் குவைடோவின் அரசியலைத் திறம்பட முடிவுக்குக் கொண்டுவந்தனர். எதிர்க்கட்சி தலைமையிலான தேசிய சட்டமன்றம் மதுரோவின் ஜனாதிபதி பதவி சட்டவிரோதமானது என்று அறிவித்தபோது, நாடு ஒரு அரசியலமைப்பு நெருக்கடியில் சிக்கியது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் மதுரோவுக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைமையை அங்கீகரித்தன. அந்த தருணத்திலிருந்து வெனிசுவேலா  அதிகாரப் போட்டியின் மையமாக உருவெடுத்தது.

ஜூலை 28, 2024 அன்று நடந்த தேர்தல் நவீன வெனிசுவேலா  வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்தல்களில் ஒன்றாக அமைந்தது.



2025ல் நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ(ட்ரம்ப்பிற்கு அமைதிக்கான தன்னுடைய நோபல் பரிசை கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறியவர்!) தலைமையிலான எதிர்க்கட்சி மக்களின் பேராதரவில் வெகுவாக வளர்ந்து வந்தது. ராணுவத்தின் துணையோடு எதிர்ப்புகளை அடக்கி கட்டுப்பாட்டைப் பராமரித்த மதுரோவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சி போராடியது. மரியா முன்னணி எதிர்க்கட்சித் தலைவராக முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் மாநில அதிகாரிகளால் பொதுப் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரால் முறையாக தேர்தலில் போட்டியிட முடியாததால் Democratic Unitary Platform Party வேட்பாளர் கோன்சாலஸை ஆதரித்தார்.

இந்தத் தேர்தலிலும் மதுரோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். கோன்சாலஸ் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அவர்களின் சொந்த எண்ணிக்கைத் தாள்கள் காட்டுகின்றன என்று கூறி எதிர்க்கட்சிகள் அதிகாரப்பூர்வ முடிவை நிராகரித்தது. அதைத் தொடர்ந்து பல மாதங்களாக எதிர்ப்புகள் நீடித்தன. எதிர்க்கட்சியின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்காவும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளும் எட்முண்டோ கோன்சாலஸை சட்டப்பூர்வமான அதிபராக அங்கீகரித்தன. மதுரோவின் விசுவாசிகளால் தேர்தல் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையும், கட்டுப்பாடு இல்லாமையும் விமர்சிக்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து  2025ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் வெனிசுவேலாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பை  பயங்கரவாதிகள் எனவும் ‘கார்டெல் ஆஃப் தி சன்ஸ்’ உட்பட போதைப்பொருள் வலையமைப்புகளை போதைப்பொருள் பயங்கரவாதிகள் என பறைசாற்ற, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் கடுமையாக மோசமடைந்தன. ஜனநாயகம், மனித உரிமைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக எண்ணெய் மற்றும் நிதி தடை விதித்தது மட்டுமில்லாமல், அரசின் கட்டமைப்புகள் போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு உதவுவதாகவும், அமெரிக்க பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.



பாதுகாப்புப் படைகளையும் குற்றவியல் குழுக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் வாஷிங்டன் அவர்களுக்கு எதிராக ராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறியது. மதுரோவின் அரசாங்கத்திற்கு ஜனநாயக சட்டபூர்வமான தன்மை இல்லை என்றும் புதிய மாற்றம் ஜனநாயக நிர்வாகத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் வாதிட்டு மதுரோவையும் அவரது மனைவியையும் ஜனவரி 3, 2026 அன்று நாடு கடத்தி அமெரிக்காவிற்குச் சிறைக்கைதிகளாக அழைத்து வந்தது ட்ரம்ப் அரசு.

வெனிசுவேலாவின் மகத்தான எண்ணெய் இருப்பு, சீனா, ரஷ்யா, ஈரான், கியூபா போன்ற நாடுகளுடனான அதன் கூட்டணி, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுக்கு முரணாக இருப்பதாலேயே அமெரிக்கா அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச அளவில் விமர்சித்தாலும் அமெரிக்க பாதுகாப்பும் வெனிசுவேலா அரசின் முறையற்ற நிர்வாகத்தையும் கவனத்தில் கொண்டே மதுரோ நாடு கடத்தப்பட்டதாக வெள்ளைமாளிகை கூறி வருகிறது.

எந்தவொரு தீர்வும் வெனிசுவேலாவின் விருப்பத்தையும் சர்வதேச சட்டத்தையும் மதிக்க வேண்டும் என்று பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் அடாவடி நடவடிக்கைகளையும் ஒருதலைபட்ச தலையீட்டையும் கண்டித்து அமைதியான அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி வருகின்றன. லத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.

கொலம்பியா, பிரேசில் போன்ற அண்டை நாடுகள் மதுரோவின் ஆட்சியை விமர்சித்தாலும், பிராந்திய ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு சர்வதேச விதிமுறைகளின்படி நடந்து கொள்ளுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளன. ராணுவத் தலையீடும் பலத்தைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களும் மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சர்வதேச கடமைகளை மீறுவதாக ஐ.நா. கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 

மதுரோவை வெனிசுவேலாவின் சட்டப்பூர்வமான அதிபதியாக சீனா அங்கீகரித்து, தடைகள், அரசியல் அழுத்தம் மூலம் அவரை நீக்குவதற்கான வெளிப்புற முயற்சிகளை நிராகரிக்கிறது. மற்றொரு நாட்டின் உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு ஈடுபாட்டை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அமெரிக்கத் தடைகள், எதிர்க்கட்சித் தலைவர்களை அங்கீகரிப்பது போன்றவை வெனிசுவேலாவின் தேசிய இறையாண்மையை மீறுவதாகக் கருதுகிறது. 2000களின் நடுப்பகுதியிலிருந்து சீனா வெனிசுவேலாவிற்கு பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களைக் கடனாகக் கொடுத்துள்ளது. அது பெரும்பாலும் எண்ணெய் ஏற்றுமதி மூலம் திருப்பிச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி மாற்ற முயற்சிகளுக்குப் பின்னர் தைவான், ஹாங்காங், ஷின்ஜாங் மீதான சீனாவின் அழுத்தத்தை எதிர்க்க இதை அமெரிக்கா பயன்படுத்தப்படலாம் என்பதில் சீனா எச்சரிக்கையாக உள்ளது. மதுரோ அரசாங்கம் சீனாவின் நீண்டகால முதலீடுகளைப் பாதுகாத்து வருவதாலும் அமெரிக்காவின் அரசியலை சீனா எதிர்க்கிறது. தலைமை மாற்றங்கள், உள் அரசியலமைப்பு செயல்முறை மூலம் மட்டுமே நிகழ வேண்டும் என்று வாதிடுகிறது.

ரஷ்யாவும் மதுரோவை உறுதியாக ஆதரிக்கிறது. அமெரிக்கத் தடைகள், ராஜதந்திர அழுத்தத்தை சட்டவிரோதமானது. ஸ்திரமின்மைக்கு இட்டுச் செல்கிறது என்று கண்டிக்கிறது. உலக அரசியலில் குறிப்பாக, லத்தீன் அமெரிக்காவில், வரலாற்று ரீதியாக அமெரிக்காவின் செல்வாக்கை எதிர்க்கும் நோக்கில் வெனிசுவேலாவை ரஷ்யா ஆதரிக்கிறது. ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களையும் பாதுகாப்பு உபகரணங்களையும் வெனிசுவேலா வாங்கியுள்ளது. வரையறுக்கப்பட்ட ராணுவ ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப ஆதரவையும் ரஷ்யா வழங்கியுள்ளது. ரஷ்ய நிறுவனங்கள் அங்கே எண்ணெய் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. மேலும், ஈராக், லிபியா, யுகோஸ்லாவியாவில் அமெரிக்கா தலைமையிலான தலையீடு நீண்டகால உறுதியற்ற தன்மைக்கு வழிவகுத்தது போல வெனிசுவேலாவும் அதே விதியை எதிர்கொள்ளக்கூடும் என்று வாதிடுகிறது. இந்த நெருக்கடியை “பொருளாதாரப் போர்” என்றும் வெனிசுவேலாவின் வீழ்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரத் தடைகள்தாம் காரணம் என்றும் வலியுறுத்துகிறது.

மதுரோவின் வலிமையான கூட்டாளிகளில் ஒன்றான கியூபா வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளை அந்நிய நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கண்டித்து, “அரசு பயங்கரவாதம்” என்று கூறியிருக்கிறது. வெனிசுவேலா பல ஆண்டுகளாக கியூபாவிற்கு மானிய விலையில் எண்ணெய் வழங்கி வருகிறது. அதற்குப் பிரதிபலனாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்பு ஆலோசகர்களை கியூபாவும் அனுப்பியுள்ளது. பொருளாதாரத் தனிமைப்படுத்தல் மூலம் தங்களை அழித்தது போல் சோஷியலிச அரசாங்கங்களை அழிக்கும் முயற்சியாக இதை வகைப்படுத்துகிறது. வெனிசுவேலா எண்ணெயை கியூபாவின் எரிசக்தி சார்ந்திருப்பதால் கியூபாவிற்கும் கொடுமையான காலமாகத் தான் இனி இருக்கப்போகிறது.

நிகரகுவா, பொலிவியா,வட கொரியா, ஈரான், சிரியா நாடுகளும் இதை முன்னோடியாக வைத்துக் கொண்டு நாளை தங்கள் நாடுகளும் தாக்கப்படுமோ என்று அஞ்சி தடைகளை கண்டித்து கூட்டு அறிக்கைகளை வெளியிடுகின்றன.

இதற்கெல்லாம் பயப்படுபவரா பெரியண்ணன்? எதிரி நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் அருகாமையில் கூடாரம் போட்டு தங்கியிருப்பது தன் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரானது என்பதாலும்  வெனிசுவேலாவை கட்டுக்குள் கொண்டு வர துடிக்கிறார் அங்கிள் சாம்.

இதுநாள் வரையில் சர்வாதிகார ஆட்சியினால் 7 மில்லியன் மக்கள் பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் உணவு, மருந்து, மருத்துவம், கல்வி குறைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு குறைந்து அடுத்த தலைமுறைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் அதிரிபுதிரி நடவடிக்கைகளால் வெனிசுவேலா மக்களுக்கு என்ன பயன்?

பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் விரைவான அரசியல் தீர்வோ உடனடி பொருளாதார முன்னேற்றமோ அல்ல. சட்டபூர்வமான தேர்தலும், ஆட்சியாளர் தேர்வும், பொருளாதரத் தடைகள் நீங்கி வர்த்தகம், பயணத்தை அனுமதிக்கும் அமெரிக்க கொள்கைகள் தான். மிகச்சிலரே அமெரிக்கா தலைமையிலான தீர்வுகளையும், ராணுவ தலையீடு, விரைவான ஜனநாயக மாற்றத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க நடவடிக்கைகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை மோசமாக்கினால் எதிர்ப்புகள் வளரும். நிலைத்தன்மையை மேம்படுத்தினால் ஆதரவு அதிகரிக்கும்.

வெனிசுவேலாவைப் பொறுத்தவரை, மையக் கேள்வி இனி “அமெரிக்காவின் செயல்பாடுகள் சரியா, தவறா?” என்பதல்ல.

“இனி அவர்கள் மீண்டும் கண்ணியத்துடன் வாழ அமெரிக்காவும் மற்ற நாடுகளும் உதவுமா?” என்பதுதான்!

ஒரு கொலையிலிருந்து உருவாகும் புதிய அரசியல் மதம்


உலகிற்கு ஜனநாயகத்தின் அடையாளமாக விளங்கிய அமெரிக்கா, இன்று தன் உள்ளார்ந்த அமைதியையே இழந்து நிற்கிறது. அரசியல் உரைகள் நிதானத்தை இழந்து கோபமாக மாறியுள்ளன. நம்பிக்கைகள் மதமாகவும், மதம் அரசியல் ஆயுதமாகவும் மாறிவிட்டது. சட்டம், சமநிலை அதிகாரப் பிரிவு என்றிருந்த அமெரிக்க அரசியல், இன்று உணர்ச்சி, பயம், அடையாள அரசியல், மத நம்பிக்கைகளால் வழிநடத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல்கள் இனி கொள்கை விவாதங்களாக இல்லாமல், “நாம்” மற்றும் “அவர்கள்” என்ற எதிர்மறை முகாம்களுக்கிடையிலான மோதல்களாக மாறி விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அரசியலமைப்பு மதத்தையும் அரசையும் பிரித்துப் பார்க்கச் சொன்னாலும், நடைமுறையில் அந்த எல்லை மங்கத் தொடங்கியுள்ளது. அரசியல் வன்முறை, மதம், அரசு அதிகாரம் ஆகியவை ஒன்றோடொன்று கலக்கும் ஆபத்தான தருணம் தற்பொழுது உருவாகியுள்ளது.

இந்தப் பின்னணியில் நிகழ்ந்த ‘சார்லி கிர்க்’கின் கொலை, ஒரு தனிநபரின் மரணத்தைத் தாண்டி, அரசியல் அதிகாரம், மத உணர்ச்சியை எவ்வாறு பயன்படுத்துகிறது, ஒரு மனிதனின் மரணம் கூட தனிப்பட்ட துயராக இல்லாமல் எவ்வாறு ஒரு இயக்கத்தின் புனிதச் சின்னமாக மாற்றப்படுகிறது என்பதற்கான முக்கியமான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

யார் அந்த ‘சார்லி கிர்க்’?

அவர் ஒரு அமெரிக்க வலதுசாரி அரசியல் செயல்பாட்டாளர். ‘Turning Point USA’ என்ற தொண்டு அமைப்பின் கூட்டமைப்பாளர். பிரபல ஊடக பேச்சாளர். 18 வயதிலேயே அரசியல் இயக்கத்தைத் தொடங்கி, பல ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கிய தேசிய வலதுசாரி இளைஞர் குழுவைக் கட்டியெழுப்பியவர். கிறிஸ்துவ மத நம்பிக்கைகளை அரசியல் உரைகளுடன் கலந்து பேசிய உணர்ச்சிப்பூர்வமான உரையாடல்கள், சமூக ஊடக செயல்பாடுகளால் விரைவிலேயே மிகவும் பிரபலமானவர். அவரது கருத்துகள் பெரும் ஆதரவையும் கடுமையான எதிர்ப்பையும் பெற்றன. அதிபர் ட்ரம்ப்புடனும் MAGA இயக்கத்துடனும் வலுவாக இணைந்து சமூக, அரசியல் விவாதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

செப்டம்பர் 10, 2025 அன்று யூட்டா மாநிலம் ஓரெம் நகரில் உள்ள Utah Valley University வளாகத்தில் Turning Point USA அமைப்பின் நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தினரின் முன்னிலையிலேயே துப்பாக்கிச்சூட்டில் பலியானார். அப்போது அவருக்கு வயது 31. இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசியல் வன்முறை, மத–அரசியல் பேச்சு, பொது பாதுகாப்பு குறித்து தீவிர விவாதங்களைத் தூண்டியது.

அவர் இறந்த பிறகு அவர் மனைவி எரிக்காவுடன் சேர்ந்து நிறுவிய Turning Point USA என்ற அமைப்புடன் இணைந்து ட்ரம்ப் அரசே ஒரு பிரமாண்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மிகுந்த உணர்ச்சிப் பொழிவுடன் இயேசு கிறிஸ்துவை நினைவூட்டும் மதப் படிமங்களுடன் அரசியல் எதிரிகளைக் குறிவைக்கும் கடுமையான போர்முனை பேச்சுகளுடன் நடைபெற்றது. ‘சார்லி கிர்க்’ ஒரு தியாகியாக உருவகப்படுத்தப்பட்டார்.

இந்த நிகழ்வு அமெரிக்க அரசியலில் ஒரு ஆபத்தான திருப்பத்தை உருவாக்கியிருக்கிறதா? அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படை விதியை நடைமுறையில் மெதுவாகத் தகர்த்துக் கொண்டிருக்கிறதா? டொனால்ட் ட்ரம்ப் பேசும் “பழிவாங்கல்” அரசியலுடன், பல்வேறு மதக் குழுக்கள் தங்கள் நம்பிக்கைகளை இணைத்துக்கொள்வது நல்லதா? இந்தச் சூழலில் தான் அமெரிக்காவைச் சேர்ந்த போப் லியோ XIV ட்ரம்ப் நிர்வாகத்தின் சில கொள்கைகளை “கிறிஸ்துவத்துக்கு எதிரானவை” என்று கடுமையாக கண்டித்துள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தச் சட்டம்(First Amendment), “காங்கிரஸ் எந்த மதத்தையும் அரசு மதமாக நிறுவும் வகையில் சட்டம் இயற்றக்கூடாது. மதச்சுதந்திரத்தையும், கருத்து, ஊடக சுதந்திரத்தையும் தடுக்கும் சட்டங்களையும் இயற்றக்கூடாது” என தெளிவாகக் கூறுகிறது. தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், ட்ரம்ப் நிர்வாகம் இந்தச் சட்டத்தை நேரடியாக மீறவில்லை. ஏனெனில் காங்கிரஸில் எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை.

ஆனால் இங்கே தான் முக்கியமான விஷயம் தொடங்குகிறது.

“ஒரு ஜனநாயக சமூகத்தை வழிநடத்துவதில் சட்டங்களைவிட மக்களின் பழக்கவழக்கங்களும் மனநிலைகளும் தான் மிக முக்கியமானவை” என 19ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் அலெக்ஸிஸ் டொக்வில் கூறிய ஒரு ஆழமான உண்மையை MAGA தலைவர்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றனர். அதாவது, மக்கள் எதை நம்புகிறார்கள், எதைப் புனிதமாகக் கருதுகிறார்கள், எதை உணர்ச்சியோடு ஏற்கிறார்கள் என்பவை தான் சட்டத்தைவிட அரசியலை அதிகம் மாற்றும் சக்தி கொண்டது.

அதனால் தான் ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக,
ஒரு மதச் சடங்கு போன்ற அரசியல் நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதையும் உணர்ச்சியையும் நேரடியாக MAGA குழுவினர் தாக்கினர். என்ன தான் அமெரிக்க அரசியலில் மதத்தின் தலையீடு இல்லை என்று சொல்லிக்கொண்டாலும் அடிமைகள் காலந்தொட்டு எப்போதும் அதன் பங்கு இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனாலும் அமெரிக்க அரசு இதுவரை தன் அடக்குமுறை அரசியல் நடவடிக்கைகளுக்கு நேரடியாக “கடவுளின் அனுமதி” உண்டு என்று இவ்வளவு வெளிப்படையாகக் கூறியதில்லை. இந்தத் தருணத்தில், “கிர்கியனிட்டி”(Kirkianity, கொல்லப்பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டாளரை மையமாகக் கொண்ட ஒரு மதம்) நடைமுறையில் அரசு மதமாக மாறியிருக்கிறது.

அதிபரின் துணை தலைமைச் செயலாளர் ஸ்டீபன் மில்லர் , “சார்லி இறந்த அன்று தேவதைகள் அழுதனர். அந்தக் கண்ணீர் இன்று நம் இதயங்களில் தீயாக மாறியுள்ளது. அந்தத் தீ, எதிரிகள் புரிந்துகொள்ள முடியாத ஒரு கோபமாக எரிகிறது” என்று நினைவஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் கூறினார். இது கிறிஸ்தவ மதத்தின் மையமான “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு” என்ற போதனைக்கு எதிரானது. கிர்க்கின் மனைவி எரிகா, தன் கணவனைச் சுட்டுக் கொன்றவரை மன்னிப்பதை தன் உரையின் மையமாக வைத்து, “நான் மன்னிக்கிறேன். இயேசு அப்படித்தான் செய்தார். வெறுப்புக்குப் பதில் வெறுப்பு அல்ல” என்று பேசினார். ஆனால் ட்ரம்ப் அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். “நான் என் எதிரிகளை வெறுக்கிறேன். அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்பவில்லை. என்னுடைய நீதித்துறை தீவிர இடதுசாரி வன்முறையாளர்கள் மீது விசாரணை நடத்தும். கொலையின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து தண்டனை கொடுக்கும். இது மன்னிக்கும் மதம் அல்ல. போர்முனை மதம்” என்று அதே மேடையில் முழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் நிகழும் மாற்றங்கள் நாட்டின் எதிர்காலம் எந்த திசையில் நகர்கிறது என்பதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

“ஒரு அரசு மதத்தின் ஆதரவைத் தன் பலமாக நம்பும்போது பலவீனமானதாக மாறிவிடும்” என்ற ‘டொக்வில்’-லின் எச்சரிக்கையைப் பற்றி MAGA இயக்கத்தின் “பண்பாட்டுப் போராளிகள்” கவலைப்படவில்லை. அவர்களின் ஒரே இலக்கு, மதத்தின் பெயரால் “பண்பாட்டு ஆதிக்கம்” (Cultural Hegemony) செலுத்துவது மட்டுமே.

அமெரிக்காவில் பல மதங்கள், பல பிரிவுகள், பல நம்பிக்கைகள் இருப்பது இதுவரையில் அரசுக்கு ஒரு பலமாகவே இருந்து வருகிறது. மதம் கோட்பாட்டு ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்ததால் அரசுக்குப் போட்டியாக இருக்க வேண்டிய ஒருங்கிணைந்த ஒற்றுமையை அது ஒருபோதும் அடைய முடியவில்லை. டொக்விலின் பார்வையில் இந்த மத வேற்றுமையே அரசுக்குப் போட்டியாக ஒரு மதம் உருவாகாமல் தடுத்து, அரசு தோல்வியுற்றபோது மக்களுக்கு ஆறுதல் வழங்க உதவியது. ஆனால் இரு அடிப்படைவாத குழுக்களால் இந்த நிலை தற்போது மாறிவருகிறது.

முதலாவதாக, அடிப்படைவாத சுவிசேஷகர்கள். நீண்ட காலமாக நவீனத்துவத்தின், மதச்சார்பற்றவர்களின் எந்தவொரு சமரசத்தையும் எதிர்ப்பவர்கள். வெள்ளை ஆண் மேலாதிக்கம், ஓரினச்சேர்க்கை, திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு, கருக்கலைப்புக்கு எதிரான பிற்போக்குத்தனமான கருத்துக்கள் கொண்டுள்ளவர்கள். இவர்கள் பெரும்பாலும் கீழ் சமூக அடுக்குகளிலும் ஆழமான தெற்கின் “பைபிள் பெல்ட்” போன்ற சில பகுதிகளிலும் மட்டுமே பரவலாக MAGAவின் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இருப்பவர்கள்.

இரண்டாவதாக, நோட்ரேடேம் பேராசிரியர் பேட்ரிக் டெனீன், ஹார்வர்ட் சட்டப் பேராசிரியர் அட்ரியன் வெர்மியூல் உள்ளிட்ட ‘உயரடுக்கு’ பொது நல கன்சர்வேட்டிவ் கத்தோலிக்க சிந்தனையாளர்கள். புதிய ஒப்பந்தம், சிறந்த சமூகம், கிளிண்டன்-ஒபாமாவின் புதிய தாராளமயம் போன்ற பல்வேறு போர்வைகளில் தாராளவாத அரசின் தலையீடுகள் காரணமாக அமெரிக்காவில் சமூக ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற சுவிசேஷகர்களின் நம்பிக்கையை இவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும், சார்லி கிர்க்கின் திருப்புமுனை போன்ற ஒரு கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தைப் பற்றி எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். கிர்கியனிட்டிக்கு மாறாக, இந்த ‘We the People’ குழு, பாவத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை, சட்டங்கள், பழைய மத கட்டுப்பாடுகள் மூலமே சமூக ஒழுங்கிற்கான தீர்வு என்பது சாத்தியப்படும் என்ற நம்பிக்கை. இது ஜனநாயகமயமாக்கல், தொழில்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றால் ஏற்பட்ட எழுச்சிகளுக்கு முன்னர் அதாவது, நவீன காலத்திற்கு முந்தைய காலத்தில் வகுக்கப்பட்ட ஒரு பிணைப்பு கோட்பாடாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தச் சிந்தனை உச்ச நீதிமன்ற மட்டத்தில் கணிசமான செல்வாக்கையும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு பழமைவாத குழுக்களும் எப்படியாவது அறிவியல் கண்டுபிடிப்புகளை நிறுத்திவிடுவார்களோ என்று பழமைவாத கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப செல்வந்தர்களே அஞ்சுகிறார்கள். என்ன ஒரு முரண்! செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி தொழில்கள், அணு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அச்சம் எழத்தானே செய்யும்?

எவாஞ்சலிக்கர்களின் உணர்ச்சி, கத்தோலிக்கர்களின் சட்ட அறிவு, தொழில்நுட்ப முதலாளிகளின் பணம் இந்த மூன்றையும் இனம் கண்டு கொண்ட ட்ரம்ப், சார்லி கிர்க்-கின் இறப்பை வைத்து இந்தக் கூட்டணியை வெளிப்படையாக ஒரு மதமாகவே மாற்றிவிட்டார்.

இது ஆபத்தான முடிவு.

இந்தப் புதிய அரசியல்–மத கலவை, அமெரிக்காவின் மத–அரசு பிரிவை சிதைக்கிறது. வெறுப்பை “அன்பு” என மறைக்கிறது. பழிவாங்கலை “நீதியான கோபம்” என அழைக்கிறது. கொல்லப்பட்ட ஒருவரை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் மதம் எந்த சமுதாயத்துக்கும் நல்லதல்ல. ‘கிர்கியனிட்டி’, MAGA இயக்கத்தில் உருவாகும் ஒரு அரசியல் மதம். பன்முக அமெரிக்காவின் ஆன்மாவுக்கு அந்நியமானது.

இன்றைய அமெரிக்காவில் நிகழ்ந்து கொண்டிருப்பது சாதாரண அரசியல் மோதலோ அல்லது ஒரு கொலையின் பின் எழுந்த துயரமோ அல்ல. அது மத நம்பிக்கையை அதிகாரத்தின் கருவியாக மாற்றும் முயற்சி. துக்கத்தை நீதியாகவும், பழிவாங்கலைப் புனிதமாகவும் மாற்றும் ஆபத்தான திருப்பம். வரலாறு மீண்டும் மீண்டும் எச்சரித்திருப்பது ஒன்று தான்: அரசு தன்னை தெய்வீக மொழியில் அலங்கரிக்கத் தொடங்கும் போது, எதிர்ப்பும் விமர்சனமும் குற்றமாக மாறிவிடும். மதமும் அரசும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படை உண்மை, ஒரு சட்ட வரியாக அல்ல, ஒரு பாதுகாப்புச் சுவராகவே உருவாக்கப்பட்டது. இந்தப் புதிய அரசியல்–மத எழுச்சி ஒரு தற்காலிக தீப்பொறியா, அல்லது நீண்ட நிழலா என்பது சட்டங்களால் அல்ல; மக்களின் மனச்சாட்சியாலும், அவர்களின் கோபத்தையும் நம்பிக்கையையும் வேறுபடுத்திக் காணும் ஞானத்தினாலும் மட்டுமே தீர்மானிக்கப்படும்.

மானிடம் தழைத்தோங்க இந்த மத–அரசியல் எழுச்சி விரைவில் அணைந்து போக வேண்டும். நம்பிக்கை, அன்பு, மனிதநேயம் ஆகியவை மட்டுமே இந்த குழப்பத்தைத் தாண்டி நாட்டையும் மக்களையும் மீட்டு நிலைத்திருக்கும்.

Sunday, January 18, 2026

Haq

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் மிகவும் கவனத்தை ஈர்த்த படம் என்றால் அது தற்பொழுது நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகியிருக்கும் 'Haq' இந்தி திரைப்படம் தான்! ஒரு படம் பிடித்துப் போக ஒரு சில காரணங்கள் இருக்கலாம். இந்தப் படம் உண்மையில் நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் எளிதில் ஒன்றிவிடும் பாணியில் மிக அழகாக, எதார்த்தமான வசனங்களுடன், கதைக்கேற்ற இசையுடன் ரம்மியமாக எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. 

படம் முடியும் பொழுது தோன்றியதெல்லாம் தன்னுடைய உரிமைக்காக ஒரு பெண் எப்படியெல்லாம் போராடியிருக்கிறாள்? இன்றும் கூட எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது? பெரும்பாலானவர்களுக்குத் தத்தம் உரிமைகள் என்பது என்னவென்பதே தெரிவதில்லை. பெண்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் அவர்களை எப்படியெல்லாம் தரக்குறைவாக நடத்துமோ அப்படித்தான் காலம்காலமாக ஆணாதிக்க உலகம் நடந்து வருவது கண்கூடு. அதிலும், ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து கொண்டால்? பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை? ஐயோ பாவம் தான். ஆனால் அதையெல்லாம் எதிர்கொண்டு ஒரு பெண் போராடுகிறாள் என்றால் எத்தனை மனத்துயர் இருக்க வேண்டும்? கூடவே, தைரியமும் போராட்டக்குணமும் இருந்தால் ஒழிய, ஆணாதிக்க வர்க்கத்தினரை எதிர்கொள்வது சாத்தியமல்லவே? அதைத்தான் இந்தப் படம் உணர்த்துகிறது. அவளின் போராட்டத்திற்கு துணையாக நிற்கும் அவளின் அப்பா போன்ற ஆண்கள் தான் இத்தகைய போராடும் பெண்களின் பலம்.

இந்தப் படம் பார்ப்போரை சில கேள்விகள் கேட்கத்தான் செய்கிறது. மதத்தை காரணமாகக் காட்டி ஒரு ஆண் என்ன வேண்டுமானால் செய்யலாம் என்ற அதிகாரத்தை உண்மையில் யார் கொடுத்தது? மதக் காவலர்களின் போர்வையில் நடமாடும் காட்டுமிராண்டிகளா? ஆண் செய்தால் ஏற்றுக்கொள்ளும் உலகம் பெண்ணிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் ஏன் விதிக்க வேண்டும்? மதம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்பவர்களை அவர்கள் துணைக்கு அழைக்கும் புத்தகத்தில் சொல்லியிருப்பதை மேற்கோள் காட்டி நன்றாகவே கேள்வி கேட்கிறாள் பாதிக்கப்பட்ட கதாநாயகி. உடனே வழக்கை ஷரியா நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அடுத்த அக்கப்போர். இப்படி பெண்களை வஞ்சிக்கும் சட்டங்களை எதிர்த்துப் போராடி எப்படி வெற்றி பெறுகிறாள் என்பதை மிக நேர்த்தியாக அனாவசியமான கூச்சல்கள் இல்லாமல் அவள் படும் மனவதைகளையும் குழந்தைகள், குடும்பம் என்று அவளைச் சார்ந்தவர்கள் படும் அவதிகளையும் கணவன், மாமியாரின் அடாவடித்தனத்தையும் மிக இயல்பாக கடத்துகிறது இப்படம்.

அழுகையும் மௌனமும் வசனங்களை விட ஆழமாக சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறது. ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதோ அல்லது அமைப்பால் அவர் கண்ணுக்குத் தெரியாதவராக நடத்தப்படும்போதோ, அது ஒரு தனிப்பட்டவரின் துயரம் மட்டுமல்ல அரசியலமைப்புச் சிக்கலுமாகும்.

"வாழ்வு" என்பது வெறும் உயிர் வாழ்வது மட்டுமல்ல. மனித கண்ணியம், வாழ்வாதாரம், உறைவிடம், உணவு, நீதி பெறுவதற்கான அணுகல் என அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை இந்தியச் சட்டம் வலியுறுத்துவதை இப்பெண்ணிற்கான நீதி தெளிவுபடுத்தியுள்ளது. பாலினம், சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படும் பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பு அளித்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் காட்டுகிறது. 

ஷாஜியா பானோவாக மிக அருமையாக தன்னுடைய கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்திருந்தார் யாமி கவுதம். அவளது கணவனாக இம்ரான் ஹாஷ்மியின் நடிப்பும் அருமை. 

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும். திருந்த வேண்டியவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். திருந்துவார்களா?

இப்படி ஒரு கதையை, அதுவும் உண்மையில் நடந்த கதையை அப்படியே படமாக்க தமிழில் யாரும் இல்லாதது துரதிர்ஷ்டமே!

நமக்கு வாய்த்ததெல்லாம் திருட்டு, புரட்டு, உருட்டுகள் தான்😏😏😏


Thursday, January 1, 2026

பாதுகாப்பு, அடையாளம், கட்டுப்பாடு: சீனாவின் இஸ்லாமிய தீவிரவாத அணுகுமுறை

சொல்வனம் இதழ் 357ல் வெளியான சீனாவின் உய்குர் முஸ்லீம்களை அரசு கையாண்ட விதத்தைப் பற்றின என்னுடைய கட்டுரை.


சீனா என்றதும் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பிரம்மாண்ட நகரங்கள், பழங்காலக் கோயில்கள், சீனப் பெருஞ்சுவர் தான் பலருக்கும் நினைவில் வரும். உலகில் பெரும்பாலானோருக்கு, சீனா கலாச்சார ரீதியாக ஒரே சீரான நாடாகவும் கிழக்கு ஆசியா முழுவதும் தடையின்றிப் பரவியிருக்கும் ஒரு ஒற்றை நாகரிகமாகவும் காட்சியளிக்கிறது. ஆனாலும், பெய்ஜிங்கிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், பாலைவனங்களையும் மலைத்தொடர்களையும் கடந்து, முற்றிலும் மாறுபட்ட ஒரு சீனா உள்ளது. அங்கே, ஒரு காலத்தில் சந்தைகளில் தொழுகைக்கான அழைப்பு ஒலித்தது. துருக்கிய மொழிகள் தெருக்களில் நிறைந்து மத்திய ஆசிய மரபுகள் அன்றாட வாழ்க்கையை வடிவமைத்திருந்தன.

இதுவே சீனாவின் இஸ்லாமியர்களின் மையப்பகுதி ஆகும். அங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, தலைப்புச் செய்திகளையும் முழக்கங்களையும் கடந்து, புவியியல், வரலாறு, சமூகம், பாதுகாப்புச் சிக்கல்கள், அரசாங்கக் கொள்கைகள் ஆகியவற்றை படிப்படியாகக் கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியம். சமீப காலமாகத்தான் இரண்டு கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் தாயகமாகவும் அந்நாடு இருக்கிறது என்பதை உலக நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. அதுவும் உலகளாவிய இஸ்லாமியப் பயங்கரவாதம் தலைவிரித்தாடும் காலத்தில் சீனாவில் இருக்கும் முஸ்லிம்களைப் பற்றிய தகவல்களும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலும் பெருகியுள்ளது. சீனாவும் அவர்களை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறது என்பதைச் செய்திகளில் அறிகிறோம்.



சீனாவின் தொலைதூர மேற்கு, வடமேற்குப் பகுதிகளில் மத்திய ஆசியாவிற்கு மிக நெருக்கமான பரந்த நிலப்பரப்பில் தனித்துவமான கலாச்சாரத்துடன் இவர்கள் வாழ்ந்து வந்தாலும் வரலாற்று ரீதியாக அப்பகுதிகள் அமைதியற்றவையாக சீன அரசுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக உலகளாவிய விவாதத்தின் மையமாகவும் மாறி, பிரிவினைவாதத்தையோ வன்முறையையோ அனுமதிக்காமல், மதத் தீவிரவாதம், இன அடையாளம், தேசிய ஒற்றுமையை சீனா எவ்வாறு கையாள்கிறது என்று உலக அரங்கில் பேசுபொருளாகவும் விவாதிக்கப்பட்டுவருகிறது.

சீனாவின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள இந்தப் பகுதிகள் எங்கு அமைந்துள்ளன, அங்கு யார் வாழ்கிறார்கள், வரலாறு இன்றைய பதட்டங்களை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சீனா அதிகாரப்பூர்வமாக 56 இனக் குழுக்களை அங்கீகரித்துள்ளது. அவற்றில் 10 இஸ்லாமியக் குழுக்கள் இருந்தாலும் அமைதியின்மை, அரசின் கட்டுப்பாடு குறித்த விவாதங்களில் இரண்டு பகுதிகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.


முதலாவதாக, சீனாவின் வடமேற்கில் கஜகஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் உட்பட 8 நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ‘ஷின்ஜாங் (Xinjiang) உய்குர் தன்னாட்சிப் பகுதி’. இது சீனாவின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இப்பகுதி மட்டும் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மொத்த பரப்பளவை விடப் பெரியது. 2022 கணக்கின் படி இதன் மக்கள் தொகை சுமார் இரண்டரைக் கோடி. பெரும்பாலும் ‘டர்கிக்’ இனக்குழுவைச் சார்ந்த சன்னி முஸ்லீம்கள். மாண்டரின் மொழியை விட உஸ்பெக்குக்கு நெருக்கமான உய்குர் மொழி பேசுபவர்கள். இசை, நடனம், பஜார், மசூதியை மையமாகக் கொண்ட சமூக வாழ்க்கை வாழ்பவர்கள். விவசாயம், வர்த்தகம், கைவினைப்பொருட்கள் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. இவர்களது மொழி, கலாச்சாரம், வரலாற்று நினைவுகள் இவர்களை கிழக்கு சீனாவை விட மத்திய ஆசியாவுடன் நெருக்கமாக இணைக்கின்றன.

மேலும், ஷின்ஜாங் ஒருபோதும் தனிமைப்படுத்தப்பட்ட பிராந்தியமாக இருந்ததில்லை. இது சீனா, பாரசீகம், அரேபியா, ஐரோப்பாவை இணைக்கும் ‘Silk Road’ பாதையில் அமைந்துள்ளது. ஐரோப்பாவின் பல பகுதிகள் இஸ்லாத்தை அறிந்துகொள்வதற்கு முன்பே, 8 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் இங்கு நுழைந்துள்ளது. “ஷின்ஜாங்” என்ற பெயருக்கு நேரடிப் பொருள் “புதிய எல்லை” என்பதாகும்.

இரண்டாவதாக, மிகவும் சிறிய, ‘ஹுய்’ முஸ்லிம்களின் தாயகமான ‘நிங்சியா (Ningxia) ஹுய் தன்னாட்சிப் பகுதி’. இங்குள்ளவர்கள் இனரீதியாக ஹான் சீனர்களைப் போன்றவர்கள். மாண்டரின் மொழியில் பேசினாலும் மதத்தால் இஸ்லாமியர்கள். வரலாற்று ரீதியாக அதிக ஒருங்கிணைப்புடனும், குறைந்த மோதல் போக்குடனும் இருப்பவர்கள்.

வெவ்வேறு காலங்களில் துருக்கிய ராஜ்ஜியங்கள், மங்கோலியர்கள், சிங் (Qing) சீனாவால் இப்பகுதிகள் ஆளப்பட்டு 1884ல் அதிகாரப்பூர்வமாக நவீன சீனாவுடன் இணைக்கப்பட்டது. 1930,1940களில் குறுகிய கால பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றி, பனிப்போர் காலத்தில் சித்தாந்தப் போராட்டங்கள் துவங்க, 1949-க்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தனது கட்டுப்பாட்டை இங்கு நிலைநிறுத்தியது. வரலாற்று அடுக்குகளால் சீனாவின் முஸ்லிம் கொள்கைகள் ஹுய் முஸ்லிம்களுக்கும் உய்குர்களுக்கும் இடையில் கடுமையாக வேறுபடுகின்றன.

சீனாவின் கவலை இஸ்லாம் மதம் பற்றியது அல்ல. மாறாக அது “மூன்று தீமைகள்” என்று வரையறுக்கும் பிரிவினைவாதம், மதத் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற விஷயங்களைப் பற்றியது:

1990-கள் முதல் 2010-களின் நடுப்பகுதி வரை, ஷின்ஜாங்-ல் கத்திக்குத்துத் தாக்குதல்கள், தொடர் குண்டுவெடிப்புகள், கலவரங்கள், பொதுமக்கள், காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. தாக்குதல் நடத்திய சிலருக்கு, ஆப்கானிஸ்தான், சிரியாவில் செயல்படும் குழுக்கள் உட்பட வெளிநாட்டு ஜிஹாதி வலைப்பின்னல்களுடனும் தொடர்பு இருந்தது. சீனாவின் தலைமையோ பிராந்திய ஒருமைப்பாட்டை உயிர்நாடியாகக் கருதுகிறது. இவர்களை விட்டால் பிரிந்து சென்றுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்தது. சோவியத் ஒன்றியத்தின் சரிவு, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வரலாற்று உதாரணங்கள் சீனக் கொள்கை சிந்தனையை வலுவாகப் பாதிக்க, இப்பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது அவர்களின் தலையாய சிந்தனையாக உருமாறியது. அதுவும் தவிர, எண்ணெய், எரிவாயு, நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்துள்ள பகுதி மட்டுமல்லாது மத்திய ஆசியாவிற்கான நுழைவாயில் என்பதால் புவியியல் ரீதியாகவும் இப்பகுதி சீன அரசிற்கு மிக முக்கியமானது. நிலைமை எல்லை மீறுவதற்குள் தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் நிலவிய அமைதியின்மையைப் பிராந்திய/இனப் பிரச்சினை என்பதிலிருந்து, தேசிய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு முன்னுரிமையாகச் சீன அரசாங்கம் முறையாக மறுவகைப்படுத்தியபோது ஒரு தீர்க்கமான மாற்றம் ஏற்பட்டது. உள்ளூர் நிர்வாக விவாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைக்கு அதை உயர்த்தியது. ஒருமுறை இது பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதப்பட்டதும் மத்திய அதிகாரிகள் அதிக நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். கொள்கை முடிவுகள் பிராந்தியத் தலைமையிலிருந்து தேசியத் தலைமைக்கு மாற்றப்பட்டன. சீனாவின் சட்டக் கட்டமைப்புக்குள் விதிவிலக்கான நிர்வாக நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டன. இந்த மாற்றம், அதைத் தொடர்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடித்தளத்தை அமைத்தது.

இதன் மூலம் கிராமம், மாவட்டம், பணியிட மட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை விரிவுபடுத்தி உள்ளூர் முடிவெடுக்கும் அமைப்புகளின் சுயாட்சியைக் குறைத்தது. மத, கல்வி, பொருளாதார நிறுவனங்களுக்குள் கட்சி அதிகாரிகளை இணைத்து அரசியல் அதிகாரம் சீரானதாகவும் செங்குத்தாகவும் சீரமைக்கப்பட்டதையும் உறுதிசெய்தது. சம்பவங்கள் நடந்த பிறகு பதிலளிப்பதை விட, தடுப்பு மற்றும் முன்கூட்டியே கண்டறிய நகர்ப்புற, கிராமப்புறங்களில் அடர்த்தியான பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டது.


நிலையான சோதனைச் சாவடிகள், வழக்கமான அடையாள சரிபார்ப்பு, 
பிராந்திய கட்டளை கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைந்த உள்ளூர் அளவிலான கண்காணிப்புகள் அமைக்கப்பட்டன.

மத வாழ்க்கையின் மீது அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அரசு அங்கீகரிக்கப்பட்ட தலைமையின் கீழ் மசூதிகளைக் கொண்டுவந்தது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வெளியே மதக் கல்வி தடைசெய்யப்பட்டது. தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பொது மத வெளிப்பாடு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மதத்தின் அரசியல்மயமாக்கப்பட்ட தீவிரவாத விளக்கங்களைத் தடுக்க வடிவமைக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் அரசு அனுமதித்த மத நடைமுறையைத் தொடர அனுமதிப்பதாகவும் சீனா கூறுகிறது.

மாண்டரின் முதன்மை கற்பித்தல் மொழியாக மாறியது. மாநில குடிமைக் கல்வி விரிவுபடுத்தப்பட்டது. தேசிய அடையாளத்தை வலியுறுத்தும் கலாச்சார விவரிப்புகள் ஊக்குவிக்கப்பட்டன

பெய்ஜிங்கின் பார்வையில், பொருளாதார இயக்கத்திற்கு நீண்டகால நிலைத்தன்மையும் மொழியியல், கருத்தியல் ஒருங்கிணைப்பும் அவசியம்.

வேலையின்மை, வறுமையை நிவர்த்தி செய்தல், சமூக தனிமைப்படுத்தலைக் குறைத்தல், தீவிரவாத வலையமைப்புகளிலிருந்து தனிநபர்களைத் திசைதிருப்புதலை நோக்கங்களாகக் கொண்டு சீனா அதிகாரப்பூர்வமாகத் தொழில் கல்வி, பயிற்சி முயற்சிகள் என்று விவரிக்கப்படும் பெரிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்தியது. சில காலகட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பங்கேற்பு கட்டாயமாக இருந்தது. இது கொள்கையின் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்களில் ஒன்றாகவும் அமைந்தது. இருப்பினும், இந்தத் திட்டங்கள் ஷின்ஜாங்-ல் அன்றாட வாழ்க்கையையும் சமூக அமைப்பையும் மறுவடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன.

மேலும், பொருளாதார ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக போக்குவரத்து, தளவாட கட்டமைப்பு, தொழில்துறை பூங்காக்கள், நகர்ப்புற மேம்பாடு, தேசிய விநியோகச் சங்கிலிகளுடன் இணைக்கப்பட்ட வேலைவாய்ப்புத் திட்டங்கள் என்று அரசு பெருமளவில் முதலீடு செய்தது. ஷின்ஜாங்கின் பொருளாதாரத்தைத் தேசிய பொருளாதாரத்துடன் மிக நெருக்கமாக இணைப்பதன் மூலம், பிராந்திய தனிமைப்படுத்தல், பிரிவினைவாத நிர்வாகத்தின் சாத்தியக்கூறுகளைக் குறைத்தது.

Topic summary of tweet text posted between December 2019 and May 2021#StopXinjiang Rumors – ASPI



பாதுகாப்பு, நிர்வாகம், சமூக சேவைகளை ஒருங்கிணைக்க மேம்பட்ட டிஜிட்டல் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. மக்கள்தொகை இயக்கத்தின் தரவு சார்ந்த கண்காணிப்பு, அடையாளம், வேலைவாய்ப்பு, குடியிருப்பு பதிவுகளின் ஒருங்கிணைப்பு, முன் கணிப்பு இடர் மதிப்பீட்டு கருவிகள் என்று ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு அரசு தீவிரமாகச் செயல்பட்டு நீண்டகால கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தியது.

சர்வதேச எல்லை கட்டுப்பாடுகளின் மூலம் நாடுகடந்த போராளி தொடர்புகளைத் துண்டித்து பிரிவினைவாத/ தீவிரவாத இயக்கங்களுக்கான வெளிப்புற சித்தாந்த, தளவாட ஆதரவைக் குறைத்தது.

மேற்கூறிய பாதுகாப்பு அமலாக்கம், நிர்வாக மறுசீரமைப்பு, சித்தாந்த ஒழுங்குமுறை, பொருளாதார ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப கண்காணிப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்தது. கண்காணிப்புக் படக்கருவிகள், காவல்துறை சோதனைச் சாவடிகள், டிஜிட்டல் கண்காணிப்பு என்று உய்குர் முஸ்லிம்கள் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். தீவிரவாத சித்தாந்தத்தை அகற்றி மக்களை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்க தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சி, மொழிக் கல்வி, வேலைவாய்ப்புத் திறன் திட்டங்கள், மறு கல்வி / தொழிற்பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத ஆடை மீதான கட்டுப்பாடுகள், மசூதிகள் மீது அரசின் மேற்பார்வை, அரசு நிறுவனங்களுக்கு வெளியே மதக் கல்விக்கு வரம்புகள் என கலாச்சார ஒழுங்குமுறைகளும் அமல்படுத்தப்பட்டன.

கலாச்சாரம், மத சுதந்திரங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக பன்னாட்டு விமர்சகர்கள் வாதிட்டாலும் ஷின்ஜாங் முழுவதும் அமல்படுத்தப்பட்ட மேற்கூறிய கொள்கைகள் தாக்குதல்களைத் தடுத்து ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தன. 2017 முதல் வன்முறை வெகுவாகக் குறைந்து சுற்றுலா மீண்டும் தொடங்கியுள்ளது. உள்கட்டமைப்பு விரிவாக்கப்பட்டுள்ளது. கலாச்சார வெளிப்பாடு நெருக்கமான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு ஷின்ஜாங் இன்று நிலையான நிர்வாகமாக மாறியுள்ளது என்பதே அரசின் பதிலாக இருக்கிறது.



அதே வேளையில், இஸ்லாத்தை வெளிப்படையாகப் பின்பற்றும் ஹுய் முஸ்லிம்களிடையே மசூதிகள் சுதந்திரமாக இயங்குகின்றன. பிரிவினைவாத வரலாறு இல்லை. ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் இல்லை. சீன கலாச்சாரத்தோடு ஒன்றிச் செயல்படுகிறார்கள். இந்த வேறுபாடு, சீன அரசின் கொள்கையானது மதத்தை அல்ல, தீவிரவாதத்தையே குறிவைக்கிறது என்பதற்கு ஆதாரமாக சீனாவால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது.

உய்குர் முஸ்லிம்களின் மீதான சீன அரசின் கொள்கைகள் மீது உலகளாவிய தவறான புரிதல் இருந்தாலும் சீனாவைப் பொறுத்தவரை “எந்த விலை கொடுத்தாவது சிரியா போன்ற சரிவைத் தடுப்பது” மட்டுமே நோக்கமாக உள்ளது. குறிப்பாக பல நூற்றாண்டு கால மோதல்களாலும் எல்லை தாண்டிய தாக்கங்களாலும் வடிவமைக்கப்பட்ட பிராந்தியங்களில், பாதுகாப்பு, கலாச்சார அடையாளம், தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது எளிதல்ல. ஆனால் சீனா அதனை நன்கு புரிந்து கொண்டுள்ளது.

உய்குர் முஸ்லிம் பிராந்தியங்கள் மீதான சீனாவின் கட்டுப்பாடு, ஒரே ஒரு கொள்கையின் மூலம் அடையப்படவில்லை, மாறாக ஆட்சிமுறை, சமூகம், அன்றாட வாழ்க்கை ஆகியவற்றின் அமைப்புரீதியான மாற்றத்தின் மூலம் அடையப்பட்டது. இந்த அணுகுமுறை, மாற்று அதிகார மையங்கள் வலுப்பெறுவதற்கு முன்பே அவற்றை அகற்றுவதன் மூலம் ஸ்திரமின்மையைத் தடுக்க வேண்டும் என்ற சீனாவின் பரந்த அரச தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

இதில் எந்தச் சந்தேகமும் இல்லாத விஷயம் என்னவென்றால், இது ஷின்ஜாங் கலாச்சார சுயாட்சிக்கும் அரசு அதிகாரத்திற்கும் இடையிலான சமநிலையை மாற்றியமைத்துள்ளது.

ஷின்ஜாங் என்பது வெறும் ஒரு செய்தித் தலைப்பு மட்டுமல்ல.

அது புவியியலும் சித்தாந்தமும் சந்திக்கும் ஒரு இடம். உலகளாவிய எதிர்-தீவிரவாத (counter-extremism) விவாதங்களில் அதிகமாக மேற்கோள் காட்டப்படும் அதே நேரத்தில் கடும் விவாதத்திற்கும் உட்படும் ஒரு வழக்குக் கள ஆய்வாகவும் (case study) உள்ளது.

எதிர்-தீவிரவாத நடவடிக்கைகளின் விளைவுகள், அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசின் அரசியல், சட்ட அமைப்புகளிலிருந்து பிரிக்க முடியாதவை என்பதை சீன அரசு உலகிற்கு எடுத்துரைக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒரு தனிப்பட்ட குற்றச்செயல் பிரச்சினையாக அல்ல, தேசிய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் முழுமையான பாதுகாப்பு சவாலாக அணுகி வெற்றியும் கண்டுள்ளது சீனா. அதன் பதில் நடவடிக்கைகளான எதிர்-தீவிரவாதம், சமூக நிர்வாகம், கல்விக் கொள்கை, வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சி, டிஜிட்டல் கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு என அனைத்தையும் ஒரே நிர்வாக கட்டமைப்புக்குள் இணைத்தது. முடிவெடுக்கும் அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. செயல்படுத்தல் வேகமாக நடந்தது. பொதுக் கருத்து எதிர்ப்புக்கு அமைப்பு சார்ந்த இடம் வழங்கப்படவில்லை. இதனால், குறுகிய கால பாதுகாப்பு அளவுகோள்களில் தாக்குதல்களின் எண்ணிக்கை, அமைப்புசார்ந்த தீவிரவாத செயல்பாடுகள், பொது ஒழுங்கு, பெரிய அளவிலான தீவிரவாத வன்முறை கணிசமாக குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.



இதற்கு மாறாக, சுதந்திர ஜனநாயக நாடுகள் முற்றிலும் வேறுபட்ட கட்டுப்பாடுகளுக்குள் செயல்படுகின்றன.

பிரான்ஸ்– வலுவான உளவுத்துறை, அவசர சட்ட அதிகாரங்கள் இருந்தும், நீதிமன்ற மேற்பார்வை, குடிமக்கள் உரிமைகள், அரசியல் எதிர்ப்பு ஆகியவை முன்கூட்டிய தலையீட்டின் வரம்புகளை நிர்ணயிப்பதால் ஜிஹாதி தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொள்கிறது.

யுனைடெட் கிங்டம் – தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு, சமூக ஈடுபாடு, தன்னார்வப் பங்கேற்பு மூலம் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சதித் திட்டங்களைத் தகர்ப்பதில் இது திறம்படச் செயல்பட்டாலும், ஒத்துழைக்காத, விரைவாகத் தாங்களாகவே தீவிரவாத மனப்பான்மைக்கு ஆளாகும் நபர்களால் இந்நாட்டின் தீவிரவாத தடுப்புக் கொள்கைகள் செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா – உலகிலேயே வலுவான கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரப் பாதுகாப்புகளை கொண்டுள்ளது. இதனால், எதிர்-தீவிரவாத நடவடிக்கைகள் பெரும்பாலும் தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெறும் நீதிமன்ற ஆய்வு, கூட்டாட்சி அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றன.

இந்தியா – ஜனநாயகமான ஆனால் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கட்டமைப்புக்குள் இயங்கும் நாடு. வலுவான காவல் துறையையும் அரசியலமைப்புப் பன்மைத்துவத்தையும் ஒருங்கிணைத்து பெரிய அளவிலான கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் சமூக, சட்டரீதியான முரண்பாடுகளுக்கு மத்தியில், தொடர்ச்சியான, பரவலாக்கப்பட்ட தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

மேற்கூறிய அனைத்து நாடுகளிலும் தீவிரவாத சிந்தனை வேர் பிடித்த பிறகே அரசின் தலையீடு தொடங்குகிறது. இது குடிமக்கள் உரிமைகளுக்கும் அரசியல் ஒப்புதலுக்கும் கொடுக்கப்படும் முன்னுரிமையின் நேரடி விளைவு.

ஆனால் சீனாவின் அனுபவம் வேறு. சிந்தனையும் கருத்து வெளிப்பாடுகளும் அரசால் கட்டுப்படுத்தப்படும்போது, மத நிறுவனங்கள் அரசின் நிர்வாக கட்டமைப்பில் இணைக்கப்படும்போது, நீதிமன்ற சிதறல் இல்லாத கண்காணிப்பு அமைப்புகள் இயங்கும்போது, தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசியல் மறுப்பு இல்லாத சூழ்நிலைகளில் முடிவுகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை உலகிற்குக் காட்டுகிறது. சர்வாதிகார அரசுகளுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.

ஷின்ஜாங் நமக்குக் காட்டுவது ஒரு தீர்வை அல்ல.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் விதம், ஒவ்வொரு சமூகமும் தன் ஆட்சிமுறையிலும் மதிப்புகளிலும் எடுத்துக் கொள்ளும் முடிவுகளின் பிரதிபலிப்பே என்ற உண்மையைக் கூறுகிறது. மக்களின் பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்கும் இடையே உலகம் செய்யும் தேர்வுகளே, எதிர்காலத்தின் அரசியல் முகவரியை நிர்ணயிக்கும்.

लोकः समस्ताः सुखिनो भवन्तु, உலகத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும் எனும் தாரக மந்திரம் உணர்ந்தார் தான் யாரோ?

வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு

சொல்வனம் இதழ் 358ல் வெளியான என்னுடைய கட்டுரை வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு – சொல்வனம் | இதழ் 359 | 25 ஜன 2026 எண்ணெய் வளம், இயற்...