Saturday, July 18, 2026

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்துப் பதவிகளை வழங்குகிறார்கள். அமெரிக்காவில் இன்னும் ஒரு படி மேலே சென்று மிகப் பொறுப்பான பதவிகளுக்கு சிறு நேர்முகத்தேர்வை வைத்து விடுவார்கள். முடிவில் அவர்கள் தகுதியானவர்கள் என்று அந்த மன்றம் தீர்ப்பு வழங்கும். சமயங்களில் இது கண்துடைப்பு நாடகம் போல தோன்றினாலும் சில தேர்ந்தெடுத்த நபர்கள் நேர்முகத்தேர்வின் போதே எதிர்ப்புகள் கிளம்பியவுடன்,  மேலும் கேவலப்படுத்துமுன் பதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று கிளம்பிவிடுவார்கள். இவ்வாறாக பார்த்து, பார்த்து  ட்ரம்ப் தேர்ந்தெடுத்தவர்களை அவரே "யூ ஆர் ஃபயர்ட் " என்று சொல்லாமல் சொல்லி சிலரும், சொல்வதற்கு முன் சிலரும் நைசாக அவரது ஆட்சியில் இருந்து விலகி விட்டார்கள். அதுவும் நாடு பொருளாதார தேக்கத்தில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் நேரத்தில். சுங்கவரி என்று உலகநாடுகளுடன் விரோதித்துக் கொண்டிருக்கும் வேளையில். அமைதி பேச்சு வார்த்தை பாகிஸ்தான் மூலமாக நடந்து, முடிந்து, நடந்து என்று நடையாய் நடக்கும் காலத்தில். யார் யாரெல்லாம் பெரும் பதவியிலிருந்து தற்பொழுது விலகி விட்டார்கள் என்பதை விவரிக்கும் கட்டுரை👇👇👇
 
ஏதோ ஒட்டுப் போட்டோமோ அடுத்த வேலையைப் பார்ப்போமா என்றிருப்பதை விட, நாடு எந்த வழியில் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியது ஒட்டு போட்ட மக்களின் கடமையும் கூட.



இன்று வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் வாஷிங்டனைத் தாண்டி வெகுதூரம் எதிரொலிப்பதைக் கண்கூடாக பார்க்கமுடிகிறது. ஆசியாவின் நிதிச் சந்தைகள், ஐரோப்பாவின் பாதுகாப்பு கணக்கீடுகள், சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் குடியேற்றக் கொள்கைகள், உலகெங்கிலும் உள்ள தூதரக உறவுகள் ஆகிய அனைத்திலும் இதன் செல்வாக்கு நீள்கிறது. உலகளாவிய கவனம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈரான் போர் கொள்கைகள் மீது குவிந்திருக்கும் வேளையில், திரைக்குப் பின்னால் மற்றொரு முக்கியமான கதையும் அரங்கேறி வருகிறது. ஆம். அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்தப் பொறுப்பேற்றிருந்த மூத்த அதிகாரிகளின் தொடர்ச்சியான விலகல் தான் அது. சிலர் விருப்பத்தின் பேரிலும், மற்றவர்கள் அழுத்தத்தின் பேரிலும், இன்னும் சிலர் கொள்கை, நிர்வாகம், அரசியல் தொடர்பான மோதல்களுக்குப் பிறகு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெளியேற்றங்கள், கொள்கைகளைப் போலவே நிர்வாகத்தின் ஆட்சிப் பாணியைப் பற்றியும் பல விஷயங்களை அம்பலப்படுத்துகின்றன.

ஜனவரி 2025 அன்று அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ட்ரம்ப், 
எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்திச் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைத்தல், கூட்டாட்சி அரசாங்கத்தை அதிக செயல்திறனுக்காக மறுவடிவமைத்தல், அமெரிக்க உற்பத்தியையும் பொருளாதார வளர்ச்சியையும் விரிவுபடுத்துதல், “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” போன்ற கொள்கைகளை முன்மொழிந்தார்.

2017 ட்ரம்ப் அரசு நிர்வாகத்தில் பல மூத்த அதிகாரிகள் பாரம்பரிய குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்ததற்கு மாறாக, 2025-ல் அவர் நியமித்தவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகவோ அல்லது அவரது கொள்கைகளை வெளிப்படையாக ஆதரித்தவர்களாகவோ இருந்தனர். அவர்களும் ட்ரம்ப்பிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தாலும் ஒருகட்டத்தில் சிலர் மட்டும் அதிகாரத்தில் இருந்து விலகிக்கொண்டனர் அல்லது விலக்கப்பட்டனர்.

அவ்வாறு முதலில் விலகியது உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த ‘கிறிஸ்டி நோம்’. தனது குடியேற்றக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தக்கூடிய ஒருவரை விரும்பிய ட்ரம்ப் இவருடைய பெயரை 2024, நவம்பரில் பரிந்துரை செய்ய, ஜனவரி 2025ல் அவரும் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தெற்கு டகோட்டாவின் ஆளுநராகவும் காங்கிரசிலும் பணியாற்றியுள்ளார். ஜனநாயக அரசின் கோவிட்-19 கட்டுப்பாடுகளை எதிர்த்ததன் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர். ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளை வலுவாக ஆதரித்து அவருடைய விசுவாசிகளில் ஒருவராக அறியப்பட்டவர். பழமைவாத வாக்காளர்களிடையே பிரபலமானவர். திறமையான பேச்சாளர். கடுமையான எல்லை அமலாக்கத்தை ஆதரித்தவர். வலுவான நிர்வாக அனுபவம் மிக்கவர் என்பதாலேயே இவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளராகப் பரிந்துரைத்து பணியிலும் அமர்த்தியது ட்ரம்ப் நிர்வாகம்.

கிறிஸ்டி நோம் தானாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை. மார்ச் 5, 2026 அன்று, அதிபர் ட்ரம்ப் அவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, ‘ஷீல்ட் ஆஃப் தி அமெரிக்காஸ்’ அமைப்பின் சிறப்புத் தூதராக நியமித்தார். அதே நேரத்தில், எல்லைப் பாதுகாப்பில் அவரது பணிகளைப் பகிரங்கமாகப் பாராட்டினார். வெள்ளை மாளிகை இந்த நடவடிக்கையை “மறுபணியமர்த்தல்” என்று விவரித்தாலும், அவரது விலகலுக்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதாகச் செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) தலைமைப் பொறுப்பில் அவரது செயல்பாடுகள் மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. DHS-க்கு 70 மில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு ஜெட், குடியேற்றத் தடுப்புக்காவல் திறனை விரிவுபடுத்துவதற்காக சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பில் 11 கிடங்குகளை வாங்கும் அவரது முக்கிய முன்னெடுப்பும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மற்றொரு பெரிய சர்ச்சை, ஆவணமற்ற குடியேறிகளைத் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேற ஊக்குவிக்கும் வகையில் மக்களின் வரிப்பணத்தில் DHS நடத்திய 220 மில்லியன் டாலர் மதிப்பிலான விளம்பரப் பரப்புரையைச் சார்ந்தது. அந்த விளம்பரங்களில் நோம் முக்கியமாக இடம்பெற்றிருந்ததும் ஒரு நாடாளுமன்ற விசாரணையின் போது, ட்ரம்ப் இந்தப் பிரச்சாரத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறி, பின்னர் ட்ரம்ப் தனக்கு அதுபற்றித் தெரியாது என்று மறுத்ததால், பொதுமக்களிடையேயும் அரசியல் கட்சியினரிடையேயும் குழப்பம் ஏற்பட்டது.

மேலும், மினியாபோலிஸில் நடந்த ஒரு கூட்டாட்சி குடியேற்ற நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்கக் குடிமக்களை விசாரணைகள் முடிவடைவதற்கு முன்பே “உள்நாட்டுப் பயங்கரவாதிகள்” என்று நோம் கூறியதால் இரு கட்சியினரிடமிருந்தும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். அதன் தொடர்பில் காங்கிரஸில் கடுமையான கேள்விகளையும் எதிர்கொண்டார்.

அவருடைய விலையுயர்ந்த கொள்முதல் முடிவுகள், முன்மொழியப்பட்ட குடியேற்றத் தடுப்புக்காவல் திட்டங்கள் உட்பட, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) செலவினங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப, துறைக்குள் நிலவும் நிர்வாகச் சிக்கல்கள், தொடர்ச்சியான சர்ச்சைகளால் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் மிகுந்த விரக்தியடைந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன.

எல்லைப் பாதுகாப்பில் நோமின் முயற்சிகளை ட்ரம்ப் தொடர்ந்து பகிரங்கமாகப் பாராட்டிய போதிலும், மேற்கூறிய பிரச்சினைகள் அனைத்தும் சேர்ந்து அவரைப் பதவியிலிருந்து நீக்கும் முடிவுக்குக் காரணமாக அமைந்தன.

அவருக்குப் பதிலாக மார்க்வேய்ன் முல்லின் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த விக்கெட், ட்ரம்ப்பின் மிக நெருங்கிய சட்ட, அரசியல் கூட்டாளிகளில் ஒருவரும் நம்பிக்கைக்குரியவருமான பாம் போண்டி (Pam Bondi). ஃப்ளோரிடாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல். பல்லாண்டு கால வழக்கறிஞர் அனுபவம் கொண்டவர். ட்ரம்ப்பின் முதல் பதவி நீக்க விசாரணையின்போது அவருக்காக வாதாடியவர். விரிவான சட்ட அனுபவம், திறமையான நீதிமன்ற வாதாடல் திறன், விசுவாசமான ஆதரவாளர் என்று நீளும் பட்டியல். இது போதாதா?

தனது சட்டம்-ஒழுங்கு செயல்திட்டத்தை ஆக்ரோஷமாகப் பின்பற்றும் ஒரு அட்டர்னி ஜெனரலை விரும்பிய அதிபர் இவரைப் பரிந்துரைக்க, பிப்ரவரி 2025-ல் பதவி உறுதியானது. சுமார் 14 மாதங்கள் அமெரிக்க அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய பிறகு ட்ரம்ப் அவரை அப்பதவியிலிருந்து நீக்கினார். அவரது பணிநீக்கத்திற்கான விரிவான காரணத்தை வெள்ளை மாளிகை தெரிவிக்கவில்லை என்றாலும் அவரது பதவிக்காலத்தைச் சுற்றிப் பல சர்ச்சைகள் நிலவின.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளை நீதித்துறை கையாண்ட விதம் தொடர்பானதே மிகப்பெரிய சர்ச்சையாக இருந்தது. இந்த வழக்கை நீதித்துறை ஒட்டுமொத்தமாகக் கையாண்ட விதத்தை நியாயப்படுத்திய அதே வேளையில், ஆவணங்களை வெளியிடுவதில் தவறுகள் நடந்ததை அவரே ஒப்புக்கொண்டார். தாமதங்கள், திருத்தப் பிழைகள், வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் தொடர்பாக ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தும் சில குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டார். மேலும், ட்ரம்ப்பின் அரசியல் போட்டியாளர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் உட்பட, நீதித்துறையில் அதிகரித்து வரும் அரசியல் மயமாக்கலுக்காகவும் போண்டி விமர்சிக்கப்பட்டார். அரசியல் நோக்கங்களுக்காகத் தான் எதிர்பார்த்த சில சட்ட மாறுதல்களை போண்டி மூலம் நீதித்துறையில் கொண்டுவர இயலாததால் ட்ரம்ப் விரக்தியடைந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன.

எப்ஸ்டீன் கோப்புகளைச் சுற்றியுள்ள சர்ச்சைகள், நீதித்துறையின் சுதந்திரம் குறித்த விமர்சனங்கள், அவரது செயல்திறன் மீதான அதிருப்தி ஆகியவை அனைத்தும் சேர்ந்து போண்டியை அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து மாற்றுவதற்கான காரணமாக அமைந்தன. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2026-ல் பதவி விலகினார் (விலக்கப்பட்டார்?)அவருக்குப் பதிலாக தற்காலிகமாக டாட் பிளான்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர், தொழிலாளர் துறைச் செயலாளர் “லோரி சாவேஸ்-டிரெமர்”. மார்ச் 2025-ல் பதவி நியமனம் செய்யப்பட்டு ஏப்ரல் 2026-ல் பதவியிலிருந்து விலகினார்.

பல குடியரசுக் கட்சியினரைப் போலல்லாமல், சாவேஸ்-டிரெமர் பழமைவாதப் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்த அதே வேளையில், தொழிற்சங்கங்களின் ஆதரவையும் பெற்றிருந்தார். ஓரிகானில் உள்ள ‘ஹேப்பி வேலி’யின் முன்னாள் மேயராகவும், அமெரிக்கப் பிரதிநிதியாகவும், பணியாளர் மேம்பாடு, தொழிலாளர் பேச்சுவார்த்தைகளில் அனுபவம் கொண்டவராகவும் இருந்ததால் தொழிலாளர் வர்க்க வாக்காளர்களிடையே தனது செல்வாக்கை அவரால் விரிவுபடுத்த முடியும் என்று ட்ரம்ப் தீவிரமாக நம்பி இவரைத் தேர்ந்தெடுத்தார்.

வெள்ளை மாளிகை அவரது பணியைப் பாராட்டியபோதிலும், தொழில்முறை முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் விசாரணையால் அவரது பதவிக்காலம் மங்கியது. தனது தனிப்பட்ட பயணங்களுக்காக அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், ஊழியர்களைத் தனது தனிப்பட்ட வேலைகளைச் செய்யப் பணித்ததாகவும், தனக்குக் கீழ் பணிபுரியும் ஒருவருடன் முறையற்ற உறவைப் பேணி வந்ததாகவும், அலுவல் ரீதியான பணி நடவடிக்கைகளின் போது மது அருந்தினார் என்றும் அறிக்கைகள் குற்றம் சாட்டின. கடினமான பணியிடச் சூழலும், தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களிடமிருந்து வந்த பல புகார்களும் இவர் மேல் குற்றம் சாட்டினாலும் சாவேஸ்-டிரெமர் பகிரங்கமாகத் தனது தவறுகளை ஒப்புக்கொள்ளவில்லை.

விசாரணைகள் விரிவடைந்து பொதுமக்களின் கண்காணிப்பு தீவிரமடைந்த பிறகு தான் அவர் பதவி விலகினார். இதன்மூலம், ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் விலகிய மூன்றாவது அமைச்சரவை உறுப்பினர் ஆனார்.

தற்பொழுது ஈரானுடன் போருக்குச் சென்றிருக்கும் நேரத்தில், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ‘ஜோ கென்ட்’ பதவியை விட்டு விலகியது அரசிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சியாகவே வல்லுநர்களால் பார்க்கப்பட்டது. கென்ட், மார்ச் 17, 2026 அன்று தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநர் பதவியிலிருந்து விலகி, வெளியுறவுக் கொள்கைக் கருத்து வேறுபாடு காரணமாகப் பதவி விலகிய முதல் மூத்த ட்ரம்ப் நிர்வாக அதிகாரியுமானார்.

கென்ட்டின் விரிவான ராணுவ, உளவுத்துறைப் பின்னணியின் காரணமாகவே அதிபர் ட்ரம்ப் அவரைத் தேர்ந்தெடுத்தார். கென்ட், அமெரிக்க ராணுவத்தில் ‘கிரீன் பெரெட்’ ஆக 11 போர்ப் பணிகளில் பணியாற்றியுள்ளார். இவரின் ராணுவத் தலைமைத்துவம், உளவுத்துறை, போர் அனுபவம், பயங்கரவாத எதிர்ப்பு நிபுணத்துவம், டிரம்ப்-ன் வெளியுறவுக் கொள்கைக்கு கொடுத்த பொது ஆதரவினாலேயே இப்பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கவும் பட்டார்.

ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதற்கான நிர்வாகத்தின் முடிவை கடுமையாக எதிர்த்ததால் கென்ட் பதவி விலகினார். தனது ராஜினாமா கடிதத்தில், “நல்ல மனசாட்சியுடன்” இந்தப் போரை ஆதரிக்க முடியாது. ஈரான் அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. இந்த மோதல் ட்ரம்ப் பிரச்சாரம் செய்த தலையிடாமைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் அவர் வாதிட்டார்.

ட்ரம்ப், கென்ட்டின் கூற்றுகளை நிராகரித்து, ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தினார். மேலும், ஈரான் ஒரு அச்சுறுத்தல் அல்ல என்று நம்பும் அதிகாரிகளுக்குத் தனது நிர்வாகத்தில் இடமில்லை என்றும் கூறினார். கென்ட்டின் ராஜினாமா, ட்ரம்ப் அரசின் தேசியப் பாதுகாப்புக் குழுவிற்குள் ஏற்பட்டிருக்கும் பகிரங்கப் பிளவுகளை வெளிப்படுத்தியதுடன், வெளிநாட்டு மோதல்களில் அமெரிக்காவின் பங்கு குறித்த கருத்து முரண்பாடுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது.

தற்பொழுது ‘ஜோ வெய்ர்ஸ்கி தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் மிகவும் வழக்கத்திற்கு மாறான நியமனங்களில் தேசிய உளவுத்துறை இயக்குநராக இருந்த ‘துளசி கபார்ட்’டும் ஒருவர். ஹவாய் தீவைச் சேர்ந்த முன்னாள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈராக் போரில் பங்கேற்றவரும், அமெரிக்க ராணுவ ரிசர்வ் படையில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான கபார்ட், பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் மற்றும் வெளியுறவுக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு காலத்தில் ஜனநாயகக் கட்சிக்காரராக இருந்தபோதிலும், பின்னர் ஒரு சுயேச்சையாக மாறி, டிரம்ப்-ன் “அமெரிக்கா முதலில்” என்ற வெளியுறவுக் கொள்கையின் வலுவான ஆதரவாளராக உருவெடுத்து, அதிபரின் மிகவும் வழக்கத்திற்கு மாறான அமைச்சரவைத் தேர்வுகளில் ஒருவரானார். குடியரசுக் கட்சிக்கு வெளியிலிருந்தும் ஆதரவாளர்களைத் திரட்டுவதில் ட்ரம்ப்பின் விருப்பத்தையும் இந்த நியமனம் வெளிப்படுத்தியது.

தனது கணவரின் உடல்நலக்குறைவு தொடர்பான குடும்பக் காரணங்களைக் கூறி, மே 22, 2026 அன்று தேசிய உளவுத்துறை இயக்குநர் (DNI) பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், அவரது பதவிக்காலம் சர்ச்சைகள் அற்றதாக இருக்கவில்லை. 2025 ஆம் ஆண்டு முழுவதும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் வெளியுறவுக் கொள்கை, குறிப்பாக ஈரானில் அமெரிக்க ராணுவத் தலையீடு தொடர்பான தனது சுதந்திரமான கருத்துக்களுக்காக காபார்ட் விமர்சனங்களை எதிர்கொண்டார். உளவுத்துறை மதிப்பீடுகள், தேசியப் பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக நிர்வாகத்திற்குள் பதட்டங்கள் நிலவியதாகவும் சில அறிக்கைகள் விவரித்தன. இருப்பினும் இந்தக் கருத்து வேறுபாடுகளே அவரது ராஜினாமாவுக்குக் காரணம் என்பதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. அவர் வெளியேறுவதற்கு முன்பு ஒரு இந்து மத அமைப்புடன் அவருக்கு இருந்த கடந்தகாலத் தொடர்புகள் குறித்த ஆய்வை ஊடக அறிக்கைகள் மீண்டும் தொடங்கின. இந்தக் குற்றச்சாட்டுகளை காபார்ட்டும் அவரது ஆதரவாளர்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் இந்துக்களுக்கு எதிரானவை என்றும் நிராகரித்தனர்.

அவரது ராஜினாமா ஜூன் 30, 2026 அன்று நடைமுறைக்கு வந்தது. அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து விலகிய நான்காவது அமைச்சரவை உறுப்பினரானார். அவரது ராஜினாமா அதிகாரப்பூர்வமாக குடும்பச் சூழ்நிலைகளின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், உளவுத்துறையிலும் வெளியுறவுக் கொள்கை குறித்த நிர்வாகத்திலும் ஒலித்த மிகத் தனித்துவமான குரல்களில் ஒன்றின் இழப்பைக் குறிக்கிறது. நிரந்தர இயக்குநர் உறுதிசெய்யப்படும் வரை ‘பில் புல்டே’வை தேசிய உளவுத்துறையின் தற்காலிக இயக்குநராக அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார்.

அமைச்சரவைச் செயலாளர் பதவியில் இல்லாவிட்டாலும், அரசாங்க செயல்திறன் துறை (DOGE) மூலம் ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக ‘எலான் மஸ்க்’ இருந்தார்.

உலகின் மிகப் பெரிய பணக்கார தொழிலதிபர். முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர். செலவுகளைக் குறைப்பதிலும் விரைவாகச் செயல்படுவதிலும் நற்பெயர் பெற்றவர். கூட்டாட்சி அதிகாரத்துவத்தின் அளவைக் குறைக்கக்கூடிய ஒருவராக அதிபரால் கருதப்பட்டார். பெரும் பணியாளர் குறைப்புகளைச் செய்ய அவர் மேற்கொண்ட சீர்திருத்த முயற்சிகள், தொழில்நுட்ப நவீனமயமாக்கல் முன்மொழிவுகள் பல விமரிசனங்களையும் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டது உலகறிந்ததே.

இவர்களின் விலகல்களைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில் கூடுதல் மாற்றங்களைச் செய்வாரா என்பதில் தற்பொழுது கவனம் திரும்பியுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக், FBI இயக்குநர் காஷ் பட்டேல் மற்றும் ராணுவச் செயலாளர் டேனியல் டிரிஸ்கால் ஆகியோர் பல்வேறு சமயங்களில் பதவியிலிருந்து நீக்கப்படக்கூடிய சாத்தியமான வேட்பாளர்களாக விவாதிக்கப்பட்டதாகச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், ஜூன் 2026 இறுதி நிலவரப்படி, வெள்ளை மாளிகை எந்த அமைச்சரவைப் பதவி நீக்கங்களையும் அறிவிக்கவில்லை, அந்த மூன்று அதிகாரிகளும் தங்கள் பதவிகளில் நீடிக்கின்றனர்.

தலைப்புச் செய்திகளையும் அரசியல் விவாதங்களையும் கடந்து, அதிபர் டிரம்ப்-ன் இரண்டாவது நிர்வாகத்திலிருந்து ஏற்பட்ட விலகல்கள், அதிபர் பதவி என்பது வெள்ளை மாளிகையில் இருக்கும் நபரால் மட்டுமல்ல, நாட்டின் நிறுவனங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாலும் வரையறுக்கப்படுகிறது எனும் ஒரு எளிய உண்மையை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது, அமைச்சரவைச் செயலாளர்கள், உளவுத்துறைத் தலைவர்கள், முகமைத் தலைவர்கள், எல்லைப் பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு முதல் வேலைவாய்ப்புகள், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் வரை அனைத்தையும் பாதிக்கும் முடிவுகளை எடுக்கிறார்கள். அந்தத் தலைவர்கள் மாறும்போது ​​முன்னுரிமைகளும் மாறக்கூடும்.

அரசியல் தலைவர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் அவர்கள் வழிநடத்தும் நிறுவனங்கள் நிலைத்திருக்கும். அமைச்சரவையிலோ அல்லது உயர் தலைமையிலோ ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நிர்வாகத்தை வலுப்படுத்துமா அல்லது பலவீனப்படுத்துமா என்பது விலகும் அதிகாரிகளின் எண்ணிக்கையால் அல்ல, மாறாக அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி பொதுமக்களுக்குத் திறம்பட சேவை செய்கிறதா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

இந்த விலகல்கள், ஜனநாயகம் என்பது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு அதிபரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல நமது சார்பாக யார் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் அரசாங்கம் ஒவ்வொரு நாளும் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் எடுத்துரைக்கிறது.

அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல் வாக்குச்சீட்டுகளில் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொரு நாளும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை வடிவமைக்கின்றன. அவர்கள் யார், ஏன் விலகுகிறார்கள், அவர்களுக்குப் பதிலாக யார் பதவியேற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது என்பது வெறும் அரசியல் நலன் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அது தகவலறிந்த குடிமக்களாக இருப்பதன் ஒரு பகுதியாகும். ஜனநாயகத்தில், தகவலறிந்த குடிமக்களே நல்லாட்சியின் மிக வலிமையான பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்.

பிரிவு

சில பிரிவுகள்
வயதைக் கேட்பதில்லை.

சில மரணங்கள்
காலத்தின் கதவைத் தட்டுவதில்லை.

ஒருவர் மறைவது
ஒரு உயிரோடு நின்றுவிடுவதல்ல.

ஒரு தாயின் இதயத்தில்
ஒரு மூச்சு குறைவது.

ஒருதந்தையின் கண்களில்
மறைக்கமுடியாத வெறுமைபிறப்பது.

நாளைய கனவுகள்
ஒரேநொடியில் சிதறிப்போவது.

பதில் சொல்லமுடியாத
ஒருமௌனம் வீட்டுக்குள் குடியேறுவது.

மரணம்
ஒரு மனிதரை மட்டுமே அழைத்துச் செல்கிறது.

ஆனால்...

அவரை நேசித்த
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்


ஒரு சிறு பகுதியை
தன்னோடு எடுத்துச் செல்கிறது.

இறைவன்
ஏன் சிலரை இவ்வளவுசீக்கிரம் அழைக்கிறான்


என்பதை
மனிதன் அறிய முடியாமல் இருக்கலாம்.

அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகள் மட்டும் 

மரணத்தை வென்று
வாழும்.

Tuesday, June 30, 2026

வெனிசுவேலா பேரிடர்

'அமெரிக்காஸ்' கால்பந்தாட்ட போட்டிகளில் லயித்திருக்க, ஜூன் 24ல் அடுத்தடுத்து தாக்கிய இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் வெனிசுவேலாவை பேரழிவுக்குத் தள்ளியுள்ளன. இன்றைய நிலவரப்படி, 1,943 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 10,571-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட இந்த இரட்டை நிலநடுக்கம் (Seismic Doublet), கடந்த நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுவேலா சந்தித்த மிகக் கடுமையான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பல அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட ஆறு நாட்களைக் கடந்தபோதும், மீட்புப் பணிகள் இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் வெனிசுலா மீட்புக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருப்பவர்களை கண்டறிய மோப்ப நாய்கள், வெப்ப உணர்வு கேமராக்கள், ட்ரோன்களுடன் கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் முதல் 72 மணி நேரம் கடந்திருந்தாலும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரை உயிருடன் மீட்கும் பணிகள் இன்னும் தொடர்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, சுமார் 68 லட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளன. தொடர் அதிர்வுகள் (Aftershocks) ஏற்படுவதால் பலர் தற்காலிக முகாம்களிலும் திறந்த வெளிகளிலும் தங்கியுள்ளனர். பல பகுதிகளில் குடிநீர், உணவு, மின்சாரம், சுகாதார வசதிகள் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை. பல மருத்துவமனைகள் சேதமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன. அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மருந்துகளுடன் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. தற்காலிக முகாம்களில் மக்கள் நெருக்கமாக தங்கியிருப்பதால் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) போன்ற நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.

பேரழிவின் தீவிரத்திற்கு நிபுணர்கள் பல காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். நாட்டில் பல பழைய கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை. கடலோரப் பகுதிகளில் உள்ள மென்மையான மண், நில அதிர்வை மேலும் அதிகரித்துள்ளது. அதுவும் தவிர, நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக வெனிசுவேலாவின் கட்டமைப்பு வசதிகள், அவசரகால மீட்பு அமைப்புகள், சுகாதாரத் துறை மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றன.

பல உலக நாடுகளும் அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளது ஆறுதல்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அதே நேரத்தில், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவி, பாதுகாப்பான தங்குமிடங்களை வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடனடி நிவாரண நடவடிக்கைகளைத் தாண்டி வெனிசுவேலாவின் நீண்டகால மறுகட்டமைப்பும், நிலநடுக்கத்தைத் தாங்கும் பாதுகாப்பான கட்டமைப்புகளை உருவாக்குவதும் அடுத்த பெரிய சவாலாக இருக்கும்.

ஒவ்வொரு பேரழிவும் நமக்கு ஒரு உண்மையை நினைவூட்டுகிறது. இயற்கையின் ஆற்றலுக்கு முன் மனிதன் எவ்வளவு தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அவன் இன்னும் அதன் ஒரு சிறிய அங்கமே. நகரங்களை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். ஆனால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாது. எனவே, பேரிடர் தயார்நிலை, பாதுகாப்பான கட்டுமானம், அறிவியல் ஆய்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலக நாடுகளின் மனிதாபிமான ஒத்துழைப்பு ஆகியவற்றில்தான் எதிர்காலத்தின் பாதுகாப்பு இருக்கிறது. வெனிசுவேலாவின் இந்த சோகம், மனிதகுலம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு வாழும் கணத்தையும் நன்றியுடன் கடந்து செல்வோம்.



Friday, June 26, 2026

மாறும் அமெரிக்கா, மாறும் கனவுகள்

ஹெச்1பி விசா மாற்றங்கள் அவசியமானது. நிறுவனங்கள் பலவும் இந்த விசாவை முறைகேடாக பயன்படுத்துவது தான் முதன்மைக்காரணம் என்றாலும் அளவுக்கதிகமாக வெளிநாட்டுக்காரர்களின் வருகையால் உள்நாட்டு மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற உள்ளூர் குரல்களைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது அரசு. "Land of oppurtunities" இனி வெறும் கனவாகி விடுமா என்று அஞ்ச வேண்டாம். மாறும் தொழில்நுட்பத்திற்கேற்ப நம்மை இன்னும் மெருகேற்றிக் கொண்டால் கனவும் நனவாகும். தற்பொழுது செயற்கை நுண்ணறிவு, இன்னும் சிறிது நாட்களில் 'குவாண்டம் பிஸிக்ஸ்' என்று மாறும். ஆனாலும் ஹெச்1பி விசாக்கள் தொடரும். மேற்கல்விக்காக மாணவர்களும் வந்து கொண்டு தானிருப்பார்கள்.
மேலும் வாசிக்க...

https://solvanam.com/2026/06/14/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

சில வருடங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்குச் செல்லும் பாதை மிகவும் தெளிவாக இருந்தது. இந்தியாவில் படிப்பு முடித்து அமெரிக்காவில் முதுகலைப் பட்டம், பிறகு OPT(Optional Practical Training) வேலை அனுமதி, பின்னர் H-1B வேலை விசா, இறுதியாக கிரீன் கார்டு. ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் “அமெரிக்க கனவு” இப்படித்தான் நனவாகிக்கொண்டிருந்தது. ஆனால் அதிபர் ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் “அமெரிக்காவுக்கே முன்னுரிமை”யின் குடியேற்றத் திட்டம், H-1B விசா முறைகேடு குறித்த அரசியல் விவாதங்கள் இந்த பாரம்பரிய பாதையை மாற்றத் தொடங்கியுள்ளன. திறமை, சம்பளம், பாதுகாப்பு ஆய்வு, குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தற்போதைய கொள்கை மாற்றங்களால் அமெரிக்காவிற்கு கல்வி கற்க வந்த/வரும் மாணவர்களும் வேலை கிடைத்துப் புலம்பெயர்ந்த திறமையான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். H-1B பணி விசாக்கள், F-1 மாணவர் விசாக்கள், OPT (விருப்பப் பயிற்சி), STEM OPT மாணவர் விசாக்கள், கிரீன் கார்டு வழிமுறைகளில் கொண்டு வந்துள்ள மாற்றங்களால் இந்தியர்கள் அதிகளவில் இதன் தாக்கத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அழுத்தம் பல ஆண்டுகளாக அதிகரித்து வருவது இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் குடியேற்றம், விசா முறையில் உள்ள மோசடிகளைத் தடுக்கவே கொள்கை மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசு கூறியுள்ளது. இதன் மூலம், உயர்திறன் கொண்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பு H-1B விசா பெரும்பாலும் சீரற்ற லாட்டரி முறையில் வழங்கப்பட்டது. இப்போது “யார் அதிக திறமைசாலி? யாருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது?” என்பதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க அரசு கொள்கைகளை நகர்த்துகிறது. இதனால் திறமையான இந்திய IT நிபுணர்களுக்கு வாய்ப்புகளும் உயர்கல்வி பெற்றவர்களுக்கு முன்னுரிமையும் கிடைக்கலாம். ஆனால், புதிய பட்டதாரிகளுக்கும் குறைந்த சம்பள வேலைகளுக்கும் H-1B கிடைப்பது கடினமாகலாம். இந்திய IT கன்சல்டிங் நிறுவனங்களுக்கும் சவாலான காலமாகி விட்டது.

திறமையான வெளிநாட்டு நிபுணர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான முதன்மை வழியாக H-1B விசா நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் 85,000 விசாக்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன. முன்பு சில நிறுவனங்கள் ஒரே நபருக்காக பல H-1B விண்ணப்பங்களை தாக்கல் செய்து லாட்டரியில் வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரித்தன. இப்போது USCIS “Beneficiary-Centric” முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு நபருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே. பல நிறுவனங்கள் விண்ணப்பித்தாலும் அந்த நபருக்கு ஒரே ஒரு பதிவு மட்டுமே கணக்கிடப்படும். இவ்வாறாக H-1B லாட்டரி முறையில் உள்ள துஷ்பிரயோகங்களைத் தடுத்து உயர்தரத் திறமை கொண்டவர்களைத் தேர்வு செய்வது, தேசிய பாதுகாப்பையும் பின்னணி சரிபார்ப்பையும் வலுப்படுத்துவது, அமெரிக்க தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப குடியேற்றக் கொள்கையை மாற்றுவது போன்ற அரசியல் காரணங்களும் இதில் உள்ளன.

அமெரிக்க அரசு தற்போது நிறுவனங்களிடம், உண்மையான வேலை இருக்கிறதா?, தேவையான சம்பளம் வழங்கப்படுகிறதா?, விண்ணப்பதாரரின் திறமை வேலைக்கு பொருத்தமா? என்பதை விரிவாக ஆய்வு செய்கிறது. பெருநிறுவனங்கள், அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பதிலாக மலிவான வெளிநாட்டுத் தொழிலாளர்களை நியமிக்கவும், ஊதியங்களைக் குறைக்கவும், தரத்தை விட எண்ணிக்கைக்கு வெகுமதி அளிக்கும் லாட்டரி முறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் H-1B விசாக்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்று ட்ரம்ப் நிர்வாகம் வாதிடுகிறது.

வெள்ளை மாளிகையின் பணியாளர் செயலாளர் வில் ஷார்ஃப், H-1B திட்டத்தை “நாட்டில் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா அமைப்புகளில் ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார். USCIS இயக்குநர் ஜோசப் பி.எட்லோ, இந்த மாற்றங்களை “ஒழுங்கு, பாதுகாப்பு, நேர்மை, ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ அணுகுமுறை” என்று விவரித்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

செப்டம்பர் 19, 2025 அன்று அதிபர் ட்ரம்ப் “சில குடியேறாத தொழிலாளர்களின் நுழைவு மீதான கட்டுப்பாடு” (“Restriction on Entry of Certain Nonimmigrant Workers”) என்ற தலைப்பில், செப்டம்பர் 21, 2025 முதல் அமெரிக்காவிற்கு வெளியே இருந்து தாக்கல்செய்யப்படும் எந்தவொரு புதிய H-1B மனுவிற்கும் ஏற்கனவே உள்ள அனைத்து கட்டணங்களுடன் பணி நிறுவனங்கள் $100,000 கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்த பிரகடனம் மேலும் நீட்டிக்கப்படாவிட்டால், செப்டம்பர் 21, 2026 வரை அமலில் இருக்கும் என்று பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அதனால் 2025 நிதியாண்டில் சுமார் 10,000 அங்கீகரிக்கப்பட்ட விசாக்களுடன் மிகப்பெரிய H-1B பயனாளியான அமேசான், இந்த விகிதத்தில் ஆண்டுக்கு $1 பில்லியன் செலவையும் சுமார் 5,500 ஒப்புதல்களுடன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) $550 மில்லியனையும் எதிர்கொள்ள நேரிட்டது. 2025 டிசம்பரில் ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் அந்தக் கட்டணத்தைத் தடுக்க மறுத்துவிட்டது. இதனால் “Body Shopping” அல்லது “Bench Consulting” போன்ற நடைமுறைகள் மேலும் சிரமப்படலாம்.

டிசம்பர் 23, 2025 அன்று, H-1B பதிவுகள் தேர்ந்தெடுக்கப்படும் முறையை முழுமையாக மாற்றியமைக்கும் ஒரு இறுதி விதியை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்தது. பிப்ரவரி 27, 2026 முதல் முன்பு இருந்த சீரற்ற குலுக்கல் முறைக்கு பதிலாக, முன்னுரிமை அளிக்கப்பட்ட தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அதிக ஊதியம் பெறும் உயர் திறன் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு விசாக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த விதி, 2027 நிதியாண்டின் H-1B உச்சவரம்புக் காலத்திற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. குறைந்த ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களை நீக்குவதே இதன் நோக்கமாகும்.

இதற்கு இணையாக, USCIS ‘புராஜெக்ட் ஃபயர்வால்’ என்ற ஒரு கடுமையான நடவடிக்கையையும் தொடங்கியது. இதன் கீழ், விசா முறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் நிறுவனங்களில் H-1B திட்ட முறைகேடுகள் குறித்து குறைந்தது 175 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஜனவரி 9, 2026 அன்று, ஜூன் 2023 முதல் ஜூன் 2025 வரையிலான பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, விரைவு வழிமுறையான பிரீமியம் செயலாக்கத்திற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக DHS அறிவித்தது. மார்ச் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு தாக்கல்செய்யப்படும் எந்தவொரு படிவம் I-907லிலும் இந்தப் புதிய கட்டணங்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது நிராகரிக்கப்படும்.

பொருளாதார வல்லுநர்கள் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ட்ரம்ப்பின் செப்டம்பர் மாதப் பிரகடனத்தைத் தொடர்ந்து, ஜெர்மன் முதலீட்டு வங்கியான பெரன்பெர்க், 2025ஆம் ஆண்டுக்கான அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 2%லிருந்து 1.5%ஆகக் குறைத்தது. ஆனாலும் அரசியல் ரீதியாக இந்த ஒடுக்குமுறை வேகம் பெற்று அதிவேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஹெச்1பி விசா மட்டுமல்லாது பல தசாப்தங்களாக அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த மென்சக்திக் கருவிகளில் ஒன்றாக விளங்கும் சர்வதேச மாணவர்களும் வியத்தகு முறையில் மாறியுள்ள புதிய சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். செப்டம்பர் 2, 2025 முதல் அனைத்து F-1 விண்ணப்பதாரர்களும் தங்கள் குடியுரிமை அல்லது வசிப்பிட நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நேரடி நேர்காணல்களில் கலந்துகொள்ள வேண்டும். இந்திய மாணவர்களுக்கு, இது ஏற்கனவே பணிச்சுமை மிகுந்த மும்பை, சென்னை, ஹைதராபாத், புது டில்லி, கொல்கத்தா தூதரகங்களில் காத்திருப்பு நேரங்களை அதிகரித்துள்ளது. நேர்காணலில் முன்பைவிட அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக, “ஏன் இந்த பல்கலைக்கழகம்? ஏன் இந்தப் பாடநெறி? படிப்பு முடிந்த பின் என்ன திட்டம்? படிப்புக்கான பணம் எங்கிருந்து வருகிறது” போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இருக்க வேண்டும். மேலும், நாட்டிற்குள் வருபவர்கள் எந்தவொரு தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக தகவல்களையும் ஆய்வு செய்கிறது அரசு.
இதனால் விசா செயல்முறை நீண்டு கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படுவதும் நேர்காணல் தாமதமாவதும் நடக்கிறது.

F-1 மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடரும் வரை தங்கியிருக்க அனுமதித்த, நீண்டகாலமாக இருந்துவரும் “தகுதி நிலைக் காலம்” (Duration Of Status, D/S) முறையானது தற்போது திருத்தப்பட முன்மொழியப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, நான்கு ஆண்டுகள் என்ற நிலையான அங்கீகரிக்கப்பட்ட தங்கும் காலம் கொண்டுவரப்படலாம். இது பட்டப்படிப்பின் நடுப்பகுதியில் உள்ள மாணவர்களுக்குப் புதிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

மாணவர் விசாக்களுக்கு $250 புதிய விசா நம்பகத்தன்மை கட்டணமும் முன்மொழியப்பட்டுள்ளது, இருப்பினும் அதைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பட்டப்படிப்பிற்குப் பின் பணி அனுபவம் பெற வழங்கப்படும் விருப்பப் பயிற்சி விசா(OPT)வும் தீவிரமான ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. STEM பட்டதாரிகளுக்கு மூன்றாண்டு கால நீட்டிப்பை வழங்கும் STEM OPTஐக் கட்டுப்படுத்தும் அல்லது முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு விதி 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணி வழங்கும் நிறுவனங்களும் மாணவர்களும், பணிக் கடமைகள், பயிற்சித் திட்டங்கள், இ-வெரிஃபை (e-Verify) தொடர்பான கடுமையான இணக்கத் தேவைகளை எதிர்கொண்டு வருகின்றனர். படிப்பு முடிந்தவுடன் OPT காலம் முடிவதற்குள் எப்படியாவது ஹெச்1பி விசா வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் மாணவர்கள் கடும் அழுத்தத்தில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதுவும் அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாட்டத்தில் இருக்கும் பொழுது உள்ளூர்வாசிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழலில் பல லட்சங்கள் செலவு செய்து கனவுகளுடன் காத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சோதனையான காலம் தான்.

மேலும், 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு F-1 விசா வழங்குவதற்கான தடைகளும் போடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா இல்லை. ஆனால், கட்டுப்பாடுகளின் இந்த விரிவாக்கம் அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் பணி புரிந்து தங்க முடியும் என்றால் நிரந்தர குடியுரிமை பெற வழிவகுக்கும் கிரீன்கார்டு ஒவ்வொரு நாட்டிற்கும் வருடாந்திர எண்ணிக்கை என்ற வரம்பில் உள்ளது. இந்தியர்களின் விண்ணப்ப எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை. சில பிரிவுகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பால் பலருக்கும் குடும்ப திட்டமிடல் சிக்கல்களும் வேலை மாற்ற சிரமங்களும் தொடர்கின்றன. க்ரீன்கார்டு செயல்முறையில் தற்போது பெரிய சட்ட மாற்றம் எதுவும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், ஆவணச் சரிபார்ப்பு அதிகரித்துள்ளது. சில விண்ணப்பங்களுக்கு கூடுதல் ஆய்வும் நடைபெறுகிறது. குடியேற்ற அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2026 விசா அறிக்கையின்படி, EB-2(Employment Based) இந்திய விசாவுக்கான இறுதி நடவடிக்கை தேதி ஜூலை 15, 2014 ஆகும். இதன் பொருள், 2014-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்பு தங்கள் I-140 மனுக்களைத் தாக்கல் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தற்போது கிரீன்கார்டு ஒப்புதலுக்குத் தகுதியுடையவர்கள். அதற்குப் பின் க்ரீன்கார்டுக்காக விண்ணப்பித்தவர்களின் காத்திருப்பு நீண்டு, கையில் கிடைக்க இன்னும் பல்லாண்டுகள் ஆகலாம்.

USCIS தரவுகளின்படி, சுமார் 395,958 அங்கீகரிக்கப்பட்ட இந்திய EB-2 வழக்குகள் தற்போது விசா எண்களுக்காகக் காத்திருக்கின்றன. மிகவும் தற்போதையதாக இருந்த (current) EB-1 வகையும் குறிப்பிடத்தக்க பின்னடைவைக் கண்டுள்ளது. இந்தியர்களுக்கான EB-5 முதலீட்டாளர் விசா கூட சாத்தியமான பின்னடைவு குறித்த எச்சரிக்கைகளை எதிர் கொண்டுள்ளது.

வரலாற்று ரீதியாக, பிற நாடுகளிலிருந்து பயன்படுத்தப்படாத விசா எண்கள், தேவைக்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்த பிரிவுகளுக்குச் சென்றபோது, ​​இந்திய EB-2, EB-3 விண்ணப்பதாரர்கள் பயனடைந்தனர். அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. பிற நாடுகளும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்ற விசா எண்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வதால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

பத்தாண்டுகள் நீடிக்கும் காத்திருப்புகளை எதிர்கொண்டுள்ள இந்திய கிரீன்கார்டு விண்ணப்பதாரர்கள் தற்பொழுது மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் திறமையான இந்தியத் தொழில் வல்லுநர்களைத் தீவிரமாகக் கவர்ந்து வருகின்றன.

2025 நிதியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து H-1B விசாக்களில் 70%-க்கும் அதிகமானவை இந்தியக் குடிமக்களுக்கே வழங்கப்பட்டன. ஆனால் மேற்கூறிய ட்ரம்ப் அரசின் விசா மாற்றங்கள், “அமெரிக்காவின் புத்தாக்கச் சூழலமைப்பிலும் பரந்த வேலைவாய்ப்புப் பொருளாதாரத்திலும் அலை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று இந்தியாவின் தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம்(NASSCOM) எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையில் இந்திய வல்லுநர்கள் எத்தகைய பங்களிப்பைக் கொண்டுள்ளனர் என்பதை உலகம் அறியும். மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் நிறுவனர்கள், பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களில் ஒரு விகிதாசாரமற்ற பங்கைக் கொண்டுள்ளனர். தற்போதைய இந்த அடக்குமுறையின் முரண் என்னவென்றால், அமெரிக்காவின் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு யார் அடித்தளமாக இருந்தார்களோ அவர்களையே குறிவைத்திருப்பது தான்.

இதன் புவிசார் அரசியல் பரிமாணங்கள் வாஷிங்டனுக்குத் தெரியாமல் இல்லை. பிரதிநிதிகள் ஜிம்மி பனெட்டா, அமி பெரா, சலூட் கார்பஜால், ஜூலி ஜான்சன் உள்ளிட்ட அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள், “அமெரிக்க-இந்திய உறவில் ஏற்படக்கூடிய எதிர்மறைத் தாக்கங்கள்” குறித்து எச்சரித்து, $100,000 H-1B கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அதிபருக்கு நேரடியாகவே கடிதம் எழுதினர். இந்தியா, அமெரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயகப் பங்காளியாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு ஒரு இன்றியமையாத எதிர்சக்தியாகவும், ஒரு முக்கிய தொழில்நுட்பக் கூட்டாளியாகவும் விளங்குகிறது. விசா கட்டணங்கள் காரணமாக அந்த உறவில் விரிசல் ஏற்படுவது ஆபத்து என்பதை வாஷிங்டனில் உள்ள சிலர் உணர்ந்துள்ளனர். கொள்கைகள் இன்னும் அதை பிரதிபலிக்கவில்லை என்றாலும் கூட.

H-1B விசா தேர்வுக்காகக் காத்திருப்பவர்கள், F-1 விசா வாய்ப்புகள் சுருங்குவதைக் காண்பவர்கள், கிரீன்கார்டு அறிக்கையில் முன்னுரிமைத் தேதியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் என வரிசையில் நிற்கும் இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கும் மாணவர்களுக்கும் அமெரிக்கா தனது கதவுகளை மூடவில்லை. ஆனால் அந்த கதவுகளுக்குள் நுழைவதற்கான விதிகளை மாற்றிக் கொண்டிருக்கிறது. “படிப்பு→OPT→H-1B→கிரீன்கார்டு” என்ற பழைய பாதை இன்னும் இருக்கிறது. ஆனால் அது முன்பைவிட மிகவும் போட்டி நிறைந்ததாகவும் அதிக கண்காணிப்பு கொண்டதாகவும் மாறி வருகிறது. இந்திய மாணவர்களுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையும் அதே நேரத்தில் ஒரு வாய்ப்பும் ஆகும்.

ஒரு காலத்தில் அமெரிக்கா என்பது வாய்ப்புகளின் நாடு மட்டுமல்ல, உலகின் சிறந்த திறமையாளர்களை வரவேற்ற திறந்த கதவாகவும் இருந்தது. இன்று அந்தக் கதவு திறந்தே இருந்தாலும் அதில் நுழைவதற்கான சாவி மாறியுள்ளது. அதிர்ஷ்டம், சரியான நேரம், சரியான நிறுவனம் என்பவற்றை விட திறமை, கல்வித் தகுதி, தொழில்நுட்ப நிபுணத்துவம், தெளிவான நோக்கம் ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்திய மாணவர்களுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் இது ஒரு தடையாக அல்ல, மாறாக தங்களை உலகத் தரத்திற்கு உயர்த்திக்கொள்ளும் அழைப்பாகும். அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள் மேலும் மாற்றமடையலாம். ஆனால், உலகின் சிறந்த திறமைகளுக்கான தேவை மட்டும் மாறாது. அந்தத் திறமைகளில் இந்தியர்கள் தொடர்ந்து முன்னணியில் இருப்பார்களா என்பதைத் தீர்மானிப்பது இனி கொள்கைகள் அல்ல. அவர்கள் மேற்கொள்ளும் தயாரிப்பும் தகுதியும் தான்.

Thursday, June 4, 2026

கொசுத்தொல்லை தாங்கலைடா மாதவா

சமீபத்தில் வாசித்த செய்தி ஒன்று.

கூகுளின் உயிரியல் அறிவியல் (Life Sciences) பிரிவான Verily, அடுத்த இரண்டு ஆண்டுகளில் கலிஃபோர்னியா & ஃப்ளோரிடா மாநிலங்களில் சுமார் 3.2 கோடி (32 மில்லியன்) வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்களை வெளியிட அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA)யிடம் அனுமதி கோரியுள்ளது. இந்தத் திட்டம் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை 2026 ஜூன் மாத தொடக்கம் வரை பதிவு செய்யலாம் என்றும் போட்டிருந்தார்கள்.

கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல், ஜிகா, சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் , வெஸ்ட் நைல் வைரஸ் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கம். 

Aedes aegypti என்ற இனத்தைச் சேர்ந்த ஆண் கொசுக்களின் உடலில் உள்ள Wolbachia எனப்படும் இயற்கையாகக் காணப்படும் பாக்டீரியா பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரிவதை தடுக்கும் ஆற்றல் கொண்டதால் கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற சோதனைகள் ஏற்கனவே சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டு கொசுக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவுகளைக் காட்டியுள்ளதாகவும் இது அமெரிக்காவில் இதுவரை முன்மொழியப்பட்ட மிகப்பெரிய கொசுக்கட்டுப்பாட்டு சோதனைகளில் ஒன்றாக அமைவதாகவும் கூகுள் கூறுகிறது.

வேடிக்கை என்னவென்றால் ஆண் கொசுக்கள் கடிக்காதாம். பெண் கொசுக்கள் தான் நம்மை அன்பாக விசாரிக்குதாம். என்ன கொடுமைடா மாதவா!

பேசாம மொக்க, மொக்க கொசுக்கள் இருக்குற கும்பகோணம், மதுரை பக்கத்துல இந்த ஆராய்ச்சியை பண்ண சொல்லணும் நம்ம சுந்தர் பிச்சையை.

அதுவும் மதுரையில ஆறு மணிக்கு கதவை சாத்தினா அது வேற வீட்டுக்குப் போயிடும்ங்கிற ஐதீகம்ல்லாம் இருக்கு. அதுவும் அப்படித்தான் வராம ராத்திரி தூங்கறப்ப காதுல வந்து 'கொய்ங்ங்ங்ங்ங்ங்ங்'னு கத்திட்டு ஊசி குத்தினா மாதிரி குத்திட்டு அந்த இடம் கொப்புளம் மாதிரி வீங்கி... இப்படி கைநிறைய வீர புண்களோட வண்டிய பிடிச்சு ஊருக்கு வந்து சேர்ந்தா போதும்னு...

இந்த கொசுத்தொல்லை தாங்கலைடா மாதவா.

 

Saturday, May 30, 2026

'கர'

ரொம்ப நாளாச்சே! ஏதாவது தமிழ் படம் பார்க்கலாம்னு நெட்ஃப்ளிக்ஸ்ல தேடினப்ப முன்னாடி வந்து விழுந்தது 'கர' படம். அதுவரைக்கும் தனுஷ் அதுல நடிச்சிருக்கார்னு கூட தெரியாது. ஆனால் ஒரு விழாவில் அவரும் மமிதா பைஜூவும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தப்ப சரி அடுத்த படத்துல ஜோடி போலிருக்குன்னு நினைத்தேன். ஏற்கெனவே இட்லிக்கடை பார்த்து சட்னி ஆனதால நானே இங்கிபாங்கி போட்டுட்டு இருக்கிறப்ப என்ன படம்னு ஈஷ்வர் கேட்கவும் தனுஷ் படமாம்னேன். என் போறாத நேரம், ஈஷ்வரும் படம் பார்க்க உட்கார்ந்துட்டார்!

முன்னாள் மாமனார் கண்ணம்மா, கண்ணம்மான்னு ஒரு பாட்டுல உருகினா முன்னாள் மருமகனுக்கும் அப்படியே ஒரு பாட்டு வைக்கணும்னு திராவிட தமிழ் உலகம் நினைச்சிருக்கு. பாவம், மமிதா. என்ன நினைச்சு இந்தப் படத்துல நடிச்சாரோ தெரியல. கொடுத்த கதாபாத்திரத்துக்குப் பாத்திரம் தேய்க்கிற காட்சிகள் தான். இதெல்லாம் ஒரு படம்னு வழக்கம் போல திட்டிட்டு கிளப்பிட்டார் ஈஷ்வர். தலைவலி வந்தாலும் மாத்திரை போட்டாவது படத்த பார்ப்போர் சங்கத்து ஆளு நான்😁தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

வறண்ட நிலம்னாலே பின்னணியில் இந்தக்குரலெடுத்து பாட்டு போட்டு அனத்துறது. ஒரு தடவை அவார்ட் கொடுத்துட்டா போதும். அதே ஃபார்முலா. போதும்பா!

அது என்ன எல்லார் நிலத்துலேயும் ஒரு ட்ராக்டர்? ஒரு சமாதி. நானும் ராமநாதபுரம் பக்கம் போயிருக்கேன். இப்படிலாம் பார்த்ததே இல்லை. நடைமுறைக்கு கொஞ்சம் கூட ஒத்து வராத காட்சிகள்னா தமிழ்ப்படங்கள்ல கொட்டிக் கிடக்கும். ஏமாற்றின வங்கியிலருந்து பணத்தைத் திருடி ஏமாந்தவங்களுக்கு கொடுக்குற ராபின்ஹூட் தனுஷ். அதுக்கு பண்ற கூத்துகள். இதுதான் படம்.

சமீபமா, கருப்பசாமிய வச்சு பாடல்கள் என்ன? படங்கள்ல குலசாமியா காமிச்சு காட்சிகள் என்ன? இந்தப்படத்திலும் அப்படித்தான். ஏதாவது அஜெண்டா கிஜண்டா இருக்குமோ?இயக்குநர் ரவிக்குமார் நல்லா நடிச்சிருந்தார். வடிவேலு ஒரு பேட்டியில் இந்த மதுரைக்காரனுங்க கோவக்காரனுங்க. எப்பவும் முறைச்சுக்கிட்டே 'உர்ர்ர்ர்ர்ர்'னு இருப்பாங்க. அப்படிதான் படம் முழுவதும் கோவக்கார தனுஷ். கொஞ்சம் எடை கூடினதால வேற மாதிரி தெரிஞ்சாரோ என்னவோ! மாமாவா கருணாஸ். கொடுத்த கதாபாத்திரத்திற்கு அவரும் நல்லாவே நடிச்சிருக்கார்.

என்ன? கேட்ட வார்த்தைகள் கிடையாது. கவர்ச்சி, குத்தாட்டம் கிடையாது. படம் முழுவதும் ஓராயிரம் கதாபாத்திரங்கள் இல்லை.வெட்டு, குத்து, ரத்தம் கபளீகரம்னு ஓவர் வன்முறை இல்லை. தனுஷ் தனுஷ் தனுஷ் மட்டும் தான்.

மலையாள நடிகர்களை மீண்டும் தமிழ்ப்படங்களில் பார்க்க முடிகிறது. கதையில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருந்தாலும் பொறுமையாகப் பார்ப்பவர்களுக்கு ஏதாவது இனாம் கொடுக்கலாம். நாங்களும் பாவம் தான😂

மணிரத்னம் குப்பை மாதிரி படத்தை எடுத்தாலும் அவருடைய ரசிகர்கள் 'ஆகா, ஆகா' என்று பாராட்டுவார்கள். ரஜினி கேவலமான கதையில் சொரித்தனமா நடிச்சிருந்தாலும் வெட்கமே இல்லாம நல்லாருக்கு தலைவான்னு சொல்ற மாதிரி இங்கேயும்...

இதுக்கு கே-ட்ராமா பார்த்திருக்கலாமேன்னு தோணுச்சுன்னா நீயும் என் இனமே!




Thursday, May 28, 2026

அவ்வளவு தானா இந்த வாழ்க்கை?

மேல்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். வகுப்பிற்குத் திடீரென வேறு பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த பெண்ணை அறிமுகப்படுத்தினார்கள். இடைவேளையின் போது அவள் பெயர், முன்பு படித்த  பள்ளி, அவளுடைய மதிப்பெண்கள் பற்றியும் தெரிந்து கொண்டோம் உள்ளூர் தாதாவான நாங்கள். நமக்குப் போட்டியாக வர மாட்டாள் என்ற அற்ப சந்தோஷம். வகுப்பறையில் மாணவிகளின் உயரத்தை வைத்துதான்  முதல், இரண்டாம் வரிசை என்று அமர வைப்பார்கள். அவளோ குட்டியாக இருந்தாள். அவள் உயரத்தில் இருந்த மாலதியுடன் அமர்ந்து கொண்டாள். 

இரண்டாம் நாள் "அவளும் சௌராஷ்டிரா பொண்ணு தான்" என்றாள் மாலதி. "அப்படியா? ஒரு இனிஷியல் தானே வச்சிருக்கா?"

வீட்டுக்குச் சென்றவுடன் அம்மாவிடம், "எப்படிம்மா சௌராஷ்ட்ரா பொண்ணு ஒரு இன்ஷியலோட இருக்க முடியும்?"

எங்கள் சமூகத்தில் அனைவரும் இனிஷியலில் குடும்பப் பெயரின் முதல் எழுத்தையும் அப்பாவின் முதல் எழுத்தையும் வைத்திருப்போம் என்று நினைத்திருந்தேன். இவள் மதுரைக்காரி இல்லையோ?

"நாளைக்கு விவரமா கேட்டுட்டு வா" முடித்துக் கொண்டாள் அம்மா.

அடுத்த நாள் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே அவளிடம் "அது என்ன உனக்கு மட்டும் ஒரு இனிஷியல் தான் இருக்கு?"

"அது எங்க அப்பா பேரோட முதல் எழுத்து" என்றாள்.

"ஏன் வீட்டுப் பேர் வச்சுக்கல?"

"தெரியல."

"உங்க வீட்டுப் பேர் என்ன? வீடு எங்க இருக்கு?"

அவளும் கூற, அதை நானும் அப்படியே அம்மாவிடம் ஒப்பிக்க, "ஓ! விளக்குதூண்ல இருக்குற தொப்பே (வீட்டுப்பெயர்) ராமலிங்கு தா (ராமலிங்கம் அண்ணன்) பெடி(மகள்) யா?"

அவ்வளவு தான். அவள் வீட்டுப் பெயரைச் சொன்னவுடன் முழு ஜாதகமும் தெரிந்து விட்டது. எங்கள் சமூகத்தில் அப்படி, இப்படி என்று சுற்றி வளைத்துத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். பாட்டி வீட்டிற்குத் தெரிந்த குடும்பம். அவளின் அப்பாவிற்கு மாமாக்கள் வயது. அவளின் அம்மா, என் அம்மாவுடன் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர். தம்பி, என் தம்பிகளின் வயது. நண்பனும் கூட! எல்லாம் தெரிந்த பிறகு அவளுடன் பழகுவதில் சிரமம் இருக்கவில்லை.

வகுப்பில் கமல், ரஜினி ரசிகைகள் என இரண்டு கோஷ்டி. இவள் ரஜினி ரசிகை என்றவுடன் நாங்கள் கொஞ்சம் விலகிக்கொண்டோம். ஆனால் படத்தை கதையாகச் சொல்வதில் கில்லாடி. 

முதல் தேர்வு முடிந்தது. ஒவ்வொரு ஆசிரியரும் தாள்களை நீட்ட எதிர்பார்த்த மதிப்பெண்கள் தான். அதனால் ஏமாற்றமில்லை. வேதியியல் பாடம் எடுத்த கமலா டீச்சர் தாளை நீட்டும் பொழுது வகுப்பு முடிந்தவுடன் வந்து பார் என்று சொல்லவும் தான் எங்கேயோ இடித்தது. அவரைப் பார்க்கச் சென்றால், "நேற்று வந்த பொண்ணு உன்னைய விட மார்க் கூட வாங்கியிருக்கா. வேற ஸ்கூல்ல இருந்து வந்த பொண்ணுட்ட இப்படி தோத்து போயிருக்க. அவ்வளவு தானா?"

சும்மாவே ஆடுவேன். இப்ப சலங்கைய வேற கட்டி விட்டுட்டாங்களா? அவ்வளவு தான். இனிமே தான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்க போறன்னு மனசுல வரிஞ்சு கட்டிட்டுப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் முதல் மூன்று ரேங்க்குக்குள் வர விடக்கூடாது. இன்னொன்று கெமிஸ்ட்ரி பாடத்தில் முதலாவதாக நான் மட்டுமே இருக்க வேண்டும். கங்கணம் கட்டிக் கொண்டு படித்தேன். எனக்கும் அவளுக்கும் கடுமையான போட்டி. அவளுக்கும் வேதியியல் பாடம் ரொம்ப இஷ்டம் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் கடைசி வரை முதலிடத்தை விட்டுக் கொடுக்கவேயில்லை. என்னுடைய நெருங்கிய வட்டத்திற்குள்ளும் அவள் வரவில்லை. 

பின், வெவ்வேறு கல்லூரிகளுக்குச் சென்று விட்டோம். பாட்டி, பெரியம்மா வீடுகளுக்குச் செல்லும் பொழுது பார்த்து ஒரு ஹாய். எப்படி இருக்க? என்று குசலம் விசாரிப்பதோடு சரி.

காலங்கள் உருண்டோட, ஈஷ்வருடன் நிச்சயம் ஆனபிறகு, தன்னுடைய நண்பனும் மாமா மகனுமான குட்டி என்ற வெங்கடேஷை அறிமுகம் செய்து வைக்கப் போவதாக கூறினார். அவரும் அவருக்கு நிச்சயித்த பெண்ணை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க அழைத்து வந்தார். பார்றா! R.ஆஷா! எனக்கு நல்லா தெரியுமே! ஆம்! அது தான் அவளது பெயர். 

விதி மீண்டும் உறவாக எங்களை இணைத்தது. எங்களுடைய திருமணம் நடந்து முடிந்த இரு மாதங்களில் அவர்களுக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் சென்னையில். நாங்கள் மதுரையில்.

ஒரு முறை சென்னைக்கு அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது தான் மாமா, மாமி, ஆஷா, குட்டி dha, அவருடைய அண்ணன், அண்ணி எல்லோரையும் சந்தித்தேன். மாமா நன்றாகப் பேசினார். மாமியாரின் மேல் பாசமாக இருந்திருப்பார் போல. பழைய நினைவுகள், நிறைய விஷயங்கள் என்று ஈஷ்வருடன் பேசினார். மாமி மிக கட்டுக்கோப்பான பழங்காலத்துப் பெண்மணி. ஈஷ்வருக்கு அம்மாவின் உடன்பிறந்தவரின் மனைவி உறவு மட்டுமல்ல அப்பா வழியில்உடன்பிறந்த அக்காவின் பெண் என்பதால் இரு பக்க உறவுகள். மிகவும் பாசமாக இருந்தார். 

நாங்கள் இருவரும் இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பில் இல்லாது தனித்திருந்ததால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆச்சர்யமாக இருந்தது! அங்கே மருமகள்கள் சமைக்க, பூஜைக்குப் பிறகு ஆண்கள் முதலில் சாப்பிட, பிறகு தான் பெண்கள் சாப்பிடவேண்டும். எனக்கும் ஈஷ்வருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், மாமி சொன்னது தான் அங்கு சட்டம் என்று மட்டும் புரிந்தது. 

அவர்களுக்கும் புரிந்திருக்காது. எப்ப பாரு லதா, இங்க வா. உட்காரு. சாப்பிடு என்று ஈஷ்வர் அழைக்கும்போது அங்கே நிலவிய மெளனத்தைப் புரிந்து கொண்டு நான் எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது.

"இங்க இப்படித்தான்" என்றாள் ஆஷா, மிகவும் செல்லமாக வளர்ந்த பெண். 

நிறைய பேசினோம் அன்று.

வருடங்கள் உருண்டோட,

ஒவ்வொருமுறை  மதுரைக்குச் செல்லும் பொழுது மாமியைப் பார்த்துப் பேசி ஆசீர்வாதம் பெற்று வருவதுண்டு. 90 வயது என்று சொல்ல முடியாதபடி நன்றாகத்தான் இருந்தார், ஒரே நாளில் ஐந்து பேரை காலன் அழைத்துச் செல்லும் வரை. மதுரை அருகே அவர்கள் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகும் வரை. இறந்தவர்கள் அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். ஒரே நேரத்தில் மூன்று குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்து நிற்பது என்பது கொடுமை.

இன்று ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்து வழியனுப்பும் நாள் என்று ஊரிலிருந்து அழைத்தார்கள். எத்தனையெத்தனை கனவுகளுடன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது? அவ்வளவு தானா இந்த வாழ்க்கை? யோசிக்க, யோசிக்க துன்பமே மிஞ்சுகிறது.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அந்த வேலன் தான் துணையாக இருக்க வேண்டும். 

ஓம் ஷாந்தி.



தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம் - அமெரிக்காவின் உணர்ச்சி நிறைந்த வரலாறு

சொல்வனம் இதழ் 364ல் வெளியாகியுள்ள என்னுடைய கட்டுரை தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்த நாட்டில் வாழ்ந்த அனுபவம் மட்டுமில்லாமல் அதன் வரலாறு, அங்கு நடக்கும் அரசியல், பொது நிகழ்வுகள், வாழ்க்கை முறை, மக்கள் என்று அனைத்தையும் வாசித்தும், கண்டும், கேட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும். என் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்றாலும் அதன் வரலாற்றைப் படித்தும் கேட்டும் அறிந்து கொண்டதை மிக அழகாக அமேசான் ப்ரைமில்  ‘America: The Story of Us’ என்ற தொடரின் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த வருடம் தன்னுடைய 250வது சுதந்திர தினத்தை அமெரிக்கா கொண்டாடும் நேரத்தில், நாட்டைப் பற்றி இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் ஈர்க்கக்கூடிய ஆவணத்தொடர்களில் ஒன்றான ‘அமெரிக்கா: நமது கதை’யை மீண்டும் பார்ப்பதற்கு இதைவிடச் சிறந்த தருணம் வேறில்லை. இது வெறும் ஆவணப்படம் அல்ல. ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். ஒரு காட்சிக்கால இயந்திரம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நாட்டை உருவாக்க முனைந்த மனிதர்களின் போராட்டக் கதையும் ஆகும். 

போர்கள், கண்டுபிடிப்புகள், இடப்பெயர்வுகள், புரட்சிகளின் ஊடாக, அமெரிக்கப் புரட்சியையும், அமெரிக்க உள்நாட்டுப் போரின் கொடூரங்களையும் தொழிற்புரட்சியின் உருமாற்ற ஆற்றல்களையும் வரையறுக்கும் தருணங்களை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆவணப்படம் வெறும் தேதிகளையும் உண்மைகளையும் மட்டும் முன்வைக்காமல் வரலாற்றை மனிதாபிமானப்படுத்துகிறது. 

உலகளாவிய பார்வையாளர்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு வெளியே உள்ளவர்களுக்கு, உலக அரங்கில் அமெரிக்கா ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் இருக்கிறது என்ற ஆழமான கேள்விக்கு இந்த ஆவணப்படம் பதிலளிக்கிறது. காலனிகளின் ஒரு குழு எப்படி ஒரு உலக வல்லரசாக மாறியது? புதுமையும் லட்சியமும் அதன் கலாச்சாரத்தில் ஏன் ஆழமாக வேரூன்றியுள்ளன? அதன் உள்நாட்டுப் போராட்டங்கள் உலக வரலாற்றை எப்படி வடிவமைத்தன? என இந்தத் தொடரின் மூலம் அமெரிக்கா என்றொரு தேசம் எங்கிருந்து தொடங்கியது, எப்படி வளர்ந்தது என்று விளக்குகிறது.

குடியேறிகளுக்கு, இந்தத் தொடர் ஒரு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அதன் சாராம்சத்தில், அமெரிக்கா என்பது குடியேறிகளின் நாடு. இந்த ஆவணப்படம், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பிற இடங்களிலிருந்து வந்த மக்கள் அலை அலையாகத் தேடி வந்ததைச் சித்தரிக்கிறது. வாய்ப்புகளையும் சுதந்திரத்தையும் தேடி புலம்பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் கனவைத் தொடரவும் கட்டியெழுப்பவும் வாய்ப்புகள் தரும் நாடாக ஒரு உலகளாவிய உண்மையைப் பிரதிபலிக்கிறது.

மேலும் இந்தத் தொடர் எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் காட்டாமல் போராட்டங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும், மோதல்களையும் காட்டுகிறது. அந்த நேர்மையே தொடரை இன்னும் வலிமையாக்குகிறது. ‘அமெரிக்கா: தி ஸ்டோரி ஆஃப் அஸ்’ ஆவணத்தொடரை உண்மையிலேயே மறக்க முடியாததாக ஆக்குவது அதன் கதை சொல்லும் பாணிதான். திரைப்பட பாணியிலான மீள்நிகழ்வுகள், நிபுணர் கருத்துரை, உணர்ச்சிப்பூர்வமான கதைசொல்லல் மூலம் இது ஒரு ஆவணப்படம் போலத் தோன்றாமல், வரலாற்று நிகழ்வுகளை அனுபவப்பூர்வமாக உணர வைக்கிறது.

முதல் அத்தியாயத்திலிருந்தே இந்தத் தொடர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. அதாவது, “அமெரிக்கா என்றொரு நாடு பாரம்பரிய அர்த்தத்தில் ‘கட்டப்படவில்லை’ – அது உருவாக்கப்பட்டது” என்பதுதான். உலகின் மிகவும் சக்திவாய்ந்த பேரரசை எதிர்க்க சாதாரண மக்கள் ஒரு அசாதாரணமான முடிவை எடுக்கும் அமெரிக்கப் புரட்சியின் குழப்பங்களுக்குள் நம்மை ஆழ்த்துகிறது. சரியான காலணிகள் இல்லாத, உறுதியான எதிர்காலம் இல்லாத, நம்பிக்கை மட்டுமே உள்ள வீரர்களின் பயத்தின் ஊடே “சுதந்திரம் அறிவிக்கப்படுவதில்லை, அது துணிந்து எதிர்கொள்ளப்படுகிறது”என்ற உணர்ச்சிப்பூர்வமான மையக்கருவுடன் துவங்குகிறது தொடர்.

வெற்றி என்பது கொண்டாட்டம் போல வருவதில்லை. அது தியாகம், பசி மற்றும் சந்தேகத்துடன் வருகிறது. தங்களால் தப்பிப் பிழைக்க முடியுமா என்ற உறுதியற்ற நிலையில் இருக்கும் ஒரு தேசத்தின் பலவீனமான பிறப்பை இரண்டாவது அத்தியாயம் படம்பிடித்துக் காட்டுகிறது. சுதந்திரக் கனவு, பணமில்லை, நிலைத்தன்மை இல்லை, ஒருங்கிணைந்த அடையாளம் இல்லை என்று யதார்த்தத்துடன் மோதினாலும் தர்க்கத்திற்கு எதிரான நம்பிக்கை எனும் சக்திவாய்ந்த ஒன்று உருவாகத் தொடங்குகிறது. ஒரு தேசம் என்பது போர் முடிவடையும்போது பிறப்பதில்லை. மாறாக, மக்கள் அதன் மீது நம்பிக்கை வைக்கும்போது பிறக்கிறது என்பதைக் காட்டுகிறது இந்த அத்தியாயம்.

கிழக்கில் துவங்கிய கதை மெதுவாக நிலம், வாய்ப்பு, தலைவிதியைத் தேடி மேற்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. ஆனால் அந்தப் பயணம் அத்தனை எளிமையானதல்ல. அறியப்படாத நிலத்திற்காக எல்லாவற்றையும் பணயம் வைக்கும் குடும்பங்கள், பூர்வகுடி சமூகங்களின் அழிவும் இடப்பெயர்ச்சியும், வாழ்வாதாரத்திற்கும் லட்சியத்திற்கும் இடையிலான கட்டுக்கடங்காத, அடக்கப்படாத போராட்டம் என்று இந்த அத்தியாயம் முன்னேற்றம் பெரும்பாலும் வலியுடன் வருகிறது என்ற கடினமான உண்மையை எதிர்கொள்ள வைக்கிறது. கனவுகளால் தேசங்களைக் கட்டியெழுப்பவும் முடியும், வாழ்க்கையையும் சிதைக்க முடியும் என்பதையும் நினைவூட்டுகிறது.

அமெரிக்க உள்நாட்டுப் போர் என்பது வெறும் போர் மட்டுமல்ல. அது சகோதரனுக்கு எதிராக சகோதரன், அரசுக்கு எதிராக அரசு, மனிதகுலம் தனக்கு எதிராகவே என ஒரு குடும்பம் தன்னைத்தானே சிதைத்துக் கொண்டதாகும். அடிமைத்தனம் என்னும் புறக்கணிக்க முடியாத பிரச்சினையும் இதன் மையத்தில் உள்ளது. இந்த அத்தியாயம் போரை மகிமைப்படுத்தவில்லை. ஆனால் ஒரு தேசத்தின் மிகப்பெரிய பலமே அதன் ஆழமான பிளவாகவும் இருக்கக்கூடும் என்பதை அம்பலப்படுத்துகிறது.

உள்நாட்டுப் போர் அதன் உச்சத்தை அடைய, அதன் அழிவின் மத்தியில், ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. மக்களிடையே சுதந்திரம் குறித்த கருத்து விரிவடைகிறது. அடிமைத்தனத்தின் முடிவு ஒரு அரசியல் மாற்றத்தை மட்டுமல்ல, ஒரு தார்மீகப் பரிணாம வளர்ச்சியையும் குறித்தாலும் அதன் வடுக்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன. உடல்ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மீள்கட்டமைப்பு தொடங்குகிறது. அதன் விளைவுகள் அமெரிக்காவை என்றென்றைக்குமாக மாற்றியமைக்கின்றன.

போருக்குப் பிறகு மறுகட்டமைப்பு வருகிறது. இரயில் பாதைகள் நாடு முழுவதும் நீண்டு நகரங்கள் புழுதியிலிருந்து எழுகின்றன. தொழிற்புரட்சியின் போது தொழிற்சாலைகள் கர்ஜித்து உயிர்பெறுகின்றன. ஆனால் ஒவ்வொரு எஃகு உத்திரத்திற்கும் ரயில் பாதைக்கும் பின்னால் தொழிலாளர்கள், குடியேறிகள், மறக்கப்பட்ட கரங்கள் என இந்த அத்தியாயம், வியர்வையாலும் தியாகத்தாலும் அமெரிக்காவைக் கட்டியெழுப்பியவர்களைப் போற்றுகிறது. ஒரு தேசத்தின் வலிமை, அதைக் கட்டியெழுப்பும் கரங்களில் அடங்கியுள்ளது என்பதை நினைவுறுத்துகிறது.

மறுகட்டமைப்பில் வானுயரக் கட்டிடங்கள் வானத்தைத் தொடுகின்றன. மின்சாரம் இரவை ஒளிரச் செய்கிறது. கனவுகள் பெரிதாகி அமெரிக்கா ஒரு நகர வல்லமைமிக்க சக்தியாக உருமாறி வருகிறது. அதே நேரத்தில் செல்வமும் வறுமையும், வாய்ப்புகளும் போராட்டங்களும் என நகரங்கள் சமத்துவமின்மையையும் வெளிப்படுத்துகின்றன. குடியேறிகள் நம்பிக்கையைச் சுமந்து கடுமையான யதார்த்தங்களை எதிர்கொண்டு நகரங்களுக்குள் வெள்ளமெனப் பாய்கின்றனர்.

கார்கள், தொழிற்சாலைகள், பெருமளவு உற்பத்தி என அமெரிக்கா முன்னேற்றத்தின் இயந்திரமாக மாறுகிறது. ஹென்றி ஃபோர்டு போன்ற ஆளுமைகள், மக்கள் வாழ்க்கையையும் பணிபுரியும் விதத்தையும் மறுவரையறை செய்கிறார்கள். செல்வம் குவிகிறது. அமெரிக்கக் கனவு வளர்கிறது. கூடவே அதன் விலையும் அதிகரிக்கிறது. வளர்ச்சியுடன் சமநிலையின்மையும் வருகிறது. முன்னேற்றம் ஒரு தேசத்தை உயர்த்த முடியும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது அந்நாட்டை நிலைகுலையவும் செய்யும் என்று எடுத்துரைக்கிறது எட்டாவது அத்தியாயம்.

கனவு சிதைகிறது. பெரும் மந்தநிலை(Great Depression) விரக்தியைக் கொண்டுவருகிறது. வேலைகள் பறிபோகின்றன. குடும்பங்கள் துன்பப்படுகின்றன. நம்பிக்கை மங்குகிறது. ஆயினும், இங்குதான் அமெரிக்கா தன்னுடைய மீள்திறனை வெளிப்படுத்துகிறது. மக்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். ஒன்றுமில்லாததிலிருந்து மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். உண்மையான வலிமை என்பது வெற்றியில் வெளிப்படுவதில்லை, மாறாக உயிர் பிழைப்பதில் வெளிப்படுகிறது என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்துகிறது ஒன்பதாவது அத்தியாயம்.

வெற்றி என்பது ‘தலைமைத்துவம்’ என்றொரு புதிய சவாலையும் எதிர்கொள்கிறது. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுக்கிறது. தொழில்நுட்பம் முன்னேறுகிறது. செல்வாக்கு விரிவடைகிறது. கூடவே பதற்றங்கள் அதிகரித்து உள்நாட்டில் குடிமை உரிமைகளுக்காகப் போராட்டங்கள் தொடர்கின்றன. உலகத்தை வழிநடத்தினாலும் இந்தக் காலக்கட்டத்தில் தான் தேசம் தனது சொந்த முரண்பாடுகளை எதிர்கொள்கிறது.

இறுதி அத்தியாயம் நம்மை நிகழ்காலத்திற்கு அழைத்து வருகிறது. தொழில்நுட்பப் புரட்சிகள் முதல் செப்டம்பர் 11 தாக்குதல்கள் போன்ற துயரமான தருணங்கள் வரை, அமெரிக்கா தொடர்ந்து பரிணமித்து வந்திருக்கிறது. தற்பொழுது நாமும் இந்த அத்தியாயத்தின் அங்கத்தினர்களாகிவிட்டிருக்கிறோம். ஒரு தேசத்தின் மிகச்சிறந்த அத்தியாயம் என்பது, எப்போதும் இன்னும் எழுதப்படவிருக்கும் அத்தியாயமே ஆகும் என்று இந்த அத்தியாயம் நமக்கு ஒரு சக்திவாய்ந்த உண்மையை உணர்த்தி நிறைவடைகிறது.

அமெரிக்கா என்றதும் அதன் மீள்திறன், பன்முகத்தன்மை, தன்னைப் புதுப்பித்துக் கொள்வதில் வேரூன்றியுள்ளது என்பதே இன்று அடையாளமாக உள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு, அதன்பின் முன்னேறிச் சென்றுள்ளது.

அமெரிக்கர்களுக்கு, இந்தத் தொடர் ஒரு கண்ணாடியாக, இன்று அவர்கள் அனுபவிக்கும் சுதந்திரங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்தவை. எளிதாகப் பெறப்பட்டவை அல்ல என்று நினைவூட்டுகிறது.

நாடு தனது 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், இந்தத் தொடர் வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி, ஒரு சுயபரிசோதனைக்கான புள்ளியாக பரிணமிக்கிறது.நாட்டின் கதை இன்னும் எழுதப்பட்டு வருகிறது. அதன் சவால்களும் மனவுறுதியும் இன்னும் முடிவடையவில்லை. பல வழிகளில், இந்த ஆண்டுவிழா என்பது கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது மட்டுமல்ல, “அடுத்த 250 ஆண்டுகளில் அமெரிக்கா எத்தகைய தேசமாக இருக்கும்” என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

மேலும், ஒரு நாடு அதன் கடந்த காலத்தால் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை; மாறாக, கற்றுக்கொள்ளவும், தன்னைத் தகவமைத்துக்கொள்ளவும், தொடர்ந்து முன்னோக்கிச் செல்லவும் உள்ள அதன் திறனால் வரையறுக்கப்படுகிறது. 

அமெரிக்கா என்பது வரைபடத்தில் இருக்கும் ஒரு நாடு மட்டுமல்ல; அது தீயில் சோதிக்கப்பட்ட துணிவின் பெயர். தோல்வியில் கூட விடாமல் பிடித்துக் கொண்ட கனவின் பெயர்.

இந்தக் கதை முடிவடையவில்லை. ஒவ்வொரு குடியேற்றவாசியின் நம்பிக்கையிலும், ஒவ்வொரு உழைப்பாளியின் வியர்வையிலும், ஒவ்வொரு தலைமுறையின் போராட்டத்திலும் இது இன்னும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான், இந்தத் தொடர் கடந்த காலத்தை மட்டும் பேசவில்லை. 

“நீங்கள் எங்கிருந்து வந்தவராக இருந்தாலும்,
இந்தக் கதையில் உங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது”

என்று எடுத்துரைக்கிறது.

மனிதகுலத்திற்கான கனவா? பணத்திற்கான பேராசையா? மஸ்க் – ஓபன்AI வழக்கின் பின்னணி

சொல்வனம் இதழ் 367ல் வெளியாகியுள்ள என்னுடைய கட்டுரை மனிதகுலத்திற்கான கனவா? பணத்திற்கான பேராசையா?  – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

உலகெங்கிலும் போர்கள், மாபெரும் போராட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அரசியல் துருவமயமாக்கல் மற்றும் மனிதகுலம் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் முன்னேறி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற அச்சங்கள் வளர்ந்து வரும் காலத்தில், கலிபோர்னியாவில் நடந்த ஒரு நீதிமன்றப் போராட்டமும் தொழில்நுட்ப உலகில் தற்பொழுது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் புயலின் மையத்தில் இருப்பது OpenAI நிறுவனம்.


2015ல் OpenAI நிறுவப்பட்டபோது அதன் நோக்கம் உன்னதமானதாகவும் கிட்டத்தட்ட புரட்சிகரமானதாகவும் ஒலித்தது. ஒரு சில பெருநிறுவனங்கள் அல்லது அரசாங்கங்களைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாக, மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதாக அந்த அமைப்பு அன்று உறுதியளித்தது. கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு ஆபத்தானதாக மாறக்கூடும் என்று எலான் மஸ்க் மீண்டும் மீண்டும் எச்சரித்து, சாம் ஆல்ட்மேன் மற்றும் பல செல்வாக்குமிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி செய்து நிறுவனத்தில் தானும் பங்கேற்றார்.

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலிக்கான் வேலி நிறுவனங்களுக்கு மாற்றாக OpenAI தன்னை ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாக முன்வைத்தது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு ஒரு தனிப்பட்ட தொழில்நுட்பப் பேரரசின் தனிச் சொத்தாக மாறக்கூடாது என்ற கொள்கையுடன் அதன் நிறுவனர்கள் அப்பொழுது செயல்பட்டனர்.

ஆனால், சில ஆண்டுகளாக எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மிகவும் செலவு மிக்கதாக மாறியதால், OpenAI ஒரு சிக்கலான “வரையறுக்கப்பட்ட லாப” கட்டமைப்பை உருவாக்கி, மைக்ரோசாஃப்டிடமிருந்து டிரில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளை ஏற்றுக்கொண்டது. அதன் தயாரிப்புகள், குறிப்பாக ChatGPT, OpenAI நிறுவனத்தைத் தொழில்நுட்ப உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக மாற்றிவிட்டன.

இந்த மாற்றம்தான் மஸ்க்-OpenAI வழக்கின் மையமாக இருந்தது.

மனிதகுலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பிலிருந்து லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு பெருநிறுவனம், வல்லமைமிக்க அமைப்பாக மாறியதன் மூலம் OpenAI தனது அசல் நோக்கத்திற்குத் துரோகம் செய்துவிட்டது. OpenAI லாப நோக்கற்றதாக இருக்கும் என்று நம்பியே தான் பணத்தை நன்கொடையாக அளித்ததாக மஸ்க் வாதிடுகிறார். அவரைப் பொறுத்தவரை, குவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சக்தியிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைப்பு, அதற்குப் பதிலாக, அது தடுப்பதாக உறுதியளித்ததையே செய்வதாக மாறிவிட்டது. ஒரு தொண்டு நிறுவனத்தை எடுத்து அதை ஒரு பண இயந்திரமாக மாற்ற முடியாது என்று வாதிட்டார்.

OpenAI இந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரித்தது.

OpenAI வணிக ரீதியாக மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று மஸ்க் ஒருமுறை வலியுறுத்தியதாகவும் அந்த அமைப்பின் மீது அதிகக் கட்டுப்பாட்டை விரும்பியதாகவும் அந்நிறுவனம் வாதிட்டது. OpenAI-ன் சட்டக் குழுவின்படி, உள்ளகக் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு மஸ்க் வெளியேறினார். இப்போது தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, OpenAI உடன் நேரடியாகப் போட்டியிடுவதால் நிறுவனத்தைத் தாக்குகிறார் என்று எதிர்வாதம் செய்தது OpenAI.

ChatGPT மூலம் அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவுப் புரட்சியைக் கட்டவிழ்த்துவிட உதவிய நிறுவனம் இது. ஆனால், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான ஒருமித்த பார்வையை முன்வைப்பதற்குப் பதிலாக, ஒரு காலத்தில் OpenAI-ஐ ஒன்றாகக் கட்டியெழுப்பியவர்கள் இப்போது பொதுவெளியில் ஒருவரையொருவர் கிழித்தெறிகிறார்கள். எக்ஸ் தள நிறுவனர் எலான் மஸ்க்கிற்கும் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேனுக்கும் இடையே அரங்கேறியிருப்பது அதிகாரம், அறநெறி, பணம், நம்பிக்கை ஆகியவற்றின் மீதான ஒரு தீவிரமான மோதல்.

செயற்கை நுண்ணறிவு, நாகரிகத்தையே மாற்றியமைக்கும் அளவுக்குச் சக்திவாய்ந்ததாக மாறும்போது அதை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள்? அந்த அதிகாரத்தை யாரிடமாவது உண்மையிலேயே நம்பி ஒப்படைக்க முடியுமா? என்று யோசிக்க வைத்திருக்கிறது அண்மையில் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதங்கள். இந்த விசாரணையில் உழைக்கும் மக்களான நடுவர் குழுவினர் அவர்களின் வாக்குவாதங்களை இரு கோடீஸ்வரர்களின் அகந்தைக்கு எதிரானதாக மட்டுமில்லாமல்

லாப நோக்கற்ற கொள்கைகள் vs. பெருநிறுவன யதார்த்தம்,

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு vs. செயற்கை நுண்ணறிவு வணிகமயமாக்கலாகவும் பார்க்கிறார்கள்.

இதனால் இந்த வழக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எதிர்கால செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பதை இது வடிவமைக்கக்கூடும்.

OpenAI-ன் கட்டமைப்பு மாறுமா, லாப நோக்கற்ற நிறுவனங்களிலிருந்து நிர்வாகிகள் லாபம் ஈட்ட முடியுமா, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய முதலீட்டாளர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மீது எவ்வளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று நடுவர் குழு இவ்விஷயங்களில் செல்வாக்கு செலுத்தக்கூடும் என்பதால் செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைகளும் உரிமைகளும் குறித்த முதல் பெரிய நீதிமன்றப் போராட்டமாக இதைப் பலரும் உற்று நோக்குகின்றனர்.

நீதிமன்றத்திற்குள் செல்வமும் செல்வாக்கும் பெருமளவில் குவிந்திருந்ததும் இந்த வழக்கு விசாரணை பெரும் கவனத்தை ஈர்த்ததற்கு மற்றுமொரு மிக முக்கிய காரணம் ஆகும். சாட்சிகளின் பட்டியலோ சிலிக்கான் பள்ளத்தாக்கின் அதிகார மையத்தைக் காட்டும் ஒரு வரைபடத்தைப் போல இருந்தது. மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா, OpenAI இணை நிறுவனர் கிரெக் ப்ராக்மேன், முன்னாள் தலைமை விஞ்ஞானி இல்யா சுட்ஸ்கேவர், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்துடன் தொடர்புடைய பல உயர்மட்ட முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்தப் பட்டியலில் இருந்தனர்.

சில சமயங்களில் இந்த வழக்கு விசாரணை ஒரு சட்ட நடவடிக்கையாகத் தோன்றாமல், தொழில்நுட்பம், பிரபல கலாச்சாரம், பெருநிறுவனப் போர் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மோதலைப் போலவே இருந்ததாகக் கூறப்படுகிறது. சட்டரீதியான வாதங்களுக்கு அடியில் இது வெறும் ஒரு நிறுவனப் பிரச்சினை மட்டுமல்ல. ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்த எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் கூட்டணியின் சரிவாகவும் பார்க்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களும் சாட்சியங்களும், இரு தரப்பிலிருந்தும் நிலவிய ஆழ்ந்த பதற்றங்கள், தலைமைத்துவம் குறித்த கருத்து வேறுபாடுகள், சூழ்ச்சி குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தின. மனிதகுலத்தைப் பாதுகாக்க OpenAI-ஐ உருவாக்க உதவியவராகவும், பின்னர் மற்றவர்கள் தனது தொலைநோக்குப் பார்வையைப் பணமாக்கியபோது தான் ஓரங்கட்டப்பட்டதாகவும் மஸ்க் தன்னைச் சித்தரிக்கிறார். இதற்கிடையில், “மஸ்க் வரலாற்றைத் திருத்தி எழுதுகிறார்” என்று ஆல்ட்மேனின் கூட்டாளிகள் கூறுகின்றனர்.

கருத்தியல் மோதல், நிறுவன அதிகாரம், தனிப்பட்ட அகந்தை, நட்பு பகையாக மாறியது, மனிதகுலத்தின் தொழில்நுட்ப எதிர்காலம் குறித்த அச்சங்கள் குறித்த உணர்ச்சிப்பூர்வமான பரிமாணம்தான் இந்த வழக்கு விசாரணையின் மீது பொதுமக்களும் ஆர்வம் கொள்ள காரணமாகும்.

“இவ்வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தில் கோடீஸ்வர நிர்வாகிகள் நெரிசலான நீதிமன்ற இருக்கைகளில் தோளோடு தோள் உரசியபடி அமர்ந்திருந்தனர். தனிப்பட்ட குறுஞ்செய்திகளும் ரகசியக் குறிப்புகளும் நீதிமன்றத் திரைகளில் காட்டப்பட்டன. பாதுகாப்புக் குழுக்கள் தாழ்வாரங்களில் குவிந்திருந்தன. கோடீஸ்வரர்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் வெளியே குழுமியிருந்தனர். மஸ்க்கை கேலி செய்யும் வகையில் ஊதப்பட்ட ராட்சச கேலிச்சித்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன” என்று செய்தியாளர்களும் காட்சிகளை விவரித்தனர்.

சாட்சியம் அளிப்பதே கூட அசாதாரணமானதாக மாறியது. OpenAI நிறுவனத்தில் சில நிர்வாகிகளின் பங்குகள் எதிர்காலத்தில் எவ்வளவு மதிப்புடையதாக இருக்கும் என்பது குறித்து வழக்கறிஞர்கள் வெளிப்படையாக விவாதித்தனர். தனது சொத்துக்களின் மதிப்பு இறுதியில் பல டிரில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று கிரெக் ப்ராக்மேன் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது!

பல பார்வையாளர்களுக்கு அந்த நீதிமன்றம் நவீன சிலிக்கான் பள்ளத்தாக்கின் ஒரு சின்னமாகவே மாறி, அளவற்ற செல்வம், லட்சியவாதம், அதிகாரம், தனிப்பட்ட போட்டி ஆகிய அனைத்தும் மோதிக்கொள்ளும் ஓர் இடமாகத் திகழ்ந்தது.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான விசாரணையில் ரகசிய குறிப்புகள், பதற்றமான குறுஞ்செய்திகள், தனிப்பட்ட நாட்குறிப்புகள், உணர்ச்சிமிக்க ஒப்புதல்கள் யாவும் வெளிச்சத்துக்கு வந்தன. அவை அனைத்தும் AI உலகின் பின்னாலுள்ள அதிகாரப் போட்டி, பேராசை, துரோகம், உடைந்த உறவுகளை உலகிற்குக் காட்டின. மனிதகுலத்தின் நம்பிக்கையை OpenAI துரோகம் செய்துவிட்டதாக மஸ்க் வாதிட்ட நிலையில், உலக AI போட்டியில் நிலைத்திருக்க பெரும் முதலீடும் வணிகமயமாதலும் அவசியம் என OpenAI தரப்பு பதிலளித்தது. விசாரணை முன்னேறிச் செல்லும்போது நீதிமன்றம் வெறும் சட்டப் போர்க்களமாக மட்டும் இல்லாமல் நவீன உலகின் எதிர்காலத்தையே காட்டும் ஒரு சாளரம் போல காட்சியளித்தது. பில்லியன் டாலர் மதிப்பீடுகள், கசிந்த செய்திகள், பகிரங்கமான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால், புரட்சிகரமான தொழில்நுட்பம், அளவற்ற செல்வம், மற்றும் கட்டுக்கடங்காத பேராசை ஆகியவை மோதும்போது என்ன நடக்கும் என்பது குறித்த ஒரு ஆழமான எச்சரிக்கை மறைந்துள்ளது. எலான் மஸ்க் ( எதிர்- Vs) சாம் ஆல்ட்மேன் இடையேயான வழக்கு, இனி இரண்டு சக்திவாய்ந்த மனிதர்களுக்கு இடையேயான ஒரு சாதாரண பகை அல்ல. அது, நெறிமுறைகள், பொறுப்புக்கூறல், மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை யார் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்த ஒரு உலகளாவிய விவாதமாக மாறியுள்ளது.

பல வாரங்கள் நடந்த வழக்கின் நீண்ட விசாரணைக்குப் பிறகு 2026 மே மாதத்தில் கூட்டாட்சி ஜூரி OpenAI மற்றும் சாம் ஆல்ட்மேனுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இது எலான் மஸ்க்கிற்கு பெரிய சட்டத் தோல்வியாக அமைந்தது. ஆனால் இந்த தீர்ப்பு முக்கியமாக “statute of limitations” எனப்படும் சட்ட ரீதியான கால வரம்பை அடிப்படையாகக் கொண்டது. OpenAI வணிகமயமாகி மைக்ரோசாஃப்டுடன் நெருக்கமாக இணைந்திருப்பதை மஸ்க் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார். இருந்தும் அவர் மிகவும் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாக ஜூரி கருதியது. அதாவது OpenAI தனது அடிப்படை இலட்சியத்தை ஒழுக்கரீதியாக துரோகம் செய்ததா என்பதை நீதிமன்றம் முழுமையாகத் தீர்மானிக்கவில்லை. மாறாக, மஸ்க்கின் சட்டப்பூர்வ புகார் தாமதமாக வந்துவிட்டது என்று மட்டுமே கூறியது. நீதிபதி யுவோன் கொன்சாலஸ் ரோஜர்ஸ் இந்த தீர்ப்பை ஏற்று மஸ்க்கின் கோரிக்கைகளைத் தள்ளுபடி செய்து OpenAI தனது தற்போதைய அமைப்பில் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கினார்.

வழக்கில் தோல்வியடைந்தபோதும் எலான் மஸ்க் உடனடியாக மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தார். இந்த தீர்ப்பு லாப நோக்கமற்ற அமைப்புகள் பின்னர் லாப நோக்கமுள்ள நிறுவனங்களாக மாறுவதற்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் OpenAI, தனது நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை. உலக AI போட்டியில் நிலைத்திருக்க அவசியமானவை என்பதை நிரூபிக்கும் வெற்றியாக இந்த தீர்ப்பைக் கொண்டாடியது. இந்த வெற்றி OpenAI-யின் எதிர்கால வணிகத் திட்டங்களையும் பாதுகாத்ததுடன், உலகின் மிகச் சக்திவாய்ந்த AI நிறுவனங்களில் ஒன்றாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இறுதியில் OpenAI – மஸ்க் வழக்கு என்பது முன்னாள் கூட்டாளிகளுக்கிடையிலான ஒரு சாதாரண சட்டப் பிரச்சினையாக மட்டும் இல்லை. அது செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகப்பெரிய அதிகாரப் போட்டிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. சாதாரண மக்களுக்கு இந்த வழக்கு எதிர்காலம் குறித்த ஒரு பெரிய கவலையைப் பிரதிபலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே கல்வி, வேலைகள், படைப்பாற்றல், அரசியல், மனித தகவல்தொடர்புகளை மறுவடிவமைத்து வருகிறது. இந்த அமைப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள் விரைவில் பல அரசாங்கங்களை விட அதிக செல்வாக்கைப் பெறக்கூடும்.

அதன் சாராம்சத்தில், OpenAI வழக்கு விசாரணை என்பது வெறும் ஒப்பந்தங்கள், முதலீடுகள், பெருநிறுவனக் கட்டமைப்புகள் பற்றியது மட்டுமல்ல. இது சில ஆழமான நவீனக் கேள்விகளையும் முன்வைக்கிறது.

மேம்பட்ட செயற்கை நுண்ணறிவை யார் கட்டுப்படுத்த வேண்டும்? அரசுகளா, லாப நோக்கமற்ற அமைப்புகளா, மாபெரும் நிறுவனங்களா அல்லது பில்லியனர்களா?

லாப நோக்கற்ற அமைப்புகள் அறநெறிப்படி பெருநிறுவனங்களாக மாற முடியுமா?

செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்க வேண்டும்?

மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய தொழில்நுட்பங்கள் பொதுநலனுக்காக செயல்பட வேண்டுமா அல்லது நிறுவன லாபத்திற்காகவா?

மனிதர்களை விட அதிக சக்தி பெறக்கூடிய AI அமைப்புகளைத் தனியார் நிறுவனங்கள் பொறுப்புடன் கையாளும் என்று உலகம் நம்பலாமா?

Friday, April 10, 2026

The Giant Falls

எங்கு பார்த்தாலும் போர், பொருளாதார நெருக்கடி செய்திகள் என்று சோகமாக இருக்கவே ஏதாவது படத்தைப் பார்க்கலாம் என்று நெட்பிளிக்ஸ்-ல் தேடினால் "The Giant Falls" என்றொரு ஸ்பானிஷ் படம் கண்ணில்பட்டது. சரி என்று பார்க்க ஆரம்பித்தால் முதல் காட்சியே பசுமையுடனும் பெரும் அருவி அருகே படகு செல்வது போன்ற காட்சிகளாலும் கவரப்பட்டு பார்க்க ஆரம்பித்தேன். மிகவும் எளிமையான கதை. ஆர்ப்பாட்டமே இல்லாமல் செல்லும் ஒரு குட் ஃபீல் படம். தந்தைக்கும் மகனுக்குமான உறவை அழுது ஓவர் செண்டிமெண்ட் இல்லாமல் மிக நேர்த்தியாகக் கொண்டு செல்கிறது. அழகான ஒளிப்படக் காட்சிகள், மெல்லிசை, மூடுபனி, 'ஜோ'வென்ற இரைச்சலுடன் அருவி நீர் தெளிப்பது போல படகுப் பயணக் காட்சிகள், பச்சைப்பசேல் மரங்களும் செடிகளும் என இயற்கைக்காட்சிகள், நடிப்பவர்களும் இயற்கையாக நடித்திருந்தது என்று படத்தைப் பார்க்க வைத்து விட்டது.

உலகின் மிக அற்புதமான இயற்கை இடங்களில் ஒன்றான Iguazú National Parkல்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளது. இது அர்ஜென்டினா-பிரேசில் எல்லையில் இருக்கிறதாம். கூகிளாண்டவர் சொன்னார். கதைக்களமே ஒரு கதாபாத்திரமாக வலம் வருவதால் காட்சிகள் மிகவும் இயல்பாக அமைந்திருந்தன.

சில படங்களைப் பார்க்க, பார்க்கப் பிடிக்கும். சில படங்களைப் பார்த்தவுடன் பிடிக்கும். கதையும், மாந்தர்களும், களமும் நன்கு அமைந்து விட்டால் அது நல்ல படமாக அமைந்து விடும். இந்தப்படமும் அந்த வரிசையில் தான் சேரும்.

அருவியின் பேரிரைச்சல் கதாபாத்திரங்களின் மனஓட்டத்தையும், மூடுபனி குழப்பத்தையும், அடர்ந்த காடுகள் தனிமையையும் பிரதிபலிப்பதைப் போல இருந்தது. கண்களில் அன்பையும், பாசத்தையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் காட்டும் போரிஸ் கதாபாத்திரம் மிக அருமை. அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த பெண்மணியின் நடிப்பும் அருமை.

வசனங்களை விட, அமைதியாக கடந்து செல்லும் இடங்கள் உணர்வுகளை அழகாகக் கடத்திச்சென்றது சிறப்பு. முடிவு எதிர்பாராத ஒன்று!


பார்த்து ரசிக்கலாம்.

 

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...