சொல்வனம் இதழ் 354ல் வெளிவந்த கட்டுரை ‘கண்ணுக்குத் தெரியாத’ நெருக்கடிகளுக்குள் சூடான் – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026
ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடும் நைல் நதிக்கரையில் பண்டைய நாகரிகங்களின் அடையாளமானதுமான சூடான், இன்று கொடுமையான உள்நாட்டுப் போரால் கடும் சரிவை எதிர்கொண்டு வருகிறது. ஏற்கெனவே பல தசாப்தங்களாக நடந்து வரும் உள்நாட்டு கலவரங்களால் பலவீனப்பட்டு இருக்கும் நாட்டின் தற்போதைய போர்ச்சூழல் அரிதாகவே உலகச் செய்திகளில் இடம்பிடித்திருப்பது வருத்தத்திற்குரியது.
ஏப்ரல் 2023 முதல், தேசிய இராணுவத்திற்கும் ஒரு சக்திவாய்ந்த துணை இராணுவப் படைக்கும் இடையிலான மிருகத்தனமான அதிகாரப் போராட்டம் அதன் நகரங்களை போர்க்களங்களாக மாற்றி லட்சக்கணக்கான மக்களை புலம்பெயர வைத்துள்ளது. இது ஒரு நீண்ட துயர வரலாற்றின் சமீபத்திய அத்தியாயம் மட்டுமே. காலனித்துவ ஆட்சி, ஆழமான இனப்பிளவுகள், சீரற்ற வளர்ச்சி, பல ஆண்டுகளாக இராணுவ சர்வாதிகாரத்தால் உருவான போர்களின் நீட்சி தான் சூடானின் இன்றைய துர்பாக்கிய நிலைக்கு காரணமாகியிருக்கிறது. நுபியா, குஷ் ராஜ்ஜியங்கள் முதல் நவீன தலைநகர் ஹார்ட்டூம் நகரம் வரை கலாச்சாரங்களை இணைத்த அதே நிலம் தான் இப்போது அதிகாரத்திற்கும் உயிர்வாழ்வதற்குமான போராட்ட களமாக மாறியுள்ளது. 2023ல் தொடங்கிய போரைப் புரிந்து கொள்ள சூடானின் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியா, பாகிஸ்தான் முதற்கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் விடுதலை என்ற பெயரில் உலகளவில் பிரிவினையைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது. அப்படித்தான் வடக்கு, தெற்கு என்ற பிளவுகளுடன் 1956ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எகிப்திய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது சூடான். பெரும்பாலும் அரேபியர்களும், இஸ்லாமியர்களும் நாட்டின் வடக்குப் பகுதியிலும் ஆப்பிரிக்கர்களும், கிறிஸ்தவர்களும், பாரம்பரிய நம்பிக்கையாளர்களும் தெற்குப் பகுதியிலும் வசித்து வந்த நிலையில், புதிய அரசாங்கம் உயரடுக்கினரை ஆதரித்து தெற்குப் பகுதிகளைப் புறக்கணித்தது. அதுவே முதல் சூடான் உள்நாட்டுப் போர் (1955–1972) தொடங்க காரணமாகி தெற்கு சூடானுக்கு சுயாட்சியை வழங்கும் அமைதி ஒப்பந்தத்துடன் முடிவிற்கு வந்தது. அந்த அமைதியும் குறுகியகாலமே நீடித்தது.
1983ல் ஜனாதிபதி ஜாஃபர் நிமெய்ரி நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை (ஷரியா) அறிமுகப்படுத்தினார். இது வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான போரை மீண்டும் தூண்டியது. இரண்டாவது சூடான் உள்நாட்டுப் போரில் 20 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர, அது ஆப்பிரிக்காவின் மிக நீண்ட, கொடிய போராக மாறியது.
1989ல் ‘உமர் அல்-பஷீர்’ என்ற இராணுவ அதிகாரி ஒரு சதித்திட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவரது சர்வாதிகார ஆட்சியில் சர்வதேச அளவில் சூடான் தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் டார்ஃபரின் மேற்குப் பகுதியில், அரபு போராளிகளும் ஆப்பிரிக்க விவசாயிகளும் நிலம் மற்றும் வளங்களுக்காக மோதிக்கொண்டதால் பதட்டங்கள் அதிகரித்து 2003ல் ‘டார்ஃபர் கிளர்ச்சி’யாக அது வெடித்தது. ‘ஜன்ஜாவீட்’ எனப்படும் கொடூரமான போராளிக் குழுக்களைப் பயன்படுத்தி வெகுஜனக் கொலைகள், கிராம எரிப்புகள் போன்ற திட்டமிட்ட வன்முறையை அரசே நடத்தியது. கிட்டத்தட்ட 300,000 பேர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களுக்கும் வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த ஜன்ஜாவீட் போராளிக் குழுக்களே பின்னர் பாரா மிலிட்டரி, விரைவு ஆதரவுப் படைகள் (RSF) என்று அறியப்படும் குழுக்களாக பரிணமித்தன.
ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் பஷீரையும் மூத்த அதிகாரிகளையும் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டின. பல தசாப்த கால போருக்குப் பிறகு, ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு ஜூலை 2011இல் தெற்கு சூடான் உலகின் புதிய நாடாக உருவெடுத்தது. சூடானின் எண்ணெய் வயல்களில் முக்கால் பங்கையும் தன்னுடன் எடுத்துக்கொண்டது.
உலகம் இதைக் கொண்டாடிய அதே வேளையில், சிதைந்த பொருளாதாரம், குறைந்த வளங்கள், அதிகரித்து வரும் உள்நாட்டுப் பதட்டங்களுடனே வடக்கு சூடான் இருந்து வந்தது. டார்ஃபூர் பகுதியும் நிலையற்றதாகவே இருந்தது. மேலும், பிற பிராந்தியங்கள் தெற்கு பெற்ற அதே உரிமைகளையும் சுயாட்சியையும் கோரி இளம் சூடானியர்கள், பெண்கள், தொழில் வல்லுநர்கள் தலைமையில் பல மாதங்களாக நடத்திய போராட்டங்களால் ஏப்ரல் 2019இல் தேசிய இராணுவம் பஷீரை பதவியில் இருந்து நீக்கியது. அவருடைய 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியும் முடிவுக்கு வந்தது. பின்னர் குடிமக்களின் தலைவர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே ஒரு இடைக்கால அரசாங்கமும் அமைக்கப்பட்டது. இந்த ஜனநாயக சீர்திருத்தத்தை ஒரு புதிய சூடானுக்கான நம்பிக்கையாக உலகம் பார்த்தது.

அந்த நம்பிக்கையும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அக்டோபர் 2021இல், இராணுவத்தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபட்டா அல்-புர்ஹான் மற்றும் RSF தலைவர் முகமது ஹம்தான் டகலோ (“ஹெமெட்டி”) ஆகியோர் கூட்டாக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி சிவில் அரசாங்கத்தைக் கலைத்தனர். இருவரும் சேர்ந்து ஆட்சி செய்தார்களா? அதுவும் இல்லை. எதிர்கால இராணுவத்திலும் நாட்டின் தங்கம் நிறைந்த பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்த விரும்பியதால் அவர்களின் கூட்டணியும் விரைவில் முறிந்தது.
ஏப்ரல் 15, 2023 அன்று, தலைநகர் ஹார்ட்டூம்-ல் சூடானிய ஆயுதப் படைகளுக்கும் (SAF) விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே வெடித்த அதிகாரப் போராட்டம் விரைவில் முழு அளவிலான உள்நாட்டுப் போராக மாறி, முக்கிய நகரங்கள் வரை பரவியது. இதுவரையில் ஒரு கோடிக்கும் மேலானோர் இடம்பெயர்ந்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாட, தற்பொழுது 30 கோடிக்கும் அதிகமான சூடானியர்களுக்கு மனிதாபிமான அடிப்படை உதவிகள் தேவைப்படுகின்றன. தலைநகர் ஹார்ட்டூம் இடிந்து விட்ட நிலையில் டார்ஃபரில் ஒரு காலத்தில் அரசாங்கத்தின் முக்கிய கோட்டையாக இருந்த எல் ஃபாஷிர் நகரமும் தற்பொழுது வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது. நெருக்கடிகள் அதிக அளவில் இருந்தபோதிலும், சர்வதேச கவனமும் உதவியும் மிகக் குறைவாகவே உள்ளன. சாட், தெற்கு சூடான், எத்தியோப்பியா, எகிப்துடனான சூடானின் எல்லைகள் அகதிகளால் நிரம்பி வழிகின்றன. இதன் தாக்கம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு முழுவதும் தொடர் அலை விளைவுகளை உருவாக்கியுள்ளது.
பல தசாப்த கால சர்வாதிகாரம், கிட்டத்தட்ட சம பலம் கொண்ட இரண்டு இராணுவக் குழுக்கள் ஒன்றிணைய மறுத்து சிவில் நிறுவனங்களை அழித்து உருவாக்கிய அதிகார வெற்றிடமும், இன, பிராந்திய சமத்துவமின்மையும், புறக்கணிக்கப்பட்ட பகுதிகளும், பொருளாதாரச் சரிவும் சூடானின் இன்றைய இழிநிலைக்குக் காரணமாகியுள்ளன. ஐ.நா. மற்றும் மனிதாபிமான அமைப்புகள் இரு தரப்பினரையும் போர்க்குற்றங்கள், பட்டினி, இனப்படுகொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளன.
முதல் பார்வையில் சூடான் தொலைதூரத்தில் எங்கோ இருப்பதாகத் தோன்றினாலும் அது அமைந்திருக்கும் இடம் உலக அரசியலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரிய நாடான சூடான், நிலையற்ற தன்மையால் போராடும் ஏழு நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டம் அரபு நாடுகளைச் சந்திக்கும் இடத்திலும், நைல்நதி செங்கடலைச் சந்திக்கும் இடத்திலும், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவை வர்த்தக வழிகள் இணைக்கும் இடத்திலும் இருப்பதால் புவிசார் அரசியல் ரீதியாக முக்கியமான நிலப்பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. வடகிழக்கில் உள்ள செங்கடல் உலகின் மிகவும் பரபரப்பான வர்த்தக பாதைகளில் ஒன்றாகும். சூயஸ் கால்வாய் நோக்கி டேங்கர்களும் சரக்குக் கப்பல்களும் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே எண்ணெய், பொருட்களை எடுத்துச் செல்கின்றன. இதனால் சூடானில் செல்வாக்கு செலுத்துபவரால் கப்பல் பாதைகள், இடம்பெயர்வு ஓட்டங்கள், முக்கிய இயற்கை வளங்களுக்கான அணுகல்களை கட்டுப்படுத்த முடியும் என்பதால் வெளிநாடுகளின் தொடர் ஆதரவும் தற்போதைய துயர நிலைக்கு காரணமாகியிருக்கிறது.
அது மட்டுமன்றி, தங்கம், எண்ணெய், விவசாய நிலங்களால் நிறைந்துள்ள சூடான் ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். தற்போதைய போரின் இரு தரப்பினருக்கும் இந்த வர்த்தகமே நிதியுதவி அளிக்கிறது. 2011க்குப் பிறகு பெரும்பாலான எண்ணெய் வயல்கள் தெற்கு சூடானுக்குச் சென்றாலும் குழாய்வழிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் இன்னும் சூடான் பிரதேசத்தைக் கடந்து செல்கின்றன. பிராந்தியம் முழுவதும் உணவு, எரிசக்தி பாதுகாப்பிற்கு நைல்நதி பகுதியில் நடக்கும் பெரிய அளவிலான விவசாயமும் நீர்மின் திட்டங்களும் அவசியமானது.
சூடானை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்கள் அதன் தங்கம், வளமான நைல் பள்ளத்தாக்கை மட்டுமல்ல, உலகங்களுக்கிடையேயான ஒரு மூலோபாய நுழைவாயிலையும் கட்டுப்படுத்துகிறார்கள். இதனாலேயே வெளிநாட்டு அரசாங்கங்களும் நிறுவனங்களும் சூடானை யார் ஆளுகிறார்கள், அதன் பொருளாதாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. சூடான் போரில் சூடானியர்கள் மட்டும் ஈடுபடவில்லை. பல உலக சக்திகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளன.
செங்கடல் வர்த்தகம், தங்கச் சுரங்கத்தில் செல்வாக்கு செலுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) RSF க்கு ஆயுதங்கள், ட்ரோன்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எகிப்து, சூடானிய ஆயுதப் படைகளை (SAF) ஆதரிக்கிறது. ஏனெனில் அது நைல் நதிநீர் பேச்சுவார்த்தைகளில் தனது நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஒரு நட்பு அரசாங்கத்தை விரும்புகிறது. ரஷ்யா இரு தரப்பினரையும் அரவணைத்துள்ளது. போருக்கு முன்பு, மாஸ்கோ சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு கடற்படை தளத்தை உருவாக்க முயன்றது. ஆகவே, சூடானின் மோதல் வெறும் உள்நாட்டுப் போர் அல்ல – இது செல்வாக்கு மற்றும் வளங்களுக்கான ஒரு பினாமி போட்டி என்பதைக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் உலகளாவிய வர்த்தகம், இடம்பெயர்வு, பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கும் ஒரு மனிதாபிமான புவிசார் அரசியல் நெருக்கடியும் ஆகும்.
“இது தொடர்ந்தால், மில்லியன் கணக்கான உயிர்களை இழக்க நேரிடும். சூடானை மட்டுமல்லாமல், அதன் அண்டை நாடுகளையும் செங்கடல் பாதையையும் சீர்குலைக்கும். உலகின் அமைதியும் கெடும்” என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சாட், தெற்கு சூடான் ஆகிய இரண்டும் போர் தங்கள் எல்லைகளில் பரவி முழுப் பிராந்தியத்தையும் சீர்குலைக்கும் என்று அஞ்சுகின்றன. சூடான் முற்றிலுமாக சரிந்தால், அதன் விளைவுகள் சிரியா, லிபியாவைப் போலவே இருக்கலாம். “பஞ்சத்தின் விளிம்பில் உள்ள நாடு” சூடான். அங்கு குழந்தைகள் தோட்டாக்களால் மட்டுமல்லாமல் உணவு, மருந்துப் பற்றாக்குறையாலும் இறக்கின்றனர்.
பேரழிவுகள் இருந்தபோதிலும், எந்த தரப்பினரும் வெற்றி பெறவில்லை. சூடான் ஆயுதப் படைகள் (SAF) சூடானின் வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்துகின்றன. அதே நேரத்தில் விரைவு ஆதரவுப் படைகள் (RSF) டார்ஃபூர், மேற்குப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒரு காலத்தில் ஒற்றை நாடாக இருந்த நாடு இன்று ராணுவ குழுக்களால் ஆளப்படும் பிரதேசங்களாகப் பிரிந்து வருகிறது.
சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் சமாதானத்தை மத்தியஸ்தம் செய்ய முயன்றன. இரு தளபதிகளும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுப்பதால் ஜெட்டாவில் நடைபெற்ற பல பேச்சுவார்த்தை சுற்றுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, ஆப்பிரிக்க ஒன்றியம், பிராந்திய அமைப்புகள் அமைதியை நிலைநாட்டுவது ஒருபுறம் இருக்க, உதவிகளை வழங்கக்கூட போராடி வருகின்றன. ஆயுதங்கள், பணத்தை வழங்கும் பெரிய சக்திகளின் அழுத்தம் இல்லாமல் எந்த போர்நிறுத்தமும் நீடிக்க வாய்ப்பில்லை.
ஆனால் சாதாரண மக்களின் உயிர்வாழ்வு அவர்களின் தலைவர்களின் லட்சியங்களை விட அதிகமாக இருக்கும்போது மிக நீண்ட போர்கள் கூட முடிவுக்கு வரக்கூடும் என்பதை வரலாறு உணர்த்துகிறது. பெண்கள், இளைஞர்களால் வழிநடத்தப்படும் சூடானின் சிவில் இயக்கங்கள் தலைமறைவாக இயங்கி அட்டூழியங்களை ஆவணப்படுத்தி ஜனநாயக எதிர்காலத்திற்கான திட்டமிடலை மேற்கொண்டு வருகின்றன. அவர்களின் நம்பிக்கை முற்றிலும் மறைந்துவிடவில்லை என்பதையே இது நினைவூட்டுகிறது.
இன்று சூடானின் பிரச்சினை அந்நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரம், பேராசை, புறக்கணிப்புகளால் உள்நாட்டு எதிரிகள் மோதும்போது வலிமையான நாடுகள் கூட உடைந்து போகக்கூடும். உலகம் மற்ற போர்களில் கவனம் செலுத்தி வரும் வேளையில் சூடானின் மக்கள் மறக்கப்பட்டு விட்டார்கள். பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுத்த ‘குபீர் கபீர்’ போராளிகள் கூட கண்ணெதிரே நடக்கும் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது அவர்களின் சார்புநிலையையே காட்டுகிறது.
மனித உயிர்கள் நாட்டிற்கு நாடு வேறுபடுமா? ஏன் இந்தப் புறக்கணிப்பு?
சூடான் ஒரு நாட்டின் போராட்டத்தை மட்டுமல்ல, உலகின் மனிதநேயப் பொறுப்பையும் நினைவூட்டுகிறது. வரலாற்றின் தவறுகளைப் புரிந்து கொள்ளும் உலகமே, எதிர்காலத்தில் நீதியும் அமைதியும் நிறைந்த பூமியை உருவாக்க முடியும். விரைவில் அமைதி உருவாகும் என்று நம்புவோம்.
No comments:
Post a Comment