Friday, May 22, 2020

Something in the rain


அட நம்ம "Crash Landing on you" கதாநாயகி. இத்தொடரில் முப்பது ப்ளஸ் கதாபாத்திரம். அவரின் தோற்றம் "Crash Landing on you" போல பளிச்சென்று இல்லை. ஆனால் அதே அழகு😊

தன் சகோதரியின் தோழியை காதலிக்கும் இளைஞன். நட்புடன் ஆரம்பித்து தன்னையறியாமல் அவனின் காதலில் கரையும் நாயகி. வயது வித்தியாசம் இங்குள்ள பிரச்னை. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.

இத்தொடரிலும் ஆண்களால் வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் அவமானங்கள், வேறு வழியின்றி அவ்வலியுடனே வாழும் பெண்கள், அதிகராத்தில் இருப்பவர்கள் நடத்தும் கண்துடைப்பு நாடகம் என்று நாம் கேட்கும், படிக்கும் பல விஷயங்களும் காட்சிகளாக. அம்மாவாக வருபவரின் கோபமும் சுடு வார்த்தைகளும் ஊர் பேச்சுக்குப் பயந்து மகளை கண்டிப்பதும் தமிழ்த்தொடர்களை நினைவூட்டும்.  நகர வாழ்க்கை,  குடியிருப்பு வீடுகள், அழகிய தெருக்கள், சவுத் கொரியாவின் அழகையும் ரசிக்க முடிகிறது.

கண்கள் இடுங்க அழகிய சிரிப்புடன் ஸ்டைலாக சைக்கிளில் வரும் நாயகன். "அலைபாயுதே" மாதவனைப் போல் சோ க்யூட் :) அக்காவின் நெருங்கிய தோழி. நண்பனின் அக்கா என்று தெரிந்திருந்தும் அவள் மேல் வரும் காதல். அவளுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக! அப்படி ஒரு தீவிர காதல்! வீட்டில் அப்பாவும் தம்பியும் வேறு வழியின்றி காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினாலும் அம்மாவின் பிடிவாதம். மகளை வார்த்தைகளால் சாட, பெற்றோர்கள் விருப்பமின்றி திருமண முடிவைத் தள்ளிப்போடும் நாயகி. நமக்கு வெயில் எப்படியோ அப்படி மழை முக்கிய அங்கமாக கொரியன் நாடகங்களில் வருகிறது.

"சிக்"கென்று இருக்கிறார்கள் கொரியப் பெண்கள்! சூப்பும் கிம்ச்சியும் செய்யும் மாயம் போல. தயிர் சாதத்திற்கு மாங்காய் ஊறுகாய் போல் ரேமன் நூடுல்ஸுக்கு கிம்ச்சி. நண்பர்களின் வீட்டிற்கு கிம்ச்சி கொடுத்து அனுப்புகிறார் அம்மா. என்ன அழகாக உணவுகளை கிண்ணங்களில் வைத்து மேஜையைச் சுற்றி அமர்ந்து சாப்பிடுகிறார்கள்! நம் ஊர் நாடகங்களில் ரசித்து ருசித்து சாப்பிடுவது போல எந்தவொரு காட்சியும் நினைவில் வரவில்லை. நமக்குத்தான் அடுத்தவனைப் பழி வாங்கவே நேரம் சரியாக இருக்கிறதே!

இத்தொடரில் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு அம்சம்   காட்சிகளுக்கு ஏற்றவாறு பின்னணியில் வரும் பாடல்கள் தான். மைக்கேல் பூப்லேயின் பிரபலமான பாடலை கொரிய ரசிகர்களுக்காக சிறிது மாற்றி இருந்தாலும் கேட்க இனிமை.

கொரியன் மாதவனுக்காக அடுத்த சீரியலும் பார்த்து முடிச்ச்ச்சாச்சு😍😍😍

இனி எண்ட தேசம் சவுத் கொரியா 
எண்ட ஹீரோ....💓💓💓





.

Sunday, May 17, 2020

Because this is my first life


கொரியன் நாடகங்கள் வரிசையில் அடுத்தது "Because this is my first life". இதுவும் காதலை மையப்படுத்திய நாடகம் தான். ஆனால் அரைத்த மாவையே அரைக்காமல் வேறு ஒரு கதைத்தளம். நாயகி ஒரு எழுத்தாளர். வளர்ந்து வரும் வேளையில் அவருடைய மேலாளர் ஒருவரின் தவறான அணுகுமுறையால் வேலையைத் துறக்கிறார். நகரில் வாடகை தர வசதியில்லாததால் ஒப்புதல் திருமணம் செய்து கொண்டு பேருக்கு மனைவியாக வீட்டில் வசித்து வருகிறார். உம்மண்ணாமூஞ்சி கதாநாயகனைத் தெரிந்து கொண்டு மெல்ல மெல்ல காதலிக்கவும் செய்கிறார். அந்த உணர்ச்சியே இல்லாத ஜடம் போல் வரும் கதாநாயகனுக்குள்ளும் இரண்டாம் முறையாக காதல் அரும்புகிறது. அவளுக்காக எதையும் செய்ய தயாராகிறான். மூன்று பெண்களின் வாழ்க்கையில் காதல் என்பது எதுவரை... இப்படித்தான் போகிறது கதை. 

இதில் பல சுவாரசியமான விஷயங்கள் அப்படியே நம் ஊரை பிரதிபலிக்கிறது. குடும்பத்தில் ஆண் குழந்தைக்குத் தரப்படும் கவனம், அங்கீகாரம் பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை. வேலையிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள்! முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பெண்களை அவமானமாக உணரச் செய்வது, கணவனுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை அம்மா மகளுக்கு கொடுப்பது, இறந்த பெரியவர்களுக்கான சடங்குகள் இப்படி பல.

கதாநாயகியாக வருபவர் தொடர் முழுவதும் சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார். அவருடைய தோழிகளாக வருபவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக என்று எதிர்மறை எண்ணங்களே நம்மிடத்தில் தோன்றாமல் பொழுதுபோக்காக பார்க்க முடிவதில் இருக்கிறது கொரியன் நாடகங்களின் சுவாரசியம்.

இத்தொடரிலும் நன்றாக சாப்பிடுகிறார்கள். குடிக்கிறார்கள். நாயகி காலை உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவதைப் பார்த்தால் ஆஹா இதுவல்லவோ வாழ்க்கை என்று தோணுகிறது. 

பூனையும், மழையும், மலை வீடுகளும், நகரப்பேருந்தும், சாலைகளும் அழகான இலையுதிர்காலம், பஞ்சுப்பொதிகளாக  உதிரும் பனிக்காலம் என பருவநிலை மாற்றங்களும்  தொடர் முழுவதும் கூடவே பயணிப்பது மேலும் அழகு.

குடும்பம், வேலை, காதல் கதை என ஒரு தமிழ் தொடரை எதிர்பார்ப்பது முட்டாள்தனமோ? வெட்டி செண்டிமெண்ட், அழுகை, கூச்சல் என்று நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறோம் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில். என்று தான் திருந்துவோமோ?

இனி எண்ட தேசம் சவுத் கொரியா 💓💓💓

உலக குடும்ப தினம்


புளியைக் கரைத்து புளிக்காய்ச்சல் செய்யும் பொழுதே வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்து விடும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வெந்தயப்பவுடர், மஞ்சள் பவுடர், பெருங்காயத்தூள், சிறிது இஞ்சி சேர்க்க காற்றில் மணம் வீச, நாக்கும் ஏங்க ஆரம்பிக்கும். எண்ணெயில் வறுத்த வத்தல்கள் புளிக்கரைசலில் நாட்டியமாட, மணம் சேர்க்கும் கருவேப்பிலையும்.

அதற்குள் உதிரி உதிரியாய் வெந்த சோறும் வடிக்கத் தயாராகி விட, பொங்கல் தட்டில் ஆற விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, வத்தல், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி புளிக்காய்ச்சலைச் சேர்த்து அம்மா பிசைய, உப்பு சரிபார்க்க தட்டைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்களுக்கு கைப்பிடி உருண்டை.... ம்ம்ம்... காரமா புளிப்பா ... யம் யம் யம்... அம்பட்பாத்💕

கூடவே வேக வைத்த
தட்டைப்பயறு
கருப்பு சுண்டல்

தேங்காயும் கொழிஞ்சியும் கொசுறு❤️

இனிப்பாக
சேமியா கேசரி
ரொட்டி ஹல்வா

இப்படி குடும்பமாக பாட்டி, மாமாக்கள், அத்தைகள், பெரியம்மாக்களுடன் உண்டு மகிழ்ந்ததொரு காலம் இனி வாரா. மகிழ்ந்திருந்த பொழுதுகள் மட்டுமே நினைவினில் என்றென்றும்ம்ம்ம்💕💕💕

குடும்ப உறவுகள் வாழ்வை வளமாக்கும் அற்புத படைப்புகள். உணர்ந்து கொண்டாடுவோம். உள மகிழ்வோம்.

அனைவருக்கும் குடும்ப தின நல்வாழ்த்துகள்🙌


உலக புத்தக தினம்

புத்தகம் பையிலே படிப்பதோ கதையிலே...

அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா குழந்தைகள் புத்தகங்களில் ஆரம்பமாகியது புத்தக வாசிப்பு. எப்படா வரும் என்று காத்திருந்து ஒரு வரி விடாமல் படக்கதை, ஒரு பக்க கதை, மாயாவி, ராஜா கதை, பாலு கரடி, டிங்கு, ஆறு வித்தியாசங்கள் ... என்று சிரிக்க, சிந்திக்க...

நடுநிலைப்பள்ளி வயதில் புதன், வியாழன், வெள்ளி இதயம், விகடன், குமுதம் கல்கண்டு என்று மாடிப்படிகளில் நகம் கடித்த்துக் கொண்டே தொடர்கதைகளையும், பயணக்கட்டுரைகளையும், லேனா தமிழ்வாணன், சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர்...அறிந்து கொள்ள , சினிமா விமரிசனங்கள், கிசுகிசுக்கள் ஒன்று விடாமல் படித்து அறிவை வளர்த்துக் கொண்டதெல்லாம்

மேல்நிலைப்பள்ளி வயதில் எதிர்வீட்டு அக்காக்களிடமிருந்து கதைப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்து அடிவாங்கி, பள்ளி நூலகத்தில் புத்தகங்களை எடுத்து வீட்டுக்குத் தெரியாமல் படித்ததெல்லாம்...

கல்லூரி முடித்ததும் வேலையிடத்தில் கொட்டிக்கிடந்தது அத்தனை புத்தகங்கள்!

என்னைத் தொலைத்துக் கொள்ள, நான் தொலைந்து போக அப்போதைய தேவையாக இருந்தது கையில் ஒரே ஒரு புத்தகம்.

இன்று தூங்குவதற்கு முன் தூக்க மாத்திரையாகவும்ம்ம்ம் ...

கையிலேந்தி
மடியில்வைத்து
படுத்துக்கொண்டு
அமர்ந்து
நின்று
படிப்பதில் இருக்கும் சுகத்தை தரவல்லது புத்தகங்களே 🙂

விக்ருதி


நெட்ஃப்ளிக்ஸில் விக்ருதி மலையாளப் படம் வந்திருந்தது. இணையத்தில் பலரும் நன்றாக இருக்கிறது என்று போட்டிருந்தார்கள். நிஜமாகவே நன்றாக இருந்தது. இரு குடும்பங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கிறது. அதன் பாதிப்பிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்று மிக இயல்பாக காலத்தோடு பொருந்திப் போகிற கதை.

தங்கள் பாத்திரத்தை உணர்ந்து மிகைப்டுத்தாமல் நடித்திருந்தார்கள். கதாநாயகன் என்றால் வரும் பொழுதே காதுகள் அதிர இசை என்னும் இம்சை இல்லை. சம்பந்தமே இல்லாமல் நூறு பேருடன் குத்தலாட்டம் போட்டு அரசியல் வார்த்தைகளுடன் பாட்டு இல்லை. சற்றும் பொருத்தமே இல்லாமல் ஸ்லோமோஷன் காட்சிகள், நடிக்கிறேன் பேர்வழி என்று கண்ணைக் கசக்கி அறிவுரைகளைத் தெளிக்காத மிகவும் இயல்பான படம். கதாநாயகி என்றாலே வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற தமிழனின் கொள்கை இல்லாத பக்கத்து வீட்டு கதாநாயகிப் பெண்கள். கண்ணை உருட்டி ஓவர்ஆக்ட் செய்து கொல்லாமல் நடிக்கவும் செய்கிறார்கள்.

கடவுளின் தேசத்துப் படங்களில் எனக்குப் பிடித்தது ஆடம்பரமில்லாத, கூடுதல் அலங்காரமில்லாத நடிகர் நடிகையர்கள். வேட்டி , கைலியுடன் வளைய வரும் மனிதர்கள், மரங்கள் சூழ வீடுகள் எல்லாமே மனதிற்கு நெருக்கமாகி விடுகிறது. கதை தான் திரைப்படத்திற்கு அவசியம் என்று சேட்டன்களுக்குத் தெரிந்திருக்கிறது. நமக்கு அது எண்ணிக்குப் புரிஞ்சு தெரிஞ்சு தெளிவடைய!

தமிழ்ப்படங்களில் கதாநாயகன் என்றால் நூறு பேரைத் தூக்கி மிதிக்க வேண்டும். நரம்புகள் தெறிக்க நடைமுறைக்கு ஒவ்வாத ஆவேச வசனங்கள் பேச வேண்டும். கவர்ச்சி நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டு வண்டிவண்டியாக அறிவுரைகள் கூற வேண்டும். இயற்கையாக படம் எடுக்கிறேன் பேர்வழி என்று செயற்கைத்தனத்தில் இவர்களை மிஞ்ச முடியாது. இப்படி கொடுத்த காசிற்கு மேல் கூவுறவர்கள் நடித்து நாமும் அதைப் பார்த்துத் தொலைய வேண்டுமென்ற தலைவிதியை மலையாளப் படங்கள் மாற்றி வருகிறது.

கொரோனா வந்தாலும் வந்துச்சு...தமிழ்ப்படங்களைத் தவிர எல்லாவாற்றையும் பார்க்க போய் இனி தமிழ்ப்படம் என்றால் காத தூரத்திற்கு ஓட வைத்திருக்கிறது.

என்னவோ போடா மாதவா!

Varney AVashyamund



இரட்டை அர்த்த வசனங்கள், கோக்கு மாக்கு ஜோக்குகள் இல்லாத எதார்த்தம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கற படம்.

கதை நான் பிழியற முறுக்கு மாதிரி இஷ்டத்துக்குப் போகுது. சில்லறை சிதறினா காதல் வரும்ங்கறதெல்லாம்🙇🏻‍♀️

டேய் கொரோனா எல்லாம் உன்னால வந்தது. கொரியன் டிராமாவாவது பார்த்திருப்பேன்😞 ஷோபனா ரசிக, ரசிகைகள் வேணா ரசிக்கலாம்! என்னாச்சு சுரேஷ் கோபிக்கு?

ஒட்டாத காதல். துல்கர் ...ம்ஹூம்ம்ம்ம்

"தொவ்ளோ"


மழை வந்தாலே கூடவே அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொள்ளும் இருமல், சளி, காய்ச்சல். அப்பொழுதெல்லாம் வீட்டில் இரவு உணவாக "தொவ்ளோ" எனும் அரிசி மாவுக்கொழுக்கட்டை செய்வார் அம்மா. சௌராஷ்ட்ரா மக்கள் பலரும் விரும்பிச் சாப்பிடும் இரவு உணவு. ஊறவைத்த அரிசியை உப்பு சேர்த்து கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். நன்கு உருட்டி சிறு சிறு உருண்டைகளாக்கி விரலால் ஒரு அழுத்து அழுத்தி பொங்கல் தட்டு அல்லது சுடகில் வரிசையாக வைக்க வேண்டும்.

உலையில் வைத்த பாத்திரத்தில் தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் இந்த கொழுக்கட்டைகளைப் போட்டு வேகும் வரை பொறுமை காக்க வேண்டும். வெந்ததும் வடிகட்டி விட்டு, நெய் அல்லது எண்ணெயில் சீரகம், மிளகு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து அதை கொழுக்கட்டையில் சேர்த்து கலந்து சுடச்சுட சாப்பிட்டால் ...செத்துப் போயிருந்த நாக்கின் சுவை நாளங்கள் நர்த்தனமிடும். அப்படியே வடிகட்டிய கஞ்சியையும் கொஞ்சம் குடித்தால்...தொண்டைக்கு இதமாக நெஞ்சுக்கு சுகமாக நாக்கிற்கு சுவையாக... ம்ம்ம்ம்ம்...


இது போதும் எனக்கு இது போதுமே.... வேறென்ன வேண்டும் இது மட்டுமேன்னு பாடலாம்.

இட்லிப்பொடி தொட்டுச் சாப்பிட காரமும் சேர்ந்து திவ்யமாக இருக்கும்.



அசைவ கொழுக்கட்டையும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான். அதில் ஆட்டுக்கால் சேர்த்து பெரிய சைஸ் கொழுக்கட்டையுடன் வேகவைத்த சூப்...ம்ம்ம்... டம்ப்ளிங்லாம் பிச்சை எடுக்கணும்.

படங்கள்: இணைய உபயம். சௌராஷ்ட்ரா சமையல்கூடத்திலிருந்து (ஃபேஸ்புக்) முன்னொரு நாளில் சுட்டது.பூர்ணிமான்னு நினைக்கிறேன். நன்றி.

KARWAN


துல்கரின் வேறு இரு படங்கள் தந்த ஏமாற்றத்தால் பயந்து பயந்து தான் பார்த்தேன். சிறு வயதில் தந்தையை இழந்தவர், தன்னுடைய விருப்பத்திற்குத் தடையாக இருந்த தந்தையிடம் பேசாதவர், தந்தையின் நடத்தையால் அவரைப்போல் இருந்து விடக்கூடாது என்று நினைப்பவர் என மூவருடன் பெங்களூரிலிருந்து கொச்சிக்குப் பயணிக்கும் கதை. இடையில் நடக்கும் நிகழ்வுகள் எப்படி இவர்களின் பாதையை மாற்றுகிறது என்பதில் முடிகிறது.

கல்லூரியில் படிக்கும் இன்றைய இளம்பெண் குடி, புகைபிடித்தல், கர்ப்ப பரிசோதனை என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் காட்டியிருப்பது 🤔

Chopsticks படத்தில் நடித்திருந்த Mithila Palkar இப்படத்திலும். வித்தியாசமான பெயர். பள்கார் என்றிருக்கிறது😇

அமலாவா அது!

வளைந்து செல்லும் மைசூர் மலைச்சாலைகள், உயர்ந்த மரங்கள், பனிமூட்டம், ஊட்டி மலைவீடுகள், தென்னை மரங்கள் சூழ தண்ணீரில் படகுகள் செல்லும் அழகு கொச்சி என ரசிக்கலாம்.

படத்தைப் பற்றி பதிவிட்ட பழனிக்குமாருக்கு நன்றி 🙏

தொழிலாளர் தினம்

மதுரையில் சில வருடங்கள் தியாகராஜர் குடியிருப்பு பகுதியில் குடியிருந்தோம். அங்கு இருந்தவர்கள் பலரும் தியாகராஜர் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள். அங்கு வாழ்ந்த காலத்தில் தான் கடைநிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கண்கூடாகப் பார்க்க நேரிட்டது.

அந்தக் குடியிருப்பு பகுதியை குறைந்த விலைக்குத் தொழிலாளர்களுக்குப் பத்திரம் போட்டுக் கொடுத்திருந்தார்கள். ரேஷன் கடை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் என்று அங்கு கிடைப்பதை வைத்துத் தான் வீடுகளில் சமைப்பார்கள். பல வீடுகளிலும் மண்ணெண்ணெய் மற்றும் கரி அடுப்புகள் மட்டுமே இருந்தது. சிலர் சுற்றுப்புறத்திலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கி வருவார்கள். வீடுகளில் காய்கறி செடிகள், அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, பப்பாளி, தென்னை, வாழை மரங்கள் இருக்கும். இல்லாதவர்களுக்கும் கொடுத்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள். பல வீடுகளிலும் பால் கூட வாங்கிப் பார்த்ததில்லை. குறைந்த வருமானம் தான். சோறு பொங்குவார்கள். காய்கள் போட்டு ஒரு குழம்பு, கீரை என்று ஒரு வேளை உணவு தான் பெரும்பாலான வீடுகளில். குழந்தைகள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொள்வார்கள். பெரியவர்கள் பாட்டுக் கேட்டுக் கொண்டு வேப்ப மர நிழலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு, அக்கம்பக்கத்து ஆட்களுடன் உறவு முறை பெயரைச் சொல்லி ஒரு குடும்பமாக அவர்களுடைய வாழ்க்கை மிகவும் சாதாரணமான ஒன்று. ஆண்கள், பெண்கள் இருவரும் ஷிஃப்ட் முறையில் வேலைக்குச் சென்று, குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

என் தங்கை மருத்துவர் என்பதால் உடல்நிலை சரியில்லாதவர்கள் ஊசி போட்டுக்கொண்டு செல்வார்கள். அதற்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலையில் தான் பலரும் இருந்தனர். மருந்து மாத்திரைகளைக் கூட இலவசமாக கேட்டு வாங்கிச் செல்வார்கள். அன்றைய நிலையில் எங்களுக்கும் அது கூடுதல் செலவு தான். ஆனாலும் முடிந்தவரை உதவிகள் செய்தோம்.

ஒரேடியாக ஆலையை மூடியவுடன் அனைத்துக் குடும்பங்களும் தத்தளித்துப் போயின. தங்கள் குழந்தைகளாவது நன்கு படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பலரும் சிரமப்பட்டு அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி, இன்று அடுத்த தலைமுறை நல்ல உத்யோகத்தில் இருக்கிறார்கள். குடும்பங்களும் நன்கு வளர்ச்சியடைந்து வீடுகளும் மாடி வீடுகளாகி அந்தக் குடியிருப்பு பகுதியே உருமாறி விட்டிருக்கிறது.

ஒருவேளை உணவு உண்டு தங்கள் குழந்தைகளுக்காக உழைத்த அன்றைய தொழிலாளர்களின் வியர்வையில் இன்றைய தலைமுறை முன்னேறி இருக்கிறது. மகிழ்ச்சி.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் அந்த ஏழ்மையிலும் சிரித்துக் கொண்டு வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்த மனிதர்கள்! இன்றும் நான் ஊருக்குச் சென்றால் தவறாமல் சந்திக்கும் பொழுது அதே பாசத்துடன் கரிசனத்துடன் மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். மனிதம் ஜெயிப்பது இங்கு தான் என்று நினைத்துக் கொள்வேன்.





Wednesday, May 13, 2020

நன்மாறன் கோட்டைக் கதை





 "நன்மாறன் கோட்டைக்கதை"  ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட சிறுகதை தொகுப்பு. இமையம் எழுதிய இத்தொகுப்பில்  சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதீய தீண்டாமை,  சமகால அரசியல் அவலங்களை அழகாக கதையினூடே காட்சிப்படுத்துகிறார். காலனிவாசிகள் என்று ஒரு சமூகம் அடையாளப்பட்டிருப்பதும் அவர்களை அண்ட விடாமல் ஆதிக்கம் செலுத்துபவர்களின் மனப்பான்மையும் செய்திகளில் பார்த்து கேட்டறிந்ததை இத்தொகுப்பில் வாசிக்கையில் கதைகள் என்று ஒதுக்கி விட முடியவில்லை. சாதிகளை அழித்திடாமல் வெறுப்புடன் வளர்த்துக் கொண்டு வரும் அரசியல் மனப்பான்மை இந்த யுகத்திலும் அதிகரித்திருப்பது படிக்கும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது. பெண்களை மையப்படுத்திய கதைகளில் வரும் மகளிரைப் போலவே  இந்த நூற்றாண்டிலும் பெண்கள் அவலங்களைச் சந்தித்துக் கொண்டு இருப்பது தான் இத்தொகுப்பை படித்து முடிக்கையில் எண்ணத் தோன்றியது.

நன்மாறன் கோட்டைக்கதையில்  தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்றிருந்தவரை வலுக்கட்டாயமாக சல்லிக்கட்டில் அவருடைய மாட்டையும் கலந்து கொள்ள வைத்து வெற்றி பெற்றவுடன் வெறி பிடித்த மனித மிருகங்கள் மனைவி, குழந்தைகள் முன் மாட்டையும் உரிமையாளரையும் கொலை செய்வது சாதீய வெறியின் உச்சம். இப்படியெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை என்று கடந்து விட முடியாது. கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு குழுவாக வகுப்பிற்கு வந்து தலைநிமிர்ந்து யாரிடமும் பேசாமல் பழகாமல் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டிருந்த மாணவர்களை ஆச்சரியத்துடன் கடந்திருக்கிறேன். வங்கியின் உயர் பதவியில் இருந்தவர் கூட தயக்கத்துடன் தான் பேசுவார். இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறவர் ஏன் இப்படி இருக்கிறார் என்றெல்லாம் நினைத்ததுண்டு!  அவர்களும் படித்து தகுதிகளை வளர்த்துக் கொண்டு வந்தாலும் காலம் காலமாக அடங்கிச் சென்று உளவியல் ரீதியாக ஆதிக்க சாதியினரை எதிர் கொள்ளத் தயங்கியதன் விளைவால் அன்று அப்படி இருந்தார்கள். இன்று மாறிக் கொண்டு வருகிறார்கள்!  சமூகத்தில் முன்னேற மற்ற சாதியினரின் ஆதரவும் வேண்டும். இன்றைய நிலையில் இவ்வாறு எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் அரசியல்கட்சிகள் தெளிவாகவே இருக்கிறது.

போலீஸ் கதையில் தன்னை விட தாழ்ந்த சாதியினரின் இறந்த உடலைத் தொட்டுத் தூக்கி மயானம் வரை கொண்டு சென்றது தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், தான் சார்ந்த சமூகத்திற்கும் எத்தனை கேவலமென புலம்பும் மனித அவலம்! பரியேறும் பெருமாள் படம் கண்முன்னே வந்து சென்றது! இரட்டைக்குவளை இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதும் சாட்சி தான். ஆதிக்க சாதியினர் தெருவைக் கடந்து செல்லும் பொழுது காலணியின்றி நடக்க வேண்டும், இறந்த உடலை அவர்கள் குடியிருக்கும் வீடுகள் வழியே எடுத்துச் செல்லக் கூடாது, பொதுக்கிணற்றில் மற்றவர்களுடன் தண்ணீர் எடுக்கக் கூடாது, பள்ளிகளில், பொது இடங்களில் என்று இன்று வரையிலும் தொடரும் வன்மங்களென இக்கதையின் வாயிலாக இன்றைய நிகழ்வுகள் நிழலாடுகிறது!

பணியாரக்காரம்மா  கதையிலும் வெவ்வேறு சாதிக்காரர்கள். இளம்பருவத்தில் அறிந்த ஆனால் சொல்லிக்கொள்ளாத காதல் வயதான பிறகும் இலைமறைகாயாக தொடர்ந்து காமத்தில் முடிவதாய் சொல்லியதிலும் ஆதிக்க சாதியினரை அனுசரித்து செல்வது தான் தனக்கு நல்லது அது தான் முறை என்பது போலவே கதைநாயகியின் செயல்கள் இருப்பதும் அடிமைப்பட்ட மனது அப்படித்தான் இருக்கும் என்று சொல்கிறாரோ ஆசிரியர்? காதல் என்று அவள் நினைப்பதும் அத்தனை வருடங்களிலும் மனைவியுடன் கூட உறவு கொள்ளாமல் நாகம்மாவுடன் ஒரு நாள் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கும் அவனால் காதலை விட சாதி ஜனங்களுக்கு அஞ்சுவதும்  அவளுடன் ஓரிரவு இருந்து விட்டுத் தூர தேசம் செல்வதில் என்ன நியாயம் என்று சொல்லாமல் விட்டுவிட்டாரோ ஆசிரியர்?

நம்பாளு கதையில் சாதிக்கட்சிகளும் சாதிமக்களும் எப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்பது கண்கூடாகவே நடந்தாலும் கதையாக படிக்கையில் உள்ளரசியல் தெளிவாக தெரிகிறது. இன்று நம்கண்முன்னே நடக்கும் அரசியல் கூத்துகளை மனதில் வைத்து ஆசிரியர் எழுதியுள்ளது போல் இருக்கிறது.

கடவுள் என்ற ஆதிசக்தியை வைத்து எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள், மக்களும் ஏமாறுகிறார்கள். ஏழைப்பெண்ணின் நம்பிக்கையை பணத்திற்காக ஏமாற்றுபவனை பிராது மனு கதை சொல்லாமல் சொல்கிறது  கடவுளின் பெயரால் சுரண்டல் செய்யும் இன்றைய ஏமாற்றுக்காரர்களை.

பெண் என்பவள் பிண்டமல்ல. அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அவளை இழிவாக நடத்தும் கணவனை அவள் நினைத்தால் கேவலப்படுத்த முடியும் என்று தலைக்கடன் கதையில் சொல்கிறாரோ ஆசிரியர்?

 ஏழை சித்தாள் பெண்ணை எப்படியும் இணங்க வைத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடும் படித்தவனின் இறுமாப்பு.  சாந்தா கதையில் விளிம்புநிலைப் பெண்களின் அன்றாட அவஸ்தையை விளக்குகிறார்.  அலுவலகத்தில், வேலை செய்யும் இடங்களில் ஆண்களிடம் அகப்பட்டு அல்லல்படும் அநேகப் பெண்களைப்  பொருத்திக் கொள்ளலாம்.

பேருந்தில் பயணிக்கும் பல பெண்கள் அனுபவித்த, அனுபவிக்கும் சிரமங்களை ஆலடி பஸ் கதை கண்முன்னே நிறுத்துகிறது.

கட்சிக்காரன் கதை இன்றைய அரசியல் நிலவரத்தை தத்ரூபமாக விவரிக்கிறது. வாழ்நாள்  முழுவதும் தத்தம் குடும்பங்களை மறந்து கட்சிக்காக உழைப்பவனின் ரத்தத்தைச் சுரண்டும் கட்சிகள்.  தேர்தல் என்று வந்தால் வெற்றி பெற பணமும், அதிகார பலமும் , சாதி அதிகாரமும் மட்டுமே வேண்டியிருக்கிறது. கட்சிக்காக மாடாக உழைத்தவனைப் பொருட்படுத்தாத தலைவர்கள் , கட்சியை வளர்க்கவும், கோஷம் போடவுமே அவர்களுக்கு வேண்டிய மனிதர்களை எப்படி நடத்துகிறார்கள் என இக்கதை நடைமுறை அரசியலை கண்முன்னே நிறுத்துகிறது.

எளிமையாக  வாசிக்கத்தூண்டும் வகையில் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தில். பல்வேறு சமூக அடுக்குப் பெண்களின் அவதிகளை நிதர்சனத்தை கதையின் வாயிலாக அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர்.

இன்று நகமும் சதையுமாய் கலந்து விட்டிருக்கிறது சாதீய வெறி. சாதிகளை ஒழிக்கிறோம் என்று நெய் வார்த்து அணையாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய அரசியல். கைத்தேர்ந்த அரசியல்வாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் கற்ற கல்வியும் அவர்களை சாதீய மனப்பான்மையிலிருந்து விலகி வெளிவர வழிநடத்தவில்லை. எங்கு சென்று கொண்டிருக்கிறது மானிடம்? வெறும் பொருளாதார முன்னேற்றமே மனித முன்னேற்றமா? என்று உணரப்போகிறோம்  நம் தவறுகளை? அடுத்த தலைமுறையாவது விழித்துக் கொள்ளுமா?


Sunday, May 10, 2020

சான்ஃப்ரான்சிஸ்கோ 7 - Bye, Bye SFO

SFO 1
SFO 2
SFO 3
SFO 4
SFO 5
SFO 6

Pier 39லிருந்து Palace of Fine Artsக்கு ஊபரில் பயணம். பதினைந்து நிமிடத்தில் வந்து விட்டது. கலைநேர்த்தியுடன் கட்டப்பட்ட புரதான ரோமன் கிரேக்க கட்டடக் கலையை பிரதிபலிக்கும் பிரம்மாண்ட கட்டடம். கண்களை நிறைக்கிறது அதன் வடிவமைப்பு. இதற்கென தனி வரலாறும் இருக்கிறது. கலைக்கண்காட்சிகள் நடக்கும் இடமாக இருந்தது காலப்போக்கில் பலவிதமாக பயன்பாட்டில் உள்ளது. ஜோடியாக ஜோடியாக திருமண உடைகளில் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அத்தனை உயரமான தூண்களுடன் கூடிய மண்டபங்கள்! நீர் சூழ ரம்மியமானஇடத்தில் அமைந்திருக்கிறது. நகரத்திலிருந்து வேறு கலாச்சாரத்திற்கு சென்று வந்ததது போலொரு நினைவினைத் தந்தது அவ்வளாகம். சிறிது நேரம் புல்தரையில் அமர்ந்து ஒருவர் சாக்ஸஃபோன் வாசித்துக் கொண்டிருந்ததைக் கேட்டோம்.

அப்பா இருந்திருந்தார்னா இங்கருந்து கிளம்பியிருக்க மாட்டார்ல?

அன்னம், வாத்துகள் ஆமைகள், நாரை இனங்கள் என பலவும் குளத்தில் உலவிக்கொண்டிருந்தது. செல்வந்தர்கள் வசிக்கும் அப்பகுதியில் வீடுகள் எல்லாம் கொள்ளை அழகு. மில்லியன் டாலர் வீடுகள்ம்மா.

ம்ம்ம்ம்.... மில்லியன் டாலர்களுக்கு புல்தரையுடன் மரங்கள் சூழ பெரிய்ய்ய்ய்ய்ய வீடுகள் கிடைக்கும் ஆல்பனியில். இங்கு அத்தகைய வீடுகளுக்கு மலைகளை நாடுகிறார்கள்! சில படங்களை க்ளிக் செய்து கொண்டோம். எந்த வீடு அழகாக இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே ஊபரில் "Burma Love" எனும் பர்மியர் உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்பா வந்திருந்தப்ப இங்க வந்தோம். அவருக்குப் பிடிச்சது. உனக்கும் ரொம்ப பிடிக்கும்மா.

ஆஹா! புதுவகையான உணவா? பாங்காக்ல சாப்பிட்டது மாதிரி இருக்காதே?

ம்ஹூம்! நம்ம ஊர் ஸ்டைல்ல தான் இருக்கும். அந்த சாலட் உனக்குப் பிடிக்கும்.

அப்புறமென்ன?

இங்கும் நீண்ட வரிசை. பிரபலமான உணவகம். காத்திருந்து உண்கிறார்கள்!

வணக்கம் சொல்லி இருக்கையில் அமர வைத்து உணவுப்பட்டியலைக் கொடுத்து விட்டுச் சென்றாள் பர்மிய அழகி. பின்னணியில் மெல்லிசை இழையோட தட்டுகளில் ராகம் பாடிக்கொண்டிருந்தது முள்கரண்டிகள். மதுப்பிரியர்கள் அழகான கண்ணாடி போத்தல்களில் குடித்துக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார்கள். உணவுடன் மது அருந்துவது இவர்களின் பழக்கமாக இருக்கிறது. வரிசையாக என்னென்ன உணவு வகைகள் இருக்கிறது என்று பார்த்தேன். பெயர்கள் எல்லாம் புதுமையாக இருந்தது. என்ன ஆர்டர் செய்வது என்று தெரியவில்லை. நானே உனக்கும் சேர்த்து சொல்லிவிடுகிறேன் என்று நிவியே ஆர்டர் செய்து விட்டாள்.

பக்கத்து மேஜைகளில் விதவிதமான கிண்ணங்களில் புதுப்புது உணவு வகைகள்! ப்லாத்தா (நம்மூர் வீச்சு பரோட்டா), டீ லீஃப் சாலட், தேங்காய்ப்பால் கறியில் செய்த "நான் பியா டோக்" நூடுல்ஸ். சிக்கன் கிரேவி. சிறு சிறு கிண்ணங்களில் சாலடுக்குத் தேவையானவைகளை எடுத்து வந்து நம்முன் கலந்து கொடுக்கிறார்கள். அப்படியே நூடுல்ஸ்க்கும். ட்ராவல் ஷோக்களில் பார்த்திருக்கிறேன். அதை ஒரு கலை போல் செய்கிறார்கள். பார்க்க அழகாக இருந்தது. சாம்பார் சட்னி கிண்ணங்களுக்குப் பதிலாக வேறு சிறு சிறு கிண்ணங்கள்! சிறிது கசப்புடன் டீ லீஃப் சாலட் வித்த்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது. பேசிக்கொண்டே அனைத்தையும் காலி செய்தோம். திருப்தியான சாப்பாடு. இரவு உணவுக்காக சாலட் வாங்கிக்கொண்டோம்.

மாலை நேரம். உணவகங்களின் வெளியில் அமர்ந்து சாப்பிடும் கூட்டம் தெருக்களில். சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்களோ? சரியான சாப்பாட்டு ராமன்கள் உலகமாக இருக்கிறதே!

அம்மா இது தான் நம்ம கடைசி நிறுத்தம். 'ஸ்மிட்டன் ஐஸ்கிரீம்' கடையின் முன்னால் நின்றிருந்தோம். நகரின் பிரபலமான கடை. விதவிதமான நிறங்களில், மணங்களில். இங்கே குளிர்ந்த ஐஸ்கிரீமை மெஷினில் ஒன்றரை நிமிடத்திற்க்கு கடைந்து சுவையைக் கூட்டுகிறார்கள். ஜில்லென்று தொண்டைக்குள் இறங்குகிறது. யம் யம் யம்.... 😍

வழியில் கிரேக்க இனிப்பான பக்லாவா கடை மூடியிருந்தது. இல்லையென்றால் அதையும் ஒரு கை பார்த்திருக்கலாம். இம்முறை வீட்டுக்கு வரும் பொழுது நிறைய வாங்கி வந்து விட்டாள் நிவி. ஃப்ரெஷ்ஷாக நன்றாக இருந்தது. வாயில் வைத்தால் கரைகிறது. வெண்ணையும் சர்க்கரையும் செய்யும் மாயம் தான் என்னவோ? வீட்டில் செய்து பார்க்க வேண்டும் 😜

நேரம் கடந்து சாப்பிட்டாலும் திருப்தியான சுவையான மதிய உணவு. பிடித்த ஐஸ்கிரீம். பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். தினமும் குறையாமல் 23,000 ஸ்டெப்ஸ் நடந்திருந்தோம். வீட்டிற்கு வந்து வத்தல் குழம்பு, ரசம், கறி சமைத்துக் கொடுத்தேன். இனி நாலைந்து நாட்களுக்கு உனக்கு கவலையில்லை நிவி. நல்லா சாப்பிடு.

அந்த வீட்டில் தங்கியிருந்த மற்ற நண்பர்களையும் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களும் நிவி இந்த வீட்டையும் எங்களையும் நன்கு நிர்வகிக்கிறாள். பொறுப்பான பெண் என்று பாராட்ட பெருமையாக இருந்தது. வீட்டில் நிவி கைப்பட அனைவரின் வேலைகளை அட்டவணை போட்டு வைத்திருந்தாள். அவர்களிடமும் கள்ளம் கபடம் இல்லாத ஒருவித வெளிப்படைத்தன்மை இருந்தது. நல்ல நண்பர்கள் அமைவதும் வரமே! அவர்களிடம் விடைபெற்று ஊருக்குத் திரும்ப துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு நானும் விமானநிலையத்துக்கு கிளம்ப தயாராகினேன். கவலையாக இருந்தது.

என் நண்பர்களை நிவியின் நண்பர்களைச் சந்தித்தது, நகர வாழ்க்கையைத் தெரிந்து கொண்டது , புதிய இடங்களைச் சுற்றிப் பார்த்தது, புதுப்புது உணவு வகைகளை ஆசைதீர உண்டது என நாட்கள் மடமடவென்று ஓடியே விட்டது.

நீ இங்க வந்தது நாம சுத்தினது நல்லா இருந்ததும்மா. அடுத்த தடவை வரும் போது இன்னும் கொஞ்ச நாள் கூட இருக்கிற மாதிரி வரணும். உனக்கு இங்க என்ன பிடிச்சதும்மா?

எனக்கு உன்கூட இருந்த எல்லா நேரமும் பிடிச்சது நிவி. எனக்கு என்னென்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து நீ செஞ்சது ரொம்பவே பிடிச்சது. இந்த மாதிரி யாரும் என்னை கவனித்துக் கொண்டதில்லை. நான் தான் இப்படி மற்றவர்களுக்கு செய்து பழக்கம். நீ செய்தது எனக்கு ஆனந்தமாகவும் பெருமையாகவும் இருக்கு..

நீ எங்களுக்கு எவ்வளவு செய்யற? இதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. சொல்லும் பொழுதே உடைந்து நான் அழ ஆரம்பிக்க, நிவியும் அழுதாள். கவலைப்படாதேம்மா. நான் அடுத்த மாசம் ஊருக்கு வர்றேன். வண்டி வர, அழுது கொண்டே விடைபெற்றேன். நான் ஏர்போர்ட் வரைக்கும் வரவா?

வேண்டாம். இப்பவே மணி 10 ஆயிடுச்சு. போய் தூங்கு. நீயும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. உடம்ப பார்த்துக்கோ. நேரத்துக்குச் சாப்பிடு. அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு கிளம்பும் போது எந்த மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில் தான் அன்றும் இருந்தேன்.

அன்பு மகளைப் பிரிந்துசெல்கிற வருத்தமா ? பெண் குழந்தைகள் தான் பொறுப்பாக இருப்பார்கள். தன்னுடைய மகனைப் பற்றி புலம்பிக்கொண்டும் சொந்தக்கதையை சொல்லிக் கொண்டும் வந்தார் மெக்ஸிகன் டிரைவர். ஊருக்கு வரும் பொழுது இருந்த உற்சாக மனநிலை இப்பொழுது இல்லை. ஏதோ ஒரு இனம்புரியாத கவலை.

பாலங்களின் விளக்கொளியில் பசிபிக் கடலும் மின்னிக் கொண்டிருந்தது. விமான நிலையத்தில் விடுமுறை முடிந்து ஊருக்குத் திரும்பும் கூட்டம். வந்து சேர்ந்த தகவலைச் சொல்லி விட்டு செக்கின் முடிந்த பிறகு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

சரிம்மா. பத்திரமா போ. டெட்ராய்ட் போனவுடனே எனக்கு டெக்ஸ்ட் பண்ணு. நான் தூங்கப் போறேன். களைப்பாக இருந்தது அவளுடைய குரல். பாவம்! அழுதாளோ என்னவோ. என்னைப் பற்றிக் கவலைப்பட்டிருப்பாள். நான் அழாமல் இருந்திருக்கலாம். பயமுறுத்தி விட்டேனோ?

அங்கிருந்த ஒவ்வொரு நாளையும் திகட்ட திகட்ட அன்பினால் என்னைச் சீராட்டி வாழ்வில் மறக்க முடியாத, பொக்கிஷமான நாட்களாக்கி விட்டாள் செல்ல்ல்ல மகள். சுகானுபவம்! தட் அவள் எனக்கா மகளானாள்... நான் அவளுக்கு மகளானேன் மொமெண்ட்ட்ட் 🙂

தூரத்தில்
தொலைதூரத்தில்
உற்றார் உறவினர்
எவரும் அருகே
இல்லாத ஒருதூரத்தில்
மகளிடத்தில்
மகளாயிருந்ததே
மாதவம்ம்ம்ம்ம்😍😍😍

SFO 7 Photos

Saturday, May 9, 2020

சான்ஃப்ரான்சிஸ்கோ 6 - Painted Ladies & Bueno Vista Park

SFO 1
SFO 2
SFO 3
SFO 4
SFO 5

டார்டின் பேக்கரியில் இருந்து அரை மைல் தொலைவில் டோலோரெஸ் பூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். பெரிய பெரிய அழகான வீடுகள். சாலைகளை அலங்கரித்த அழகு பனைமரங்கள். பூங்கா சற்று மேடான இடத்தில் அமைந்திருப்பதால் சுற்றி இருந்த கட்டடங்கள் அழகாகத் தெரிந்தது. பல நாட்களுக்குப் பிறகான இதமான வெயில் மற்றும் விடுமுறையைக் கொண்டாடும் மனிதர்கள். பூங்காவில் உட்கார இடமில்லை. ஊஞ்சல்களில், சறுக்கி விளையாடும் இடங்களில் குழந்தைகளின் உற்சாக குரல்கள். இங்கு குழந்தைகளைத் தனியே விடுவதில் இருக்கும் பயமும் பாதுகாப்பின்மையும் காரணமாக அவர்களைக் கண்காணித்துக் கொண்டு சுற்றி நின்று அவர்கள் விளையாடுவதை ரசிக்கும் பெற்றோர்கள். ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருந்த வண்டியைச் சுற்றி இளம் சிறார்கள். கோடை வந்தது போல் புத்துணர்ச்சியுடன் மக்கள்! வெயிலின் அருமை பனிக்காலத்தில் நன்கு தெரிந்து விடுகிறது! எப்படா வெளியில் சுற்றித் திரிவோம் என்று இந்நகர மக்களே காத்திருந்தால் நியூயார்க் நகர மக்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

புல்தரையில் துணியை விரித்துப் படுத்துக்கொண்டே புத்தகம்வாசிப்பவர்கள், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பவர்கள், கிடார் இசைப்பவரைச் சுற்றி அமர்ந்திருந்த நண்பர்கள் குழாம், தனியாக காதில் தொங்கட்டான் வழியாக பாடல்கள் கேட்டுக் கொண்டு என்று வைட்டமின் டியை பலவகையிலும் பெற்றுக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்தவர்கள். பலரும் சாப்பாட்டுக்கூடையுடன் குடும்பமாக அன்று முழுவதும் அங்கேயே பொழுதைக் கழிக்கும் உத்தேசத்தில் வந்தவர்கள் போல இருந்தார்கள். நாங்களும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு கடையில் வாங்கிய ஆல்மண்ட் க்ரைஸாண்ட்டை சாப்பிட ஆரம்பித்தோம். வெண்ணையில் தயாரித்தது. இனிப்பும் கூட. வாயில் வைத்தால் கரைந்தது. ஆஹா! ஏதாவது கிடைக்குமா என்று பறந்து வந்த குருவிகளுக்கும் சிறிது கொடுத்து விட்டு " சிலுசிலு" காற்றில் "குளுகுளு" வெயிலில் முதன் முறையாக இவ்வளவு ருசியான இனிப்பு க்ரைஸாண்ட்! ஏகாந்தம்ம்ம்ம்!

எங்கள் அருகில் இளம்பெண்களும் ஆண்களுமாய் சிறு கூட்டம். தன்னை மறந்த நிலையில்! ஒருவர் மாற்றி ஒருவர் சுருட்டி வைத்த கஞ்சாவைப் புகைத்துக் கொண்டு அமைதியாக ஆனந்தமாக உல்லாச உலகம் எங்களுக்கே சொந்தம் ஸ்மோக் பண்ணுடா பண்ணுடா பண்ணுடான்னு அவர்கள் உலகில் கண்கள் சொக்கிய நிலையில் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தது ஆம்ஸ்டர்டம் நகரை நினைவூட்டியது. கலிஃபோர்னியா மாநிலத்தில் கஞ்சா சட்டபூர்வமாக விற்பனை செய்யப்படுகிறது. அதனால் பொது இடங்களில் தாராளமாக புகைக்கிறார்கள். அந்த வாசனையே காட்டிக் கொடுத்துவிடுகிறது அருகில் யாரோ புகைப்பதை! நியூயார்க்கிலும் விரைவில் சட்டபூர்வமாக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் திருட்டுத்தனமாக பயந்து பயந்து ஒளிந்து புகைப்பவர்கள். பலவும் இப்படி பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

வாம்மா. நீ பார்க்கணும்னு சொன்ன இடத்துக்குப் போவோம். ஒன்றரை மைல் தொலைவு தான். நல்ல மேடா இருக்கும். ஊபருக்குச் சொல்லிடறேன். கவலைப்படாதே . சிரித்துக் கொண்டே சொன்னாள் என் செல்லம்.

அப்பாடா என்றிருந்தது. காலையிலிருந்து நடந்து நடந்து கால்களுக்கும் ஒய்வு வேண்டுமே?

அங்கிருந்து சாய்வுச்சாலையின் உச்சியில் அலமோ ஸ்கொயர். அம்மாடியோவ்! இதுல நான் நடந்திருந்தா அவ்வளவு தான்!

சீக்கிரம் வந்துடுச்சே!

பக்கம் தான்ம்மா.

சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் சில தெருக்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான விக்டோரியன் வீடுகள் வரிசையாக இருக்கும். வெளிப்புறங்களில் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் பழமையைத் தக்க வைத்திருப்பார்கள். சில வண்ணங்களில் பூச்சு அடித்து கட்டட அழகை மெருகூட்டியிருப்பார்கள். அதைக் காணவும் ஒரு கூட்டம் வரும். அலமோ ஸ்கொயரில் வரிசையாக இருக்கும் இந்த ஏழு வீடுகள் 'Painted Ladies' , 'Postcard Row' என்று அழைக்கிறார்கள். கணிசமான கூட்டம் எதிரில் இருந்த பூங்காவில் நின்று கட்டடங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் படங்கள் எடுத்துக் கொண்டுமிருந்தது. நாங்களும் சேர்ந்து கொண்டோம். அந்த வீடுகளில் மக்கள் வசிக்கிறார்கள். அதில் ஒரு வீட்டில் அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் 'Full House' எடுத்திருந்ததும் நினைவுக்கு வந்தது. பூங்காவில் ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு மைல் தொலைவில் இருக்கும் புயனோ விஸ்டா பூங்காவிற்குச் சென்றோம்.

வழியெங்கும் ஏற்றமும் இறக்கமுமாய் சாலைகள். தெருக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவித அழகு. வீடுகள் எல்லாம் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு வண்ணங்களில். சிறு உணவகங்கள் அதிகம் தென்பட்டது. கால் வலி மெதுவாக எட்டிப்பார்க்க நல்ல வேளை பூங்கா வந்து விட்டது. வசதியானவர்கள் வசிக்கும் தெருக்களில் பெரிய வீடுகள்! அப்ப்ப்ப்ப்பா!

அங்க பாரும்மா!

வாவ்! சாலையின் இருபுறங்கிலும் ஓங்கி வளர்ந்த பனைமரங்கள் . சாலை இறங்கி நேரே கடலுக்குள் செல்வது போல இருந்தது. என்ன அழகு! கீழிருந்து மேலேறி வரும் வண்டிகள் சாய்ந்து வருகையில் நல்ல வேளை நாம் இந்தப்பகுதியில் வண்டியோட்டிக் கொண்டு வரவில்லை. பயத்திலேயே வண்டி பின்னோக்கிச் சென்றிருக்கும்...நினைத்துக்கொண்டேன். நடுசாலையில் நின்று சில படங்களை எடுத்துக் கொண்டு எதிரில் இருந்த பூங்காவில் சிறிது நேரம் கண் இமைக்காமல் அந்தச் சாலையில் கீழ் இறங்கும், மெதுவாக மேலேறி வரும் வண்டிகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சில ஹாலிவுட் திரைப்படக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.

மீண்டும் ஊபர் காரில் ட்வின் பீக்ஸ் என்ற மலைகளுக்கு ஒரு மைல் தூர பயணம். அழைத்த சில நிமிடங்களில் 'டான்' என்று வந்து விடுகிறது ஊபர். வண்டிகளையும் நல்ல நிலைமையில் வைத்திருக்கிறார்கள். வளைந்து வளைந்து மலைகளில் எற வண்டியே சிரமப்பட்டது. சிலர் சைக்கிள்களில் வியர்த்து விறுவிறுக்க மேலேறிக் கொண்டிருந்தார்கள். எப்படித்தான் முடிகிறதோ! அதிசயிக்க வைக்கும் மனிதர்கள்! 'சல்'லென்று வளைவுகளில் கீழிறங்கும் வண்டிகளும் மிதிவண்டிக்காரர்களும் பார்க்க நன்றாகத் தான் இருந்தது. மலையில் தீயணைப்பு வண்டிகளும் போலீஸ் கார்களும் பாதுகாப்பிற்காக இருந்தது ஆறுதல். கூட்டத்தைச் சீர்படுத்திக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலான உள்ளூர் மக்கள் ஊபர் போன்ற வாடகை வண்டிகளையே நாடுகிறார்கள்.

இரு மலைகள். உச்சி வரை நடந்து சென்றால் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரம் முழுவதுமே தெரிகிறது. சாலைகளும் உயர்ந்த கட்டடங்களும் மேலிருந்து வளைவுச்சாலைகளில் கீழிறங்கும் வண்டிகளும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல காட்சிகள் கண்முன்னே விரிகிறது. மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. ச்ச்சில்லென்ற குளிர்க்காற்று வீசவும் திரும்பலாம் என்று முடிவு செய்து மீண்டும் ஊபரில் La Tacqueria என்ற பிரபலமான மெக்ஸிகன் உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம்.

இங்க எப்பவுமே நீளமான வரிசை இருக்கும்.இன்னிக்குப் பரவாயில்லைம்மா. கூட்டம் குறைவா இருக்கு.

இது கூட்டம் இல்லையா? அதுவும் இந்த நேரத்துல? ஆல்பனி போன்ற சிறுநகரங்களில் இருந்து விட்டால் பெருநகர வாழ்க்கை எல்லாமே மலைப்பாகத் தான் இருக்கிறது!

பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு உட்கார இடம் கிடைத்து ஆர்டர் செய்தது வர, இவ்வளவு பெரிய 'பரிட்டோ'வா? சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தேன். அருகில் உட்கார்ந்திருந்தவர்கள் சாப்பிட்டுக் கொண்டேஏஏஏஏஏ இருந்தார்கள். எப்படித்தான் இவ்வளவு சாப்பிடுகிறார்களோ? கடோத்கஜன்கள்! கூட்டமும் குறைந்தபாடில்லை. வரிசையாக மெக்ஸிகன் உணவகங்கள் இருந்தாலும் இங்கு மட்டும் அதிக அளவில் மக்கள் காத்திருந்து உண்கிறார்கள். நியூயார்க்கில் இல்லாத பலவும் இங்கு இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் மெக்ஸிகன் மக்கள் வாழ்வதால் அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளும் கிடைக்கிறது. திருப்தியான உணவு சாப்பிட்டவுடன் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி! நிவி என்னை அழைத்துச் சென்ற அடுத்த இடம் ... ஆஹா! பாதங்களை மசாஜ் செய்யும் பார்லர்!

தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து நடந்து அந்த நேரத்தில் அவசியமாக இருந்தது. நான் கேட்காமலே அழைத்துச் சென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. வயிறு நிறைய பரிட்டோ. மிதமான சுடுநீரில் காலை வைக்கும் பொழுதே அவ்வளவு இதமாக இருந்தது. மசாஜ் செய்யும் பெண்மணிக்குச் சுத்தமாக ஆங்கிலம் பேச தெரியவில்லை. நான் சொன்னதைப் புரிந்து கொண்டவர் பாதத்தை மசாஜ் செய்ய, தாய்லாந்தில் செய்து கொண்ட மசாஜ் பற்றி நாங்கள் இருவரும் தாய்பாஷையில் பேசிக்கொண்டதை அப்பெண்மணி சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். தூக்கமும் கண்களைச் சுழற்ற பாதங்கள் நன்றி சொல்ல நான் அப்பெண்மணிக்கு நன்றி சொல்லி அங்கிருந்து ஊபரில் வீட்டுக்குப் பயணம்.

அன்று இரவு உணவுக்கு நிவியின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து என்னைச் சந்திப்பதாக சொல்லி இருந்தார்கள். இரவு உணவாக சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் தக்காளிப் பொங்கலும், சிக்கன் கிரேவி, சட்னி செய்ய வேண்டும். பரோட்டா இருக்கிறது. அம்மா, நீ கொஞ்ச நேரம் தூங்கு. நான் தக்காளி, வெங்காயம் நறுக்கி வைத்து விடுகிறேன்.

டீயுடன் எழுப்பும் பொழுது அடடா! சமைக்கணுமே. இன்ஸ்டாபாட் எடு சமைத்துப் போடு என்று ஒன்றரை மணி நேரத்தில் எல்லாம் முடித்தாகி விட்டது. நடுநடுவே ஈஷ்வருடன் பேசிக்கொண்டும் படங்களை அனுப்பிக் கொண்டே நாங்களும் தயாராகி நிவியின் நண்பர்களுக்காக காத்திருந்தோம்.

சான்ஃப்ரான்சிஸ்கோ 5 - Mission Street

SFO 1
SFO 2
SFO 3
SFO 4

மலைகளின் மேல் கவிழ்ந்திருந்த அதிகாலை பனிமூட்டம் தந்த சிலிர்ப்பு ஆல்பனி விடியலை நினைவுறுத்த, இன்றைய நாள் எப்படியோ என ஆராய்ந்ததில் சான்ஃபிரான்சிஸ்கோவில் மிதமான வெப்பம். காதலர் தினத்தைச் சிறப்பிக்க இயற்கையும் ஒத்துழைக்கிறது போலும். வெள்ளிக்கிழமை ஆரம்பித்து ஞாயிறு வரை கொண்டாட காரணம் ஒன்று எப்படியாவது கிடைத்து விடுகிறது. திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை வேறு! நகரைச் சுற்றிப் பார்க்க வரும் கூட்டமும் அதிகமாக இருக்கும். சீக்கிரம் கிளம்ப வேண்டும். அதிகாலையிலும் அந்திமாலையிலும் நல்ல குளிர். மதியம் சுடாத இளம்வெயில். ஸ்வெட்டர், லைட் ஜாக்கெட் இல்லாது வெளியே கிளம்ப முடியாது. எப்பொழுதும் தூறல் விழலாம் போன்றதொரு குளுகுளு வானிலை. நன்றாகத்தான் இருக்கிறது!

இன்றும் நீண்ட தூரம் நடக்கப் போகிறோம்ம்மா.

ம்ம்ம்ம்.... நகரைச் சுற்றிப்பார்க்கும் ஆசையில் கிளம்பிவிட்டோம். வழியில் அழுக்கு மூட்டைகளுடன் வீடற்ற மனிதர்கள் சாலையோரம் சுருண்டு படுத்திருந்தார்கள். அமெரிக்காவில் ஏழைகளிடமும் கார் இருக்குமாம் என்று சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே வந்தபிறகு தான் ஏழைகள் எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். போதைக்கு அடிமையானவர்கள், குடும்பங்களை விட்டுப் பிரிந்தவர்கள், வருமானம் இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்கள் இவர்களோடு சிறுபான்மையினரும் இந்த ஊரில்!

இவங்கல்லாம் எப்பவும் இங்க தான் இருப்பாங்களா? தனியா நடந்து வர்றப்ப பிரச்னை இல்லையே?

இந்த ஊர் முழுக்க இருக்காங்க. பயப்படாதம்மா. எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டாள்!

நடந்து வரும்போது சுற்றுமுற்றும் பார்த்து கவனமா இருக்கணும் நிவி.

சிரித்துக் கொண்டாள். ம்ம்ம்ம் ... இளங்கன்று பயமறியாது.

நாய்களுக்கென்றே பூங்காக்கள்! துள்ளிக்குதித்து சக நாய்களுடன் சிறுகுழந்தைகளைப் போல விளையாடிக் கொண்டிருந்தது அழகு. அவர்களின் உரிமையாளர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நியூயார்க்கில் நாய்களை இப்படியெல்லாம் விட்டுவிட்டு பேசிக்கொண்டிருக்க முடியாது. சட்டப்படி குற்றமும் கூட. அதிசயமாகத் தான் இருக்கிறது. எதற்கு வம்பு என்று வேடிக்கைப்பார்த்துக் கொண்டே பூங்காவைச் சுற்றி நடந்தோம்.

சாய்வுக்கோணங்களில் சாலைகள். உணவகங்களில் எண்ணையில் பொரியும் கோழியின் வாசம், தேநீர்க்கடைகளில் சுடச்சுட அரைத்த காஃபி மணம். காலை நேரத்து நகரம் தான் எத்தனை அழகு! நெருக்கமான சிறுசிறு வீடுகளைக் கடந்து இருபுறமும் மரங்கள் அமைந்த சாலைகளில் வரிசையாக வெவ்வேறு உணவகங்கள் உணவகங்கள் மட்டுமே. மெக்ஸிகன் உணவகங்கள் அதிகம் தென்பட்டது. குட்டையான மனிதர்களின் நடமாட்டமும் அதிகம். இவங்க தான் இங்க நிறைய இருப்பாங்க. இது தான்மா மிஷன் ஸ்ட்ரீட் !

ஆஆஆ! இந்த தெரு கொஞ்சம் டேஞ்சர்னு சொல்லுவாங்கல்ல?

அது வேற பக்கம். கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும். நான் அங்கே போனதில்லை.

போகாத. போதைமருந்து கும்பல், கொலை, கொள்ளைன்னு படிச்சிருக்கேன்.

நாங்க யாருமே அங்க போக மாட்டோம். இங்க அடிக்கடி சாப்பிட வருவோம். இதெல்லாம் பாதுகாப்பான தெருக்கள் தான். பயப்படாத வாம்மா.

ஒரு சிறிய கடை முன் வரிசையாக நின்றிருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டோம். அமமா இங்க டோனட் ரொம்ப ஸ்பெஷல். ஆஹா! நான் ஒரு டோனட் அடிமைன்னு இங்க கூட்டிட்டு வந்துட்டாளே! இன்றைய ஸ்பெஷல் என்று வரிசையாக இதுவரை கேட்டிராத டோனட் பெயர்கள். ஒன்றும் புரியவில்லை. இருவர் ஆர்டர் எடுக்க உள்ளே பம்பரமாக வேலையாட்கள். கண்முன்னே சுடச்சுட தயாராகிறது சுவையான டோனட்கள்.

உனக்குப் பிடிச்சதா சொல்லும்மா.

எனக்குத் தெரிஞ்சதெல்லாம் டங்கின் டோனட்ஸ் தான். நீயே பாத்து எனக்கும் ஆர்டர் பண்ணிடு.

சரிம்மா. நீ உள்ள போய் உட்காரு. நான் வாங்கிட்டு வந்துடறேன்.

சிறு குடும்பம் ஒன்றும் ஆண் பெண் நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சிறு தோட்டம். அங்கே நான்கைந்து மேஜைகள். கால் முளைத்த குழந்தை டோனட்டை மென்று கொண்டே தத்தித்தத்தி புதுமுகங்களை அருகில் நின்று பார்த்துச் சிரித்தது....தட் பிள்ளையாய் இருந்து விட்டால் தொல்லையேதும் இல்லையடா மொமெண்ட்!

ரோஸ் ஹைபிஸிகஸ் , ஆரஞ்சு ஷாம்பெயின் டோனட், கப்பச்சினோவுடன் நிவியும் வந்தமர்ந்தாள். விடுமுறை நாட்களில் சோம்பலான காலை நேரத்தில் நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம். அடிக்கடி வருவோம் என்று அவள் நண்பர்களைப் பற்றிச் சிறிது அளவாளாவினோம்.

வழக்கமான டோனட்டின் சுவையிலிருந்து வித்தியாசமாக இருந்தது. இனிப்பும் அளவாக, மெத்துமெத்தென்று டோனட் வாயில் கரைந்து போகிறது. நியூயார்க்கில் தடுக்கி விழுந்தால் டங்கின் டோனட் கடைகள் தான். டோனட் அடிமைகள் அதிலிருந்து மீள்வது மிக கடினம்😢 ஆல்பனியிலும் சுற்று வட்டாரங்களிலும் ஆப்பிள் சைடர் டோனட்கள் பிரபலம். அதுவும் இலையுதிர்காலங்களில் மட்டுமே கிடைக்கும். அத்தனை ருசி! ம்ம்ம்ம்... ஒரே மாதிரியான டோனட்க்கள் பழகின நாக்கிற்கு வித்த்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது இந்த டோனட்கள்.

சாப்பிட்டு முடித்து மரங்கள் அடர்ந்த தெருவில் நடக்க ஆரம்பித்தோம். அமர்ந்து சாப்பிடும் வகையில் விதவிதமான காஃபிக்கடைகள். இளம்பெண்களும் ஆண்களும் கடைகளை ஆக்கிரமித்திருந்தார்கள். சிலர் அந்தக் காலை வேளையிலும் மடிக்கணியை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். இங்கே இணையம் இலவசம் என்று சில கடைகளும் எங்கள் கடை உணவுகளை உண்டு மகிழுங்கள் நண்பர்களுடன் பேசி சிரித்திருங்கள் கணினிக்கு அனுமதி கிடையாது என்று சில கடைகளும் வித்தியாசமாக இருந்தது. சதாசர்வ காலமும் செல்ஃபோனுக்கு அடிமையாகி நண்பர்களுடன் இருக்கும் பொழுதுகளில் கூட பேச மறந்து அதை நோண்டிக் கொண்டிருப்பதால் இப்படியெல்லாம் கடைகளில் எழுதிப் போட்டிருக்கிறார்களோ என்னவோ.

ஒரு காஃபி வாங்கிக்கொண்டு பல மணிநேரங்கள் கூட கடைகளில் உட்காரலாம். இந்த ஊரில் வெளியில் சாப்பிடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். அவரக்ளை நம்பித்தான் இத்தனை கடைகளும்! ஐடி நிறுவனங்களில் வேலைசெய்வோர் பலரும் பட்டதாரிகள். இளம் வயதினர். நல்ல மாத வருமானம். வீட்டில் சமைத்துச் சாப்பிட வேண்டுமென்ற அவசியமும் இல்லை. வாழ்க்கையை எளிதாக்க விரும்பியதை உண்ண இத்தகைய உணவகங்களை நம்பி இருக்கிறார்கள். உணவகங்களும் இவர்களை நம்பி ஓடுகிறது.

பேசிக்கொண்டே பல தெருக்களைக் கடந்து கொண்டிருந்தோம். நிழல் தரும் மரங்களாயினும் முறையான பராமரிப்பின்றி அங்குள்ள வீடுகளை பாதித்து வருவதால் அழகு மரங்களை வெட்டியெறிய அரசு முடிவெடுத்திருக்கிறது. மக்கள் அதனை எதிர்க்கிறார்கள். ஒவ்வொரு மரத்தின் மேலும் தன்னைக் காப்பாற்றச் சொல்லி மரங்கள் சொல்வதாக வாசகங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். தவறு செய்தவன் எவனோ இருக்க, வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்டுவதால் என்ன லாபம்? அத்தெருவின் அழகும் அடையாளமும் பாழாகும். அரசாங்கத்திற்கு எது எளிதோ அதனைத்தானே செய்வார்கள்?

அடுத்த முறை வரும் பொழுது இம்மரங்கள் இருக்க வேண்டுமே !

அப்படியே வேலன்ஷியா தெருவிற்கு வந்து விட்டோம். இங்குள்ள பேக்கரி கடை, சாக்லேட் கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் பிடித்தவற்றை வாங்கிச் சுவைத்துக் கொண்டும் தெருவில் நின்று கொண்டு, கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவோரையும் கடந்தோம். விடுமுறை என்பதால் அதிக கூட்டம் என்று நினைக்கிறேன். சான்ஃபிரான்சிஸ்கோ செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். சாலையில் அமைந்திருக்கும் வீடுகளின் முகப்பில் கருத்துக்களைச் சொல்லும் ஓவியங்கள் முதல் கண்கவர் ஓவியங்கள் வரை தீட்டியிருந்தார்கள். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாகப் பார்த்து படங்கள் எடுத்துக் கொண்டு கிளாரியான் தெருவிற்கு வந்து சேர்ந்தோம். இத்தெருவில் வீடுகள் கிடையாது. இருபுறமும் நீண்ட சுவர்களின் மேல் பல ஓவியங்கள். பெரும்பாலும் சிறுபான்மையினர், பெண்களுக்கு எதிரான, சமூக அநீதியை, அரசியலைக் க் கேள்வி கேட்கும் கருத்துக்கள் ஓவியங்களாக. ஓரிரு இந்தியக் குடும்பங்கள், சில அமெரிக்கர்கள் வேடிக்கைப் பார்க்க வந்திருந்தார்கள். தெருவின் முடிவில் போதை மயக்க நிலையில் அழுக்கு மனிதர்கள் சிலர் யாரைப்பற்றின கவலையுமின்றி அமர்ந்திருந்தார்கள்.

எங்கும் நம்மவர்கள், ஆசியர்கள், மெக்ஸிகன்கள், வெள்ளை அமெரிக்கர்கள். அதிசயமாக இன்னும் ஒரு கருப்பு அமெரிக்கரைக் கூட காணவில்லை. அவர்களுக்கான நகரம் இது அல்ல போலிருக்கிறது. உலகின் அதிபணக்காரர் முதல் ஏழைகள் வரை அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப நகரங்களில் வசிக்கிறார்கள். எல்லா நகரத்தைப் போலவே ஏழைகள் வாழுமிடங்களில் குற்றங்கள் அதிகம்.

பலவும் பேசிக்கொண்டே சான்ஃபிரான்சிஸ்கோவின் பிரபலமான டார்டின் பேக்கரி வந்து சேர்ந்தோம். ஆஹா! கடையில் நல்ல கூட்டம். ஒவ்வொருவரும் நான் பார்த்திராத ஐட்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆல்பனியில் தெருமுனையில் இருக்கும் இத்தாலியன் பேக்கரி கடையில் இருக்கும் எல்லா ஐட்டங்களும் அத்துப்படி. இங்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளேயிருந்து தயாராகி வருவது நொடியில் பறந்தோடிக் கொண்டிருந்தது. அதிசயமாக ப்ளாஸ்டிக் பொருட்கள் கண்ணில் படவில்லை. எவர்சில்வர் டம்ளர் , தண்ணீர் ஜக் என்றிருக்க ஆறுதலாக இருந்தது. மக்கள் பலரும் காஃபியை தங்கள் ஃப்ளாஸ்க்கில் வாங்கிக் கொள்வதும் சுற்றுப்புறச்சூழலின் மேல் இருக்கும் விழிப்புணர்வின் தீவிரம் தெரிந்தது. நியூயார்க் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாங்களும் எங்களுக்குப் பிடித்தவற்றை வாங்கி கொண்டு நிதானமாக சாப்பிடலாமென நகரில் பிரபலமான டொலரெஸ் பூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

சான்ஃப்ரான்சிஸ்கோ 4 - Grand View Park & Labyrinth Lookout

SFO 1
SFO 2
SFO 3

"கிங்டம் ஆஃப் நூடுல்ஸ்னு ரொம்ப பிரபலம் இங்க. உனக்கும் பிடிக்கும்மா".

அங்கே சென்றால் பெரிய வரிசை காத்திருந்தது.
எப்பவுமே இப்படித்தான். நாங்கள் அடிக்கடி இங்கு வருவோம்.

"இவ்வளவு சாப்பாட்டுக் கடைகள் இருக்குல்ல இந்த ஏரியாவுல?"

இங்கு இருக்கிறவர்கள் பெரும்பாலும் வெளியே சாப்பிடுபவர்கள் போல. வேலை முடித்து சாப்பிட்டு வீட்டுக்கு வந்து சேருவார்களோ. நீண்ட நாள் வேலை, நல்ல சம்பளம். பிறகென்ன? எங்கும் கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்தவர்கள் கூட்டம். நம்மூர் இளைஞர்கள், இளைஞிகள் நிறைய!

எங்களை அழைத்தவுடன் உள்ளே சென்றோம். இருபது பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருந்தது. நிறைய சப்பை மூக்குக்காரர்களும் சில இந்தியர்களும் போனால் போகிறதென்று ஓரிரு அமெரிக்கர்களும்!

"இங்க ஸ்கேலியன் பேன்கேக் நல்லா இருக்கும். ஒரு சிக்கன் டிஷ் டம்ப்ளிங்ஸ் ஆர்டர் பண்ணலாம். வேற ஏதாவது வேணுமாம்மா? சூப் சாப்பிடறியா? நல்லா இருக்கும்."

"ஓ நோ! இதுவே ஜாஸ்தி தான்."

அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் பெரிய கிண்ணம் நிறைய சூப், தட்டு நிறைய காய்கறிகள், கோழி என்று வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

எண்ணையில் பொரித்த ஸ்கேலியன் பேன்கேக் மொறுமொறு என்று நன்றாக இருந்தது. கூடவே சைனீஸ் டீ.

படிக்கிற மாணவ மாணவிகளோ வேலைக்குச் செல்பவர்களோ இந்தியர்கள் ஏழு எட்டு பேர் சத்தம் போட்டுக் கொண்டே அமர்ந்து பல உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கூடவே ஒருவனின் அமெரிக்கத் தோழி. விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தான். 🙂

முடிந்தவரை சாப்பிட்டு விட்டு மீதியைக் கட்டிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு நாங்களும் நடையைக் கட்டினோம். வெளியில் இன்னும் பலர் காத்துக் கொண்டிருந்தார்கள்.

"இப்ப எங்க போறோம் நிவி? ரொம்ப தூரம் நடக்கணுமா?" வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு நடக்க வேண்டுமே என்று நினைத்தாலே... 

"மெதுவா நடப்போம்மா. ஒன்னும் அவசரமில்லை."

செல்ஃபோனில் GPS போட்டுக் கொண்டாள். அரைமணி நேரம் நடக்கணுமா! கிழிஞ்சது கிருஷ்ணகிரி! ஏற்கெனவே 13000 ஸ்டெப்ஸ் நடந்துருக்கோம்.

ம்ம்ம்ம்... ஊர சுத்திப்பார்க்க நடந்து தானே ஆகணும்.

இருவரும் பேசிக்கொண்டே Inner Sunset தெருமுனைக்கு வந்து சேர்ந்தோம். அதோ அங்கே போகணும்.

"ஐயோ! அது ஏதோ மருதமலை மாதிரி உச்சியிலே இருக்கு. 60 டிகிரி சாய்வுல வேற இருக்கே!"

"எல்லாம் உன்னால முடியும் வாம்மா."

அபிராமி! அபிராமி!

நியூயார்க்கில் பார்க்காத ஸ்டைலில் வீடுகள் எல்லாம் நெருக்கமாக இருந்தது. பெரிய பெரிய கிரில் கதவுகள். நிறைய திருட்டுப்பயமோ? மருந்துக்கு கூட வீட்டின் முன் புல்வெளிகள் இல்லை. சிறுசிறு பூந்தொட்டிகள், செடிகள் வைத்திருக்கிறார்கள். நகரை விட்டுத் தொலைவில் இருப்பதால் குடும்பங்கள் வாழ ஏதுவான இடம். ஆனாலும் விலை கூடுதலாக தான் இருக்கும் என்றாள் நிவி. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதமாக இருந்தது. ஆல்பனியில் ஒரே மாதிரியாக பார்த்து பார்த்து இது வித்தியாசமாக தெரிந்தது. 

"வந்து சேர்ந்துட்டோம்மா. இப்ப இந்த படிகள்ல ஏறணும்."

"என்னது? படியா? இன்னுமா?"
 இப்பவே கண்ண கட்டுதே! முருகா! நன்றாக காரில் உட்கார்ந்து பழகி விட்டிருக்கிறது உடம்பிற்கு. நடக்க வேண்டும் என்றால் யோசிக்கிறது 😞

"அப்பாவும் நானும் இங்க வந்தோம்."

"அவர் கார்ல தான கூட்டிட்டு வந்தார்?"

"வாம்மா. ஜிலேபி சாப்பிட்டுட்டே மெதுவா ஏறிப் போகலாம். இங்க வந்திருந்தப்ப அப்பா உன்னைய ரொம்ப மிஸ் பண்ணினார். அம்மா இருந்திருந்தா நல்லா என்ஜாய் பண்ணி இருந்துருப்பான்னு உன்னைய பத்தியே பேசிட்டு இருந்தார்."

ம்ம்ம்ம்.

"இங்க 150 படிகள் வரை இருக்கும். மூன்றோ நான்கோ வழிகள் இருக்கிறது. இதுக்குப் பேரு தான் Hidden Garden Steps. வழியில் நிறைய செடிகள், பூக்கள், மரங்கள் பார்க்கலாம்."

 கீழிருந்து பார்த்தால் ஒவ்வொரு படிக்கட்டிலும் வன்ணங்கள் தீட்டியிருக்கிறார்கள். பார்க்க அழகாக இருந்தது.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை நினைவில் ஓட, நூறாவது படி அருகில் மூச்சு வாங்க... கொஞ்சம் இளைப்பாறி விட்டு மீண்டும் தொடர்ந்தோம். காட்டுச்செடிகள் நிறைய. பூக்கள் இப்பொழுது தான் மொட்டு விட்டிருந்தது.

"அவ்வளவு தாம்மா! வந்துட்டோம் பாரு!"

எனக்கே பெருமையாக இருந்தது. ஏறிவிட்டேனே! வளைந்து செல்லும் மேடுகளில் வீடுகள்! 
"இன்னும் கொஞ்சம் தூரம் மலை ஏறினா நல்ல வியூ கிடைக்கும்."

என்னது? இன்னுமா? ஷ்ப்ப்ப்ப்ப்பா! தண்ணிய கொண்டா."

ஆளைத் தள்ளிவிடும் போல் நல்ல காற்று.ம்ம்ம். அப்படியே மேலே கூட்டிட்டுப் போனா நல்லா இருக்கும். இப்படி பக்கவாட்டுல தள்ளி விடுதே! மீண்டும் படிகள். ஆக மொத்தம் 200 படிகளாவது ஏறியிருப்பேன் அன்று.

மேலே சென்றால் அவ்வளவு கூட்டம். பெரிய பெரிய மரங்களின் நிழலில் ஒரு சிறு மலை. இதுதான் Grand View park .

அங்கிருந்து சான்ஃப்ரான்சிஸ்கோ நகரின் கடல் எல்லை வரை தெரிகிறது. சீரான தெருக்கள், வீடுகள். பளிச்சென்று கண்ணைக் கூச வைக்கும் பகல் வெளிச்சம். சுற்றி சுற்றி வந்து படங்கள் வீடியோக்கள் எடுத்துக் கொண்டோம். அங்கும் பல இந்தியர்கள். எங்கெங்கு காணினும் நம் மக்களடா!

"இப்பொழுது வேறு வழியில் இறங்கிச் செல்வோம்ம்மா. இந்தப் பாதை உனக்கு ரொம்ப பிடிக்கும். 16th avenue Inner Sunset Moraga Steps னு சொல்வாங்க."

படிகளில் மொசைக் துண்டுகளைக் கொண்டு வடிவங்கள் அமைத்து வண்ணம் தீட்டியிருக்கிறார்கள் இரு கலைஞர்கள். இன்று மக்கள் விரும்பி வந்து பார்க்கும் இடமாகியிருக்கிறது.

அங்கே மக்கள் கூட்டமாக ஜோடிஜோடியாக நின்று படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எடுக்கும் விதத்திலேயே தெரிந்து விட்டது இது இன்ஸ்டாகிராம் கோஷ்டிகள் என்று, தாய் பாஷையில் வழியில் வரும் சிலரை கிண்டலடித்துக் கொண்டே மற்றவர்களுக்கு படங்கள் எடுக்க உதவிக்கொண்டே இறங்கி வந்தோம்.

படிகள் முழுவதும் ஒவ்வொரு தீம். உடைந்த சிப்பிகள் கொண்டு கடலிலிருந்து வான் நட்சத்திரம் வரை நீல் வண்ணத்தில் ஓவியமாக ! இரவு நேர வான் அழகை கருப்பு வண்ண பின்னணியில் , மலர்கள், கடல் விலங்குகள், பறவைகள் என்று. இந்நகருக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும் பொழுது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.

மலையுச்சியிலிருந்து அழகான நகரின் மொத்த வியூவும் ஏறிய களைப்பை போக்கி விட்டது. 163 படிகளைப் பார்த்துக் கொண்டே இறங்கியதில் நல்ல வேளை இந்த இடத்தை மிஸ் பண்ணவில்லை என்று தோன்றியது.

"உன் பையன் இந்த படிகள்ல ஏற எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா? சரியான சோம்பேறி. நீ பரவாயில்ல. ஏறிட்ட. அவன் இங்க வந்து தின்னுக்கிட்டே இருந்தான். இதை வாங்கிக்கொடு அத வாங்கிக்கொடுன்னு."

"அக்காகிட்ட தான உரிமையோட கேட்க முடியும். அதான்."

"நீ அவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டன்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தான். அப்பாவுக்கும் ஒரே சந்தோஷம். என் பொண்ணு என்னைய எப்படியெல்லாம் கவனமா பார்த்துக்கிட்டான்னு. யூ ஆர் எ குட் டாட்டர் ,எ கிரேட் சிஸ்டர் நிவி. வி ஆர் வெரி லக்கி."

சிரித்தாள், "உனக்குப் பண்ணாம யாருக்கும்மா பண்ண போறேன். நீ எங்களுக்குப் பண்றத விடவா? நீ இப்படி தனியா வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். யாரும் உன்னைய தொந்தரவு பண்ண மாட்டாங்க. நாம ரெண்டு பேர் மட்டும் தான்."

மகிழ்ச்சியாக இருந்தது.

"இங்கிருந்து கடலோரம் சென்று வருவோம். நான் ஊபருக்குச் சொல்லிட்டேன்ம்மா."

நல்ல வேளை! நடந்து போகலாம் என்று சொல்லாமல் விட்டாளே என்று சந்தோஷமாக இருந்தது.

"என்னம்மா, டயர்ட் ஆயிட்டியா? இப்ப நாம போற இடம் கூட உனக்கு ரொம்ப பிடிச்சது தான். நான் அப்பாவையும் அங்க கூட்டிட்டுப் போனேன். சன்செட் பார்க்கலாம்."

இப்பவே அலைகள் சத்தம் கேட்க ஆரம்பிச்சிடுச்சே!ஊ ல ல லா...

வழியில் ஒரு பெரிய Dutch Windmill. நெதர்லாண்ட்ஸ் ஞாபகம் வந்தது.

Lands End Lookoutல் வண்டி இறக்கி விட, அங்கிருந்து மீண்டும் நடை.

எங்கிருந்து பார்த்தாலும் கோல்டன் கேட் ப்ரிட்ஜ் தெரிந்தது. அருகில் செல்ல செல்ல இன்னும் தெளிவாக. நல்ல வேளை மூடு பனி மேகங்கள் இல்லாத அழகான நாள். எங்கள் அதிர்ஷ்டம் தான்!

வழியில் கலிஃபோர்னியா பறவைகள்! க்ளிக் க்ளிக்...

Lands End Labyrinth வரை நடந்து சென்றோம். வழியெங்கும் பாறைகளில் நுரை பொங்க முட்டி மோதும் அலைகள் ! அமைதியான நீலக்கடல் கரையோரங்களில் ஆர்ப்பரிக்கும் ஓசை. இன்னிசை தான். அங்கும் நல்ல மக்கள் கூட்டம். ஜோடிஜோடியாக , குழந்தைகளுடன் கடலை நோக்கிச் செல்பவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம். கட்டிப்பிடித்துக் கொண்டு, முத்தங்களைப் பரிமாறிக்கொண்டு காதல் ஜோடிகள் கூட்டம். உயர குதித்து அலைகளின் மேல் படம் எடுத்துக் கொள்பவர்கள், அலைகளைத் தொட முயன்ற குழந்தைகள், கரையை முத்தமிட்டுச் செல்லும் அலைகளை அமைதியாக வேடிக்கைப் பார்ப்பவர்கள் என்று பலவிதமான மக்கள். Labyrinth மலைக்குன்றின் மேல் நல்ல கூட்டம். பெரிய சரக்கு கப்பல் ஒன்று கடல் மேல் அழகாக அசைந்து கொண்டே சென்றது. கடற்கரையோர கல் மீது அமர்ந்து கையில் வைத்திருந்த மீதி பேன்கேக்கையும் சாப்பிட்டு முடித்தோம்.

கடலுக்குள் அஸ்தமனமாகும் சூரியன் கொள்ளை அழகு. அங்கிருந்து கிளம்ப மனமில்லை. குளிர் அதிகமாக, "கிளம்பலாம்மா. இப்ப போனா தான் சரியா இருக்கும். இல்லைன்னா இருட்டிடும்."

ஆஹா!வேகமாக குடுகுடுன்னு கீழிறங்கினேனே.. இப்ப மேலே ஏற வேண்டுமே! நல்ல வேளை! அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. கூட்டமும் மெல்ல மெல்ல கலைந்து சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் சிலர் கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் அழகு தான் அதுவும் கடற்கரையோரம்.

வண்டி நிற்கும் இடத்திற்கு வருகையில் வானம் வர்ணஜாலத்தை இறைத்துக் கொண்டிருந்தது. இதுவரையில் இப்படியொரு அழகை நான் கண்டதில்லை. ஒவ்வொரு நிமிடமும் இறைவனின் கைவண்ணத்தில் புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டுக்கொண்டே இருந்தது கொள்ளை அழகு.காண கண்கோடி வேண்டும். கிளம்பிச் செல்ல மனமே இல்லாமல் கிளம்பி வந்தோம். அப்பா வந்திருந்தா இன்னும் இங்க இருந்திருப்போம்ல.

மறக்க முடியாத நாளும் இனிய மாலையுமாகிப் போனது அந்நாள்!

வீட்டிற்கு வந்து சேரும் பொழுது இரவு 7.30 மணி. அன்று மட்டும் 23,000 ஸ்டெப்ஸ் நடந்திருந்தோம். காலை முதல் இரவு வரை ஒவ்வொன்றும் மறக்க முடியாத காட்சிகள்.

நிவிக்கு நன்றி சொல்லி ஈஷ்வருக்கும் சுப்பிரமணிக்கும் படங்களை அனுப்பி விட்டு அந்நாள் தந்த சுகானுபவத்தை அசை போட்டுக் கொண்டே தூங்கிப் போனேன்.

SFO4Photos

SFO 5 Mission Street



சான்ஃப்ரான்சிஸ்கோ 3 - Conservatory of Flowers & Botanical Gardens

SFO 1
SFO 2

கலிஃபோர்னியா நேரத்துக்கு தூங்கி நியூயார்க் நேரத்துக்கு பளிச்சென்று தூக்கம் கலைந்து விட்டது. வீடோ அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆறு பேர் குடியிருக்கும் இரண்டு மாடி வீடு. வீட்டின் பின்புறம் சிறிய தோட்டம். மெதுவாக பால்கனி கதவைத் திறந்து சிறகுகள் படபடக்க ஓடி விளையாடும் வண்ண வண்ண தேன் சிட்டுகளை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த ஊர் தேன் சிட்டுகள் உருவத்தில் கொஞ்சம் பெரியதாக பல வண்ணங்களுடன் இருந்தது. அவர்களின் காதல் பருவம் போல! வசந்த காலம் தான் எத்தனை அழகு! ஆல்பனியில் மே மாதம் வருகை தரும் தேன் சிட்டுகள் இனப்பெருக்கத்திற்குப் பின் இலையுதிர்காலம் வரை தங்கியிருக்கும். நிவியிடம் சர்க்கரைத்தண்ணீரை வைக்கச் சொல்ல வேண்டும். ஆனந்தமாக இப்பறவைகள் குடிக்கும் அழகை ரசிக்கலாம்.
ஆல்பனியை விட்டு விட்டு வந்தாலும் துரத்தும் சில்ல் குளிர். சான்ஃப்ரான்சிஸ்கோ நகருக்கே உரித்தான மேக மூட்டம்! வெளியே வரவா வேண்டாமா என்று சூரிய பகவான் அங்கும் யோசித்துக் கொண்டிருந்தார். ஈஷ்வருக்குப் ஃபோன் செய்து பேசிக்கொண்டிருக்கையில் டீயுடன் வந்து நின்றாள் நிவி.

"ஏம்மா இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சுட்டே?"

"நீ போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு நிவி. நான் அப்பா கூட பேசிட்டு வர்றேன்."

ஒரு நாள் நிகழ்வுகளை கணவரிடம் சொல்லி விட்டு சில படங்களையும் அனுப்பி வைத்தேன். நீ இல்லாம பயங்கரமா போரடிக்குது. நேத்து கோவிலுக்குப் போனா எல்லாரும் நீ எங்கன்னு கேட்கிறாங்க என்றார்.
அட ராமா! ஒரு மனுஷி நிம்மதியா எங்கேயாவது போக முடியுதா? அதுக்குள்ள எல்லார்கிட்டேயும் புலம்பி முடிச்சாச்சா?

பொண்ணோட நல்லா என்ஜாய் பண்ணு. அப்பப்ப ஃபோன் பண்ணிக்கிட்டே இருங்க.

ஓகே. நானும் வெளியில் கிளம்ப தயாராக, மகளும் தண்ணீர் பாட்டில், நொறுக்குத் தீனிகளையும் எடுத்துக் கொள்ள, ஊபரில் கிளம்பினோம்.
உனக்குப் பிடிச்ச இடம் இருந்தா சொல்லும்மா அங்கே போகலாம்.
நீ எங்க கூட்டிட்டுப் போனாலும் எனக்கு ஓகே. உன்னோட இருக்கணும் அவ்வளவு தான்.

நான் வருவதற்கு முன்பே எங்கெல்லாம் செல்வது எங்கு சாப்பிடுவது அட்டவணை எல்லாம் போட்டு விட்டிருந்தாள் நிவி. என் செல்லம் அப்படியே என்னை மாதிரியே முன்திட்டமிடுதலில்! இந்த சுப்பிரமணி தான் ஏனோ தானோவென்று இருக்கிறான். அப்படியே...

வழியில் வரும் பூங்காவைக் காட்டி நண்பர்கள் நாங்கள் இங்கு தான் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். கோடையில் பிரபல இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இங்கு தான் நடக்கும்மா. நகரில் பூங்காக்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த பசுமையும், செடிகளும், உயர்ந்த மரங்களும் உறைக்காத வெயிலும் உடலைத்தழுவும் தென்றலும் அமைதியாக அமர்ந்திருந்தாலே போதும் மன நிம்மதிக்கு. புல்தரையில் படுத்திருந்தவர்கள், யோகா செய்பவர்கள், நாய்களுடன், குழந்தைகளுடன் நடை போடுபவர்கள், பாட்டு கேட்டுக் கொண்டே ஓடுபவர்கள், மிதிவண்டியில் செல்பவர்கள் என்று இளமைத் துள்ளலான காட்சி அங்கே! அன்று மிதமான வெயில். எப்படா இப்படியொரு நாள் கிடைக்கும் என்று காத்திருந்தார்களோ என்னவோ? தெருக்களில் மக்கள் கூட்டம்.

இதுதான்ம்மா கோல்டன் கேட் ஸ்டேட் பார்க். 1,017 ஏக்கர்களுக்கு பரந்து விரிந்து பாம்பு வால் போல் நீண்டு கொண்டே செல்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமைத்தோட்டம் தான்! சாலையின் இருபுறங்களிலும் வண்டிகள். நடைபாதையில் கூட்டம். இளமையான நகரம் மிகவும் பிடித்துப் போயிற்று. நியூயார்க் நகர மக்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறதோ! கொஞ்சம் தன்மையான மனிதர்களாக இருப்பது போல் தோன்றியது.

வண்டி நிற்க, உனக்குப் பிடிச்ச பூந்தோட்டம்மா. Conservatory of Flowers. நுழைவாயிலே அழகோவியமாக இருந்தது. இங்கு உலகில் உள்ள மலர்களை அந்தந்த மலருக்குத் தேவையான தட்பவெப்பநிலையுடன் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அவ்வளவு அழகு. பார்த்தும் படங்கள் எடுத்தும் முடியவில்லை. உள்ளூர்வாசிகளுக்கு நுழைவாயில் டிக்கெட்டில் கணிசமான தள்ளுபடி இருக்கிறது. காலைவேளையிலும் நல்ல கூட்டம். எத்தனை விதமான மலர்கள்! ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டே வந்தோம். சிறிய இடத்தில் முடிந்தவரையில் மலர்ச்செடிகளுடன் அதன் பெயர்களையும், ஊர்களையும் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. பூச்சிகளைக் கவர, உணவாக்கிக்கொள்ள என எத்தனை விதமான வண்ண மலர்கள்! வெளியில் போடப்பட்டிருந்த மலர்கள் கலிஃபோர்னியாவுக்கு உரித்ததோ! நிறைய க்ளிக்குகள்!

தேங்க்ஸ் நிவி. ரொம்ப நல்லா இருந்தது.

எனக்குத் தெரியும். உனக்குப் பிடிக்கும்னு. அடுத்துப் போறது கூட உன்னுடைய ஃபேவரைட் இடம் தான். ஆவலைத் தூண்டினாள்.
நடந்து செல்லும் மனிதர்களையும் கடந்து செல்லும் வாகனங்களையும் வழியில் தென்பட்ட மரங்களையும் மலர்களையும் படமெடுத்துக்கொண்டே சாலையைக் கடந்தோம். வழியெங்கும் அழகழகாய் ரோஜாப்பூக்களும் , மக்னோலியா மலர்களும் மெல்ல இறங்கும் மூடுபனியும்! குளுகுளு சான் ஃப்ரான்சிஸ்கோ அழகு தான்! 

இன்னும் ரொம்ப தூரம் நடக்கணுமோ?

இல்ல இல்ல. இங்க தான். 

இந்த கலிஃபோர்னியா மக்களே இப்படித்தான். இங்க பக்கத்துலன்னு சொன்னா குறைந்தது அரைமணி நேரம்னு எடுத்துக்கணும்ம்ம்.
கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போவோமா?
புல்தரையில் அமர்ந்து போளியல் சாப்பிட்டோம். 

நல்லா இருக்கும்மா.

ம்ம்ம்ம்...

மீண்டும் நடக்க ஆரம்பித்து

இதுதான்மா நான் சொன்ன இடம். 

அட! பொட்டானிக்கல் கார்டன்ஸ்!
என் செல்லம்! எனக்கு எது பிடிக்கும்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கு
அதற்கும் நுழைவாயில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். உள்ளூர்வாசிகளுக்கு இலவசம்! அங்கும் உலகெங்கிலும் உள்ள 9000 தாவரங்களை வளர்த்திருக்கிறார்கள். பெரணிச்செடி மரம் மாதிரி வளர்ந்து நிற்கிறது. விதவிதமான வடிவங்களில் கள்ளிச்செடிகள்! விதவிதமான தோட்டங்கள்.சுற்றி சுற்றி நடந்து நடுநடுவே ஆசுவாசப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியாக வளைய வந்தோம். 

மேல்நிலைப்பள்ளிப் பருவத்தில் வெவ்வேறு மர இலைகளைச் சேகரித்து நோட்டில் குறிப்புகள் எழுதுவது என்னுடைய பொழுதுபோக்காக இருந்தது. எப்படி இருந்த நான் எப்படி ஆகிவிட்டிருக்கிறேன் ஹ்ம்ம்ம்...
நிறைய நடந்தோம். மதியம் இரண்டு மணி! 

பசிக்கலையாம்மா? 

ம்ம்ம்... பசிக்கிற மாதிரி தான் இருக்கு.

SFO3Photos

SFO 4 Grand View Park & Labyrinth Lookout

சான்ஃப்ரான்சிஸ்கோ 2

SFO 1

தொலைதூர பசிபிக் பெருங்கடல் நீலவானை பிரதிபலிக்க, விமானம் கீழே இறங்க இறங்க சிற்றெறும்புகளாய் தெரிந்த வீடுகள், ஊர்ந்து சென்று கொண்டிருந்த வண்டிகள், நீண்ட சாலைகள் பெரிதாகிக் கொண்டே வர, விமானியின் அறிவிப்பில் உள்ளூர் தட்பவெப்பநிலையும் பயணித்தற்கு நன்றிகளும் தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி விட்டது. சிறகுகளை இடமும் வலமும் சாய்த்து குலுங்கி குலுங்கி தரையைத் தொட்டு விட்ட நேரத்தில் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட, வந்தே விட்டது சான்ஃப்ரான்சிஸ்கோ. அதுவரையில் இருந்த களைப்பும் மறைந்தே விட்டது. ஓடுபாதையில் மெதுவாக அன்ன நடையிட்டு விமானம் செல்ல, விழித்தெழுந்த மக்கள் தலைக்கு மேல் வைத்திருந்த பெட்டிகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னும் வண்டியே நிற்கவில்லை. என்ன அவசரம் வேண்டியிருக்கு? இந்த மனிதர்களோடு பெரிய அக்கப்போரா இருக்கு. ஹ்ம்ம்... பின் வரிசையில் இளம் மெக்ஸிகன் தம்பதியினர். அப்பாவின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கொள்ளை அழகு! விமானத்தில் எறியதிலிருந்து அப்பாவிடமே இருந்தாள். அவரும் பாந்தமாக அவளை அரவணைத்து கைகளில், தோளில் சாய்த்து பேசியபடியே தூங்க வைத்தது பேரழகு. அம்மாவின் மடியும், அப்பாவின் தோளும் தான் எத்தனை ஆதுரமானவை இந்தக் குழந்தைகளுக்கு! என் குழந்தைகளை நினைத்துக் கொண்டேன். பயணிகளில் பெரும்பாலும் மெக்ஸிகன் , சீனர்கள். நடுநடுவில் இந்தியர்கள்,அமெரிக்கர்கள். போகுமிடத்திற்கு ஏற்றார் போல் கூட்டம்!

என் பெட்டியை எடுக்க உதவிய உயர்ந்த இளைஞனுக்கு நன்றி கூறி மகளுக்கும் வந்து சேர்ந்து விட்ட செய்தியைச் சொல்லி விட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் ஐக்கியமாகி வணக்கத்தையும் நன்றிகளையும் இயந்திரத்தனமாக பிளாஸ்டிக் புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருந்த பணிப்பெண்களையும் கடந்து வெளியில் வந்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது. அப்பாடா! ஒருவழியாக வந்து சேர்ந்து விட்டேன்.

அதற்குள் நிவியிடமிருந்து ஃபோன்.

அம்மா, வெளியில வந்துடு. அங்கேயே பிக்கப் பண்ணிடறேன். கவனமா இரும்மா. எங்கேயும் போயிடாதே! நான் கிளம்பிட்டேன்.

நீ மெதுவா பதட்டப்படாம வா . என்னை யாரும் எங்கேயும் கடத்திட மாட்டாங்க. சிரிப்புச் சத்தம் கேட்டது எதிர்முனையில்

ஆஆ! என்னடா லதாவுக்கு வந்த சோதனை. என்னைப் பெற்றவள் நான் ஏதோ சாதனைக்காரி ரேஞ்சில் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள். என் செல்ல மகளோ, பத்திரம்மா. நான் இப்போ வந்துடுவேன்னு சின்னக் குழந்தைக்குச் சொல்வது போல்...ம்ம்ம்ம் ...இதுவும் நல்லா தான் இருக்கு.

அங்கிருந்த எல்லோரும் போனில் பேசியபடி. இல்லையென்றால் எதையோ எழுதியபடி, வாசித்தபடி குனிந்த தலை நிமிராமல்! வண்டிகள் பயணிகளை இறக்குவதும் ஆட்களை ஏற்றுவதுமாய். இளம்பெண் ஒட்டி வந்த காரிலிருந்து இறங்கிய இளம்பெண்கள் இருவர் தோழியைச் சந்தித்த குதூகலத்தில் கத்தி ஆர்ப்பரித்து அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார்கள். சுற்றம் மறந்து தங்கள் உலகில் குதூகலிக்கும் பெண்கள் தான் எவ்வளவு அழகு? பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

அம்மா, நான் இங்க வந்துட்டேன். நீ எங்க இருக்க?

நீ சொன்ன மாதிரி வெளியில வாடகை வண்டிகள் வரும் பாதையில் உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.

தேடிப்பிடித்து வந்து விட்டாள். செல்ஃபோன் இல்லாத காலங்கள் மறந்தே போய் விட்டிருக்கிறது!

அம்மா! வெல்கம் டு சான்ஃப்ரான்சிஸ்கோ. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?

எனக்கும் தான். செல்ல மகளுடன் இருக்கிறேன். சில நாட்கள் இருக்கப்போகிறேன் என்பதே பேரானந்தமாக இருந்தது.

வந்தவுடன் ஊபருக்குச் சொல்லி விட்டு இன்னிக்கு உன் ஃபிரெண்ட்ஸ பார்க்குறது மட்டும் தான்மா. நல்ல ரிலாக்ஸ் பண்ணிப்போம். நாளையிலருந்து ஊர சுத்திப் பார்க்கலாம். நிறைய நடக்கணும். நல்ல ஷூஸ் போட்டிருக்கல்ல? சிந்திய மணிகள் போல கலகலவென பேசிக் கொண்டிருந்தாள். எனக்கா மகளானாள் நான் அவளுக்கு மகளானேன் பின்னணியில் ஓடிக்கொண்டிருந்தது.

ஊபர் வந்தவுடன் வண்டி எண்ணைச் சரிபார்த்து, ஓட்டுநர் பெயரைச் சொன்னவுடன் இந்த வண்டி தான்மா. ஏறிக்கொண்டோம்.

வழியில் இளைஞனும் இளைஞியும் ஏறிக்கொண்டார்கள். ஏறி அமர்ந்தவுடன் விதவிதமாக போஸ்கள் கொடுக்க அவளைப் படம்பிடித்தான் அவன். உடனே இன்ஸ்டாகிராமில் போடணும் என்றவளை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். நம்மள விட இன்ஸ்டா பைத்தியமா இருக்கும் போலயே!

இன்னொரு இடத்தில் களைத்துப் போயிருந்த பெண்மணி ஏறி முன்னிருக்கையில் அமர்ந்து வண்டி நகர ஆரம்பித்தவுடன் தூங்கி விட்டாள்.

நெரிசல்களைத் தாண்டி வளைந்து வளைந்து மேட்டுச்சாலைகளில் இது தான் சான்ஃப்ரான்சிஸ்கோவின் அழகு. மலையுச்சிகளில் பெரிய வீடுகள். தெருக்களில் நெருக்கியடித்துக் கொண்டு சிறு வீடுகள். ஆல்பனி வீடுகளின் முன் இருக்கும் பரந்த பச்சை புல்வெளிகள் மிஸ்ஸிங்! ஹ்ம்ம்! நிலத்தின் மதிப்பு அதிகமான உலக இடங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவு எளிதில் வீடு வாங்கிட முடியாத நகரம். கடல் மூன்று பக்கம் சூழ வாழுமிடம் குறைந்த இடம் என்பதால் குட்டி குட்டி வீடுகள். நியூயார்க்கிற்கும் இந்த ஊருக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்! வழியெங்கிலும் உயர்ந்த மரங்கள்! மழைக்காலத்தின் முடிவில் இலைகளுடன் அழகாக இருக்கும்! சுள்ளென்று மதிய வெயில் ஆனாலும் குளிர். குளுகுளுவென்றிருந்தது.

வீடு வந்துடுச்சும்மா. இறக்கமான தெருவின் மேட்டுப்பகுதியில் அய்யோ ! அழகா இருக்கு இந்த தெரு

இங்க எல்லாமே இப்படித்தான்மா இருக்கும். நாளைக்கு நாம நடக்கறப்ப இன்னும் நிறைய தெருக்களைப் பார்க்கலாம்.

ஆஆ! கிடுகிடுன்னு இறங்கிடுவேன். ஏறணும்மேன்னு நினைச்சா தான்... கண்ணுல இப்பவே வேர்க்குதே!

இரும்மா. டீ போட்டுட்டு எடுத்துட்டு வர்றேன்.

பால்கனியில் இருந்து எதிரே மலைகள். கொத்துக்கொத்தாக வீடுகள். எங்கேயோ பெங்களூரு வந்த மாதிரி இருக்கு! கொஞ்சம் அழுக்கா இருக்குல்ல?

அதற்குள் நண்பனிடமிருந்து ஃபோன்.

எப்ப கிளம்பறீங்க?

நிவியும் எங்கு சந்திப்பது என்று சொல்லிய பிறகு புறப்பட தயாரானோம்.

எனக்குப் பிடித்த ஸ்மூதியும் செய்து வைத்திருந்தாள். குடித்து விட்டு SFO சுத்திப் பார்க்க போறேன் என்று கிளம்பினோம்.

இங்க தான்மா நான் வழக்கமா காஃபி குடிப்பேன். இங்க தான் பலசரக்கு சாமான்களை வாங்குவேன். இந்த மெக்ஸிகன் கடையில பழங்கள் நல்லா இருக்கும். இதுதான் லைப்ரரி.

நல்ல வேளை! நடந்து வர்ற தூரத்துல இருக்கு.

நிறைய மெக்ஸிகன் மக்கள் வாழும் பகுதி அது. தி நகர் போல சாலையோர தள்ளு வண்டிக்கடைகள் நிறைய. பல பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். சப்பை மூஞ்சி, பழுப்பு நிறம், அதிகம் படிக்காதவர்கள் போல இருந்தார்கள். பேசிக்கொண்டே சப்வே வந்து சேர்ந்தோம். எனக்கு ரயில் பயணங்கள் என்றுமே மிகவும் பிடித்த ஒன்று. இங்க இறங்கிப் போகணும்மா.

அறிவிப்புகளுடன் சர்ர்ரென்று குளிர்காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு ரயில் வந்து நிற்க, தப்பித்தால் போதும் என்று இறங்கியது ஒரு கூட்டம். கூட்டமில்லாத நேரம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள். அழுக்கு மூட்டையுடன் குளியல் காணாத உடல் . பார்த்தாலே ஏழ்மை விரித்தாடும் முகம். பார்க்க கொஞ்சம் பரிதாபமாகவும் கோரமாகவும் இருந்தவரை அனைவருமே கடந்து சென்றார்கள். கொஞ்சம் திகிலான மனிதர்களும் அந்தப் பெட்டியில் இருந்தார்கள்.

இப்படித்தான் நீ போற வண்டியிலேயும் வருவாங்களா ?

இதெல்லாம் இங்க சகஜம்மா. பயப்படாத.

ம்ம்ம்... எத்தனை எளிதாக சொல்லி விட்டாள் ?

நான் பயப்படுவதை ரசித்துக் கொண்டே வழியில் வரும் இடங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தாள்.

ஒருமணிநேர பயணத்திற்குப் பிறகு நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வர, நண்பனும் காத்திருந்தான்.

இப்பொழுதுதான் பார்த்த மாதிரி இருக்கிறது. அதற்குள் நான்கு வருடங்கள் ஓடிவிட்டிருக்கிறது !

வேலை, வீடு, குழந்தைகளைப் பற்றி பேசிக்கொண்டே... என்னய்யா உங்க ஊரு. இந்த நேரத்திலும் பிஸியா இருக்கு. அதிசயமா மலைகள் எல்லாம் பசுமையா இருக்கு.

எல்லாம் மழையின் கொடை. எங்க ஊரும் அழகு தான்.

மலையில் மேயும் ஆடு மாடுகள். ஸ்விட்ஸ்ர்லாண்ட் மாதிரி இருக்கு. மரங்களில் இலைகள் இருந்தால் கொள்ளை அழகாக இருந்திருக்கும். எப்படித்தான் வீடுகள் எல்லாம் இப்படி மலை மேல இருக்கோ?

சொல்லி முடிக்கவில்லை. மலை மேல் சென்று கொண்டிருந்தோம். வீடுகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக அழகான தோட்டங்களுடன் , மரம், செடி கொடி, பறவைகள், மான்களுடன். ஆஹா! இந்த மரங்கள் எல்லாம் ஆல்பனியில் இல்லை. வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.

வீடு வந்துடுச்சு. நாய் இருக்கு. கொஞ்ச நேரம் பழகினதுக்கப்புறம் சரியாயிடும். முன்னெச்சரிக்கையுடன் பயந்து கொண்டே உள்ளே நுழைய பாய்ந்து வர காத்திருந்தாள் "ஜிஞ்சர்". நண்பன் ராஜசேகரின் மனைவி அனிதா மருத்துவர். நாங்கள் சென்றதால் அவசரஅவசரமாக வேலையை முடித்துக் கொண்டு வந்திருந்தார். சிறிது நேரம் பேசி விட்டு அருமையான அடையைச் சாப்பிட்டு முடித்து தோட்டத்தில் ஜிஞ்சருடன் விளையாடிக் கொண்டிருந்தோம்.

அன்று மாலை நான்கு கல்லூரி நண்பர்களை மலர்விழி வீட்டில் சந்திப்பதாக திட்டம். சுவையான உணவுகளுடன் சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டு நேரம் போனதே தெரியவில்லை. நண்பர்கள் சந்திப்பு என்றுமே உற்சாகத்தைத் தரக்கூடியது. இரவு மணி பத்தரை ஆகிவிட்டது. இனி ஒரு மணிநேர ஊபர் பயணம். செல்ல மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.

வண்ண விளக்குகள் ஜொலிக்க போக்குவரத்து நெரிசலின்றி உறங்கச் செல்லும் நகரம் தான் எத்தனை அழகு!

எப்படிம்மா இருந்தது? நல்லா என்ஜாய் பண்ணினாயா? சிரிச்சுக்கிட்டே இருந்தீங்க?

ஆமாம்! ஜாலியா இருந்துச்சு. நிறைய பேசினோம்.

குட். எனக்கும் நீங்க பேசி சிரிக்கிறத பார்த்து சந்தோஷமா இருந்தது.

நாளைக்கு நாம நிறைய நடக்கணும். நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோம்மா. சொல்லும் பொழுது நியூயார்க் நேரப்படி காலை மூன்று மணி.

பெருநகரங்களில் வசிக்கும் நண்பர்கள் பலரும் வெளியூரிலிருந்து நண்பர்கள் வந்தால் மட்டுமே சந்தித்துக் கொள்ள முடிகிறது. பலரும் வீட்டிற்கு வந்த பின்னரும் வேலை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள்.

வீடு, வேலை, குழந்தைகள், பொது வாழ்க்கை என்று ஓடிக்கொண்டே இருக்கிறது அவர்கள் நிலைமை.

இனிது இனிது ஆல்பனி வாழ்க்கை இனிது.

களிப்பும், களைப்பும்... தூங்கிப்போனேன்.

SFO2 photos

SFO 3 Conservatory of Flowers & Botanical Gardens

சான்ஃப்ரான்சிஸ்கோ 1

இரு மாதங்களுக்கு முன் இதே நாட்களில் சான்பிரான்சிஸ்கோ நகரைச் சுற்றிக் கொண்டிருந்தோம் நானும் செல்ல மகளும். அன்று கோவிட்19 பற்றின தீவிர அச்சுறுத்தல் இல்லாதிருந்தாலும் சீனர்கள் பலரும் மாஸ்க் போட்டுக்கொண்டு விமானத்தில் பயணித்தது கொஞ்சம் கலக்கமாக தான் இருந்தது. ஆல்பனியிலிருந்து சரியான நேரத்திற்குப் புறப்பட வேண்டிய விமானம் எந்திரக் கோளாறு காரணமாக இந்தா அந்தா என்று மூன்று மணிநேர தாமதமாக புறப்பட்டதில் டெட்ராய்ட்ல் அடுத்த விமானத்தையும் தவற விட்டாயிற்று.

என்னடா லதாவுக்கு வந்த பெருஞ்சோதனை! நிம்மதியாக போனோம் என்று இருக்கிறதா? எப்படியாவது ஒரு தடங்கல்! ஹ்ம்ம்...

வீட்டுக்கு வந்துடு. நாளைக்குப் போகலாம். எப்படா கேன்சல் ஆகும்னு காத்திருந்தாரோ என்னவோ! டிக்கெட் வாங்கிய நாளிலிருந்து ஏண்டா வாங்கினோம் என்று புலம்பிக்கொண்டே இருந்தார். நீ பாட்டுக்குப் போயிடுவ. நான் மட்டும் இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்கப் போறேனோ? சுப்பிரமணி கூட இல்ல.

தனியா இருக்கணும்னு ஆசைப்பட்டிங்கள்ல? நல்லா அனுபவிங்க. நிறைய சமைச்சு வச்சிருக்கேன். ஜாலியா இருங்க. முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேனாக்கும். வர மாட்டேன்.

டெட்ராய்ட்ல் தங்கி மறுநாள் காலையில் SFO செல்லும் விமானத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொண்டேன். அதற்குள் பயணிகளிடையே சிறு கலவரமே நடந்து விட்டது. ஆறடி ஃப்ரெஞ்ச் அழகி வேலை நிமித்தமாக அடிக்கடி பறந்து வருவதால் இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா பாணியில் பாரிஸ் செல்ல வேண்டிய விமானத்தைத் தவற விட்ட சோகத்தில் புலம்பிக்கொண்டிருந்தார். இது அடிக்கடி நடக்கிறது என்று கையில் கதைப்புத்தகத்துடனும் காதில் பாட்டும் கேட்டுக் கொண்டே... அழகாய் இருக்கிறாய். ம்ம்ம்ம் ...இந்தப் பெண்கள் தான் எத்தனை அழகு! என்ன உயரம்! உடல்வாகு! அப்ப்ப்ப்ப்ப்பா!

கவுண்டரில் எனது முறை வந்து விமான நேரத்தை மாற்றிக் கொண்டிருந்த பொழுது சீன அமெரிக்கர் ஒருவர் உயரமாக தாட்டியாக ....ம்ம்ம்...இவங்க ஆளுங்க குட்டையா ஒல்லியா இருப்பாங்களே! இவர் ஒருவேளை இங்கு வந்து செட்டிலான அடுத்த தலைமுறையோன்னு தேவையில்லாத கேள்விகள் மண்டைக்குள் ஓட... அவரும் சினேகமாக சிரித்து வைக்க...

அலுவலக நிமித்தமாக வந்த இடத்துல இப்படி ஆயிடுச்சு. SFOல தான் இருக்கேன்.

பரஸ்பரம் பொதுவான விஷயங்கள் பேசி விட்டு விமானம் புறப்பட , டெட்ராய்ட்ல் டெல்டா அலுவலகத்தை நோக்கி நடந்தோம். பெரிய்ய்யய்யய்ய விமான நிலையம் தான்! இரவு தங்க ஹோட்டலுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் . டாக்ஸி பிடித்துக் கொண்டு செல்லலாம். வவுச்சர் கொடுக்கிறேன் என்றார்கள். இரவு பதினோரு மணிக்கு பழக்கமில்லாத ஊர். அதுவும் டெட்ராய்ட்! தனியாக போக பயந்து ஹோட்டலில் இருந்து பிக்கப் செய்து கொள்ளும் வண்டிகள் இருந்தால் அதில் போகிறேன் என்றவுடன் தங்குமிடத்தை மாற்றினார்கள். சீனரும் சேர்ந்து கொண்டார். அப்பாடா! துணைக்கும் ஒரு ஆள் இருக்கிறார். பதினைந்து வயதிருக்குமோ ? அந்த சீனப் பெண்ணுக்கு! தயக்கத்துடன் அருகே வந்து நானும் SFO போகணும். உங்க கூட வரவா?

ஹோட்டலில் தங்க வவுச்சர் கொடுத்தார்களா?

இல்லை என்றவுடன் சீன ஆசாமி அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு கவுண்டரில் இருப்பவரிடம் விவரத்தைச் சொல்லி வாங்கி கொடுத்து விட்டார். அவளும் என்னுடன் வந்தமர்ந்தாள்.

எங்க படிக்கிற?

மேல்நிலைப்பள்ளியின் பெயரைச் சொன்னாள்.

சீனருக்கும் ஆச்சரியம்!

சீனாவிலிருந்து மேல்நிலைப்பள்ளிப் படிப்பிற்கு அனுப்பியிருக்கிறார்கள்! ம்ம்ம்ம்...

உங்கள் ஊரில் கொரோனா எப்படி இருக்கிறது?

அவள் அப்பா அம்மா பெய்ஜிங்ல் வீட்டுச் சிறையில் ஒரு மாதமாக இருக்கிறார்கள். போராடிக்கிறதாம். பாவம்! என்றாள்.

அமெரிக்காவில் கொரோனா வாசல் வரை வந்து விட்டிருந்த நேரம். அசட்டையாகத் தான் இருந்திருக்கிறோம்.

ஐபிஎம்மில் வேலை பார்க்கிறேன். எனக்கு அலுவலகத்திலிருந்து ஹோட்டல் புக் பண்ணச் சொல்லிவிட்டேன்.நாளை பார்க்கலாம் என்று குதிகால் செருப்பணிந்த அமெரிக்கப் பெண்மணி கிளம்பி விட்டார். இரண்டு மணிநேரத்தில் சிலரின் அறிமுகமும், பொழுது போகாமல் பேசிய பேச்சுகளும்... மனிதர்கள் அவ்வளவு மோசமில்லை தான் என்று புரிய வைக்கும் தருணங்கள்

டெட்ராய்ட்ல் வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் போல. முரட்டுத்தனம் வண்டி ஓட்டுவதிலும்! பேச்சில் தன்மை இல்லை. அமெரிக்கர்களுக்கு முற்றிலும் கசப்பான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். முதன்முறையாக இப்படியொரு அனுபவம் எனக்கும். பத்திரமாக போய் சேர்ந்தவுடன் கம்பளைண்ட் செய்ய வேண்டுமென நினைத்துக் கொண்டேன். செய்தும் விட்டேன். என்னுடன் இருந்த சீனரும் ஆமோதித்தார்.

வழக்கம் போல், மன்னிப்பு கேட்டார்கள்.

22 வருடங்களுக்கு முன் தனியாக ஹோட்டலில் தங்கி இருந்த மனநிலையிலிருந்து முற்றிலும் மாறி இருக்கிறேன்! அன்று இரவு முழுவதும் டிவியை அலற விட்டு விளக்குகளை அணைக்காமல் பயந்து கொண்டு தூங்காமல் கண்விழித்திருந்தேன். சரியான பயந்தாக்கொள்ளி தான்! இன்று களைப்பு, நள்ளிரவு, குளிர். அறைக்குள் நுழைந்த சில நிமிடங்களில் தூங்கி விட்டேன்.

ஐந்தரை மணிக்கெல்லாம் சீனப்பெண் கதவைத் தட்ட, அதற்குள் நானும் தயாராகி இருந்தேன். இருவரும் சேர்ந்து வண்டியில் புறப்பட்டோம். ஆறு மணிக்கு -7 டிகிரி பனிக்குளிரில் மீண்டும் விமான நிலையப் பயணம். ஊர் போய் சேர்ந்தால் போதும் என்றிருந்தது.பனிக்கால சூரியோதயம் அற்புதமாக வானில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

யாராவது தங்கள் பயணத்தை ரத்து செய்து வேறு நேரத்திற்க்கு மாற்றிக் கொண்டால் $300 தருகிறோம் என்று கூவிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு விமானத்தைத் தவற விட்டவர்கள் இந்த விமானத்தில் பயணிப்பதால் வந்த குழப்பமாக இருக்கலாம்.

விரைவில் விமானம் புறப்பட...அப்பாடா என்றிருந்தது. பனிபடர்ந்த ஏரிகளும், வீடுகளும் திடீரென்று மாறிய நிலப்பரப்பு. செந்நிற மலைக்குன்றுகள்... யூட்டா... நினைத்தாலே ஆனந்தமாக இருந்தது. கொலராடோ பனிமலைகள், வறண்ட நெவாடா... ஜோக்கர் படம் பார்த்து முடித்து எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. நடுநடுவே சில க்ளிக்குகள்!

ஆ! பச்சை நிறமே பச்சை நிறமே... வந்தே விட்டது சான் பிரான்சிஸ்கோ!

மெல்ல மெல்ல விமானம் இறங்க... காத்திருக்கும் என் செல்லத்தைத் தேடி மனம் பரபரக்க...





ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...