Wednesday, July 10, 2019

Utrecht, Netherlands


மதுரையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கொண்டாட்டங்கள் புதிதல்ல. அமெரிக்காவிலும் விடுமுறை நாட்களைக் கோலாகலமாக கொண்டாடுவார்கள். தேங்க்ஸ்கிவிங் நாளில் திகட்டத் திகட்ட உணவு வகைகளும் திராட்சைப் பழரசமும் உறவினர்களின் வருகையும், கிறிஸ்துமஸ் நாளில் பரிசுப்பொருட்களும் குழந்தைகளின் ஆரவாரச் சிரிப்பும் என்று கலகலவென இருக்கும் வீடுகளின் உற்சாகம் ஒவ்வொரு மக்களின் சந்திப்பிலும் தொற்றிக்கொள்ள எங்கும் மகிழ்ச்சி ததும்பும் முகங்கள்! கோடையில் வரும் சுதந்திர தினத்தன்று நாடே அவரவர் வசதிக்கேற்ப குடும்பங்களுடன் கொண்டாடி மகிழ்வர்.
 
இந்த கொண்டாட்டங்களையெல்லாம் மிஞ்சும் வகையிலிருந்தது நெதர்லாந்து மக்கள் கொண்டாடிய 'கிங்ஸ் டே'! அப்பொழுது தான் புரிந்தது ஆம்ஸ்டர்டாமில் ஏன் அந்த வாரத்தில் தங்குமிடங்களின் வாடகை அதிகமாகவும் பல இடங்களில் அதுவும் கிடைக்கவில்லை என்று! நகர வீதிகளும் கடைகளும் ஆரஞ்சு நிற பலூன் அலங்காரங்களுடன். கழுத்தில், காதில், தொப்பிகளில் மக்களும் ஆரஞ்சு நிற உடைகளில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் ஆரஞ்சு வண்ணமும் அந்நாட்டின் கொடியும் தான் பிரதானமாக இருந்தது! அந்தச் சூழலும் சிரிப்பும், கும்மாளமுமாய் நகரும் மக்கள் கூட்டமும் அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியையும் கொண்டாடத் தூண்டியது.

நெதர்லாந்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்கள் 'கிங்ஸ் டே' அன்று நாடே "உற்சாக மனநிலையில்" இருக்கும். அதுவும் ஆம்ஸ்டர்டாம் பற்றிக் கேட்கவே வேண்டாம். நடந்து செல்வதும் மிகக் கடினம் என்று எச்சரிக்கவே வேறு சிறுநகரங்களுக்குச் சென்று வரலாமென முடிவெடுத்துச் சென்ற முதல் ஊர் தான் 'Utrecht'(ஊத்ரெட்ட்). நெதர்லாந்தின் நான்காவது பெரிய நகரம். கூகுளாண்டவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் என்று சொல்ல... இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதே என்று யோசித்து....ஓ! மார்ச் மாதத்தில் அங்கே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நினைவிற்கு வர, கொஞ்சம் பயமும் தொற்றிக் கொண்டது. ஆனாலும் சென்று தான் பார்ப்போமே என்று அதிகாலையிலேயே கிளம்பி விட்டோம்.
நாங்கள் தங்கியிருந்த Purmerand ஊரிலிருந்து ஒரு மணி நேரத்தில் ஊத்ரெட்ட் வந்தடைந்தோம். அப்பொழுது தான் சோம்பல் முறித்து விழித்துக் கொண்டிருந்தது நகரம். விடுமுறை என்பதால் அமைதியாக வேறு இருந்தது. ஆங்காங்கே காவல்துறையினர் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். தெருக்களைக் கடந்து எங்கு வண்டியை நிறுத்துவதென யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கடந்து சென்ற கல்லூரி மாணவன் போலத் தோற்றம் கொண்டவரிடம் கேட்டதற்கு அங்கு நிறுத்தலாம். கிங்ஸ் டேயை முன்னிட்டு வாகன நிறுத்துமிடம் இலவசம். சிரித்துக் கொண்டே சென்றார். அவரின் ஆங்கில உச்சரிப்பில் ஒரு கவர்ச்சி இருந்தது 😃 எதிரில் ஒரு பள்ளிக்கூடம்! அதை நினைவில் கொண்டு காமெரா சகிதம் நகர்வலம் செல்ல கிளம்பி விட்டோம்.

நெதர்லாண்ட்ஸ்ல் மழை இல்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது! வெயில் வந்தால் அப்படிக் கொண்டாடுகிறார்கள்! அன்று மழை நாள் வேறு! கையில் குடையுடன், சிறு குழந்தைகளுடன் குடும்பங்களாக, கைகோர்த்துக் கொண்டு கணவன் மனைவியாக, காதலன் காதலியாக, நண்பர்களுடன் செல்பவர்களைக் கவனித்தோம். அரைமைல் தொலைவில் மார்க்கெட் சதுக்கம் நோக்கிப் படையெடுக்கும் கூட்டத்துடன் நாங்களும் ஐக்கியமாகி நடக்க,


நகரின் மையத்தில் ஓடும் கால்வாய். இருபுறமும் வீடுகள். உருளைக்கற்களாலான நடைபாதைகள்! நடுநடுவே அழகிய பாலங்கள். கால்வாய் கரையோரம் பெரிய பெரிய மரங்கள். அவ்வப்போது சிறு தூறல். மழையை ரசித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தோம்.

நகரில் இருக்கும் மக்கள் பலரும் அங்கே கடை விரித்து தேவையற்ற பொருட்களை மலிவு விலையில் விற்றுக் கொண்டிருந்தார்கள்! அமெரிக்காவில் மழைக்காலம் முதல் கோடை வரை கராஜ் சேல் (garage sale) என்று தத்தம் வீட்டின் முன் அல்லது வண்டி நிறுத்தும் கராஜில் வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை விற்பார்கள். தேவையுள்ளவர்கள் வாங்கிச் செல்வார்கள். மிக அழகான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். துணிகளில் இருந்து சமையல் பொருட்கள், மேஜை, நாற்காலிகள் என்று நல்ல நிலையில் இருக்கும் அனைத்தையும் விற்பார்கள். ஆனால் இங்கே பொருட்கள் பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் நன்றாக இல்லாவிட்டாலும் அதையும் வாங்கிக் கொண்டுச் செல்ல ஒரு கூட்டம் இருந்தது.

தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டு நெதர்லாந்து மக்களோடு மக்களாகக் கடைகள் போட்டுக் கொண்டு பல புலம்பெயர்ந்த குடும்பங்களைக் கண்டோம். அவர்களிடம் யாரும் வித்தியாசமாகப் பழகுவது போல் தோன்றவில்லை. அடைக்கலம் தேடி தங்கள் நாட்டிற்கு வந்தவர்களோடு சரிசமமாகப் பழகும் மக்களை எப்படிக் கொல்ல மனம் வருகிறது? எப்படி இவர்களால் உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்க முடிகிறது? கேள்விகளுடன் அவர்களையும் கடந்து வந்தோம்.

மதுபான விடுதிகளில் இளம்வயதினரின் இரைச்சலான பாடல்களும் ஆட்டமும். யாரும் யாரையும் தொந்தரவு செய்யாமல் அவரவர் உலகில் ஆனந்தமாக இருந்தார்கள். அந்நாட்டின் பிரபல பியர் ஹெயினேகென் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது. ஐரோப்பியர்கள் எங்கும் புகை பிடிக்கிறார்கள் :( காவல் துறையினர் கூட்டத்தினரிடையே நடந்தும் கண்காணித்துக் கொண்டும் இருக்க,

அருகிலுள்ள கடையில் சுடச்சுட பிரபல டட்ச் வாஃப்ல்ஸ் Stroopwafel வாங்கிச் சுவைத்துக் கொண்டிருக்கையில் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் படகுகளில் ஆரஞ்சு வண்ண உடைகளை அணிந்து கொண்டு "கிங்ஸ் டே" கொண்டாடும் மக்களைப் பார்க்க ஆனந்தமாக இருந்தது. ஒருவர் முகத்திலும் கவலைகளோ, வருத்தங்களோ இல்லை.தங்கள் மன்னரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் மட்டும் தான் நாட்டம் இருந்தது! அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ள வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தோம் நடந்தோம் நடந்து கொண்டே இருந்தோம். அழகான கற்கள் பதித்த குறுகிய தெருக்கள். சிறிய நேர்த்தியான வீடுகள். உற்சாகத்துடன் வளைய வரும் அனைத்து வயதினர்! மேடைப்பாடகர்கள் பாட, நடனமாடிக் கொண்டே மேடையைச் சுற்றிச் சிறு கூட்டம்! துரித உணவுக்கடைகளிலும் தற்காலிக மதுபான கடைகளிலும் 'விறுவிறு' வியாபாரம்!
உருளைக்கிழங்கை தோலுரித்து ஒரே அளவில் வெட்டி எண்ணையில் பொரித்துச் சுடும் வறுவல் வாசம் அழைக்க, அதையும் ஏன் விடுவானேன்? வாங்கிச் சுவைத்துக் கொண்டே ஆற்றங்கரைப் படியில் அமர்ந்து கொண்டு படகுகளில் செல்லும் மக்களையும் புன்னகையுடன் கடந்து செல்வோரையும் காண சுகமாக இருந்தது. அங்கிருந்த இரு இந்தியர்கள் நாங்கள் மட்டுமே ☺



அந்த ஊரின் பிரபலமான செயின்ட் மார்ட்டின் தேவாலயத்திற்குச் செல்ல மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். நுழைவாயிலில் மௌனமாகப் பதாகையை ஏந்தி மிருகவதை எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தவர்கள் ஆர்வமுடன் அவர்களுடைய கொள்கைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்! பண்ணைகளில் கால்நடைகளை நடத்தும் விதம், மீண்டும் வெஜிடேரியனாகி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்! அழகிய பேராலயம் அன்று மூடி இருந்ததால் அதைச் சுற்றிப் பார்க்க மட்டுமே முடிந்தது. தெருக்களில் சுற்றுலாவினர் படங்களை எடுத்துக் கொண்டே தேவாலயத்தின் பிரமமாண்டத்தை வியந்து கொண்டிருக்க, நாங்களும் சில பல படங்களை எடுத்துக் கொண்டோம்.அழகிய கலை நயத்துடன் இருந்த வெளிப்புறமே மனதைக் கொள்ளை கொண்டதென்றால் உட்புறம் இன்னும் அழகாக இருந்திருக்கக் கூடும். வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்தைக் காண முடியாத ஏமாற்றத்துடன் அருகிலிருந்த அந்நாட்டின் உயர்ந்த தேவாலய கோபுரத்தைக் காண விரைந்தோம். அப்பகுதியிலும் கிங்ஸ் டே கொண்டாட்டங்களுக்காக அலங்காரங்களும் குழந்தைகள் விளையாட மைதானம் முழுவதும் ராட்டினங்களும் என்று அந்த சூழலே புது உருவம் கொண்டிருந்ததில் கோபுரத்தின் அழகு காணாமல் தான் போயிருந்தது. அண்ணாந்து வான் முட்டிய கோபுரத்தைப் பார்த்து வியந்து கொண்டே வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.

மதிய நேரம் நெருங்க, வழியில் பர்கர் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே அடுத்து எந்த ஊருக்குச் செல்லலாம் என்று வரைபடத்தைத் தேடி வண்டி நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

டட்ச் மனிதர்கள் அழகானவர்கள் மட்டுமல்ல 😍வேற்று நாட்டினரையும் தங்களில் ஒருவராக மதித்து நடக்கும் மனிதநேயம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். தங்கள் நாட்டு மன்னரின் பிறந்தநாளை நாடு முழுவதும் குதூகலமாக கொண்டாடுவதையும் ஊத்ரெட்ட் நகரத்தின் அழகையும் நேரில் பார்த்தது புது அனுபவமாக இருந்தது.

கொண்டாட்ட உலகில் எதுவும் சாத்தியம். மலரட்டும் மனித நேயம்! 





Click here to see more  Utrecht photos




































Saturday, July 6, 2019

When They See Us


ஏப்ரல் 19, 1989ல் நியூயார்க் நகர சென்ட்ரல் பார்க்கிற்கு  ஜாகிங் சென்ற ட்ரிஷா மெய்லிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு 'சென்ட்ரல் பார்க் ஜாக்கர்  கேஸ்'.  அமெரிக்காவை உலுக்கிய இச்சம்பவத்தை அடிப்படையாகக்  கொண்டு "When They See Us" தலைப்பில் நான்கு பாகங்கள் கொண்ட தொடர்  நெட்ஃப்ளிக்ஸ்ல் சமீபத்தில் வெளியானது.

வழக்கம் போல் இரவில்  ஜாகிங் சென்ற  ட்ரிஷா மெய்லி வன்கொடுமைக்கு ஆளாகி உருக்குலைந்து குற்றுயிராய் அபாயகரமான கட்டத்தில் உயிர் பிழைப்பாரா என்ற நிலையில்,  அப்பெண்ணிற்கு நீதி கிடைக்க பலரும் நியூயார்க் நீதிமன்றம் முன் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இவ்வன்முறைக்கு காரணமானவர்களை கொலை செய்ய வேண்டும். அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்  என்ற கோபமும் மக்களுக்கு இருந்திருக்கிறது. சில நாட்கள் கோமாவில் இருந்த அப்பெண்ணிற்கு அன்று நடந்த சம்பவங்கள் ஏதும் நினைவில் இருந்திருக்கவில்லை.

இவ்வழக்கில் பதினாறு வயதிற்கும் குறைவான நான்கு சிறுவர்களும்  காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தன் நண்பனுக்குத் துணையாக எந்த குற்றமும் புரியாத வழக்கிற்குச் சம்பந்தமே இல்லாத பதினாறு வயதான கோரி வைஸ் என்ற இளைஞனும் அநியாயமாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இத்தொடர் வந்த பிறகு தான் அமெரிக்க மக்கள் பலருக்கும் உண்மைகள் தெரிந்து ஊடகங்களில் அன்று பாதிக்கப்பட்டவர்கள் பேச, பலருக்கும் உண்மை தெரிந்திருக்கிறது! அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை இயக்குனரிடம் வெளிப்படையாக பேசி இத்தொடரைக் கொண்டு வந்ததன் மூலம் இன்று வரை தொடரும் இந்நாட்டின் நிறவெறியையும், காவல் துறையினரின் அதிகார துஷ்பிரயோகத்தையும், நீதித்துறையின் அலட்சியத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

கறுப்பர்கள் அதுவும் பதின் பருவ இளைஞர்களும் சிறுவர்களும் கூச்சலிட்டுக் கொண்டே சென்ட்ரல் பார்க்கிற்கு கூட்டமாக நண்பர்களுடன் சென்று அவர்களைக் கடந்து செல்பவர்களைச் சீண்டுவது, சண்டையிடுவதென ஆரம்பித்து, இவர்களைப் பற்றின தகவல் அறிந்து வரும் போலீசார் சில இளைஞர்களை விரட்டிப் பிடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் விடிய விடிய விசாரணை என்கிற பெயரில் மன உளைச்சலைத் தந்து பொய்யான ஆதாரங்களையும் அறிக்கைகளையும் அவர்களையே சொல்ல வைத்து, பிரபலமான சென்ட்ரல் பார்க் ஜாக்கர் வழக்கில் (Central park jogger case ) முன்தீர்மானமாக குற்றவாளிகளாக்கி  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். எந்த ஆதாரமும் சிறுவர்களை குற்றவாளிகளாக நிரூபணம் செய்ய முடியாத நிலையிலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலமே அவர்களின் வாழ்க்கையைக்  களவு கொண்டு விடுவது தான் சோகம்.

முன்னேறிய நாடு என்று தன்னைப் பிரகனப்படுத்திக் கொண்டு அடுத்த நாட்டினரின் சாதி, சமய விஷயங்களில் தலையிட்டு உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டும் அமெரிக்கா இன்று வரை சிறுபான்மையினரை, குறிப்பாக கறுப்பர்களை நடத்தும் விதம் உலகமே அறிந்திருந்தாலும் இவ்வழக்கில் அது வெளிப்படையாகவே தெரிகிறது. குற்றம் நடந்த இடத்தில் இருந்த ஒரே காரணத்திற்காகவும் பலியினை யார் மீதாவது சுமத்த வேண்டிய நிர்பந்தத்தில், பாதிக்கப்பட்ட பெண் வெள்ளையின அமெரிக்கனாக இருக்க, மாட்டிக் கொண்டவர்கள் பள்ளி செல்லும் நான்கு கறுப்பின சிறுவர்களும் ஒரு லேட்டினோவும்.

பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகளை விசாரணை செய்ய அவர்கள் குடும்பத்தினர் உடனிருக்க வேண்டும் என்ற சட்டத்தினைக் கூட மீறியிருக்கிறார்கள் காவல் துறையினரும் விசாரணை அதிகாரிகளும். செய்யாத குற்றத்தை பெற்றோர்கள் மூலமாக குழந்தைகளைச் சம்மதிக்க வைத்து, அவர்களும் குழந்தைகள் உயிருடன் திரும்பி வீட்டிற்கு வந்தால் போதும் என்று அதிகாரிகளுடன் ஓத்துழைக்க தங்கள் குழந்தைகளை நிர்பந்திக்க,  சிறையிலிருந்தும் போலீஸ் பிடியிலிருந்தும் காத்துக் கொள்ள தாங்கள் செய்யாத தவறை அப்பெண்ணிற்குச் செய்ததாகச் சொல்ல வைக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

அதில் பதினாறு வயதுச் சிறுவனை மட்டும் சிறார் சிறையில் அடைக்காமல் பெரியவர்களுக்கான சிறையில் அடைக்கிறார்கள். சிறைகளில் நடக்கும் அநியாயங்களை நிச்சயம் இவர்களும் கடந்து வந்திருக்க கூடும். இலைமறைகாயாக தொடரில் வரும் காட்சிகளுக்கே மனம் பதைபதைக்கிறது!


ஐவரில், மனதாலும் உடலாலும் இன்று வரை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் நண்பனுக்காக காவல்நிலையத்திற்குத் துணையாக சென்ற கோரி வைஸ்! கடைசி வரை தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் ஜாமீன் மறுக்கப்பட்டு தனிமைச்சிறையில் படும் கொடுமைகள் ஏராளம். சிறார் சிறையில் இருந்து மற்ற நான்கு பேரும் தண்டனைக்காலம் (பத்து வருடங்கள்) முடிந்து வெளியில் வந்த போதும் கோரி மட்டும் தண்டனையை அனுபவித்துக் கொண்டே வேறோர் சிறையில்.

இச்சம்பவத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளி வேறு சில பெண்களுக்கும்  அதே பார்க்கில் இதே போன்ற கொடுமையை இழைத்து தண்டனை பெற்று கோரி வைஸ் இருந்த சிறையில் சந்திக்க, கோரியின் நிலைமைக்குத் தான் தான் காரணம் என்றுணர்ந்து 2001ல் அதிகாரிகளிடம் குற்றத்தை ஒப்புக் கொள்ள, அப்பொழுது தான் நீதித்துறையும் காவல்துறையும் ஐவரையும் தவறாக தண்டித்து விட்டார்கள் என்று தெரிய வருகிறது.  1989ல் அவ்வழக்கை விசாரணை செய்த அதிகாரிகள் தங்கள் தவறுகளை மறுப்பதுடன் அந்தக் கொடுமையைச் செய்தவர்கள் அன்று சிறுவர்களாக இருந்தவர்களும்  அவர்களோடு ஆறாவதாக ஒருவனும் இருந்திருக்கிறான். அதனால் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானதே என்று வாதிடுவது மட்டுமில்லாமல் இன்று வரையில் மன்னிப்பும் கேட்காதது தான் அராஜகத்தின் உச்சகட்டம்!

உண்மையான குற்றவாளியின் வாக்குமூலமும் சாட்சிகளும் 2002ல் உறுதிப்படுத்தப்பட்டு வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் தண்டனை அனுபவித்து வந்த கோரியை விடுவித்து, ஐவரின் மேல் இருந்த கற்பழிப்பு மற்றும் வன்முறை பழியிலிருந்தும் நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.

குற்றமே செய்யாமல் இளம்பருவத்தை சிறையில் கழிக்க வைத்து தங்களையும் குடும்பத்தினரையும் இம்சித்த வகையில் ஐவரும் அரசாங்கத்திற்கு எதிராக 2003ல்தொடுத்த வழக்கு, விசாரணைகள் முடிந்து 2014ல் ஐவருக்கும் சேர்ந்து நாற்பத்தியொரு மில்லியன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறது நியூயார்க் மாநில அரசு. அதில் இத்தனை வருடங்கள் நடந்த விசாரணைக்காக வக்கீல்கள் செலவு போக மிகக் குறைந்த அளவே தங்களுக்கு கிடைத்ததாகவும் அவர்களைப் போன்று குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவும், இத்தகைய தவறுகள் மீண்டும் நடக்கா வண்ணம் செயல்படும் இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்டுக்காக அப்பணத்தை நல்வழியில் பயன்படுத்துவதாகவும் இன்று வரை அநியாயங்களுக்கு குரல் கொடுக்கவும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருப்பதாகவும் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் ஐவரும் இத்தொடரை எடுத்த டைரக்டர் அவா டுவெர்னேயுடன் பேசியது மிகவும் நெகிழ்வாக இருந்தது.

இருபத்தைந்து வருட போராட்டத்திற்குப் பிறகு அவர்களுக்கு கிடைத்த சொற்ப பணம்,  தொலைத்த வருடங்களைக் மீண்டும் கொண்டு வருமா? அவர்களின் உடல், மன பாதிப்பிலிருந்து அவர்களை மீட்குமா? அவர்களுக்கு இந்த நிவாரணம் அளித்திருக்க கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்! 


விசாரணை அதிகாரிகளின் அலட்சியத்தால் தகுந்த ஆதாரங்கள் இல்லையென்ற போதும் தண்டனை அனுபவித்த சிறுவர்களும், அவர்கள் குடும்பத்தினர்  அனுபவித்த மன உளைச்சல்களும் , அவர்களைக் கொல்ல நினைத்து வெறுப்புடன் திரிந்த, இன்று வரை திரியும் மனிதர்களும் வெட்கித் தலை குனிய வேண்டும். அதில் இந்நாட்டின் அதிபரும் இருக்கிறார் என்பதும் அவர்கள் மீது தவறு இல்லை என்று நிரூபணமான போதும் தன் கருத்தில் எந்த மாற்றமுமில்லை என்பதில் இருக்கும் திமிர் நிறவெறியின் உச்சம்!

"சென்ட்ரல் பார்க் ஃபைவ்"  சிறுவர்களாக சிறைக்குச் சென்றவர்கள் இளைஞர்களாக அதிகபட்ச தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது அமெரிக்க வரலாற்றில் சிறுபான்மையினருக்கு இழைத்த அநீதி இன்றும் தொடர்வதைத் தான் சுட்டிக் காட்டுகிறது!


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...