Friday, June 14, 2019

India's Frontier Railways


'India's Frontier Railways' நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றை மூன்று பாகங்களாக பிபிசி நியூஸ் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து நேபால், பங்களாதேஷ் , பாகிஸ்தான் என்று எல்லையைத் தாண்டிச் சென்று வரும் இந்த மூன்று ரயில் பயணங்களின் வாயிலாக அந்நாட்டு எளிய விளிம்பு நிலை மனிதர்களையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும், நிலப்பரப்பையும் மிக அழகாக மிகைப்படுத்தாமல் வழங்கியதற்கு இத்தொடரை எடுத்த குழுவினரை மனதார வாழ்த்தலாம். சிறு சிறு இடைஞ்சல்களும் வசதிக்குறைவுகள் இருந்தாலும் பேருந்து, விமான பயணங்களில் கிடைக்காத ஒரு சுகம் ரயிலின் ஆட்டத்தில் தன்னை மறந்து பயணம் செய்ய, பலருக்கும் ரயில் பயணம் ஒரு சுக அனுபவமே!

ரயில் நிலையங்களில் வேலை செய்பவர்கள், ரயிலுக்குள் வியாபாரம் செய்பவர்கள், பயணிகள், அவர்களின் கதைகள் என்று ரயிலோடு காடு, மலை, ஆறு, நதிகளென அருமையான ஒரு பயணம். நாடுகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதம், அவர்களின் ஏக்கங்கள், கனவுகள் , ஏழை நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் காணும் பொழுது தான் நாம் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்று தோன்றும். ரயில் பயணத்தை விரும்புபவர்களுக்கு இத்தொடரும் மிகவும் பிடிக்கும் ☺



பாகிஸ்தானிலிருந்து மகனின் கண் அறுவை சிகிச்சைக்காக பல நாட்கள் காத்திருந்து சம்ஹுதா எக்ஸ்பிரஸ்சில் டெல்லி வந்து சேருபவரின் அனுபவங்களும், இரு நாடுகளின் பிரிவினைக்குப் பிறகு பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும் கணங்களும், பிரிவினைக்குப் பின்னான பங்களாதேஷில் இருந்தாலும் கல்கத்தாவிற்கு மைத்ரீ எக்ஸ்பிரஸ்சில் வந்து செல்லும் இந்தியராகவே உணரும் பெண்ணின் வாழ்க்கைப் பயண அனுபவங்களும் , பாகிஸ்தான்-பங்களாதேஷ் போர்க்காலத்தில் வானொலி ஒன்றே இருந்த நாட்களில் வறுமையின் கோரப்பிடியில் எதிர்கொண்ட வாழ்க்கையினை விளக்குபவர் என்று பலதரப்பட்ட மக்களின் நேர்காணல் அவர்களின் பின்னணியிலிருந்து அழகாக எடுத்திருந்தார்கள். இந்த ஏழ்மையிலும் குறைவில்லாத திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என்று பார்ப்போரையும் உற்சாகமாகபடுத்துகிறது இந்த தொடர். ஜனக்பூரிலிருந்து இருபது மைல் தொலைவில் நேபால் செல்லும் ரயில் மட்டும் விரைவிலேயே மூடப்படும் நிலையில் இருக்கிறது. போதுமான நிதி மற்றும் பராமரிப்பு இல்லாததாலும் நடுநடுவே நின்று விடும் ரயில் செல்ல, மக்களே களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள்! இந்த ரயில்களில் வேலை பார்க்கும் பயணச்சீட்டு பரிசோதகர் முதல் வண்டி இயக்குபவர் வரை மிகவும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதையும் , அவர்களின் வெகுளித்தனமான பேச்சுகளையும் அழகாக எடுத்திருக்கிறார்கள்.


தீவிரவாதத்திற்குப் பெயர் போன நாடுகளின் எல்லை தாண்டிய பயணங்களில் பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்திய அலுவலகங்களும், பாதுகாப்புத்துறையினரும் கவனமுடன் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கத்தின் கருணையால் தான் இந்த ரயில்கள் இன்று வரை இந்நாடுக்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. எளிய மக்களிடையே பேதங்கள் இல்லாவிட்டாலும் எல்லைக்கோடுகள் தீர்மானித்து வளர்த்து விடுகிறது தீவிரவாதத்தையும்.

Tuesday, June 11, 2019

வளரட்டும் கொடையுள்ளங்கள்

ஒவ்வொரு சமூகமும் தனக்கென ஒரு தொழில் அடையாளத்தைக் கொண்டிருந்தது போல நான் பிறந்த சௌராஷ்ட்ரா சமூகமும் நெசவுத் தொழிலையும் நூல் விற்பனை செய்வதையும் தொழிலாகக் கொண்டிருந்தது. இன்று வரை அது தொடர்ந்தும் கொண்டிருக்கிறது. சோம்நாத் கோவிலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கொடூர இஸ்லாமியர்களிடமிருந்து தப்பித்து பல்லாண்டுகளுக்கு முன்னால் குஜராத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்களில் சிலர் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தங்கி விட, திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை, பரமக்குடி, திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர் பகுதிகளுக்குப் பலரும் புலம்பெயர்ந்தார்கள்.

இச்சமூகத்து மக்களுக்கு கல்வியறிவை வளர்க்க 1886ல் ஆரம்ப பள்ளி ஒன்று சமூக ஆர்வலர் திரு. L.K. துளசிராம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.1904ல் அரசின் உதவியுடன் மேல்நிலைப்பள்ளி ஒன்றையும் தொடங்கினார். நூற்றாண்டுகளுக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் கற்கட்டிடம் இன்று பல்வேறு துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் பல மாணவர்களுக்கு கல்வியறிவை ஊட்டிய இடம். கலையுணர்வுடன் கட்டப்பட்டிருக்கும் இப்பள்ளியின் கற்கட்டிடத்தை பாராட்டாதவர்களே கிடையாது. எம்முன்னோர்களால் அக்காலத்திலேயே வழங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடிய இப்பள்ளியின் பெருமைகளுள் ஒன்று. உணவிற்காக வேலை செய்ய வேண்டிய நிலையில் இருந்த பல குடும்பங்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர வைக்கப் பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பின்னாளில் தமிழக முதலமைச்சர் காமராஜரைக் கவர்ந்து அவர் தமிழக அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அவருக்குப் பின் MGR அவர்களும் நெறிப்படுத்தினார். இன்று வரை இம்மதிய உண்வுத் திட்டத்தால் பல ஏழை மாணவர்களும் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். இப்பள்ளியில் படித்த மாணவர்கள் மேலை நாடுகளில் இருந்தும்  இத்திட்டத்திற்கு இன்று வரை பணஉதவி செய்தும் வருகிறார்கள்.


பெண்கல்வியின் அவசியத்தையும் உணர்ந்த முன்னோர்கள் பெண்களுக்காக 1947ல் ஆரம்பப் பள்ளி ஒன்றையும் பிறகு முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மேல்நிலைப்பள்ளி ஒன்றையும் துவங்கி இன்று வரை பல பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளார்கள்.

மேற்படிப்பிற்காக வேறு கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில் 1967ம் வருடம் சமூக ஆர்வலர்களாலும் நன்கொடையாளர்களாலும் மதுரை விளாச்சேரியில் சௌராஷ்ட்ரா கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில் படித்த பல மாணவர்களும் தாங்கள் உயர்ந்தது மட்டுமில்லாமல் தங்கள் குடும்பத்தையும் உயர்த்தினார்கள். பயன் பெற்றோர் எண்ணற்றோர்!

எப்பேர்ப்பட்ட தொலைநோக்கு பார்வையுடன் சுயநலமற்ற எம்முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள்! இன்று வாழ்க்கையில், பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கும் பலரும் உயர் அந்தஸ்து பதவிகளில் இருப்பவர்களும் கல்விக்கூடங்களை அமைத்த பெரியவர்களை நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்றே நம்புகிறேன். எட்டு வருடங்கள் இக்கல்லூரியில் கணினியியல் துறையில் விரிவுரையாளராக வேலை பார்த்த பெருமிதமும் எனக்கு உண்டு.

மக்களுக்கு குறைந்த செலவில் நிறைவான மருத்துவம் வழங்க சமீபத்தில் 'பாதே' குடும்பத்தினர்(ரமோலா பெய் & விவேக் பாவா) மதுரையிலிருக்கும் தங்கள் இடத்தை நன்கொடையாக வழங்கி இருப்பதை அறிந்தேன். இதனால் பலரும் பயனடைவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. உதவும் உள்ளங்கள் இருக்கும் வரை சமூகத்திற்கு நன்மையே! 

தற்பொழுது பொறியியல், நர்சிங், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பெண்கள் கலைக்கல்லூரி என்று வளர்ந்து கொண்டே இருக்கிறது. இவையெல்லாம் சமூக மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல நன்கொடையாளர்களாலும், ஆர்வலர்களாலும் சாத்தியப்படுகிறது. சமூகத்திலிருந்து பெற்ற பலன்களைச் சிறிதேனும் சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்த நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம். முடிந்தவரையில் அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம். பெரியவர்கள் நமக்காக விட்டுச் சென்றுள்ள கல்வி நிலையங்களை மேலும் வளர்த்து நல்வழியில் செலுத்திடவும் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுத்திடவும் இணைந்து செயல்படுவோம்.

கொடையுள்ளங்களை வாழ்த்துவோம்! வணங்குவோம்! நன்றியுடன் இருப்போம்!


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...