Wednesday, September 25, 2013

திக்....திக்...திக்...3

இது நடந்தது 1998 ஆம் வருடம்.

என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் அவளுக்குத் தெரியும். ரயில் நகர ஆரம்பித்தவுடன் ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள். கால்நடைகள், பஸ்கள், வேன்கள், மனிதர்கள் என்று எல்லாவற்றையும் கடந்து வைகை ஆற்‌றின் மேல் போகும் பொழுது 'தடதட' என்ற சத்தத்தைக் கேட்டவுடன் பயந்து வாயிலில் விரலை சூப்பிக்கொண்டே என் மடியில் படுத்துக் கொண்டாள். என் தம்பியின் நண்பனின் குடும்பமும் பேச்சுத்துணைக்கு இருக்க நன்றாகவே ஆரம்பமானது அந்த பயணம்.

வைகைஆறு, மதுரா கோட்ஸ், பாத்திமா கல்லூரி தாண்டிய சில நிமிடங்களில் 'கிரீச்' என்று ரயில் சக்கரங்கள் தடவாளங்களில் உரசிக் கொண்டு அதிரடியாய் நிற்க, என்ன காரணம் என்று தெரியாமல் பலரும் முணுமுணுக்க, பல ரயில்களும் அங்கே நிற்கும் போது தான் ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் என்ன என்று தெரியவில்லை. ரயில் நகரும் அறிகுறி தெரியாமல் போகவே, ஆண்கள் சிலர் இறங்கி விவரம் கேட்க போனார்கள். போனவர்களும் வந்தார்களா, அதுவும் இல்லை. உட்கார்ந்திருந்த பயணிகளுக்குப் பொறுமை போய்க் கொண்டிருக்கும் பொழுது தான், ரயில் போகும் பாதையில் குண்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது :(

விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அனைவர் முகத்த்திலும் ஒரு பீதி. இனம் புரியாத மனக்கலக்கம்.

அன்று முகம் தெரியாத ஒரு மனிதர் ரயில்பாதையில் இருந்த பொருளைப் பார்த்து, சந்தேகத்தின் பேரில் போலீசை அழைத்து செய்தியை சொல்லி, அது வெடிகுண்டு தான் என்று தெரிந்ததும் போலீசும் அவர்கள் கடமையை செய்து பல இழப்புக்களும், சேதாராங்களும் நடக்காமல் பார்த்துக் கொண்டது நாங்கள் செய்த அதிர்ஷ்டம் தானே? அன்று அந்த மனிதர் தான் பலருக்கும் கடவுளாகத் தெரிந்தார், தெரிந்திருப்பார்.

அந்த நேரத்தில் வைகை, பாண்டியன் மற்றும் வேறு இரண்டு ரயில்கள் அந்த பாதையைக் கடக்கும், நிறைய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தலாம் என்ற கொடியவர்களின் திட்டம் கடவுளின் அருளால் நடக்காமல் போனது எங்களின் பாக்கியமே!

அதற்கு முன்பு தான் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு நடந்திருந்தது. அப்படி மட்டும் வெடித்திருந்தால் என்றோ தலைப்புச் செய்தியாகிப் போயிருப்போம் :(

எப்படியோ கோயம்புத்தூர் போய் எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு அடுத்த சில வாரங்களில் நானும் என் கணவரும் பாண்டியனில் சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தோம்.

ஒரு வித பயத்துடன் தான் நான் இருந்தேன். பெட்டியில் அனைவரும் சிநேகமாக பேசிக் கொண்டே இருக்கும் பொழுது, என் கணவரும் எங்களின் 'சமீபத்திய ரயில் பயணம்' பற்றிச் சொல்ல, எங்களுடன் இருந்த இருவர்(அப்போது தான் அவர்கள் போலீஸ் என்று தெரிய வந்தது!) அவர்களுக்கருகில் இருந்த ஒரு பெட்டியை காட்டி இது என்ன தெரியுமா என்று கேட்க, என்ன என்று ஆவலுடன் நாங்களும் கேட்க அவர்கள் பிரித்துக் காட்டினால் செயலிழக்கப் பட்ட அதே வெடிகுண்டு! என்ன தான் அவர்கள் பயப்படத்தேவை இல்லை என்று சொன்னாலும் என் தூக்கம் போனது போனது தான் :(

என்ன செய்ய? இன்றும் கூட ரயில் பயணம் என் தூக்கத்தை தொலைக்கும் ஒரு பயணம் தான்! சிறு வயதில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று ஒவ்வொரு நொடியையும் அனுபவித்த ரயில் பயணம் இன்று ஊர் போய் சேரும் வரை 'திக் திக் திக்' தான் !




2 comments:

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...