Wednesday, August 24, 2016

சம்சுலா பெடி (samchulaa peTi) ...

மாப்பிள்ளை வீட்டாரால் பெண்ணிற்கு 'அன்பாக' அளிக்கப்படும் ஒரு பெட்டி நிறைய பொருட்கள்(சம்சுலா பெடி), சௌராஷ்டிரா வீட்டுத் திருமணங்களில் அங்கம் வகிக்கும் ஒன்று. அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்று கல்யாண வீட்டில் பெண்ணின் நெருங்கிய சொந்தங்கள் ஆவலாக இருப்பார்கள். தங்களுக்குப் பிடித்தது இருந்தால் உடன்பிறந்தவர்கள் உரிமையோடு எடுத்துக் கொள்வார்கள்.

அந்தப் பெட்டியை வாங்குவதிலிருந்து அதில் என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டுமென முடிவு செய்வதில் குடும்பப் பெரியவர்களின் பங்கு அதிகமாக இருந்தது அந்தக் காலத்தில். மாப்பிள்ளையின் சகோதரி மற்றும் அவர் கணவர் சென்று வாங்கி வர வேண்டும் என்பது சம்பிரதாயம். இன்றோ, மாப்பிள்ளையின் பங்கீடும் அதிக அளவில் இருக்கிறது. கொடுத்து வைத்த பெண்கள்!

தகரப்பெட்டியிலிருந்து சூட்கேஸ் என்றாகி இன்று ரோலர் மாடல் கைப்பெட்டிகளாக அவை உருமாற்றம் கொண்டிருந்தாலும் அப்பெட்டியில் சில சம்பிராதயப் பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முகம் பார்க்கும் கண்ணாடி, பவுடர், மஞ்சள், குங்குமம், பொட்டு, கண் மை, கொலுசு, சீப்பு, சிக்கெடுக்கும் சில்வர் குச்சி, பழங்கள், இனிப்புகள் மற்றும் கோலாட்டம் ஆட இரண்டு வண்ண வண்ண குச்சிகள். இதைத்தவிர வெள்ளி, தங்க நகைகள் அவரவர் வசதிக்கேற்ப!

எங்களிடையே கோலாட்டம் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்திருக்கிறது. மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் மூன்றோ ஐந்து நாட்களோ பெண்கள், சிறுமிகள் அனைவரும் ஆனந்தமாக ஆடிய காலங்கள் உண்டு. வடக்கே இருந்து வந்த இந்தக் கோலாட்டம் இன்றும் தொடர்கிறதா என்று தெரியவில்லை. இந்த காலத்துப் பெண்களுக்கு கோலாட்டம் ஆடவும் தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே!

இன்று விதவிதமான சேலைகள், நகைகள், மேக்கப் சாமான்கள் என்று மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வசதியை பறைசாற்றிக் கொள்ள இந்தப் பெட்டிகளும் துணை போகின்றன. ஏழை நெசவாளர்கள் வீட்டில் இன்றும் இந்தப் பழக்கம் தொடருகிறது. இது மதுரை சௌராஷ்ட்ரா மக்களிடம் மட்டுமே இருக்கிற ஒரு பழக்க வழக்கமா அல்லது திண்டுக்கல், சேலம், பழனி, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோண மக்களிடமும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சில பெண்கள் தங்கள் கணவரின், அவர் வீட்டின் அன்பின் அடையாளமாகவும் பார்க்கிறார்கள். என்ன, எல்லோருக்கும் அந்தக் கொடுப்பினை இருப்பதில்லை. சில மாப்பிள்ளை வீட்டார் பாவிகள் அதிலும் கடுமையாக இருக்கிறார்கள்.

எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சுமந்து வரும் அந்தப் பெட்டி ஒரு கல்யாணப் பெண்ணின் கனவுப் பெட்டியும் கூட! பெண்ணிற்குப் பிடித்த பொருட்கள் இருந்தால் அவளுக்கு மகிழ்ச்சி. இல்லையென்றால் அன்றிலிருந்தே டண்டணக்கா தான் .... :) சிலர் முன்னெச்சரிக்கையாக பெண்ணை அழைத்துச் சென்று அவளுக்குப் பிடித்த பொருட்களையே வாங்கி பெட்டியில் வைத்துக் கொடுத்து விடுகிறார்கள்!

பெண்ணிற்குச் சீர் கொடுத்துத் திருமணங்கள் நடந்த காலங்களில் ஆரம்பித்த பழக்கம் இன்று பெண் வீட்டில் சீதனம் வாங்கிக் கொண்டும் தொடருகிறது.

Sunday, August 14, 2016

அமெரிக்க மாட்டுப்பண்ணை ஒரு விசிட்...



நண்பர் ஒருவர் அவருடைய குடும்பம் நடத்தும் ஃபார்ம் ஓபன் ஹவுஸ்க்கு வா என அழைப்பு விடுவிக்க நேற்று சென்றிருந்தோம். என் அப்பாவின் பெரியம்மா வீட்டில் மாடுகள் இருந்தது. இயற்கை உணவுகளை உண்டு குடும்பத்தில் ஒன்றாக அம்மாடுகள் வளைய வந்த நினைவும், மாடுகளின் பெரிய கண்களை கண்டு மிரண்டதும், கன்று ஈன்றவுடன் சீமைப்பாலில் பால்கோவா செய்த நினைவுகள் வர, அமெரிக்க மாட்டுப்பண்ணைகள் எப்படி இருக்கிறது என்று பார்க்க விரும்பி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கிளம்பி விட்டோம்.

வீட்டிலிருந்து நாற்பது நிமிட கார் பயணம். கோடைமழைக்கான கருமேகங்கள் பின் தொடர, பளிச்சென நீல வானம் முன் தொடர பச்சைப்பசேல் மரங்கள் வழியெங்கும். வெயிலோ 100+ டிகிரியோ என அனலாக!

வியர்த்து விறுவிறுக்க குழந்தைகளுடன் பண்ணையை சுற்றிப்பார்க்க வந்திருந்த கூட்டத்துடன் ஐக்கியமாகி நடக்க ஆரம்பித்தோம். சோளத்தை பறிக்கும் பொழுதே பிரித்தெடுக்கும் ராட்சத மெஷின்கள், மாடுகளின் சாணத்தை தொடர்ந்து எடுத்துச் சென்று அதையே தோட்டங்களில் உரமாக, காய்ந்த புற்களை மாடுகளுக்குத் தீவனமாக என்று கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறார்கள்.

800 கறவை மாடுகள் காற்றோட்டமான சூழ்நிலையில் கொட்டகையில் இருந்தது. நம்மூர் மாடுகளைப் போலில்லாமல் ஒவ்வொன்றும் பெரிய பெரிய உருவங்களில் பெரிய பெரிய மடிகளுடன்!

அங்கு பால் கறப்பது ரொபாடிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன்! மாடுகளின் கழுத்தில் இருக்கும் காலரில் பால் கறந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தால் தான் மீண்டும் பால் கறக்கிறது அந்த மெஷின். இல்லையென்றால் கதவை ஆட்டோமேட்டிக்காக திறந்து அந்த மாட்டை வெளியே அனுப்பி விடுகிறது. மாடுகளும் தன்னிச்சையாக பால் கறக்கும் இடத்திற்கு வர பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். மாடுகளின் மடியினை சுத்தம் செய்வது முதல் எத்தனை கேலன் பால் கறக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்களையும் அந்த ரோபோட்ஸ் சேர்த்து வைக்கிறது.

ஒவ்வொரு மாடும் 5-8 காலன் பால் ஒரு முறை தருகிறது. ஒரு மாட்டிலிருந்து மூன்று முதல் நான்கு முறை பால் கறக்கிறார்கள். கறக்கும் போதே குளிரூட்டப்பபட்டு முறையாக பெரிய கண்டைனர்களில் சேமித்து வைக்கிறார்கள்.

கன்றை ஈன்றும் பருவத்திலிருக்கும் மாடுகள், கர்ப்பம் தரித்திருக்கும் மாடுகள், பால் தரும் மாடுகள் என மாடுகளை தனித்தனி கொட்டகையில் பிரித்து வைத்திருக்கிறார்கள். மாடுகளுக்கு காய்ந்த வைக்கோலும், சோளமுமே புரதான உணவாக இருக்கிறது.

மாடுகள் எல்லாம் ஆரோக்கியமான சூழ்நிலையில் நல்ல உணவுடன், நீர் ஆகாரத்துடன் பராமரிக்கப்பட்டு வளர்ந்தாலும் கன்றுக்குட்டியை தாயிடமிருந்து பிரித்து தனியே அடைத்து வைத்திருப்பதும், இயற்கை முறையில் கருத்தரிக்க விடாமல் செயற்கை முறையில் கருத்தரிக்க வைப்பதும்... நமக்காக அந்த ஜீவன்கள்...பாவம் தான்!

ஒரு மாட்டுப் பண்ணையை சமாளிக்க பல மணிநேரங்கள் உழைத்தாலும் அவர்களுக்கு லாபம் அவ்வளவாக இல்லை என்று சொல்லும் பொழுது உலகமெங்குமே இவர்களின் நிலை இப்படித்தான் போல என வருந்தியபடி அங்கிருந்து விடைபெற்றோம்.


படங்கள் : https://goo.gl/photos/Tn183BJPCot9yKgM6















ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...