Tuesday, June 28, 2022

Our Blues

வாரம் இரு நாட்களுக்கு ஒளிபரப்பான "அவர் ப்ளூஸ்" கொரியன் தொடர் கடந்த வாரத்தோடு நிறைவடைந்தது. ஆரம்பத்தில் என்னடா இத்தனை மெதுவாக போகிறதே என்று தோன்றினாலும் அழகான அந்த "ஜெஜூ" தீவுக்காகவே பார்க்க ஆரம்பித்து வழக்கம் போல் கொரியன் தொடர் அடிமையாகி முழுவதும் பார்த்து முடித்தேன்.  'ஹோம் டவுன் ச்சா ச்சா'வில் வரும் கதாநாயகி, 'ஒன் ஸ்ப்ரிங் நைட்' தொடர் கதாநாயகி , 'மிஸ்டர் சன்ஷைன்' கதாநாயகன், அம்மா அக்கா கதாபாத்திரங்களில் என பல தொடர்களில் நடித்த இத்தொடரின் கதாநாயகி, பல தொடர்களில் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்த பாட்டிகள் என  அறிமுகமான முகங்கள் இத்தொடரைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டியது.

பறந்து விரிந்த நீல வானத்தைப் பிரதிபலிக்கும் கடல். அழகான கடற்கரையோர கிராமம். அந்தக்கால திண்ணை வீடுகளை நினைவூட்டும் எனக்கு மிகவும் பிடித்த கொரிய வீடுகள் என்று காட்சிகளோடு ஒன்றிச் செல்லும் இயற்கையும் மனதை கொள்ளை கொள்ளும். அந்தச் சிறுமி கூட அத்தனை அழகாக நடித்திருந்தார்.

பள்ளி வயதில் வரும் இனக்கவர்ச்சி என்றுமே பசுமையாக மனதில் இருந்தாலும் ஒரு வயதிற்குப் பின் அது நல்லதொரு நட்பாக அமையும் சாத்தியக்கூறுகள் அதிகம். காதல் வயப்பட்டாலும் மனவளர்ச்சி குன்றிய தன் சகோதரியையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வாய்ந்த காதலனும் அவன் குடும்பமும் என்று செல்லும் கதை அழகு.

சிறுவயதில் மன பாதிப்புக்குள்ளான இருவர் எவ்வாறு மீண்டு தங்களைக் கண்டடைகிறார்கள் என்று சொல்லிய விதமும் குடும்பங்கள் அதுவும் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதைப் போகிற போக்கில் சொன்ன விதமும் அழகு.

கொரியர்களுக்குஅமெரிக்கா மேல் இருக்கும் கவர்ச்சி. அதற்காக எந்த எல்லைக்கும் சென்று தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக தங்கள் வாழ்க்கையைக் கூட துறக்கும் மனிதர்கள் என்று கதாபாத்திரங்களின் வழியே அவர்களின் வலியைக் கூறுகிறது இந்தத் தொடர்.

ஒரு சிறிய ஊரில் பள்ளி வயதிலிருந்து பழகிய நண்பர்கள் வயதானாலும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து பருவங்களைக் கடந்து வருவது தான் கதை. தாயின் மேல் வெறுப்பாக இருந்தவன் அவளைப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததும் மனம் வருந்தி அவளைக் கரையேற்றுவதுடன் கதை நிறைவடைகிறது. 

நம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது "blues" இருக்கத்தான் செய்கிறது. அதை ஒவ்வொருவரும் எப்படி கையாளுகிறோம் என்பதில் தான் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைவான வாழ்க்கையும் இருக்கிறது. நல்ல குடும்பம், நண்பர்கள் அமைந்து விட்டால் எந்தவொருப் பிரச்னையையும் எதிர்கொள்ள முடியும் என்பதைத்தான் இந்த தொடர் உணர்த்துகிறது. காதல், நடுத்தர வயது வாழ்க்கை, பள்ளி வயதில் கர்ப்பம், மன அழுத்தப் பிரச்னைகள், விவாகரத்து, வளர்ந்த குழந்தைகளைப் பற்றின முதியோர்களின் கவலை, நோயாளிகள், குழந்தைகளின் நம்பிக்கை என்று அனைத்துப் பருவ காலங்களையும் அதனைக் கடந்து வந்தவர்கள் ஒரு சமுதாயமாக எதிர்வரும் பிரச்சினைகளைச் சமாளிப்பதும் "இஃகிகை" வாழ்க்கை முறை என்பது இப்படியாகத் தான் இருக்கும் என்று தோன்றியது.








ஃபேஸ்புக் பதிவு

அவனுக்குத் தேர்வுகள் ஆரம்பிக்க எனக்கு எக்ஸாம் ஃபீவர் வந்துடுது. கொஞ்ச நேரம் விளையாடிட்டு வர்றேன்னு ஓடிப் போனவன் மூச்சிரைக்க ஓடி வந்து மடக் மடக்குன்னு தண்ணிய குடிச்சிட்டு திரும்பி பார்க்குறதுக்குள்ள கதவு மூடுற சத்தம் மட்டும் தான் கேட்குது. நாளைக்குப் பரிட்சைய வச்சுக்கிட்டு எங்க இவன்ன்னு கடிகாரத்தை பார்த்தா, வேர்க்க விறுவிறுக்க, அம்மா, பசிக்குது, தோசை வேணும்னு சாப்பிட உட்கார்ந்துடறான். அப்ப கூட, வடிவேலு மாதிரி, "நாளைக்குப் பரீட்சை..."

"ஆமா, ரெண்டு இருக்கும்மா ? நீ ஏன் டென்க்ஷன் ஆற?"

ஞே!

"என்ன என்ன பாடம்னாவது தெரியுமா?"

"ஒ! தெரியுமே!"

"ம்ம்ம். பெரிய விஷயம் தான்!"

"இங்கிலீஷ்ல படிக்கிறதுக்கு ஒன்னுமே இல்ல. மேத்ல படிக்கிறதுக்கு என்ன இருக்கு?"

😐😐😐

ஒரே நாள்ல ரெண்டு பரீட்சை வச்சா சுப்பிரமணி தான் என்ன பண்ணுவான்? பாவம்! எழுதி எழுதி களைச்சுப் போய் தூங்கி தூங்கி எந்திரிச்சு படிக்க விட்டுருந்த லீவெல்லாம் முடியறப்ப ஏதோ போனா போகுதுன்னு ஒரு பார்வை.

"எப்படிடா எழுதின?"

"நல்லா எழுதின மாதிரி தான் தோணுச்சு!"

"அப்படின்னா?"

"மார்க் வந்தாதான்ம்மா தெரியும்."

"அப்ப எனக்கும் தெரியும். கேட்டா எப்படி பதில் வருது பாரு!"

"இப்ப ரெண்டுநாள் லீவு. ஜாலி!"

"படிக்கத்தான?"

"நாளைக்கு என் ஃப்ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வர்றாங்க?"

"எதுக்கு?"

"விளையாட?"

"விளையாடவா? படிக்க இல்லியா?"

"ஜெர்மன்ல படிக்க ஒன்னுமே இல்லையே?!"

"ஞே!"

"அதுக்கப்புறம் வர்ற கெமிஸ்ட்ரிக்கும் உனக்கும் தான் ஏகப்பொருத்தமாச்சே! அதையாவது படிக்கறதா உத்தேசம் இருக்கா?"

"ஆமா, அதைப் படிச்சு தான் ஆகணும்."

"ஏதோ ஒரு பாடத்தையாவது படிக்கணும்னு தோணுச்சே? வா, வந்து படி."

புஸ்தகத்தை திறந்து வச்சுட்டு ரோபோ சிட்டி மாதிரி ஸ்கேன் பண்ணி பக்கத்தை திருப்பறான்!

"என்னடா பண்ற?"

"படிக்கிறேன்."

"இப்படியா?"

ரெண்டு மணி நேரம் தான். "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா! டயர்டா இருக்கு. ரிலாக்ஸ் பண்ணப் போறேன்!"

அடுத்த நிமிஷம், விளையாட ஓடிப் போயாச்சு!

"கெமிஸ்ட்ரி எக்ஸாம் எப்படி எழுதின? ஈஸியா இருந்துச்சா?"

பதில்: "pretty solid"

இனி ரெண்டு மாசத்துக்கு காலை அலாரம் அடிக்காது. ஓடிப் போய் பஸ்ஸை மறியல் பண்ணத்தேவையில்லை.
Hooray! hooray! it's a holi-holiday
What a world of fun for everyone, holi-holiday
Hooray! hooray! it's a holi-holiday
Sing a summer song, skip along, holi-holiday
It's a holi-holiday...

இப்படியாகத்தான் சுப்பிரமணியின் பள்ளி நாட்கள் இருந்தது. இன்றோ, கல்லூரியில் அவன் என்ன படிக்கிறான் எவ்வளவு மதிப்பெண்கள் என்று ஒன்றும் தெரியவில்லை 😓😓😓



Tuesday, June 21, 2022

Happy International Yoga Day

My daughter's article on 'sun salutations' that was published in a popular fitness magazine. She trained for a few months to do a 108 sun salutations the same 'yoga day' in 2015. I am glad that it was not a one-time drive for her but that she continues to do yoga at least five days a week. 

Here is her article:

June 21st, 2015 marked the UN’s first international day of yoga. My instagram was flooded with contorted bodies and spiritual wishes to celebrate the occasion. By 11.30am, I had begun to wiggle my toes and fingers out of a twenty-minute savasana, or corpse pose, after spending an hour moving through 108 sun salutations.

108 repetitions of surya namaskara, a very powerful and energizing sequence of asanas. Inhale, your arms lift; exhale, they reach to the floor. Inhale to lengthen your spine, and exhale into chaturanga. Inhale to Bhujangasana, cobra pose, and exhale into adho mukha svanasana, down dog. Inhale, strengthen your legs, extend your spine. Exhale, pull your ribcage in, and move forward into a forward bend. Inhale to lengthen the spine once more, exhale to lengthen the legs. Inhale up, arms reaching overhead, and exhale to bring the palms in front of the heart. Repeat, 107 times more. Repeat, through the heat collecting in muscles of your arms, the core that is held tightly to the spine, the legs extending back and forward.

You’ll find thousands of articles and books that reiterate the “journey of yoga” — how it changes the mind and body, and challenges your awareness. These are movements that have changed individuals. This is what breaks the shell of depression and the negativity of eating disorders.

Yoga, contrary to a very ignorant popular opinion, is not all relaxation and stretching. It is a process of development. Cultivating strength in your arms to catch you when life throws you off of a cliff. Creating a sense of balance in your body so you create one in the midst of chaos.

It is pulling in your core and straightening your back to protect what’s vulnerable. It is matching your breath to your movement so you can link together the random pieces of your life.

108 sun salutations is not a gentle coaxing into a blissful state of mind. The past three weeks of building up to this day were daily arguments with myself to push through ten more, that the last five of forty repetitions was completely in the realm of possibility. I had to push to find comfort in the seemingly unbearable heat so much movement generates; I had to push to find the stamina to fight from ending it after number fifty-six.

So the past three weeks taught me a lot about the seemingly simple sequence every one knows about yoga. Chaturanga becomes far easier when your weight shifts forward, not just down. Pulling my ribs in and up was possible when I imagined my anatomy performing it, rather than just exerting force. I found more strength in each of my outstretched fingers holding me up throughout each pose than I ever gave them credit for.

108 sun salutations was exactly how many repetitions I needed before I was able to understand that life becomes easier when thinking forward, moving forward, and being forward. That my mind is the biggest obstacle and my imagination the biggest strength in accomplishing something that seemed odd or out of reach. That I have probably spent the last twenty years underestimating myself in so many ways.

Yoga is not about relaxation and stretching. Yoga is a link — between your breath and your movement, the mat and your life, the way you think and the way things are.

ஹேப்பி நேஷனல் செல்ஃபி டே

இன்று ஜூன் 21, ஹேப்பி நேஷனல் செல்ஃபி டே 😎😎😎

புகைப்படங்களில் திரும்பிப் பார்த்தபடி சிரிக்கிறார்கள்
கையில் முகம் ஊன்றிச் சிரிக்கிறார்கள்
மேலே பார்த்துச் சிரிக்கிறார்கள்
தலை குனிந்தபடி சிரிக்கிறார்கள்
காமிராவைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்
கும்பலில் சிரிக்கிறார்கள்
கண்ணை மூடிச் சிரிக்கிறார்கள்
எவ்வளவு நல்லவர்கள்
எவ்வளவு புத்திசாலிகள்
 
-பேயோன்
 






                                                 


கோடைக்கால காற்றே


மதுரையில் பிறந்து வளர்ந்து விட்டதாலோ என்னவோ நாம் கோடையை கொண்டாடுவதில்லை. வெயில் நம்மை வாட்டி வதைத்துவிடுமே என்ற பயத்தில் வெறுப்புடனே இருந்து விட்டு வட அமெரிக்காவில் இப்பொன்னாளுக்காக மக்கள் ஏன் காத்திருக்கிறார்கள் என்று வியந்ததுண்டு!

மழைக்காலம் முடிந்து நீண்ட பகற்பொழுதாக கோடைக்காலம் இன்று முதல் ஆரம்பமானாலும் மழையின் வாசம் அவ்வப்பொழுது 'சிறுசிறு' தூறல்களாக, 'சிலுசிலு' மழைச்சாரல்களாக மண்ணை நனைத்துச் செல்லும். மழை தந்த உற்சாகத்தில் புத்துயிர் பெற்ற மரங்கள், பூத்த மலர்கள் இனி காய்களாக, கனிகளாக! புது உயிர்களும் இவ்வுலகைக் காண, மரங்களில் பறவைகளின் குதூகல சங்கீதம் மென்மேலும் கேட்கும். வண்டுகளும், தேனீக்களும், பட்டாம்பூச்சிகளும் மலர்கள் தாவும். துள்ளியோடும் முயல்களும், அணில்களும், மான் கூட்டங்களும் கொண்டாடும் இனிய காலம்!
 
இனி வரும் நாட்களில் காலை தொடங்கி மாலை வரை தெருவெங்கும் ஓடியாடும் குழந்தைகளின் விடுமுறைக் கொண்டாட்டம் இனிதே ஆரம்பமாக, அவர்களுடன் களிப்புற விளையாடி மகிழும் பெற்றோர்கள் பூங்காக்களுக்கும், ஆறு, குளங்களுக்கும் சென்று குழந்தைகளுடன் குழந்தைகளாய் குதூகலித்து இரவில் மறையும் சூரியனை வழியனுப்பி விட்டு களைப்புடன் வீடு திரும்பும் மனம் ஏங்கும் மீண்டும் ஒரு நன்னாளுக்காக!
 
ஓடுபவர்கள், நடைபயிலுபவர்கள், மீன் பிடிப்பவர்கள், படகுகளில் உல்லாசமாக செல்பவர்கள் என்று எங்கும் மக்கள் கூட்டம்! அதுவும் கோடை வார இறுதிகளில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலுடன் படகுகளையும் சுமந்து செல்லும் வண்டிகளும், அனைத்து வசதிகளுடன் கூடிய விடுமுறை வாகனங்களும் இயற்கையோடு இணைந்த முகாம்களை முற்றுகையிடும்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரிய ஒளியைப் பெற அரை நிர்வாணமாக பூங்காக்களில், கரையோரம் என்று படுத்துக் கொண்டும், காதலர்கள் தத்தம் காதலியரோடு அளவளாவிக் கொஞ்சிக் கொண்டும், குழந்தைகள் மணல் வீடு கட்ட, பெற்றோர்கள் சூரியக்குளியல் போட...இது ஒரு இனிய காலம்.

நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பெரும் விருந்துகள் கோலாகலமாக சிரிப்பும் உற்சாகமுமாய் காற்றில் வலம் வரும். கூடவே சுட்ட கறியின் வாசமும்ம்ம்ம்

பெட்டிகளுடன் விமான நிலையத்துக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டமும் காத்திருக்கும் அருமையான காலம்!

அடுக்கடுக்காக உடைகள் உடுத்திய காலங்கள் சென்று அழகிய ஆடைகளுடன் தேவதைகள் உலா வரும் கோடைக்காக காத்திருந்து கொண்டாட நானும் தயாராகிறேன்.

கோடைக்கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதைக் கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்ம்ம்ம்ம்
லல லால லாலா ...

இன்றைய தினம் - ஜூன்டீன்த்

ஜூன் 19 நாளை "ஜூன்டீன்த்" என தேசிய விடுமுறையாக 2021ல் அதிபர் ஜோ பைடன் அறிவிப்பதற்கு முன்னரே 2020ல் நியூயார்க் மாநில கவர்னர் குவோமோ அறிவித்து விட்டார். அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழித்த தினமாக இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அப்படி முற்றிலும் ஒழிந்து விட்டதா? பெயரளவில் தான் என்பது அதிபர் முதல் அனைவருக்கும் தெரியும். இனவெறி வெள்ளையர்களின் மனதில் இருக்கும் நிறபேதம் இன்றும் மாறவில்லை என்பதை சமீபத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அறிவுறுத்துகிறது. இந்த நிலைமையும் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விடுமுறை நாள் அறிவிப்பே இத்தனை வருடங்களுக்குப் பிறகு தான் சாத்தியமாகியிருக்கிறது! என்ன தான் அமெரிக்கா ஒரு முன்னேறிய நாடக தன்னை பறைசாற்றிக் கொண்டாலும் மூட நம்பிக்கைகளும், பெண்ணடிமைத்தனமும், நிறபேதங்களும் கொண்ட பிற்போக்கு நாடு என்பதை சமீப கால நடப்புகள் மூலம் உலகமும் அறிந்து கொண்டு தான் வருகிறது.

சில மாநிலங்களில் பள்ளிப்பாடப் புத்தகங்களில் இருந்து இந்த அடிமைத்தனத்தைப் படிப்பதால், ஆசிரியர்கள் அடிமைகளைப் பற்றிப் பேசுவதால் மாணவர்கள் வருந்துவார்கள் என்ற சில்லறைக் காரணிகள் கூறப்பட்டாலும் உண்மையான வரலாற்றை மறைத்து விடத்துடிக்கும் வெள்ளையர்களின் சர்வாதிகார போக்கே இதில் தென்படுகிறது. கடந்த கால வரலாறை முறையாக அறிதலே நேர்மையான சமூதாயத்தை உருவாக்கும். பொய்யும் புரட்டும் அவரவர் வசதிக்காக மட்டுமே. அலாஸ்கா, அரிசோனா, ஃபுளோரிடா, டெனிஸீ, விஸ்கான்சின் மாநிலங்களில் இந்நாளுக்கான விடுமுறையும் இல்லை. இதுதான் அமெரிக்கா.

1863ல் அடிமைகளே இருக்க கூடாது. அனைவருக்கும் விடுதலை வழங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டாலும் டெக்சாஸ் மாநிலத்தில் 1865ல் தான் கடைசி அடிமைக்கூட்டம் விடுதலை பெற்றது. வலிகள் நிறைந்த இந்த வரலாற்று நாளைக் கொண்டாடத்தான் இந்த விடுமுறை தினம்.

கறுப்பர்களுக்காக கொண்டாடப்படும் தினம் என்று கூறினாலும் இந்த விடுமுறையிலும் அவர்களில் பெரும்பாலோனோர் வேலைக்குச் சென்ற தினமாக தான் இருந்திருக்கும். அவர்கள் சார்பில் மற்றவர்கள் விடுமுறையைக் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை😔

இந்த நாளில் கறுப்பின மக்களின் அடிமை வரலாற்றை நம் குழந்தைகளுடன் உரையாடலாம். அதன் தொடர்பான ஆவணப்படங்களைக் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கலாம். வெறுப்புணர்வுக்குப் பதிலாக நல்ல புரிதலுணர்வு வர அமெரிக்காவில் வளரும் நம் குழந்தைகளும் அமெரிக்காவின் இருண்ட கால வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம்.


Friday, June 17, 2022

கற்றதும் பெற்றதும்

வாழ்க்கையில் முன்னேற சில அறிவுரைகள், வாழ்க்கைப்பாடங்கள், வழிகாட்டிகள் அவசியம். நாம் தடுமாறும் போதெல்லாம் நல்ல துணையாக அது வழிகாட்டும். இன்று படித்ததில் பிடித்த என் வாழ்க்கையில் நான் கடைபிடிக்கும் சில விதிமுறைகள்.

1. தோல்வி என்பது நிரந்தரமே. அதனைக் கண்டு துவளாமல் மீண்டும் மீண்டும் போராடுவதில் தான் வெற்றி என்பதை பல நேரங்களில் வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது.

2. இறந்த காலத்தின் கசப்பான அனுபவங்களை, நிகழ்வுகளை ஒரு கட்டத்தில் விட்டு விட்டு அல்லது ஏற்றுக் கொண்டு மீண்டும் முதலில் இருந்து ஒரு புதிய துவக்கம் நிம்மதியைத் தரும். அல்லது புதிய பாடத்தைக் கற்றுத் தரும். இது மனிதர்களுக்கும் பொருந்தும்.

3. நம்முடைய பழக்க வழக்கங்களே நம் வாழ்வைச் செதுக்கும். அதனால் நல்ல வழக்கங்களை மேற்கொள்வது நல்லது. அனுபவத்தால் உணர்ந்த உண்மை. அது மட்டுமல்ல, நம் குழந்தைகளும் அதை நம்மிடமிருந்து கற்றுக் கொள்வதால் பெற்றோராக நாம் இன்னும் அதிக விழிப்புணர்வுடன் பின்பற்ற வேண்டிய ஒன்று.

4. ஒன்று செய்ய முடிவெடுத்து விட்டால் எப்பாடுபட்டாவது அதைக் கற்றுக் கொண்டு முடிக்க வேண்டும். முதல் விதிமுறையை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இது வேலை செய்யுமிடத்தில் அதிகம் நான் உபயோகிப்பது. அதனாலாயே எனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

5. எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது. நம் நிம்மதிக்கு இது தான் மிகவும் அவசியம். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நேரிடையாகவே இப்படிப்பட்ட மனிதர்களிடம் உங்கள் எண்ணங்கள் சரியில்லை. நீங்களாகவே விலகிச்சென்று விடுங்கள் என்று சொல்லும் தைரியம் வந்துள்ளது. எனக்கும் நிம்மதியாக இருக்கிறது.

6. அடுத்தவருடன் ஒப்பீடு செய்து கொள்ளாதீர்கள். ஒப்பீடு செய்வதால் இருக்கும் நிம்மதியும் கெட்டு குடும்பம் சிதறி விடும். பலரும் கற்றுத் தந்த பாடம். நல்ல வேளை! இந்த தீய குணம் என்னிடத்தில் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்கள் செல்வாக்கில், செல்வத்தில் சுழன்று கொண்டிருந்தாலும் என் மன நிம்மதி மட்டுமே எனக்கு முக்கியம் என்று நினைத்ததாலோ என்னவோ எனக்குப் பிடித்த செயல்களைச் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. என்னை நானே எப்பொழுதும் புதிய முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்வதும் அடுத்தவரைப் பற்றின சிந்தனையை என்னுள் வளர விடாததும் என் வாழ்க்கையைச் சுகமாக அனுபவிக்க முடிகிறது.

7. வேலைக்குச் செல்வது பணம் சம்பாதிக்க தான். அதற்காக எப்பொழுதும் பணிச்சுமையுடன் அலையாமல் சேமிப்புடன் நமக்கான வாழ்க்கையை வாழவும் முனையும் பொழுது எல்லாம் சுகமே. நம்மில் பலரும் சேமிக்க வேண்டும் என்று நம் சுகங்களைத் தியாகம் செய்வதால் மன அழுத்தம் கூடுமே ஒழிய, குறையாது. அவ்வப்பொழுது நமக்கும் ஓய்வும் தனிமையும் அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றும் செய்யாமல் "சும்மா இருக்க"வும் கற்றுக் கொள்ள வேண்டும். குடும்பம் நல்லது தான். ஆனால், குடும்பம் மட்டுமே வாழ்க்கை அல்ல. தனி மனிதனின் சுக, துக்கங்களும் அதன் புரிதலும் அவசியம்.

8. ஏதாவது ஒன்றைப் புதிதாக கற்றுக் கொண்டே இருப்பது நல்லது. அது பணி சார்ந்ததாகவும் இருக்கலாம் அல்லது அவரவர் விருப்புச் சார்ந்த எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நல்ல பொழுதுபோக்கும் மகிழ்ச்சியையும் தரும்.

9. நமக்குத் தெரிந்ததை அடுத்தவருக்கும் கற்றுத்தரலாம். அதன் மூலம் மேலும் பல நல்ல விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும். இதுவும் என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

10. பணிவு அவசியம். நாடகத்தனமாக இல்லாது உண்மையான நேர்மையான பணிவு எக்காலத்திற்கும் பொருந்தும்.

11. ஆக்கபூர்வமான விமரிசனம் நல்லது. நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ள பலவகைகளிலும் அது உதவும். என்ன காது கொடுத்துக் கேட்கும் பழக்கம் இருக்க வேண்டும்.

12. நம்மை உயர்த்தினவர்களை என்றும் மறக்க கூடாது. "நன்றி மறப்பது நன்றன்று" என்று திருவள்ளுவர் சொல்லியதைப் படித்த நாம் வாழ்க்கையில் மறக்கக் கூடாத நல்ல பண்பு.

13. செய்யும் எந்த செயலையும் மனம் விரும்பிச் செய்ய வேண்டும். அது பிடிக்காத வேலையாக இருந்தாலும் சரி, சமையலாக இருந்தாலும் சரி. ஒரு செயலைப் பிடித்துச் செய்கையில் உடலும் மனமும் ஒன்று சேர மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கும். அனைத்திற்கும் மனமே காரணம்.

14. நம்மால் முடியும் என்ற நம்பிக்கை தான் வாழ்வின் ஆதாரம். யாரும் யாரையும் நம்பி இருப்பதில்லை. நமக்கு நாமே என்று உணரும் தருணம் வாழ்வின் பொன்னான தருணம்.

15. நாம் முட்டாள்கள் என்று உணர்ந்து விட்டால் போதும். பல பிரச்னைகள் குறைந்து விடும்.

இனிது இனிது இந்த வாழ்க்கை தான் இனிது. ஏதோ பிறந்து விட்டோம் என்று வாழாமல் நம்மால் முடிந்த அளவு உபகாரமாக வாழ்ந்து மகிழ்ச்சியுடன் இருந்து விட்டால் போதும். இது தான் இதுவரையில் நான் கடந்து வந்த பாதையில் கற்றதும் பெற்றதும். இனியும் வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களைக் கற்றுக் கொள்ள விழைவேன். விழைகிறேன்.



















Wednesday, June 15, 2022

அன்புள்ள அப்பா

ஒரு முறை 'நீயா நானா'வில் அப்பாக்கள் Vs மகன்கள் என்ற சுவாரசியமான விவாதம் நடந்தது. மகன்கள் அனைவரும்அவரவர் அப்பாக்கள் மீது ஒரே மாதிரி குற்றசாட்டுக்கள் தான் வைத்தார்கள்.

"எப்ப பாரு திட்டுவார்."

"செலவுக்குப் பணம் கேட்டா கோவம் வரும்."

"அன்பா பழக மாட்டார். அதனால தான் அம்மாகிட்ட எல்லாம் பேசுறோம்." இப்படி போய்க்கொண்டிருந்தது அவர்களின் வாதம்.

அப்பாக்களும் மகன்கள் மீது ஒரே மாதிரியான குற்றச்சாட்டுக்களைத் தான் வைத்தார்கள்.

"ஒன்னும் சொல்ல மாட்டான். அவங்க அம்மாகிட்ட தான் எல்லாத்தையும் சொல்லுவான். சொல்ற பேச்சைக் கேட்க மாட்டான். எதிர்த்துப் பேசுவான். அன்பா நாலு வார்த்த பேசினதில்ல."

இதில் ஒருவர் "எல்லாத்துக்கும் காரணம் அவன் அம்மா தான் சார்." என்று ஒரு போடு போட்டார்.

உண்மையாக இருக்குமோ என்று எனக்கே தோன்றியது. பிள்ளை நம் பேச்சைக் கேட்டு நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அம்மாக்கள் அவர்களைத் தங்கள் சொல்பேச்சு கேட்பவர்களாக வளர்க்கிறார்களோ? மகன் தன் மீது மட்டுமே அதிக பாசம் கொண்டுள்ளவனாக இருக்க வேண்டும் என்ற உளவியல் காரணமாக கூட இருக்கலாம்.

என் மகன் விளையாட்டாக பேசியதைக் கணவரிடம் கூறிய போது "அவன் ஏன் என்கூட இந்த மாதிரி விளையாட்டுத்தனமாக பேசுவதில்லை?" என்று வருத்தப்பட்டார்.

யோசித்துப் பார்த்ததில் அதில் சிறிதளவு உண்மையும் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.

அப்பாவுடன் பேசும் பொழுது கொஞ்சம் மரியாதை, பயம் கலந்த உணர்வு தான் மேலோங்கி இருக்கிறது. இதே அம்மாவிடம் பேசும் பொழுது ஒரு நண்பனிடம் பேசுவது போல அதிக உரிமையுடன் குழந்தைகள் அதுவும் மகன்கள் பழகுகிறார்கள்.

இதை மாற்ற வேண்டுமென்றால் அப்பாவும் மகனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சுப்பிரமணி எதைக் கேட்டாலும் "நீயே அப்பாவிடம் கேள்." என்று சொல்ல, அவனும் ஈஷ்வருடன் பேசிக் கொண்டிருந்தான்.

இருவரின் புரிதலில் கொஞ்சம் நெருங்கி இருந்தார்கள். அவனும் சரளமாக அப்பாவுடன் பேச, ஈஷ்வருக்கும் மகிழ்ச்சி. சேர்ந்து நடைபயிற்சிக்குச் செல்வது, இசை வாத்தியங்களை இசைப்பது என்று நிலைமை மாறியிருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. 

பெரும்பாலான அப்பாக்களுக்குத் தங்கள் மகன்கள் நெருக்கமாக தங்களுடன் அளவளாவ வேண்டும் என்பதே விருப்பம். மகன்களுக்கும் அதே எண்ணம் இருந்தாலும் ஏதோ ஒரு மனத்தடை. மகன் தன்னைப் போல் ஆகிவிடக்கூடாது என்று நினைக்கும் அப்பாக்கள் தங்களையும் அறியாமல் சில விஷயங்களில் கூடுதல் அழுத்தம் கொடுப்பதை மகன்கள் புரிந்து கொண்டால் எல்லாம் சுபம். தன் அப்பாவிடம் தான் எதிர்பார்த்த ஒன்றை தன் மகனுக்கு கொடுத்து விட  துடிக்கும் தந்தை மனது மகன்களுக்குப் புரிவதில்லை. அதனால் தான் உறவில் இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. தந்தை-மகன் உறவின் அருமை நெருங்கிப் பழகும் இருவருக்கும் மட்டுமே புரியும். இருவரும் அடிமனதில் ஒருவருக்கொருவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தாலும் கொஞ்சம் விலகியே இருக்கும் அன்பை உணர்ந்து அப்பாக்களுடன் மகன்கள் பழக அம்மாக்கள் தான் வழிவிட வேண்டும் என்பது புரிந்தது.

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.  


விக்ரம்

எழுத்தாளர் சுஜாதாவின் புதினத்தைத் தழுவி 1986ல் வெளிவந்த "விக்ரம்" திரைப்படம் பல காரணங்களுக்காக வெற்றிப்படமாக அமைந்திருந்தது. ராஜ்கமல் தயாரிப்பில் கமலஹாசன் கதாநாயகனாக தமிழுக்குப் புதிதான கதைக்களத்தில் இளையராஜாவின் இசையில் பாடல்களும் பிரபலமாகி 100 நாட்களைத் தாண்டி லாபகரமாக ஓடிய படம். 

தற்பொழுது கமல் நடித்து அதே பெயரில் வெளிவந்துள்ள படத்தை மொத்தமே 7 பேருடன் சேர்ந்து அமெரிக்காவில் பார்த்த பொழுது "நாம் தான் தெரியாமல் மாட்டிக்கொண்டோமோ" என்றிருந்தது. பாவம் எனக்காக ஈஷ்வரும் படம் பார்க்க வந்திருந்தார். வீட்டிலேயே வசதியாக படங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு அரங்கத்தில் பார்ப்பது வித்தியாசமாகவே இருக்கிறது. முதலில் இந்த அமெரிக்க திரையரங்கு உரிமையாளர்களிடம் இந்திய படங்களைத் திரையிடுகையில் ஒலியின் அளவைக் குறைத்து வைக்கச் சொல்ல வேண்டும். படம் முடிந்து வெளிவருகையில் காது சவ்வு கிழிந்து விட்டது போன்ற பிரமை😒

இந்தப் படத்தையா "அருமை. ஆஹா! ஓஹோ!" என்று எழுதித்தள்ளினார்கள்? தமிழ்த் திரையுலகம் தான் என்ன செய்யும்? கதைப்பஞ்சம்? தேவைக்கு மேல் அதிகமாக நடிக்கும் நடிகர்கள், தேவையற்ற 'பன்ச்' வசனங்கள், அவசியமில்லாத ஆடம்பர காட்சி களேபரங்கள் என்றே பழகி விட்டிருக்கிறது கோலிவுட். ஒரு படத்தை வித்தியாசமாக இயக்கி விட்டால் அந்த இயக்குனரைத் தலை மீது தூக்கி கொண்டாடி கடைசியில் ரஞ்சித் மாதிரி ஆட்களிடம் நாம் மாட்டிக் கொண்டு விடுகிறோம். இப்பட இயக்குநரை ஒன்றும் சொல்ல முடியாது. இது கமல் படம். அவ்வளவு தான். போதாக்குறைக்கு விஜய் சேதுபதி எனும் பெரிய கொடிய வில்லன்! வில்லனுக்கு மூன்று மனைவிகள் என பெரிய குடும்பம். இதில் என்ன குறியீடு இருக்கிறதோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். கடவுள் தேசத்திலிருந்து ஃபகத் ஃபாசில். கொடுத்த பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு. இப்படித்தான் கதை போகும் என்று எளிதாக கணிக்க முடிகிற திரைக்கதை. ஆரம்ப காட்சிகளிலே கமல் இறந்து விட்டால் அப்புறம் படம் எப்படி இருக்கும்? கமல் வருவார் என்று தெரிந்து விடுகிறது. 

விஜய் நடித்த 'திருப்பாச்சி' படக்கதை  தான். அங்கே ஒரு அண்ணன் தன் தங்கையின் நகர வாழ்க்கையில் வில்லன்களே இருக்க கூடாது என்று அடித்து நொறுக்குவான். இங்கே தன் பேரன் போதைமருந்து கும்பலிடம் சிக்காமல் இருக்க வில்லனை அடித்து நொறுக்குவதாய் 'உல்ட்டா'வாக்கி இருக்கிறார்கள். விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார்கள் என்று கார்த்தி குரலையும் கடைசிக்காட்சியில் கத்திக்கொண்டே சூர்யாவும் இரண்டாவது பாகத்திற்கு அச்சாரம் போட்டு பயமுறுத்திச் சென்றிருக்கிறார்கள். வேகமாக மூச்சிரைக்க பேசினாலே கைதட்டும் கூட்டம் இருக்கும் வரை இம்மாதிரியான படங்கள் ஓடும்.

அரசியல்வாதி, காவல்துறை என்றுமே ஊழல் பெருச்சாளிகள் தான் என மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதில் பெரும் வெற்றி கண்டது இம்மாதிரி திரைப்படங்களே. பழைய விக்ரம் படப்பாடல் ஓரிரு இடங்களில் வந்தது. அதைத்தவிர வேறு எந்த தொடர்பும் இரு படங்களுக்கும் இல்லை. கமல் பாடித்தான் ஆகவேண்டும் என்று என்ன நிர்பந்தமோ 😒 அப்பாடலில் இருக்கும் குறியீடு என்று சமூக வலைதளங்கள் விவாதித்தது வேறு கதை. கமல் இன்னும் நடிக்கிறார் என்பது அவரது ரசிக சிகாமணிகளுக்கு  கொண்டாட்டமான விஷயம் தான். ஆனால், உலகத்தரம், வேற லெவல், அப்படி இப்படி என்று அளக்காமல் இருக்கலாம். 

எப்படியோ கமலே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது இப்படம். மற்றபடி நல்ல பொழுதுபோக்குப் படம் என்றும் சொல்லும் அளவிற்கு கூட இல்லை. சண்டைக்காட்சிகள், பெரிய நடிகர்கள் போதும் என்று நினைத்து விட்டார்களோ? வன்முறைக்காட்சிகள் எல்லாம் 'வெறி'த்தனமாக இருக்கிறது. ஏன் இப்படி எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை!

நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களைக்  கண்டுகளிக்க தமிழ் சினிமா ரசிகர்களாகிய நாமும் வளர வேண்டியிருக்கிறது😞

'விக்ரம்', பல வருடங்களுக்குப் பிறகு கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மற்றவர்களுக்குத் திண்டாட்டம்.


Tuesday, June 14, 2022

அன்புள்ள அப்பா


ஆல்பனிக்கு குடிபெயர்ந்த சில மாதங்களில் வேலை நிமித்தமாக கலிஃபோர்னியா செல்ல வேண்டிய நிர்பந்தம் கணவருக்கு! நிவியையும், வயிற்றில் சுப்பிரமணியுடன் இருந்த என்னையையும் விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை. ஆனால் ஹெச்1பி விசாவைத் தக்க வைக்க வேறு வழியில்லை. போகத்தான் வேண்டும். 

"அப்பா போய்த்தான் ஆகனுமாம்மா? இங்கேயே ஏதாவது வேலைக்குப் போகலாமே" அழாத குறையாக கேட்டுக் கொண்டே இருந்தாள். இந்த அம்மாவுக்கு கோபம் வேறு அடிக்கடி வரும். 'படிபடி' என்று அனத்துவாளே செல்ல மகளுக்கோ அப்படி ஒரு கவலை!

"நான் தான் இருக்கிறேனே! உன்னைய நல்லா பார்த்துப்பேன்."

 எவ்வளவு தான் ஆறுதலாகச் சொன்னாலும் அவள் கவலையாகவே இருந்தாள். இருக்காதா பின்ன? சேர்ந்து புத்தகங்கள் வாசிக்க, விளையாட பூங்காவிற்கு அழைத்துச் செல்ல, கீபோர்டு இசைக்க என்று சகலமும் அப்பாவுடன் தான் அவளுடைய பொழுதுகள். சாப்பாடு, வீட்டுப்பாடம், குளியல், கடைகளுக்கு வருவது, அவ்வப்பொழுது சேர்ந்து விளையாடுவது என்று என்னுடன்.

"ஐ வில் மிஸ் யூ டாட்" என்று அவரை விமானமேற்றி விட்டு அமைதியாக என் விரல்களைப் பிடித்துக் கொண்டு வருபவளைப் பார்த்து எனக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. இனி கோபம் வந்தாலும் மகளுக்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீடு திரும்பியவுடன் கையை மேலும் இறுக பற்றிக் கொண்டாள்.
 
"உள்ளே போக பயமா இருக்கும்மா."

என்ன பயம்?

"அப்பா இல்லல்ல. அதான்!"

அடக்கடவுளே! "ஏன்? நான் இருக்கேனே?"

அதற்குப் பிறகு வந்த நாட்களில் நான் எங்கே இருக்கிறேனோ அங்கே தான் இருப்பாள். தனியாக எங்கும் செல்ல பயம். அப்பா இல்லாத தனிமை தந்த கவலை. முடிந்தவரை நான் சகலமுமாக இருக்க, சிறிது நாட்கள் ஆயிற்று அவளுடைய பயங்கள் விலக. காலையில் டே கேரில் அவளை விட்டு விட்டு வேலைக்குச் சென்று மாலையில் அழைத்து வரும் ஒவ்வொரு நாளும் தவறாமல் கேட்பாள்.
 "அப்பா எப்போம்மா வருவாரு?"

தினமும் தூங்கப் போகுமுன் (கலிஃபோர்னியாவில் அப்பொழுது தான் மாலை நேரமாக இருக்கும்) அப்பாவிடம் பேசி விட்டுத்தான் தூங்குவாள். நான் வயிற்றில் குழந்தையுடன், வீடு, அலுவலகம், கடைகள் சென்று வர, இவளை அழைத்துக் கொண்டு நூலகம், பூங்கா, நண்பர்கள் வீடு என்று அப்பா இல்லாததை நினைத்துக் குழந்தை கவலைப்படக் கூடாதே என்று முடிந்தவரை அவளுடனே இருந்தேன். சமயங்களில் அலுவலக வேலை இரவு வரை நீளும் பொழுது வீட்டிற்கு வந்து நிவியையும் அழைத்துச் சென்று விடுவேன். தூக்கக் கலக்கத்தில் அவளும் பொறுமையாக இருந்தாள். டே கேர், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வரும் காது, தொண்டை வலி, காய்ச்சல் மாதம் தவறாமல் வர ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் அவளுடைய அழுகையினூடே அப்பா எப்பம்மா வருவார் என்று தான் கேட்பாள். 

'மாங்கு மாங்கு' என்று இங்கு ஒருத்தி தூங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எப்பொழுது பார்த்தாலும் அப்பா அப்பா என்று புலம்புகிறாளே என்று கோபம் வந்தாலும் அவளின் மனவேதனை புரியாமல் இல்லை. சீக்கிரம் வந்து விடுவார். கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லி கணவரிடமும் "வேறு வேலை பார்த்து ஊருக்கு வந்து விடுங்கள். நிவி மிகவும் ஏங்கிப் போயிருக்கிறாள்" என்று அவரும் வருத்தப்பட்டு...

ஒரு வழியாக ஆறேழு மாதங்களுக்குப் பிறகு ஈஷ்வருக்கும் நியூஜெர்சி மாநிலத்தில் வேலை கிடைக்க, வார இறுதிகளில் வீடு வர...கொஞ்சம் சமாதானம் ஆனாள். முற்றிலுமாக ஆல்பனி வந்து சேர்ந்தவுடன் தான் பழைய கலகலப்புடன் வலம் வர ஆரம்பித்தாள்.

மீண்டும் அப்பாவுடன் சேர்ந்து புத்தங்கள் வாசிப்பது, கீ போர்டு, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது என்று அவர்களும் கைக்குழந்தையுடன் நானும் என்று நாட்கள் வருடங்களாகி அப்பாவைப் போலவே ஆங்கில இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டு வாசிப்பது விவாதிப்பது என்று இன்று வரை தொடர்கிறது.

இப்பொழுது படித்து முடித்து வேலைக்குச் சென்று விட்டாலும் அவள் வீடு வந்து சேரும் வரை அப்பாவும் காத்திருக்க, வீட்டுக்கு வந்தவுடன் அன்று நடந்தவைகளைப் பேசி, என்ன சாப்பிட்டாள் என்ற விவரம் வரை கேட்டுக் கொண்டு, "நீங்க போய் தூங்குங்கப்பா" என்று சொன்னவுடன் தான் அப்பாவிற்கும் நிம்மதியாக இருக்கிறது. 

இன்றும் ஆங்கில இலக்கியங்கள், அமெரிக்க அரசியல், நடைமுறைச் சிக்கல்கள் என்று பேசி அலசுகிறார்கள்.

காலம் மாறி விட்டது. இன்று மகளுக்காக அப்பாவின் காத்திருப்புகள்! 
எப்பொழுதும் அன்னையர் தினத்தன்று ஊருக்கு வருபவள் இந்த முறை தந்தையர் தினத்தன்று ஊருக்கு வருகிறேன் என்றதில் ஈஷ்வருக்கு அத்தனை சந்தோஷம்!
 
இருக்காதா பின்ன?

இதைவிட வேறு என்ன பரிசு வேண்டும்?

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...