Wednesday, November 29, 2023

நகரமா? நரகமா?

சொல்வனம் இதழ் 306ல் வெளிவந்துள்ள கட்டுரை.நகரமா? நரகமா?



புலம்பெயர்தல் என்பது மனிதகுலம் தோன்றிய நாளில் இருந்தே உணவு, உறைவிடம், பணி நிமித்தமாக ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு இடம்பெயரும் தொடர் நிகழ்வு ஆகும். அந்த வகையில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இருவகையினர். கல்வி, பணி நிமித்தமாக முறையான ஆவணங்கள் பெற்று அயல்நாடுகளில் குடியேறுபவர்கள் ஒரு வகையினர். நாளடைவில் இவர்கள் நிரந்தர குடியுரிமை பெற்று நன்றாக வசதியுடன் வாழ்பவர்கள். உள்நாட்டுப் போர், இயற்கைப்பேரழிவுகள், அரசியல் மாற்றம், வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இரண்டாவது வகையினர். இவர்களில் சட்ட விரோதமாக, அகதிகளாக குடியேறுபவர்களைக் கையாள முடியாமல் தான் உலகநாடுகள் பலவும் தத்தளித்துக் கொண்டிருப்பது தொடர்கதையாகி வருகிறது. தற்போது அமெரிக்காவும் இந்த குடியேற்றப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாமல் தள்ளாடி வருகிறது.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த பின் ஐரோப்பியாவிலிருந்து வந்திறங்கிய கூட்டம் அமெரிக்காவின் பூர்வகுடிகளைக் கொன்று நிலத்தை ஆக்கிரமித்தது. ஸ்பெயின்,பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாண்ட்ஸ், இங்கிலாந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கிடையே நடந்த கடுமையான போரில் ஆங்கிலேயர்கள் வசம் தான் அமெரிக்கா இருந்தது. இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் ஐரோப்பியர்கள் தான் அதிகளவில் அமெரிக்காவிற்குக் குடியேறினர். 1882ல் முதல் “பொது குடியேற்றச்சட்டம்” இயற்றப்பட்டது. அதன் படி, அகதிகள் (அப்பொழுது கப்பலில் வந்து இறங்கியவர்கள்) ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். குற்றவாளிகள், சுயமாக வேலை செய்ய இயலாதவர்களை நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே முதலில் அனுமதி வழங்கப்பட்டது. 1870 ஆம் ஆண்டில் குடியுரிமைக்கான உரிமை ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கும் நீட்டிக்கப்பட்டது. 1875 முதல் ஆசியாவிலிருந்து அதிகளவில் மக்கள் புலம்பெயர்வதைத் தடுக்க முதலில் சீனர்களின் நிரந்தர குடியேற்றத்தையும் பின் வேறு ஆசிய நாட்டினரின் நிரந்தர குடியேற்றத்தையும் குறைக்க தீவிர கட்டுப்பாடுகளைக் கொண்ட குடியேற்றச் சட்டங்கள் அமலுக்கு வந்தன.

1900களின் முற்பகுதியில் நாட்டின் பிரதான குடியேற்றம் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நகர்ந்தது. இதனைத் தடுக்க 1924ல் மொத்த வருடாந்திர குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவாக, பிறந்த நாட்டின் அடிப்படையில் குடியேற்ற எண்ணிக்கை ஒதுக்கீடு விதிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.1952ஆம் ஆண்டில் மற்ற ஆசியர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விசாக்களை சட்டம் அனுமதித்தது. மேலும் விசாக்களைத் தடை செய்ய காரணமாக இருந்த இன பாகுபாடு முதன்முறையாக நீக்கப்பட்டது. பூர்வீக நாட்டின் அடிப்படையில் இருந்த ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய ஜனாதிபதி ஆணையம் பரிந்துரைத்த போதிலும் அன்றைய காங்கிரஸ் உடன்படவில்லை.

1965ம் ஆண்டில் அரசியல், சமூக, புவிசார் அரசியல் காரணிகளால் நாட்டின் அடிப்படையில் நடந்த ஒதுக்கீட்டைக் காட்டிலும் குடும்ப மறு ஒருங்கிணைப்பு, திறமையான புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் முதன்முதலாக தென் அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்பவர்களின் குடியேற்றத்திற்கு வரம்புகளை விதித்தது. அதற்கு முன், லத்தீன் அமெரிக்கர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தனர். 1965ல் மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தால் ஐரோப்பாவை விட ஆசியா, லத்தீன் அமெரிக்காவில் பிறந்தவர்கள் அதிகளவில் குடியேறி வருகிறார்கள்.

இந்த குடியேற்ற எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தேர்தலில் ஒரு முக்கிய அம்சமாக பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் என்ன பயன்? இரு கட்சிகளும் இணைந்து எடுக்க வேண்டிய முடிவுகளில் இணக்கம் இல்லாததால் கள்ளக்குடியேறிகளும் அகதிகளும் ஆயிரக்கணக்கில் தினமும் நாட்டிற்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நகரங்களிலும் குறிப்பாக ஜனநாயக கட்சியினர் ஆளும் மாநிலங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இன்று நியூயார்க் நகரம் நோக்கி வெனிசூலா, ஈக்வடார், ஆஃப்ரிக்காவிலிருந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து நெருக்கடியின் மையமாக மாறியுள்ளது. அதிக வேலை வாய்ப்புகள், பொது போக்குவரத்து அமைப்பு, வணிகம், கலாச்சாரம், பொழுதுபோக்கு என பல அம்சங்கள் இந்த நகரத்தை நோக்கிப் படையெடுக்க முக்கிய காரணிகளாக உள்ளன.

2022 ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து 110,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நியூயார்க் நகரத்திற்கு வந்துள்ளனர். அவர்களை எதிர்கொள்வதில் அல்லோலப்படுகிறது ‘பிக் ஆப்பிள்’ நகரம். தங்கும் இடமின்றி தவிப்பவர்களுக்கு அரசு இல்லங்களில் இரவு நேரத்தில் மட்டும் தங்கிச்செல்ல படுக்கைகளைக் கொடுக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை மாநில அரசிற்கு உள்ளது. ஆனால் அதிகளவில் வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. இதனால் பெரும்பாலோனோர் சாலையோரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தனிமனிதர்கள், பெரும்பாலும் ஆண்கள் அட்டைப்பெட்டிகளைப் படுக்கையாகப் பயன்படுத்திக் கொண்டு நடைபாதைகளில் உறங்கி வரும் நிலையில் தற்பொழுது குழந்தைகளுடன் குடும்பங்களும் தெருவில் படுத்து உறங்கும் நிலை வந்துவிடப்போகிறது என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பனிக்காலத்தில் நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் தீர்வு காண முடியாமல் நகராட்சி தவித்துக் கொண்டிருக்கிறது.

புலம்பெயர்ந்தோரின் ஆதரவிற்காக நியூயார்க் நகரத்திற்கு $140 மில்லியனுக்கும் அதிகமான கூட்டாட்சி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வாஷிங்டனில் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் அலெஜான்ட்ரோ மயோர்காஸை நியூயார்க் நகர மேயர் ஆடம்ஸ் மற்றும் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்தித்ததாக அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நெருக்கடியை மதிப்பிடுவதற்கு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS, டிபார்ட்மெண்ட் ஆஃப் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி) குழு நியூயார்க் நகரில் ஆய்வு செய்து கொண்டு வருகிறது.

புகலிடம் தேடி வருபவர்கள் தங்குவதற்கு வசதியாக அரசுக்குச் சொந்தமான இடங்களை வழங்கியுள்ளது மாநில அரசு. வீட்டுவசதி, தேசிய காவலர் உதவி, புலம்பெயர்ந்தோருக்கான சட்ட சேவைகளுக்காக 1பில்லியன் டாலர்கள் மாநில வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதிநிலையில் கூடுதலாக 1பில்லியன் டாலர்கள் வழங்குவது குறித்து மாநில சட்டமன்றத் தலைவர்களுடன் பேசி வருவதாக ஆளுநர் கேத்தி ஹோக்குல் கூறியுள்ளார். மேயர் ஆடம்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் புலம்பெயர்ந்தோரைச் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதிக்கும் வழிமுறைகளை வலியுறுத்துவதாகவும் “நகரத்திற்கு உதவ மாநில அரசும் முழுமையாகக் கடமைப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த இலையுதிர்காலத்தில் மட்டும் நியூயார்க் நகரத்தில் வீடற்ற மக்களின் தொகை அதிகரித்து சாதனை படைத்துள்ளது என்பது வருத்தமான விஷயம் மட்டுமல்ல அதிர்ச்சிகரமானதும் கூட! “இது ஒரு மனிதாபிமான நெருக்கடி. இதனால் நகரத்திற்குக் கூடுதலாக மூன்று ஆண்டுகளில் $12 பில்லியன் செலவாகும்.” என்று மேயரும் சமீபத்திய வாரங்களில் அகதிகள் தங்க அறைகளோ வசதிகளோ இல்லை என்று நகர அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

“இந்த நாட்டில் பல வருடங்களாக குடியேற்ற அமைப்புச்சட்டங்ளில் முறையான மாற்றங்கள் இன்றி சீர்குலைந்து போனதில் அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இன்று நியூயார்க் நகரம் தள்ளப்பட்டுள்ளது. புகலிடம் தேடி வருபவர்களும் அவர்களது குடும்பத்தினரும் மன்ஹாட்டனில் உள்ள ரூஸ்வெல்ட் ஹோட்டலுக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது நிலவும் நெருக்கடி நியூயார்க் நகரத்தை அழித்துவிடும். போர்ட் அத்தாரிட்டிக்கு அதிகமான பேருந்துகளில் வருபவர்களின் எண்ணிக்கையால் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான வசதி வாய்ப்புகளுக்கான கூட்டாட்சி அரசின் ஆதரவு கிடைக்கவில்லை.” என்று வருத்தத்துடன் நகர நிலைமையை மக்களிடம் பகிர்ந்துள்ளார் மேயர் ஆடம்ஸ்.

சட்ட உதவி சங்கம் மற்றும் வீடற்றவர்களுக்கான கூட்டணி, “புதிய வருகைகள் நியூயார்க் நகரத்தை அழித்துவிடும்” என்ற மேயரின் “டிஸ்டோபியன் கருத்துகளை” பொறுப்பற்ற, பயனற்ற, மனிதாபிமானமற்ற, பயம் தூண்டும் விதத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அவரது கருத்துகள் தங்கள் சொந்த நாடுகளில் கற்பனை செய்ய முடியாத சூழ்நிலைகளில் இருந்து தப்பியோடிய மக்களை எதிரிகளாக்குகின்றன. தங்கள் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கும் நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கும் காத்திருக்கும் மக்களிடையே இந்த ஆபத்தான சொல்லாட்சியை வலதுசாரி அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஒரு நகரத்தின் மேயரிடமிருந்து அல்ல என்று இந்தக் கூட்டணியும் மேயரின் பயம் சரியே என்று பல உள்ளூர் மக்களும் எதிர்வினை ஆற்றிவருகிறார்கள்.

புகலிடம் மற்றும் பணி அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை தற்போதைய குடிவரவுச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ஆவணங்களின்றி நாட்டில் குடியேறியவர்கள் பணி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க 150 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஒப்புதல் தகுதி பெறுவதற்கு கூடுதலாக 30 நாட்கள் தேவைப்படும். சமீபத்திய ஆண்டுகளில் பெரிய பின்னடைவு காரணமாக இந்த காத்திருத்தல் நாட்கள் இன்னும் கூடி உள்ளது. அதுவரையில் நகர அரசு தான் இவர்களைக் காக்க வேண்டும்.

மாநில கவர்னர் கேத்தி ஹோக்குல், அதிபர் ஜோ பைடனிடம் தற்போதைய நெருக்கடிக்கு உதவுமாறு நியூயார்க் நகர மேயர் கேட்டுள்ளார். நகரத்திற்கு வரும் அகதிகள் இரவோடு இரவாக மாநிலத்தின் மற்ற நகரங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். குற்றங்கள் கூடி உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதால் சில நகரங்கள் புலம்பெயர்வோரை அனுமதிப்பது இல்லை. இது நகர மேயருக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே கடும் பனிப்போரை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி, மருத்துவமனைகள், வீட்டுவசதி, பாதுகாப்பு என்று பல துறைகளில் ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிநிலையைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் நகரங்கள் மாநில அரசை எதிர்நோக்க, ஆளுநர் கேத்தி, பைடன் அரசை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

வாஷிங்டன் டி.சி., சிகாகோ, ஃபிலடெல்ஃபியா, டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களும் புலம்பெயர்வோர் வருகையால் பாதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஜனநாயக கட்சியினர் ஆளும் மாநிலங்களில் தான் ஆவணங்கள் இல்லாத குடியேற்றங்கள் அதிகளவில் நிகழ்கிறது. இந்த குடியேற்றப் பிரச்சினையை மையமாக வைத்து 2022 இடைத்தேர்தலில் புறநகர் ஜனநாயக கட்சியினரைத் தோற்கடித்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றனர் குடியரசுக்கட்சியினர். அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் இதே உத்தியைக் கையாண்டு வெற்றி பெற்று விடுவார்களோ என்ற அச்சமும் பைடன் அரசிற்கு ஏற்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டங்களை மாற்றி அமைக்க முடியாத நிலை தொடருவதும் ஆளும் அரசிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. “புலம்பெயர்வோரை அவர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல் வருமாறு அழைக்கும் சரணாலய நகர கொள்கையை ஆதரிக்கும் பைடன் அரசு, பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் ஊடுருவும் மக்கள் கூட்டத்தைத் தடுக்க இயலாமல் தடுமாறுகிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார் குடியரசுக்கட்சியைச் சார்ந்த மக்கள் பிரதிநிதி மைக் லாலர். ஜனநாயக கட்சியில் பலரும் குடியேற்ற சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு பைடன் அரசை நிர்பந்தித்து வருகின்றனர். எல்லாம் தேர்தல் செய்யும் மாயம்!

குடியரசுக்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் இருந்து முறையற்ற குடியேறிகளை ஜனநாயக கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு இரவோடு இரவாக பேருந்துகளில் ஏற்றி அனுப்பி விடுகிறார்கள். தேர்தல் நேரத்தில் எல்லையில் சுவர்கள் கட்ட மாட்டோம். புலம்பெயர்பவர்களை வரவேற்போம் என்று சொன்னவர்கள் இன்று அவர்களைக் காக்கவும் நிரந்தர குடியுரிமை வழங்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களுடைய குடியேற்றக் கொள்கை மனிதகுலத்தை மீட்டெடுக்கும் என்று தேர்தல் நேர வாக்குறுதி அளித்த பைடன் அரசு, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் பின்பற்றிய கொள்கைகளையே தொடர்கிறது. இதனால் எண்ணற்ற மரணங்கள், பாதுகாப்பற்ற சூழல், தங்குமிடங்களில் குழப்பங்கள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அகதிகள் சட்டத்திற்கு உட்பட்டு, மனிதாபிமான அடிப்படையில் எல்லையில் உள்ள சூழ்நிலையை எதிர்கொள்ள வேறு வழிகள் உள்ளன. “கூட்டாட்சி, மாநில, உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூகங்களுக்கு இடையே வலுவான தகவல்தொடர்பு மற்றும் திட்டமிடல், சமூக சட்ட சேவை வழங்குவதற்கான நிதி, புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, எல்லையில் வரவேற்பு மையங்களை உருவாக்கி நாட்டிற்குள் அனுமதிக்கு முன் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் சட்டங்களை இயற்ற வேண்டும்.” என்று புலம்பெயர்வோருக்கான நீதி மையம் சில உபாயங்களை அறிவித்துள்ளது.

சமூக சட்ட சேவை வழங்குவதற்கான நிதியை எப்படி, எங்கிருந்து கொடுப்பது என்பதில் தான் இருகட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் தொடருகிறது. மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்காக, உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்க பயன்படுத்தாமல் அகதிகளுக்காகவும் முறையான ஆவணங்கள் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வதை பெரும்பாலான மக்களே விரும்பாத சூழ்நிலை நிலவி வருகிறது. அதுவே குடியரசுக்கட்சியினருக்கும் சாதகமாக இருக்கிறது. நாட்டில் வெள்ளையரல்லாதவர் எண்ணிக்கை கூடி வருவதை விரும்பாத சமூகம் மறைமுக தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதும் இனி மேலும் அதிகரிக்கும் என்பதும் அச்சத்தைத் தருகிறது. கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் இருக்கும் யதார்த்த சிக்கல்களை மறந்து வாய்வீச்சு தேர்தல் வாக்குறுதிகளில் தற்போதைய அரசு மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கிறது. உறுதியான குடியேற்ற சட்ட மாறுதல்களால் மட்டுமே இது சாத்தியப்படும். செய்வார்களா?

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு, உக்ரேனி அகதிகளை வரவேற்க ஆதரவும் அரசியல் விருப்பமும் பெருகின. படையெடுப்பைத் தொடர்ந்து ஐந்து மாதத்திற்குள் அமெரிக்கா 100,000க்கும் மேற்பட்ட உக்ரேனியர்களை நாட்டிற்குள் அனுமதித்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் போது உருவாக்கப்பட்ட வெகுஜன வெளியேற்றக் கொள்கை மற்றும் ஒரு நபரின் நுழைவு முறையின் அடிப்படையில் பாதுகாப்பை மறுக்கும் புகலிடத் தடைகள் அகதிகளின் குடியேற்றச் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறது. அதையே பைடன் அரசும் தொடர்ந்து கொண்டு வருவது தான் வேதனை. இதில் உள்நாட்டில் தொடரும் பொருளாதார மந்தம், வேலைவாய்ப்பின்மையை கவனத்தில் கொள்ளாமல் வெளிநாட்டுப்போர்களிலும் அகதிகளுக்காக நிதிகளை ஒதுக்குவதிலும் இந்த அரசு காட்டும் தீவிரம், 2024 தேர்தலில் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடி வருகிறது.

தற்பொழுது கொலம்பியாவில் இருந்து புலம்பெயர்ந்திருக்கும் 100,000 மேலானோருக்கு 18 மாதங்கள் தற்காலிகமாக தங்கி பணிசெய்யும் இடைக்கால நிவாரண சட்டம் ஒன்றை பைடன் அரசு அறிவித்துள்ளது சற்று ஆறுதலான விஷயம். இதனை நியூயார்க் மாநில ஆளுநரும் நகர மேயரும் வரவேற்றிருக்கிறார்கள். நடைமுறை சாத்தியங்களில் இருக்கும் குளறுபடிகளை எங்ஙனம் களையப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஓட்டுக்காக பைடன் அரசு செய்யும் அரசியல் தந்திரம் என்று குடியரசுக்கட்சியினர் கூறிவருவதும் முறையான ஆவணங்கள் பெற்றவர்கள் பலரும் வருடக்கணக்கில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் எத்தனை காலங்கள் தான் இந்த கண்துடைப்பு நாடகம்?

அமெரிக்க தேசமே மண்ணின் பூர்வகுடிகளை தந்திரமாக வீழ்த்தி புலம்பெயர்ந்த வெள்ளையர்களால் உருவானது. முறையான ஆவணங்களுடன் வருபவர்களை விட அமெரிக்கா-மெக்சிகோ எல்லை வழியாக நாட்டிற்குள் வருபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருவது கண்கூடாகத் தெரிகிறது. முன்னாள் அதிபர் ஒபாமா கூறியது போல் “We were once strangers, too.” புகலிடம் தேடி பெருகி வரும் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வர அண்டைநாடுகளுடன் பேச்சுவார்த்தையும் குடியேற்ற சட்ட திட்டங்களில் மாறுதலும் விரைவில் கொண்டு வருவது ஒன்றே தீர்வாக இருக்கும்.

ஆனால் அரசியலில் அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!

Tuesday, November 28, 2023

இந்த நாள் இனிய நாள்


உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கப்பாதையில்நடந்த விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்து கவலையாக இருந்தது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரலாறு காணாத அளவில் தொடர் மழையின் அட்டூழியம் அரங்கேறிக்கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் 'சார்தாம்' யாத்திரைக்காக உத்தரகாண்டில் இருந்தோம். அந்த இமயமலைப் பகுதி முழுவதும் பிரளயம் வந்துவிட்டால் சுக்கு நூறாக நொறுங்கிவிடும் அபாயத்தில் தான் இருக்கிறது. உள்ளூர்வாசிகளுக்குப் பழகிப் போன விஷயமாக இருந்தாலும் முதன்முதலில் சென்ற எங்களுக்கு கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. உத்தரகாசியில் கொட்டிய மழையில் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. யமுனோத்ரியிலிருந்து நாங்கள் திரும்பிய பிறகு கோவிலை மூன்று நாட்களுக்கு மூடி விட்டார்கள். யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் வழியெங்கும் மலைச்சரிவுகள்! சிறிதும் பெரிதுமாக பாறைகள் உருண்டு கிடந்தது. அதை அகற்றும் கருவிகளுடன் சாலைத்துறை அதிகாரிகள் போக்குவரத்தைச் சீர்படுத்திக் கொண்டிருந்தனர். சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் உள்ளூர்வாசிகள் அசரவில்லை. அவர்களுக்குப் பழகிப்போன விஷயமாக இருக்கிறது. மலையையும் மழையையும் நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். புதிதாகச் சென்ற எங்களுக்குத் தான் ஒரே பதட்டமாக இருந்தது.

உத்தரகாசி பகுதியில் சுரங்கம் அமைப்பது என்பது உண்மையிலேயே இமாலய சாதனையாகத் தான் இருக்கும். துறை சார்ந்த வல்லுநர்கள் கவனமாக ஆய்வுகள் செய்த பின்னரே இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கும். ஆனாலும் மலைப்பகுதியில் போக்குவரத்தையே குறைக்க வேண்டும் என்று எண்ணிய எங்களுக்கு இந்த சுரங்க விபத்து மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது. 

நல்லவேளையாக தொழிலாளர்களுக்கு வேண்டிய உணவும், ஆக்ஸிஜனும் தொடர்ந்து அனுப்பப்பட்டதில் கொஞ்சம் திருப்தி. அவர்களைப் படமெடுத்து அவர்கள் குடும்பத்தினருக்கும் காட்டியதில் அவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர். 17 நாட்கள் என்பது அவர்களுக்கு வாழ்வா? சாவா? நிலை. ஆனாலும் நல்ல மனநிலையில் அவர்கள் இருந்தது ஆறுதல்.


முதலில் அமெரிக்க ட்ரில்லிங் இயந்திரம் கொண்டு துளையிட்டு இடிபாடுகளை அகற்ற முயற்சித்ததில் தோல்வி. பின் நாமக்கல்லைச் சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியரிங் நிறுவனதினரின் தொடர் முயற்சியால் சிறு குழாய் வழியாக உணவு, அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியுள்ளார்கள்.

ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்த செய்தியைப் படிக்கையில் மிகவும் வருத்தமாக இருக்கும். நாட்கள் கடந்து செல்லச்செல்ல பயம். கவலை. சுரங்கத்தில் இருந்தவர்களின் முகங்களை அடிக்கடி காண்பித்துக் கொண்டிருந்ததால் ஊடகங்களின் தவறான யூகங்களில் இருந்து தப்பித்தது. எத்தனை எத்தனை சவால்களைச் சந்தித்து கடைசியில் எலி வளைச் சுரங்க முறையில் இடிபாடுகளை அகற்றி சுரங்கத்திற்குச் செல்லும் பாதையை அமைத்துள்ளனர். கடினமான வேலை. மனந்தளராமால் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு, பகல் பாராது உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது.


ஒருநபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய பாதையை அமைத்து தொழிலாளர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள். பாதுகாப்பான முறையல்ல என்றாலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற பின் கைகொடுத்த கடைசி முயற்சியில் 41 தொழிலாளர்களையும் மீட்டது இன்றைய நாளின் நல்ல செய்தியாக, கோடிக்கணக்கான மக்களின் வேண்டுதல் நிறைவேறிய தினமாக அமைந்ததில் மகிழ்ச்சி.

நம்பிக்கை நாயகனாக ஆஸ்திரேலிய சுரங்க நிபுணர் 'ஆர்னால்ட் டிக்ஸ்', சுரங்க வாசலில் இருந்த கோவிலில் வழிபட்டு தன்னுடைய வேலையைத் தொடங்கியவுடன் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற அனைவரின் பிரார்த்தனையோடு திவ்யமாக இருந்த மனிதரிடம் தெரிந்த நம்பிக்கை பார்ப்பவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. எலி வளைச் சுரங்க முறையில் ஒருவர் பின் ஒருவராக வெளியே வரும் பொழுது தான் நாட்டில் உள்ள நல்ல உள்ளங்களுக்கு நிம்மதியாக இருந்தது.


அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உரிய நேரத்தில் செய்து கொடுத்த மத்திய, மாநில அரசிற்கும் ஒற்றுமையுடன் நம்பிக்கையுடன் போராடிய மீட்புக்குழுவினருக்கும் பாராட்டுக்கள். உடல், மன நலம் தேறி தொழிலாளர்கள் விரைவில் வீடு திரும்பட்டும்.

வாழ்க வளமுடன்!






Saturday, November 25, 2023

The Railway Men

கடந்த 1984ல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி பலரும் மரணமடைந்த செய்தி வெளியான பொழுது நாடே அதிர்ந்தது. வரலாற்றில் நடந்த கொடும் விபத்து அது. அதனைப் பற்றின செய்திகளைக் கேட்கவும் பார்க்கவும் அச்சப்படும் வகையில் இருந்ததை அன்று பார்த்தவர்களும் கேட்டவர்களும் மறக்க முடியாது.

போபால் நகரில் ஏழை மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் 'யூனியன் கார்பைடு' எனும் பெயரில் பூச்சிக்கொல்லி ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இது 'யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்' என்ற அமெரிக்க நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய நிறுவனம். 1984ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் நள்ளிரவு 'யூனியன் கார்பைடு' நிறுவனத்தில் இருந்து சுமார் 45 டன் அபாயகரமான "மெதில் ஐசோசயனேட்" வாயு வெளியேறியது. அது காற்றில் பரவியதில் ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் சுவாசித்ததில் உடனே ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் போபாலை விட்டு வெளியேற முயற்சித்ததால் பீதியை உருவாக்கியது. இறுதி இறப்பு எண்ணிக்கை 15,000 முதல் 20,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 500,000 பேர்கள் என்று கணக்கிடப்பட்டது. அவர்களும் சுவாச பிரச்சனைகள், கண் எரிச்சல், குருட்டுத்தன்மை, பிற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்து முடிந்த பல வருடங்களுக்குப் பிறகும் 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 400 டன்களுக்கும் அதிகமான தொழிற்சாலை கழிவுகள் அந்த தளத்தில் இருந்தன. தொடர்ந்து எதிர்ப்புகளும் வழக்கு முயற்சிகளும் நடந்த போதிலும், 2001ல் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனை வாங்கிய டவ் கெமிக்கல் நிறுவனமோ அல்லது இந்திய அரசாங்கமோ அந்த இடத்தை சரியாகச் சுத்தம் செய்யவில்லை. அதனால் நிலம், நீர் மாசுபட்டதால் அங்கு வசித்தவர்களுக்கு நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகள். உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்தன. நிலத்தடி நீர் மாசுபடுவதால் போபாலில் வசிப்பவர்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்குமாறு 2004ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2010 ஆம் ஆண்டில், ஆலையின் முன்னாள் மேலாளர்கள் ஏழு பேருக்கு இந்திய நீதிமன்றம் மிகக்குறைந்த அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகளை வழங்கியது. யூனியன் கார்பைடு நிறுவனம் 470 மில்லியன் டாலர்களை இந்திய அரசுக்கு இழப்பீடாக வழங்கியது. பாதிக்கப்பட்ட பலருக்கும் சில நூறு டாலர்கள் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது.

தகவல் தொழிநுட்பங்கள் இன்றைய அளவிற்கு வளர்ச்சியடைந்திராத காலம் அது. மக்களிடமிருந்து பல உண்மைகளைச் சாமர்த்தியமாக மறைத்து இந்தியர்களை ஏமாற்றி விட்டது அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் அரசு. யூனியன் கார்பைடுக்கு எதிராக இன்னும் முறையான நீதி வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்களும் போராளிகளும் கருதுகின்றனர். இதுவரை பேரழிவிற்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நிர்வாகியான வாரன் ஆண்டர்சனை நாடு கடத்துவதற்கான இந்தியாவின் அனைத்து கோரிக்கைகளும் அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது. அவரும் 2014ல் இறந்து விட்டார்.

அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் பாதிப்பிற்கு முறையான நடவடிக்கைகளும் இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.

இந்த உண்மைச்சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளிவந்துள்ள "The Railway Men". போபால் பேரழிவின் பொழுது ரயில்வே நிர்வாகிகள் செய்த உதவிகளையும் எடுத்த நடவடிக்கைகளையும் விவரிக்கிறது. தன்னலம் கருதாத மக்கள் என்றுமே இருக்கிறார்கள். அவர்களால் தான் இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 1984ல் அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி இறந்திருந்த நேரம். சீக்கியர்களை விரட்டி விரட்டி காங்கிரசார் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலம். அதையும் இத்தொடரில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய தொடர். பேரழிவினைப் பற்றின அறிமுகத்தை, அரசின் மெத்தனத்தை அறிந்து கொள்ள முடியும்.

இந்தியர்கள் என்றாலே மிகையுணர்ச்சி, கெட்டவன் நல்லவனாக மாறும் கதைகள், மாதவன், ஜுஹி சாவ்லா தனிப்பட்ட வாழ்க்கை வசனங்கள், ஜுஹி சாவ்லா புகைபிடிப்பது போன்ற தேவையற்ற காட்சிகள் வைக்க வேண்டும் போல. அவற்றைக் குறைத்து நீதி விசாரணைக்காட்சிகளை வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Tuesday, November 21, 2023

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்


மதுரையில் மக்கள் காலாற நடந்து செல்வதற்கு ஆற, அமர பொழுதைப் போக்குவதற்குப் புதிதாக ஒரு இடத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆம். மதுரை தெப்பக்குளம் தான். குளத்தைத் தூர்வாரிய பிறகு கண்கவரும் தெப்பக்குளத்திற்கு வரும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. காலை,மாலை நடைக்குச் செல்பவர்களும் உண்டு.

விடியற்காலையில் சென்றால் சூப் வகையறாக்கள் கிடைக்கிறது. “ஹெல்தி” என்று வாங்கிக் குடிக்கிறார்கள்😳கொஞ்சம் தள்ளிச் சென்றால் “மதுரை ஸ்பெஷல்” எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள் உளுந்த வடை, ஆமவடை, கோசு, காபி என்று கிடைக்கிறது🥰

மதுரைக்காரவுகளுக்கு நேரத்துக்கு ஒரு பண்டம் சாப்பிடணும்🤪 காலை, மதிய இடைவேளைகளில் விதவிதமாக பஜ்ஜி, தூள்பஜ்ஜி வேண்டும்.

காலம் மாறி விட்டிருக்கிறது. குளத்தைச்சுற்றி அதுவும் கோவிலுக்கு எதிரே நெருக்கமாக தள்ளுவண்டி உணவகங்கள். தெருமுக்கில் நின்று தொண்டை கிழிய பானிபூரிக்காரன் என்று சக இந்தியரைத் திட்டிக்கொண்டிருக்கும் கரைவேட்டிகள் கூட்டம் இப்பொழுது பானிபூரி, பேல்பூரி, மோமோஸ், பாவுபாஜி என்று முகத்தை மறைத்துக்கொண்டு தின்றுகொண்டிருக்கிறது😏

பழமைவாதிகளுக்கு தென்னங்குருத்து, பருத்திப்பால், மாங்காய், பழங்கள், இளநீர் கிடைக்கிறது. மதுரை மண்ணின் சுவையான பண்டமாக மாறியிருக்கும் சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் கீரைவடை, “நளறு பைரி”, சொஜ்ஜியப்பம், போளியல் கூட அங்கே கிடைக்கிறது.

ஆறு மணிக்கு மேல் வியாபாரம் சூடுபிடிக்கிறது. வழிப்போக்கர்கள், பொழுதைப் போக்க வந்தவர்கள், பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அங்கே நின்று சாப்பிடுகிறார்கள். பள்ளி வயதுப் பெண்குழந்தைகளும் தோழிகளுடன் சாப்பிட்டு விட்டுச் செல்வதைப் பார்க்க நன்றாக இருந்தது.

நிறைய வட இந்தியர்கள் போல தோற்றம் கொண்ட இளைஞர்கள் கடைகளில். கணவன், மனைவி என்று குடும்பமாக சிலர் வியாபாரம் செய்கிறார்கள். மாலைநேரத்தில் நடக்கும் வியாபாரத்தால் பல குடும்பங்கள் வாழ்கிறது!

என்ன? குப்பைகளை அப்படியே லேசாக தூக்கிப்போட்டு விட்டுச் செல்கிறார்கள். அதைச்சாப்பிட மாடுகளும், சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்கும் சிறிது கொடுத்து விட்டுச் சாப்பிட மாட்டார்களா என்று ஏக்கத்துடன் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு நாய்களும் மதுரைக்கே உரியது😑

மாரியம்மன் கோவில், அமைதி ததும்பும் அழகான முக்தீஸ்வரர் கோவில், ஸித்தாச்ரமம் என்று அப்பா, அம்மா, பாட்டியுடன் சென்று வந்த கோவில்களுக்குச் சென்று வருவது சுகமே🥰

ஆதவன் மறையும் நேரத்தில் வீடுதிரும்பும் பறவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே மின்னொளியில் ஜொலிக்கும் குளத்தின் அழகை ரசிக்கும் பொழுது சிறுவயதில் அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘புஸ்ஸ்ஸ்’ பஞ்சு மிட்டாயைச் சாப்பிட்டு வலம் வந்த இனிமையான நாட்கள் தான் ஞாபகத்திற்கு வந்தது.

கரையும் நாட்களில்
எஞ்சிநிற்பது
கரையாத நினைவுகள்
மட்டுமன்றோ🙂

(ஃபேஸ்புக்கில் திரு.தேவ் ராஜ் அவர்களின் பதிவிலிருந்து....
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்,
நாயக்கர் மஹால் கட்டுமானத்துக்காக மண் வெட்டிய இடம். மண் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியைத் தெப்பக்குளமாக மாற்றி, அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார் மன்னர் திருமலை நாயக்கர். தெப்பக் குளத்தின் சுற்றுச்சுவர் வெகு அழகான கல்காரம். )

Monday, November 20, 2023

எங்கே செல்லும் இந்தப் பாதை?



கடந்த சில மாதங்களாக எங்கு பார்த்தாலும் 'AI', "Artificial Intelligence ', 'OpenAI', 'ChatGPT', 'ChatBot' என்று மந்திர வார்த்தைகளைக் கூறி இணையமே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. இனி எதிர்காலம் இந்த செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தான் இயங்கப்போகிறது என்று ஊடகங்கள் தினம் ஒரு செய்திகளாகப் பரப்பிக் கொண்டு வருகிறது.

பிப்ரவரி மாதம் 2023ல் வெளிவந்த 'ChatGPT' மனிதர்கள் சொல்கிற எதையும் எழுத்து வடிவில் திறன்பட செய்யும் ஆற்றல் கொண்டது. காதல் கவிதை வேண்டுமா, கட்டுரை வேண்டுமா, பாடத்தில் சந்தேகமா, புது மொழியினை கற்றுக் கொள்ள வேண்டுமா, அழகான ஓவியத்தை வரைய வேண்டுமா... இப்படி எதுவேண்டுமானாலும் ஒருவர் கேட்க முடியும். மனிதர்களை விட மிக ஆழகாக கவிதை எழுதுகிறது. பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது. சந்தேகங்களை நிவர்த்திச் செய்கிறது. படங்களை வரைந்து தள்ளுகிறது. ஆனால், இப்பொழுது, இந்த நொடியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி அதாவது, பங்குச்சந்தை விபரங்கள், அரசியல், உலக நடப்புகள் போன்ற நாளுக்கு நாள், நொடிக்கு நொடி மாறும் சில விஷயங்களை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. விரைவில் அதுவும் முழுப்பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. 

உடனே, இந்த சாமர்த்தியமான தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைக் குறைத்து விடும். அதன் எல்லை எது வரை நீளும் என்று யாருக்கும் தெரியாது. சாதக, பாதகங்களை அலசிய பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று பலரும் எதிர்ப்பும் குழப்பமாகவும் இருக்க, 'எலன் மஸ்க்'கும் போர்க்கொடி தூக்கினார். அமெரிக்க காங்கிரசில் முறையிட்டார். இவர்கள் அனைவரும் எதிர்க்கும்

''OpenAI' என்றால் என்ன? அது ஒரு அமெரிக்க 'ஸ்டார்ட் அப்' ஆராய்ச்சி நிறுவனம். பல துறைகளிலும் மக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவை((Artificial Intelligence) உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பு. சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் பலர் இருந்தாலும் தற்போது பெரும்பாலான பங்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வசம் உள்ளது. டிசம்பர் 2015ல் சாம் ஆல்ட்மேன், இலியா சுட்ஸ்கேவர், கிரெக் ப்ரோக்மேன், ட்ரெவர் பிளாக்வெல், விக்கி சியுங், ஆண்ட்ரேஜ் கர்பதி, டர்க் கிங்மா, ஜெசிகா லிவிங்ஸ்டன், ஜான் ஷுல்மேன், பமீலா வகாடா மற்றும் வோஜ்சிச் சரெம்பா ஆகியோரால் நிறுவப்பட்டது. எலன் மஸ்க்கும் நிறுவன குழு உறுப்பினராக இருந்தவர். நிறுவனத் துவக்கத்தில் அதிக முதலீடு செய்தவர் பின்பு கருத்து மோதல் காரணமாக நிர்வாகத்தை விட்டு வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் ஆல்ட்மேன் நிறுவனத்தின் CEOவாக இருந்தார். ChatGPT உருவானதின் பின்புலத்தில் இருந்தவர்.

GPT (Generative Pre-trained Transformer) என்பது ஒரு வகையான 'பெரிய மொழி மாதிரி' (LLM- Large Language Model) நரம்பியல் வலையமைப்பு ஆகும். இதன் மூலம் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, உரையைச் சுருக்கமாகக் கூறுவது, செயலிகளை உருவாக்குவது போன்ற பல்வேறு இயற்கையான மொழி செயலாக்கப் பணிகளைச் செய்ய முடியும். மனிதன் கற்றுணர்ந்த இயற்கை நுட்பத்தைப் பயன்படுத்தி இத்தகைய 'பெரிய மொழி மாதிரி'கள் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்படுகிறது. இதற்காக உயர்படிப்பு படித்தவர்கள் பெருநிறுவனங்களில் இருந்து இந்நிறுவனத்திற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்கள். 2019ல் GPT2 வெளிவந்து பிரபலமானதைத் தொடர்ந்து 2023 பிப்ரவரியில் ChatGPTஐ வெளியிட, கூகுள் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'Bard', மைக்ரோசாப்ட் 'Bing' என்னும் செயலிகளைக் கொண்டு வந்தது. இதே நேரத்தில் பணத்தைச் செலுத்திப் பயன்பெறும் நவீன செயலிகளை 'OpenAI' வெளியிட்டு வருகிறது.

நவீன வார்த்தைப் பிரயோகங்களைப் புரிந்து கொள்வதற்குள் வேறு ஏதாவது இந்த கணினி உலகில் உலா வர, சாதாரண மக்களோ பெரும் குழப்பத்தில். பெரும் கணினி நிறுவனங்களோ தங்கள் முதலீடுகளை இத்தகைய தொழில்நுட்பத்தில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில்! ஆனால் இந்த ChatGPTயில் விளையாடிப் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. உடனே இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவும் பாடத்திட்டத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு மேற்படிப்பு படிக்க வந்திருக்கும் இந்திய மாணவர்கள் பலரிடமும் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டால் ஒன்று 'டேட்டா சயின்ஸ்' என்கிறார்கள் இல்லையென்றால் 'ஏஐ' என்கிறார்கள். இன்னும் பல வருடங்களுக்கும் இந்தியர்கள் தான் இந்தத் தொழில்துறையில் கோலோச்சுவார்கள் போலிருக்கிறது!

இப்படியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கடந்த சனிக்கிழமை அன்று திடீரென பெருங்குழப்பம். 'OpenAI' CEO சாம் ஆல்ட்மேனை நிர்வாக குழுவினர் பதவியிலிருந்தும் பணியிலிருந்தும் நீக்கி விட்டார்கள் என்ற செய்தி தான் அன்றைய தலைப்புச் செய்தியாக மாறிப்போனது. "நிறுவனத்தில் நடக்கும் விஷயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. தங்களுடன் தகவல் தொடர்புகளில் நேர்மையாக இல்லை." என்று கூறி நவம்பர் 16ந் தேதி வெள்ளிக்கிழமையன்று நிர்வாகம் அவரை நிறுவனத்திலிருந்து வெளியேற்றியது. 

ஆப்பிளின் முன்னாள் வடிவமைப்புத் தலைவர் ஜோனி ஐவ் உடன் புதிய செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்குவது குறித்து ஆல்ட்மேன் நிர்வாகத்திற்குத் தெரியாமல்  விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சக்திவாய்ந்த AI அமைப்புகளை உருவாக்கும் புதிய முயற்சிக்கு நிதி திரட்ட முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. திரைமறைவில் நடந்த இச்சம்பவங்கள் தான் அவருடைய பதவிப் பறிப்பிற்கும் பணி நீக்கத்திற்கும் காரணமாகக் கூறப்படுகிறது.

அவரை மீண்டும் பதவியில் நியமிக்கவில்லையென்றால் நாங்கள் எல்லோரும் நிறுவனத்திலிருந்து வெளியேறி விடுவோம் என்று அங்கு பணிபுரிபவர்கள் பலர் நிர்வாகத்திடம் கூற, மறுபரிசீலனை செய்தார்கள். ஆல்ட்மேனும், தான் திரும்பி வரவேண்டுமென்றால் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்க, அவரை 'OpenAI'  நிறுவனம் மீண்டும் சேர்த்துக் கொள்ளவில்லை.

அதிகளவில் இந்தப் புதிய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் அதுவும், மைக்ரோசாஃப்ட்-ன் பங்குகள் சரியப்போகிறது என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தது. திடீரென திங்களன்று (11/20/2023), ஆல்ட்மேன் மற்றும் அவரது நெருங்கிய சகாவான முன்னாள் ஓபன்ஏஐ தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோரை ஒரு புதிய மேம்பட்ட AI ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக நியமித்ததாக மைக்ரோசாஃப்ட் அறிவித்தது. இதைத்தொடர்ந்து 'OpenAI' நிறுவன வேலைகளிலும் மைக்ரோசாஃப்ட்ன் பங்கு தொடர்ந்து இருக்கும் என்று அதன் தலைவர் சத்யா நாடெல்லா கூறியுள்ளார். எலன் மஸ்க்கும் தன் பங்கிற்கு 'xAI' என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வெளியிட உள்ளார்.

ஏற்கெனவே யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாத அளவிற்கு சமூக ஊடங்கங்களுக்கு அடிமையாகிப் போயிருக்கிறோம். இனி, நம்முடன் பேசுவது மனிதர்களா இயந்திரமா என்று தெரியாத அளவிற்கு தொழில்நுட்பம் சென்று கொண்டு இருக்கிறது. அது நல்லதா கெட்டதா, அதன் எல்லை எதுவரைக்கும் என்று இதுவரையில் யாருக்கும் தெரியவில்லை. நிச்சயமாக சாதகங்கள் இருக்கிறது. பாதகங்கள் என்னென்ன என்பது தான் புரியாத புதிர். மனிதர்களை விட மிக நன்றாக யோசிக்கத் தெரிந்து விட்டால் நாம் தான் கணினிகளுக்கு அடிமையாகிப் போவோம் என்பதில் சந்தேகமில்லை. எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தான் புரியவில்லை.

அதுவரையில் அரசியல், சினிமா, கிரிக்கெட் என்று பொழுதைப் போக்குவோம்.

என்னவோ போடா மாதவா!






Thursday, November 9, 2023

இறுகப்பற்று


கணவன்-மனைவி உறவில் உள்ள சிக்கல்களை உளவியலாளர்/மனோதத்துவ நிபுணர் வாயிலாக பேசுவதைப் போல இதுவரையில் தமிழில் இதற்கு முன் படங்கள் வந்த மாதிரி தெரியவில்லை. அந்த வகையில் 'இறுகப்பற்று' படத்தைப் பாராட்டலாம். இருப்பதிலேயே மிகவும் சிக்கலான உறவு என்றால் அது தம்பதியருக்குள்ளே இருக்கும், அந்த நாலு சுவற்றுக்கு மட்டுமே தெரிந்த உறவு. கணவனைப் புரிந்து கொள்ளாத மனைவியும் மனைவியைப் புரிந்து கொள்ளாத கணவனும் இருக்கும் குடும்பத்தில் தினம் ஒரு சண்டை தான். இருவரின் எதிர்பார்ப்புகளும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், உட்கார்ந்து மனம்திறந்து பேசுவதற்கு அங்கே 'ஈகோ' இடம் கொடுப்பதில்லை.

அம்மா-அப்பா வாழ்ந்த காலங்களைப் போல இல்லையே என்று ஆண்கள் பலரும் ஏங்குகிறார்கள். காலம் மாறிவிட்டது. அம்மாக்களைப் போல இன்றைய பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்யவில்லை. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்திருக்கும் காலத்தில் புது பிரச்சினைகள் முளைக்கிறது. அதனைக் கையாளத் தெரியாமல் சின்ன சின்ன சண்டையில் ஆரம்பித்து, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருகட்டத்தில் விலகிச் செல்வதே நல்லது என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பாதிப்பு இருவருக்கும் தான் என்றாலும் பெண்களுக்குத் தான் துயரம் அதிகம். ஒரு சில இடங்களில் மட்டும் ஆண்களும் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

மாறிவரும் காலத்தில் எதிர்பார்ப்புகள் கூடி வருவது இயற்கை என்றாலும் குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கிறதென்றால் எதிர்பார்ப்புகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும் தானே? செய்கிறோமோ? இல்லையே?

படத்தில் ஒரு தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினை மிகவும் சாதாரணமான ஒன்று. திருமணத்திற்கு முன் உலக அழகி ஐஸ்வர்யாராயாகவே இருந்தாலும் குழந்தைப் பிறப்பிற்குப் பின் உடல் எடை கூடுவது பெண்ணின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான மாறுதல். அந்த பத்து மாதங்கள் அவள் கடந்து வரும் மிகக்கடினமான பயணம். அதனால் ஏற்படும் உடல், மனச்சோர்வு. அவளுக்கு வேண்டிய ஆறுதலையும் தூக்கத்தையும் கொடுத்து அவளுடைய உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய கடமை கணவனுக்கும் உண்டு. மனைவி குண்டானால் விவாகரத்து கேட்பேன் என்றால் பெண் கிடைக்காமல் அலையும் மில்லினியல்கள் 'டர்ர்ர்ர்ர்ர்'ராகி விடுவார்கள்.

வேலையிடத்து நிர்பந்தங்கள், சுற்றத்தின் அழுத்தத்தால் வீடு, நகை இத்யாதிகள் வாங்க, பிடிக்காத வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். இதனால் ஏற்படும் மன அழுத்தம் வீட்டில் வெடிக்க, பிரச்சினை முளைக்கத்தான் செய்யும். நமக்கு என்ன வேண்டும் என்பதில் இருக்கிறது நம்முடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியும். அடுத்தவருக்காக வாழும் வாழ்க்கையில் தன்னைத் தொலைத்து அவதிப்படுவதில் தொடங்குகிறது ஒருவரின் குழப்பங்கள். தீர்வு காண முடியாமல் விஸ்வரூபமெடுக்கிறது அதிருப்திகள். முடிவில், ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீச, அமைதியற்ற மனது. நிம்மதியற்ற குடும்பம் உருவாகிறது.

இன்னொரு தம்பதியரின் பிரச்னை. காதலியாக இருக்கும் வரை இனித்தவள், மனைவியான பின் கசக்க ஆரம்பித்து விடுகிறாள். காரணத்தை ஆராய்ந்தால் அவளைப் பற்றி முழுமையாக உணரும் பொழுது தான் தன்னை விட பல மடங்கு திறமைசாலியாக இருப்பது பொறுக்காமல் எடுத்ததற்கெல்லாம் சண்டை. பெண்களும் சளைத்தவர்கள் அல்ல. டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் போட்டது போட்டபடி, தொலைபேசியை நோண்டிக்கொண்டே அலுவலக வேலையைப் பார்ப்பது, என் சம்பாத்தியத்தில் வெளியில் உணவை வாங்கிச் சாப்பிடுகிறேன் என்று ஆரம்பித்து ஆளை விடுடா சாமி என்று அம்மா வீட்டிற்குள் பத்திரமாகப் போய் விடுகிறார்கள். தன் பிழையை உணருபவர்கள் மிகவும் அரிது. உணர்ந்து மன்னிப்பு கேட்டுச் சேர்ந்து வாழ நினைப்பவர்களைப் புரிந்து கொள்பவர்கள் அரிதினும் அரிது.

இவர்களுக்கெல்லாம் வைத்தியம் பார்க்கும் அந்த உளவியலாளருக்கே சிக்கல் வந்தால், அதுதான் 'இறுகப்பற்று' படத்தின் கதை.

இத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இத்தனை தூரம் நடக்க வேண்டும். இவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் நொடிக்கொரு தடவை தொலைபேசியைப் பார்த்துச் செய்யுமளவிற்கு மூளை அடிமைப்பட்டுப் போயிருக்கிறது. கணவன்/மனைவி உறவில் விரிசல்கள் இல்லாமல் இருக்க, அதற்கும் ஒரு ஆப் வந்தாலும் வந்து விடும். இந்தப்படத்தில் வருகிறது. இருவரும் அவரவர் தனித்தன்மையுடன் அடுத்தவரை மதித்து நடக்கத் தெரிந்தாலே போதும். அங்கு தான் தவறுகிறோம். கோபத்தை மனதில் போட்டு வைத்துக் கொண்டால் ஒருநாள் வெடித்துச் சிதறும். குடும்பமும் கலைந்து விடும்.

இன்று திருமணமானவர்கள் 'கவுன்சிலிங்' செல்வது அதிகரித்து விட்டது. ஒன்று, குடும்பப் பெரியவர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லை. இந்தப் படத்தில் கூட பெரியவர்கள் அறிவுரை கூறுவது போல எந்தக் காட்சிகளும் இல்லை. முதல் காட்சியிலேயே பெற்றோர்களால் தான் பல மறைமுகப் பிரச்சினைகள் என்று கூறுவதும் சில பல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது.

இரண்டாவதாக, 'ஈகோ' பிடித்துக்கொண்டு அலையும் கூட்டம் அதிகமாகி விட்டது.  

இந்தப் படத்திற்குப் பிறகு பெண் உளவியலாளர் என்றால் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் தயங்குவார்கள். அத்தனை டார்ச்சர் செய்கிறாள் அந்தப் பெண்😖

முடிவில், 'பரஸ்பர புரிதல்' தான் உறவின் அடிப்படை.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடியும். ஏமாற்றம் கோபமாக மாறும். கோபம் வந்தால் கண்ணெதிரே இருக்கும் நல்லது கூட காணாமல் போய்விடும். இதைத்தான் எதிர்பார்க்காதே. ஏமாறாதே! என்பார்கள். ஆனால், நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் தானே? எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போவதே வேலையாக வைத்திருக்கிறோம். ஒரு கட்டத்தில் சலிப்பு வந்து புத்தி மட்டையாகி தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்.

கணவன் மனைவி இருவரும் தனித்தனி மனிதர்கள். வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்கள் சேர்ந்து வாழ்வதென்பது அத்தனை எளிதல்ல. புரிந்துகொள்ளலும், விட்டுக்கொடுத்தலும், பொறுமையும் இருந்தால் மட்டுமே இல்லறம் இனிதாகும். நல்ல தாம்பத்தியத்திற்கு இருவரும் மனம் ஒத்து இருக்க வேண்டும். சில உறவுகள் பிரிவதே நல்லது. அங்கு உடல், மன ரீதியான வன்முறையால் யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். ஊருக்காக வேஷம் போட்டுக் கொண்டு இயல்பைத் தொலைத்து விட்டு செயற்கையாக வாழ்வதில் ஒன்றும் சாதிக்க முடியாது.

இன்று உறவுகளுக்குள் இடைவெளி வர பல காரணங்கள். அருகில் இருக்கும் மனிதர்களிடம் பேசுவதை விட, யாரோ முகம் தெரியாத மனிதர்களுடன் பேசுவதை மனம் விரும்புகிறது. சமூக வலைதளங்கள் அதனைச் செவ்வனே செய்து வருகிறது. இங்குள்ள மருத்துவர்கள் பலரும், மனநிம்மதியின்றி இருப்பவர்களுக்குக் கூறும் முதல் அறிவுரை. "ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸப்" இத்யாதிகளில் இருந்து வெளியே வாருங்கள் என்பது தான். அது ஒரு மாய உலகம். தன்னைத்தவிர அனைவரும் கவலையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் முதலிடமும் அதுதான். அங்கே பிரபலமாக இருப்பவர்கள் பலரும் தங்களுடைய கவலைகளை, இழப்புகளை, ஏமாற்றங்களை, துன்பங்களை மறைத்து இன்பமாகவே உலவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பலரும் நிம்மதியை இழக்கிறார்கள்.

மனிதர்கள் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதன் அளவுகோல்கள் வேண்டுமானால் மாறலாம். அதனால் நமக்கு மட்டும் தான் கவலைகள், துன்பங்கள் என்று புலம்புவதை விட வேண்டும். மனிதர்களைப் புரிந்து கொண்ட, வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரிந்த வெகுசிலரே அமைதியுடன், மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.  

உறவுகளுக்குள் தேவையற்ற பிரிவுகளைத் தடுக்க, மனந்திறந்து பேச, பெற்றோர்களின் முறையான வழிகாட்டல் இல்லையென்றால் 'திருமண ஆலோசனை' நல்லது. உடல்நலத்தைப் பேணுவது போல மனநலத்தைப் பேணுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

காலத்திற்கேற்ற படம். எதற்காக இத்தனை மெதுவாக காட்சிகள் நகருகிறது? எத்தனை பாட்டுகள்! பொறுமையாகப் பார்க்க வேண்டும்.

சமீபகாலமாகத் தமிழில் வெளிவரும் வெட்டு, குத்து, ரத்தக்களறி, இரைச்சல் படங்களை விட நல்ல படம். இயக்குனருக்குப் பாராட்டுகள்!

Monday, November 6, 2023

வெட்டி கெத்து


கடந்த வார 'நீயா நானா'வில் 'கெத்து' காட்டி அலையும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் Vs அது தேவையில்லாத ஆணி என்று அனுபவமிக்க ஆட்கள் கொண்ட அணி என்று இருதரப்பினர் விவாதித்தனர். முக்கியமாக தமிழ்த் திரைப்படங்களில் மிகைப்படுத்திக் காண்பிக்கப்படும் 'வட சென்னை' ரௌடியிசம் பற்றி என்பது பிறகு தான் புரிந்தது. 'கெத்து' காண்பிக்கும் இளைஞர்கள் தலையில் ப்ரோக்கோலி கொத்தை வைத்தது போன்ற சிகையலங்காரம். பார்த்தால் மிகவும் அடித்தட்டு மக்கள் போலத் தெரிந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தங்களைப் பார்த்தால் மக்கள் ஒதுங்கிச் செல்ல வேண்டும், ஒருவிதமான பயம் இருக்க வேண்டும், மரியாதை தர வேண்டும், 'அடிதடி' என்றால் கூப்பிடும் அளவுக்குப் பிரபலமாக இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட 'வேண்டும்'கள். இவர்கள் தங்களின் முன்மாதிரியாகக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவர்கள் இருக்கும் பகுதியின் தாதாக்கள். எப்படி உருப்படுவார்கள்?

அதில் ஒருவர், தன் நண்பர்கள் முன் தந்தை அடித்ததால் திருப்பி அடித்தேன் என்பதைப் பெருமையாகக் கூறினார். காரணம், அவரைப் பள்ளிக்குப் போய் படிக்கச் சொன்னாராம் அப்பா. படிப்பு ஏறவில்லை. பிடிக்கவில்லை. அதனால் போகவில்லை என்கிறார். இன்னொருவர் வகுப்பில் உட்கார இடமில்லை. உட்கார்ந்திருந்தவனை இழுத்துப் போட்டு அடித்து உட்கார்ந்தேன். தெருவில் போகிறவர்களைக் கேலி செய்வோம், வம்புக்கு இழுப்போம். அதுதான் 'கெத்து' என்கிறார்கள். நண்பர்களுக்காக, குடும்பத்தினருக்காகச் சண்டை போடச் சென்று அப்படியே ரவுடி பட்டம் பெற்றவர்கள். இதையெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு வருத்தமான விஷயம்.

இந்த அடித்தட்டு மக்கள் மேல்தட்டு மக்களிடம் சென்றா தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்காகப் போராடுகிறார்கள்? அவர்களைப் போல எளிய மக்களிடம் தான் இந்த வெட்டி 'கெத்து' காண்பித்துக் கொண்டு அலைகிறார்கள். இவர்களைத் தான் தங்கள் சுயலாபத்திற்காக அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரே ஒரு முறை இவர்கள் எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து இத்தனை சலுகைகளுக்குப் பிறகும் ஏன் தங்கள் வாழ்க்கை இன்னும் உயரவில்லை? யார் தடுக்கிறார்கள்? எது தடை போடுகிறது? என்று யோசித்திருந்தால் இன்று சமூகத்தில் 'கெத்து' காண்பிக்க, தங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியலைப் புரட்டிப் போட, பொருளாதாரத்தில் மேம்பட, கல்வி அவசியம் என்பதனை உணர்ந்திருப்பார்கள்.

இவர்கள் அனைவரும் குடியால் சீரழிந்து வேறொரு ரவுடியால் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். இதில் யாரும் பெண் தரவில்லை. ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வேன் என்று உருட்டு வேறு. இவர்களைக் கண்டால் யாரும் வேலை கூட கொடுக்க மாட்டார்கள். நிலைமை இப்படி இருக்க, என்று தான் உண்மையை உணருவார்கள்? இவர்களை இப்படியே வைத்திருந்தால் தான் அரசியலில் பிழைக்க முடியும் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களை ஒதுக்கி அவர்களின் முன்னேற்றத்திற்குக் குரல் கொடுப்பவர்களை இனம் காணுவார்கள்?

பள்ளிகளில் ஒழுக்கத்தைப் பற்றி வகுப்பெடுத்த காலங்கள் மலையேறிவிட்டது. ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையும் அவர்கள் மேல் இருந்த பயமும் இன்று இல்லை. சில ஆசிரியர்களின் தரமும் தாழ்ந்து போய்விட்டிருக்கிறது. உண்மை தான். அதற்கும் ஊழல் புரையோடிய சமூகம் தான் காரணம். தங்கள் குழந்தைகளைக் கண்டிக்க கூடாது என்று பெற்றோர்கள் ஒருபக்கம். அவர்களால் கூட கண்டிக்க முடியாமல் 'தறுதலை சமூகம்' ஒன்று உருவாகி வருகிறது. இதற்கெல்லாம் மூல காரணம் என்று ஆராய்ந்தால் உருட்டு, புரட்டு, திருட்டு கோஷ்டிகளாகத் தான் இருக்கும்.

இன்றைய 'கெத்து' காட்டும் இளைஞர்கள் சமூகத்தால் மேலும் புறக்கணிக்கப்படுவார்களே ஒழிய, அவர்களைக் கண்டு ஒதுங்கிச் செல்லும் மக்கள் அஞ்சுவதாக அவர்களே நினைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

இத்தனை வருடங்களாக உருட்டிக் கொண்டிருக்கும் 'சமூக நீதி' நாடகம் எல்லாம் அரசியலுக்கு மட்டும் தான் என்று உணரும் பொழுது தான் உண்மையான விடியலே அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும்.

'வெட்டி கெத்து' தேவையா? யோசிக்கணும்.

ரொம்ப கஷ்டம்!










Sunday, November 5, 2023

கல்வி அவசியம்



சென்ற வார 'நீயா நானா'வில் கல்வி அவசியமா? இல்லையா? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் கல்வி தேவையில்லை என்று எப்படிப் பேசுகிறார்கள் என்று அதிசயிக்க வைத்தார்கள் ஒரு குழுவினர். பள்ளி வரையிலாவது அனைவருக்கும் கல்வி அவசியம் என்பதை மறுப்பதற்கும் ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது என்பதே ஆச்சரியம் தான்.

"எனக்குப் படிப்பு வரலை." என்பவர்கள் அவர்களுக்குப் பிடித்த வேலை பார்ப்பது நல்லது. வேலைக்குச் சென்ற பிறகு அங்கிருக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு மேன்மேலும் அந்த தொழிலைக் கற்றறிந்து முன்னேறுவது சிலருக்குச் சாத்தியமே. அவர்களுக்கு வேண்டுமென்றால் இந்த வாதம் பொருந்தும். ஆனால் கல்வி தேவையில்லை என்று பொதுமைப்படுத்துவது மிகவும் தவறான கண்ணோட்டம்.

இன்றைய உலகில் அடிப்படைக் கல்வி அவசியமாக உள்ளது. எதைப் படித்தாலும் திறமையும் உழைப்பும் இருந்தால் நிச்சயமாக முன்னேற முடியும். படிக்காதவர்கள் பலர் நன்றாக தொழில் செய்கிறார்களே என்றால் அது அவரவர் பொருளாதார வசதியைப் பொறுத்தது. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை.

பொருளாதார வசதியும் கிடையாது. படிப்பும் வரவில்லை என்பவர்கள் மட்டும் வேலைக்குச் சென்று அனுபவத்தில் முன்னேற முயலலாம். படிப்பது வேலைக்குச் செல்ல மட்டுமல்ல. பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல. நம்மைச் சுற்றி நடக்கும் நல்லது கெட்டதுகளை மூளையைப் பயன்படுத்தி பிரித்துப் பார்க்கவும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காக நாம் செய்ய வேண்டிய சமூக சிந்தனைகளை விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளவும் சமூகமாக உயர்ந்து நாட்டை உயர்த்தவும் தான். படித்தவர்கள் எல்லோரும் அப்படியான சிந்தனை கொண்டவர்களா என்று கேட்டால் அப்படியில்லை என்பது தான் வருத்தமான உண்மை. படித்தவர்கள் பலரும் முட்டாள்களாக இருக்கிறோம் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். இன்றைய கல்வி நமக்கு பட்டம் பெற்று வேலையில் சேரவே உதவுகிறது. படிப்பைத் தாண்டிய உலகத்தை அறிந்து கொள்ள நாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

இன்று திறமை, அடிப்படைக்கல்வி, விடாமுயற்சி, துறை சார்ந்த அறிவு இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்தத்துறையிலும் முன்னேற முடியும் என்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். கற்றலுக்கும் கல்விக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் உள்ளது. கல்வி கற்றால், வாழ்க்கைக்குப்  பொருந்தக்கூடிய மதிப்பைச் சேர்க்கும் புதிய ஒன்றை கற்றுக்கொண்டீர்கள் என்று அர்த்தம்.

நாம் பள்ளியில் கற்றுக்கொண்டாலும், நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியாத சில விஷயங்கள் இருந்தாலும், கல்வி அர்த்தமற்றது என்று அர்த்தமல்ல. வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பள்ளியில் கற்பிக்கப்படுவதில்லை.


எங்கள் சமூகத்தில் நெசவு நெய்வது பலருக்கும் குலத்தொழிலாக இருந்தது. பஞ்சடித்தல், நூல் தயாரிப்பு, நூலைப் பதப்படுத்துதல், சாயம் போடுதல், நெசவிற்குத் தயார்படுத்துதல், கைத்தறியில் நெசவு நெய்தல் என்று பல காலங்களுக்கு பலருக்கும் குலத்தொழிலாக இருந்து வந்தது. அதனால் அப்பா, மகன் என்று வழிவழியாக ஒரே தொழிலைச் செய்தார்கள். அவர்கள் பெரும்பாலும் கல்வி கற்காதவர்கள். காலங்கள் செல்லச்செல்ல தங்கள் குழந்தைகளை ஓரளவு படிக்க வைத்தார்கள். விவரமானவர்கள் வேறு சில தொழில்களையும் கற்றுக் கொண்டார்கள். பருத்தி விலை உயர்வு, விசைத்தறிகளின் வரவிற்குப் பின் இம்மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. வசதியானவர்கள், விசைத்தறியைக் கற்றுக் கொண்டவர்கள் மட்டுமே தொழிலைத் தொடர, பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள்.

பின், வேறு தொழில்களில் இறங்கி அவையும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வர, அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் பலரும் சொத்துக்களை இழந்தனர். இவர்களில் பலரும் கல்வியின் அவசியத்தை உணர்ந்தார்கள். சமூகப் பெரியவர்களும் அதையே வலியுறுத்தினர். பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பலரும் படித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். பெற்றோர்கள் படிக்கவில்லையென்றாலும் குழந்தைகள் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், கணிதம், அறிவியல் என்று பல துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். எட்ட முடியாத உயரம் என்ற கனவைத் தகர்த்துக் கொண்டு வருகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறார்கள். அவர்களால் முடிந்தவரை சமூகத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவுகிறார்கள். தங்களைப் போல் அவர்களையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. ஆண், பெண் இருபாலரும் இன்று கல்வி கற்பதில் போட்டிப் போட்டுக் கொண்டு படிக்கிறார்கள். பொருளாதார விடுதலை சுயமுன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதைப் பலரும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் கல்வியால் மட்டுமே சாத்தியமாயிற்று.

அதனால் கல்வி அவசியம். அவசியம். அவசியம்.








Friday, November 3, 2023

மணிமேகலை

பள்ளிப்படிப்பில் ஐம்பெருங்காப்பியங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி தான் அந்த ஐம்பெருங்காப்பியங்கள். தமிழ் வகுப்பில் இதைக் கேட்ட மாதிரி இருக்கிறதா? இதில் 'சிலப்பதிகார'த்தைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். கால் சிலம்பினால் ஏற்பட்ட குழப்பத்தில் கணவனை இழந்த கண்ணகி நீதி கேட்டு மன்னனிடம் விவாதிப்பாள். கோபத்தில் கண்ணகி மதுரையை எரித்த கதை. 'கோவலன் பொட்டல்' என்று பழங்காநத்தத்தில் ஒரு இடம் இருக்கிறது. அங்கே தான் கோவலனுக்குத் தண்டனை வழங்கியிருக்கிறார்கள். மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் கோவலன்-கண்ணகி தங்கியிருந்ததற்கான ஆதாரங்களை வரலாற்றறிஞர்கள் சிலர் திரட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோ அடிகளார்.

கோவலனின் ஆசை நாயகி கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி. அவளுடைய மகள் மணிமேகலை. துறவிக்கோலம் பூண்டு அமுதசுரபியுடன் வளைய வந்தவளைப் பற்றின கதை தான் 'மணிமேகலை'. இதனை எழுதியவர் சீத்தலைச் சாத்தனார். இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படும் இவ்விரண்டும் வாசிக்கத் தூண்டுபவை.

இதைத்தவிர மற்ற மூன்று காப்பியங்களில் இருந்து சில செய்யுள் பகுதிகளைப் படித்த மாதிரி ஞாபகம்! கோனார் நோட்ஸ் துணையுடன் வளர்ந்த தலைமுறை இந்தக் காவியங்களைக் கற்றுக் கொள்வதில் கொஞ்சம் சிரமம் தான். அதனைக் கருத்தில் கொண்டு எளிதாக வாசித்து மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கிழக்குப் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள புத்தகத்தில் ஒன்று தான் நான் வாசித்த 'மணிமேகலை'. ஆசிரியர் என்.சொக்கன். தமிழில் செய்யுளைப் புரிந்து கொள்வது எத்தனை கடினம் என்று நமக்குத் தெரியும். ஆசிரியர் உரைநடை வடிவில் அழகிய நாவல் ஒன்றைப் படைத்துள்ளார். கண் முன்னே விரியும் காட்சிகளுடன் அழகான நடை.

கிண்டிலில் எதையோ தேடச் சென்று என்றோ வாங்கி வைத்த புத்தகம் கண்ணில் பட்டது. பிறகென்ன? உங்களுக்கும் காப்பியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் வாசியுங்கள். அமேசானில் கிடைக்கிறது.


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...