Monday, February 28, 2022

நவ கைலாயங்கள்

 என்னுடைய  நவ கைலாயங்கள் - பயணக்கட்டுரை சொல்வனம் இதழ் 265ல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் கோவில்களுக்கு குறைவில்லாத மாவட்டங்களில் திருநெல்வேலியும் தூத்துக்குடியும் அடங்கும். புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்திப் பெற்ற நவ திருப்பதிகளும், நவ கைலாயங்களும் அமைந்துள்ளன. வைணவர்களுக்கு நவ திருப்பதிகள் எப்படியோ அப்படித்தான் சைவர்களுக்கு நவ கைலாய திருக்கோவில்கள். இந்தக் கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்திற்கும் உகந்த ஸ்தலமாக வழிபடப்படுகிறது. நவ திருப்பதி கோவில்களில் வெவ்வேறு நாமங்களில் பெருமாள் எழுந்தருளியிருப்பது போல, நவ கைலாயங்களில் வெவ்வேறு பெயர்களுடன் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பாபநாசம், சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேந்தபூமங்கலம் எனும் ஒன்பது ஊர்களில் கைலாய கோவில்கள் உள்ளன.

மதுரையிலிருந்து அதிகாலை கிளம்பும் பொழுது விடிய மறுத்து கருமேகப் போர்வைக்குள் வானம் கட்டுண்டு கிடந்தது. 'கஜா' புயலின் பேயாட்டத்தில் தென் தமிழகம் கலங்கி இருந்த நேரம். செல்லும் வழியெங்கும் குளிர்த்தென்றலும் கதிரவன் பவனி வராத கார் மேகக்கூட்டங்களுமாய் 'குளுகுளு'வென இதமான காலைப் பயணம். மாநிலத்தில் பல பகுதிகளிலும் சாலைகளை விரிவுப்படுத்துகிறேன் என்று சாலையோர பெரு மரங்களை வெட்டி எறிந்திருந்த காட்சியைக் கண்டிருந்த எனக்கு, பாபநாசம் செல்லும் வழியில் சாலைகளை அலங்கரித்து தோரணங்களாக நிற்கும் மரங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக நிறைவைத் தந்தது. நவ திருப்பதிகளின் தரிசனத்தின் பொழுது நீர்நிலைகள் வறண்டு இருந்த நிலை மாறி இந்த முறை குளங்கள் நிறைந்து அல்லி மலர்கள் பூத்திருக்கும் அழகைக் காண முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கவே, சில பல படங்களைக் 'க்ளிக்' செய்து கொண்டேன்.

வழியெங்கும் புற்றீசல் போல பல உணவகங்கள்! நல்ல கூட்டமும் இருக்கிறது! காலை உணவைத் திருப்தியாக ஹோட்டல் ஆர்யாஸில் உண்டோம். உணவின் சுவையும் தரமானதாக இருக்கிறது. பாபநாசம் செல்லும் வழியில் "காட்டுப்புலி" சுவரொட்டிகளைப் பார்த்தவுடன் தேக்கடி சென்று வந்த ஞாபகம் நினைவிற்கு வந்தது. வழியெங்கும் பச்சைப் பசேலென விளைநிலங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக மதுரையில் காண கிடைக்காத அழகுக் காட்சி! பள்ளிப்பேருந்துகள், கூட்டமாக மூன்று சக்கர வாகனங்கள், புழுதியைக் கிளப்பிக் கொண்டு அதிக டெசிபலில் 'ஹார்ன்' அடித்துக் கொண்டே செல்லும் லாரிகள், பொதிமூட்டைப் பேருந்துகள், 'விர்ர்விர்ர்'ரென பறக்கும் இரு சக்கர வாகனங்கள், சாலையோரக் கடைகள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், யாரையும் பொருட்படுத்தாது கால் போன போக்கில் மனிதர்களோடு மனிதர்களாக கால்நடைகள் என காலை நேரத்து காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.

'சிலுசிலு' காற்று, சிறு தூறலுடன் பாபநாசத்தை நெருங்க, தொலைவில் ஒரே பனிமூட்டம்! குளிர் அவ்வளவாக இல்லாவிட்டாலும் மக்கள் பலரும் போர்த்திக் கொண்டு நடமாடிக் கொண்டிருந்தார்கள்! பள்ளி வயதில் குற்றாலத்திற்குச் சுற்றுலா சென்ற பொழுது இக்கோவிலுக்கு வந்திருக்கிறேன். அதற்குப் பிறகு இப்பொழுது தான் வர முடிந்திருக்கிறது!

பொதிகை மலையிலிருந்து பொங்கி வரும் அருவி சமவெளியில் தாமிரபரணி நதியாக துள்ளி ஓடிக்கொண்டிருந்தது. 144 வருடங்களுக்குப் பிறகு 'மகா புஷ்கரணி' திருவிழா முடிந்திருந்தாலும் புண்ணிய நதியில் நீராட அன்றும் மக்கள் குவிந்திருந்தார்கள். கரையோரம் குப்பையும் அழுக்குமாக இருந்தாலும் ஆற்றின் நடுப்பகுதியில் தெளிவான நீரோட்டம். துணிச்சலுடன் சிலர் பொங்கி வரும் ஆற்றில் கற்களைத் தாண்டி நடுப்பகுதிக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்தார்கள். எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை! நடுநடுவே ஆற்றின் வேகம் அதிகமாக இருந்தது. கரணம் தப்பினால் மரணம் தான்! 'சில்'லென்ற காற்றும் பாய்ந்தோடி வரும் அருவியின் இரைச்சலும் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கும் மக்களுமாய் அந்த இடமே ஏகாந்தமாக இருந்தது. குளித்து விட்டு அங்கேயே திறந்த மண்டபத்தில் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தார்கள். நீராட வேண்டும் என்ற ஆசையை ஒத்தி வைத்து விட்டு நதியை வணங்கி தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். குளித்து முடித்த பெண்கள் ஈரத்தலையுடன் கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தார்கள். மனிதர்களிடமிருந்து உண்ண ஏதாவது கிடைக்குமா என்று மந்திகள் பரிதாபமாக காத்துக் கொண்டிருந்தது. அங்கு தான் முதன் முதலாக 'லாங்குர்' எனும் குரங்கினத்தைக் கண்டேன். சில படங்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றோம்.

தாமிரபரணியில் நீராடி நவகோள் வரிசையில் சிவனை வணங்க முக்தி கிடைக்கும் என்று அகத்தியர் தன்னுடைய சீடர் உரோமச முனிவருக்கு அறிவுறுத்தி, சிவனை அர்ச்சித்த தாமரை மலர்கள் எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில்கள் எழும்பியது என்பது ஐதீகம். ஒவ்வொரு கோவிலுக்கும் சுவையான தல புராணங்கள், தல விருட்ஷம், புண்ணிய தீர்த்தம் உள்ளன.

எங்களுடைய நவ கைலாய கோவில்களின் தரிசனமும் பாபநாசத்தில் இருந்து தொடங்கியது. மரங்களும் மலைகளும் சூழ, நவக்கிரகங்களில் சூரியனுக்குப் பாத்திரமான பாபநாத ஸ்வாமி திருக்கோவில் அமைந்திருந்த சூழல் மிக ரம்மியமாக இருந்தது. கோவிலின் எதிரே தாமிரபரணி புண்ணிய தீர்த்தம். முகத்திலறையும் வண்ணங்கள் ஏதுமின்றி ஏழு நிலைகள் கொண்ட கோவில் கோபுரம். என் நினைவிலிருந்த இருண்ட கோவில் அன்றும் அப்படியே இருந்தது. அம்மையும் அப்பனும் திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சி அளித்த புண்ணியஸ்தலம் இது. பாபங்களைப் போக்கும் இக்கோவிலின் மூலவர் கைலாசநாதர். அம்பாள் லோகநாயகி. இங்கே அம்மை ஸ்ரீஉலகாம்பிகைக்கு செய்யும் மஞ்சள் அபிஷேகம் பிரசித்தி பெற்றது. அங்கேயே மஞ்சளை இடித்து அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் சந்நிதி. விநாயகர், கல்யாண சுந்தரர், வள்ளி தெய்வயானையுடன் முருகன், அகத்தியர், நவக்கிரக சந்நிதிகள் சுற்றுப்பிரகாரங்களில் உள்ளது. புனுகு சபாபதி கோவிலின் வெளியே பக்தர்கள் தங்க விடுதிகளும் உள்ளது. அமைதியான கோவில். நிதானமாக இவ்விடத்தில் தங்கி அகத்தியர் அருவி, பாண தீர்த்தம், வனவிலங்கு சரணாலயம் போன்ற இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து சந்திர தலமான சேரன்மகாதேவிக்குச் செல்லும் வழியெங்கும் அடர்ந்த வெளிர்நிற மரங்கள் சாலைகளை அலங்கரித்து அழகாக நின்று கொண்டிருந்த காட்சியை மறக்காமல் 'க்ளிக்' செய்து கொண்டேன். பசுமை நிலங்கள், பனை, தென்னை, வாழை மரங்கள், மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், விவசாயிகள் என கிராமத்துச் சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீஅம்மைநாதர் திருக்கோவில். ஐந்து நிலைகளைக் கொண்ட வண்ண கோபுரம். இக்கோவிலில் கோமதி அம்மன், ஆவுடையம்பாள் என்ற பெயரில் அழைக்கப்படும் அம்மன் சந்நிதி அம்மைநாதர் சந்நிதியின் வலப்பக்கத்தில் இருக்கிறது. நந்தியும் சுவாமி சந்நிதியிலிருந்து சற்றே விலகினார் போல் இருக்கிறார். திருநீறு அலங்காரத்துடன் வெண்பட்டு உடையில் திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தார் ஸ்ரீஅம்மைநாதர். சிறிய சுற்றுப்பிரகாரம் கொண்ட கோவிலில் யாக தீர்த்தம் ஒன்றும் இருக்கிறது. முருகன், விநாயகர், நடராஜர், பைரவர் சந்நிதிகள், கொடிமரம், பலிபீடம் உண்டு. நவக்கிரக சந்நிதி இக்கோவிலில் இல்லை.

மூன்றாவது தலமான ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ள கோடகநல்லூர் செல்லும் வழியெங்கும் குண்டும் குழியுமாக மண்சாலைகள் தான். கால்நடைகளை மேய்த்துக் கொண்டுச் செல்பவர்கள், வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு ஊர்க்கதை பேசும் ஆண்கள், இரு சக்கர வாகனங்கள் அதிகம் தென்பட்டது. ஊரில் நுழையும் பொழுதே பல்லக்கில் வீதி உலா வரும் பெருமாள் தரிசனம் கிடைத்தது. சிறிய கிராமம் தான். கோவில் சுற்றுச்சுவர்களில் மராமத்து வேலை செய்து நடை பாதையைச் சீர்படுத்தியிருக்கிறார்கள். கோவிலின் அருகே வீட்டு வாசலில் உட்கார்ந்து அழகாக இரு ஆடுகள் அசை போட்டுக் கொண்டிருந்த காட்சி கொள்ளை அழகு! பரபரப்பான உலகிலிருந்து வெகு தொலைவில் இருப்பது போல் தோன்றியது. செவ்வாய் கிரகத்திற்கான இத்தலத்தில் உருவத்தில் பெரிய மூர்த்தியாக ஸ்ரீகைலாசநாதர். அழகாக குட்டி சிவகாமி அம்பாள். அலங்காரங்கள் எல்லாம் எளிமையாக மனதை கவரும் விதமாக இருந்தது சிறப்பு. நந்திக்கு விரலிமஞ்சள் மாலை அணிவித்து வேண்டுவது வழக்கமாக உள்ளது. ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற நிலையில் அனந்த கௌரி அம்மனும் காட்சி தருகிறாள். திருமணத் தடைகள் நீங்க, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கான பரிகாரத்தலமாகவும் உள்ள இக்கோவில் அமைந்துள்ள ஊர் கார்கோடகன் எனும் சர்ப்பம் பாபங்கள் நீங்கி முக்தி பெற்றதால் கோடகநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. விநாயகர், முருகன் தவிர பிற மூர்த்திகள், கொடிமரம், பலிபீடம் இக்கோவிலில் இல்லை.

அங்கிருந்து சிறிது தொலைவு மரங்கள் அடர்ந்த பிராதன சாலைப்பயணம். பிறகு மீண்டும் குண்டுகுழி மண்சாலை வழியாக செங்காணி சிவன் கோவில் என்றழைக்கப்படும் ராகு பகவானுக்கான குன்றத்தூர் கோத பரமேசுவரர் திருக்கோவில். நுழைவு மண்டபத்தில் தெற்கு நோக்கி அழகான குட்டி சிவகாமி அம்மன். லிங்கமாக இருக்கும் இறைவனின் உடலில் நாகம் இருப்பது தமிழகத்தில் இங்கு மட்டும் தான். சிவன் சந்நிதி வாயிலில் விநாயகர், முருகன் மூர்த்திகளும் கோவிலின் வெளிப்புறத்தில் பைரவர், பன்னிரெண்டு கரங்களோடு ஆறுமுக நயினார் சந்நிதிகளும் உண்டு. இக்கோவிலின் தல விருட்சம் நாகலிங்க மரம் பூத்து இருந்தது அழகு. சர்ப்ப தோஷம், நாகதோஷம் நீங்க இங்கு வழிபட்டுச் சென்றால் பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

நவ கைலாயங்களில் ஐந்தாவது தலமான குரு ஸ்தலம் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் முறப்பநாட்டில் உள்ளது. சாலை வழியாக நீண்ட பயணம். இந்த நடுக்கயிலாயத்தில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் தாமிரபரணியை 'தக்ஷிண கங்கை' என்றழைக்கிறார்கள். கங்கையில் குளித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்கு செல்லும் பொழுது நண்பகல் 12 மணியை நெருங்கி விட்டது. தமிழக கோவில்கள் நடை சாத்தும் நேரம் நெருங்கி விட்டதோ என்று பதட்டத்துடன் அங்கே சென்றோம். வாயிலில் கோவில் ஒரு மணி வரை திறந்திருக்கும் என்று பலகையில் எழுதியிருப்பதைக் கண்டவுடன் அப்பாடா என்றிருந்தது. உள்ளே சென்றால் கோவிலை மூடி விட்டு அர்ச்சகர் வீட்டுக்குச் சென்று விட்டார். அந்த வழியாகச் சென்ற பெண்மணியிடம் கேட்ட பொழுது இப்பொழுது தான் அவர் சென்றார். வீடு அருகே தான் இருக்கிறது என்று ஆளை விட்டு அழைத்து வரச் சொன்னார். அவர் அங்கு இல்லை என்ற பதில் ஏமாற்றமாக இருந்தது. ஒரு மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று போர்டு மாட்டிவிட்டு இப்படிச் செய்தால் தூரத்தில் இருந்து வருபவர்களுக்குச் சிரமமாக இருக்காதா? கொடி மரம், பலி பீடம் கொண்ட சிறிய கோவில். குரு பகவான் ஸ்தலம் என்றாலே பரிகார ஸ்தலம். மக்கள் கூட்டமும் அதிகம் வரும். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே என்று வருத்தமாகவும் இருந்தது. கைலாசநாதர் சிவகாமியின் தரிசனம் கிடைக்காத ஏமாற்றம் இருந்தாலும் 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்'என்று மனதை தேற்றி சுவாமியை வணங்கி வெளியில் இருந்த அரசமரத்தைச் சுற்றி விட்டு திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டோம்.

பசி வேறு. வழியில் ஸ்ரீ மதுரம் உணவகத்தில் அறுசுவை உண்ட பிறகு நவ திருப்பதிகளுள் ஒன்றான 'அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன்' திருக்கோவிலுக்கு வந்து சென்ற இனிய நினைவுகளுடன் தென்திருப்பேரையில் நவ கைலாய புதன் ஸ்தலத்தில் வண்டியில் காத்திருந்தோம். சிறு தூறலுடன் மழை அந்த இடத்தை ரம்மியாமாக்கியிருந்தது. சுற்றிலும் வயல்வெளிகள். வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த பழக்கப்பட்ட மாடுகள் சிறிது நேரம் எங்களை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கடந்தது. அருகே அங்கன்வாடி அரசுப் பள்ளியில் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளந்தி குழந்தைகள் கூட்டமாகச் செல்லும் ஆடுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வாசலில் நின்றிருந்தார்கள். மழையைக் கண்டதும் அகவும் மயில்கள் அந்த இடத்தை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தது. ஒரு பெண் மயிலின் கவனத்தைப் பெற இந்த ஆண் மயில்கள் தான் தோகைகளை விரித்து எத்தனை எத்தனை அழகு நடனங்களை ஆடிப்பாடுகின்றன? ஆனால் அவள் கண்டுகொள்ளவே இல்லை. தூரத்திலிருந்து அழகாகத் தெரியும் நீண்ட தோகையின் எடையுடன் மயில்கள் தாவ அதிக பிரயத்தனப்படுவது போல் தோன்றியது! மழையும் காதலும் என்றுமே அழகு தான்! கோவில் சுற்றுபுறச்சுவர் பொந்துகளில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த கிளிகள் பறப்பதும் காதலுடன் முத்தமிடுவதுமாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை.

கோவில் எதிரே இருக்கும் புது மண்டபத்தில் சிலர் எங்களைப் போலவே காத்திருந்தார்கள். அழகான கோவில் பிரகாரம். அரசமர பிள்ளையார். நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் அலங்கரிக்க பெரிய கோவில் மதிற்சுவர்கள். கோவில் திறந்தவுடன் உள்ளே சென்று விட்டோம். ஏழாவது கைலாய தலத்தில் தாமரை பீடத்தின் மேல் கைலாச நாதர். அம்மன் அழகிய பொன்னம்மை தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். நவக்கிரகங்கள், முருகன் சந்நிதிகளும், கொடி மரமும் பலி பீடமும் உண்டு. நவ கைலாயங்களில் இரண்டாவது பெரிய கோவில்.

நவ திருப்பதிகளில் சூரிய ஸ்தலமான கள்ளபிரான் கோவிலும் நவ கைலாயங்களில் சனி ஸ்தலமான ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவிலும் அமையப் பெற்ற மகத்தான ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது. சுவாமி ஸ்ரீகைலாய நாதர். அம்மன் ஸ்ரீசிவகாமியம்மை. சந்தன சபாபதியாக நடராஜரும் அருள்பாலிக்கிறார். சனி பகவானுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் வந்து செல்லும் ஆறாவது நவ கைலாய ஸ்தலம். பைரவர், பூதநாதர், முருகன் சந்நிதிகள் உண்டு. யாளி, சிங்கமுக சிற்பங்களுடன் தூண்கள் மண்டபங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. சற்றே பெரிய கோவில். கோவிலைப் புனரமைக்கிறேன் என்று மண்டபங்களையும் தூண்களையும் sand blasting செய்து வைத்திருந்தார்கள்.

அங்கிருந்து புறப்பட்டு ராஜபதி எனுமிடத்தில் அமைந்துள்ள கேது தலமான எட்டாவது கைலாய கோவிலுக்குச் சென்றோம். வெள்ள பாதிப்பிற்குப் பின் புதிதாக கட்டப்பட்டிருக்கும் கோவில் இது. மூலவர் கைலாச நாதர். அம்பாள் ஸ்ரீசௌந்தர்யநாயகி. கண்ணப்ப நாயனார், நடராஜர், தக்ஷிணாமூர்த்தி, ஆதிகைலாசநாதர், விநாயகர்,லிங்கோத்பவர், பிரம்மா, சுப்பிரமணியன், கால பைரவர், நவக்கிரக சந்நிதிகளும் உள்ளது. வெளிச்சுற்றில் 63 நாயன்மார்கள், நந்தவனத்துடன் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தக் கோவில் 'தென் காளஹஸ்தி' என்றும் அழைக்கப்படுகிறது. ஒன்பது லிங்கங்களுக்கும் நாமே பரிகார பூஜைகள் செய்யும் வசதியும் இங்குள்ளது சிறப்பு. வித்தியாசமான கோவில் அனுபவம். அந்தி சாய ஆரம்பித்து விட்டது.

சுக்கிர ஸ்தலமான ஒன்பதாவது கைலாயம் சேர்ந்த பூமங்கலத்தில் உள்ளது. ஊரின் பெயரே அழகாக இருக்கிறதல்லவா? பெரிய மதிற்சுவர்களுடன் மரங்கள் சூழ அமைதியான இடத்தில் அமைந்துள்ள பழமையான கோவில். இந்த ஊரின் அருகில் தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. இக்கோவிலுக்குச் செல்லும் பொழுது நன்கு இருட்டி விட்டிருந்தது. சுற்றுப்பிரகாரத்தில் சமய குறவர் நால்வர், நாயன்மார்களின் சிலைகள் உள்ளது. கைலாசநாதர், அழகிய பொன்னம்மை, விநாயகர், சந்திரன், சூரியன், சொக்கநாதர், மீனாட்சி, சனீஸ்வரர், பைரவர் , முருகன், லிங்கோத்பவர், நவ லிங்கம், நவக்கிரக சந்நிதிகள் உண்டு. அழகிய வேலைப்பாடுகளுடன் கருவறை விமானங்களும் கொடிமரமும் உள்ளது. கருவறை விமானத்தில் தேவியருடன் குபேரர் காட்சி அளிக்கிறார்.

நவக்கிரகங்களின் அருள் வேண்டி மக்கள் இக்கோவில்களுக்குச் செல்கிறார்கள். நவ திருப்பதி கோவில்களில் இருக்கும் செல்வச் சிறப்பும் கோவில்களின் பராமரிப்பும் நவ கைலாய கோவில்களில் இல்லையோ என்று தோன்றியது. பல கைலாய கோவில்களும் சிறு கிராமங்களில் இருப்பதும் சிறிய கோவில்களாக இருப்பதும் கூட அப்படி நினைக்க காரணமாக இருக்கலாம். அனைத்துக் கோவில்களிலும் சுவாமி, குட்டி அம்மன் அலங்காரங்கள் திவ்வியமாக இருந்தது. இக்கோவில்களில் ஆருத்ரா தரிசனம், திருவாதிரை, சிவராத்திரி, கந்தசஷ்டி, பிரம்மோற்சவம், திருக்கல்யாணம், பிரதோஷம், விஷு, குரு, ராகு, கேது, சனிப்பெயர்ச்சி நாட்களில் பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. முறையான திட்டமிடலில் ஒரே நாளில் ஒன்பது கோவில்களையும் தரிசித்து வர முடியும். நவ கைலாயங்கள் சென்று வந்த திருப்தியுடன் இரவு உணவை முடித்துக் கொண்டு மகிழ்வுடன் ஊருக்குத் திரும்பினோம்.

மகாசிவராத்திரி நாளில் விரதமிருந்து சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்காரங்களுடன் சிவனின் தரிசனம் வேண்டி மக்கள் கூட்டம் கோவில்களில் அலைமோதும். அனைவருக்கும் எனது மகாசிவராத்திரி வாழ்த்துகள்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!

படங்களுக்கு இங்கே சொடுக்கவும் நவ கைலாயங்கள் 











Sunday, February 27, 2022

பைடனின் ஆட்சிக்காலம்: ஆண்டறிக்கை

அமெரிக்க அதிபர் பைடனின் ஒரு வருட ஆட்சியைப் பற்றின என் கட்டுரை சொல்வனம் இதழ் 264ல் வெளியானது. அதன் சுட்டி இங்கே 

பைடனின் ஆட்சிக்காலம்: ஆண்டறிக்கை

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்பவர் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் முதல் நூறு நாட்களில் அவரால் சட்டபூர்வமாக்கப்படும் தேர்தல் வாக்குறுதி மசோதாக்கள் அதிக கவனம் பெறுகிறது. முதல் ஒரு வருடத்தில் ஆளும் அரசின் மீதான நம்பிக்கை, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், பணவீக்கம் போன்றவை மிக முக்கிய காரணிகளாக இடைத்தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணத்தால் அதிபரின் நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக அரசியல் வல்லுநர்களாலும் மக்களாலும் கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் கொரோனா தொற்றுப்பரவலைக் கையாளும் விதமும் ஒரு முக்கிய காரணியாக அங்கம் வகிக்கிறது எனபதை மறுக்க முடியாது.

நவம்பர் 3, 2020 அன்று நடந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக வெளிவராத நிலையில் குடியரசுக்கட்சியினரின் ஆதரவாளர்கள் குறிப்பாக, வெள்ளையர்கள் நடத்திய பாராளுமன்ற தாக்குதல், அரசியல் வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வாகி உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. நாடு பிளவுப்பட்டு நின்றிந்த நேரம். தொற்றுப்பரவலால் வேலையில்லா திண்டாட்டம், நிலைகுலைந்த பொருளாதாரம், மருந்து தட்டுப்பாடுகள், மக்களின் இறப்பு என இக்கட்டான சூழலில் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்று ஒரு வருடமும் முடிந்து விட்டது.

“தேசத்தின் ஜனநாயகத்தைக் காத்து பிளவுபட்டிருக்கும் நாட்டின் ஒற்றுமையை மீட்டெடுக்கவும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எதிர்கட்சியுடன் இணைந்து பணியாற்றி சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்துவோம்” என பதவியேற்பின் போது அதிபர் பைடன் கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதனைத் தொடர்ந்து கோவிட் நிவாரணம், இருதரப்பு உள்கட்டமைப்பு சீரமைப்பு, ‘பில்ட் பேக் பெட்டர்’ (Build Back Better) மசோதாக்கள் பைடனால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவிட்-19 நிவாரண மசோதா

தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதே பைடன் அரசின் முதன்மையான சவாலாக இருந்தது. அவரது முதல் ஆண்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை விரிவுபடுத்தியதில் தற்போது 76% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸும் 64% பேர் முழுமையாக இரண்டு டோஸ்களும் போட்டுள்ளனர். மருந்து, மருத்துவ வசதிகள், செல்வாக்கு என வளர்ச்சி பெற்ற நாடாக இருந்தாலும் மற்ற நாடுகளை விட அதிகளவில் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு இதுவரையில் 800,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். இது கிட்டத்தட்ட 44% மதுரை மக்கள் தொகை அளவு! கடந்த 11 வாரங்களில் மட்டும் 100,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததில் அதிக கொரோனா உயிரிழப்புகள் நடந்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. குடியரசுக்கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களிலும் தடுப்பூசியை எதிர்ப்பவர்களாலும் தான் இறப்பு எண்ணிக்கை அதிகமாவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

அதிபராக பதவியேற்ற முதல் ஆறு மாதங்களில் சில எதிர்ப்புகளைச் சமாளித்து $1.9 ட்ரில்லியன் “கோவிட்-19 நிவாரண மசோதா”வை இருகட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றினார் அதிபர் பைடன். இதன் மூலம் நாடு முழுவதும் சமூக தடுப்பூசி தளங்களை அமைத்தல், பரிசோதனை மற்றும் கண்காணிப்பு, விநியோக பற்றாக்குறை சிக்கல்களை நீக்குதல், உயர்தர சிகிச்சைகளில் முதலீடு செய்தல், பரவலைக் கட்டுப்படுத்த ஊதியத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட விடுப்பு வழங்குதல், பெரும்பான்மையான K-8 பள்ளிகளை பாதுகாப்பாக திறக்க தேவையான முதலீடுகளைச் செய்தல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகங்களுக்கு ஆதரவு, போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களின் வேலைகளைப் பாதுகாத்தல், அமெரிக்கா முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு $1,400க்கான காசோலைகள், வேலையின்மை காப்பீட்டை நீட்டித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த நெருக்கடியின் சுமையைத் தாங்கும் உழைக்கும் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா நுண்ணுயிரிலிருந்து மக்கள் தப்பித்து மரபணு பிறழ்வு கொண்ட வீரியமிக்க டெல்டா, ஓமிக்ரானுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் எண்பது மில்லியன் பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. வீட்டிலேயே விரைவான சோதனைகள் செய்யும் வகையில் அரசே இலவசமாக பரிசோதனைப் பொருட்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் பள்ளிகளுக்கும் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் விரைவில் தடுப்பூசிகள் செலுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இருதரப்பு உள்கட்ட சீரமைப்பு மசோதா

நாட்டில் பொருளாதார நலிவு ஏற்படும் பொழுதெல்லாம் உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வது அமெரிக்க அரசின் வாடிக்கை. அவ்வழியில் பைடனின் “இருதரப்பு உள்கட்டமைப்புச் சட்டங்கள்”, பணவீக்க அழுத்தங்களைக் குறைக்கவும், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், பல புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி பொருளாதாரத்தை முன்னேற்றவும் அமலாக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை உள்ளடக்கிய செலவுகளை பெருநிறுவனங்களின் மீதான வரிகளை உயர்த்துவதன் மூலம் செயல்படுத்த விரும்பும் பைடன் அரசின் முயற்சிக்கு குடியரசுக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு கட்சியின் ஆதரவுடன் செயல்படுத்த வேண்டிய திட்டம் என்பதில் பைடன் உறுதியாக இருந்ததால் துவக்கத்தில் $1.7 ட்ரில்லியன் திட்டமாக வரையறுக்கப்பட்டு பல இழுபறிகளுக்குப் பிறகு குடியரசுக்கட்சியினரின் ஒப்புதலுக்காக $500 பில்லியனைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இத்திட்டம். இதனால் அதிவேக இணையம், நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைத் திட்டங்களில் செலவழிக்க திட்டமிட்டிருந்த பணத்தின் அளவு குறையும். வயதான மற்றும் ஊனமுற்ற அமெரிக்கர்களுக்கான வீட்டுப் பராமரிப்பில் நீண்ட கால முதலீடு செய்தலிலும் குடியரசுக்கட்சியினர் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கான பட்ஜெட்டை மேலும் குறைத்தனர்.

நாட்டின் சாலைகள், பாலங்கள், தண்டவாளங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் நீண்ட கால மேம்பாடுகளை “பில்ட் பேக் கட்டமைப்பு” திட்டத்துடன் இணைந்து ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை மில்லியன்(1,500,000) புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி! இதற்காக ஒரு ட்ரில்லியன் டாலர் உள்கட்டமைப்பு மசோதாவையும் சிரமப்பட்டு இரு கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியதை பைடன் அரசின் சாதனையாக ஜனநாயக கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகரிக்கையில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பெரியவர்களுக்கு ஏற்படும் பல வித உடல், மன நோய்களில் இருந்து காக்க, உள்கட்டமைப்புச் சட்டத்தின் மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் $55 பில்லியன் முதலீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பழங்குடிகள் மற்றும் பின்தங்கிய சமூகங்களில் இனி ஈய குழாய்கள் பயன்பாட்டில் இருக்காது.

அமெரிக்கர்கள் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி கிடைக்கவும் இணையச் சேவைக்கான விலைகளைக் குறைக்கும் திட்ட மசோதாக்களும் இயற்றப்பட்டுள்ளது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் வண்ணம் மின்னணு வண்டிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் அரசு அதற்குத் தேவையான சார்ஜர்களை நெடுஞ்சாலைகளில், வேலை செய்யும் இடங்களில், மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிறுவ இந்தச் சட்டம் நிதியளிக்கும்.

எரிசக்தி துறையின் கூற்றுப்படி, மின் தடைகளால் அமெரிக்க பொருளாதாரம் ஆண்டுதோறும் எழுபது பில்லியன் டாலர்கள் வரை இழப்புகளைச் சந்தித்து வருகிறது. இச்சட்டத்தின் மூலம் $65 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு, அதிநவீன சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்களின் மேம்பாடு, செயலாக்கதிற்காகப் பயன்படுத்தப்படும்.

வறட்சி, வெப்பம், வெள்ளம், காட்டுத்தீ, பனிப்பொழிவு என தீவிர வானிலை மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகள், இணையத் தாக்குதல்களின் பேராபத்திலிருந்து மக்களைக் காக்கவும், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான செயல்படாத தொழில்துறை, சுரங்க நிலங்கள்,எண்ணெய் கிணறுகளை மீட்டெடுத்துச் சுற்றுப்புறச்சூலை மேம்படுத்தும் திட்டங்களையும் உள்ளடக்கியுள்ள உள்கட்ட சீரமைப்பு மசோதாவிற்கு இருகட்சிகளும் ஆதரவு தெரிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 19 குடியரசுக்கட்சி செனட்டர்கள் அதுவும் எதிர்க்கட்சி செனட் தலைவர் மிட்ச் மெக்கன்னல்-ன் ஆதரவு கிடைத்தது அதிபருக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

“பில்ட் பேக் பெட்டர்” மசோதா

அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகளும் சட்ட திட்டங்களும் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாகவும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராகவும் இருப்பதை மாற்றி அமைக்கும் விதமாக “பில்ட் பேக் பெட்டர்” மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்தார் பைடன். தற்போது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் மசோதாவில் உள்ள திட்டங்கள் பின்வருமாறு:

1. குழந்தைப் பராமரிப்புத் திட்டம்

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் கணிசமான வருவாயைத் தங்கள் குழந்தைகளின் பராமரிப்பிற்காக செலவிட வேண்டியுள்ளதால் மூன்று மற்றும் நான்கு வயது குழந்தைகளுக்கான பள்ளி, குழந்தைப் பராமரிப்பிற்கான செலவுகளை அரசே ஏற்று பெற்றோர்களுக்கு உதவும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது சிறப்பு.

2. வயதான அமெரிக்கர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புத் திட்டம்

தற்போது, ​​800,000க்கும் அதிகமான அமெரிக்கர்கள் வீட்டிலிருந்து பராமரிக்கும் மருத்துவச் சேவைகளுக்காக காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். அவர்களின் மருத்துவச் செலவுகளையும் அந்தந்த குடும்பங்களே ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களைக் குறைக்க, “பில்ட் பேக் பெட்டர்” கட்டமைப்பில் அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டை நிரந்தரமாக மேம்படுத்த அரசு முதலீட்டைச் செய்யவிருக்கிறது.

3. குழந்தை வரிவிலக்கு மாற்றத் திட்டம்

2021ல் குழந்தைகளுக்கான வரிவிலக்கு (தகுதி அடிப்படையில்) $2000 என இருந்தது. பெற்றோர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து குடும்பச் செலவுகளை ஈடு கட்ட உதவும் வகையில் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆறு வயதை எட்டாத ஒவ்வொரு தகுதியுள்ள குழந்தைக்கும் $3,600ம், ஆறு முதல் 17 வயது வரை தகுதிபெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் $3,000ம் என இத்திட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

4. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டம்

பைடன் அரசின் தேர்தல் அம்சங்களில் சுற்றுப்புறச்சூழல், பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்கள் முக்கியமானது. அதன் தொடர்பில் அரசும் பல முயற்சிகளை செய்து வருகிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃகு மற்றும் பிற பொருட்களுடன் காற்றாலை, விசையாழி கத்திகள் முதல் சோலார் பேனல்கள், மின்சார கார்கள் வரை அமெரிக்காவிலேயே கட்டமைக்க, மானியங்கள், கடன்கள், வரிச்சலுகைகள் அளித்து சுற்றுபுறச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் ஆற்றலைத் தயாரிக்க முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் கட்டமைப்பை அதிகரித்து வேலைவாய்ப்பினையும் பெருக்குவதே இதன் முதன்மை குறிக்கோள். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு துறைமுக மின்மயமாக்கலுக்கு நிதி, தூய்மையான போக்குவரத்து மானியங்கள் மூலம் , பேருந்துகள், டிரக்குகள் கட்டமைப்பில் மாற்றங்கள், பின்தங்கிய சமூக மேம்பாட்டிற்காக 40% முதலீட்டின் லாபங்கள் செலவிடும் திட்டங்கள் இதில் அடங்கும். கடலோர மறுசீரமைப்பு, வன மேலாண்மை மற்றும் மண் பாதுகாப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கான பின்னடைவு மற்றும் இயற்கை தீர்வுகளை மேம்படுத்த உதவுகிறது இச்ச்சட்டம். இந்த கட்டமைப்பு விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் வன நில உரிமையாளர்களுக்கு லாபகரமானதாகவும் சுற்றுபுறச்சூழலைப் பாதிக்கும் உமிழ்வைக் குறைப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும்.

5. மலிவு விலை சுகாதார சேவை விரிவாக்க திட்டம்

இத்திட்டம் அமலாக்கப்பட்டால் இனி வரும் காலங்களில் மருந்துகளின் விற்பனை விலை நிர்ணயத்தில் அரசாங்க சுகாதார காப்பீட்டு நிறுவனத்தின் பங்கும் இருக்கும். இதுவரையில் மருந்து நிறுவனங்கள், சுகாதார காப்பீட்டுத் துறை, மருந்தகங்கள் மட்டுமே மருந்துகளின் விலையை நிர்ணயித்து வருகிறது. பணவீக்கத்தை விட மருந்துகளின் விலையை உயர்த்தினால் உற்பத்தியாளர்கள் வரி அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. இன்று மில்லியன் கணக்கான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆண்டுக்கு $6,000க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்வதைக் குறைக்க உறுதி செய்கிறது இத்திட்டம். இன்சுலின் விலையையும் குறைத்து, நீரிழிவு நோயாளிகள் மாதம் $35மட்டுமே செலுத்தி இன்சுலின் மருந்துகளை வாங்கவும் வழி செய்கிறது.

ஒபாமாகேர் பராமரிப்புச் சட்டத்தின் மூலம் காப்பீடு வாங்கும் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கான பிரீமியத்தை குறைக்கவும் , காப்பீடு இல்லாத மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல்நலக் காப்பீட்டை இத்திட்டத்தின் மூலம் பெறுவார்கள் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இருகட்சியினரின் ஆதரவும் இத்திட்டத்திற்கு கிடைக்குமா என தெரியவில்லை.

6. நடுத்தர மற்றும் பின்தங்கிய வர்க்கத்தை வலுப்படுத்தும் திட்டம்

உயர்நிலைப்பள்ளி வரை அனைவருக்கும் கிடைக்கும் இலவச கல்வி, கல்லூரியில் பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைத்து வரும் இன்றைய நிலையை “பில்ட் பேக் பெட்டர்” கட்டமைப்பு மாற்றியமைக்க உதவுகிறது. சிறுபான்மையினருக்கான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சேவை நிறுவனங்களில் மாணவர்கள் கல்வி கற்கும் திறனை உருவாக்க, ஆராய்ச்சி உள்கட்டமைப்பை நவீனமயமாக்க , குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கவும், அதிக ஊதியம் பெறும் வேலைகளுக்கான பயிற்சி அளிக்கவும், துறை சார்ந்த பயிற்சி வாய்ப்பை உருவாக்கவும் பின்தங்கிய சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யவும் இத்திட்டம் உதவும்.

சுமார் 17 மில்லியன் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க, ஈட்டப்பட்ட வருமான வரிச்சலுகை வரம்புகள் (EITC) நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய கிராமப்புற கூட்டாண்மை திட்டத்தின் மூலம் பூர்வகுடிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படும்.

பல மில்லியன் அமெரிக்க குழந்தைகளுக்கு இலவச பள்ளி உணவை விரிவுபடுத்தி ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்கும் திட்டமும் இதில் அடங்கும்.

நாட்டின் மிகப் பெரிய பிரச்சனைகளுள் ஒன்றான குறைந்த விலையில் வீட்டு வசதி என்பது ஏழைகளுக்கு கனவாகவே இருந்து வருகிறது. சமத்துவமான சமூகங்களை நிர்மாணிக்க அரசாங்கமே ஒரு மில்லியன் வீடுகளை கட்ட உதவி செய்வதன் மூலம் வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கான விலை அழுத்தங்களைக் குறைக்கும். அமெரிக்கா முழுவதிலும் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களில் உள்ள பொது வீட்டுவசதிப் பங்குகளின் மூலதன தேவைகளையும் நிவர்த்தி செய்யும்.

குழந்தைகளையும் பெற்றோர்களையும் பிரித்து மனிதாபிமானமற்ற முறையில் ட்ரம்ப் அரசு எல்லையில் மேற்கொண்ட குடியேற்ற நிகழ்வுகளை யாரும் மறந்திருக்க முடியாது. குடியேற்ற பின்னடைவுகளைக் குறைக்க சட்டப் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துதல், புகலிட அமைப்பு மற்றும் எல்லைச் செயலாக்கத்தைத் திறமையானதாகவும் மனிதாபிமானதாகவும் மாற்றுவதற்கான குடியேற்ற சீர்திருத்தத்தில் $100 பில்லியன் முதலீடு செய்வது இந்த கட்டமைப்பில் அடங்கும்.

மக்களுக்கான இத்திட்டங்களில் சிலவற்றை குடியரசுக்கட்சியினரும் பைடன் அரசின் கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக, ஜோ மன்ச்சின்(வெஸ்ட் வெர்ஜினியா செனட்டர்), கிரிஸ்டன் சினேமா (அரிசோனா செனட்டர்)வின் எதிர்ப்பால் மெஜாரிட்டி ஒப்புதலைப் பெற அதிபர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது. “பில்ட் பேக் பெட்டர்” திட்டத்திற்கான $5ட்ரில்லியன் பணத்தை எங்கிருந்து எப்படி பெறுவது என்பதில் தான் சிக்கலே. இத்திட்டங்கள் முழுவதுமாக செயல்பட, செல்வந்தர்கள், முதலீட்டாளர்கள், பெருநிறுவனங்கள் மீது வரி உயர்வுகள் விதிக்கப்பட்டால் நுகர்வோர் மற்றும் தொழிலாளர்கள் மீது தான் அதன் தாக்கம் எதிரொலிக்கும். விலையேற்றம், குறைவான தயாரிப்பு, சேவைத் தரம், பணிநீக்கங்கள் போன்றவை இன்னும் அதிகமாக நிகழும். “பில்ட் பேக் பெட்டர் திட்டங்கள் 125,000க்கும் குறைவான முழுநேர வேலைகளை மட்டுமே உருவாக்கும். நிகர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.48 சதவீதம் இழப்பு ஏற்படும்” என்றும் வரி அறக்கட்டளை மதிப்பிடுகிறது. பத்து வருடங்களுக்கான இத்திட்டங்களுக்கு காங்கிரஸ் கிட்டத்தட்ட மூன்று ட்ரில்லியன் டாலர் கூடுதல் வரிகளைச் சுமத்தினால், அதன் விளைவாக GDP மற்றும் வேலை இழப்புகள் இன்னும் வியத்தகு அளவில் இருக்கும். அதற்காக பணத்தை அச்சிடுவது பொருளாதாரத்திற்கு அதிக பேரழிவையே ஏற்படுத்தும். கோவிட்-19 லாக்டவுன்கள், மீட்பு தொடர்பான அரசாங்க செலவினங்கள், பணத்தை அச்சிடுதல் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பணவீக்க நெருக்கடியையே சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் இத்திட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு மேலும் கூடுதலான சுமையாகவே இருக்கும் என்பதே எதிர்ப்பாளர்களின் வாதம். இத்திட்ட ஒப்புதல் பெற, ஜனநாயக கட்சியின் முக்கிய தேர்தல் அம்ச திட்டங்கள் சிலவற்றை சமரசம் செய்ய வேண்டியுள்ளதால் இந்த மசோதா தோல்வியடைந்ததாகவே கருதப்படுகிறது.

இதைத்தவிர, வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற ஜனநாயக கட்சியினர் தவற விட்டாலும் குடியரசுக்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் சட்டத்தில் பல மாறுதல்களைத் தங்களுக்குச் சாதகமாக கொண்டு வந்துள்ளது ஆளும் கட்சிக்குப் பின்னடைவே. செனட்டில் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பைடன் அரசின் ஜோ மன்ச்சின் எதிர்ப்பே காரணமாகி விட்டது.

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மாணவர் கடனை ரத்து செய்யத் தவறியதும் குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற முதல் ஆண்டு முடிவதற்குள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க குடும்பங்கள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பயனளிக்கும் கோவிட் நிவாரணம், இருதரப்பு உள்கட்டமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியதில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதனால் பதவியேற்பு நாளில் 9 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம் 3.9 சதவீதமாகக் குறைந்தது. துவக்கத்தில் அதிபருடைய செயல்திறனுக்கு 56 சதவிகித மக்கள் ஆதரவளித்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகளை அவசர கதியில் வெளியேற்றி தாலிபான்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது, கொரோனா கட்டுப்படுத்தலில் நடந்த சில குழப்பங்கள் என மக்களுக்கு அவர் மீதிருந்த நம்பிக்கை பொய்த்து முதல் வருடத்திலேயே அவருடைய செயல்திறனுக்கு 42 சதவிகிதமாக ஆதரவு குறைந்து விட்டது. இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் ஜனநாயக கட்சிக்கு இது மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

மறுபுறம், தேசிய பணவீக்கம் நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் எரிவாயு, உணவு, வீடு போன்ற அடிப்படை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்து நடுத்தர மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது. தற்போது சீனா, ரஷ்யாவுடன் தொடரும் மோதல் போக்கும், எல்லையில் குடியேற்ற சீர்திருத்தங்களில் மாற்றங்கள் ஏதுமின்றி ட்ரம்ப் அரசின் கொள்கைகளே தொடருவதும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

அரசியலில் இருகட்சியினருடன் இணைந்து பணியாற்றும் சாதுரியம் தனக்கு உள்ளது என்று பதவியேற்பின் போது கூறியவர் “பில்ட் பேக் பெட்டர்’ மசோதா விஷயத்தில் தன்னுடைய கட்சியில் உள்ளவர்களிடம் கூட பெரும்பான்மை பெற முடியாமல் தத்தளிப்பது அவரது நிர்வாகத் திறமையின்மையாக பொலிட்டிகோ நடத்திய கருத்துக்கணிப்பில் 49% வாக்காளர்கள் சந்தேகித்துள்ளனர்.

குழப்பமான கால கட்டத்தில் பதவியேற்று கோவிட் கலவரங்களுக்கிடையில் தான் சிறப்பாக செயல்படுவதாக ஜனவரி 19 கூட்டத்தில் அதிபர் பைடன் கூறினாலும் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்திருக்கிறார் என்பது தான் உண்மை. மக்களின் ஏமாற்றம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Friday, February 18, 2022

இரங்கல் குறிப்பு - டாக்டர்.நொரிஹிகோ உச்சிதா


என் தாய்மொழி சௌராஷ்ட்ரா. என் மூதாதையர் குஜராத்தில் சௌராஷ்ட்ரா பகுதியைச் சேர்ந்தவர்கள். இஸ்லாயமியர்களின் படையெடுப்பின் போது அவர்களுடைய கொடுங்கோலுக்கு அஞ்சி தங்கள் பிறந்தகத்தை விட்டு வெளியேறிய பலரில் மூதாதையர்களும் அடங்குவர். அங்ஙனம் புலம்பெயர்தலில் சிலர் வரும் வழியில் கர்நாடகா, ஆந்திராவில் தங்கிவிட, (இன்றும் திருப்பதியில் என் தாய்பாஷை பேசும் மக்கள் இருக்கிறார்கள்) ஒரு சாரார் மட்டும் மதுரைக்கு திருமலை நாயக்கரால் அழைத்தது வரப்பட்டார்கள் என்கிறது வரலாறு. குலத்தொழிலான நெசவுத்தொழிலில் புலமை பெற்றிருந்ததாலேயே "பட்டுநூல்காரர்கள்" என்றே சமூகம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. வளரும் வயது வரை தாய்மொழி எழுத்துக்களின் அறிமுகம் எனக்கு கிடையாது. பேச்சு வழக்கு மட்டுமே இருந்தது. அவரவர்க்கு இருக்கும் தாய்மொழி மீதான அபிமானம் போல எனக்கும் என் தாய்ப்பாஷை மீது அளப்பரிய காதல் உண்டு. எங்களுக்கே எங்களுக்கான சில கலாச்சார பழக்கங்கள், உணவு, உடைகள், திருவிழாக்கள் என்ற பெருமிதம் நிறையவே உண்டு. அதுவும் மதுரை சௌராஷ்ட்ரா மக்களுக்கு அதிகமாகவே இருக்கும். எங்கள் சமூகத்து மக்கள் திண்டுக்கல், திருநெல்வேலி, கும்பகோணம், சேலம், சென்னை என்று பரவலாக இருந்தாலும் மதுரையில் அதிகளவில் இருக்கிறார்கள். அரசியலில், விடுதலைப் போரில் பங்கேற்ற பெரியவர்கள் பலரும் உள்ளனர். நாட்டிற்கும், வாழும் மாநிலத்திற்கும், பழகும் மக்களுக்கும்  விசுவாசமாக நடக்கும் தேசிய அபிமானிகள் எம்மக்கள்.

இப்படிப்பட்ட ஒரு சிறிய சமூகத்தைப் பற்றி அறிந்து அதனைப் பற்றி ஆராய ஜப்பானிலிருந்து வந்தவர் தான் டாக்டர். நொரிஹிகோ உச்சிதா. அவர் பிளா குடும்பங்களுடன் நெருங்கிப் பழகி, ஒரு சௌராஷ்ட்ராவாக வாழ்ந்து எங்களுடைய பழக்க வழக்கங்களை, வரலாறுகளை ஆராய்ந்து மிகப்பெரிய தொகுப்புகளை எழுதியுள்ளார். என் கணவர் மூலம் இந்த தகல்வல்கள் எனக்குத் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் மதுரையில் சந்தித்துமிருக்கிறார்கள்.

ஜப்பானில் இருந்த ஒருவருக்கு பல மைல்களுக்கு அப்பால் மதுரையில் இருக்கும் ஒரு சமூகத்தினரைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற உந்துதல் எதுவாக இருந்திருக்கும்? அதிசயம் தானே?! அப்பேர்பட்ட நல்ல மனிதர் இறந்து விட்டார் என்ற தகவல் வருத்தமாக இருந்தாலும் நிறைவாக வாழ்ந்த அந்த ஆத்மா சாந்தி பெற இறைவன் அருளட்டும்.

டாக்டர். நொரிஹிகோ உச்சிதா பற்றின கணவரின் சிறு குறிப்பு.
Dr Norihiko Uchida, a scholar from Japan, and who did significant research in finding and compiling the literature of the sourashtrians, passed away yesterday. He also compiled a Sourashtra dictionary, which is a remarkable feat for any foreigner to the sourashtra language. That dictionary is in fact the only one ever put together!

I have seen him once at Madurai thirty years or so before when he used to regularly visit and spent an evening with him. I have his book ‘the oral literature of the sourashtrians’ and in fact set to tune too one of the marriage songs he had collected in his search of the literature of sourashtrians. I remember with pleasure the splash it made among those who listened to my version of that song. It begins with caricaturing the bridegroom as ‘dhovro novro’ (a very old bridegroom) and making fun of him in the entire song in such a playful manner that it would have brought only joy and laughter on a happy occasion as the marriage ceremony.

That such lively folk songs which were sung in sourashtra by the Sourashtrians in various occasions as marriages, even on first nights, was entirely unknown to me till I came across him and this book. The sourashtrians of today have no such singing and dancing in their marriages or other ceremonies. There are many other songs for many other occasions too, in that book! He took the efforts of traveling to many unknown cities forty years before in his search of the sourashtra literature. That no other sourashtrian took any such efforts after him makes even more remarkable his achievements.

Om shanthi.



While you were sleeping



கொரியன் தொடர்களைப் பார்க்க முதலில் கதையின் நாயகன் நாயகிகளைப் பிடிக்க வேண்டும் பிறகு கதை. சில நேரங்களில் கதை நடக்கும் இடங்களும் கூட. "While you were sleeping" தொடரில் வரும் துடிப்பான நாயகி, 'உயர்ந்த' கதாநாயகன் ம்ம்ம்ம் எனக்குப் பிடித்த கொரியன் மாதவன் வேறு. இனி எண்டே நாடு சவுத் கொரியா எண்டே நாயகன் மாதவன்னு பார்க்க ஆரம்பித்தாயிற்று. என்னிடம் இருக்கும் நல்ல பழக்கமே ஒரு தொடரை ஆரம்பித்து விட்டால் அது முடியும் வரை வேறு வேளையில் கவனம் செல்லாது தொடரை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவேன். அப்படித்தான் இந்த நாடகமும் என்னை பைத்திக்காரியாக்கி விட்டது😍எப்படித்தான் இந்த மாதிரி கதைகள் எல்லாம் இந்த கொரிய நாடக கதாசிரியர்களுக்கு மட்டும் கிடைக்கிறதோ? அழகான கதாபாத்திரங்கள். சிறுசிறு பூக்கள்  போட்ட கண்களை உறுத்தாத உடைகள் இந்த கொரிய பெண்களுக்கு எத்தனை பாந்தமாக இருக்கிறது! 

தன் கனவில் பார்க்கும் நிகழ்வுகள் நேரில் நடப்பதை பார்த்து பயந்து போயிருக்கும் நாயகி, தன்னைப் போலவே கனவு காணும் இரு இளைஞர்களையும் காண நேரிட்டு அவர்களுடன் பழகுகிறாள். மூவரும் சேர்ந்து பல நல்ல காரியங்களைச் சாதிக்கிறார்கள். பதினாறு பாகங்கள். ஒவ்வொன்றும் ஒரு கதையுடன் ஒன்றுக்கொன்று தொடர்புடன். பார்வையாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் திறமை இந்த கதாசிரியர்களுக்கு இருக்கிறது. அழகான காதல், பொறாமை, ஆழமான நட்பு, குடும்பம் என்று அழகாக நகர்வது அருமை. காலை உணவை அவர்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிடுவது பார்க்கவே நன்றாக இருக்கும்.

வெளிப்படையாக சொல்வது காதல் அல்ல. சிறு சிறு விஷயங்களில் காட்டும் தோழமையும் அன்பும் வேண்டிய நேரங்களில் ஆதரவும் என மென்காதல் 'ஊலலலா' ரகம். எனக்குப் பிடித்த உணவுக்காட்சிகளும் ஏராளம். கொரியன் உணவுகள் சாப்பிட பழக வேண்டும் 😋

தன் கனவில் தந்தை இறப்பது போல் வருவது உண்மையாக நடந்ததைப் போல, தான் இறப்பதாக வரும் கனவும், தன் காதலன், நண்பர்களுக்கு நடக்கவிருக்கும் துக்க சம்பவங்களால் பாதிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுவதும் அதைச் சாதூரியமாக மூவரும் சேர்ந்து முறியடிப்பதும் என்று ஒவ்வொரு பாகங்களும் 'அட' போட வைக்கிறது.

ஒவ்வொரு பாகத்தையும் ஒரு திரைப்படம் போல் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். வசனங்களும் அத்தனை அருமையாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் தானோ என்னவோ கொரியன் தொடர்கள் மனத்தைக் கவர்கிறது! பல நாட்களுக்குப் பிறகு பார்க்க ஆரம்பித்து பிடித்தும் போன தொடர்.

"ஹுலு"(Hulu)வில் காண கிடைக்கிறது.

Friday, February 4, 2022

Mad for each other

அப்பாஆஆஆ! என்னா கத்தல் என்னா கத்தல்! பார்க்கிற நமக்கே பீதியாகி விடுகிற அளவுக்கு முதல் இரண்டு மூன்று பாகங்கள் ஒரே கோபம், காட்டுக்கத்தல். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு பார்த்தால், சமூகத்தால் பாதிக்கப்பட்ட இருவர் முட்டல் மோதலில் துவங்கி தம்மைச் சுற்றியுள்ளவர்கள் தான் பைத்தியங்கள் என்று உணரும் வேளையில் இருவரும் உள்ளத்தளவில் நெருங்கியிருப்பார்கள். கிளைக்கதைகளும் சுவாரசியமாக இருக்கிறது.

இதைக் கண்டால் பயம், அதைக் கண்டால் பயம் எனும் 'தெனாலி' பெண் கதாபாத்திரம். திருமணமான ஆணைக் காதலித்த குற்றத்திற்கு அவன் மனைவியிடம் அவமானப்படுகையில் தான் அவளுக்கு உண்மை தெரிகிறது எப்படிப்பட்ட மூடனை காதலித்தோம் என்று! அவனோ சைக்கோ பேர்வழி. அவளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க, தன்னை யாரோ தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற பயத்துடனே வாழும் சிறிது மனம்பிறழ்ந்த கதாநாயகி. வேலையிடத்தில் ஏற்பட்ட பிரச்னையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு மனசிகிச்சைப் பெற்று வரும் கதாநாயகன்.

அமெரிக்காவில் ஒருவர் மன பாதிப்புக்கு உள்ளானால் மனநல சிகிச்சைப் பெறுவது சர்வ சாதாரண விஷயம். அதுவும் இந்த கொரோனா காலத்தில் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் மன உளவியலார்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். அவர்களுடைய வேலையே நோயாளிகள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதும் தகுந்த கேள்விகளைக் கேட்டு நோயாளிகளின் சிந்தனைப் போக்கை மாற்றுவதும் தான். அதைச் சரியாக பிரதிபலித்திருக்கும் அந்த கதாபாத்திரம். தொடரின் துவக்கமே அங்கிருந்து தான் ஆரம்பமாகும்.

குடும்ப வன்முறை எத்தகைய மனச்சோர்வையும் பயத்தையும் பாதிப்புகளையும் தரவல்லது என்பதை மிக அழகாக இத்தொடரில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதிலிருந்து மீண்டு வருவது அத்தனை எளிதல்ல. அதனை நன்கு புரிந்து கொண்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்க முடியும். கதாநாயகன், நாயகியின் வலியைப் புரிந்து கொண்டு அவளின் காயத்திற்கு மருந்தாக இருப்பதும் எதிரும் புதிருமாக ஒருவரை ஒருவர் தவிர்த்துக் கொண்டிருந்தவர்கள், ஒருவருக்கொருவர் இல்லாத நிலையாக காதல் அரும்பும் நேரம், இருவருக்குள்ளும் மாறுதல்கள் துவங்குகிறது.

"If you can't avoid it, fight it.
If you can't avoid it, enjoy it." என கூறும் மனநல சிகிச்சையாளருக்கு
"I am now at a point where I enjoy fighting it." என பதில் கூறுவதில் அவனுக்குள் மாற்றம்.

பெற்றோர்களின் மனநிலையையும் ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் கூட நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நம்மூரில் ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு கிரக நிலையின் சாதக பாதகங்களை அறிந்து கொள்வது போலவே கொரியர்கள் 'shaman'களிடம் தஞ்சம் புகுகிறார்கள்.

குறையற்ற மனிதர்கள் என்று இவ்வுலகில் எவருமில்லை. அதையும் மீறி ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் வலியும் வேதனைகளும் மற்றவரைப் புரிந்து கொண்டு அன்பாக இருக்க முடியும் என்பதை அவர்கள் பாணியில் சொல்லியிருக்கிறார்கள். சாய்ந்து கொள்ள தோளும், காது கொடுத்து கேட்கும் நம்பிக்கையான மனிதர்கள் மட்டும் கிடைத்து விட்டால் வாழ்க்கையில் இழந்த இன்பங்களைப் பெறலாம். எதுவும் சாத்தியம். ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து அவரை எடைபோடும் சமூகத்தில் பயத்தைத் துணிவாக எதிர்கொள்வது எப்படி, மூன்றாம் பாலினத்தவர் என்று பலவற்றையும் தொட்டுச் செல்கிறது. கண்டதும் காதல் கதை கிடையாது. பல நாட்கள், பல சண்டைகள், சில புரிதல்கள் என்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் எதார்த்த காதல். 

ஆடம்பரமான அலங்காரங்கள், உடைகள், கவர்ச்சிகரமான நாயக, நாயகிகள் இல்லையென்றாலும் சமூக பிரச்னைகளை வெளிக்கொணர்ந்து பார்க்க வைத்து விட்ட தொடர்.

இப்படியெல்லாம் ஒன்றை தமிழில் எதிர்பார்க்க முடியுமா😒😒😒 

























Thursday, February 3, 2022

தம்பி - கௌதம சித்தார்த்தன்

சிறு குழந்தைகள் பலரும் தங்களுக்கான உலகத்தை சிருஷ்டிக்கொண்டு ஆனந்தமாக இருப்பார்கள். பெற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்களில் தாங்களும் கதாபாத்திரமாக உலவுவார்கள். அப்படித்தான் இக்கதையில் வரும் ஆத்மா எனும் சிறுவனும். தம்பி எனும் ஒரு உருவத்தைத் தன்னுலகில் படைத்துக் கொண்டு வாழ்கிறான். பெரியவர்களுக்கு அவன் ஒரு மனம் பிறழ்ந்த குழந்தையாக தெரிகிறது. அவனுடைய உலகில் ஆனந்தமாக தன்னுடைய தம்பியுடன் இருந்தவன் அப்பா போடும்  இறுதி நாடகத்தில் சுய நினைவுக்கு வருகிறான்.  சிறு குழந்தைகள் கையில் சதா ஒரு பொம்மையுடன் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அதுவும் இங்கே பெண் குழந்தைகள் பொம்மையை வைத்து பேசி சிரிப்பதும், தலை வாரி விடுவதுமாய் இருப்பார்கள். 

மகள் அப்படித்தான் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள். அன்று பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகள், நண்பர்களிடையே நடந்த சண்டைகள், அம்மா, அப்பாவிடம் பேச தயங்கும் விஷயங்கள் கூட அங்கே பேச்சாயிருக்கும். அவர்களின் தனிமையைப் போக்கிக் கொள்ள அம்மா/அப்பா/நண்பர்கள் என துணை கிடைக்காத பட்சத்தில் அவர்கள் உலகில் நிகழும் காட்சி இது. குழந்தைகள் தனித்து விடப்படும் பொழுது ஆதரவாக யாரும் இல்லாத நிலையில் இப்படியொரு கதாபாத்திரத்தைப் படைத்துப் பொழுதைப் போக்குவார்கள். 

பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை விட படிக்க ஏராளமான பாடங்கள் வெளியுலகில் இருக்கிறது என்பதையும் ஆசிரியர் போகிற போக்கில் சொல்வதில் தான் எத்தனை உண்மை என்பது வளர்ந்தவர்களுக்குத் தெரியும்.

ஒரு அப்பாவின் மனப்போராட்டமும், கருவை இழந்த அம்மாவின் எதிர்வினையும்  அச்சிறுவனின் எதிர்பார்ப்பின் ஏமாற்றமும் அதனைத் தொடர்ந்து வாழும் வேறொரு உலகமும் என உளவியல் போராட்டங்களைப் பிரதிபலிக்கும் கதை 'தம்பி'. 

தம்பி - கௌதம சித்தார்த்தன்


Tuesday, February 1, 2022

விடிவதற்கு முன் - அசோகமித்திரன்

எண்பதுகளில் தமிழகத்தில் வளர்ந்தவர்களுக்கு தண்ணீர் கஷ்டம் என்ன என்பது நன்கு தெரியும். அதுவும் கோடைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் குழாயடியில் வரிசையில் காத்திருக்கும் எவர்சில்வர், பித்தளை, பிளாஸ்டிக் என்று சிறிதும் பெரிதுமாக பானைகள், குடங்கள், வீட்டு வேலைகளை அவசர கதியில் முடித்து விட்டு ஓடி வரும் பெண்கள், தங்கள் பாத்திரங்களுக்கு காவலுக்காக காத்திருக்கும் குழந்தைகள், தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை எடுத்துச் செல்ல சில ஆண்கள் என்று பழைய நினைவுகளைக் கிளப்பி விட்டது இந்த கதை.

எங்கள் வீட்டில் சாயப்பட்டறைக்காக அதிக தண்ணீர் தேவைப்படும். அடிக்கடி மோட்டார் போட்டு கிணற்று நீரை எடுத்தால் மோட்டார் ரிப்பேர் ஆகி விடும். ஒரு மணி நேரம் ஓட விட்டு, இரண்டு மணி நேரம் இடைவேளை. இப்படித்தான் தண்ணீர் தொட்டியை நிரப்புவோம். அது போக, வீட்டில் தண்ணீர்க் குழாய் இருந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள், வாரத்தில் இரண்டு நாட்கள் என்று பஞ்ச காலத்தில் அரசாங்கம் தண்ணீர் விடும் பொழுது அதையும் விடாமல் உறைகளில் சேர்த்து வைப்போம். நூல்களை அலச அத்தனை தண்ணீர் தேவைப்படும்!

வீட்டில் குழாய் இருக்கிறது என்று தெரிந்து எங்கெங்கிருந்தோ மக்கள் ஒரு பானை தண்ணீராவது கொடுங்கள் என்று கேட்க, அம்மாவும் அனுமதிப்பார். அங்கு சாதி, இனம், மதம் எல்லாம் இருக்காது. சக மனிதர்களின் வேதனைகளும் கஷ்டங்களும் தான் தெரியும். சில நேரங்களில் குழாயைத் திறந்தால் வரும் தண்ணீர், பல நேரங்களில் பம்ப் வைத்து அடித்தால் மட்டுமே வரும். வீட்டில் மோட்டர் வைத்து பலருக்கும் தண்ணீர் கொடுத்திருக்கோம். சட்டப்படி தவறு தான். ஆனால், வேறு வழியில்லை. எங்கள் தெருவில் இருந்த அந்தோணி என்பவர் வீட்டில் மோட்டர் வைத்து அவரும் அவர் பங்குக்கு தண்ணீர் கொடுப்பார்.

"தண்ணீர் தண்ணீர்" என்று பாலச்சந்தர் எடுத்திருந்த படத்தில் தமிழ்நாட்டின் பஞ்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். அன்றிருந்த நிலை இன்று இல்லை. அந்த கொடுமையான பஞ்ச நாட்களில் இருந்து கற்றுக் கொண்ட மாதிரியும் தெரியவில்லை. ஆறு, ஏரி, குளங்களில் மணல் திருடு, நீர்நிலைகளில் கட்டடங்கள் கட்டி மழைத்தண்ணீர்நிலத்தடியைச் சேரும் பாதையை அடைத்து விட்டு பாட்டில்களில் வரும் தண்ணீரையும் கேன் தண்ணீரையும் நம்பி மாடி வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏதோ சில நல்ல உள்ளங்கள் எதிர்கால சந்ததியினருக்காக குளங்களைத் தூர் வார, மதுரையில் தெப்பக்குளம், கண்மாய்கள், வைகை ஆறு தற்போது நிரம்புகிறது. மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வர வேண்டும். இன்று நினைத்துப் பார்த்தால் நிலத்தடி நீரை உறிஞ்சிய நாம் அதனைப் பெருக்கும் வழிகளை மறந்து விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது. மழை நீர் நிலத்தில் சேர்ந்து நிலத்தடி நீரைப் பெருக்கும் வழிகளைக் கண்டறிந்து செயல்படுத்த மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அரசும் உணர வேண்டும். சென்னை வெள்ளம் நினைவுப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. நாம் தான் உணராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தன்னலமில்லாத மக்களுக்கான அரசும், பொறுப்பான மக்களால் மட்டுமே மாற்றங்களைக் கொண்டு வர முடியும். இந்தியாவில் விரைவில் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பிபிசி தயாரித்த குறும்படத்தில் விளக்கியிருக்கிறார்கள். அது எத்தகைய கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைக்கவே கலக்கமாக இருக்கிறது.

அசோகமித்திரனின் இக்கதையில் தண்ணீருக்காக எளிய மக்கள் படும் அவலத்தைக் கண் முன்னே கொண்டுவந்திருக்கிறார். மக்களோடு கால்நடைகளும் தண்ணீருக்காக அலைகிறது. கதையின் முடிவில் தன்னுடைய கஷ்டத்திலும் கன்றுக்குட்டிக்குத் தண்ணீர் கொடுக்கும் பங்கஜம் போல பல மனிதர்கள் இருக்க இன்னும் மழை பொழிகிறது.

இதுதான் அசோகமித்திரன். தினம் தினம் நடக்கும் வாழ்க்கையைச் சொல்லி நம்முடைய அனுபவங்களையும் நினைவுகளையும் கிளறி விடுகிறார்.

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...