Thursday, October 5, 2023

நீயா நானா?


'அதிகமாக உணவை வெளியில் வாங்கி உண்ணும் பெண்கள் Vs கணவர்கள்' - கடந்த வார 'நீயா நானா' விவாத தலைப்பு. எங்கிருந்து தான் பங்கேற்பாளர்களைப் பிடித்துக் கொண்டு வருவார்களோ தெரியவில்லை!

பங்கு கொண்ட கணவர்கள் அனைவரின் ஆதங்கமும் ஒரே மாதிரி தான் இருந்தது.

"வீட்டிலேயே சமைத்தால் என்ன?"
சமைப்பது என்பது பெண்களுக்கே உரித்தானதா என்ன? அன்று அம்மாக்கள் வீட்டிலேயே இருந்தார்கள். சமையல், குழந்தைகள், குடும்பம் என்று கவனித்துக் கொண்டார்கள். பிடித்துச் செய்தார்களா? தெரியாது. பொருளாதாரம் என்பது ஆண்களின் பொறுப்பிலும் குடும்பம் என்பது பெண்களின் தலையிலும் எழுதப்பட்டிருந்தது. 24 மணிநேரமும் குடும்பம், குடும்பம் என்றிருக்க, ஆண்கள் பெண்களுக்கு உதவியாக இருந்தது மிகமிக குறைவு.

இப்பொழுது அப்படியா? பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். சமையலும் செய்து முடித்து வேலைக்கும் செல்லவேண்டும் என்று கூடுதல் சுமை வேறு. எப்பொழுதாவது வெளியில் சாப்பிட்டால் தான் என்ன? ஆனால், எப்பொழுதும் சாப்பிடுவது தவறு.

"இத்தனை செலவு செய்து சாப்பிட வேண்டுமா? இட்லி, தோசை கூட ஆர்டர் பண்ணிச் சாப்பிடறா. மாவு கொண்டு வந்து தர்றேன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா?"

ஏம்மா?

"சட்னிக்கு வெங்காயம், தக்காளி நறுக்கணும். (இதென்ன கொடுமையா இருக்கு!) அப்புறம் அரைக்கணும். (ஏதோ உரல்ல அரைக்கிற மாதிரி !) அப்புறம் தோசை வார்க்கணும்! பாத்திரங்களைக் கழுவணும்"

"சரிப்பா. நீ ஏன் கேட்டுட்டு? மாவை வாங்கிட்டு வந்து சட்னி பண்ணிக் கொடுக்க வேண்டியது தானே?"

"நான் சுட்ட தோசை பிடிக்கலைங்கறா சார்"

"ஆமா சார்! இவர் சுடற தோசை எனக்குப் பிடிக்காது!" (மனைவிக்குப் பிடித்த மாதிரி தோசை சுடுபவர் கிடைத்தால் வரம்!)

சமையல் அலுப்புகள் அவ்வப்பொழுது வரத்தான் செய்யும். வரமாலிருக்க வெளியில் சாப்பிடுவதால் தவறில்லை. ஆனால் அடிக்கடி சாப்பிட்டால் செலவும் அதிகம். உடலுக்கும் நல்லதில்லை. ஆக, மாவு வாங்கி சட்னி செய்து அவளுக்குப் பிடித்த மாதிரி தோசை வார்க்க கற்றுக்கொள்ளுங்கள் கணவர்களே! புலம்பாதீர்கள்!

"நடுராத்திரியில் பிரியாணி வேணும்ங்கிறா சார்!" நிச்சயம் தவிர்க்கப்படவேண்டியது. நேரத்துக்குச் சாப்பிட்டாலே பலருக்கும் ஒத்துக்கொள்வதில்லை. அதில் மிட்நைட் மசாலா வேறு கேட்கிறது பிரியாணிக்கு அடிமையாகி வரும் சமூகம்! என்னவோ போடா மாதவா!

"என் அம்மா இன்றுவரையில் அப்பாவிற்குச் சமைத்துக் கொடுக்கிறார்!" ஆகா! எந்த காலத்தில் வாழந்து கொண்டிருக்கிறோம்? கூடமாட ஒத்தாசை செய்கிறேன் என்று சொன்னாலும் வேலைக்குச் சென்று வரும் பெண்களின் வீட்டு வேலைகளில் ஆண்கள் சமபங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். செய்யாமல் இருந்தால் இப்படித்தான் நடுநிசியில் ஐஸ்கிரீம் வேணும், பைக்கில் ஊர் சுற்றணும் என்பார்கள்.

"பால் வாங்கி வந்து கொடுத்தாலும் காபி ஆர்டர் பண்றா சார்!" அப்படியே காபி போட்டுக் கொடுத்தா வேண்டாம் என்றா சொல்லப்போகிறாள்? அப்படியும் சில பெண்கள் சொல்கிறார்கள்😒

இந்த விவாதத்தில் புரிந்து கொண்டது என்னவென்றால் என் காசு நான் சம்பாதிக்கிறேன். சாப்பிடுகிறேன் என்ற இன்றைய தலைமுறைப் பெண்களின் போக்கு! இருக்க வேண்டியது தான். ஆனால் அளவிற்கு மீறிச் செல்லும் பொழுது ஆரோக்கியத்தையும் பர்ஸையும் பதம் பார்க்கும் என்று கூடவா புரியவில்லை. மனதிற்குப் பிடித்ததைச் சாப்பிடுவது வேறு! வெறும் பகட்டிற்காக விலை உயர்ந்த உணவகங்களில் ஆயிரக்கணக்கில் சாப்பிட்டு விட்டு அது தான் மகிழ்ச்சியைத் தருகிறது என்ற மாய வலையில் சிக்கிக் கொள்வது வேறு. உட்கார்ந்த இடத்தில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சோம்பேறி வாழ்க்கைக்கு அடிமையாகி நம் குழந்தைகளையும் ஆரோக்கியமற்ற சோம்பேறிகளாக நாக்கை வளர்த்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது.

ஆண்கள் புலம்புவதை விட்டுவிட்டு சமைக்க கற்றுக் கொள்ளுங்கள். அவ்வப்பொழுது பெண்களுக்கு ஒய்வு கொடுங்கள். அம்மா மாதிரி என்று அரதப்பழசாக பேசுவதை விட்டுவிட்டு அவளின் வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். அம்மாவிற்கு ஒத்தாசையாக இல்லாது இருந்ததே பெருங்குற்றம் என்று உணருங்கள்.

சமையலைப் பிடித்துச் செய்து குடும்ப நலனில் அக்கறை கொண்ட பெண்கள் கிடைப்பது வரமோ வரம். அதில் சிறு உதவி கிடைத்தாலும் கொண்டாடித் தீர்ப்பாள். ஆக...

அது என்னம்மா 'Floating little bunny?' 12,000 ரூபாய்க்கு அப்படி என்னம்மா சாப்பிடறீங்க?

இந்த மாதிரியெல்லாம்கூட  உலகத்துல நடக்குதுன்னு புரிஞ்சுக்கோங்க மக்கா! 

இப்பல்லாம் 2K ஆண்கள் நிறைய புலம்புவது மாதிரி தோணுது😝

"ரொமான்ஸ், ஹாப்பினஸ், மை மணி,  வாழ்க்கை வாழ்வதற்கே, மொமெண்ட்ஸ் ..." இப்படியெல்லாம் சொல்லிட்டுத் திரியாம நாம தான் பொழைக்கத் தெரியாதவங்களா இருக்கோமோ? 

என்னவோ போடா மாதவா!


No comments:

Post a Comment

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...