Wednesday, October 11, 2023

டிஜிட்டல் தலைமுறை. எங்கள் தலைமுறை


இன்று பெண்கள் பலதுறைகளில் முன்னேறிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கான பிரச்சினைகளும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உலகளவில் பெண்கள் போராடிவரும் சவால்களை எதிர்கொள்ளவும் பெண்களுக்கான அதிகாரங்களை வழங்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை டிசம்பர் 19, 2011 அன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. சமூகத்தில் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கான பாதைகளை அறிமுகப்படுத்தி உரிமைகளை அறிந்து கொள்ளும் விதமாக அக்டோபர் மாதம் 11ம் தேதியை 'சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக' அறிவித்தது.

பருவ வயதுப் பெண்களுக்கான திறமைகளை, வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மேம்படும். சமூகத்திற்கும் நல்லது. குழந்தைத் திருமணங்கள், மறுக்கப்படும் கல்வி வாய்ப்புகள், பாலியல் வன்முறை, பாகுபாடு உட்பட, உலகம் முழுவதும் சிறுமிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்நோக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாளில் பல கருத்தரங்குகள், விழாக்கள் நடத்தப்படுகிறது.


இன்றைய இணைய உலகில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த வருடத்தின் கருப்பொருளாக "டிஜிட்டல் தலைமுறை. எங்கள் தலைமுறை" என்ற தலைப்பில் பாதுகாப்பான வழியில் இணையத்தில் வலம் வர விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் நோக்கம். காலத்தின் கட்டாயமும் கூட. இதில் அரசு, கல்விநிலையங்களின் பங்கும் பெற்றோர்களின் புரிதலும் வழிகாட்டுதலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் குழந்தைகளுக்கு அவசியமாகிறது.

பருவ வயதுப்பெண்களுக்கும் பாதுகாப்பான கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமை உள்ளது. இளம்பருவத்தில் திறம்பட ஆதரிக்கப்பட்டால், தங்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் அழகான ஒரு உலகத்தை உருவாக்கும் திறன்படைத்தவர்கள் ஆவார்கள்.

பெண் குழந்தைகளை ஊக்குவித்து அவர்களின் வாழ்வை மலரச்செய்யும் சமூகப் பெரும் பணி நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. பெண்கள் வாழ்வை உயர்த்தி சமூகத்தினையும் உயர்த்திட வேண்டிய பாரதியின் கனவை நனவாக்குவோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் -- புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் -- நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் -- குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் -- வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்!

-பாரதி






No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...