Saturday, October 7, 2023

கூடலழகர் பெருமாள் கோவில்

மதுரை என்றாலே 'கோவில்கள் நகரம்' என்று கூறும் அளவிற்கு அத்தனை கோவில்கள் இங்கே இருக்கிறது! கோவில்களுக்குச் செல்லும் பொழுது பெரும்பாலும் சுவாமி, பெருமாள், தாயார் என்று எளிதாகக் கூறினாலும் சந்நிதிகளில் எழுதி வைத்திருக்கும் அத்தனையும் இனிமையான பெயர்கள்! தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்கள் அனைத்திலும் மூலவர், உற்சவர், தாயார் அழகுப் பெயர்களுடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் மிகமிகப் பிரசித்தி பெற்ற மற்றுமொரு திவ்யதேசம் 'கூடலழகர் பெருமாள் கோவில்'. பழைய பேருந்து நிலையத்தின் அருகே இருக்கிறது. அப்பாவின் சித்தி(பாட்டியின் தங்கை) வீடும் பாட்டி (அம்மாவின் அம்மா)வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் இருந்ததாலும் சிறுவயதில் சனிக்கிழமைகளில் தவறாமல் சென்று வந்த கோவில்களில் ஒன்று. மூலவர் கூடலழகர். உற்சவர் வியூக சுந்தரராஜர். பெரியாழ்வாரால்

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு" 

என்ற அழகிய திருப்பல்லாண்டு பாடல் இயற்றப்பட்ட திருத்தலம். ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் எங்கள் சமூகத்தின் 'ஓபுளா' வீட்டுப்பெரியவர்களின் நற்கொடையால் கட்டப்பட்டது என்ற விவரத்தை நுழைவாயிலில் பொறித்து வைத்துள்ளார்கள். திருமணத்திற்குப் பிறகு "எங்க தாத்தாக்கள் கோபுரம் கட்ட நிதியுதவி செய்திருக்கிறார்கள்" என்று பெருமையுடன் மச்சினர் கூறினார். கடந்த வருடம் நடந்த கோவில் குடமுழுக்கின்போது மரியாதை செய்யப்பட்டார்கள் என்றும் அறிந்து கொண்டேன்.

அகலமான படியைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடிக்கம்பம். இடப்புறம் கம்பிவலைக்குப் பின்னால் அலுவலகம் இருக்கும். அருகே தான் 'ஆண்டாள்' தும்பிக்கையைத் தரையில் தவழவிட்டு நின்று கொண்டிருப்பாள். பெரிய இமைகளுடன் மருண்ட விழிகள்! நாமம் போட்டுக் கொண்டு அழகுச்செல்லம்😍 உடலை மெதுவாக அசைக்க, மணியும் சேர்ந்து ஆட, சிகப்புநிற பொன்னாடை போர்த்தி அவள் நின்ற கோலம் நினைவில் ஊசலாடியது😔

சுற்றுப்பிரகாரத்தின் படியில் நின்று பார்த்தால் கருவறை விமானம் தெரியும். பக்தர்கள் வணங்கிச் சென்று கொண்டிருப்பார்கள். படிகளில் ஏறி கருடர், ஆஞ்சநேயரைத் தரிசித்தபடி உயரமான திக்பாலர்களைக் கடந்து மண்டபத்திற்குள் நுழைந்தால் மூலவர் 'கூடலழகர்' பிரம்மாண்டமாக மனதைக் கொள்ளை கொள்வார். வரிசையில் நின்று செல்லும் வகையில் கயிறு கட்டி வைத்துள்ளார்கள். பச்சைக்கற்பூரம், துளசி, பூக்கள் மணமணக்க கருவறை அருகே நின்று திவ்ய தரிசனம் செய்யலாம். நேர்த்தியான அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் வியூக சுந்தர்ராஜரும்,ஸ்ரீதேவியும் பூதேவியும் விளக்கொளியில் ஜொலிப்பதைக் காண கண்கோடி வேண்டும்! அங்கிருக்கும் பட்டர்களும் நிதானமாகப் பெருமாளின் பெயர்களைக் கூறி தல பெருமைகளை விரிவாக எடுத்துச் சொல்வது சிறப்பு. சடாரியைத் தலையில் வைத்து ஆசிர்வதித்து தீர்த்தம், பூ, துளசி பிரசாதம் கொடுப்பார்கள். சுற்றி வந்து படிகளின் வலதுபுறம் சென்றால் தாயார் சந்நிதி.

நுழைந்தவுடன் வலப்புறத்தில் சக்கரத்தாழ்வார் சந்நிதி. பெரும்பாலும் காலை நேரத்தில் தான் கோவிலுக்குச் செல்வது வழக்கம். 2022ல் நாங்கள் மாலைநேரத்தில் சென்றிருந்த பொழுது நல்ல மழை! பக்கவாட்டில் இருந்து உள்ளே நுழைந்த மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. இடி,மின்னலுடன் அப்படி ஒரு மழை! 'அது ஒரு அழகிய மழைக்காலம்! ' சொல்லலாம் என்றால் மூட மறந்த குழிகளும் மழைநீர் மண்ணுக்குள் சென்று விடக்கூடாது என்று தீவிரமாக சாலைகளைப் போட்டு மூடி வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து நடக்க வண்டிகள் நீரை வாரி இறைத்துச் செல்வதும் கண்முன்னே நிழலாடியது. மழைநீரைச் சேகரிக்க வேண்டிய நாம் எப்படி விரயம் செய்கிறோம்? ஹ்ம்ம்ம்...😑

கோவிலுக்குள்ளே சுத்தமான மழைநீரில் காலை நனைப்பதும் சுகம்😊 கூட்ட நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மதுரவல்லித் தாயார் சந்நிதி அமைதியாக இருக்கும். அமர்ந்த கோலத்தில் மலர்மாலைகளுடன் அழகான அலங்காரத்துடன் வீற்றிருக்கும் தாயார் அத்தனை வசீகரமாக இருப்பாள். பட்டர் கொடுக்கும் குங்குமமும் நல்ல வாசனையுடன் இருக்கும். தரையில் பழ தீபங்கள் ஏற்றி வணங்கும் பெண்கள், சுற்றுப்பிரகாரத் தூணில் இருக்கும் அனுமனுக்கு வெண்ணைச் சாத்தி வணங்குபவர்கள் என்று சிறுசிறு கூட்டம். அமைதியான அந்தச் சூழலில் இரைச்சல்கள் அடங்கி மனம் நம் வசப்பட்டுக் கொண்டிருக்கும். சுவர்ச்சித்திரங்களும் அருமையாக.

வண்ணமயமான மண்டபத்திலிருந்து வெளியே வந்தால் காற்றோட்டத்துடன் நீண்ட பெரிய சுற்றுப்பிரகாரம். எனக்கு மிகவும் பிடித்ததும் கூட. சுவர்களில் பெருமாள் அவதார லீலைகளை வரைந்திருப்பார்கள். பாட்டி 'கஜமோட்சம்' சித்திரத்தை வரைய நிதி கொடுத்து தாத்தா பெயருடன் இருப்பதை அங்கே போகும் போதெல்லாம் பார்ப்பதில் ஒரு குட்டி சந்தோஷம். அங்கிருக்கும் மின் விளக்குகள், கதவுகள், சித்திரங்கள் அனைத்தும் பக்தர்களின் அன்பளிப்பில் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் மறக்காமல் அவர்கள் பெயர் பொறித்து விளம்பரப்படுத்தியிருப்பார்கள். நல்ல விளம்பர யுத்தி!

எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் கருவறை விமானம் சிற்பங்களுடன் அழகோ அழகு! அங்குச் செல்ல அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும் என்று நினைக்கிறேன். இப்பொழுது அனுமதிக்கிறார்களா என்று தெரியவில்லை.இக்கோவிலின் சிறப்பே பெருமாள் அமர்ந்த, நின்ற, சயனித்த என்று மூன்று நிலைகளிலும் காட்சி தருவது தான். திருக்கோவிலூர் கோவிலுக்கும் இந்தச் சிறப்பு உண்டு. ராமர், கிருஷ்ணர், நரசிம்மரை வணங்கி அப்படியே ஆண்டாள் சந்நிதிக்குள் நுழைந்தால் அமைதியோ அமைதி. கூட்டமே இருக்காது. எதிரே துளசி மாடம். அருகே மணவாள மாமுனிகள், ஸ்ரீவேதாந்த தேசிகர் சந்நிதி. வெளியில் வந்தால் நெய், எண்ணை தீப வாசனையுடன் நவக்கிரக சந்நிதி. ஆச்சரியமாக இருக்கிறதா? நவதிருப்பதியில் நவக்கிரகங்களாகப் பெருமாள் இருக்கிறாரே!

கோவிலுக்குச் சென்ற இனிய அனுபவத்தை அசைபோட்டபடி அங்கிருக்கும் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து விட்டுச் செல்வது வாடிக்கை. சென்ற முறை சென்றிருந்த பொழுது மழை ஓய்வதாகத் தெரியவில்லை. சிலமணிநேரங்கள் திருநகரில் இருந்து வந்திருந்த சௌராஷ்ட்ர தம்பதியருடன் பேசிக்கொண்டு இருந்தோம். தீபாவளி ஷாப்பிங் வந்திருந்தார்கள். முதன்முதலாக மணிக்கணக்கில் பெருமாள் கோவிலில் இருந்தது அதுவே முதல்முறை.

இக்கோவிலின் தெப்பக்குளம் அங்கிருந்து அரைகிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டவுன்ஹால் ரோடில் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்படி ஒரு தெப்பக்குளம் இருந்ததை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்கள். முயன்ற உள்ளங்களுக்கு நன்றி! அப்புறமென்ன? தெப்பத்திருவிழா 'ஜேஜே' என்று நடக்கும்.

புரட்டாசி பௌர்ணமியன்று ஐந்து பெருமாள்கள்(கூடலழகர், மதனகோபாலசுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில்) கருடவாகனத்தில் எழுந்தருளும் 'கருடசேவை' கண்கொள்ளாக் காட்சியைத் தரிசித்துப் படங்களை எடுத்து அனுப்பியிருந்தாள் மகள். கோலாட்டம், 'ஹரே ராம ஹரே கிருஷ்ணா' கோஷங்களும் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிக்க திருவிழா கூட்டம்!

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பிற்கு அதிகாலையில் கூடும் கூட்டமும் 'ஓம் நமோ நாராயணாய' கோஷமும் 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...' நினைத்தாலே💖

கூடல்நகரை 'திருவிழா நகரம்' என்று கூட அழைக்கலாம் தானே?


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...