Tuesday, April 21, 2020

சித்திரைத் திருவிழா


ஏப்ரல் மாதம் அனலாய் கொதித்தாலும், தண்ணீர் திண்டாட்டம் வாட்டி வதைத்தாலும் திருவிழா உற்சாகத்தில் ‘கலகல’வென்றிருக்கும் மதுரை. பத்து நாட்கள் நகர வீதிகளில் தினம் ஓரு வாகனத்தில் மதுரை மல்லி, பிச்சிப்பூ, தாழம்பூ, மனோரஞ்சிதம், முல்லைப்பூ, பன்னீர் பூக்கள் மணமணக்க, மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் அலங்காரங்களில் மதுரை அன்னை அவள் வலம் வரும் அழகே அழகு!



யானை, ஒட்டகம், காளையைக் கண்டதும் குழந்தைகள் ஆர்ப்பரிக்க, முரசு சத்தம் சொல்லாமல் சொல்லி விடும் பவனி வரும் உற்சவ மூர்த்திகளையும் உலகை ரட்சிக்கும் அம்மையப்பன் வரவினையும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தாத்பர்யம். மக்கள் திரளாக வந்து இறைவனை ரசிக்கும் திருவிழா. அனைவர் முகங்களும் உற்சாகம் ததும்ப அடுத்த நாள் அலங்காரம், வாகனம், விசேஷம் பேசி கலைந்து செல்வர். அம்மன் வலம்வரும் வீதிகள் ஒளி வெள்ளத்தில் ஜெகஜோதியாக ஜொலிக்க, அலை கடலென திரளும் மக்கள் கூட்டம் காண்பவர் அதிசயிக்க, மதுரை மக்கள் அனுபவிக்கும் திவ்ய திருவிழா நாட்கள்!

பட்டத்து ராணியாக கோலோச்சி வலம் வருகையில் மதுரைப் பெண்கள் அனைவருக்கும் பெருமிதம்🙂 அன்னை அவள் திருமண நாளை தத்தம் வீட்டுத்திருமணமாக பாவித்து மக்கள் கொண்டாடுவதே அழகு. அன்றிரவு பூப்பல்க்கில் மணமணக்க பவனி வரும் அழகிக்காக தவமாக காத்திருக்கும் மக்கள்...அனுபவித்தவர்களுக்கே புரியும் உணர்வு அது.


முத்தாய்ப்பாக அடுத்த நாள் காலையில் தேரோடும் வீதிகளில் கேட்கும் “ஹர ஹர சங்கர” கோஷமும், உருண்டு வரும் பிரம்மாண்டமான தேர்களும்... சிவ சிவா! என்ன தவம் செய்தனை இம்மண்ணில் பிறந்ததற்கு!

திருப்பரங்குன்றத்து முருகனும் வீடு திரும்ப, அழகர்மலையில் கோவிந்தா கோஷத்துடன் நாமம் போட்ட பெரிய விசிறிகளுடனும் உண்டியல்களுடனும் எம்பெருமான் மதுரை நோக்கி வர, வழியெங்கும் கோலாகலமான வரவேற்பு தான்! மதுரையைச் சுற்றி இருக்கும் கிராம மக்களும் சேர்ந்து கொண்டாடும் இனியதொரு வைபவம்!


தல்லாகுளத்தில் பெருமாளின் எதிர்சேவை! இரவு தங்கி விடிகாலையில் மதுரை நோக்கிப் பயணம். இந்த வருடம் என்ன வண்ண பட்டுடுத்தி வருவாரோ? குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரைக் குளிர்விப்பதற்காக அவருடைய பக்தர்கள் வேடமிட்டு தண்ணீர் பீய்ச்ச , வீரராகவப் பெருமாள் வரவேற்க, ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து வந்த அழகு மாலையைச் சூடி வைகை ஆற்று மண்டபங்களில் அவன் எழுந்தருள... இனிப்பான வெல்லமும் சுக்கும் கலந்த எளிய நைவேத்தியத்தை நாமம் போட்ட சொம்பில் கற்பூரம் ஏற்றி கோவிந்தா கோவிந்தா என உளமுருகி வேண்டாத மனமும் உண்டோ?


தங்கை மீனாட்சியின் திருமணம் முடிந்த சேதி கேட்டு வழியிலே திரும்பி வண்டியூரில் இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்கள் பூண்டு பக்தர்களுக்கு காட்சி தந்து மறுநாள் கள்ளழகர் வேடத்தில் அழகர் மலைக்குத் திரும்பிச் செல்லும் சுந்தரராஜப் பெருமாளை அன்புடன் வழியனுப்பும் நாட்கள் தான் எத்தனை இனிமையானவை!

தொலைதூர தேசத்தில் இருந்தாலும் இணையத்தில் வரும் படங்களும் வீடியோக்களும் அதே உற்சாகத்தைத் தந்து கொண்டிருந்தன. இவ்வருடம் திருவிழா தடைபட்டது மிக வருத்தமாக இருந்தாலும் அடுத்த வருடம் இதற்கும் சேர்த்து கொண்டாடி விடுவார்கள் எம்மக்கள்.

அனைவருக்கும் சித்திரைத் திருவிழா வாழ்த்துகள்! அவரவர் வீட்டில் அம்மையப்பனையும், பெருமாளையும் வணங்கி மகிழ்வோம் 🙂

படங்கள்: இணைய உபயம்🙏🙏🙏

Chocolate


கொரியன் டிராமா வரிசையில் நான் கண்டு களித்த மூன்றாவது தொடர் , பதினாறு பாகங்கள் கொண்ட "Chocolate". ராக்கேஷ் பரிந்துரைத்தது. இத்தொடரில் கதாநாயகி சூப்பர் செஃப். பிறகென்ன? பிடிக்காமல் போகுமா! சிறுவயதில் அம்மாவின் உணவகத்தில் அவளுக்குத் துணையாக சமையல் கற்றுக் கொள்ளும் கதாநாயகன் பிற்காலத்தில் மூளை அறுவைசிகிச்சை நிபுணராகி விடுகிறான். சிறுவயதில் அவனுடைய உணவகத்தில் சுவைத்த உணவின் ருசியில் மயங்கி  சமையல் வல்லுநராகி விடுகிறாள் கதாநாயகி. இளகிய மனது. எவருக்கும் உதவிடும் கதாநாயகன், கதாநாயகி. சமையல் அறையையும் மருத்துவமனையையும் சுற்றி நடக்கும் கதை. அங்கு வரும் நோயாளிகள், அவர்களின் துயரங்கள், கதாநாயகனின் குடும்பச்சண்டைகள், சிறுவயதில் சந்தித்த பெண்ணைத் தேடும் நாயகன், அவனருகிலேயே அவனைத் தெரிந்து கொண்ட கதாநாயகி, முக்கோண காதல் என்று கலந்து கட்டி ஒரு தொடர்.

பொறுமையாக அவள் காய்கறிகளை நறுக்கும் விதமும், சமையல் செய்ததை அழகாகப் பரிமாறுவதும் ...ம்ம்ம். லதா சமைக்க கத்துக்கறோம். அசத்துறோம்ம்ம்ம். இந்த தொடரைப் பார்த்த பிறகு ஏனோ தானோவென்று நறுக்கும் வெங்கயாத்தையும் காய்கறிகளையும் பொறுமையாக அழகாக ஒரே அளவு துண்டுகளாக நறுக்க ஆரம்பித்திருக்கிறேன். பார்ப்போம் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் என்று!

சவுத் கொரியா நாடகங்களில் மழையும் ஒரு அங்கமாக இருக்கிறது. பச்சைப்பசேல் கிராமியச் சூழலும்,  பல படிகள் ஏறிச்செல்லும் மலை வீடுகளும்... கண்ணுக்கு குளிர்ச்சியாக. அவர்களின் குடும்ப அமைப்பும் நம்முடைய குடும்ப அமைப்பை ஒத்திருப்பதாலோ என்னவோ இந்த தொடர்கள் பிடித்துப் போகிறது. ஏழை மருமகளை சீண்டாத அதிகார மாமியார், அண்ணன் மகனை ஓரம்கட்டும் சித்தப்பா, சொத்தை வளைக்க நினைக்கும் சித்தி கூடவே சில நல்ல கதாபாத்திரங்களும் என சோகம், மகிழ்ச்சி, காதல், குடும்பச் சண்டை என மசாலா தொடர்.

நம் தலைவாழை இலையில் விதவிதமான உணவுவகைகளைப் பரிமாறி சாப்பிடுவது போல குட்டி குட்டி கோப்பைகளில் குடிக்கும் டீ. சின்ன சின்ன கிண்ணங்களில் வகைவகையாக காய்கறிகள், சூப்புகள், சோறு என்றிருக்கிறது இவர்களின் உணவுப்பழக்கம். குச்சிகளில் சோற்றை எடுத்து சூப்பில் தொட்டு கிம்ச்சி, காய்கறிகளுடன் சாப்பிடுவது என்று பசியைத் தூண்டிவிடும். கூடவே சமைக்கும் ஆர்வத்தையும்😂

பொறுமை இருப்பவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும். கொஞ்சம் ஜவ்வு தான்.

வரப்போகிற மாங்காய் சீசனில் மாவடு, தொக்கு, ஊறுகாய் போடலாம் என்றிருந்த என்னை கிம்ச்சி ரெசிபி தேட வைத்துவிடுவார்கள் போல.

இனி எண்ட தேசம் சவுத் கொரியா ...டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்
எண்ட கொழுக்கட்டை டம்ப்ளிங்... டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்
எண்ட ஊறுகாய் கிம்ச்சி ....டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங் 

டேய் கொரோனா , உனக்கே இது நியாமா இருக்கா? எல்லாம் உன்னால வந்தது 😂😂😂

இனி எண்ட தேசம் சவுத் கொரியா 
எண்ட ஹீரோ....💓💓💓


Monday, April 13, 2020

What's wrong with secretary Kim?


இந்த கோவிட்19 வந்தாலும் வந்தது நான் கொரியன் டிராமாவுக்கு அடிமையாகி விட்டேன். காந்திமதி வேறு இந்த தொடரைப் பார்க்க சொல்லி சிபாரிசு பண்ண, அப்புறம் என்ன ஆரம்பித்து ஒன்றிப்போய் பதினாறு பாகங்களையும் பார்த்து முடித்தும் விட்டேன். எத்தனை நாட்களில் என்று மட்டும் கேட்க கூடாது 😄 

ஆக்ரோஷமான அமெரிக்கத்தனமான காதலும் அல்ல; விரசமான கட்டாய இந்திய காதலும் அல்ல. வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவரிடையே அழகாக அமைதியாக கவிதை போல் மலரும் காதல். அதை சொல்லியவிதமும் அழகு. தன்னைச்சுற்றி மிளிரும் ஒளிவட்டம், தன்னுடைய கல்வி, வேலைத்திறன், மற்றவரை விட தன்னை உயர்வாக நினைத்துக் கொள்ளும் கதாநாயகன். ஒன்பது வருடமாக அவனுடைய காரியதரிசியாக சிரித்த முகத்துடன் குழந்தையின் துள்ளலுடன் 'யே', 'யே' என்று அவன் சொல்வதை ஆமோதித்து கடமையில் அசத்தும் கதாநாயகி.

வேலையை விட்டுவிட்டு தன் கனவுகளை தனக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க போவதாக அறிவித்த நாளிலிருந்து அவளை காதலிக்கத் தொடங்கி, அவளுடைய வாழ்க்கையை அறிந்து அவளுக்காகவே தன்னை மாற்றிக்கொள்ள பிரயத்தனப்படுவது என எல்லாமே இயற்கையாக!

நடுநடுவே இருவரின் குடும்பக் கதைகள், அலுவலகத்தில் நடைபெறும் காதல் டிராமா, சிறுவயதில் கதாநாயகன் எதிர்கொண்ட நிகழ்வு, அதனால் சகோதரர்களிடையே ஏற்பட்ட பிணக்கு என்று கதம்பமாக சென்றாலும் முக்கோண காதல் இறுதியில் எப்படி நிறைவு பெறுகிறது என்று மெதுவாக நகர்ந்தாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் ரசிக்கத்தக்க வகையில் தொடரை அமைத்திருந்தார்கள். ஆட்களும் 'சிக்'கென்று அழகாக!

இடுங்கிய கண்கள் வழியாக டிங் டிங் என காதலைப் பரிமாறிக்கொள்வதும் அழகு தான் 💗 காதலில் வீழ்ந்த பின் கதாநாயகனின் சிரிப்பும், காதலியின் ரசிப்பும்...

தொடர்களென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? தமிழிலும் எடுக்கிறார்கள் எப்பொழுதும் யாரையாவது அடிப்பது, கொல்வது, அடுத்தவன் குடும்பத்தை நாசமாக்குவது என்று.

பேசாமல் கொரியன் டிராமா பார்க்க ஆரம்பியுங்கள்! பொழுதும் நன்கு போகிறது. மனதிற்கும் அமைதியாக இருக்கிறது.

இனி எண்ட தேசம் சவுத் கொரியா 
எண்ட ஹீரோ....💓💓💓



ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...