Wednesday, June 28, 2023

மலேரியா


அங்கன இங்கன கடிச்சுக்கிட்டிருந்த கொசுவுக்கு இப்ப அமெரிக்க ரத்தத்தையும் குடிக்க ஆசை வந்துருச்சு. டெக்சாஸ், ஃபுளோரிடா மாநிலங்களில் மெதுவாக ஆரம்பித்திருக்கிறது "மலேரியா" காய்ச்சல். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு மலேரியா காய்ச்சல் தலைகாட்ட ஆரம்பித்திருப்பது தான் பிரச்சினையே! நல்லவேளை! பள்ளிகள் கோடைவிடுமுறைக்காக மூடப்பட்டுள்ளது. இப்பொழுது வரை ஒற்றை எண்களில் தான் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கோடையில் அதிக மக்கள் உலகநாடுகளுக்கு விடுமுறைக்குச் செல்வது வாடிக்கை. அதனால் இந்த எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது என்று அமெரிக்காவின் 'நோய் கட்டுப்பாட்டு மையம்' எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கும் ஒரு ஊசியைக் குத்திக்கொள்ளுங்கள் என்று ஆரம்பித்துவிடுவார்களோ? பயமாக இருக்கிறது😑

உலகத்தின் எந்த மூலைக்கு ஓடிப்போனாலும் தொடர்ந்து வருவேன்னு நம்மைப் பின்தொடர்ந்து வருது கொசுக்கள். எதுக்கும் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க மக்கா! இப்ப இது, அப்புறம் ஃப்ளூ காய்ச்சல் நடுநடுவில கொரோனான்னு ஆயிடுச்சு நம்ம வாழ்க்கை😐

என்னவோ போடா மாதவா!


Monday, June 26, 2023

கதல் (Kathal)


நெட்ஃப்ளிக்ஸ்ல் 'கதல்' என்றொரு அருமையான பொழுதுபோக்குப் படம் பார்த்தேன். சிறு கிராமத்தில் நடக்கும் கதை. ஒரு காவல்துறை, அங்கே பணிபுரியும் அதிகாரிகள், அவர்களுக்குள் நடக்கும் சின்னச்சின்ன சண்டைகள், காதல், அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கு என்று போகிற போக்கில் அள்ளித் தெளித்துக் கொண்டே செல்கிறது கதை. இப்படத்தின் கதாநாயகி, சான்யா மல்ஹோத்ரா 'ஃபோட்டோகிராப்' படத்திலிருந்தே கவர்ந்து விட்டாள். அவருடைய சிரிப்பும் கண்களும் சுருட்டை முடியும் அழகு!

அதிகார வர்க்கத்தின் வீட்டுப் பிரச்சினையை விடவா நாட்டு மக்களின் பிரச்சினை பெரிது? கண்கூடாகத் தமிழகத்தில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே? ஒரு ஊழல் பேர்வழியைக் காப்பாற்ற எப்படியெல்லாம் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள் என்று. இப்படமும் அந்தக் கருத்தை மிக அழகாக இரண்டு பலாப்பழங்கள் மூலம் சொல்லி இருக்கிறது. ஒரு சட்டசபை உறுப்பினர் வீட்டிலிருந்து திருடு போயிருக்கும் பழங்களைக் கண்டுபிடிக்க காவல்துறையை ஏவி பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகட்டும். பணியில் தனக்குக் கீழே இருப்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுத் தப்பிக்க நினைக்கும் காவல்துறை மேலதிகாரிகள் என்று அருமையாகக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள்.

இந்த காலத்திலும் திருமண உறவில் பெண்ணை விட ஆண் உயர்பதவியில் இருப்பது தான் நல்லது என்று நினைக்கும் சமூகம். அதற்கும் பெண்கள் தான் பலிகடாவா? என்ன தான் வேலை பார்த்தாலும் வீட்டின் சமையலறை என்றுமே பெண்ணிற்குத்தான் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். காலம் மாறிக் கொண்டு இருந்தாலும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் நெடுந்தூரமே!

இன்றைய ஊடகங்கள் தங்கள் ரேட்டிங்ஐ ஏற்ற எப்படியெல்லாம் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புகிறது என்பதிலிருந்து அதே ஊடகங்களைக் கொண்டு சீர்திருத்தங்களையும் கொண்டு வர முடியும் என்றும் காட்டியிருந்தது சிறப்பு.

சமீபத்தில் வடமாநிலங்களுக்குச் சென்று வந்திருந்ததால் அங்கிருந்த சூழலை இப்படத்தில் பொருத்திப் பார்க்க முடிந்தது. போதிய கல்வியறிவு இல்லாதது, வறுமை என்றிருந்தாலும் மக்கள் எளிமையாக அப்பாவித்தனமாக இருக்கிறார்கள். அவர்களை ஆளும் வர்க்கம் விட்டு வைக்குமா? அதையும் நாசூக்காகப் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

குட்கா, பான்பராக்கிற்கு அடிமையான சமூகம். பெண்களைக் கடத்தும் கும்பல் என்று பல விஷயங்களையும் தொட்டுக்கொண்டுச் செல்வதால் இந்தப்படம் நல்லதொரு பொழுதுபோக்குப் படம் மட்டுமல்ல சிறிது விழிப்புணர்வையும் சமூகத்தில் நிலவி வரும் அபாயங்களையும் அச்சுறுத்தல்களையும் அரசியல்வாதிகளும் அரசு எந்திரங்களும் தங்கள் கடமையை மறந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் சொல்லாமல் சொல்கிறது. இப்படியெல்லாம் படம் எடுக்க முடியும் என்று நிரூபித்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்😇தமிழில் கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி எடுக்கும் படங்களை விடப் பல மடங்கு நன்றாக இருக்கிறது.



Thursday, June 22, 2023

டைட்டன்

இந்த வாரம் செய்தி ஊடகங்களும் சமூக வலைதளங்களும் அல்லோலகப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம், அட்லாண்டிக் கடலில் மறைந்து போன நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றித் தான். 'டைட்டன்' என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் ஜூன் 18, 2023 ஞாயிற்றுக்கிழமை மாசசூசெட்ஸின் 'கேப் காட்' நகருக்கு கிழக்கே 900 கடல் மைல் தொலைவில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை ஆய்வு செய்யும் பணியின் போது காணாமல் போனது. கப்பலில் 96 மணி நேர ஆக்சிஜன் சப்ளை மட்டுமே இருப்பதும் அதுவும் 22ந் தேதி வியாழக்கிழமை காலை 7:08 மணிக்கு தீர்ந்துவிடும் என்று அமெரிக்க கடலோர காவல்படை கூறியது தான் பதட்டத்திற்கு காரணம். அந்த கால கெடுவும் முடிந்து விட்டது தான் கொடுமை😞

'ஓஷன் கேட்' நிறுவனம் 2021லிருந்து இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இது மூன்றாவது பயணமாகும். ஐந்து பேர் அமர்ந்து செல்லக் கூடிய நீர்மூழ்கிக் கப்பலில் பயணிக்க $250,000 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பயணித்தவர்கள், 'ஓஷன்கேட்' பயண நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ் , பிரிட்டிஷ் பில்லியனர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு டைவர் பால் ஹென்றி நர்ஜோலெட், பாகிஸ்தானின் பிரபல தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் என்ற செல்வந்தர்கள்.

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய சோக வரலாறு ஆங்கில படத்தின் மூலம் வெகு பிரபலமாயிற்று. 70 ஆண்டுகளுக்குப் பிறகு 1985 ஆம் ஆண்டில் கடலின் அடிப்பகுதியில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் கீழே விழுந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் கண்டு வர கிளம்பிய 'டைட்டன்' கப்பலை வெளியில் இருந்து ஒருவர் இயக்கிக் கொண்டிருக்க, திடீரென்று தொடர்பு அறுந்து போன நிலையில் ஐவரின் நிலை என்ன? நீர்மூழ்கிக்கப்பலின் பாதுகாப்பு அம்சங்களில் ஏதேனும் குறையா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஐந்தாவது முறையாக ஆழ்கடல் பயணம் செய்த 'ஓஷன்கேட்' பயண நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், இந்தக் கப்பலில் நவீன பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். நீர்மூழ்கிக் கப்பல் அதன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் அனைத்து நிலையான சோதனைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் கப்பல் தொழில்துறை பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்ததா என்பது பற்றிய கேள்விகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

என்ன தான் கூறினாலும் இப்படிப்பட்ட சாகச பயணம் அதுவும் உயிரைப் பணயம் வைத்து $250,000 பணமும் கட்டி கடலுக்கடியில் தேவையா? என்று பலர் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்! சிலரோ, அந்தப் பணத்தில் எத்தனையோ நல்ல விஷயங்களைச் செய்திருக்கலாம் என்று இலவச அறிவுரைகளைத் தெளித்தபடி ...ம்ம்ம்ம்.

 

இப்படி அநியாயமாக காணாமல் போய் விட்டார்களே? சுவாசிக்க பிராண வாயு இல்லாமல் அந்தச் சிறிய படகிலிருந்து தப்பிச் செல்ல வழியுமில்லாமல் என்ன பாடுபட்டார்களோ என்று அடித்துக் கொள்கிறது என் மனம்!

கடலுக்கடியில் மீட்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் எந்தவித அறிகுறியும் கிடைக்கவில்லை என்பது தான் சோகமே. ஏதாவது அதிசயம் நடந்து விடாதா? நல்ல செய்தி கிடைத்து விடாதா? அவர்கள் ஐவரும் உயிருடன் திரும்பி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

தவறிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வோம். 

Monday, June 19, 2023

ஜூன்டீன்த், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை


இன்று நியூயார்க் மாநிலத்தில் "ஜூன்டீன்த்"(Juneteenth) விடுமுறை நாள்.  அப்பாடா! ஒரு நாள் கிடைத்து விட்டது. சுகமாக தூங்கிப் பொழுதைக் களிக்கலாம் தான். ஆனால் பள்ளிகளின் மூலமாக மாணவர்கள் தெரிந்து கொண்டதை புலம்பெயர்ந்தவர்களும் விவரங்கள் அறியாத கருப்பு, வெள்ளை அமெரிக்கர்களும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுச்சிறப்பு மிக்க நாள் இது! பூர்வகுடிகளின்(செவ்விந்தியர்கள்) பூமியாக இருந்த அமெரிக்க நிலத்தை வெள்ளைநிறத்தவர்கள் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றிய நாளில் அடிமைகளையும் உருவாக்கத் துவங்கிய வரலாறு பல கொடுமையான நிகழ்வுகளை உள்ளடக்கியது. அதனால் தான் உண்மையான வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் அதைப் பாடமாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று வரையில் படித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் பல இருட்டடிப்பு வேலைகள் சாமர்த்தியமாக செய்யப்பட்டு வரலாறு திரிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ விடுகிறது. அப்படித்தான் இந்நாளும் இருந்து வந்திருக்கிறது.

'ஜுன்டீன்த்' என்பது அமெரிக்காவில் அடிமைத்தனத்தின் முடிவை நினைவுகூரும் ஒரு விடுமுறை. விடுதலை நாள், சுதந்திர நாள், கொண்டாட்ட நாள் என்று அழைக்கப்படும் இந்நாள் ஜூன் மாதம் 19ம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1863ல் அதிபர் ஆபிரஹாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழித்து விடுதலையை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கறுப்பின மக்கள் விடுதலை பெற்றனர். ஆனால் தெற்கு மாநிலங்களில் இந்தச் செய்தி மெதுவாகவே பரவியது. 1865ஆம் ஆண்டில் யூனியன் வீரர்கள் டெக்சாஸின் கால்வெஸ்டனுக்குச் சென்று உள்நாட்டுப் போர் முடிந்துவிட்டதாகவும் டெக்சாஸில் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் இனி சுதந்திரமாக வாழலாம் என்று அறிவித்த நாளே 'ஜுன்டீன்த்' என்று கொண்டாடப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக பிணைக்கைதிகளாக வாழ்ந்த கறுப்பின குடும்பங்களுக்கு விடுதலை என்பது எத்தகைய இன்பமான செய்தியாக இருந்திருக்கக் கூடும்? அதுவும் அமெரிக்காவில் மற்ற மாநிலங்களில் கறுப்பின மக்களுக்கு விடுதலை கிடைத்த போதிலும் டெக்சாஸ் மாநிலத்தில் தான் கடைசியாக விடுதலை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நாளை கறுப்பின அமெரிக்கர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தாலும் பல்வேறு இனக்குழுவினரும் இன்றைய தலைமுறையினரும் 'Black Lives Matter' போராட்டத்திற்குப் பிறகு தான் இந்நாளைப் பற்றி அறிந்து கொண்டுள்ளனர்.

ஜூன் 17, 2021 அன்று அடிமைத்தனத்தின் முடிவை நினைவுகூரும் வகையில் கூட்டாட்சி விடுமுறை நாளுக்கான மசோதாவில் அதிபர் பைடன் கையெழுத்திட்டார். இதன் மூலம் இன சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திக்கவும் இன்னும் செய்ய வேண்டிய பணிகளுக்கு நம்மை மீண்டும் அர்ப்பணிக்கவும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என்று அதிபர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் 28 மாநிலங்கள் இந்நாளை அரசு விடுமுறையாக கொண்டாடுகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களில் விடுமுறை இல்லை என்பதால் இந்த நாளைக் கொண்டாட வேண்டிய கறுப்பினத்தவர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. என்ன ஒரு முரண்!

கடந்து வந்த பாதையை, நாட்டின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டியது அந்நாட்டு மக்களின் கடமை. அந்த வகையில் இன்றைய 'ஜூன்டீன்த்' அடிமை மக்களின் வரலாற்றில் மிக முக்கியமான நாள்.

எல்லோரும் கொண்டாடுவோம்!

Saturday, June 10, 2023

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்


இன்றைய பரபரப்பான உலகில் குடும்பம், வேலை, உடல்நலம் என்று நம்மை பாடாய்படுத்தும் விஷயங்கள் ஏராளம். குழந்தைகளின் கல்வி என்று வந்தாலே பெற்றோர்களுக்கு ரத்த அழுத்தம் எகிறிப் போகிறது. பள்ளிக்கட்டணம், சீருடை, புத்தகங்கள், டியூஷன், கோச்சிங் என்று நீள்வது நம் சேமிப்பைக் கரைப்பதில் வல்லது. வேலை என்றால் அங்கு பணிபுரிபவர்களோடு நடக்கும் மல்யுத்தம். உயர்பதவியில் இருப்பவர்களுக்குப் பதில் சொல்வதிலிருந்து கூட வேலை செய்பவர்களைச் சமாளித்து ஒவ்வொரு நாளையும் கடப்பது என்பது முள்ளில் நடப்பது போலத்தான். சரி  'அக்கடா' வென்று உட்காரலாம் என நினைக்கும் சமயத்தில் தான் தோள்பட்டை, கழுத்து, இடுப்பு, முட்டி என்று அக்குவேறு ஆணிவேராய் உடல் பாடாய் படுத்தும். இதனால் உண்டாகும் மனஅழுத்தம் தரும் வேதனையைப் போல வேறு எதுவுமிருக்காது. ஏனென்றால் செக்கு மாடு மாதிரி காலை விடிந்ததும் தொடங்கும் இந்த வாழ்க்கை யுத்தம் இரவு தூங்கும் வரையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நமக்கே நமக்கான நேரங்கள் குறையும் பொழுது தான் வாழ்க்கையை வெறுக்க ஆரம்பிக்கிறோம். இன்று படித்ததில் சிலவற்றை நானும் தொடர்வதால் இந்த மூச்சுமுட்டும் சிக்கல்களில் இருந்து தப்பிக்க முடிகிறது. அதைப் பகிர்ந்தால் சிலருக்கு உபயோகமாக இருக்கலாம் என்பதால் இந்த பதிவு.

1.பிடிக்குதோ இல்லையோ தினமும் நடப்பது மனதிற்கும் உடலுக்கும் நல்லது. அதுக்கெல்லாம் எங்கே நேரம் என்று கேட்க வேண்டாம். அதற்கான நேரத்தை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சோம்பல் நம்மை ஆட்கொண்டுள்ளது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் அரைமணிநேரம் என்பது மெதுவாக காலை மாலை அரைமணிநேரமாக மாறும். நடப்பதில் உள்ள ஆனந்தம், என்னவென்றால் நமக்குத் பிடித்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே செல்லலாம். ஏதாவது யூடிபில் கேட்க வேண்டுமென்றால் அதற்குச் சரியான நேரம் அது தான். யாரையாவது அழைத்துப் பேச வேண்டுமா? இதை விட நல்ல நேரம் கிடைக்குமா? அதனால் தினமும் நடப்பது நல்லது. நானும் மகளும் தினமும் 10,000 அடிகள் நடப்பது என்று ஒருவரை ஒருவர் கண்காணிக்கத் தொடங்கியுள்ளோம். இதுவும் நன்றாக இருக்கிறது. 

2. சில நேரங்களில் எதுவும் செய்யத் தோணாது. அப்படியே மந்தமாக இருக்க வேண்டும் போல் தோணும். ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு நன்றாக தூங்கலாம், பிடித்த புத்தகத்தைப் படிக்கலாம். தோட்ட வேலைகள் செய்யலாம். தொலைக்காட்சியில் படங்கள், நாடகங்கள் பார்க்கலாம். வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம். அல்லது ஒன்றுமே செய்யாமல் சோம்பேறித்தனமாக விட்டத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். உடலுக்கும் மனதிற்கும் சோர்வு ஏற்படுவது இயற்கை. அதை மதித்து நடந்தால் நமக்குத் தான் நல்லது.

3. முகம் தெரியாத மனிதர்களுக்கு உதவுவது என்றுமே நல்லது. உதவி தேவைப்படுவோர் பலர் உள்ளனர். நம்மால் முடிந்த அளவிற்கு உதவுவதில் எந்த சிரமமும் இருக்காது. நம்மை நம் குடும்பத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருப்பது அவசியம் என்றாலும் நம்மை விட பலர் கஷ்டப்படுகிறார்கள் என்று புரிந்து அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது அலாதியான மன திருப்தி உண்டாகும்.

4. வெளியில் எங்காவது சென்று யாருடனும் பேசாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது. எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமும் கூட. நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களைப் பார்ப்பதும் கவனிப்பதும் கூட நல்ல பொழுதுபோக்கு தான். அது ஒரு பூங்காவாக இருக்கலாம். அங்கே வரும் குழந்தைகள், பெரியவர்கள், விலங்குகள் என்று மனதை அமைதிப்படுத்தும் விஷயங்கள் பல உண்டு. நூலகத்திற்குச் சென்றால் அங்கே இருக்கும் அமைதியில் சிறிது நேரம் புத்தகத்தை வாசிக்கலாம். மாலுக்குச் சென்று கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடக்கலாம். இல்லையென்றால் வீட்டு வாசலில், மர நிழலில் அதுவும் எதையாவது ஒன்றைக் கற்றுக் கொடுக்கும். கற்பதற்கான மனநிலை நமக்கு இருந்தால்😀

5. நம்முடைய பிரச்னைகளைக் கையாளுவது எப்படி என்று நண்பர்களிடம் பேசிப் பார்க்கலாம். அதற்கான விடைகளைத் தேடிப் பார்க்கலாம். எந்த ஓரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்று நம்ப வேண்டும். அந்த மனநிலையில் தீர்வுகளை நோக்கியே எண்ணங்கள் நகரும். இல்லையென்றால் பிரச்னையைப் பற்றியே எண்ணி அழுது கொண்டிருப்போம்.

6. அடுத்த நாள் செய்யப் போகும் வேலைகளை முதல் நாளிலேயே திட்டமிட்டு டு-டூ லிஸ்ட் போட்டு வைத்துக் கொண்டால் சிரமம் இருக்காது. நான் பின்தொடரும் வழக்கம். இதனால் பல நேர மணித்துளிகள் மிச்சமாகும். நமக்குத் பிடித்த வேலைகளைச் செய்யவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  முறையான திட்டமிடல் அன்றைய நாளை பிரச்னைகளைச் சமாளித்து இன்பமாக கழிக்க உதவும்.

7. நம்முடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துகொள்வது என்றுமே நல்லது. பலங்கள் தெரிந்து கொண்டால் அதை வைத்து முன்னேற வழிகள் கிடைக்கும். பலவீனங்களை அறிந்துசரி செய்து கொண்டால் வாழ்க்கை எப்பொழுதும் 'இனிமை நிறைந்த உலகமிருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு?' மோடில் சென்று விடும். பலங்களையும் பலவீனங்களையும் ஒவ்வொருவரும் அறிந்து எழுதி வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. வேலையிடத்தில் நடக்கும் வருடாந்திர ரெவியூவில் அக்குவேறாக ஆணிவேராக அலசுவார்கள். அது நிச்சயம் பணியிடத்திலும் நம் சுய முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. இது அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். பலவீனங்களை பலங்களாக மாற்றிக்கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.

8. ஒரு வேலையை எடுத்துச் செய்யும் பொழுது ஆயிரத்தெட்டு தடங்கல்கள் வரும். அதற்காக துவண்டு விடாமல் சின்ன சின்ன அடிகளாக எடுத்து வைத்து முன்னேறிச் செல்ல எல்லாம் நலமே! உடல் எடையை குறைக்க கிளம்புபவர்கள் துவக்கத்தில் 'தாம் தூம்' என்று டயட், உடற்பயிற்சி என கோலாகலமாக ஆரம்பிப்பார்கள். எடை குறையவில்லை என்றவுடன் விரைவிலேயே சோர்ந்து விடுவார்கள். ஒரு வாரத்திற்கு ஒரு பவுண்ட் குறைந்தாலே வெற்றி தானே? மேலும் குறைக்க என்ன செய்ய வேண்டும் யோசிக்க வேண்டுமே தவிர, மெதுவாக எடை குறைகிறது என்பதற்காக ஒரேடியாக முயற்சியைக் கைவிட்டால் யாருக்கு நஷ்டம்? எதிர்பார்ப்பைக் குறைத்து விடாமுயற்சியில்  கவனம் செலுத்த வேண்டும். நான் கற்றுக் கொண்ட பாடம்.

9. ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு கலை தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் புதிதாக கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாசிப்பது முதல் வரைதல், வண்ணங்களைத் தீட்டுதல், எழுதுவது, விளையாடுவது என்று எதுவாக கூட இருக்கலாம். ஆனால் நல்ல முறையில் தனியாகவோ நண்பர்கள்,குடும்பத்தினருடனோ பொழுதுபோக்க, மனதிற்கு நிம்மதி கிடைக்கும். 

10. இன்று இப்பொழுது இந்த நொடியில் வாழ்க்கையின் முக்கிய விஷயம் என்னவோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். இதனால் மற்ற தேவையற்ற விஷயங்களில் இருந்து மனதை விலக்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும். தேர்வுக்காலங்களில் படிக்க மட்டுமே செய்ய வேண்டும். கிரிக்கெட், திரைப்படம் என்று இருந்தால் கஷ்டம் தான்.

11. வேலை செய்வது எவ்வளவு அவசியமோ அது போல நேரத்திற்குத் தூங்குவதும் மிக அவசியம். நம் உடல் உறுப்புகள் நன்கு ஓய்வெடுத்துக் கொண்டால் தான் அடுத்த நாள் பிரச்னையில்லாமல் வண்டி ஓடும். இல்லையென்றால் உடல் உபாதையால் அவதிப்பட நேரிடும். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஃபோன், டிவியை மறந்து தூங்கினால் உடலும் "நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே" என்று துதி பாடும். இன்று பலரும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி கண்கள் தூக்கத்திற்குக் கெஞ்சினாலும் நேரம் சென்று தூங்கி அழுது வடிகிறார்கள். அதனால் எரிச்சலும் ஏமாற்றமும் வீண் மன வருத்தமும் தான் மிஞ்சும். சரி தானே?

12. சிலர் வாழ்க்கையை மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டு புலம்புவார்கள். "இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்" அவ்வளவு தான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டால் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் மனம். அப்பொழுது நம்முடைய எதிர்மறை எண்ணங்களும் மாறி இன்பப்பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும்.

13. "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" என்று சொன்னாலும் அழுது விடுவது நல்லது. சில விஷயங்கள் ஆண், பெண் பேதமறியாது. இருவரையுமே போட்டுத் தாக்கும். மனது விட்டு ஒரு பாட்டம் அழுது விட்டு அடுத்த நொடி அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பி விட வேண்டும். "ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று '96' பட ராம் போல 'அங்கேயே தான் இருக்கிறேன்" என்று  ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்தால் மேலும் மேலும் பிரச்னைகளும் மன அழுத்தமும் நமக்கு வருமே ஒழிய, வேறு எந்த நல்ல விஷயமும் நடக்காது.

14. வாழ்க்கை என்றால் இன்பமும் துன்பமும் கலந்து இருக்கும். இன்பம் வரும் பொழுது வாழ்க்கையைக் கொண்டாடியவர்கள் துன்பம் வரும் பொழுது மட்டும் அத்தனை எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பார்கள். உலகத்தை, நண்பர்களை, குடும்பத்தை என்று எல்லாவற்றையும் வெறுப்பார்கள். அவர்களுக்குள்ளே, அவர்களை சுற்றி இருக்கும் நல்ல விஷயங்கள் எதையும் பார்க்க மாட்டார்கள். அவர்களை விட கொடுமைகளை அனுபவிப்பவர்ககளை நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். நமக்குத் துன்பம் வருகையில் எப்பொழுதுமே நம்மை விட அதிக துன்பத்தில் சிரமப்படுபவர்களைப் பார்த்து அமைதி கொண்டு விரைவில் வெளிவரும் வழிகளைக் கண்டறிய முயல வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை நரகமாகி விடும்.

15. முன்பெல்லாம் டைரி எழுதுவது ஒரு சிலரின் வழக்கமாக இருந்தது. இப்பொழுது கணினியிலேயே கூட எழுதிவிடலாம். ஆனாலும் சில நிமிடங்கள் உட்கார்ந்து அந்நாளினை ஆசை போட்டு அன்று நடந்த நல்லது கெட்டது எழுத ஆரம்பித்தால் மனம் விட்டுப் பேசியது போன்ற தெளிவு கிடைக்கும். மனம் அமைதியாய் இருக்கும் பொழுது நாம் எழுதியவைகளை மீண்டும் படிக்க, தெளிவு பிறக்கும். பின்வரும் நாட்களில் நம்மைத் திருத்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். நிச்சயம் பின்பற்றிப் பாருங்கள்.  நாம் நன்றி கூற எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அதற்கெல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. என்ன போராட்டமான வாழ்க்கையாக இருந்தாலும் காலையில் உயிரோடு எழுவதே நாம் செய்த புண்ணியம் தான்.  சிலருக்கு பிரச்னையில்லாமல் கக்கா போவதே ஆனந்தமான விஷயம். உட்கார்ந்த இடத்தில் காபி கிடைத்தால் பேரதிர்ஷ்டம். இப்படி ஆனந்தமடைய எத்தனையோ விஷயங்களை எழுத ஆரம்பித்தால் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இல்லையென்றால் அடுத்தவரைப் பார்த்துப் பொருமிக் கொண்டு தான் இருப்போம்.

16.  நம் வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்வதும் பிரச்னைகளில் சிக்கிக்கொள்வதும் நம்மிடம் தான் உள்ளது. நமது வாழ்க்கை நமது பயணம். மற்றவரைப் போல வாழ முற்படாமல் நமக்கான வாழ்க்கையை வாழ முயன்றால் அதுவே சுகம் இல்லையென்றால் சுமை தான். வாழ்க்கைப் பயணத்தில் நிரந்தரம் என்று எதுவுமில்லை. எல்லாமே ஒரு பயணம் போல தான். இதுவும் கடந்து போகும் என்று உணர்ந்து கொண்டால் எல்லாம் நலமே!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்...



Wednesday, June 7, 2023

குளோபல் வார்மிங்கா? வார்னிங்கா ?

இதுவரையில் கலிஃபோர்னியா, வாஷிங்டன் என அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களில் தான் காட்டுத்தீ பரவி அதிகளவில் பொருட்சேதாரங்களும் கால்நடைகள், காட்டு விலங்குகள், பறவைகள், மனித உயிரிழப்புகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் வெயில் அதிகமாகி வறட்சியால் காடுகளில் உள்ள மரங்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் என்றும் உண்டு. சில  அறிவிலிகளால் கூட பல வருட மரங்கள், பறவைகள், விலங்குகளை இழந்திருக்கிறோம். இதுமட்டுமில்லாமல், மலைச்சரிவுகளால் அதிகமான கனிம வளங்களையும் கலிஃபோர்னியா மாநிலம் இழந்திருக்கிறது. ஒருமுறை கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் சான்பிரான்ஸிஸ்கோ வரை புகை பரவி மக்களைத் திக்குமுக்காட வைத்தது. 'பே ஏரியா'வில் வாழும் மனிதர்களைக் கூட அப்புறப்படுத்த ஆயத்தமாக இருந்தார்கள் தீயணைப்புப் படையினர்!

இப்பொழுதெல்லாம் கனடாவில் காட்டுத்தீ என்றால் அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்கள் வரை அதன் புகை பரவி விடுகிறது. இந்த வாரத்தில் ஆகாயம் மூச்சு விட சிரமப்படுவது போல் வெளிர் ஆரஞ்சு வண்ணத்திலேயே காலையும் மாலையும் உலாவந்து கொண்டிருக்கிறது. இதில் எங்க ஊர் 'ரமணன்' வேறு காற்றில் மாசு அதிகம் கலந்திருப்பதால் மூச்சு விடச் சிரமப்படுபவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் கவனமாக வீட்டுக்குளேயே இருங்கள் என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார். காலையில் கோலம் போடக்கூட அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது. மகள் வேறு, முகக்கவசம் இல்லாமல் வாசலைத் தாண்டக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறாள். தீபாவளிக்கு முன்தின இரவு மதுரையில்  விளக்குத்தூண் பஜாரில் எங்கள் குடும்பம் மட்டுமே முகக்கவசம் போட்டு சுத்திக்கொண்டு இருந்தோம். இங்கும் நான் மட்டும் தான் போட்டுக் கொண்டு திரிகிறேன். நியூயார்க் நகரம் ஆல்பனியை விட மிக மோசமாக இருக்கிறது. 

கனடாவில் வடகிழக்கில் கியூபெக் மட்டுமின்றி பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஒண்டாரியோ, நோவா ஸ்கோஷியா மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலும் பெரும் தீ எரிந்து வருகிறது. அதிக வெப்பமான வறண்ட வானிலை காட்டுத்தீக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். 400க்கும் மேற்பட்ட காட்டுத்தீயால் கனடாவில் இருந்து அமெரிக்கா முழுவதும் புகை வருகிறது என்று கனேடிய இன்டர்ஏஜென்சி ஃபாரஸ்ட் ஃபயர்ஸ் சென்டர் தெரிவித்துள்ளது. கியூபெக்கில் நேற்று 150க்கும் மேற்பட்ட காட்டுத் தீ எரிந்து அதில் 110க்கும் மேற்பட்ட காட்டுத் தீ கட்டுப்படுத்த முடியாததாகக் கருதப்படுகிறது. நாடு தற்போது 413 காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகிறது. அவற்றில் 249 கட்டுப்படுத்த முடியாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. தீயினால் எட்டு மில்லியன் ஏக்கருக்கு மேல் எரிந்துள்ளது. மேலும் 26,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகிறது!


நியூயார்க் நகரத்தின் காற்றின் தரக் குறியீடு நேற்று 200ஐத் தாண்டியது. இது "மிகவும் ஆரோக்கியமற்றது" என்ற மாசு அளவு. தற்போதைய காட்டுத்தீயால் வட கரோலினாவின் பெரும்பகுதி, வடக்கு வர்ஜீனியா, மேரிலாந்தின் பெரும்பகுதி, டெலாவேர், கிழக்கு பென்சில்வேனியா, நியூயார்க், வெர்மான்ட், மசாசூசெட்ஸ், கனெக்டிகட், நியூஜெர்சி, ரோட் ஐலண்ட் , மேற்கு நியூ ஹாம்ப்ஷயர், கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் புகை மூட்டம் இருக்கும் என்று வானிலையாளர்கள் கணித்திருக்கிறார்கள். இன்னும் 24 மணிநேரம் வரை தொடர்ந்திருக்கும் புகைமூட்டம் மெல்ல மறைந்து போகும் என்று இப்போதைக்குச் சொல்லி இருக்கிறார் 'ரமணன்'😌


2022 அக்டோபரில் டெல்லியில் இருந்ததைப் போல இருக்கிறது புகைமூட்டம்!
நீல வான தரிசனம் மீண்டும் எப்பொழுது கிடைக்குமோ? அக்கினித்தேவனும் வாயு, வருணபகவான்களும் கருணை புரிவார்களா?

என்னவோ போடா மாதவா! 

ஒடிசா ரயில் விபத்து


ஜூன் 2ம் தேதி மாலை ஏழு மணியளவில் ஒடிசாவின் பாலசோரில் உள்ள பஹனகா பஜார் ரயில் நிலையத்தில் நடந்த கோரமான ரயில் விபத்தில் இதுவரையில் 288 பேர் இறந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகிறது. மிகவும் வேதனை தரும் விஷயம். சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டு அங்கு நின்றிருந்த சரக்கு ரயிலில் மோதியதால் பல பெட்டிகள் கவிழ்ந்து அதே நேரத்தில் பெங்களூரிலிருந்து கல்கத்தா செல்லும் மற்றொரு ரயில் யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர்பாஸ்ட் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியுள்ளது. அதிர்ஷ்டவசமாக தப்பித்தவர்களின் சில்லிடும் அனுபவங்களைப் படிக்கவே கண்கலங்குகிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பலரும் ரத்த தானம் செய்ய காத்திருந்ததும் ஒடிசா அரசும் உள்ளூர் மக்களும் விரைந்து மருத்துவ உதவிகள் செய்து வருவதும் மத்திய அரசாங்கம் நிவாரணப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருவதும் ஆறுதலான செய்தி. ரயில் பிரயாணத்தின் போது காப்பீடு அதாவது இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது என்று கற்றுக் கொள்வோம். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதம மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், சிறிய காயங்களுடன் இருப்பவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்குகிறது. ஒடிசாவின் முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் அவர் மாநிலத்தைச் சேர்ந்த 39 இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ5,00,000 என அறிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து 103 பேர் இறந்துள்ளதாக முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து வந்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் மற்றும் குழுவினர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுத் தகவல்கள் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் இறந்த குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 1லட்சம் ரூபாயும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விபத்தைத் தடுக்க இந்திய தொழில்துறையுடன் இணைந்து ஆராய்ச்சி வடிவம் மற்றும் தரநிலை அமைப்பால் (RDSO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) தான் 'கவச்' அமைப்பாகும். 'கவச்' என்றால் கவசம் என்று பொருள். இந்திய ரயில்வே முழுவதும் ரயில் செயல்பாடுகளில் பாதுகாப்பை அடைய தென் மத்திய ரயில்வே மூலம் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இது பாதுகாப்பு ஒருமைப்பாடு நிலை-4 (SIL-4) தரநிலைகளுடன் கூடிய அதிநவீன மின்னணு அமைப்பாகும். இதனால் சிவப்பு நிற சிக்னலில் கடக்கும் ரயில்களைத் தடுத்து மோதலைத் தவிர்க்க முடியும். வேக கட்டுப்பாடுகளின்படி ஓட்டுநர் ரயிலைக் கட்டுப்படுத்தத் தவறினால், 'கவச்' அமைப்பு ரயிலின் பிரேக்கிங் சிஸ்டத்தை தானாகவே செயல்படுத்தும். மேலும் 'கவச்' அமைப்புகளுடன் பொருத்தப்பட்ட இரண்டு இன்ஜின்களுக்கு இடையே மோதலை தடுக்கும் ஆற்றலும் அவசரகால சூழ்நிலைகளின் போது கணினி மூலம் SoS செய்திகளை அனுப்பும் திறனும் கொண்டது இந்த 'கவச் சிஸ்டம். நெட்வொர்க் மானிட்டர் சிஸ்டம் மூலம் ரயில் இயக்கங்களின் மையப்படுத்தப்பட்ட நேரடி கண்காணிப்பு இதன் கூடுதல் அம்சமாகும். இந்த அமைப்பால் 10,000 ஆண்டுகளில் பிழையின் நிகழ்தகவு 1 ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது. தற்போது சில வழித்தடங்களிலும் ரயில்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் பிற மாநில ரயில் பாதைகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 'கவச்' அமைப்பு இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போதைய 'இன்டர்லாக் சிஸ்டம்' என்பது மிகவும் பாதுகாப்பான சமிக்ஞை வழி. அதாவது ஏதாவது ஒரு வழித்தட அமைப்பு (சிஸ்டம்) செயலிழந்தால் அனைத்து சமிக்ஞைகளும் (சிக்னல்களும் ) சிவப்பு நிறமாக மாறி அப்பாதையில் வரும் அனைத்து ரயில்களையும் நிறுத்தும் இந்த இன்டர்லாக் அமைப்பு அன்று அப்பொழுது மட்டும் வேலை செய்யாதது ஏன்? அதை யார், எதற்காக மாற்றி இருப்பார்கள்? இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் விசாரணை செய்வதன் மூலம் உண்மையான தகவல்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால் இந்த விபத்தைக் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்ட பிறகு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளார் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்.

உலகில் வேறு எங்கும் நடக்காத ரயில் விபத்து ஒன்று ஏதோ இப்பொழுது தான் முதன்முதலாக இந்தியாவில் நடப்பது போல எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் ஒப்பாரி வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பது வேதனை. இதற்கு முன்பு கூட உயிர்ச் சேதங்களுடன் ரயில் விபத்துகள் இந்தியாவில் நடந்திருக்கிறது. தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதும் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதும் ஆட்சியர்களின் கடமை. ரயில்வே நிர்வாகம் துரிதமாகச் செயல்பட்டு மீண்டும் ரயில்களை இயக்கத் துவங்கியுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதற்குள் ரயில்வே நிர்வாகத்தைப் பற்றி அரையும் குறையுமாகத் தெரிந்தவர்கள் தூற்ற ஆரம்பித்திருப்பது அவர்களின் அறிவிலித்தனத்தைத் தான் காட்டுகிறது.

மேலும் இத்தகைய கோரமான விபத்துகள் இனியும் நடக்காமல் இருக்க 'கவச்' தொழில்நுட்ப அமைப்புகளைத் துரிதமாகச் செயல்படுத்த அரசு முன்னெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிபிஐ விசாரணையில் மேற்கொண்டு தகவல்கள் தெரியும் வரை இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களையும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் பூரண நலம் பெறவும் கடவுளை வேண்டுவோம்.

ஓம் ஷாந்தி!








Tuesday, June 6, 2023

அயல்வாஷி

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த மலையாளப் படம் 'அயல்வாஷி'. எதார்த்தமான படம் என்றால் இது தான். இப்படித்தான் இருக்க வேண்டும். கதையும் சரி, கதாபாத்திரங்களும் சரி அத்தனை எளிமையாக இயல்பாக படத்தைப் பார்ப்பவர்களுக்கும் நிறைவைத் தந்து வெற்றிபெற்றிருக்கிறது. 

அருகருகே வாழும் இரு நண்பர்களுக்கிடையில் வரும் தவறான புரிதலைக் களைய ஒரு நண்பன் மேற்கொள்ளும் பிடிவாதமான முயற்சி. இறுதியில் பலப்படுகிறது நட்பு. இருவரையும் சமாதானப்படுத்தும் நட்பு கதாபாத்திரம் அருமை. குடும்பங்களில் இருக்கும் பணப்பிரச்னைகள், கணவன்-மனைவி உறவில் மாமியாரின் ஆதிக்கம், வில்லன்கள் என்று கலவையாக ஆனால் அருமையாக வடிவமைத்து விறுவிறுப்புடன் செல்கிறது. கதாபாத்திரங்களின் எளிமையும் ஊரின் அழகும் கதை சொல்லிய விதமும்  நம்மை இங்கும் அங்கும் நகர்த்தவிடாமல் படத்தைப் பார்க்க வைக்கிறது.

வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு நண்பர்கள் கலந்து கொண்டு உதவி செய்வது, உறவுகளுக்குள் கைகலப்பு, ஒன்று என்றால் உதவிக்கு ஓடிவரும் அக்கம்பக்கத்து மனிதர்கள் என்று முதல் காட்சியில் ஆரம்பித்த பரபரப்பு கடைசிக் காட்சி வரை தொடருகிறது. ஒரு நல்ல கதைக்கு நடிக்கத் தெரிந்த நடிகர்கள் இருந்தால் போதும். 'தாம்தூம்' என்று அதிக பொருட்செலவில் பாடல் காட்சிகள், அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் கன்னாபின்னாவென்று சண்டைகள், தேவையற்ற காட்சிகள் என்று இல்லாமல் அமைதியாக ஆனால் அடுத்த வீட்டில் நடப்பது போல ஒரு கதை. கதை மாந்தர்களும் மிக எளிமையாக அதிக ஒப்பனைகள் இன்றி நடித்திருப்பது சிறப்பு. 

ஃபீல்குட் படம் என்றால் இது தான். நெட்ஃப்ளிக்ஸ்ல் கண்டு களிக்கலாம். 

பச்சுவும் அத்புத விளக்கும்


சோம்பேறித்தனமான மாலை. கழுதை கெட்டால் குட்டிசுவரு. நமக்குத் தொலைக்காட்சி. அதிலும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹுலு என்று ஏகப்பட்ட குட்டிச்சுவர்கள். பிரைமில் என்ன படங்கள் புதிதாக வந்திருக்கிறதென்று பார்த்தால் அடடா! நமக்குப் பிடித்த நடிகரின் படம் வந்திருக்கிறதே என்று பார்க்க ஆரம்பித்தேன்.

பொதுவாக மலையாளப் படங்களில் ஐந்து நிமிடத்திற்கு தலைப்பு ஓடும். இந்தப் படத்தில் மும்பை நகர வாழ்க்கையை முதல் காட்சியிலேயே காட்டி அசத்தியிருந்தார்கள். அதனால் வேலைகளையும் தூக்கத்தையும் விட்டுவிட்டுத் தொடர்ந்து பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியது. மும்பை நகரம் என்னளவில் இன்றும் ஒரு கனவு நகரம் தான். விடியலில் தொடங்கி இரவு வரை அதன் பரபரப்பிற்காகவே அந்த நகருக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நெருக்கமான வீடுகள், ஓய்வின்றி செல்லும் தொடர் ஓட்ட ரயில்கள், வேலைக்குச் செல்லும் மனிதர்கள், பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை வாழும் குடியிருப்புகள் என்று பல கவரும் அம்சங்களுடன் மும்பையை இந்தப் படத்தில் நன்கு காண்பித்திருக்கிறார்கள். கொசுறாக, கோவாவும். கிட்டத்தட்டப் பாண்டிச்சேரியை ஒத்து இருக்கிறது அந்த நகரம்.

நல்லவிதமாகத் தொடங்கிய படம் போகப்போக சுவாரசியம் குறைந்து எப்படா முடியும் என்றாகிவிட்டது. அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் போகும் என்று எளிதில் புரிந்து விடும் அளவிற்கு கதை இருந்தாலும் கோவா, மும்பை, கேரளா என்று சுற்றி வந்து நம்மை உட்கார வைத்து விடுகிறார்கள். இன்னும் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மும்பை என்றால் தாதாவாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாதாரண மனிதர்கள் கூட இருப்பார்கள். ஃபகத் ஃபாசில் மெலிந்த உருவத்துடன் கண்களை உருட்டியபடி அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்கு நடித்திருக்கிறார். அவருடைய கடையில் வேலைபார்க்கும் இளைஞனின் ஹிந்தி, ஆங்கில நகைச்சுவை வசனங்கள் நன்று. மலையாளப் படங்களில் எனக்குப் பிடித்தது என்றால் அங்கு ஹிந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்களை இயல்பாகக் கையாளும் முறை தான். இந்தப் படத்திலும் அப்படித்தான். கதாநாயகன் பெண் பார்க்கச் செல்லும் வீட்டில் அந்தப் பெண் தன்னுடைய கிறிஸ்தவ நண்பனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவள் அம்மாவிடம் வெகு இயல்பாகக் கூறுவாள். இஸ்லாமியப் பாட்டியாக வருபவர் 'சுவாமி சரணம்' என்று மாலை போட்ட சிறுவனிடம் கூறுவார். இந்த மாதிரி காட்சிகள் தமிழ்ப்படங்களில் பார்ப்பது அரிதாகி வருகிறது. பாட்டியின் கனிவான கதாபாத்திரம் தான் மையக்கரு. உணர்ந்து நடித்திருக்கிறார்.

அதே போல் ரியாஸ் கதாபாத்திரத்தில் வரும் வினீத்தின் வீட்டில் புத்தர், கலைப்படங்கள் எல்லாம் சுவற்றை அலங்கரித்திருக்கும். ஹராம் என்று கேரளாவில் கூவ மாட்டார்கள் போலிருக்கிறது. தமிழகத்தில் தான் ஹிந்துக்களையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் புண்படுத்தும் வகையில் படங்களில் குறியீடுகளை வைத்து தங்களுடைய அடிமைப்புத்தியை திராவிட எஜமானர்களுக்கு வாலாட்டும் இயக்குநர்கள் சமூகம் இருக்கிறது போலும்! என்று ஒரு திரைப்படத்தைப் பொழுதுபோக்காக எடுக்க இவர்கள் கற்றுக் கொள்வார்களோ? அதுவரையில் வேற்று மொழிப் படங்களைப் பார்ப்போம்.

பெரிய கண்களுடன் அதிக ஒப்பனை இல்லாமல் இயற்கை அழகுடன் இந்த மலையாள கதாநாயகிகள் தான் எத்தனை அழகு! அரைகுறை ஆடை அணிந்து விரச நடனம் ஆடும் நாயகிகள் எல்லாம் தமிழ்ப்படத்திற்குத் தான் தேவை. ஏனென்றால் கதைக்குப் பஞ்சம் இங்கே. தமிழ்ப்படங்கள் பார்ப்பவர்களின் ரசனையும் அந்த அளவில் தான் இருக்கிறது. இசை என்ற பெயரில் காட்டு கத்தல், நடனம் என்ற பெயரில் ஆபாச அங்க அசைவுகள், வசனங்கள் என்ற பெயரில் கெட்ட வார்த்தைகள் இப்படி எதுவுமில்லாமல் படத்தைப் பார்க்க மலையாளப் படங்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது. கதையினூடே ஒரு நல்ல கருத்தையும் சொல்கிறது இந்தப்படம்.

கண்டதும் காதல் என்றாலும் பொழுபோக்குப் படம்.


இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்

 நவோதயா பள்ளிகள் பற்றி சொல்வனத்தில் வெளிவந்த என் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும். இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்

கற்றவருக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதை அறிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது நல்ல கல்வியைப் பெற்றுத் தர போராடி வருகிறார்கள். இன்றைய சூழலில் அன்றாட வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அறிவையும், திறன்களையும் வழங்கும் தரமான அடிப்படைக் கல்வி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டியது அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட. இது வறுமையைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, பாலின சமத்துவத்தை அடைவதற்கும் சமூக மேம்பாட்டிற்கும் முக்கிய உந்துதலாக இருக்கும். எந்தவொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமான காரணியாக இருப்பதால் தான் உலகெங்கிலும் இயங்கும் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி கிடைத்திட பல நாட்டு அரசுகளும் முனைப்புள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே எழுத்தறிவு பெற்றோரின் விகிதத்தை மேம்படுத்துவதில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டே பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகளில் பயிலும் பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த கிராமப்புற மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாதிரி பள்ளிகள்” எனப்படும் இணை கல்வி நிறுவனங்களை அமைக்க 1985ல் மத்திய அரசு தீர்மானித்தது. அன்றைய பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, “ஜவஹர் நவோதயா வித்யாலயா(ஜேஎன்வி)” எனப்படும் பள்ளிகளை, இருபாலாருக்குமான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இலவச குடியிருப்புப் பள்ளிகள் திட்டமாக, 1986ல் தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் “நவோதயா வித்யாலயா சமிதி” எனும் ஒரு தன்னாட்சி அமைப்பு இப்பள்ளிகளை நிர்வகிக்கிறது. பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திறமையான கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களும் தங்கள் நகர்ப்புற சக மாணவர்களுடன் சம நிலையில் போட்டியிடவும் முன்னேறும் வாய்ப்புகள் பெற்றிடவும் உதவும் வண்ணம் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்கள் இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தரமான நவீன கல்வி, கலாச்சாரத்தின் வலுவான அம்சங்கள், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, சாகசச் செயல்பாடுகள், உடற்கல்வி என அனைத்தையும் வழங்கும் அம்சங்களைக் கொண்டது இத்திட்டம்.

இப்பள்ளிகளில் சேர விரும்பும் அரசுப் பள்ளி கிராமப்புற மாணவர்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா தேர்வுத் தேர்வில் (JNVST) தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே அந்த மாவட்டத்தில் உள்ள ஜேஎன்வி பள்ளிகளில் கல்வி கற்க இயலும். கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சிப் பெறும் வகையில் தேர்வு வடிவமைக்கப்பட்டு தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் எந்தவித சிரமமும் இன்றி இலவசமாக சேர்க்கைப் படிவங்களைப் பெறுவதை உறுதி செய்யவும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, உள்ளூர் செய்தித்தாள்கள், துண்டுப் பிரசுரங்கள், வித்யாலயா இணையதளங்கள் மற்றும் மாவட்டத்தின் உள்ளூர் பள்ளிகளுக்கு நவோதயா வித்யாலயா அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைகள் மூலம் போதுமான விளம்பரங்களும் செய்யப்படுகிறது. ஜேஎன்வி அமைந்துள்ள மாவட்டத்தின் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது தேசிய திறந்தநிலைப் பள்ளியின் ‘பி’ சான்றிதழ் திறன் பெற்ற ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே இத்தேர்வுக்காக விண்ணப்பிக்க இயலும்.

கிராமப்புற ஒதுக்கீட்டில் சேர்க்கை கோரும் மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து 3,4,5ம் வகுப்புகளைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டுமே இந்த தகுதித் தேர்வு எழுத முடியும். ஒரு மாவட்ட பள்ளியில் குறைந்தபட்சம் 75 சதவிகித இடங்கள் கிராமப்புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களாலும் மீதமுள்ள இடங்கள் நகர்ப்புற பள்ளி மாணவர்களாலும் மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு மாணவிகளாலும் நிரப்பப்படுகின்றன. எந்த மாவட்டத்திலும் தேசிய சராசரியை விட (எஸ்சி 15% ,எஸ்டி 7.5% , ஓபிசி 27%) இடஒதுக்கீடு குறைவாக இருக்கக் கூடாது என்பது தான் சட்டம். இதைத்தவிர உடற்குறைபாடு உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளது. JNVST அறிவித்துள்ள மாநில மொழிகளிலும் (தமிழும் இதில் அடங்கும்) ஆங்கிலத்திலும் தேர்வு எழுதும் வசதிகளும் உள்ளது சிறப்பு.

ஒவ்வொரு நவோதயா வித்யாலயாவும் மாணவர்களுக்குத் தங்கும் விடுதி, பள்ளிச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், தினசரி உபயோகப் பொருட்கள், மருத்துவச் செலவு, சிபிஎஸ்இ , ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களை இலவசமாக வழங்குகிறது. இருப்பினும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடமிருந்து வித்யாலயா விகாஸ் நிதியாக மாதம் ரூபாய் 600/- வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் குழந்தைகள் இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் மாதந்தோறும் ரூ.1500 செலுத்த வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அதிக செலவுகள் செய்யப்படுகிறது. இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க ஆறு சிறப்புப் பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நவோதயா வித்யாலயா சமிதியின் திட்டங்களுக்கான நிதியை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் மத்திய அரசாங்கத்தால் வழங்குகின்றன.

நவோதயா வித்யாலயா திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மக்களின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட மொழிவாரி பிராந்தியத்தில் உள்ள ஒரு நவோதயா வித்யாலயாவிலிருந்து மற்றொரு மொழிவாரி பிராந்தியத்தில் உள்ள வித்யாலயாவிற்கு மாணவர்கள் இடம்பெயர்வது ஆகும். இத்திட்டத்தின்படி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 30% குழந்தைகள் ஒரு ஜேஎன்வி-யில் இருந்து மற்றொரு ஜேஎன்வி-க்கு ஒரு கல்வியாண்டுக்கு இடம்பெயர்கின்றனர். பொதுவாக இந்தி பேசும் மற்றும் இந்தி பேசாத மாவட்டங்களுக்கு இடையே நடைபெறும் இடப்பெயர்வு தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான சமிதியின் முக்கிய அம்சமாகும். நவோதயா வித்யாலயாக்கள் சிபிஎஸ்இ-ன் மும்மொழிக் கொள்கையைப் (பிராந்திய மொழி, இந்தி, ஆங்கிலம்) பின்பற்றுகின்றன.

சிபிஎஸ்இ நடத்தும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஜேஎன்வி மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்த சிபிஎஸ்இ தேசிய சராசரியை விட தொடர்ந்து சிறப்பாக இருப்பது சமிதி சரியான திசையில் நகர்வதைக் காட்டுகின்றன. கற்பித்தல், கற்றல் செயல்பாட்டில் புதுமைகள், சோதனைகள், சமீபத்திய கல்வித் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற ஆசிரியர்களின் பயிற்சி, வித்யாலயா ஆய்வகங்கள், நூலகம், கணிதம், அறிவியல் ஆய்வகங்களின் பயன்பாடு, வகுப்பறை பரிவர்த்தனை, பயனுள்ள தகவல் தொடர்பு, கணக்கீட்டு திறன், தொழில் ஆலோசனை மற்றும் ஊக்கமளிக்கும் அமர்வுகள் என ஒவ்வொன்றும் திட்டமிட்டு செய்யப்படுவதால் கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்ற பிற பள்ளி அமைப்புகளின் சராசரி தேர்ச்சி சதவீதங்களை ஒப்பிடுகையில் நவோதயா வித்யாலயா சமிதிப் பள்ளி மாணவர்களின் படிப்பறிவு சிறந்து விளங்குகிறது.

2020-21ல் 636 பள்ளிகளில் சேர பதிவு செய்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 25,43,459. தகுதித் தேர்வு எழுதியவர்கள் 19,27,354 பேர். தேர்ச்சி பெற்றவர்கள் 45,291.

சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களும் தடையின்றி ஒருங்கிணைய ஒரு தனித்துவமான பரிசோதனையாகத் தொடங்கிய நவோதயா வித்யாலயா அமைப்பு, இன்று தமிழ்நாட்டைத் தவிர அனைத்து இந்திய மாநிலங்களில் நிறுவப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் மாநில அரசாங்கங்கள் பள்ளி வளாகத்திற்கான நிலங்களை மட்டுமே அளிக்கின்றன. மற்ற செலவுகள் அனைத்தும் மத்திய அரசு நிதியால் பராமரிக்கப்படுவதால் பிற மாநிலங்கள் இம்முயற்சிக்குப் பெரும் ஆதரவை அளித்து கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருக்கின்றன.

இந்தி எதிர்ப்புப் பிரச்சாரமும் தமிழ், ஆங்கிலம் எனும் “இரு மொழிக்கொள்கை” அரசியலால் லாபத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் மட்டும் இன்று வரையில் ஆங்கிலம், மாநில/வேற்று நாட்டு மொழியுடன் ஹிந்தி மொழிப் பாடங்கள் என “மும்மொழிக்கொள்கை” வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் தொடர்வதும் ஒருவிதத் தீண்டாமை தான். ஜேஎன்வி பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ஆங்கிலமும், மாநில மொழியும் தற்போது முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் இன்று வரையில் அரசியல் செய்யும் திராவிடக் கட்சிகளால் திறமையுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இலவச கல்வி வாய்ப்புகளைத் தமிழகம் இழந்து வருகிறது.

சமூக நீதிக்காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி வாய்ப்புகள் நிறைந்த மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கற்கத் தடையேதும் விதிக்காமல் அதைக் காரணமாகக் காட்டி, ஜவஹர் நவோதயா பள்ளிகளை அனுமதிக்காமல் இருப்பதும் அரசியலே அன்றி வேறு எதுவும் இல்லை. அவர்களுடைய கூட்டணிக்கட்சிகளும் அமைதி காப்பது வாக்களித்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இவர்கள் செய்யும் அநீதியே.

இந்தியாவின் பிற மாநிலங்களில் 638 மாவட்டங்களில் 661 நவோதயா பள்ளிகள் இருப்பது போல் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி வசதி வாய்ப்புகள் குறைந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை முன்னெடுக்க அரசு ஆதரவளிக்க வேண்டும்.

கல்வி என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை ஆகும். நல்ல தரமான கல்வி நாகரீக நடத்தை கொண்ட சமூகத்தை உள்ளடக்கிய ஜனநாயகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு பெறுகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூக மேம்பாட்டிற்கும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவுகிறது.

36 வருடங்களாக மத்திய அரசு கொண்டு வந்த ஒரு நல்ல திட்டத்தை சுயலாப அரசியல் காரணமாக செயல்படுத்தாமல் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு திராவிடக் கட்சிகள் இழைக்கும் அநீதி இனியும் தொடராது என நம்புவோம். கேரளா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா முதல் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் மூலம் உண்மையான சமூகநீதி உருவாகட்டும். பிற்படுத்தப்பட்ட ஏழை கிராமப்புற மாணவர்களின் வாழ்விலும் விடியல் பிறக்கட்டும்.

காசி

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஒன்பதாவது தொடராக பத்ரிநாத்-ரிஷிகேஷ் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் காசி 

காசி யாத்திரை என்றதும் பாட்டியை வழியனுப்ப குழந்தைகளாக இருந்த நாங்கள் அம்மாவுடன் ரயில்நிலையத்திற்குச் சென்று வணங்கி வழியனுப்பியது நினைவிற்கு வந்தது. பாட்டி வயதை ஒத்த வேறு பல பாட்டிகளும் அந்தப் பெட்டியில் இருந்தனர். பொதுவாக காசிக்குச் செல்பவர்கள் குடும்பக்கடமைகளை முடித்துவிட்டு ‘அக்கடா’ என ஓய்ந்திருக்கும் கடைசிக்காலத்தில் சென்று வருவது மரபு. 2008ல் அம்மாவும் அப்பாவும் சென்று வந்த பிறகு அவர்களின் பயணத்தைப் பற்றிக் கேட்க, அம்மாவோ, ” உனக்கு அங்க போகப் பிடிக்குமா தெரியலை. அங்கங்க படிகள்ல, போற வழியில கொஞ்சம் அசுத்தமா இருக்கு. ஆனாலும் போயிட்டு வா” என்றவுடன் என்னுடைய ஆவல் சற்று குறைந்து விட்டது.

இன்று நேற்றல்ல இந்தக் கனவு. ‘மா கங்கா’வைப் பற்றின எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தவறாமல் பார்த்துப் பார்த்து படித்துறைகளையும் காசி விஸ்வநாதரையும் தரிசிக்க வேண்டும் என்ற பலநாள் தவம். மோடிஜியின் ஆட்சியில் ‘நமாமி கங்கே’ திட்டத்தில் கங்காவைச் சுத்தப்படுத்த அப்பாடா! என்றிருந்தது. அதனால் 2020 மார்ச்சில் அங்கு செல்ல திட்டமிட்டோம். நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்குமாம். கொரோனா கோரத்தாண்டவம் ஆட, “இரண்டு வருடங்களுக்குப் பயணம் கியணம்னு மூச்சு விடாப்பிடாது” என்று மகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டாள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் நாம் அவர்களுக்கு குழந்தைகளாகி விடுகிறோம். அதுவும் நல்லதாகி விட்டது. 2021ல் காசி விஸ்வநாதர் கோவிலைக் கங்கைக்கரையுடன் இணைத்துச் சீரமைக்கும் வேலைகள் முடிந்து பிரம்மாண்ட கோவில் வளாகத்தைப் பார்த்தவுடன் எப்படியாவது சென்று விடுவது என்று நினைத்தது அன்று நடந்தே விட்டது! இந்துவாகப் பிறந்து வாழ்பவர்கள் அனைவருக்கும் காசிக்குச் செல்வது என்பது வாழ்நாள் தவமாக இருக்கும். அதனால் இப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது விஸ்வநாதரைத் தரிசித்து வர கிளம்பிச்செல்லும் மக்கள் அதிகரித்து விட்டார்கள்.

எண்ணங்களை அசைபோட்டுக் கொண்டே விமானத்திலிருந்து பார்த்தால் பச்சைப்பசேலென விளைநிலங்கள்! நடுநடுவே பஞ்சு பொதி மேகங்கள் காட்சி தர, டேராடூனிலிருந்து நான்கு மணிநேரத்தில் வாரணாசி லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம்! பெட்டிகளுடன் வெளியே வர, விடுதியிலிருந்து அழைத்துச் செல்ல வந்திருந்தவர் வண்டி நிற்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல, ‘பளிச்’சென்று பிரகாசமாக இருந்தது வாரணாசி. வண்டிகள் நிற்குமிடத்தில் அழகான ‘கங்கைப்படித்துறை’ மினியேச்சர் மாதிரியை வைத்திருந்தார்கள். அங்கிருந்து நாங்கள் தங்கவிருந்த ‘ஹோட்டல் பச்சன் பேலஸ்’ விடுதிக்குச் செல்ல ஒரு மணிநேரம் ஆனது. வழியில் வருணா நதிப்பாலத்தைக் கடந்து புதிய பழைய சாலைகளில் பயணித்து வந்தோம். சாலை விரிவாக்கம், புதுப்பாலங்களைக் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. சில பிரியாணி, மதுபானக்கடைகளைப் பார்த்தவுடன் தான் ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் சைவ உணவு விடுதிகளை மட்டும் கண்டதும் ஒரு மதுபானக்கடையும் இல்லாததும் நினைவிற்கு வந்தது. காசி அப்படியல்ல. கோவிலுக்குச் செல்லும் முன்னர் ஒரு பெரிய மசூதி தென்பட்டது. அதன் அருகே தான் அசைவ உணவுக்கடைகளும்.

விடுதியிலிருந்து ஒரு மைல் தொலைவில் வண்டிகளை நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து இரு சக்கர வண்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. இல்லையென்றால் நடைப்பயணம் தான். அதிகாலையிலும் இரவு 10 மணிக்குப் பிறகு மட்டும் நான்கு சக்கர வண்டிகள் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். விடுதிச் சிப்பந்திகள் இருவர் எங்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ‘விறுவிறு’வென்று நடக்க, நாங்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு நடைபோட, வழியெங்கும் ‘பளிச்’சென்ற வண்ணங்களுடன் கட்டடங்கள். துணிகள், பலகாரம், பீடா, லஸ்ஸி, பன்னீர் முதல் சகலவிதமான பொருட்களை விற்கும் சிறுசிறு கடைகள், நடுநடுவே கோவில்கள் என ஏராளமாக இருக்கிறது!சந்தையில் காய்கறி, பழங்கள், பூஜைக்கான பொருட்களை விற்பவர்கள் என்று திரும்பின பக்கமெல்லாம் மக்கள் கூட்டம். அந்தத் தெருவே உயிர்ப்புடன் அத்தனை வித்தியாசமாக உற்சாகமாக இருந்தது. நடுவில் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் வழி என்று ஒரு தெருவாயிலில் ஆதிசங்கரர் உருவச்சிலையுடன் முகப்பு வளைவு. வாசலில் காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எட்டிப்பார்த்தால் தெரு முழுவதும் கடைகள்! ஆஹா!

மாடுகளும் நாய்களும் மனிதர்களுடன் உலாவுவதைப் பார்த்துக் கொண்டே நான்கு பேர் சென்றால் தெருவை அடைத்து விடும் சின்னஞ்சிறிய தெருவுக்குள் நுழைந்தோம். காசியின் அழகே இந்தச் சிறிய நீண்டு வளைந்து செல்லும் தெருக்கள் தானே! எதிரே இரு சக்கர வண்டி வந்தால் கூட ஒதுங்கி நின்று வழியை விட வேண்டியிருக்கிறது. தெரு முழுவதும் கடைகள் உணவகங்கள் விடுதிகள்! எங்கள் விடுதியும் வர, உரிமையாளர் திரு.பியூஷ் சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

பெட்டிகளை வைத்து விட்டு ஈஷ்வர், நண்பர் வேதமூர்த்தியிடம் நாங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவலைக் கூற, அவரும் உடனே புறப்பட்டு வந்துவிட்டார். அவர் வீட்டிலிருந்து இரு நிமிடங்களுக்குள் விடுதி இருந்தது. அங்கிருந்தவர்கள் அவரை ‘குருஜி’ என்று அழைத்தார்கள். எங்கள் திருமணத்தில் பார்த்தது. இப்பொழுது முற்றிலும் மாறியிருந்தார். வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கோவிலிலும் கங்கைக்கரையிலும் திருவாசகம் ஓதிக்கொண்டு வாழ்பவர். ஈஷ்வருக்கும் அப்படிப்பட்ட தனித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை! ஆனால் பாவம்! “எதுக்கு மாப்பிள்ளை காசிக்குப் போகிறீர்கள்? என் மகளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்ன்னு அப்பவே காசி யாத்திரைக்குப் போயிட்டு இருந்த மனுஷனை வம்படியா பிடிச்சு…” ஹ்ம்ம்ம்… அதெல்லாம் சொல்லி மாளாது😂 “சரி, நானே ஒரு தண்டமும் கமண்டலமும் இப்ப வாங்கிக் கொடுக்கிறேன். காசியிலே இருந்து விடுங்களேன்”ன்னு சொன்னால் “நீயும் வா” என்றவுடன் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு வாழ்க்கை வாழ கிடைத்தால் கசக்குமா என்ன?

தேநீருக்குச் சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். “இப்பொழுதுதான் வந்து இறங்கி இருக்கிறீர்கள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பிறகு கங்கைக்கரைக்குச் செல்லலாம்” என்று வேதமூர்த்தி அண்ணா கூறவும் நாங்களும் ஓய்வு எடுத்துக் கொண்டோம். நாலரை மணி போல் கிளம்பி அவர் வீட்டிற்குச் சென்றோம். விடுதியின் எதிரே சிறு கடையில் சோப்பு, சீப்பு முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை கிடைக்கிறது. அதைத் தாண்டிச் சென்றால் வெளிநாட்டினரைக் கவரும் விதத்தில் ஏகப்பட்ட உணவுப்பட்டியலுடன் இரு உணவகங்கள். ஒரு தாத்தா பாட்டி பூரி, இட்லி விற்றுக் கொண்டிருந்த கடையின் எதிரே பழங்களை நம் கண்முன்னே சாறு பிழிந்து கொடுக்கிறார்கள். விலையும் அதிகமில்லை. அப்படியே பாம்பு வால் போல் தெரு நீள்கிறது. நான்கைந்து நாய்கள் இங்கும் அங்கும் எனக்கென்ன என்று படுத்துக் கொண்டிருந்தது. ரொட்டி வாங்கிப் போட்டாலும் சாப்பிடவில்லை. அதற்குப் பிடித்தது தான் வாங்கிக் கொடுக்கணுமாம். நல்லா தயிரும், இட்லி தோசையும் சாப்பிடுது. ஆஹான்! கெடுத்து வச்சிருக்கானுங்களே! “அது ஒன்றும் செய்யாது சும்மா போங்க” என்று உள்ளூர்க்காரர்கள் கூறினாலும் உள்ளூர உதறல் தான்! போதாக்குறைக்கு மாடு வேறு குறுக்கால நின்று கொண்டு😨 இவர்களையெல்லாம் கடந்து அண்ணாவின் வீட்டிற்குச் சென்றோம்.

நல்ல வசதியான வீடு தான்! அவரே சமைத்து உண்கிறார். டீ போட்டுக் கொடுத்தார். தேவையான பொருட்களுடன் நிம்மதியான மினிமலிஸ்ட் வாழ்க்கை! அனைவருக்கும் கிடைக்காத வரம்! அருகே அழகான சிவன் கோவில். தெருவில் நெருக்கமான வீடுகள். வீட்டுச்சுவர்களில் அழகான சிவன், ஹனுமன், விநாயகர், கங்கா மாதா ஓவியங்கள்! மின்சார கம்பிகளில் மந்திகள் தொங்கிக் கொண்டு சேட்டை செய்து கொண்டிருந்தது கொள்ளை அழகு. அதுவும் அந்த குட்டிக்குரங்குகள்😍

கரையில் உட்கார வசதியாக இருக்கும் என்று ஆளுக்கொரு பிளாஸ்டிக் சேர் எடுத்துக் கொண்டு ‘ட’ வடிவில் இரு சிறு தெருக்களைக் கடந்து சென்றவுடன் எதிரே ‘மா கங்கா!’. வருணபகவானின் கொடையால் இருகரைகளையும் தொட்டு வண்டல் மண்ணைச் சுமந்தபடி ஆவேசமாக ஓடிக்கொண்டிருந்தாள்! படிகள் துவங்கும் இடத்தில் ‘பிரிஜ் ராமா பேலஸ்’ என்ற நான்கு நட்சத்திர உயர் ரக விடுதி. கரையில் அமைந்திருப்பதால் அங்கு தங்க விலையும் அதிகம்! அதிக அளவில் வெளிநாட்டினர் அங்கே தங்கியிருந்தனர். பிரசித்திப் பெற்ற ‘கங்கா ஆரத்தி’ நடக்கும் ‘தஷஷ்வமேதா’ படித்துறை அருகே இருந்ததும் மற்றொரு காரணம். 45 செங்குத்தான படிகள் கீழே இறங்கி அங்கிருந்த வட்டமான தூணின் மேல்தளத்தில் அமர்ந்து கொண்டோம். மாலைச்சூரியன் கருமேகங்களுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது.

மோட்டார் படகுகள் பெரும் இரைச்சலுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்ததில் அமைதியற்ற சூழல்😒 உல்லாசமாக படகுகளில் சவாரி சென்று கொண்டிருந்த பயணிகளில் சிலர் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் நின்று கொண்டு படங்களை எடுக்கவும் மறக்கவில்லை😊 எனக்குத்தான் உதறலாக இருந்தது😟 நியூயார்க்கில் ‘லேக் ஜார்ஜ்’ல் 2005ல் இலையுதிர்கால அழகைக் காண 47 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்று நிலைதடுமாறி விழுந்ததில் 20 பேர் இறந்து விட்டனர். பயணிகள் அனைவரும் மூத்த குடிமக்கள். அதற்குப்பிறகு தான் படகில் செல்பவர்களின் உயிரைக் காக்க லைஃப் ஜாக்கெட் கட்டாயமாக்கப்பட்டது. கேரளாவிலும் தேக்கடியில் அப்படி ஒன்று நடந்து பேருக்கு ஒரு லைஃப் ஜாக்கெட் கொடுக்கிறார்கள். அதை முறையாக அணியாமல் மக்கள் பயணிக்கிறார்கள். பார்க்கும் நமக்குத் தான் பகீரென்று இருக்கிறது! என்னவோ போடா மாதவா!

மெல்ல இருள் கவிழ, சிறிய, பெரிய படகுகள் ‘கங்கா ஆரத்தி’ நடக்கும் இடத்தில் ஒதுங்க ஆரம்பித்து விட்டது. ‘முன்ஷி காட்’டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டமும் மெல்ல கலைய, வெள்ளம் காரணமாக ஆரத்தியை எளிதாக முடித்துக் கொண்டார்கள். அப்படியே அங்கே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தோம் என்றே தெரியவில்லை. பசிக்கிற மாதிரி இருக்கவே, அண்ணா ஒரு நல்ல உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூற, சூரியோதயம் காண காலையில் மீண்டும் வரலாம் என்று கிளம்பிவிட்டோம்.

அண்ணாவின் வீட்டிலிருந்து மூன்று தட்டுக்களை எடுத்துக் கொண்டு அந்தச் சிறிய உணவகத்திற்குள் நுழைந்தோம். படிக்கட்டு மேடையிலேயே அடுப்பை வைத்து பெரிய வாணலியில் உருளைக்கிழங்கு போண்டா, சமோசா, கட்லட்டை ஒருவர் பொரித்துக் கொண்டிருக்க, சுடச்சுட வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. உள்ளே ஒருவர் சமோசா தயாரிக்க மாவைத் தேய்த்து மசாலாவை உள்ளே வைத்துக் கொண்டிருந்தார். கடையின் வாசலில் மெல்லிய முறுகலான தோசையும், வெங்காய ஊத்தப்பமும் ஊற்றிக் கொண்டிருந்தவருக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. சமையலுக்கு 2 பேர், ஒத்தாசைக்கு இருவர், பணத்தை வாங்கி கொள்ள, பரிமாற ஒருவர் என்று அந்தச் சிறுகடையில் அப்பொழுது ஐந்து பேர் பம்பரம் போல வேலை செய்து கொண்டிருந்தார்கள்! நாங்கள் கேட்டது தட்டில் வைத்ததும் தான் தெரியும். உடனே காலியாகி விட்டது. அத்தனை சுவை! மூன்று பேர் வயிறார சாப்பிட்டும் 150ரூபாய் தான் ஆனது. நம்ப முடிகிறதா? எங்களாலும் நம்ப முடியவில்லை. காசியில் உண்பதற்கான செலவு மிகவும் குறைவு என்பதை அடுத்தடுத்த நாட்களில் நன்கு தெரிந்து கொண்டோம். நாளைக்காலையில் இங்கே அருமையான ஜிலேபி கிடைக்கும். ஆனால் கடை 9 மணியளவில் தான் திறப்பார்கள் என்றார். அதனாலென்ன? ஜிலேபிக்காக எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று கூறி அங்கிருந்து அண்ணாவிடம் விடைபெற்று விடுதிக்குத் திரும்புகையில் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தினர் (வெளிநாட்டினர்) பாடலைப் பாடிக் கொண்டே சென்றார்கள். Prague நகரில் சாலையில் இதே போல பஜனை செய்து கொண்டு சென்ற குழுவினரைக் கண்டது நினைவிற்கு வந்தது. ஆனந்தமான மனிதர்கள்!

வழியில் இசைக்கருவிகளை விற்கும் கடையைக் கண்டவுடன் ஈஷ்வர் புல்லாங்குழல் ஒன்றை எடுத்து இசைத்துப் பார்க்க, பிடித்துப் போய் வாங்கியும் விட்டார். மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. மேளச் சத்தம் கேட்க, தொங்கும் மின்சார வயர்களைத் தூக்கிப் பிடித்தபடி வாலிபர்களும் சிறுவர்களும் ‘துர்கா மாதா கீ ஜே’ என்று குரலெழுப்பி கல்கத்தா காளி உருவச்சிலையைத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். எட்டு மணிக்குப் பெரும்பாலான கடைகளை மூடி நகரம் உறக்கத்திற்குத் தயாராகி விடுவது உறங்கா நகரத்தில் வளர்ந்த எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது! திருவிழா கூட்டத்தைக் கண்டால் மதுரைக்காரர்களுக்குத் தொற்றிக் கொள்ளும் உற்சாகத்துடன் நாங்களும் கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம். அங்கே வேறு தெருக்களில் இருந்து வந்த காளி மாதா சிலைகளுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்க, சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டு கடைக்குச் சென்று பால் அருந்தி விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.

விடுதி உரிமையாளர் பியூஷிடம் “கொண்டாட்டமாக இருக்கிறதே?” என்றால், “துர்கா பூஜையை இரவு முழுவதும் கொண்டாடுவோம். உங்களுக்கு விருப்பம் என்றால் என்னோடு வாருங்கள். வீட்டிற்குச் சென்று என் அம்மா, தங்கையுடன் உங்களையும் அழைத்துச் செல்கிறேன். நீங்களும் கண்டுகளிக்கலாம். நான் யாரையும் இதுவரை இப்படி கேட்டதில்லை. நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்று தான் கேட்டேன்.” என்று அவர் கேட்டதும் ஒரு கணம் போகலாமா என்று கூட யோசித்தேன். ஈஷ்வர் சோர்வாக இருந்ததால் ‘நன்றி’ கூறி விடைபெற்றோம்.

நாங்கள் இருந்த அறை மட்டுமல்ல அந்த விடுதியில் எந்த அறையிலும் ஜன்னல் இல்லை😵 சுற்றிலும் கட்டடங்கள் இருந்தால் ஜன்னல் வைத்தும் என்ன பயன் என்று விட்டுவிட்டார்கள் போலிருக்கு! ஹ்ம்ம்ம். ஏசியும் வேலை செய்த மாதிரி தெரியவில்லை. வரவேற்பாளரிடம் தெரிவித்த பிறகு இருவர் வந்து பார்த்து அப்போதைக்கு எதையோ சரி செய்து விட்டுச் சென்றாலும் நடுராத்திரியில் மீண்டும் அதே பிரச்னை. களைப்பில் எப்படியோ தூங்கிவிட்டோம். காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி சூரியோதத்தைக் காண தெருவுக்குள் நுழைந்தால் முதுகைக் காண்பித்தபடி அசைபோட்டுக் கொண்டிருந்தது மாடு! இரைச்சல் இல்லாத, மனித நடமாட்டம் குறைந்த இடத்தின் அமைதியில் அழகும் குடியிருக்க, விடிந்தும் விடியாத பொழுதுகள் தான் எத்தனை அழகு! பால் பாக்கெட்டுகள் விற்பனைக்குக் காத்திருக்க, தெருவிளக்குகள் இன்னும் எரிந்து கொண்டிருந்தது. நாங்கள் மட்டுமே நடந்து சென்று கொண்டிருந்தோம். நாய்களுக்கும் இன்னும் விடியவில்லை. ஒரே நாளில் அந்த தெருக்கள் பழக்கமாகி ‘முன்ஷி காட்’ வரும் பொழுது சூரிய பகவான் வானை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.

மெல்ல மெல்ல வானில் தூரிகையால் வண்ண வண்ண ஓவியங்களைத் தீட்ட நாங்களும் முடிந்தவரையில் படங்களைக் க்ளிக்கிக் கொண்டோம். வானின் பொன்னிறம் கங்கா நதியில் பிரதிபலித்து வாவ்! ‘தளக்தளக்’ என்று கரையை முட்டி மோதி சுழன்று சுழன்று ஓடும் ஆறு. ஆற்றின் ஓட்டத்தில் கட்டி வைத்திருந்த படகுகள் ஆடிக்கொண்டிருக்க, பறவைகளின் ‘குக்கூ’ பாஷைகள் என்று அந்த இடமே சொர்க்கமாக இருந்தது. வெளிநாட்டினர் பலரும் காமெராவும் கையுமாக காட்சிகளைப் படங்கள் எடுத்துக் கொண்டும் ரசித்துக் கொண்டும் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் காலை சூரியோதத்தைக் காண பயணிகளை ஏற்றி வரும் இயந்திரப்படகுகளின் இரைச்சலில் அனைத்தும் தொலைந்து போயின😞 நாங்களும் ஒரு படகில் ஏறி அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கங்கைக்கரையில்? எதற்கு மக்கள் அடித்துக் கொண்டு வருகிறார்கள்? எது அவர்களை இப்படி ஈர்க்கிறது என்று பார்க்க கிளம்பி விட்டோம்.

கிழக்கு நோக்கி அமைந்திருந்த படித்துறைகள் அனைத்தும் தங்கத்தால் ஜொலிப்பது போல் இருந்தது! வடக்கே ‘பஞ்சகங்கா காட்’டில் துவங்கி தெற்கே ‘அசி காட்’ வரை படித்துறைகள் நீள்கிறது. 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட படித்துறைகள் மராத்தா மன்னர்களால் 18ம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் முன்ஷி காட்’டில் துவங்கி தெற்கே ‘அசி காட்’ வரைச்சென்று பின் வடக்கே ‘பஞ்சகங்கா காட்’ வரை பயணித்தோம். படித்துறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயருடனும் தனித்த அழகுடனும் இருந்தது. வெள்ளத்தால் படிகள் பல மறைந்து சில இடங்களில் கரையோரக் கோவில்களும் ஆற்றில் மூழ்கியிருந்தது! பிறைவடிவ கரையோரத்தில் 84க்கும் மேலான படித்துறைகள் அமைந்திருக்கிறது. மணிகர்ணிகா, ஹரிச்சந்திரா படித்துறைகளைத் தகனம் செய்வதற்கும் மற்ற அனைத்தும் மக்கள் குளிப்பதற்கும் பூஜைகள் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். எல்லா படித்துறைகளிலும் அழகான கோவில்கள் இருக்கிறது. படித்துறையில் படிக்கட்டுகள் கூட வித்தியாசமாக காண்போரை வசீகரிக்கிறது! படகோட்டி நாங்கள் படமெடுப்பதைப் பார்த்து ஒவ்வொரு படித்துறை அருகிலும் சிறிது நேரம் நிறுத்தி அவருக்குத் தெரிந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கவும் செய்தார். அண்ணாவும் சில படித்துறைக் கோவில்களைப் பற்றின தகவல்களையும் சொல்லிக்கொண்டு வந்தார். அநேகமாக எல்லா படித்துறைகளிலும் மக்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

இதில் ‘தஷஷ்வமேதா’ படித்துறை மிகவும் பிரபலமானது. இங்கு தான் பிரம்மா பத்து குதிரைகளைக் கொண்டு அசுவமேத யாகம் செய்தார் என்று கூறப்படுகிறது. அதனாலேயே ‘தஷ(10) அஷ்வ(குதிரை) மேதா’ என்ற காரணப்பெயர். இந்த படித்துறையில் கங்கா அன்னைக்கு நடக்கும் தீப ஆரத்தி உலகப்பிரசித்திப் பெற்றது. காசிக்கு வரும் பலரும் இந்தப் படித்துறைக்கு அதிகம் வருவதால் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. பல கற்பனைகளுடன் சென்றிருந்த எனக்கு மகா ஆரத்தியைக் காண முடியவில்லையே என்ற வருத்தம். நாங்கள் சென்ற இரு வாரங்களுக்கு முன்பு வரை படிகள் முழுவதும் மறைந்து தண்ணீர் மேலேறியதால் ஆற்றில் குளிப்பதைத் தடை செய்திருந்ததாகக் கேள்விப்பட்டோம். நல்ல வேளை! நாங்கள் அங்கிருந்த பொழுது தண்ணீர் கொஞ்சம் வடிந்து குளிக்க அனுமதித்தார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். ஆனாலும் நாங்கள் நின்றிருந்த படிகளில் இருந்து இன்னும் 25 படிகள் வரை கீழே தண்ணீருக்குள் இருப்பதாக அறிந்து வியந்தோம்!

தென் முனையில் இருக்கும் ‘அசி காட்’டிலும் கங்கா ஆரத்தி நடைபெற்றாலும் கூட்டம் குறைவாக இருக்கிறது. இங்கு தான் ‘ராமசரிதமனஸ்’ எழுதிய துளசிதாஸ் இயற்கை எய்தியதாக கூறப்படுகிறது. நதிகள் அசியும் கங்காவும் சங்கமிக்கும் இந்த இடத்தில் அழகிய சிவன் கோவில் உள்ளது.

சில படித்துறைகள் கவிஞர்களின், அரசர்களின், அரசிகளின் நாட்டுத்தலைவர்களின் நினைவாக அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. அதில் துளசிதாஸ் நினைவாக ‘துள்சி காட்’, வாரணாசியை ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ‘சேட் சிங்’ நினைவாக ‘சேட் சிங் காட்’, ராஜபுத்திரர்களின் ‘மன்மந்திர் காட்’ பார்ப்பதற்கு ராஜஸ்தான் அரண்மணையைப் போன்று இருக்கிறது. உண்மையை மட்டுமே பேசும் மன்னன் ஹரிச்சந்திரன் நினைவாக ‘ஹரிச்சந்திரா காட்’, ராணி ‘அஹில்யாபாய்’ நினைவாக ‘அஹில்யாபாய் காட்’, அன்னை ஆனந்தமயி ஆசிரமம் இருக்கும் ‘ஆனந்தமயி காட்’, அழகிய ஜெயின் கோவில்களுடன் ‘ஜெயின் காட்’, நம் நாட்டின் முதல் ஜனாதிபதி நினைவாக ‘ராஜேந்திரபிரசாத் காட்’, விஜயநகர மன்னரால் கட்டப்பட்ட ‘விஜயநகரம் காட்’ மற்றும் ‘கேதர் காட்’. இங்கே இருக்கும் சிவன் கோவில் விமானம், சிலைகள் நம்மூர் கோவிலைப் போல் இருக்கிறது. ஹனுமன் கோவில் இருக்குமிடத்தில் ‘ஹனுமன் காட்’ பளிச்சென்று ஆரஞ்சு வண்ணத்தில், ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ‘பஞ்சகங்கா காட்’ என்று நீள்கிறது பட்டியல்.

இதில் ‘சிந்தியா காட்’ கோவில்கள் ஆற்றில் மூழ்கி இருக்கிறது. நீர் வற்றியதும் நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். ‘நேபாளி காட்’ டில் அழகான பசுபதிநாத் கோவில் இருக்கிறது. கங்கா, வருணா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ‘ஆதிகேஷவ காட்’டில் அழகான பெருமாள் கோவில் இருக்கிறது. செல்ல வேண்டும் என்று நினைத்தோம். கோவில்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழகுடன் பழமை மாறாமல் இருப்பது தான் சிறப்பு. 18ம் நூற்றாண்டு ‘தர்பங்கா காட்’ பலரையும் கவரும் வண்ணம் இருந்தது. அங்கே தான் ‘பிரிஜ்ராம பேலஸ்’ ஹோட்டல் உள்ளது. அங்கிருந்து ஆற்றைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பயணிகளைக் கவரும் வகையில் கைகளைக் குவித்து கூப்பிய ‘நமோ காட்’ புதிதாக கட்டப்பட்டுள்ளது.

காசியில் இறந்து கங்கையில் எரியூட்டப்பட்டால் சொர்கத்திற்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது. “மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களின் சடலம் வந்து கொண்டே இருக்கும். சதா பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ஆற்றில் சடலங்கள் மிதக்கும்” என்று முன்பு கதை கதையாகச் சொல்வார்கள். இப்பொழுது அப்படியில்லை. மின்சார எரியூட்டி வந்தபிறகு படித்துறைகள் சுத்தமாகி உள்ளது. ஆனாலும் படிகளில் மரக்கட்டைகள் குவிந்திருந்தன. அருகிலேயே இறப்பை நோக்கிக் காத்திருப்பவர்கள் தங்கியிருக்கிறார்கள்😔 தெருவில் நடந்து செல்லும் பொழுது வேகவேகமாக இறந்தவர்களின் உடலை எடுத்துக் கொண்டு ‘ஹர ஹர மஹாதேவ’ சொல்லிக் கொண்டே செல்கிறார்கள். இறப்பு என்றாலே பதட்டத்தைத் தருகிறது. என்று அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோமோ அப்பொழுதுதான் மரணபயத்திலிருந்து முழுவிடுதலையும் கிடைக்கும். இறப்பைக் கொண்டாடுகிறது காசி நகரம். அதனால் தான் வாழ்விலிருந்து விடுதலை பெற அங்கு பலர் காத்துக் கொண்டு இருக்கிறார்களோ?


இந்தப் படித்துறைகள் ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கினாலே உடல் எடை தன்னால் இறங்கி விடும்😄 அத்தனை படிகள். அதனால் நடமாட்டம் நன்கு இருக்கும் பொழுதே சென்று விடுவது நல்லது. செங்குத்தான படிகளில் ஏறுவதும் இறங்குவதும் கொஞ்சம் சிரமம் தான்! வட இந்தியப் பாட்டிகள் ‘கிடுகிடு’ என்று இறங்கி ஆற்றில் நன்றாக குளித்து விட்டு அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வழிபட்டு ‘கிடுகிடு’வென ஏறி விடுகிறார்கள்! நன்றாக உழைத்து உரமேறிய உடம்பு. நம்மால் பொறாமைத்தான்பட முடிகிறது. ஹ்ம்ம்ம்😔

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் படகில் படித்துறைகளைப் பார்த்துப் படங்களை எடுத்து முடித்து மீண்டும் ‘முன்ஷி காட்’ ட்டிற்குத் திரும்பினோம். எட்டு மணிக்கே வெயில் போட்டுத் தாக்கியது. ஒரு எலுமிச்சை ‘சாய்’ குடித்து முதல் முறையாக கங்கையில் குளிக்க ஆற்றில் இறங்கினால் அதன் வேகம் ஆளை இழுத்துச் சென்று விடும் போல இருந்தது. நல்ல வேளை! தடிக்கயிறுகள், இரும்புச்சங்கிலிகள் கட்டி இருந்தார்கள். அதைப் பிடித்துக் கொண்டு பயந்தபடி இறங்கினால் படிகளாக இருந்தது.கீழே படிகள் தான் இருக்கிறது என்று அண்ணா சொன்னாலும் பயம் யாரை விட்டது. வெள்ள நீர் என்பதால் பழுப்பு நிறத்தில் இருந்தது. கங்கா மாதாவை வணங்கி மூன்று முறை ஆற்றுக்குள் இறங்கி எழுந்து கைகளால் நீரை அள்ளி அன்னைக்கு அபிஷேகம் செய்து வணங்கினோம். மிகவும் திருப்தியாக இருந்தது. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தால் துணிகளும் காய்ந்து விடுகிறது. சரி விடுதிக்குச் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு சாப்பிடப் போகலாம் என்று கிளம்பினோம்.

ஒன்பதே கால் மணியளவில் முதல் நாள் இரவு சென்ற உணவகத்திற்குச் சென்றால் நீளவாக்கில் ஜிலேபி எண்ணையில் பொரிந்து கொண்டிருந்தது. நன்கு பொரிந்ததும் ஜீராவில் போட்டு ஒரு முக்கு முக்கி எடுத்தால் சுவையான ஜிலேபி. யம்யம்யம்! சிறிய ஓட்டைப் போட்ட துணியில் மாவைப் போட்டு அந்த மனிதர் அழகாக ஜிலேபியை டிசைன் டிசைனாக போடுகிறார். பார்க்க எளிதாக இருந்தாலும் கடினமான வேலை தான். ஜிலேபி முடிந்ததும் அதே எண்ணையில் பூரி போட ஆரம்பித்து விட்டார். ஆனால் பூரி மாவின் நடுவே கருப்பு உளுந்து மாவை வைத்து உருட்டித் தட்டுகிறார்கள்.எனக்கு வெறும் ஜிலேபி மட்டும் போதும் என்று காலை உணவை முடித்து அருகிலிருந்த கடையில் சூடான தேநீர் சாப்பிட்டோம். ஜிலேபியின் சுவைக்காகவே தினமும் சாப்பிடலாம் போல் இருந்தது😋

சிறிது நேர ஓய்விற்குப் பிறகு “வெயில் அதிகமாக இருக்கிறது. வெளியே எங்கும் வரமாட்டேன்” என்று ஈஷ்வர் சொல்லிவிட்டார்😟அங்கேயே உட்கார்ந்திருக்கவும் பிடிக்கவில்லை. கொஞ்சம் வெளியில் சென்று வரலாம் என்று கையில் சிறிது பணத்தை எடுத்துக் கொண்டு தெருக்களைச் சுற்றிப் பார்த்து வருகிறேன் என்று கிளம்பி விட்டேன். இரண்டு ஆட்கள் மட்டுமே நடந்து செல்ல முடியும் அளவு குறுகிய தெருக்களில் ஏதோ ஒரு அழகு! எத்தனை முறை நடந்து சென்றாலும் அலுக்கவில்லை. நடுநடுவே கோவில்கள். சிவனே பிரதானம். நாமே அபிஷேகம் செய்யலாம். தடுக்கி விழுந்தால் பலகாரக்கடைகள்!சிறு தொழில் செய்யும் பலரை மொத்தமாக ஒரே தெருவில் பார்க்கலாம். பயணிகளை நம்பியே பல கடைகள். தொழில்கள்! இவர்கள் எல்லோரும் கோவிட் காலத்தில் எப்படி பிழைத்தார்களோ? என்று யோசித்தபடியே வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்த தெருக்களில் இருந்து சந்தைக்கு வந்து சேர்ந்தேன்.


விடுதியிலிருந்து சந்தைக்கு நேரடியாக வரும் வழியில் எனக்குப் பிடித்த இனிப்புக்கடைகள். முதல் நாள் பாலைக் கொதிக்கவைத்து செய்த பன்னீர் அடுத்த நாள் மதியத்திற்குள் விற்றுத் தீர்ந்து விடுகிறது! பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் செல்லும் கூட்டம், சுவாமியைத் தரிசித்து விட்டு வருபவர்கள் என்று மக்கள் நடமாட்டம் அதிகம். வழியில் சுடச்சுட இட்லி, தோசை, வடை விற்றுக் கொண்டிருக்கும் கடைகளைக் குறித்து வைத்துக் கொண்டேன். சிவன் கோவிலில் இருந்து சிவாஷ்டகம் ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்க அருமையாக இருந்தது. ஓ! இனிப்புக் கடை பக்கத்தில் பீடா கடை! சபாஷ்! எதிரே அம்மன் கோவில். கடந்தால் இடப்புறத்தில் சந்தை. வலப்புறத்தில் ‘தஷஷ்வமேதா’ படித்துறை. தெருவில் வகைவகையான காய்கறிகள், பழங்கள், தள்ளு வண்டிகளில் இளநீர் என்று கொட்டிக் கிடந்தது. இளநீரைக் குடித்து விட்டு தெருவோரக்கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தேன். பனாரஸ் பட்டு அங்கு பிரபலமாயிற்றே! “உள்ளே வந்து பாருங்கள்” என்று கூவிக்கூவி அழைக்கிறார்கள். கண்களைக் கவரும் விதவிதமான ரகங்களில் வண்ணங்களில் சேலைகள். சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு. லல லாலா… வாங்க வேண்டும். ஆசை தான். ஆனால் எனக்கு விருப்பமான சேலைகள் கிடைத்தால் வாங்கலாம் என்று கடந்து விட்டேன். லஸ்ஸி கடைகளும் ஏராளம்! குடிக்கத்தான் பயமாக இருந்தது!


காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் நுழைவாயிலில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. காவல்காரர்களும் கண்கொத்திப்பாம்பாக காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். குறுகிய தெரு முழுவதும் சேலை, நகை, பலகாரக்கடைகள். வளையல் கடையைப் பார்த்ததும் நின்று விட்டேன். அழகழகான கண்ணாடி, பிளாஸ்டிக் வளவிகள்! ஆசை யாரை விட்டது? ஒரு செட் வாங்கலாம் என்று போய்…😍 மகளுக்கும் வாங்கிக் கொண்டேன். நேரத்தைப் பார்த்தால்😳 அடடா! நேரம் போனதே தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறேன்.

விடுதிக்குத் திரும்பி வாங்கின வளவிகளைக் காண்பித்தேன். ஈஷ்வர் சிரித்துக் கொண்டார். “எவ்வளவு இதெல்லாம்?”. “அதெல்லாம் எதுக்கு இப்ப?”. “ம்ம்ம். மதியம் என்ன சாப்பிடலாம்?”. “எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்றவுடன் “சரி. நானும் வேதமூர்த்தியும் சாப்பிட்டு வருகிறோம்” என்று அவர் கிளம்பிப் போக நான் கிண்டிலில் மூழ்கி விட்டேன். “அருமையான பூரி. நெய்யில் பொரித்து தருகிறார்கள். “நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்.” என்று சாப்பிட்டு வந்தவர் கூற, அடடா! மிஸ் பண்ணிட்டேனே என்று இருந்தது. “அப்பப்பா! நல்ல வெயில்! மழை வரும் போல இருக்கு. 3.30மணி போல கோவிலுக்குப் போகலாம். ரெஸ்ட் எடு.” என்று கூறி அவரும் ரெஸ்ட் எடுத்துக் கொண்டார்.

சரியாக 3.30மணிக்குத் தயாராக, கருமேகங்கள் கூடி வருவதைப் பார்க்க பயமாக இருந்தது. அண்ணாவும் வந்து சேர, காசி விஸ்வநாதரைத் தரிசிக்க கிளம்பினோம். அர்ச்சனைப் பொருட்களை வாங்கிக் கொண்டு முதலில் அன்னபூரணி கோவிலுக்குச் சென்றோம். குட்டி அம்பாள். உலகை ரட்சிப்பவள் மஞ்சள், ஆரஞ்சு நிறப் பூமாலைகளுடன் திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தாள். மிக மிகச் சிறிய கோவில். வணங்கி விட்டு அங்கிருந்து நேராக காசி விசாலாட்சி கோவிலுக்குச் சென்றோம்.

நகரத்தார் கட்டிக் கொடுத்த கோவிலாம். நம்மூர் பாணியில் இருந்தது சிறப்பு. சிறிய நுழைவாயில். வாசலில் பூக்களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் வெள்ளிக்கவசத்தில் அம்மனும் ஆதி விசாலாட்சியும் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோவிலில் அம்மனைச் சுற்றி வலம் வரும் மண்டபம் முழுவதும் சிவலிங்கங்கள்! நவக்கிரங்களும் இருக்கிறது. வட நாட்டில் பூஜைகள் என்பது நம்மூரில் செய்வது போல இல்லை என்று நினைக்கிறேன். வெளியே நல்ல மழை! அங்கே திருவாரூர் பக்கத்தில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. வாஞ்சையோடு பேசினார்கள். நம்மூர் மக்கள் நம்மூர் மக்கள் தான்😍 மழை நிற்கும் வரை கோவிலில் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தோம். “ஊருக்கு வந்தா வீட்டுக்கு வாங்க” என்று அழைக்க அவர்களால் மட்டுமே முடியும்💗 சிறிது நேரத்தில் மழையும் நிற்க, தண்ணீர் வழிந்தோடும் ஈர தெருக்களின் வழியே காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தோம்.

வாவ்! பழைய கோவிலைப் பார்த்தவர்கள் இன்று இந்தக்கோவிலைப் பார்த்தால் பிரமித்துப் போகும் அளவிற்கு மாற்றம் செய்திருக்கிறார்கள். நான் கேள்விப்பட்டவரையில் கடைகள், குடியிருப்புகள் அடர்ந்த பகுதிகளையும் குறுகிய தெருக்களையும் கடந்து சென்றால் உள்ளே கோவில் இருக்கிறது தெரியும் என்று முன்பு சொல்வார்கள். கோவிலுக்குச் செல்ல ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே அப்பொழுது இருந்திருக்கிறது. தற்போது ஏழு நுழைவாயில்கள் வழியாக கோவிலுக்குச் செல்ல முடிகிறது! தங்கத்தால் வேயப்பட்டுள்ள ‘நகரா’ பாணி கோபுரங்கள் தூரத்தில் இருந்தே கோவிலின் இருப்பை உணர்த்துகிறது. மணிகர்ணிகா படித்துறைக்கு அருகில் லலிதா படித்துறையிலிருந்து கோவிலுக்குச் செல்ல வசதியாக நடைபாதையைக் கட்டியிருக்கிறார்கள்.


மிகப்பெரிய சுத்தமான வளாகம்! மழையில் அந்த இடமே புத்துணர்ச்சி பெற்றது போல் இருந்தது. வளாகத்தின் உள்ளே அருங்காட்சியகம், நூலகம், அரங்குகள், பக்தர்கள் தங்கும் இடங்கள், உணவுக்கூடங்கள் என்று 23 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் சென்ற நுழைவாயிலில் இருந்து உள்ளே வலப்பக்கம் திரும்பியவுடன் பாரதமாதா கோவில். இந்திய வரைபடத்தின் பின்னணியில் மூவண்ணக் கொடியை ஏந்திய அழகிய பாரதமாதா சிலை. பலரும் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். ஹிஹி! நாங்களும் எடுத்துக் கொண்டோம்😀 கோவிலைக் கடந்து சென்றால் ஆதி சங்கராச்சாரியார், காசி கோவிலைக் கட்டிய மகாராணி அஹில்யாபாய் திருவுருவச்சிலைகள்.

செருப்புக்களையும் செல்ஃபோன்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். கோவிலுக்குள் செல்வதற்கு முன் முழுவதுமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். பல அழகான கோணங்களில் கோவிலைப் படமெடுக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது.

நீண்ட வரிசையில் மக்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருந்தார்கள். சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் வாங்க வேண்டும். அதற்கும் நீண்ட வரிசை. காத்திருந்து கோவிலுக்குள் சென்றோம். காவலர்கள் இருந்தும் கொஞ்சம் தள்ளுமுள்ளுவாக இருந்தது. கர்ப்பகிரகத்திற்குள் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி மேடையின் நடுவே தரையில் குட்டி ஜோதிர்லிங்கம். சிவசிவா! பால், பூக்கள், கங்கா தீர்த்தம் என்று மக்கள் கொண்டு வரும் பூஜைப் பொருட்களால் அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட அனுமதிக்கிறார்கள். அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் இனம் புரியாத, வார்த்தைகளில் விவரிக்க இயலாத பரவசமாக இருந்தது. நின்று நிதானமாக வணங்கினோம். புரோகிதர் சிவனின் மாலை ஒன்றைத் தர, மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு மனஅமைதியுடன் வெளியே வந்தோம். இதற்குத்தான், இந்தப் பரவசத்திற்குத் தான் சிவனைத் தேடி மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள். இப்பொழுது கூட்டம் அதிகரித்திருந்தது! நல்ல வேளை! தப்பித்தோம்!

கருவறையின் மேலே கொடி மற்றும் திரிசூலத்துடன் தங்கத்தால் வேயப்பட்டுள்ள கோவில் கோபுரம் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. வளாகத்தில் கால பைரவர், விஷ்ணு, சிவன்,கௌரி, அவிமுக்தேஸ்வரா, விநாயகர், கார்த்திகேயா, சனீஸ்வரர்க்கு சந்நிதிகள் இருக்கிறது. பெரிய நந்தி ஒன்று எதிரே இருக்கும் மசூதியை நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்களில் சிவனை நோக்கித்தான் நந்தி அமர்ந்திருக்கும். அந்த வழக்கு தான் இன்னும் நடந்து கொண்டிருக்கிறதே! என்னத்த சொல்ல😌’ஞான வாபி’ என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிணறு கோவிலில் உள்ளது. வரலாறுகளை உள்ளடக்கியது காசி நகரம் மட்டுமல்ல கோவிலும் கூட.

உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான காசியில் பார்க்க வேண்டிய முக்கியமான கோவில்களைப் பார்த்தோம். இன்னும் பார்க்க வேண்டிய கோவில்கள் ஏராளம் இருக்கிறது. ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதினால் கட்டுரை நீண்டு கொண்டே போகும் என்பதால்…😃 அதே போல் பல மடங்களும், ஆசிரமங்களும் படித்துறைகள் அருகிலும் கோவிலைச் சுற்றிலும் தங்கும் வசதிகளுடன் இருக்கிறது. உள்ளூரில் பல சேவைகளும் செய்து வருகிறார்கள். நிறைய சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது.

ஒரு நாள் காலையில் ஈஷ்வர் அசதியாக இருக்கிறது என்று நான் மட்டும் சூரியோதயம் பார்க்க கிளம்பினேன். வழியில் அண்ணாவும் சேர்ந்து கொண்டார். அன்று மழைமூட்டமாக இருந்ததால் கரையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படிகளில் நாய்களும் இறங்கி வருகிறது. குரங்குகள், புறாக்கள் என்று தீனிக்காக மனிதர்களைத் தொடரும் கூட்டம் அழகு. சந்தியாவந்தனம் செய்பவர்கள், வீட்டில் இருந்து சிறு சொம்பை எடுத்து வந்து மந்திரங்கள் சொல்லி கங்கா மாதாவிற்கு அபிஷேகம் செய்து வழிபடுபவர்கள், வீட்டிலிருந்து காலை உணவைக் கொண்டு வந்து ஆற்றில் தீபமேற்றி வழிபட்டுத் தண்ணீரில் விடும் பெண்கள் என அனைவரும் படித்துறைகளில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வீட்டிற்குச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது. ஒருவர் தினமும் காலையில் ருத்ரம் சொல்லி ஹோமம் செய்து கொண்டிருந்தார். பூஜை முடித்து பிரசாதமும் கொடுத்தார். வெயில் காலையிலேயே ஆரம்பித்து விடுகிறது. நானும் கங்கையில் குளித்து துணி காய்ந்த பிறகு விடுதிக்குப் புறப்பட்டேன்.


காசியில் தங்கியிருந்த நாட்களில் காலையிலும் மாலையிலும் ‘முன்ஷி காட்’ படித்துறையில் அமைதியாக உட்கார்ந்து துள்ளியோடும் ‘மா கங்கா’வைப் பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டு இருந்தோம். ‘சும்மாயிருத்தல்’ கணங்களை அனுபவித்த நேரம் அது! சிரித்த முகத்துடன் ஒரு தம்பதியர் கையில் சிறு குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் படியில் அமர்ந்து கொண்டார்கள். கையிலிருந்த துணியை விலக்கினால் குழந்தை என்று நான் நினைத்தது அழகாக அலங்கரித்த குட்டி தவழும் கிருஷ்ணன் விக்கிரகம்😮 ஏதோ குழந்தையைப் போல அந்தப் பெண்மணி மடியில் கிடத்திக் கொண்டாள். ஆண் தண்ணீரில் இறங்கி கங்கா மாதாவை வணங்கி மூன்று முக்கு முங்கி எழுந்து வர, இந்தப் பெண்மணி சிறு குழந்தையைக் கொடுப்பது போல் சிரித்துக் கொண்டே லட்டு கோபாலை கணவரிடம் கொடுக்க, அவரும் இரு கைகளால் வாங்கிக் கொண்டு மீண்டும் மூன்று முறை முங்கினார். தன் சொந்தக் குழந்தையைக் குளிப்பாட்டியது போல் சிரித்துக் கொண்டே மனைவியிடம் கொடுக்க, அந்தப் பெண்மணியும் துண்டால் அழகாக துடைத்து வேறு துணியை மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தார். மிக மிக எளிமையான மனிதர்களாகத் தெரிந்தார்கள். ஆனால் அவர்களின் உலகில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்கள். பார்க்க பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடவுளையும் குழந்தையாக கொண்டாடுவதில் தான் எத்தனை இன்பம்! அவர்களிடம் எனக்குத் தெரிந்த இந்தியில் பேசிக்கொண்டிருந்தேன். கங்கையில் குளிப்பாட்ட வீட்டிலிருந்து தவழும் கிருஷ்ணன் விக்கிரகத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். குழந்தை இல்லை என்று நினைக்கிறேன். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கத் தெரிந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கம் தான். பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்று நினைத்து, வாழும் கணங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையில் அந்த தம்பதியரை எனக்கு மிகவும் பிடித்தது. நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்கள் ஏராளம்!

அங்கு இது போல் பல அழகான காட்சிகள். எழுதிக் கொண்டே இருக்கலாம்😎

பௌர்ணமி நாளன்று பால் நிலா வெளிச்சத்தில் கங்கா ஜொலித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று ஈஷ்வர் ‘தஷஷ்வமேதா’ படித்துறையில் ஆரத்தி நடக்கிறது என்று சொல்ல, நடுவில் இருந்த இரண்டு கோவில்களைத் தாண்டிச் சென்றால் படகுகளில் மக்கள் ஆரத்தி மேடையை நோக்கி அமர்ந்திருந்தார்கள். படிகளில் நல்ல கூட்டம். நாங்களும் ஐக்கியமானோம். வழக்கமாக ஏழு புரோகிதர்கள் கங்கா ஆரத்தி பூஜை செய்யுமிடத்தில் வெள்ளம் காரணமாக ஐந்து பேர் மட்டும் செய்தார்கள். கோவிலில் பூஜை முடிந்த பிறகு ஒருவர் ஆரத்தி பாடல்களைப் பாட, கங்கா தேவிக்கு மலர்கள் தூவி தூப, தீப பூஜை அமர்க்களமாக நடைபெற்றது. இந்தப் பூஜையின் அழகே புரோகிதர்கள் ஒன்றாக பூஜை செய்யும் நேர்த்தியும் தீப ஒளி, மணிச்சத்தம் என்று மனதை ஒருமுகப்படுத்தும் நிகழ்வும் தான். சில நிமிடங்கள் மனம் அமைதி கொள்வதைப் பூரணமாக உணர முடிகிறது. நிலாவும் பூஜையில் பங்கு கொண்டது போல வானில் உலா வந்து கொண்டிருந்தது. பலரும் தங்கள் கைபேசி வழியே ஊரில் உள்ளவர்களுக்கும் ஆரத்தி நிகழ்வைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஹரித்வார், காசியை விட ரிஷிகேஷில் நடந்த ஆரத்தி பூஜை தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயற்கையை வணங்கிப் போற்றுதல் என்பது இந்து சமயத்தின் அங்கமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் அவற்றைப் பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் அசுத்தப்படுத்தி வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறோமே என்று வருத்தமாக இருக்கிறது😞

பௌர்ணமி நாளில் ஆரத்திநிகழ்ச்சியைப் பார்த்த திருப்தியுடன் இரவு உணவுக்குச் சுடச்சுட இட்லி சாப்பிட்டோம். காசியில் உணவு விலை மிகவும் குறைவு. ஒரு இட்லி 10ரூபாய். தோசை 15 ரூபாய். வடை 10 ரூபாய். மல்லிகைப்பூ இட்லி! காசியில் கிடைக்கிறது! அத்தனை இட்லிக்கடைகள்! தோசையும் சூப்பர்! காலையில் எட்டு மணியிலிருந்து இரவு 8 மணி வரை நல்ல வியாபாரம்! மூன்று சகோதரர்கள் சேர்ந்து ஒரு கடை நடத்துகிறார்கள். வடை, ஆமவடை எல்லாம் வாவ் ரகம்! அந்தச் சின்னக்கடையில் இரண்டே இரண்டு மேஜைகள். 8 நாற்காலிகள். வெளிநாட்டினர் பலரும் உட்கார்ந்து சாம்பாரில் இட்லியைத் தோய்த்து அழகாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களாகி விட்டோம். நெய்யில் பொரித்த கச்சோரியும் கிழங்கு மசாலாவும் இன்ன பிற ஐயிட்டங்களும் என்று குறைவில்லாமல் கிடைக்கிறது ம்ம்ம்ம்…😋

பீடாவையும் விட்டு வைக்கவில்லை. அதை அவர்கள் சில பல பொருட்களைச் சேர்த்துச் செய்யும் பாங்கே அழகு தான்! ஒரு கடையில் பீடா வாங்கும் பொழுது சோழவந்தானில் இருந்து வந்திருந்த தமிழ் குடும்பத்தைச் சந்தித்தோம். இரவு நேரங்களில் எருமைப்பாலில் செய்த மலாய்யை பாலில் சேர்த்து மண்சட்டியில் தருகிறார்கள். அந்தக் கடைகளில் வரிசையில் நின்று வாங்கிக் குடிக்க கூட்டம் காத்திருக்கிறது. சுவையோ சுவை! விட்டால் இன்னொன்றையும் குடித்திருப்பேன். பன்னீரில் செய்யும் இனிப்புகள் எல்லாம் மிக சுவையாக இருக்கிறது. ஆக, மதுரையில் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்😑சாப்பிட்டு முடியவில்லை. நடந்து சென்று கொண்டிருப்போம். எண்ணையில் பொரிக்கிற வாசனை வந்தவுடன் அந்தக் கடையின் முன் நின்று அது என்ன இது என்ன என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டு விடுவோம். காசிக்குப் போனால் நன்றாக ஆனந்தமாகச் சாப்பிடலாம். அத்தனை வகையான பண்டங்கள்!

இரு நாட்கள் புத்த கயா, கயா சென்று பித்ரு பூஜைகளை செய்து விட்டு வந்தோம். கோவில்கள் எல்லாம் மிக அருமை. நம் ஆத்ம திருப்திக்காக செய்யும் பூஜைகளைச் சாதகமாக்கிக் கொண்டு காசைப் பிடுங்குகிறார்கள். அந்தப் பயணமும் சுவாரசியமாக இருந்தது. நிறைய எழுதலாம். கட்டுரை நீண்டு விடும்.

காசியிலிருந்து சாரநாத் மிக அருகில் இருக்கிறது. அங்கும் சென்று வந்தோம். அயோத்தி ராமர் கோவில் கட்டி முடித்த பிறகு செல்லலாம் என்று பக்கெட் லிஸ்டில் போட்டு வைத்திருக்கிறோம். அலகாபாத் திரிவேணி சங்கமம் செல்வதற்குள் ஈஷ்வருக்கு காய்ச்சல் வந்து படுத்து விட்டார். நல்ல வேளை! கோவிட் இல்லை என்றதும் சாந்தமானாலும் இரண்டு நாட்கள் அவரால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க கூட முடியவில்லை. அங்கிருந்த நாட்களில் மருந்துக்கடைக்காரரும், இட்லி விற்கும் சகோதரர்களும் விடுதிச் சிப்பந்திகளும் நன்கு பரிச்சயமாகி விட்டார்கள்.

காய்ச்சல் இருந்தாலும் வடை சாப்பிடுவேன் என்று ஈஷ்வர்! இட்லி, வடை, ஊத்தப்பம் நன்றாக இருக்கிறது என்று விரும்பிச் சாப்பிட்டார். 100ரூபாயில் இருவருக்கு அருமையான ஆரோக்கியமான சுவையான காலை உணவு கிடைக்கிறது! எப்படி இவர்களால் மட்டும் இத்தனை குறைந்த விலைக்கு விற்க முடிகிறது? நம்மூரில் கொள்ளை விலை விற்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது! சாப்பிட்டவுடன் கொஞ்சம் தெம்பானார் ஈஷ்வர். “இன்றும் நன்கு படுத்து உறங்கி ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல வெயில் அடிக்கிறது. வம்பு வேண்டாம்” என்று நான் மட்டும் அண்ணாவுடன் அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருக்கும் சாளக்கிராமம் பார்த்து விட்டு வரக் கிளம்பினேன். ஈஷ்வரால் வர முடியவில்லையே என்று வருத்தம். “நிறைய படங்கள் எடுத்துக் கொண்டு வா” என்றார்.


நகரின் நடுவே மிகப்பெரிய வீட்டில் ஒரு தொட்டி நிறைய சாளக்கிராமம். இதற்கென்றே கட்டியிருக்கிறார்கள். “பரம்பரை பரம்பரையாக சேர்த்து வைத்தது. வீட்டில் வைத்துப் பூஜை செய்ய முடியாதவர்கள் கொண்டு வந்து கொடுத்தது என்று 10,000 வரை இருக்கும்” என்று கூறினார். அந்த அறையைப் பராமரிக்க மட்டுமே ஒரு ஆளை வைத்திருக்கிறார்கள். தினமும் அபிஷேகம் செய்து எண்ணையில் துடைத்து வைக்கிறார்கள். பூமாலைகளைக் கொடுத்து எங்களைப் பூஜை செய்யச் சொன்னார். ஈஷ்வர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்களும் பூஜைகள் செய்து வணங்கினோம். சுடச்சுட பூரி, ஒரு கப் தயிர், குலாப்ஜாமூன், ஆச்சார் எல்லாவற்றையும் அழகாக பெரிய தட்டில் சின்னச் சின்ன கோப்பைகளில் உணவகங்களில் பரிமாறுவதுபோல் எடுத்துக் கொண்டு வந்தார் அவர் மனைவி. சிறிது நேரம் பேசிவிட்டு சாளக்கிராமம் பார்க்க, பூஜை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கூறி கிளம்பினோம். பெரும் வசதி படைத்தவர் தான். ஆனால் அவருக்குப் பெருந்துயரம் ஒன்றும் இருந்தது. பணம், வசதிகள் இருந்தால் கவலைகள் இருக்காது என்று யார் சொன்னார்கள்? எங்களிடம் அவருடைய துயரத்தைப் பகிர்ந்து கொண்ட பொழுது,ஈஷ்வரா! இவருடைய கவலை விரைவில் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டேன்.

வெயில் பாடாய் படுத்தியது. மழை வரும் போலிருக்கிறது. அத்தனை வெக்கை! விடுதிக்குத் திரும்பியதும் ஈஷ்வரிடம் படங்களைக் காட்டி நாங்கள் பேசியதைக் கூறினேன். அவரும் அவர்களுடைய துயரத்தைக் கேட்டு கவலைப்பட்டார். காய்ச்சல் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. அடுத்த நாள் என் பங்கிற்கு காய்ச்சல். அன்று ஈஷ்வர் வெளியில் சென்று வந்தார்.


ஒருநாள் நகரத்தார் சத்திரத்திற்குச் சென்று வந்தோம். குப்தகாசியில் சந்தித்த செட்டியார் குடும்பங்களில் இருவர் அங்கே நிர்வாகக் குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களை அங்கு தங்க ஏற்பாடுகள் செய்வதாகக் கூறினார்கள். நாங்கள் தான் ஹோட்டலில் தங்க முன்னேற்பாடுகள் செய்து விட்டதைக் கூறி அங்கு சென்று வருகிறோம் என்று கூறியிருந்தோம். அத்தனை பெரிய சத்திரம்! வெளியில் இருந்து பார்த்தாலே காரைக்குடியில் இருக்கும் வீடுகளின் அமைப்பில் இருப்பது தெரியும். உள்ளே ஜன்னல்கள் இல்லாத இடத்தில இருட்டாக இருக்கிறது. சுத்தமாக நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். அவரவர் வசதிக்கேற்ப தனி அறைகளிலோ, ஹாலிலோ அல்லது வெளியில் வராண்டாவிலோ தங்கிக் கொள்ளலாம். பல தங்கும் அறைகள் இருக்கிறது. நிறைய யாத்திரீகர்கள் தங்கி இருந்தார்கள். அங்கே எனக்கு மிகவும் பிடித்தது அமைதியும் அழகும் ஒரு சேர இருந்த ஈஸ்வரன் கோவில் தான். அம்மாவும் அப்பாவும் காசிக்குச் சென்றிருந்தபொழுது அங்குதான் தனியறை எடுத்துத் தங்கி இருந்தார்கள். அங்கேயே சாப்பிடும் வசதியும் இருக்கிறது. ஊரைச் சுற்றிப்பார்க்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கிறார்கள்.குறைந்த கட்டணத்தில் தங்கவும் சாப்பிடவும் முடிவதால் தமிழர்கள் பலரும் அங்கே தங்குகிறார்கள்.

நகரத்தார் சார்பில் காசி விஸ்வநாதர் கோவிலின் பூஜைக்கான பால் மேள தாளத்துடன் தினமும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சென்ற வருடம் தான் இவர்களின் ரூ.240 கோடி மதிப்புள்ள நிலத்தை சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களிடம் இருந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மீட்டுக்கொடுத்துள்ளது.

காசியில் வெயில் அடித்தால் எனக்கென்ன உனக்கென்ன என்று சாத்துகிறது. மதுரை வெயில் எல்லாம் வெயிலே அல்ல. இங்கு உஷ்ணம் வேறு மாதிரி இருக்கிறது. எப்படித்தான் கோடையை சமாளிக்கிறார்களோ😨குளிரும் அப்படிதான் இருக்குமோ? மழை பெய்தால் தெருக்களில் தண்ணீர் ஓடி சாணி , நாய் ‘ஆய்’ என்று களேபரமாக உள்ளது😑 மழையும் வெயிலும் இல்லாத பட்சத்தில் இவைகளைக் கடந்து சென்று விட முடிகிறது. இது ஒன்று தான் காசியில் எனக்கு நெருடலாக இருந்தது. மற்றபடி படித்துறைகள் எல்லாம் சுத்தமாக இருந்தது. ஆற்றுத்தண்ணீரின் சுத்தத்தை அரசு அதிகாரி ஒருவர் தினமும் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அரசு ஓரளவிற்குத் தான் சுத்தத்தைப் பேணிக் காக்க முடியும். நான் பார்த்தவரையில் தெருக்கள், படிகளைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். குடிமக்கள் நாமும் ஒத்துழைத்தால் தான் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

கங்காவில் குளித்தால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. மகாபாரதப் போருக்குப் பின் திருதிராஷ்ட்ரன், காந்தாரி, குந்திதேவி மூவரும் இங்கு குளித்துப் பின் இறுதிப்பயணத்தைத் தொடர்ந்தார்கள். பாண்டவர்களும் தங்கள் பாவங்கள் தீர, சிவனை நோக்கித் தவம் புரிவதற்கு முன் கங்கையில் குளித்தார்கள் என்பது ஐதீகம். இமயத்தில் கௌமுக் பனிமலையில் உற்பத்தியாகி பாகீரதியாக கங்கோத்ரியில் இருந்து 120மைல்கள் தெற்கே பயணித்து ரிஷிகேஷில் சமவெளியில் ஓடி வரும் நதியை உலகைக் காக்கும் அன்னையாக இந்துக்கள் வழிபடுவதால் ‘மா கங்கா’ புண்ணிய நதியாகிறாள். அவள் வரும் வழிதோறும் ‘தேவபூமி’ ஆனது.

கங்கையை நோக்கிய எங்கள் பயணம் ஹரித்துவாரில் தொடங்கியது. நல்லவேளையாக தடங்கல்கள் ஏதுமின்றி ‘சார்தாம்’ பயணம் இனிமையாக நினைத்தபடி முடிந்து விட்டது. மழையும், கூட்டமும் இருக்காது என்று நம்பித்தான் செப்டம்பர் மாத இறுதியில் பயணத்தை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எங்கள் ராசிக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேல் மழை பொழிந்து காட்டாற்று வெள்ளத்தை யமுனை, கங்கா ஆறுகளில் பார்த்து அரண்டு போனோம். வழியில் மலைச்சரிவு, சாலைகள் பிளந்து இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை😞 செப்டம்பர்-அக்டோபரில் வந்தால் இவற்றையெல்லாம் எதிர்பார்த்து வர வேண்டும். ரிஷிகேஷில் சிறிது நேர மதிய வெயிலே தாங்கிக் கொள்ள முடியாதபடி இருந்தது. சுற்றிலும் மலைகள் இருக்கே! நன்றாக ‘குளுகுளு’வென்று இருக்கும் என்று நினைத்தது அங்கே நடக்கவில்லை. இப்பவே இப்படி மண்டைய பொளக்குதே கோடையில் வந்தால் வெந்து சாம்பலாக வேண்டியது தான். அதுவுமில்லாமல் கோடையில் ‘சார்தாம்’ கோவில்களில் நீண்ட வரிசையும் காத்திருப்புகளும் இருக்கும் என்று கேள்விப்பட்டோம். ஆனாலும் மழையில் நனைந்த இமயமலை, சாலைகள், வண்டல் மண்ணைச் சுமந்து ஓடி வரும் ஆறுகள், ஆயிரம் வருடங்களுக்கும் மேலான புராதனக் கோவில்களைக் கண்டதில் நிறைவான பயணமாக அமைந்து விட்டதில் எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. 

‘கங்கையை நோக்கிய’ இந்தப் பயணம் வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழும் பேரனுபவமாக அவன் அருளால் இனிதே அமைந்தததற்கு நன்றி கூறி தொடரை முடித்துக் கொள்கிறேன். 

தொடர் முழுவதையும் பொறுமையாக வாசித்த அன்பர்களுக்கு என் நன்றிகள்!

ஹர ஹர மஹாதேவ!

***

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...