Tuesday, June 6, 2023
பச்சுவும் அத்புத விளக்கும்
சோம்பேறித்தனமான மாலை. கழுதை கெட்டால் குட்டிசுவரு. நமக்குத் தொலைக்காட்சி. அதிலும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹுலு என்று ஏகப்பட்ட குட்டிச்சுவர்கள். பிரைமில் என்ன படங்கள் புதிதாக வந்திருக்கிறதென்று பார்த்தால் அடடா! நமக்குப் பிடித்த நடிகரின் படம் வந்திருக்கிறதே என்று பார்க்க ஆரம்பித்தேன்.
பொதுவாக மலையாளப் படங்களில் ஐந்து நிமிடத்திற்கு தலைப்பு ஓடும். இந்தப் படத்தில் மும்பை நகர வாழ்க்கையை முதல் காட்சியிலேயே காட்டி அசத்தியிருந்தார்கள். அதனால் வேலைகளையும் தூக்கத்தையும் விட்டுவிட்டுத் தொடர்ந்து பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியது. மும்பை நகரம் என்னளவில் இன்றும் ஒரு கனவு நகரம் தான். விடியலில் தொடங்கி இரவு வரை அதன் பரபரப்பிற்காகவே அந்த நகருக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நெருக்கமான வீடுகள், ஓய்வின்றி செல்லும் தொடர் ஓட்ட ரயில்கள், வேலைக்குச் செல்லும் மனிதர்கள், பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை வாழும் குடியிருப்புகள் என்று பல கவரும் அம்சங்களுடன் மும்பையை இந்தப் படத்தில் நன்கு காண்பித்திருக்கிறார்கள். கொசுறாக, கோவாவும். கிட்டத்தட்டப் பாண்டிச்சேரியை ஒத்து இருக்கிறது அந்த நகரம்.
நல்லவிதமாகத் தொடங்கிய படம் போகப்போக சுவாரசியம் குறைந்து எப்படா முடியும் என்றாகிவிட்டது. அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் போகும் என்று எளிதில் புரிந்து விடும் அளவிற்கு கதை இருந்தாலும் கோவா, மும்பை, கேரளா என்று சுற்றி வந்து நம்மை உட்கார வைத்து விடுகிறார்கள். இன்னும் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மும்பை என்றால் தாதாவாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாதாரண மனிதர்கள் கூட இருப்பார்கள். ஃபகத் ஃபாசில் மெலிந்த உருவத்துடன் கண்களை உருட்டியபடி அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்கு நடித்திருக்கிறார். அவருடைய கடையில் வேலைபார்க்கும் இளைஞனின் ஹிந்தி, ஆங்கில நகைச்சுவை வசனங்கள் நன்று. மலையாளப் படங்களில் எனக்குப் பிடித்தது என்றால் அங்கு ஹிந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்களை இயல்பாகக் கையாளும் முறை தான். இந்தப் படத்திலும் அப்படித்தான். கதாநாயகன் பெண் பார்க்கச் செல்லும் வீட்டில் அந்தப் பெண் தன்னுடைய கிறிஸ்தவ நண்பனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவள் அம்மாவிடம் வெகு இயல்பாகக் கூறுவாள். இஸ்லாமியப் பாட்டியாக வருபவர் 'சுவாமி சரணம்' என்று மாலை போட்ட சிறுவனிடம் கூறுவார். இந்த மாதிரி காட்சிகள் தமிழ்ப்படங்களில் பார்ப்பது அரிதாகி வருகிறது. பாட்டியின் கனிவான கதாபாத்திரம் தான் மையக்கரு. உணர்ந்து நடித்திருக்கிறார்.
அதே போல் ரியாஸ் கதாபாத்திரத்தில் வரும் வினீத்தின் வீட்டில் புத்தர், கலைப்படங்கள் எல்லாம் சுவற்றை அலங்கரித்திருக்கும். ஹராம் என்று கேரளாவில் கூவ மாட்டார்கள் போலிருக்கிறது. தமிழகத்தில் தான் ஹிந்துக்களையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் புண்படுத்தும் வகையில் படங்களில் குறியீடுகளை வைத்து தங்களுடைய அடிமைப்புத்தியை திராவிட எஜமானர்களுக்கு வாலாட்டும் இயக்குநர்கள் சமூகம் இருக்கிறது போலும்! என்று ஒரு திரைப்படத்தைப் பொழுதுபோக்காக எடுக்க இவர்கள் கற்றுக் கொள்வார்களோ? அதுவரையில் வேற்று மொழிப் படங்களைப் பார்ப்போம்.
பெரிய கண்களுடன் அதிக ஒப்பனை இல்லாமல் இயற்கை அழகுடன் இந்த மலையாள கதாநாயகிகள் தான் எத்தனை அழகு! அரைகுறை ஆடை அணிந்து விரச நடனம் ஆடும் நாயகிகள் எல்லாம் தமிழ்ப்படத்திற்குத் தான் தேவை. ஏனென்றால் கதைக்குப் பஞ்சம் இங்கே. தமிழ்ப்படங்கள் பார்ப்பவர்களின் ரசனையும் அந்த அளவில் தான் இருக்கிறது. இசை என்ற பெயரில் காட்டு கத்தல், நடனம் என்ற பெயரில் ஆபாச அங்க அசைவுகள், வசனங்கள் என்ற பெயரில் கெட்ட வார்த்தைகள் இப்படி எதுவுமில்லாமல் படத்தைப் பார்க்க மலையாளப் படங்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது. கதையினூடே ஒரு நல்ல கருத்தையும் சொல்கிறது இந்தப்படம்.
கண்டதும் காதல் என்றாலும் பொழுபோக்குப் படம்.
Subscribe to:
Post Comments (Atom)
வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்
ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...

No comments:
Post a Comment