Monday, June 26, 2023

கதல் (Kathal)


நெட்ஃப்ளிக்ஸ்ல் 'கதல்' என்றொரு அருமையான பொழுதுபோக்குப் படம் பார்த்தேன். சிறு கிராமத்தில் நடக்கும் கதை. ஒரு காவல்துறை, அங்கே பணிபுரியும் அதிகாரிகள், அவர்களுக்குள் நடக்கும் சின்னச்சின்ன சண்டைகள், காதல், அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கு என்று போகிற போக்கில் அள்ளித் தெளித்துக் கொண்டே செல்கிறது கதை. இப்படத்தின் கதாநாயகி, சான்யா மல்ஹோத்ரா 'ஃபோட்டோகிராப்' படத்திலிருந்தே கவர்ந்து விட்டாள். அவருடைய சிரிப்பும் கண்களும் சுருட்டை முடியும் அழகு!

அதிகார வர்க்கத்தின் வீட்டுப் பிரச்சினையை விடவா நாட்டு மக்களின் பிரச்சினை பெரிது? கண்கூடாகத் தமிழகத்தில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே? ஒரு ஊழல் பேர்வழியைக் காப்பாற்ற எப்படியெல்லாம் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள் என்று. இப்படமும் அந்தக் கருத்தை மிக அழகாக இரண்டு பலாப்பழங்கள் மூலம் சொல்லி இருக்கிறது. ஒரு சட்டசபை உறுப்பினர் வீட்டிலிருந்து திருடு போயிருக்கும் பழங்களைக் கண்டுபிடிக்க காவல்துறையை ஏவி பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகட்டும். பணியில் தனக்குக் கீழே இருப்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுத் தப்பிக்க நினைக்கும் காவல்துறை மேலதிகாரிகள் என்று அருமையாகக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள்.

இந்த காலத்திலும் திருமண உறவில் பெண்ணை விட ஆண் உயர்பதவியில் இருப்பது தான் நல்லது என்று நினைக்கும் சமூகம். அதற்கும் பெண்கள் தான் பலிகடாவா? என்ன தான் வேலை பார்த்தாலும் வீட்டின் சமையலறை என்றுமே பெண்ணிற்குத்தான் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். காலம் மாறிக் கொண்டு இருந்தாலும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் நெடுந்தூரமே!

இன்றைய ஊடகங்கள் தங்கள் ரேட்டிங்ஐ ஏற்ற எப்படியெல்லாம் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புகிறது என்பதிலிருந்து அதே ஊடகங்களைக் கொண்டு சீர்திருத்தங்களையும் கொண்டு வர முடியும் என்றும் காட்டியிருந்தது சிறப்பு.

சமீபத்தில் வடமாநிலங்களுக்குச் சென்று வந்திருந்ததால் அங்கிருந்த சூழலை இப்படத்தில் பொருத்திப் பார்க்க முடிந்தது. போதிய கல்வியறிவு இல்லாதது, வறுமை என்றிருந்தாலும் மக்கள் எளிமையாக அப்பாவித்தனமாக இருக்கிறார்கள். அவர்களை ஆளும் வர்க்கம் விட்டு வைக்குமா? அதையும் நாசூக்காகப் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

குட்கா, பான்பராக்கிற்கு அடிமையான சமூகம். பெண்களைக் கடத்தும் கும்பல் என்று பல விஷயங்களையும் தொட்டுக்கொண்டுச் செல்வதால் இந்தப்படம் நல்லதொரு பொழுதுபோக்குப் படம் மட்டுமல்ல சிறிது விழிப்புணர்வையும் சமூகத்தில் நிலவி வரும் அபாயங்களையும் அச்சுறுத்தல்களையும் அரசியல்வாதிகளும் அரசு எந்திரங்களும் தங்கள் கடமையை மறந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் சொல்லாமல் சொல்கிறது. இப்படியெல்லாம் படம் எடுக்க முடியும் என்று நிரூபித்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்😇தமிழில் கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி எடுக்கும் படங்களை விடப் பல மடங்கு நன்றாக இருக்கிறது.



No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...