Friday, November 26, 2021

மீனாட்சி சுந்தரேஸ்வர்


நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்த படம் "மீனாட்சி சுந்தரேஸ்வர்." அவர் என்ன நினைத்து இந்தப் படத்தைப் பாருங்கள் என்று சொன்னாரோ தெரியாது. முதல் காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம், காரைக்குடி வீடுகள், தெருக்கள், கதை மாந்தர்களின் உடையலங்காரளைப் பார்த்தவுடன் தமிழ்ப்படமோ என்று எண்ணி துவக்கத்திலேயே கொஞ்சம் ஏமாற்றம்.

செட்டியார் வீடுகள், பிராமண பாஷை என்று சொல்ல முடியாத ஒரு பேச்சு வழக்கு, சேலை கட்டிய அச்சு அசல் தமிழ்க்குடும்பமாக காண்பித்து ஹிந்தியில் பேசுவது சற்றும் பொருத்தமில்லாத கதை அமைப்பு. போனால் போகிறதென்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் தமிழ் வார்த்தைகள். ஒரு படத்தை அதன் வட்டாரத்தில் எடுத்தால் அங்கு பேசும் மொழியில் எடுத்தால் என்ன? தமிழ்க்குடும்பங்களாக காண்பித்தால் தமிழில் பேசித் தொலையுங்களேன். படம் முழுவதும் தொடர்ந்தது இந்த எரிச்சல்.

நகைச்சுவையிலும் சேராது. எதார்த்தம் என்று வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் எரிச்சலைக் கூட்டுகிறது. பெண் பார்க்க வரும் காட்சியிலிருந்தே எதார்த்தத்திலிருந்து வெகு தொலைவிற்குச் சென்று விடுகிறது படம். எப்படித்தான் இப்படியெல்லாம் காட்சிகளை வைப்பார்களோ என்ற கோபம் தான் மிஞ்சுகிறது. ஒருவரை ஒருவர் விரும்பி செய்து கொள்ளும் திருமணத்தில் வேலை காரணமாக கணவன் வேறு ஊருக்குச் சென்று விட, மனைவிக்கும் கணவனுக்கும் இடையே நடக்கும் ஊடல். தொலைதூர திருமணங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றின கதை. பொதுவாகவே தொலைதூர காதல்/திருமணங்கள் நிலைப்பதில்லை என்ற அபிப்பிராயம் உண்டு. அதையும் மீறி சில "அபூர்வ"உறவுகள் வெற்றி பெறுவதுமுண்டு. இக்கதையில் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பெண்ணிற்கும் தன்னுடைய கனவை நோக்கி நகரும் ஆணுக்கும் இடையே நடைபெறும் உடல், மன போரட்டம் பற்றி பேசுவதாக நினைத்து அபத்தமாக எடுத்திருக்கிறார்கள். படுத்தியிருக்கிறார்கள் பார்வையாளர்களை😡

நெட்ஃபிளிக்ஸ்ல் வந்திருக்கும் இப்படத்தை மொழி, கலாச்சாரம் அறியாத ஒரு அமெரிக்கன் பார்த்தால் என்ன நினைத்திருப்பான்? பெரியவர்கள் ஏற்பாடு செய்யும் திருமணம் என்பது இது தானா? கூட்டுக்குடும்பம் என்றால் இப்படித்தானா? திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வேலை இல்லை என்று சொல்லும் பெரும் நிறுவனங்கள் கூட இந்தியாவில் இருக்குமா என்ற பிற்போக்குத்தனங்கள் நிறைந்த அறுவை இந்தப் படம்.

மணிரத்னம் பட ஸ்டைலில் வசனங்கள். கறி தோசை சாப்பிடும் உணவகம் பார்க்க காலேஜ் ஹவுஸ் போல பொருத்தமே இல்லாத காட்சி அமைப்பு.
"என்ஜினியர்கள் நல்ல கணவர்களாக இருப்பார்கள்" என்று வேறு ஒரு வசனம்! மற்றவர்கள் என்ன தொக்கா😄 நல்லா வைக்கிறாய்ங்கப்பா வசனத்த😞 

தமிழ் கலாச்சாரம் என்று இவர்களாகவே ஒன்றை உருவகப்படுத்தி இருப்பது தான் மகாகேவலம். ரஜினி ரசிகையாக வரும் நாயகி பல ஹிந்தி படங்களில் நன்றாக நடித்திருப்பார். இந்த படத்தில் கொடுத்த காசிற்கு மேலாகவே செயற்கை நடிப்பு. உணர்ச்சியற்ற நாயகன்.  

சுறா வரிசையில் சேரும் இந்த மொக்கைப்படம்.

மதுரையை மையமாக வைத்து ஒட்டாமல் செல்லும் கதையோட்டம். படத்தில் மதுரையைத் தேடினேன். கதையுடன் என் ஊரையும் காணவில்லை. 







Thursday, November 11, 2021

மாறும் பருவங்கள், மாறாத மனம்

ஆகஸ்ட் மாதம் வரை அனலாய் கொதித்தவனும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தான் செப்டம்பரில்! பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் போல காலையில் உதயமாவதை தள்ளிப் போட்டுக் கொண்டே சாவகாசமாக உலா வர, துணைக்கு மூடுபனியும், 'சில்ல்ல்ல்ல்ல்'லென்ற குளிர் காற்றும். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு மூடுபனி அழகாய் இருக்கிறது வெளியில் வந்தாலோ ஈரக்குளிர் பயமாய் இருக்கிறது. அழுதுவடிந்து கொண்டே செல்லும் பள்ளிக்குழந்தைகளைப் போலவே வேலைக்குச் செல்லும் பெரியவர்களும். அதுவும் ஒரு வருடம் வீட்டிலிருந்து வேலை செய்து பழகிவிட்டதில் கூடியிருக்கிறது சோம்பேறித்தனம். பார்க்கிற எவரும் விரும்பி பணிக்குத் திரும்பியதாக தெரியவில்லை! கொரோனாவின் கைங்கரியம் அனைவரையும் வேறுவித மனப்பாங்கிற்குத் தள்ளி விட்டிருப்பது மட்டும் உண்மை.

இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் காலம் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. அக்டோபர் முதல் வாரம் தொடங்கியதில் மரங்களும் நிறம் மாற தொடங்கிற்று. ஆல்பனியில் இலையுதிர்கால அழகு கடந்த வருடத்தைப் போல் அத்தனை சிறப்பாக இல்லாவிட்டாலும் பக்கத்து மாநிலங்களில் இயற்கை அன்னை தீட்டிய ஓவியங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக, மனதிற்கு உற்சாகமாக வளைய வந்ததைக் கண்டதில் பரம திருப்தி எங்களுக்கு.

செப்டம்பரில் பிள்ளையார் சுழி போட்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், புரட்டாசி மாத சனிக்கிழமை பூஜைகள், அம்மனைக் கொண்டாடும் கொலு நாட்கள் தீபாவளி வரை தொடர்ந்தது.

அக்டோபர் மாத இறுதிநாளில் குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடும் 'ஹாலோவீன்', இனி வரும் அமெரிக்க விடுமுறை நாட்களைத் துவக்கி வைத்திருக்கிறது. விடிய மறுக்கும் காலைப்பொழுதுகள். மாலையில் சீக்கிரமே வீடு திரும்பும் பகலவன் என்று பகல் பொழுதுகள் சுருங்க, நேரத்தையும் 'டே லைட் சேவிங்ஸ்' என்று மாற்றியதில் இருக்கிற குழப்பங்களுடன் இதுவும் ஒன்றாக சேர்ந்து விட்டது 😒 வரலாறு கொடுமையாக இருந்தாலும் அதை எளிதில் மறந்து விட்ட மனித இனம், நவம்பரில் நீண்ட விடுமுறையாக கொண்டாடும் 'தேங்க்ஸ்கிவ்விங் டே'க்காக காத்திருக்க, உறைந்த வான்கோழிகள் கறிக்கடைகளில் நிரம்பி வழிகிறது. வருடாவருடம் அதன் உருவமும் பெரிதாக, கூடியிருக்கிறது எடையும் விலையும்! கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்கும் குறைவில்லை. இனி வரும் நாட்களில் அலங்கார விளக்குகள் கடைகளையும் வீடுகளையும் அலங்கரிக்க, விடுமுறைக்காக காத்திருக்கும் மக்களின் முகத்திலும் திருவிழா களை கூடும். குடும்பங்களுடன் இணைய, அமெரிக்காவில் பலரும் பிரயாணம் மேற்கொள்ளும் நாளாகும். வான்வழி, தரைவழிப் பயணங்களால் கூட்டம் ததும்பும் விமான நிலையங்களும், போக்குவரத்தில் விழிபிதுங்கி நிற்கும் சாலைகளுமாய் இருக்கப்போவதாக செய்திகள் வர ஆரம்பித்து விட்டது. இந்த விடுமுறையில் கடைகளில் விற்கப்போகும் தள்ளுபடி பொருட்களுக்காக காத்திருக்கும் கூட்டத்தை நம்பி இருக்கிறது பல நிறுவனங்களும் பங்குச்சந்தை நிலவரங்களும். அமெரிக்காவில் எல்லாமே ஒன்றுக்கொன்று சங்கிலித்தொடராய் தொடர்புடையது. மக்களின் கையில் இருக்கும் பணத்தைச் செலவு செய்ய வைக்கத் தான் இந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் எல்லாமே! இந்த சங்கிலித்தொடர் அறுந்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இதனிடையே பூஸ்டர் ஊசிகள், வேலையிழந்தவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு கூட்டமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. பெட்ரோல் விலையும் ஏறிக் கொண்டிருக்க, விலைவாசியும் விண்ணைத் தொட எத்தனிக்கிறது. நடுநடுவே சப்ளை செயின் அறுந்துவிட்டதில் ஒரு பரபரப்பு. எப்படியோ சமாளிக்கிறார்கள்! பங்குச்சந்தை உச்சத்தில் இருந்தாலும் எப்பொழுது கீழே விழும் என்ற அச்சமும் தொடர்கிறது. இதில் 'கிரிப்டோ கரன்சி' அக்கப்போருகள் வேறு மனிதர்களைப் பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது.

இலையுதிர்காலமும் முடிவுறும் நிலையில் மரங்களும் நிராயுதபாணியாக நிற்கிறது. உடலை ஊடுருவும் குளிருடன் சுடாத சூரியன் உலாவரும் காலைப்பொழுதுகள், முகத்திலறையும் பனிக்காற்று, மாலை நான்கு மணிக்கெல்லாம் இருட்ட, பகல் குறைந்து நீண்ட இரவாய் காலம் தன்னை மாற்றிக்கொள்ள, மழை, வெயில், வறட்சி என்று சொல்லிக்கொண்டிருந்த எங்கூர் ரமணன்கள் குளிர், பனி, மழையுடன் கூடிய பனி என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டிருக்கிறார்கள். மலைகளில் பனிமலை பெய்து பனிச்சறுக்கு செய்பவர்களை மகிழ்வித்திருக்கிறது. அப்படியே பனிப்பொழிவு அதிகமாக இல்லாவிட்டாலும் பனிச்சறுக்கு மையங்கள் செயற்கையாக பனிப்பொழிவை நிகழ்த்தி விடுமுறைக்குத் தயாராகி விடும்.

ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்களுக்குப் போறாத காலம். பனிக்காலத்துடன் விடுமுறைக் கொண்டாட்ட செலவுகளும் கூடுவதால் பலரையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் பருவம் இது. கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக பெருகி உளவியல் ஆலோசகர்களுக்குப் பெரும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி, சஷ்டி கொண்டாடியவர்களுக்கு இனிமையாக நாட்கள் கடந்து விட்டது. இனி கார்த்திகைத்திங்கள், பெரிய கார்த்திகைத் திருநாட்களுக்கான காத்திருப்புகள் தொடரும். திருப்பாவை கேட்கும் நாட்களும் அதிக தூரமில்லை. மனதிற்கு அமைதியைத் தரும் நம்முடைய திருநாட்களின் வரவிற்காக நானும் தயாராகி விட்டேன். டிசம்பர் மாதம் முதல் பனிக்காலம் துவங்கி சாண்டாவின் வரவிற்காக காத்திருக்கும் குழந்தைகளுடன் நானும் காத்திருப்பேன் என் குழந்தைகளின் வரவிற்காக.

காத்திருப்புகளில் தான் இனி எந்தன் வாழ்க்கையோ?





 


Tuesday, November 9, 2021

Squid Games

கோவிட் காலகட்டத்தில் அமெரிக்கர்கள் பலரும் கொரிய தொடர்களுக்கு அடிமைகளாகி விட்டிருப்பது உண்மை. அதனால் பிரபல தென் கொரிய தொடர்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசியல், காதல், குடும்பம், அலுவலகம், ராணுவம் என கொரியன் தொடர்கள் பல கதைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருந்தாலும் கொரியாவில் குழந்தைகள் விளையாடும் ஒரு விளையாட்டினை அடிப்படையாக கொண்டு தற்போது வெளிவந்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் தொடர் முற்றிலும் வேறு தளத்தில் இருக்கிறது. அமெரிக்கர்களையும் கவர்ந்து சக்கைப் போடுபோடுகிறது 'Squid Games' தொடர். 

மென்மையான காதல் தொடர்களைப் பார்த்தவர்களுக்கு இது ஒரு 'அதி பயங்கரமான வன்முறையான' தொடராக இருப்பதில் ஆச்சரியமில்லை! தான் உயிரோடு வாழ்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றால் மனிதன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை மிக குரூரமாக சொல்லி இருக்கிறார்கள். செல்வந்தர்களின் பொழுதுபோக்காக, வறுமையில் வாடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அவர்களுக்குள் நடக்கும் போட்டிகளும் அதில் வெற்றி பெற நடக்கும் திட்டமிடுதல்களும் , இழப்புகளும் என்று சுவாரசியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குடி, சூதாட்டம் ஒருவனின் வாழ்க்கையைச் சிதைத்து அவனைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையையும் பாழாக்குகிறது. தாய் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கும் கதாபாத்திரம், பிரிந்திருக்கும் பெற்றோரையும் சகோதரனையும் காக்க வேண்டிய பொறுப்பில் இளம்பெண் ஒருத்தி, அவர்களுக்குள் ஒரு வில்லன் கோஷ்டி என சிறு சிறு கதாபாத்திரங்களை வைத்து விளையாடும் விளையாட்டில் தோற்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். முடிவில் ஜெயிப்பவர் மொத்த பணத்தையும் அள்ளிக் கொள்ளலாம் . இதற்கிடையில் காவல் அதிகாரி ஒருவர் இங்கு நடக்கும் அக்கிரமங்களைக் கண்டுபிடிக்கிறார். அவருடைய நிலை என்ன? அடுத்த தொடரில் விடை இருக்குமா?

பணம் படைத்த வர்க்கம் பொழுதுபோக்கிற்காக ஏழைகளின் உயிரோடு விளையாடுவதும் அவர்களின் உயிரை துச்சமாக எண்ணுவதும் என நிகழ்காலத்தினை நினைவுப்படுத்துவதாலோ என்னவோ இத்தொடர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தொடரில் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வின்றி ஒவ்வொரு பாகத்தையும் கவனமாக கையாண்டிருக்கிறார்கள். 

"அம்மா, என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் கொரியன் டிராமா பார்க்கிறாங்க."

ஆமாடா. நல்லா இருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு.

 "ஐயோ அம்மா! அவங்கள்லாம் கொரியன்ஸ், ஏசியன்ஸ்."

இருந்துட்டுப் போறாங்க. எனக்குப் பிடிக்குது. நான் பார்க்குறேன். 

இனி எண்ட நாடு சௌத் கொரியா! 
எண்ட கொரியன்  மாதவன் தான் யாருன்னு தெரியல 😉😉😉

Tuesday, November 2, 2021

Maid



இந்தியர்கள் பலருக்கும் அறிமுகமான அமெரிக்க வாழ்க்கை என்பது பெரிய வீடு, வாகன வசதி, நல்ல கல்வி, பெரு நிறுவனங்களில் வேலை, கைநிறைய வருமானம், வார இறுதியில் நண்பர்களுடன் கேளிக்கை, கொண்டாட்டங்கள் என்பதாகவே இருக்கும். அதனால் அமெரிக்க கீழ் தட்டு மக்களின் வாழ்க்கையை அமெரிக்கர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்கள் மட்டுமே அறிவர். இங்கு வாழும் பெரும்பாலான இந்தியர்கள் தங்களை கலாச்சாரம், பண்பாடு மிக்கவர்களாக நினைத்துக் கொண்டு அமெரிக்கர்களை கலாச்சாரம் இல்லாத காட்டுமிராண்டிகளாக, யாரும் யாருடனும் எப்பொழுதும் ஊர் சுற்றும் மனிதர்களாக அவர்களாகவே ஒரு பிம்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களும் இருக்கிறார்கள் என்றாலும் அமெரிக்கர்கள் என்றாலே இப்படித்தான் என்று நம்மவர்கள் பலரும் நினைக்கிறார்கள் என்பதே உண்மை. அதனாலேயே அவர்களோடு நெருங்கிப் பழகுவதைப் பலரும் தவிர்ப்பார்கள். அவர்களுடைய கலாச்சாரம் வேறு. நம்முடைய வளர்ப்பும் சூழலும் கலாச்சாரமும் வேறு. அவர்களிலும் பலர் பெற்றோர், உடன்பிறந்தோர், குடும்பம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று நம்மைப் போலவே தத்தம் கடமைகளைச் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். சேர்ந்து பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். நல்லது கெட்டதுகளில் ஆதரவாக இருக்கிறார்கள். நான் பார்க்கும்/பார்த்த மனிதர்கள் நற்பண்புகளுடன் இருக்கிறார்கள். ஓரளவு பொருளாதார வசதியுடன் பெற்றோரின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளின் குடும்பத்திற்கும் குடி, போதை மருந்து, உடைந்த குடும்பங்களில் வளரும் குழந்தைகளுக்கும் இருக்கும் வேறுபாடுகளைக் கண்கூடாகவே காண முடியும். உலகங்கெங்கும் இது பொருந்தும் என்றாலும் அமெரிக்காவில் கொஞ்சம் கூடுதலாக வெளிப்படையாகவே தெரியும்.

"Hillbilly Elegy" ஆங்கில திரைப்படத்தில் அதனை அழகாக காண்பித்திருப்பார்கள். கொஞ்சம் ஓவர்டோஸாக இருந்தாலும் உடைந்த கீழ்த்தட்டு வெள்ளை அமெரிக்க குடும்பங்களின் வாழ்க்கையில் நடப்பதைப் பிரதிபலிப்பதாக இருந்தது அத்திரைப்படம்.

அதைப் போலவே "Maid" என்ற நெட்ஃப்ளிக்ஸ் ஆங்கிலத் தொடர், "Maid: Hard Work, Low Pay, and a Mother's Will to Survive" என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டெஃபானி லேண்ட் தன் சொந்தக் கதையைப் புதினமாக வெளியிட்டிருந்தார். குழந்தையுடன் தனியொருத்தியாக இந்த உலகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ விழையும் ஒரு பெண்ணின் கதை.

அமெரிக்காவில் குடும்ப வன்முறையால் நிமிடத்திற்கு 20 பேர் பாதிக்கப்படுவதாகவும் வருடத்திற்கு 10மில்லியன் ஆண்களும் பெண்களுக்கும் பாதிக்கப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. அதிலும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதன் உளவியல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அரசும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் செல்கிறது. இதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அத்தனை விஷயங்கள் இருக்கிறது.

இத்தொடரில் குடும்ப வன்முறை, குடிப்பழக்கம், ஏழ்மை, உறவுகள் என்று பல விஷயங்களைத் தொட்டிருக்கிறார்கள் அல்லது கதாசிரியர் கடந்து வந்திருக்கிறார். அப்பாவின் துணை இல்லாமல் சிறுவயது முதல் அன்னையுடன் தனித்து வளர்ந்த பெண். தன் பெண்ணிற்கும் தன்னுடைய வாழ்க்கை அமைந்து விடக்கூடாது. தானும் தன் குடிகார அம்மாவைப் போல் மாறி விடாமல் இருக்க வாழ்க்கையுடன் போராடி வெற்றி பெறுகிறாள். அவள் கடந்து வந்த பாதை தான் இத்தொடர். உருக்கமான காட்சிகள் பல இருந்தாலும் எல்லை மீறாமல் பார்ப்பவர்களின் மனதை தொட்டு விட்டுச் செல்கிறது.

கணவனின் வன்முறையால் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண் எங்கு செல்வது என்று அனாதையாக பல நேரங்களில் நிற்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது. சிறு குழந்தையைத் தனியாக எங்கும் விட்டுச் செல்ல முடியாது என்று அம்மாவை நாடுகிறாள். அம்மாவோ நிலையற்றவள். மகள், பேத்தி மீது பாசமாக இருந்தாலும் அவளுடைய குடிப்பழக்கம், தவறான நட்பினால் வீட்டை இழந்து அவளும் பரிதாபமான நிலையில் அலைகிறாள். எத்தனை இன்னல்கள் இருந்தாலும் அம்மாவுக்குப் பரிவாக நடந்து கொள்கிறாள் நாயகி.

குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான். அந்தச் சிறுபெண் அப்பாவுடன் சில நாட்கள், அம்மாவுடன் சில நாட்கள் என்று விவரம் தெரியாமல் அலைக்கழிக்கப்படுவது, அப்படி வாழ்ந்த குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதும் கேள்விக்குரியதே! ஆண் கதாபாத்திரங்கள் குடிகாரர்களாக, பெண்களை கட்டுக்குள் வைத்திருக்க வன்முறையை கையாளுபவர்களாக, வயதான காலத்தில் திருந்தியவர்களாக வருகிறார்கள். பெண்கள் தங்களை மீறிப் போய்விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாகவே இந்தக் கோழைகள் பெண்களை, குழந்தைகளைப் பயமுறுத்துவார்கள். எவ்வளவு படித்திருந்தாலும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் அதிலிருந்து மீள்வது அத்தனை எளிதல்ல. போராடித்தான் வெளிவரவேண்டும். அதைத்தான் எடுத்த்துரைக்கிறது இந்த தொடர்.

வீட்டை விட்டு வெளியேறும் நாயகிக்கு முதலில் தேவைப்படுவது வேலை ஒன்று. கையில் பணம் இல்லாமல் யோசித்து யோசித்து செலவு செய்வது அதுவும் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு எத்தனை கடினம்? வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையைத் திறம்பட செய்வது, மகளுக்கு ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மகளை முடிந்தவரையில் மகிழ்ச்சியாக வைத்திருக்க பாடுபடுவது என்று அதே நிலையில் இருக்கும் பெண்களின் உணர்வுகளோடு ஒன்றியதாலோ என்னவோ இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நாயகி வேலை செய்யும் பணக்கார வீட்டுப் பெண்ணிற்கு வேறு வித பிரச்னைகள். பணம் இருந்தால் எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்று எண்ணியிருந்த நாயகிக்கு அது பொய் என்று உணர்த்தும் கதாபாத்திரம். வேலை, வேலை என்று செல்பவர்களும், தேவைக்கு மீறிய பணத்தைச் சம்பாதிக்க முனைபவர்களும் இழப்பது நிம்மதியை மட்டுமல்ல. குடும்பங்களையும் தான். வீட்டில் வேலை செய்யும் பெண் தன் குழந்தைக்காக போராட, பணக்கார பெண்ணோ குழந்தைக்குத் தாயாக முடியாமல் இத்தனை பெரிய வீடு, சொத்துக்கள் இருந்தென்ன என்று புலம்பும் இடத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது ஆறுதல்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசாங்கத்தில் இருந்து ஓரளவு உதவி கிடைத்தாலும் அது சில நாட்களுக்கு மட்டுமே. அப்பெண் குழந்தையுடன் இருக்கும் பொழுதுகளில் அவள் கூடவே நேரத்தைச் செலவிடுவதும், தன்னுடைய கல்வியைத் தொடர முயன்று வெற்றி பெறுவதும், ஏழ்மையிலும் போராட்டத்திலும் தன்னம்பிக்கையுடன் நேர்மையுடன் வாழ்வது( வாழ்ந்தது), புத்தகம் எழுதிய கதாசிரியர் கடந்து வந்த அதே பாதையில் பயணிக்கும் பல பெண்களுக்கும் பாடமாக இருக்கும். முடிவில் தைரியமும் நேர்மையும் கல்வியும் தான் எந்த இக்கட்டான நிலையில் இருந்தும் பெண்களைக் காக்கும். வாக்தேவியின் வலிமை அப்படி! அவள் நம்மோடு இருந்தால் செல்வமும் வீரமும் ஒரு பெண்ணிற்குத் தானாகவே கிடைத்து விடும்.

என்னுடைய அமெரிக்கத் தோழியின் அக்கா பெண்ணிற்கும் இதே நிலைமை ஏற்பட்டு அவள் அலைந்தது கண்முன்னே வந்து நின்றது. அந்தக் குடும்பமும் குடி, போதைப்பொருட்கள், வன்முறை என்றிருந்ததால் குழந்தையுடன் அவளும் பல அவலங்களைச் சந்திக்க நேரிட்டது. நல்ல வேளை! பாட்டி, சித்தி என்ற குடும்ப அமைப்பு அவளை மீட்டு அவளும் தற்போது படித்து முடித்து வேலையில் இருக்கிறாள். அபலைப்பெண்களின் பாதுகாப்பு என்பது அமெரிக்கா மட்டுமல்ல உலகெங்கும் கேள்விக்குறியே! முறையான நெருங்கிய உறவுகளும் நல்ல நட்பும் குடும்ப அமைப்பு மட்டுமே பாதுகாப்பைத் தரும் என்பதை உணர்ந்த குடும்பங்கள் ஏழ்மையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நாயகியாக நடித்த பெண் அனாயசமாக நடித்திருக்கிறாள். அவளுடைய குரலும், பெரிய கண்களும் அக்கதாபாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறது. வலி, ஏமாற்றம், நிராசை, கோபம் என்று கண்ணீரை அடக்கிக் கொண்டு நடிக்கையில் கலங்க வைக்கிறார் அம்மணி. அவரைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுகையில் பார்வையாளர்களுக்கும் அந்த கதாபாத்திரத்தின் மேல் மரியாதை வருகிறது.

நாயகிக்கு எழுதுவதில் ஆர்வம். தன்னுடைய அனுபவங்களை, சந்தித்த மனிதர்களைப் பற்றின குறிப்புகள் அடங்கிய அவளுடைய எழுத்தினால் கல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. தொடரின் இறுதியில் 338 கழிப்பறைகளைச் சுத்தம் செய்து, ஏழு விதமான அரசாங்க சலுகைகளைப் பெற்று ஒரு வருடத்தில் ஒன்பது இடங்களில் தங்கி தன்னுடைய கனவை நனவாக்கியதாக வரும் வாசகங்களுடன் முடிவடைகிறது இத்தொடர்.

அமெரிக்காவின் மறுபக்கம் மிகவும் கொடூரமானது. உடைந்த குடும்பங்களின் வலியை, துயரத்தை, குடும்ப வன்முறையின் பாதிப்பை வாழ்க்கைப் பயணத்தின் வழியே பல தடைகளைகே கடந்து, தனக்கும் தன் குழந்தைக்குமான புதிய உலகை தன்னுடைய கனவை எவ்வாறு ஒரு பெண் நனவாக்குகிறாள் என்பதை மிக அழகாக தொடராக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

"Maid " நேர்மையுடன் செய்யும் எந்த வேலையும் இழிவல்ல. முயன்றால் எதுவும் சாத்தியம் எனும் நம்பிக்கையை அளிக்கும் தொடர். 




ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...