Showing posts with label ஆங்கிலத் தொடர். Show all posts
Showing posts with label ஆங்கிலத் தொடர். Show all posts

Tuesday, November 2, 2021

Maid



இந்தியர்கள் பலருக்கும் அறிமுகமான அமெரிக்க வாழ்க்கை என்பது பெரிய வீடு, வாகன வசதி, நல்ல கல்வி, பெரு நிறுவனங்களில் வேலை, கைநிறைய வருமானம், வார இறுதியில் நண்பர்களுடன் கேளிக்கை, கொண்டாட்டங்கள் என்பதாகவே இருக்கும். அதனால் அமெரிக்க கீழ் தட்டு மக்களின் வாழ்க்கையை அமெரிக்கர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்கள் மட்டுமே அறிவர். இங்கு வாழும் பெரும்பாலான இந்தியர்கள் தங்களை கலாச்சாரம், பண்பாடு மிக்கவர்களாக நினைத்துக் கொண்டு அமெரிக்கர்களை கலாச்சாரம் இல்லாத காட்டுமிராண்டிகளாக, யாரும் யாருடனும் எப்பொழுதும் ஊர் சுற்றும் மனிதர்களாக அவர்களாகவே ஒரு பிம்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களும் இருக்கிறார்கள் என்றாலும் அமெரிக்கர்கள் என்றாலே இப்படித்தான் என்று நம்மவர்கள் பலரும் நினைக்கிறார்கள் என்பதே உண்மை. அதனாலேயே அவர்களோடு நெருங்கிப் பழகுவதைப் பலரும் தவிர்ப்பார்கள். அவர்களுடைய கலாச்சாரம் வேறு. நம்முடைய வளர்ப்பும் சூழலும் கலாச்சாரமும் வேறு. அவர்களிலும் பலர் பெற்றோர், உடன்பிறந்தோர், குடும்பம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று நம்மைப் போலவே தத்தம் கடமைகளைச் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். சேர்ந்து பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். நல்லது கெட்டதுகளில் ஆதரவாக இருக்கிறார்கள். நான் பார்க்கும்/பார்த்த மனிதர்கள் நற்பண்புகளுடன் இருக்கிறார்கள். ஓரளவு பொருளாதார வசதியுடன் பெற்றோரின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளின் குடும்பத்திற்கும் குடி, போதை மருந்து, உடைந்த குடும்பங்களில் வளரும் குழந்தைகளுக்கும் இருக்கும் வேறுபாடுகளைக் கண்கூடாகவே காண முடியும். உலகங்கெங்கும் இது பொருந்தும் என்றாலும் அமெரிக்காவில் கொஞ்சம் கூடுதலாக வெளிப்படையாகவே தெரியும்.

"Hillbilly Elegy" ஆங்கில திரைப்படத்தில் அதனை அழகாக காண்பித்திருப்பார்கள். கொஞ்சம் ஓவர்டோஸாக இருந்தாலும் உடைந்த கீழ்த்தட்டு வெள்ளை அமெரிக்க குடும்பங்களின் வாழ்க்கையில் நடப்பதைப் பிரதிபலிப்பதாக இருந்தது அத்திரைப்படம்.

அதைப் போலவே "Maid" என்ற நெட்ஃப்ளிக்ஸ் ஆங்கிலத் தொடர், "Maid: Hard Work, Low Pay, and a Mother's Will to Survive" என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டெஃபானி லேண்ட் தன் சொந்தக் கதையைப் புதினமாக வெளியிட்டிருந்தார். குழந்தையுடன் தனியொருத்தியாக இந்த உலகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ விழையும் ஒரு பெண்ணின் கதை.

அமெரிக்காவில் குடும்ப வன்முறையால் நிமிடத்திற்கு 20 பேர் பாதிக்கப்படுவதாகவும் வருடத்திற்கு 10மில்லியன் ஆண்களும் பெண்களுக்கும் பாதிக்கப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. அதிலும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதன் உளவியல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அரசும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் செல்கிறது. இதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அத்தனை விஷயங்கள் இருக்கிறது.

இத்தொடரில் குடும்ப வன்முறை, குடிப்பழக்கம், ஏழ்மை, உறவுகள் என்று பல விஷயங்களைத் தொட்டிருக்கிறார்கள் அல்லது கதாசிரியர் கடந்து வந்திருக்கிறார். அப்பாவின் துணை இல்லாமல் சிறுவயது முதல் அன்னையுடன் தனித்து வளர்ந்த பெண். தன் பெண்ணிற்கும் தன்னுடைய வாழ்க்கை அமைந்து விடக்கூடாது. தானும் தன் குடிகார அம்மாவைப் போல் மாறி விடாமல் இருக்க வாழ்க்கையுடன் போராடி வெற்றி பெறுகிறாள். அவள் கடந்து வந்த பாதை தான் இத்தொடர். உருக்கமான காட்சிகள் பல இருந்தாலும் எல்லை மீறாமல் பார்ப்பவர்களின் மனதை தொட்டு விட்டுச் செல்கிறது.

கணவனின் வன்முறையால் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண் எங்கு செல்வது என்று அனாதையாக பல நேரங்களில் நிற்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது. சிறு குழந்தையைத் தனியாக எங்கும் விட்டுச் செல்ல முடியாது என்று அம்மாவை நாடுகிறாள். அம்மாவோ நிலையற்றவள். மகள், பேத்தி மீது பாசமாக இருந்தாலும் அவளுடைய குடிப்பழக்கம், தவறான நட்பினால் வீட்டை இழந்து அவளும் பரிதாபமான நிலையில் அலைகிறாள். எத்தனை இன்னல்கள் இருந்தாலும் அம்மாவுக்குப் பரிவாக நடந்து கொள்கிறாள் நாயகி.

குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான். அந்தச் சிறுபெண் அப்பாவுடன் சில நாட்கள், அம்மாவுடன் சில நாட்கள் என்று விவரம் தெரியாமல் அலைக்கழிக்கப்படுவது, அப்படி வாழ்ந்த குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதும் கேள்விக்குரியதே! ஆண் கதாபாத்திரங்கள் குடிகாரர்களாக, பெண்களை கட்டுக்குள் வைத்திருக்க வன்முறையை கையாளுபவர்களாக, வயதான காலத்தில் திருந்தியவர்களாக வருகிறார்கள். பெண்கள் தங்களை மீறிப் போய்விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாகவே இந்தக் கோழைகள் பெண்களை, குழந்தைகளைப் பயமுறுத்துவார்கள். எவ்வளவு படித்திருந்தாலும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் அதிலிருந்து மீள்வது அத்தனை எளிதல்ல. போராடித்தான் வெளிவரவேண்டும். அதைத்தான் எடுத்த்துரைக்கிறது இந்த தொடர்.

வீட்டை விட்டு வெளியேறும் நாயகிக்கு முதலில் தேவைப்படுவது வேலை ஒன்று. கையில் பணம் இல்லாமல் யோசித்து யோசித்து செலவு செய்வது அதுவும் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு எத்தனை கடினம்? வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையைத் திறம்பட செய்வது, மகளுக்கு ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மகளை முடிந்தவரையில் மகிழ்ச்சியாக வைத்திருக்க பாடுபடுவது என்று அதே நிலையில் இருக்கும் பெண்களின் உணர்வுகளோடு ஒன்றியதாலோ என்னவோ இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நாயகி வேலை செய்யும் பணக்கார வீட்டுப் பெண்ணிற்கு வேறு வித பிரச்னைகள். பணம் இருந்தால் எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்று எண்ணியிருந்த நாயகிக்கு அது பொய் என்று உணர்த்தும் கதாபாத்திரம். வேலை, வேலை என்று செல்பவர்களும், தேவைக்கு மீறிய பணத்தைச் சம்பாதிக்க முனைபவர்களும் இழப்பது நிம்மதியை மட்டுமல்ல. குடும்பங்களையும் தான். வீட்டில் வேலை செய்யும் பெண் தன் குழந்தைக்காக போராட, பணக்கார பெண்ணோ குழந்தைக்குத் தாயாக முடியாமல் இத்தனை பெரிய வீடு, சொத்துக்கள் இருந்தென்ன என்று புலம்பும் இடத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது ஆறுதல்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசாங்கத்தில் இருந்து ஓரளவு உதவி கிடைத்தாலும் அது சில நாட்களுக்கு மட்டுமே. அப்பெண் குழந்தையுடன் இருக்கும் பொழுதுகளில் அவள் கூடவே நேரத்தைச் செலவிடுவதும், தன்னுடைய கல்வியைத் தொடர முயன்று வெற்றி பெறுவதும், ஏழ்மையிலும் போராட்டத்திலும் தன்னம்பிக்கையுடன் நேர்மையுடன் வாழ்வது( வாழ்ந்தது), புத்தகம் எழுதிய கதாசிரியர் கடந்து வந்த அதே பாதையில் பயணிக்கும் பல பெண்களுக்கும் பாடமாக இருக்கும். முடிவில் தைரியமும் நேர்மையும் கல்வியும் தான் எந்த இக்கட்டான நிலையில் இருந்தும் பெண்களைக் காக்கும். வாக்தேவியின் வலிமை அப்படி! அவள் நம்மோடு இருந்தால் செல்வமும் வீரமும் ஒரு பெண்ணிற்குத் தானாகவே கிடைத்து விடும்.

என்னுடைய அமெரிக்கத் தோழியின் அக்கா பெண்ணிற்கும் இதே நிலைமை ஏற்பட்டு அவள் அலைந்தது கண்முன்னே வந்து நின்றது. அந்தக் குடும்பமும் குடி, போதைப்பொருட்கள், வன்முறை என்றிருந்ததால் குழந்தையுடன் அவளும் பல அவலங்களைச் சந்திக்க நேரிட்டது. நல்ல வேளை! பாட்டி, சித்தி என்ற குடும்ப அமைப்பு அவளை மீட்டு அவளும் தற்போது படித்து முடித்து வேலையில் இருக்கிறாள். அபலைப்பெண்களின் பாதுகாப்பு என்பது அமெரிக்கா மட்டுமல்ல உலகெங்கும் கேள்விக்குறியே! முறையான நெருங்கிய உறவுகளும் நல்ல நட்பும் குடும்ப அமைப்பு மட்டுமே பாதுகாப்பைத் தரும் என்பதை உணர்ந்த குடும்பங்கள் ஏழ்மையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நாயகியாக நடித்த பெண் அனாயசமாக நடித்திருக்கிறாள். அவளுடைய குரலும், பெரிய கண்களும் அக்கதாபாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறது. வலி, ஏமாற்றம், நிராசை, கோபம் என்று கண்ணீரை அடக்கிக் கொண்டு நடிக்கையில் கலங்க வைக்கிறார் அம்மணி. அவரைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுகையில் பார்வையாளர்களுக்கும் அந்த கதாபாத்திரத்தின் மேல் மரியாதை வருகிறது.

நாயகிக்கு எழுதுவதில் ஆர்வம். தன்னுடைய அனுபவங்களை, சந்தித்த மனிதர்களைப் பற்றின குறிப்புகள் அடங்கிய அவளுடைய எழுத்தினால் கல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. தொடரின் இறுதியில் 338 கழிப்பறைகளைச் சுத்தம் செய்து, ஏழு விதமான அரசாங்க சலுகைகளைப் பெற்று ஒரு வருடத்தில் ஒன்பது இடங்களில் தங்கி தன்னுடைய கனவை நனவாக்கியதாக வரும் வாசகங்களுடன் முடிவடைகிறது இத்தொடர்.

அமெரிக்காவின் மறுபக்கம் மிகவும் கொடூரமானது. உடைந்த குடும்பங்களின் வலியை, துயரத்தை, குடும்ப வன்முறையின் பாதிப்பை வாழ்க்கைப் பயணத்தின் வழியே பல தடைகளைகே கடந்து, தனக்கும் தன் குழந்தைக்குமான புதிய உலகை தன்னுடைய கனவை எவ்வாறு ஒரு பெண் நனவாக்குகிறாள் என்பதை மிக அழகாக தொடராக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

"Maid " நேர்மையுடன் செய்யும் எந்த வேலையும் இழிவல்ல. முயன்றால் எதுவும் சாத்தியம் எனும் நம்பிக்கையை அளிக்கும் தொடர். 




Monday, January 4, 2021

The Queen's Gambit

"The Queen's Gambit", ஒரு புதினத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர். ஏதோ நிஜ வாழ்க்கையில் நடந்த கதை போல் சுவாரசியமாகவும் அருமையாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 


அமெரிக்காவில் கால்பந்தாட்டம், கூடைப்பந்து, பேஸ்பால், கோல்ஃப், நீச்சல் போன்ற விளையாட்டுக்கள் அதிக கவனம் பெற்றவை. அறிவை உபயோகித்து விளையாடியும் கவனம் பெறாத, ஆண்கள் மட்டுமே பங்கேற்று கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு விளையாட்டு செஸ். இன்றுவரையிலும் கூட மற்ற விளையாட்டுகள் அளவிற்கு முக்கியத்துவம் பெறாத ஒன்று. அப்படியான விளையாட்டில் ஈர்க்கப்பட்ட அனாதைச் சிறுமி ஒருத்தி தன்னை விட பல வயது மூத்தவர்களுடன் விளையாடி படிப்படியாக முன்னேறி ரஷ்யாவின் முன்னணி வீரரை வெற்றிக் கொள்வதில் முடிகிறது இத்தொடர்.

அனாதை இல்லத்தில் தனியாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் உதவியாளரிடமிருந்து செஸ் கற்றுக் கொள்கிறாள் சிறுமி. அவள் ஆர்வத்தையும் திறமையையும் வெளிக்கொணர உதவுகிறார்கள் இல்லத்தின் உதவியாளரும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரும். நடுவில் அப்பெண்ணை ஒரு குடும்பம் தத்தெடுக்கிறது. அவளின் ஆர்வம் முழுவதும் செஸ். நடுநடுவே புகை, மது, மருந்துகள் என்று போட்டுக் கொள்ளவும்

செஸ் விளையாடும் ஆர்வம் இருந்தாலும் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும் வசதியில்லாதவருக்கு உதவுகிறார் அப்பெண்ணுக்கு செஸ் விளையாட்டைக் கற்றுத்தந்தவர். விளையாட்டுப் போட்டியின் விதிமுறைகளைக் கூட அறிந்திராதவர் போட்டிகளில் தன்னை அலட்சியப்படுத்தியவர்களை வென்று மாநில, தேசிய அளவில் முன்னேறுகிறார். அவர் விளையாட்டில் முன்னேற அவரிடம் தோற்ற நண்பர்களும் உதவுகிறார்கள்.

கதைக்களம் 1950களில் தொடங்கி 67 வரை பயணிக்கிறது. வீடுகள், வண்டிகள், கடைகள், நடை, உடை பாவனைகள், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் என்று ஒவ்வொன்றின் வாயிலாக அந்த காலத்துக் காட்சிகளை கவனத்துடன் கண்முன் நிறுத்தியுள்ளார்கள். அனாவசிய செண்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் இல்லை. நடித்தவர்கள் அனைவரும் தங்கள் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிகைப்படுத்தமால் அழகாக நடித்திருக்கிறார்கள்.

என்ன தான் ஒரு பெண் தன் திறமையினால் முன்னேறினாலும் அவளுடைய உடைக்கும் அலங்காரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து சிறுமைப்படுத்துவதில் தான் ஊடகங்களுக்கு அதிக ஆர்வம் அன்றிலிருந்து இன்று வரைக்கும்.

விளையாட்டை அறிந்திராதவர்களும் பார்த்துக் களிக்கும் வகையில் இத்தொடரை எடுத்திருப்பதில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ்ல் காணலாம்.


Thursday, October 3, 2019

Growing Up Wild



அலாஸ்காவில் ஆரம்பித்து ஆப்பிரிக்கா ஸ்ரீலங்காவில் பயணிக்கும் அழகிய ஆவணப்படம் Growing Up Wild. கண்கவர் இயற்கைச்சூழலில் ஐந்து விலங்குகள்  தங்கள் குட்டிகளை வளர்க்கப் போராடும் கணங்களில் எதிர்கொள்ளும் அபாயங்களை  அருமையாக எடுத்துளார்கள்.

பனிசூழ் குகையிலிருந்து நீண்ட உறக்கம் கலைந்து தாய்க்கரடி பல மைல்கள் தன் குட்டிகளுடன் அலைந்து பசியுடன் உணவுக்காகப் போராடுவதையும், மற்ற கரடிகளிடமிருந்து குட்டிகளைக் காப்பாற்றுவதையும், உணவு தேடும் வித்தையை குட்டிக்கரடிகள் கற்றுக் கொள்வதையும் அலாஸ்காவில் அழகாகப் படம் பிடித்துள்ளார்கள்.

ஆப்பிரிக்காவில் தன் சிங்கக்குட்டிகளுடன் தாய் சிங்கம் வேட்டையாடி உணவளித்து அவர்களைப் பாதுகாக்கப் போராடுவதும் சோம்பேறி ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்கள் வேட்டையாடியதை உண்டு களித்து, வளரும் இளம் ஆண் சிங்கங்களைத் தங்கள் எல்லையிலிருந்து விரட்டி அடிப்பதும், அவர்களும் கூட்டாக அலைந்து பருவம் வந்தவுடன் மீண்டும் திரும்பி வருவதும் காடுகளின் ராஜா, ராணி வாழ்க்கையை அற்புதமாகக் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

தன் மூன்று குட்டிகளைக் குழுவாக வேட்டையாட வரும் கழுதைப்புலி (hyena)களிடமிருந்து பாதுகாக்க தாய் சிறுத்தை பதறுவதும் கண்முன்னே குட்டிகளை இழப்பதும், எதிரி விலங்குகளிடமிருந்து குட்டிகளைப் பதுக்கி வைப்பதும், உணவுக்காக அலைவதும் சிறுத்தையின் ஓட்டம் போலவே மனமும் பதைபதைத்துப் போய் விடுகிறது.

மனித குழந்தைகள் போலவே சிம்பன்சி குட்டிகளின் சேட்டைகளும், உணவைத் தேடும் வித்தையையும் எவ்வாறு உண்பதென்பதையும் பெரியவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதும் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது.

ஸ்ரீலங்கா காட்டில் பாழடைந்த கோவில் மண்டபங்களில் வாழும் குரங்கினங்களைப் பற்றிய பகுதியில் மனிதர்களைப் போலவே குரங்கினத்திலும் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற சமூக வரிசை முறை இருக்கிறதென்று ஆவணப்படத்தில் கண்டு கொண்டேன். தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தேடிச் சென்று உண்பதும், குட்டிக் குரங்குகள் தாயிடமிருந்து உணவைத் தேடும் முறையை கற்றுக் கொள்வதும் குடும்பங்களாக காட்டில் அலைவதும் அழகாகப் படமெடுக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குட்டிக் குரங்கு ஒன்று மரத்தில் கூட ஏறாமல் தனியாக உட்கார்ந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்க, மரக்கிளை மேல் அமர்ந்து பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த உயர் இன குரங்குகள் தூக்கியெறிந்த மிச்ச மீதிகளைப் பயத்துடன் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. மழையில் தனியாக நனைந்தபடி அமர்ந்திருக்க அதனுடன் சண்டையிட்டுக் காயப்படுத்தும் மற்ற குரங்குகள் வெறுத்து ஒதுக்கும் பொழுது குரங்கினத்தலைவன் ஆதரவாக அரவணைத்துச் செல்ல அப்பாடா என்றிருந்தது. அந்த தலைவன் குரங்கும் சண்டையில் இறந்து விட, மீண்டும் அனாதையாகிப் பாவப்பட்டு... வேறொரு குரங்கிடம் தஞ்சம் புகும் வரை..

வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது!
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும்!

குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் பங்கு அதிகமாகவும், பொறுப்புள்ளதாகவும் விலங்குகளின் உலகிலும் இருக்க ஹாயாக உலா வரும் ஆணினம் மேல் கோபம் வருவது இயற்கை 😡குழுவாக வாழும் குரங்கு, சிங்கம், சிம்பன்சிகள் குட்டிகளுக்கு ஒன்று என்றால் திரள்வதும், தாயின் அரவணைப்பில் மட்டுமே வாழும் விலங்குகளின் பரிதவிப்பையும் விளக்கும் அருமையான காட்சிகளுடன் காடுகளில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் 'Growing Up Wild'.

நெட்ஃப்ளிக்ஸ்ல் காணக் கிடைக்கிறது.

Saturday, July 6, 2019

When They See Us


ஏப்ரல் 19, 1989ல் நியூயார்க் நகர சென்ட்ரல் பார்க்கிற்கு  ஜாகிங் சென்ற ட்ரிஷா மெய்லிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு 'சென்ட்ரல் பார்க் ஜாக்கர்  கேஸ்'.  அமெரிக்காவை உலுக்கிய இச்சம்பவத்தை அடிப்படையாகக்  கொண்டு "When They See Us" தலைப்பில் நான்கு பாகங்கள் கொண்ட தொடர்  நெட்ஃப்ளிக்ஸ்ல் சமீபத்தில் வெளியானது.

வழக்கம் போல் இரவில்  ஜாகிங் சென்ற  ட்ரிஷா மெய்லி வன்கொடுமைக்கு ஆளாகி உருக்குலைந்து குற்றுயிராய் அபாயகரமான கட்டத்தில் உயிர் பிழைப்பாரா என்ற நிலையில்,  அப்பெண்ணிற்கு நீதி கிடைக்க பலரும் நியூயார்க் நீதிமன்றம் முன் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இவ்வன்முறைக்கு காரணமானவர்களை கொலை செய்ய வேண்டும். அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்  என்ற கோபமும் மக்களுக்கு இருந்திருக்கிறது. சில நாட்கள் கோமாவில் இருந்த அப்பெண்ணிற்கு அன்று நடந்த சம்பவங்கள் ஏதும் நினைவில் இருந்திருக்கவில்லை.

இவ்வழக்கில் பதினாறு வயதிற்கும் குறைவான நான்கு சிறுவர்களும்  காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தன் நண்பனுக்குத் துணையாக எந்த குற்றமும் புரியாத வழக்கிற்குச் சம்பந்தமே இல்லாத பதினாறு வயதான கோரி வைஸ் என்ற இளைஞனும் அநியாயமாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இத்தொடர் வந்த பிறகு தான் அமெரிக்க மக்கள் பலருக்கும் உண்மைகள் தெரிந்து ஊடகங்களில் அன்று பாதிக்கப்பட்டவர்கள் பேச, பலருக்கும் உண்மை தெரிந்திருக்கிறது! அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை இயக்குனரிடம் வெளிப்படையாக பேசி இத்தொடரைக் கொண்டு வந்ததன் மூலம் இன்று வரை தொடரும் இந்நாட்டின் நிறவெறியையும், காவல் துறையினரின் அதிகார துஷ்பிரயோகத்தையும், நீதித்துறையின் அலட்சியத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

கறுப்பர்கள் அதுவும் பதின் பருவ இளைஞர்களும் சிறுவர்களும் கூச்சலிட்டுக் கொண்டே சென்ட்ரல் பார்க்கிற்கு கூட்டமாக நண்பர்களுடன் சென்று அவர்களைக் கடந்து செல்பவர்களைச் சீண்டுவது, சண்டையிடுவதென ஆரம்பித்து, இவர்களைப் பற்றின தகவல் அறிந்து வரும் போலீசார் சில இளைஞர்களை விரட்டிப் பிடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் விடிய விடிய விசாரணை என்கிற பெயரில் மன உளைச்சலைத் தந்து பொய்யான ஆதாரங்களையும் அறிக்கைகளையும் அவர்களையே சொல்ல வைத்து, பிரபலமான சென்ட்ரல் பார்க் ஜாக்கர் வழக்கில் (Central park jogger case ) முன்தீர்மானமாக குற்றவாளிகளாக்கி  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். எந்த ஆதாரமும் சிறுவர்களை குற்றவாளிகளாக நிரூபணம் செய்ய முடியாத நிலையிலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலமே அவர்களின் வாழ்க்கையைக்  களவு கொண்டு விடுவது தான் சோகம்.

முன்னேறிய நாடு என்று தன்னைப் பிரகனப்படுத்திக் கொண்டு அடுத்த நாட்டினரின் சாதி, சமய விஷயங்களில் தலையிட்டு உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டும் அமெரிக்கா இன்று வரை சிறுபான்மையினரை, குறிப்பாக கறுப்பர்களை நடத்தும் விதம் உலகமே அறிந்திருந்தாலும் இவ்வழக்கில் அது வெளிப்படையாகவே தெரிகிறது. குற்றம் நடந்த இடத்தில் இருந்த ஒரே காரணத்திற்காகவும் பலியினை யார் மீதாவது சுமத்த வேண்டிய நிர்பந்தத்தில், பாதிக்கப்பட்ட பெண் வெள்ளையின அமெரிக்கனாக இருக்க, மாட்டிக் கொண்டவர்கள் பள்ளி செல்லும் நான்கு கறுப்பின சிறுவர்களும் ஒரு லேட்டினோவும்.

பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகளை விசாரணை செய்ய அவர்கள் குடும்பத்தினர் உடனிருக்க வேண்டும் என்ற சட்டத்தினைக் கூட மீறியிருக்கிறார்கள் காவல் துறையினரும் விசாரணை அதிகாரிகளும். செய்யாத குற்றத்தை பெற்றோர்கள் மூலமாக குழந்தைகளைச் சம்மதிக்க வைத்து, அவர்களும் குழந்தைகள் உயிருடன் திரும்பி வீட்டிற்கு வந்தால் போதும் என்று அதிகாரிகளுடன் ஓத்துழைக்க தங்கள் குழந்தைகளை நிர்பந்திக்க,  சிறையிலிருந்தும் போலீஸ் பிடியிலிருந்தும் காத்துக் கொள்ள தாங்கள் செய்யாத தவறை அப்பெண்ணிற்குச் செய்ததாகச் சொல்ல வைக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

அதில் பதினாறு வயதுச் சிறுவனை மட்டும் சிறார் சிறையில் அடைக்காமல் பெரியவர்களுக்கான சிறையில் அடைக்கிறார்கள். சிறைகளில் நடக்கும் அநியாயங்களை நிச்சயம் இவர்களும் கடந்து வந்திருக்க கூடும். இலைமறைகாயாக தொடரில் வரும் காட்சிகளுக்கே மனம் பதைபதைக்கிறது!


ஐவரில், மனதாலும் உடலாலும் இன்று வரை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் நண்பனுக்காக காவல்நிலையத்திற்குத் துணையாக சென்ற கோரி வைஸ்! கடைசி வரை தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் ஜாமீன் மறுக்கப்பட்டு தனிமைச்சிறையில் படும் கொடுமைகள் ஏராளம். சிறார் சிறையில் இருந்து மற்ற நான்கு பேரும் தண்டனைக்காலம் (பத்து வருடங்கள்) முடிந்து வெளியில் வந்த போதும் கோரி மட்டும் தண்டனையை அனுபவித்துக் கொண்டே வேறோர் சிறையில்.

இச்சம்பவத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளி வேறு சில பெண்களுக்கும்  அதே பார்க்கில் இதே போன்ற கொடுமையை இழைத்து தண்டனை பெற்று கோரி வைஸ் இருந்த சிறையில் சந்திக்க, கோரியின் நிலைமைக்குத் தான் தான் காரணம் என்றுணர்ந்து 2001ல் அதிகாரிகளிடம் குற்றத்தை ஒப்புக் கொள்ள, அப்பொழுது தான் நீதித்துறையும் காவல்துறையும் ஐவரையும் தவறாக தண்டித்து விட்டார்கள் என்று தெரிய வருகிறது.  1989ல் அவ்வழக்கை விசாரணை செய்த அதிகாரிகள் தங்கள் தவறுகளை மறுப்பதுடன் அந்தக் கொடுமையைச் செய்தவர்கள் அன்று சிறுவர்களாக இருந்தவர்களும்  அவர்களோடு ஆறாவதாக ஒருவனும் இருந்திருக்கிறான். அதனால் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானதே என்று வாதிடுவது மட்டுமில்லாமல் இன்று வரையில் மன்னிப்பும் கேட்காதது தான் அராஜகத்தின் உச்சகட்டம்!

உண்மையான குற்றவாளியின் வாக்குமூலமும் சாட்சிகளும் 2002ல் உறுதிப்படுத்தப்பட்டு வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் தண்டனை அனுபவித்து வந்த கோரியை விடுவித்து, ஐவரின் மேல் இருந்த கற்பழிப்பு மற்றும் வன்முறை பழியிலிருந்தும் நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.

குற்றமே செய்யாமல் இளம்பருவத்தை சிறையில் கழிக்க வைத்து தங்களையும் குடும்பத்தினரையும் இம்சித்த வகையில் ஐவரும் அரசாங்கத்திற்கு எதிராக 2003ல்தொடுத்த வழக்கு, விசாரணைகள் முடிந்து 2014ல் ஐவருக்கும் சேர்ந்து நாற்பத்தியொரு மில்லியன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறது நியூயார்க் மாநில அரசு. அதில் இத்தனை வருடங்கள் நடந்த விசாரணைக்காக வக்கீல்கள் செலவு போக மிகக் குறைந்த அளவே தங்களுக்கு கிடைத்ததாகவும் அவர்களைப் போன்று குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவும், இத்தகைய தவறுகள் மீண்டும் நடக்கா வண்ணம் செயல்படும் இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்டுக்காக அப்பணத்தை நல்வழியில் பயன்படுத்துவதாகவும் இன்று வரை அநியாயங்களுக்கு குரல் கொடுக்கவும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருப்பதாகவும் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் ஐவரும் இத்தொடரை எடுத்த டைரக்டர் அவா டுவெர்னேயுடன் பேசியது மிகவும் நெகிழ்வாக இருந்தது.

இருபத்தைந்து வருட போராட்டத்திற்குப் பிறகு அவர்களுக்கு கிடைத்த சொற்ப பணம்,  தொலைத்த வருடங்களைக் மீண்டும் கொண்டு வருமா? அவர்களின் உடல், மன பாதிப்பிலிருந்து அவர்களை மீட்குமா? அவர்களுக்கு இந்த நிவாரணம் அளித்திருக்க கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்! 


விசாரணை அதிகாரிகளின் அலட்சியத்தால் தகுந்த ஆதாரங்கள் இல்லையென்ற போதும் தண்டனை அனுபவித்த சிறுவர்களும், அவர்கள் குடும்பத்தினர்  அனுபவித்த மன உளைச்சல்களும் , அவர்களைக் கொல்ல நினைத்து வெறுப்புடன் திரிந்த, இன்று வரை திரியும் மனிதர்களும் வெட்கித் தலை குனிய வேண்டும். அதில் இந்நாட்டின் அதிபரும் இருக்கிறார் என்பதும் அவர்கள் மீது தவறு இல்லை என்று நிரூபணமான போதும் தன் கருத்தில் எந்த மாற்றமுமில்லை என்பதில் இருக்கும் திமிர் நிறவெறியின் உச்சம்!

"சென்ட்ரல் பார்க் ஃபைவ்"  சிறுவர்களாக சிறைக்குச் சென்றவர்கள் இளைஞர்களாக அதிகபட்ச தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது அமெரிக்க வரலாற்றில் சிறுபான்மையினருக்கு இழைத்த அநீதி இன்றும் தொடர்வதைத் தான் சுட்டிக் காட்டுகிறது!


Friday, June 14, 2019

India's Frontier Railways


'India's Frontier Railways' நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றை மூன்று பாகங்களாக பிபிசி நியூஸ் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து நேபால், பங்களாதேஷ் , பாகிஸ்தான் என்று எல்லையைத் தாண்டிச் சென்று வரும் இந்த மூன்று ரயில் பயணங்களின் வாயிலாக அந்நாட்டு எளிய விளிம்பு நிலை மனிதர்களையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும், நிலப்பரப்பையும் மிக அழகாக மிகைப்படுத்தாமல் வழங்கியதற்கு இத்தொடரை எடுத்த குழுவினரை மனதார வாழ்த்தலாம். சிறு சிறு இடைஞ்சல்களும் வசதிக்குறைவுகள் இருந்தாலும் பேருந்து, விமான பயணங்களில் கிடைக்காத ஒரு சுகம் ரயிலின் ஆட்டத்தில் தன்னை மறந்து பயணம் செய்ய, பலருக்கும் ரயில் பயணம் ஒரு சுக அனுபவமே!

ரயில் நிலையங்களில் வேலை செய்பவர்கள், ரயிலுக்குள் வியாபாரம் செய்பவர்கள், பயணிகள், அவர்களின் கதைகள் என்று ரயிலோடு காடு, மலை, ஆறு, நதிகளென அருமையான ஒரு பயணம். நாடுகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதம், அவர்களின் ஏக்கங்கள், கனவுகள் , ஏழை நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் காணும் பொழுது தான் நாம் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்று தோன்றும். ரயில் பயணத்தை விரும்புபவர்களுக்கு இத்தொடரும் மிகவும் பிடிக்கும் ☺



பாகிஸ்தானிலிருந்து மகனின் கண் அறுவை சிகிச்சைக்காக பல நாட்கள் காத்திருந்து சம்ஹுதா எக்ஸ்பிரஸ்சில் டெல்லி வந்து சேருபவரின் அனுபவங்களும், இரு நாடுகளின் பிரிவினைக்குப் பிறகு பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும் கணங்களும், பிரிவினைக்குப் பின்னான பங்களாதேஷில் இருந்தாலும் கல்கத்தாவிற்கு மைத்ரீ எக்ஸ்பிரஸ்சில் வந்து செல்லும் இந்தியராகவே உணரும் பெண்ணின் வாழ்க்கைப் பயண அனுபவங்களும் , பாகிஸ்தான்-பங்களாதேஷ் போர்க்காலத்தில் வானொலி ஒன்றே இருந்த நாட்களில் வறுமையின் கோரப்பிடியில் எதிர்கொண்ட வாழ்க்கையினை விளக்குபவர் என்று பலதரப்பட்ட மக்களின் நேர்காணல் அவர்களின் பின்னணியிலிருந்து அழகாக எடுத்திருந்தார்கள். இந்த ஏழ்மையிலும் குறைவில்லாத திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என்று பார்ப்போரையும் உற்சாகமாகபடுத்துகிறது இந்த தொடர். ஜனக்பூரிலிருந்து இருபது மைல் தொலைவில் நேபால் செல்லும் ரயில் மட்டும் விரைவிலேயே மூடப்படும் நிலையில் இருக்கிறது. போதுமான நிதி மற்றும் பராமரிப்பு இல்லாததாலும் நடுநடுவே நின்று விடும் ரயில் செல்ல, மக்களே களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள்! இந்த ரயில்களில் வேலை பார்க்கும் பயணச்சீட்டு பரிசோதகர் முதல் வண்டி இயக்குபவர் வரை மிகவும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதையும் , அவர்களின் வெகுளித்தனமான பேச்சுகளையும் அழகாக எடுத்திருக்கிறார்கள்.


தீவிரவாதத்திற்குப் பெயர் போன நாடுகளின் எல்லை தாண்டிய பயணங்களில் பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்திய அலுவலகங்களும், பாதுகாப்புத்துறையினரும் கவனமுடன் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கத்தின் கருணையால் தான் இந்த ரயில்கள் இன்று வரை இந்நாடுக்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. எளிய மக்களிடையே பேதங்கள் இல்லாவிட்டாலும் எல்லைக்கோடுகள் தீர்மானித்து வளர்த்து விடுகிறது தீவிரவாதத்தையும்.

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...