Thursday, October 3, 2019

Growing Up Wild



அலாஸ்காவில் ஆரம்பித்து ஆப்பிரிக்கா ஸ்ரீலங்காவில் பயணிக்கும் அழகிய ஆவணப்படம் Growing Up Wild. கண்கவர் இயற்கைச்சூழலில் ஐந்து விலங்குகள்  தங்கள் குட்டிகளை வளர்க்கப் போராடும் கணங்களில் எதிர்கொள்ளும் அபாயங்களை  அருமையாக எடுத்துளார்கள்.

பனிசூழ் குகையிலிருந்து நீண்ட உறக்கம் கலைந்து தாய்க்கரடி பல மைல்கள் தன் குட்டிகளுடன் அலைந்து பசியுடன் உணவுக்காகப் போராடுவதையும், மற்ற கரடிகளிடமிருந்து குட்டிகளைக் காப்பாற்றுவதையும், உணவு தேடும் வித்தையை குட்டிக்கரடிகள் கற்றுக் கொள்வதையும் அலாஸ்காவில் அழகாகப் படம் பிடித்துள்ளார்கள்.

ஆப்பிரிக்காவில் தன் சிங்கக்குட்டிகளுடன் தாய் சிங்கம் வேட்டையாடி உணவளித்து அவர்களைப் பாதுகாக்கப் போராடுவதும் சோம்பேறி ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்கள் வேட்டையாடியதை உண்டு களித்து, வளரும் இளம் ஆண் சிங்கங்களைத் தங்கள் எல்லையிலிருந்து விரட்டி அடிப்பதும், அவர்களும் கூட்டாக அலைந்து பருவம் வந்தவுடன் மீண்டும் திரும்பி வருவதும் காடுகளின் ராஜா, ராணி வாழ்க்கையை அற்புதமாகக் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

தன் மூன்று குட்டிகளைக் குழுவாக வேட்டையாட வரும் கழுதைப்புலி (hyena)களிடமிருந்து பாதுகாக்க தாய் சிறுத்தை பதறுவதும் கண்முன்னே குட்டிகளை இழப்பதும், எதிரி விலங்குகளிடமிருந்து குட்டிகளைப் பதுக்கி வைப்பதும், உணவுக்காக அலைவதும் சிறுத்தையின் ஓட்டம் போலவே மனமும் பதைபதைத்துப் போய் விடுகிறது.

மனித குழந்தைகள் போலவே சிம்பன்சி குட்டிகளின் சேட்டைகளும், உணவைத் தேடும் வித்தையையும் எவ்வாறு உண்பதென்பதையும் பெரியவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதும் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது.

ஸ்ரீலங்கா காட்டில் பாழடைந்த கோவில் மண்டபங்களில் வாழும் குரங்கினங்களைப் பற்றிய பகுதியில் மனிதர்களைப் போலவே குரங்கினத்திலும் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற சமூக வரிசை முறை இருக்கிறதென்று ஆவணப்படத்தில் கண்டு கொண்டேன். தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தேடிச் சென்று உண்பதும், குட்டிக் குரங்குகள் தாயிடமிருந்து உணவைத் தேடும் முறையை கற்றுக் கொள்வதும் குடும்பங்களாக காட்டில் அலைவதும் அழகாகப் படமெடுக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குட்டிக் குரங்கு ஒன்று மரத்தில் கூட ஏறாமல் தனியாக உட்கார்ந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்க, மரக்கிளை மேல் அமர்ந்து பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த உயர் இன குரங்குகள் தூக்கியெறிந்த மிச்ச மீதிகளைப் பயத்துடன் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. மழையில் தனியாக நனைந்தபடி அமர்ந்திருக்க அதனுடன் சண்டையிட்டுக் காயப்படுத்தும் மற்ற குரங்குகள் வெறுத்து ஒதுக்கும் பொழுது குரங்கினத்தலைவன் ஆதரவாக அரவணைத்துச் செல்ல அப்பாடா என்றிருந்தது. அந்த தலைவன் குரங்கும் சண்டையில் இறந்து விட, மீண்டும் அனாதையாகிப் பாவப்பட்டு... வேறொரு குரங்கிடம் தஞ்சம் புகும் வரை..

வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது!
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும்!

குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் பங்கு அதிகமாகவும், பொறுப்புள்ளதாகவும் விலங்குகளின் உலகிலும் இருக்க ஹாயாக உலா வரும் ஆணினம் மேல் கோபம் வருவது இயற்கை 😡குழுவாக வாழும் குரங்கு, சிங்கம், சிம்பன்சிகள் குட்டிகளுக்கு ஒன்று என்றால் திரள்வதும், தாயின் அரவணைப்பில் மட்டுமே வாழும் விலங்குகளின் பரிதவிப்பையும் விளக்கும் அருமையான காட்சிகளுடன் காடுகளில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் 'Growing Up Wild'.

நெட்ஃப்ளிக்ஸ்ல் காணக் கிடைக்கிறது.

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...