Thursday, April 18, 2019

திரும்பிப்பார்க்கிறேன்


அழகா பொண்ணும் ஆசையா பைனும்னு கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷப்பட்டது எப்படியோ என்னுடைய கிரகங்களுக்கு கேட்டு விட்டது போல. மூன்று மாதமான குழந்தையின் தலையில் கட்டியும் சேர்ந்து வளர, மருத்துவர்கள் ஆளுக்கொன்றுச் சொல்ல, இந்தக் குழந்தை பிழைப்பது கடினம் என்று சொன்ன நொடியில் இதைக் கேட்கவா உயிரோடிருக்கிறேன். யாராவது நம்பிக்கையாக நல்லது சொல்லி விட மாட்டார்களா என்று வேண்டாத தெய்வங்கள் இல்லை. சிரிப்பைத் தொலைத்து வெறுமையைச் சுமந்து மனபாரத்துடன் துவண்டிருக்கையில் ஆறுதலாய் ஒரு மருத்துவர். வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்து விட்டது. எம்ஆர்ஐ, ஸ்கேன், ரத்தப்பரிசோதனை இத்யாதிகள் என்று குழந்தையைப் பாடாய்படுத்தினாலும் எல்லாம் அவன் நன்மைக்கே என்று அவனுடைய அழுகுரலை சமாதானப்படுத்த தெரியாமல் உறக்கம் தொலைத்த நாட்கள் அதிகம். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி இனி பயப்படத்தேவையில்லை. கவனித்து வளர்க்க வேண்டுமென்று சொல்லி விட்டுச் சென்றார் தன்வந்திரியாய் வந்தவர். பரிதவிக்கும் பெற்றோரின் உளநிலையை அறிந்து பக்குவமாக பேசி விட்டுச் சென்ற மருத்துவர் தெய்வம் மானிட உருவில் வந்ததை மீண்டும் உணர்த்தியது அந்நாள்.

தலைமுழுவதும் கட்டுகளுடனும் வலி அறியாதிருக்க மருந்தின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தையை அழாமல் பார்க்க முடியவில்லை. அப்பாடா! மீண்டு வந்து விட்டான் என்று மீண்டும் சிரிப்பொலி வீட்டில் கேட்க... அதற்கடுத்த நாட்களில் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலும், பேதியுமென பொழுதுகள் கழிந்தாலும் கண்கொத்திப்பாம்பாய் அவனையே கவனித்துக் கொண்டு... ஒரு வருடம் ஓடி விட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பே பிறந்தநாள் திட்டமிடல்கள் ஆரம்பிக்க, நண்பர்களை அழைத்து விருந்துக்கு ஏற்பாடுகள் செய்து முடிக்க, இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில் எமர்ஜென்சிக்குத் தூக்கிக் கொண்டு ஓட... 103 டிகிரி காய்ச்சல். கண்விழிக்கவும் இல்லை. உண்ணவும் இல்லை. ஏதோ வைரல் காய்ச்சல். பொறுமையாக இருங்கள். நேரத்திற்கு மருந்து, தண்ணீர் கொடுங்கள். குழந்தையை வேறு யாரையாவது பார்த்துக்கச் சொல்லி நீங்கள் நன்றாக ரெஸ்ட் எடுங்கள். அந்த கோலத்தில் தான் நான் இருந்தேன் அன்று! பார்ட்டியைத் தள்ளி வைத்து விடலாமென்றால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்தாயிற்று. 103 டிகிரி மட்டும் குறையவே இல்லை. வேறு வழியின்றி முதல் பிறந்த நாளை தூங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன் கொண்டாடினோம்.

ஓரிரு பிறந்த நாட்கள் எந்த கவலையுமின்றி ஆனந்தமாக! ஆரம்பப்பள்ளி வயதில் மீண்டும் ஆரம்பித்தது. பிறந்த நாளன்று எங்கேயாவது மோதி கை காலைச் சிராய்த்து ரத்தம் வர... அழுகையுடனே பல நாட்கள்!

பதினாறாவது பிறந்த நாளுக்காக கனவுகளுடன் பெரிதாக திட்டங்கள் எல்லாம் போட்டு காத்திருந்தான். பள்ளியிலிருந்து பனிச்சறுக்கு விளையாடச் சென்றவனிடம் கவனமாக இரு. உறைந்த பனியின் மேல் பனிமழை. ஏனோ காலையிலிருந்தே மனக்கிலேசம். இன்னைக்குப் போகாதடா. இன்னைக்குத்தான்ம்மா போகணும். முன்னிரவிலிருந்து பெய்து கொண்டிருந்த பனிமழையில் உற்சாகமாக இருந்தான். எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா? ஃப்ரெஷ் ஸ்நோ! பார்த்துடா! அடிக்கடி ஃபோன் பண்ணு. காத்திருந்தேன் இரவில். அடித்தது தொலைபேசி. ஆசையுடன் எடுத்துப் பேசினால்... தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. ஐயோ! எப்படி இருக்கிறான் என் மகன்? நான் அவனோடு பேசணுமே! அம்மாஆஆஆ! அழுகுரல்! நெஞ்செல்லாம் வலிக்குது. பயம்மா இருக்கும்மா!

கடவுளே! மறக்க முடியாத இரவாகிப் போனது! வலிகளுடன் அவன்! வேதனையுடன் நாங்கள்! இரவு முழுவதும் விழித்திருந்து அருமை நண்பர்கள் ஆறுதலாக! இவன் பிழைத்ததே உங்கள் அதிர்ஷ்டம். கண்காணித்துக் கொண்டே இருங்கள் மீண்டும் தன்வந்திரியாய்!

இந்த வருடம் மைல்ஸ்டோன் பர்த்டே! ஆரம்பித்தான். அது வந்து போகட்டும். அப்புறம் பார்த்துக்கலாம். இப்பவே ஆரம்பிச்சிடாதடா! எனக்குப் பதட்டமா இருக்கு. சொன்னவுடன் புரிந்து கொண்டான்.

நாளைக்கு அவனை எப்படி சந்தோஷப்படுத்தலாம்? வழக்கமாக செய்வது போல் இருக்க கூடாது. ஸ்பெஷல் பிறந்த நாளாச்சே! யோசித்துப் பார்த்து கடைசியில் அவனுக்குப் பிடித்த pancakeல் பிறந்த நாள் வாழ்த்தினை எழுதிச் சமைத்து தூங்கியிருந்தவனை எழுப்பி ... இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. தேங்க் யூ மாம். யூ மெய்ட் இட் சோ ஸ்பெஷல்னு....மை வேலண்டைன் பேபி :)



Chanda hai tu, mera suraj hai tu
O meri aankhon ka taara hai tu...






ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...