Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, April 30, 2024

சந்தேஷ்காலி வழக்கு


மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு கிராமம் சந்தேஷ்காலி. அம்மாநில முதல்வரான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷாஜஹான் ஷேக். பல கோடி நியாயவிலைக்கடை விநியோக ஊழல் விசாரணைக்காக ஜனவரி 5, 2024 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள்  ஷாஜஹானின் வீட்டில் சோதனை நடத்த முயன்ற பொழுது உள்ளூர் ஷாஜகானின் ஆட்கள் அமலாக்க அதிகாரிகளை வீட்டிற்குள் நுழைவதைத் தடுத்தது மட்டுமல்லாமல் தாக்கியிமுள்ளனர். எங்கேயோ கேட்டது போல இருக்கிறதல்லவா?

ஆம். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து ஊழியர் நியமனத்தில் ஊழல் செய்ததாக தற்போதைய முதல்வர் சுடாலினால் முன்பு தொடரப்பட்ட வழக்கில் விசாரணை செய்ய செந்தில் பாலாஜி வீட்டிற்குச் சென்ற அரசு அதிகாரிகளையும் அதிலும் ஒரு பெண் அதிகாரியை திமுக குண்டர்கள் தாக்கியது நினைவிற்கு வருகிறது தானே? மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மட்டும் சளைத்தவர்களா? எப்படியோ மத்திய அரசு அதிகாரிகள் குண்டர்களிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி சிறையிலிருந்தாலும் கரூரில் ஜோதிமணிக்காக பரிந்துரைத்தார் என்று செய்திகளில் உலா வந்ததே அது போலவே தலைமறைவாக இருந்தாலும் அங்கு நடக்கும் விஷயங்கள் ஷாஜகானின் கட்டுப்பாட்டிற்குள் இயங்குவதாக அவரது கூட்டாளிகள் கூறியுள்ளனர். அது வரையில் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதாவது மாநில காவல்துறைக்கு. இதுவும் செந்தில் பாலாஜி தம்பியை இன்று வரையில் கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை கைகட்டி நிற்பது போலவே இருக்கிறதல்லவா? ஊழல் வழக்குத் தொடுத்த சுடாலினோ செந்தில் பாலாஜி பத்தரை மாத்துத்தங்கம் என்று வக்காலத்து வாங்குகிறார். எப்படி இருக்கிறது இவர்களின் இரட்டை வேடம்?

இச்சம்பவத்திற்குப் பிறகு ஏராளமான உள்ளூர் பெண்கள், ஷாஜஹானும் அவரது ஆட்களும் தங்கள் நிலத்தை இறால் வளர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக அபகரித்து, பல ஆண்டுகளாகச் சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஷாஜகான் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் கூற முன்வந்துள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இளம்பெண்களைக் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததையும் பல நாட்கள் அவர்களைச் சிறைபிடித்து வைத்திருந்ததையும் கூறியிருக்கிறார்கள். ஷாஜகானை குற்றம் சாட்டுவது மட்டுமல்லாமல், அவரது நெருங்கிய கூட்டாளிகளும் மற்ற டிஎம்சி தலைவர்களும் உத்தம் சர்தார், ஷிபாபிரசாத் ஹஸ்ரா ஆகியோரும் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

கணவன், தமையன், தந்தை என்று ஆண்களால் தங்கள் பெண்களைக் காக்க முடியாமலும் குண்டர்களை எதிர்கொள்ள வழியில்லாமல் பலரும் ஊரை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். ஷாஜஹான், ஷிபாபிரசாத் ஹஸ்ராவை உடனடியாகக் கைது செய்யக் கோரி பெண்கள் மூங்கில் குச்சிகள், துடைப்பம் ஏந்தி உள்ளூர் காவல் நிலையங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். பிப்ரவரி மாதத்தில் உள்ளூர் கிராம மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக அபகரித்த நிலத்தில் கட்டப்பட்ட மூன்று கோழிப்பண்ணைகளைப் போராட்டப் பெண்கள் தீ வைத்து எரித்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இவை ஹஸ்ராவுக்கு சொந்தமானது.

இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் பங்கு கொள்ள, ஆளும் கட்சிக்கு நிர்பந்தங்கள் கூடியது. பிஜேபி, சிபி(ஐஎம்), காங்கிரஸ் ஆகியவை "ஆளும் டிஎம்சி நிர்வாகம் ஷாஜகானுக்கும் அவரது ஆட்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருவதாக" குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் டிஎம்சி தலைவர்கள் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஷாஜகானைத் தவறாகக் கட்டமைக்கப்பதாகக் கூறினர் வழக்கம் போல.

"அவ்வளவு நல்லவன் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும்?"

பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்துப் பேசிய மேற்கு வங்காள ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், "இந்தப் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் அதிர்ச்சியைத் தருகிறது. பார்த்திருக்கக்கூடாத காட்சிகளையும் கேட்கவே கூடாத வருந்தத்தக்க பல விஷயங்களையும் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளானதாகவும் காட்டுமிராண்டித்தனமான இந்த செயல்கள் ஒரு சிவில் சமூகத்திற்கு அவமானம்" என்று கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சகத்திற்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், சந்தேஷ்காலியில் "ரவுடிஅமைப்புகளுடன்" கைகோர்த்து செயல்படுவதற்காக காவல் துறையைக் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விசாரிக்கச் சிறப்பு அதிரடிப் படை அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கேட்டுள்ளதாகவும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பிறகு தான் பிப்ரவரி 29 அன்று 55 நாட்கள் தலைமறைவு நாடகம் முடிந்து ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவங்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இதற்குக் காரணமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக" கூறியுள்ளார். அதுவும் ஆளுநர் சந்தேஷ்காலிக்கு சென்று அங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்த நாளில் பானர்ஜியின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி மக்களிடம் இருந்து தங்களுக்கு நான்கு புகார்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், அவர்களில் யாரும் பாலியல் துன்புறுத்தல், வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிடவில்லை என்றும் பாரிஷத் காவல்துறை கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க எதிர்க்கட்சிகள் ஊருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஊருக்குள் செல்ல முயன்ற பாஜகவின் மேற்கு வங்கத் தலைவர் சுகந்தா மஜும்தார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

மாநில மகளிர் ஆணையத்தின் குழு சந்தேஷ்காலிக்கு வந்து உள்ளூர் பெண்களிடம் பேசி முதல்வர் அலுவலகத்திற்கு (CMO) அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சந்தேஷ்காலி சம்பவங்கள் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் கீழ் 10 பேர் கொண்ட குழுவை மாநில நிர்வாகம் அமைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் எஸ்சி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான தேசிய ஆணையம் (NCSC) பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் சென்றிருக்கிறது. குழுவின் தலைவர் அருண் ஹல்டர் தலைமையிலான குழுவினர் அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபுர்பா சின்ஹா ரே, சந்தேஷ்காலியின் உள்ளூர் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பழங்குடியினரின் நிலம் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டார். ஷாஜஹான் ஷேக் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சந்தேஷ்காலி வழக்கில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் ஏப்ரல் 10 அன்று உத்தரவிட்டுள்ளது.

அதை எதிர்த்து மாநில அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் பிரமுகர் ஷாஜஹான் வழக்கில் “சில தனிநபரின் நலன்களைப் பாதுகாக்கும் மனுதாரராக மாநில அரசு ஏன் முன் வர வேண்டும்” என்று மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி அரசிடம் கேட்டுள்ளது. "மாநில அரசு முழு நடவடிக்கை எடுத்தும் மக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் உள்ளன. இது நியாயமற்றது" என்று மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா கூறியுள்ளார். விவரங்கள் சேகரிக்க சில நாட்கள் அவகாசம் கேட்ட அரசு வழக்கறிஞருக்குச் சாதகமாக பெஞ்ச் விசாரணையை "விடுமுறை வரை" ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது நீதிமன்றம். ஜூலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காகக் குரல் கொடுப்போம் என்று வேஷம் போடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இப்பொழுது கள்ள மௌனம் சாதிப்பதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு மக்களின் நலன் முக்கியமல்ல. அரசியல் செய்வது ஒன்றே குறிக்கோள். அவர்கள் பின்னால் சென்று கோஷம் போடுபவர்களின் நிலைமை தான் பாவம். பாஜக ஆளும் 'மணிப்பூர்' என்றவுடன் கொந்தளித்த கனிமொழி, காந்தி வகையறாக்களும் திருமாவளவன் கும்பலும் இப்பொழுது வாய் பொத்தி நிற்பதன் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டால் 'இண்டி' கூட்டணியின் அராஜக அரசியல் விளங்கும். 


Tuesday, December 26, 2023

நட்சத்திரம் நகர்கிறது?

சொல்வனம் இதழ் 308ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை.

நட்சத்திரம் நகர்கிறது? 

அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்குள் ‘தடாலடி’ அரசியல் நிகழ்வுகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதால் நீதிமன்றங்களில் நடக்கும் முன்னாள் அதிபர் மீதான வழக்கு, விசாரணைகள் விவாதப்பொருளாக மாறி வருகிறது. மக்களிடையே அதிபர் ஜோ பைடனின் ஆதரவு குறைந்து வரும் வேளையில் எதிர்க்கட்சியில் நடக்கும் களேபரங்களுக்கும் குறைவில்லை. அரசியல் வரலாற்றில் இன்றைய தலைமுறையினர் கேட்டிராத நிகழ்வு ஒன்று டிசம்பர் 1, 2023 அன்று அரங்கேறி அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

2022, நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் நியூயார்க்கில் குடியரசுக்கட்சி தன்னுடைய எண்ணிக்கையை எட்டு உறுப்பினர்களில் இருந்து 11ஆக அதிகரித்ததில் இருந்தே அவர்கள் பெற்று வரும் செல்வாக்கை ஜனநாயகக்கட்சியினர் விமரிசித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில் தான் நியூயார்க்கின் லாங் ஐலண்ட் மக்கள் பிரதிநிதி, குடியரசுக்கட்சியின் ‘ஜார்ஜ் சாண்டோஸ்’ காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Progressive activists fly a 15-foot-tall inflatable balloon of Rep. George Santos on Capitol Hill on Tuesday, demanding his expulsion.

இந்த வெளியேற்றம் என்பது சபை விதிக்கக்கூடிய மிகக் கடுமையான தண்டனை முறையாகும். அமெரிக்க அரசியலில் அவையிலிருந்து நீக்கப்பட்ட ஆறாவது பிரதிநிதி மற்றும் முதல் குடியரசுக் கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் சபையிலிருந்து ஒருவரை வெளியேற்றுவது என்பது சாதாரணமான செயல் அல்ல. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது முதல் உள் விதிகளை மீறி “ஒழுங்கற்ற நடத்தையில்” ஈடுபட்டால், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர் வாக்குகளுடன் குற்றம் சாட்டப்பட்ட பிரதிநிதியைச் சபையிலிருந்து வெளியேற்ற அமெரிக்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது. அதன்படி, சாண்டோஸ் அவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு மூன்று கூட்டமைப்பு கிளர்ச்சியாளர்கள், இரண்டு குற்றவாளிகள் மற்றும் இன்னும் விசாரிக்கப்படாத பல குற்றங்களில் தொடர்பு கொண்டிருந்த மக்களின் பிரதிநிதி என 1861ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஆறு காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே அவையிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வழிமுறையாக வெளியேற்றத்தை வடிவமைத்திருந்தாலும் கட்சியினரைப் பிளவுபடுத்தும் செயலாக இருப்பதால் இந்த நடவடிக்கை அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.

அப்படி என்ன குற்றம் செய்து விட்டார் சாண்டோஸ்? ஓரினச்சேர்க்கையாளாரான ‘ஜார்ஜ் சாண்டோஸ் தேர்தலில் நின்ற நாள் முதலே பல புகார்களும் விமரிசனங்களும் அவர் மீது எழுந்தன. வெற்றி பெற்று ஜனவரி, 2023ல் பதவியேற்றபின் அவரது கல்வி, மதம், தாயின் மரணம், பிரச்சார நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, வேலை வரலாறு உட்பட அவரது பின்னணியின் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றிய அப்பட்டமான பொய் அறிக்கைகளின் காரணமாக 2023, மார்ச் மாதம் காங்கிரசின் நெறிமுறைக் குழு (Ethics Committee) ஆரம்பகட்ட விசாரணையைத் தூண்டியது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, ஃபெடரல் கிராண்ட் ஜூரி 23 வழக்குகளில் அவர் மீது குற்றஞ்சாட்டி மே 10, 2023 அன்று காவலில் வைக்கப்பட்டார்.

தனது அரசியல் பிரச்சாரத்திற்காகப் பெற்ற நன்கொடைகளைத் தனிப்பட்ட செலவுகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் செலவழிப்பதற்கு முன்பு அவர் கட்டுப்படுத்திய வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றியதற்காகவும் அவர் மீது பணப்பரிமாற்ற மோசடி குற்றம் சாட்டப்பட்டது. அதற்காக அவர் நிறுவிய நிறுவனம் ஒரு சமூக நல அமைப்பு என்று பிரச்சார நிதியளிப்பவர்களிடம் பொய் கூறியதும் அம்பலமாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றுப்பரவல் காலத்தில் வேலையிழந்தவர்களுக்கு அரசு வழங்கிய சலுகைகளைப் பெற விண்ணப்பித்து மோசடி செய்ததாகவும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தவறான நிதி அறிக்கைகளை அளித்ததற்காகவும் வழக்குகள் தொடரப்பட்டன.

“பிரச்சாரத்திற்காக இருவரிடமிருந்து பெறப்பட்ட $50,000 நன்கொடையை தன்னுடைய வங்கிக்கணக்கிற்கு மாற்றி உயர்தர ஆடைகள், பயணங்கள், கடன் அட்டைகள், அழகுசாதனப் பொருட்கள், ஆபாச தளங்கள், போட்டாக்ஸ் உட்பட பல்வேறு தனிப்பட்ட செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான டாலர்களை தேர்தல் நிதியிலிருந்து செலவிட்டதாக” அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 22 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இதையடுத்து அவரை அவையிலிருந்து வெளியேற்ற ஜனநாயக கட்சியினர் நடவடிக்கை எடுத்தனர். நெறிமுறைக் குழு அதன் இறுதி முடிவுகளை வெளியிடும் வரை காத்திருப்பது சிறந்தது என்று குடியரசுக்கட்சியினர் வாதிட்டு தற்காலிகமாக வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தினர். நவம்பரில், அடையாள திருட்டு மற்றும் கிரெடிட் கார்டு மோசடி உள்ளிட்ட கூடுதல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு,சாண்டோஸை அகற்றுவதற்கான இரண்டாவது முயற்சியும் நியூயார்க் குடியரசுக்கட்சியினரால் தடுக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் அவையின் குடியரசுக்கட்சி உறுப்பினர் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என்பதில் கட்சி மிக கவனமாக இருந்தது.

அவையின் தலைவரான குடியரசுக் கட்சியின் மைக் ஜான்சன், சாண்டோஸை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார். மனைவியை அடிப்பவர்களும் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைச் செய்பவர்களும் காங்கிரசில் இருக்கும் பொழுது தான் செய்தது பெரிய குற்றமல்ல என்று சாண்டோஸ் நிராகரித்தார். இறுதியில், மூன்றாவது முறையாக விவாதம் நடந்து 311 அவை உறுப்பினர்கள் அவரை நீக்குமாறு வாக்களித்தனர். 114 உறுப்பினர்கள் இந்த முடிவை எதிர்த்தனர். ஜான்சனும் மற்ற மூத்த குடியரசுக்கட்சியினரும் அவையிலிருந்து வெளியேற்ற வேண்டாம் என்று வாக்களித்திருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாண்டோஸ் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

“பெரும்பாலான குடியரசுக் கட்சியினர் அவரை வெளியேற்றுவதற்கு எதிராக வாக்களித்தனர். நெறிமுறைகள் அல்லது சட்டத்தைப் பற்றி குடியரசுக்கட்சி எப்பொழுதுமே கவலைப்படுவதில்லை. அதிகாரம் மட்டுமே அவர்களின் குறியாக உள்ளது.” என்று பெர்க்லி பல்கலை பேராசிரியரும், முன்னாள் அமெரிக்கத் தொழிலாளர் செயலாளரும், கார்டியன் கட்டுரையாளருமான ராபர்ட் ஹெய்ச் கூறியுள்ளார்.

சாண்டோஸ் இடத்தை நிரப்ப 90 நாட்களுக்குள் சிறப்புத் தேர்தலை நடத்த வேண்டும். நியூயார்க்கின் ஜனநாயகக்கட்சி கவர்னர் கேத்தி ஹோக்குல், விரைவில் லாங் ஐலேண்டில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு இடைத்தேர்தலில் நியூயார்க் குடியரசுக் கட்சியின் “சிவப்பு அலையின்” ஒரு பகுதியாக சாண்டோஸ் வெற்றி பெற்றார். இதனால் ஜனநாயகக் கட்சியினர் சபையின் கட்டுப்பாட்டை இழந்தனர். குடியரசுக்கட்சியின் பெரும்பான்மையைக் குறைக்க, ஜனநாயகக்கட்சியினர் இப்போது சாண்டோஸின் இடத்தை மீண்டும் கைப்பற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள். அதற்காகத்தான் இந்த வெளியேற்றம் என்றே குடியரசுக்கட்சியினர் கூறிவருகிறார்கள்.

“அவர் தானாகவே ராஜினாமா செய்து காங்கிரசைக் காப்பாற்றியிருக்க வேண்டும். உள்நாட்டுப் போருக்குப் பிறகு வெளியேற்றப்பட்ட காங்கிரஸின் மூன்றாவது உறுப்பினராக இப்போது அவர் நினைவுகூரப்படுவார்.” என்று கட்சி சார்பற்ற பிரச்சார சட்ட மையத்தின் சட்ட இயக்குனர் ஆதவ் நோட்டி கூறியுள்ளார். மேலும், “சாண்டோஸின் வெளியேற்றத்தின் மூலம் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. நெறிமுறைகள், அமலாக்கத்தின் சக்தி மற்றும் திறன் என்பதைக் காட்டுகிறது. அமெரிக்கர்களிடமிருந்து பெற்ற பிரச்சார நிதியைப் பற்றின நேர்மையான அறிக்கையை அறிந்து கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. அந்த உரிமையைப் பறிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக திறம்படச் செயலாற்ற அமலாக்கத்துறைக்கு உரிமை உண்டு.” என்றும் கூறியுள்ளார்.

அவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் பிரதிநிதிகள் பெரும் ஓய்வூதியம் உட்பட சலுகைகள் அனைத்தையும் இழக்கிறார் சாண்டோஸ். குற்றம் சாட்டப்பட்டவராயினும் மீண்டும் தேர்தலில் போட்டியிட எந்தத் தடையும் இல்லை. அதில் தனக்கு நாட்டமில்லை என்று சாண்டோஸ் கூறியுள்ளார். அமெரிக்க அரசியலில், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்குக் கூட பெரும்பாலும் இரண்டாவது ஆட்டம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்தில் பதவியோ இல்லையென்றால் ரியாலிட்டி டிவி அல்லது பெரிய திரையில் படமாகவோ ஒரு வாய்ப்பைக் கொடுத்து விடுகிறார்கள். இவருக்கும் அப்படியொரு வாய்ப்பு காத்திருக்கிறது!

தனக்குப் பதிலாக அப்பதவியில் முன்னாள் காவல்துறை அதிகாரியும் பாதுகாப்பு நிபுணருமான ‘மைக் சப்ரைகோன்’ சிறந்த தேர்வாக இருப்பார் என்று சாண்டோஸ் கூறியுள்ளார். சட்ட அமலாக்கம் மற்றும் வணிக உலகில் அவரது அனுபவம் எதிர்க்கட்சி வேட்பாளரான சூசியுடன் மோதுவதற்கு உதவும் பெருகாராணிகளாக இருக்கும். மீண்டும் குடியரசுக்கட்சியினரே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். ஜனநாயகக்கட்சியினரும் இழந்த எண்ணிக்கையைப் பெறுவதில் குறியாக உள்ளனர்.

ஆனாலும் அவருடைய வெளியேற்றம் என்பது மிகப்பெரிய தண்டனை என்று ஆதரவுக்குரல்களும் ஒலிக்கத்தான் செய்கிறது! இதைவிடப் பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள். சாண்டோஸுக்கு ஒரு வருடத்திற்குள் தண்டனை சாத்தியமானது போல சட்டத்தை மீறிய, மீறும் சட்ட நாயகர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்குமா? என்பதே மில்லினியல்களின் மில்லியன் டாலர் கேள்வி!

தவறு செய்தவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் நியதி. ஏழைக்கொரு நீதி. ஆட்பலம், அதிகாரம், பண பலம் கொண்டவர்களுக்கு ஒரு நீதி என்று தினமும் அரங்கேறும் அறமற்ற காட்சிகள் “அரசியல் ஒரு சாக்கடை” என்பதைத்தான்  நிரூபித்துக் கொண்டிருக்கிறது. “இதெல்லாம் அரசியல்ல…” என மிகச்சசாதாரணமாக இரு கட்சிகளும்.கடந்து சென்று விடுகிறது. மீண்டும் குடியரசுக்கட்சியினரே அந்தத் தொகுதியில் ஜெயிக்கிறார்களா என்பதில் இருக்கிறது அரசியல் விளையாட்டு.

George Santos on a Cameo for Shawn McCreesh, December 8, 2023.


Saturday, October 30, 2021

பட்டாசு அரசியல்



தொடர்ந்து நான்காவது வருடமாக இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதிலும் பல மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பட்டாசு வெடிப்பதினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஓரளவிற்கு ஒத்துக்கொண்டாலும் பட்டாசினால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

தமிழக அரசின் அறிக்கையில், " தீபாவளி மற்றும் பிற நிகழ்ச்சிகளில் சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள், மற்றும் சரவெடி பட்டாசுகள் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்ய அல்லது வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது." என்று சொல்லபட்டிருக்கிறது.

காலம்காலமாக தமிழகத்தில் பட்டாசுக்கென்றே பெயர் போன 'சிவகாசி' நகரத்தில் பட்டாசு தொழிற்சாலைகளும் அதனை வாழ்வாதாரமாக நம்பி சுத்துப்பட்டு கிராமத்து ஆட்களும் இருக்கிறார்கள் என்பதை ஆளும் அரசு நன்கு அறியும். கோடிகளில் புரளும் வியாபாரத்தில் அரசியல் பிரமுகர்கள் பலரே இருக்கக்கூடும். அப்படி இருக்கையில் தீபாவளி நெருங்கும் வேளையில் மட்டும் ஏன் இந்த திடீர் அறிவிப்புகள்? தடைகள்? காற்று, ஒலி மாசுவிற்கு காரணமான பட்டாசுகளை உற்பத்தி செய்வதை ஏன் அரசு முதலிலேயே தடை செய்யவில்லை? தடை செய்திருந்தால் அதனை ஏன் தொழிற்சாலைகள் பின்பற்றவில்லை? அது என்ன? தீபாவளிக்கு மட்டும் தொடருகிறது இந்த கண்துடைப்பு நாடகம்?

உண்மையிலேயே அரசிற்கு மாசுக் கட்டுப்பாட்டில் அக்கறை உள்ள பட்சத்தில் என்ன செய்திருக்க வேண்டும்? மாசு உற்பத்தி செய்யும் பட்டாசுகளை உற்பத்தி செய்வதை முன்பே தடை செய்திருக்க வேண்டும். உள்ளூர் பட்டாசு விற்பனையைப் பெருக்க சீன தயாரிப்பு பட்டாசுகளைத் தடை செய்திருக்க வேண்டும். செய்தார்களா? தேர்தல் வெற்றி, தலைவர்களின் வருகை, ஆங்கில புது வருடத்தின் போது வெடிப்பதையும் தடை செய்யலாமே? ஏன் செய்வதில்லை?

தீபாவளி என்றாலே ஒரு வாரத்திற்கு முன் அங்கொன்று இங்கொன்றுமாக வெடிக்கும் ஓலை வெடிச்சத்தம் தரும் குதூகலம், தீபாவளி நெருங்க நெருங்க இரவுகளில் அதிகரிக்கும். தீபாவளி அன்று புத்தாடை உடுத்தி கடவுளை வணங்கி, நண்பர்கள், குடும்பத்தினருடன் நாள் முழுவதும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மரபு. ஆனால் சில வருடங்களாக குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் ஒரே நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடிக்க, எங்கும் புகை மண்டலம். இது தேவையா? அவரவர் வசதிக்கு நேரத்திற்கு வெடித்துக் கொண்டாடினால் தான் என்னவாம்? இந்த தடைகளால் உள்ளூர் பட்டாசு தொழிற்சாலைகளும் அதனை நம்பி இருக்கும் பல குடும்பங்களும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாதா இந்த அரசு? இதையும் தூத்துக்குடி தாமிர தொழிற்சாலையை இழுத்து மூடியது போல் மூட வைத்து அதிக விலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு கொண்டு செல்ல துடிக்கிறார்களா?


நியூயார்க் மாநிலத்தில் அதிக அளவில் சுற்றுச்சூழலைப் பாதித்த வகையில் 'கோடக்' நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது அரசு. ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஆற்றில் கழிவுகளைக் கொட்டியது நிரூபணமாகி அவர்களையே மாசுகளை அப்புறப்படுத்த ஆணையிட்டது நீதிமன்றம். மக்களின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு ஆலைக்கழிவுகளை முறையாக சுத்திகரிக்க ஆலைகளும், மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் செயல்பட வேண்டும். ஆனால் நாம் ஆலைகளை மூட வைத்து விட்டு பொருட்களை அதிக விலையில் இறக்குமதி செய்து மற்ற நாடுகளின் வளர்ச்சிக்குத் துணை செல்கிறோம். லாப நோக்கில் செயல்படும் பெருநிறுவனங்களும், தலைவிரித்தாடும் லஞ்சமும், அரசியல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கும், மக்களின் மெத்தனமும், அறியாமையும் தான் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மாசுக்களை காற்றில் கலக்கச் செய்து கொண்டிருக்கிறது.

சமீப காலமாக ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட நோய்கள் பெருகியுள்ளது என்பது உண்மை. ஆனால் தினந்தோறும் ரசாயன ஆலைகள், சாயப்பட்டறை, தோல்பதனிடும் ஆலைக்கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், அசைவ உணவுக்கழிவுகள்,பெட்ரோல், டீசல் வண்டிகளின் புகைகள் வெளியிடும் மாசுகளைக் கட்டுப்படுத்தியுள்ளார்களா? அவற்றினால் மக்களுக்குப் பாதிப்புகள் இல்லையா? கட்டுப்படுத்த வேண்டிய இடங்களில் லஞ்சம் வாங்கிக் கொண்டு கட்டுப்படுத்தாமல் மக்களின் சுகாதாரத்தில் விளையாடும் அரசும், நீதிமன்றமும் தொழிற்சாலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாக கூற முடியுமா? இல்லையென்றால் அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?

ஏன் ஒருநாள் கொண்டாப்படும் இந்துப்பண்டிகையின் போது மட்டும் இந்த பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள் என்பதில் இருக்கும் அரசியலில் தான் மக்களுக்கு ஐயமே!

தீப ஒளி ஏற்றி பட்டாசு வெடித்துக் குடும்பத்துடன் இனிதே கொண்டாடுவோம் நம் பண்டிகையை.

தீபாவளியைக் கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.🎆🎆🎆🎆🎆



அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...