Showing posts with label சௌராஷ்ட்ரா. Show all posts
Showing posts with label சௌராஷ்ட்ரா. Show all posts

Tuesday, March 5, 2024

சௌராஷ்ட்ரா சமூகத்தின் மும்மூர்த்திகள்

கர்னாடக சங்கீத உலகில் மும்மூர்த்திகள் யார் என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும். அவர்கள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆவர். இவர்களில் முதன்மையானவர் ஸ்ரீ தியாகராஜர். அவர் பாடிய கீர்த்தனைகள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவருடைய பிரதம சீடரும் குருவிற்கு நெருக்கமானவருமான ஸ்ரீவேங்கடரமண பாகவதர் ஆவார்.

சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த இவர், பாடிக் கொண்டே செல்லும் தன் குருவைத் தொடர்ந்து சென்று பாடல்களைக் கேட்டு ஓலைச்சுவடியில் குறித்து வைத்துச் சென்றதைத் தான் இன்று மக்கள் கற்றறிந்து பாடி மகிழ்கின்றனர். மகிழ்விக்கின்றனர். இவர் மட்டும் இல்லையென்றால் நமக்குச் சுவாமிகளின் கீர்த்தனைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்காது. எத்தகைய பேரிழப்பிலிருந்து அவர் நம்மைக் காப்பாற்றி உள்ளார்!

அவருடைய ஜன்ம நட்சத்திரம் மூல நன்னாளான இன்று (மார்ச் 3)ல் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் அவருடைய சன்னிதியின் முன்பு வீணை இசைக்கலைஞர்கள் ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி வாசித்ததைக் கேட்க அருமை. சௌராஷ்டிரா சமூகத்தின் மும்மூர்த்திகளான ஸ்ரீவேங்கடரமண பாகவதர், ஸ்ரீவெங்கடசூரி, ஸ்ரீநடனகோபால சுவாமிகள் மூவருக்கும் சிறப்புப் பூஜைகளும் அலங்காரங்கரங்களும் நடைபெற்றது.

 வீணை இசைக்குழு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறது.

கோவிலில் வீணை வாசிப்பைக் கேட்க அத்தனை அருமை. தெய்வீக வாத்தியம். ராகம். இசை என்று இந்த நாள் இனிய நாளாக அமைந்து விட்டது.



Wednesday, February 21, 2024

நல்ல மனம் வாழ்க!

சுவாரசியங்களுக்குக் குறைவில்லாதது மதுரை. காலையில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வலம் வருகையில் மேலச்சித்திரை வீதியில் 'துறுதுறு'வென்று ஒருவர் காலை உணவை விற்றுக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி ஏற்கெனவே யூடியூபில் பார்த்திருக்கிறேன். நான்கைந்து எவர்சில்வர் தூக்குவாளிச் சட்டிகளில் இட்லி, வெண்பொங்கல், வடை, சட்னி, சாம்பாரை சைக்கிளில் எடுத்துக் கொண்டு வருகிறார். சமயங்களில் தக்காளி சாதம், புளியோதரையும் கிடைக்கிறது. விலையும் மிகக்குறைவு. மூடியிருக்கும் கடை வாசலில் அவற்றை இறக்கி வைத்து விட்டு நிமிருவதற்குள் வாடிக்கையாளர்கள் வந்து விடுகிறார்கள்.

தட்டின் மேல் இலையை வைத்து மக்கள் கேட்பதைப் பரிமாறுகிறார். அவரே அதிகாலையில் எழுந்து அனைத்தையும் சமைப்பதாகக் கூறினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இந்தத் தொழிலை லாபநோக்கில் செய்யாமல் மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறியதைக் கேட்டதும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மிகவும் எளிமையாகவும் தன்னடக்கத்துடனும் இருந்தார். அவரைப் பற்றின காணொளிகளைப் பலரும் பகிர்ந்து வருவதைக் கூறியதும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டார். தான் கொண்டு வந்ததை ஒரு மணிநேரத்தில் விற்றுவிட்டு வீடு திரும்புகிறார்.

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் அனைத்தும் சுவையாக இருந்ததாக என் கணவரும் கூறினார்.

காசுக்காக அலைபவர்களின் மத்தியில் இத்தகைய மனிதர்கள் தான் சிறுதுளி நம்பிக்கையை விதைக்கிறார்கள். மனிதம் பிழைத்துக் கிடப்பதும் இவர்களைப் போன்றவர்களால் தான். 

என் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதும் மனம் நிறைந்த சேவையைச் செய்பவரைக் கண்ட திருப்தியில் 'ஜனார்தனன் dhaa' வுடன் ஈஷ்வரையும் சேர்த்து ஒரு 'க்ளிக்'. கிடைப்பதில் திருப்தி கொண்டு வாழும் மனம் படைத்தவர்கள் வெகு சிலரே. அதோடு அடுத்தவர் நலன் கருதி இந்த வயதிலும் உழைத்துச் சாப்பிடும் இவர் போன்ற மனிதர்கள் வெகு அரிது!


வாழ்க வளமுடன்!







Tuesday, August 9, 2022

சௌராஷ்டிரர்களின் பூர்வ சரித்திரம்


திரு.ஜெயமோகனின் தளத்தில் எதையோ தேடப் போய் எதுவோ ஒன்று கிடைத்தது. ஆம். திண்டுக்கல்லில் இருந்து சௌராஷ்ட்ர வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.  

//

"நானறிந்தவரை சௌராஷ்டிரர்களின் தமிழகக் குடியேற்றம், அவர்களின் வாழ்க்கைச்சூழல் சார்ந்து சௌராஷ்டிரர் முழு வரலாறு என்னும் நூல் உள்ளது. ஆசிரியர் கே. ஆர்., சேதுராமன், மதுரை. முக்கியமான புனைவு என ஏதுமில்லை. எம்.வி.வெங்கட்ராமின் வேள்விதீ நாவலில் உள்ளது மேலோட்டமான ஒரு சித்திரம் மட்டும்தான்.

சௌராஷ்டிரர்களின் பூர்வ வரலாறு என ஒரு சிறு நூலை லண்டன் சுவாமிநாதன் என்னும் ஆய்வாளர் லண்டன் அருங்கட்சியக நூலத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளார்."

//

"சௌராஷ்டிரர்களின் பூர்வ சரித்திரம்" எனும் நூலைப் பற்றி குறிப்பிட்டும் சுட்டியும் கொடுத்திருக்கிறார்.

 இரண்டணாவிற்கு 1911ல் விற்கப்பட்டிருக்கிற இந்நூலில் எம்முன்னோர்கள் பற்றின தகவல்களைப் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  


"சௌராஷ்ட்ரர்கள் என்கிற பதத்துக்கு செழிப்பான ராஜ்ஜியத்தில் வசிப்பவர்கள் என்று அர்த்தம். அவர்கள் இந்து மதத்தவர்கள். ஆதியில் மத்துவர்கள். தென்னிந்தியாவில் குடியேறிய பிறகு சிலர் சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார் இவர்களுடைய பிரசாங்கங்களைக் கேட்டு ஸ்மார்த்தர்களாயும் வைஷ்ணவர்களாயும் மாறி விட்டார்கள்😮😯😲

https://www.jeyamohan.in/168238/

சௌராஷ்டிரர்-வரலாறு



Monday, July 18, 2022

மெட்ராஸ் பலகை ரொட்டி

‘மெட்ராஸ் பலகை ரொட்டி’, சௌராஷ்ட்ரா மக்களின் ‘பொல்கா ரொட்டி’. யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முன்பு சென்னைக்குச் சென்று வருபவர்கள் கொண்டு வருவார்களாம். பின்பு மதுரையில் எங்களவர்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். மைதா மாவு, வெண்ணெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து செய்யப்படும் சுவையான ரொட்டி. “கடுக் முடுக்” என பல்லைப் பதம் பார்க்கும் எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம். ஆரம்ப காலங்களில் இரண்டு , மூன்று ‘பொல்க்கா ரொட்டி’களை ஊருக்கு வரும் பொழுது எடுத்துக்கொண்டு வருவேன். ரெசிபி கிடைக்குமான்னு தேடீட்டு இருக்கேன். தெரிஞ்சவங்க சொல்லுங்க🙏🙏🙏


Friday, February 18, 2022

இரங்கல் குறிப்பு - டாக்டர்.நொரிஹிகோ உச்சிதா


என் தாய்மொழி சௌராஷ்ட்ரா. என் மூதாதையர் குஜராத்தில் சௌராஷ்ட்ரா பகுதியைச் சேர்ந்தவர்கள். இஸ்லாயமியர்களின் படையெடுப்பின் போது அவர்களுடைய கொடுங்கோலுக்கு அஞ்சி தங்கள் பிறந்தகத்தை விட்டு வெளியேறிய பலரில் மூதாதையர்களும் அடங்குவர். அங்ஙனம் புலம்பெயர்தலில் சிலர் வரும் வழியில் கர்நாடகா, ஆந்திராவில் தங்கிவிட, (இன்றும் திருப்பதியில் என் தாய்பாஷை பேசும் மக்கள் இருக்கிறார்கள்) ஒரு சாரார் மட்டும் மதுரைக்கு திருமலை நாயக்கரால் அழைத்தது வரப்பட்டார்கள் என்கிறது வரலாறு. குலத்தொழிலான நெசவுத்தொழிலில் புலமை பெற்றிருந்ததாலேயே "பட்டுநூல்காரர்கள்" என்றே சமூகம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. வளரும் வயது வரை தாய்மொழி எழுத்துக்களின் அறிமுகம் எனக்கு கிடையாது. பேச்சு வழக்கு மட்டுமே இருந்தது. அவரவர்க்கு இருக்கும் தாய்மொழி மீதான அபிமானம் போல எனக்கும் என் தாய்ப்பாஷை மீது அளப்பரிய காதல் உண்டு. எங்களுக்கே எங்களுக்கான சில கலாச்சார பழக்கங்கள், உணவு, உடைகள், திருவிழாக்கள் என்ற பெருமிதம் நிறையவே உண்டு. அதுவும் மதுரை சௌராஷ்ட்ரா மக்களுக்கு அதிகமாகவே இருக்கும். எங்கள் சமூகத்து மக்கள் திண்டுக்கல், திருநெல்வேலி, கும்பகோணம், சேலம், சென்னை என்று பரவலாக இருந்தாலும் மதுரையில் அதிகளவில் இருக்கிறார்கள். அரசியலில், விடுதலைப் போரில் பங்கேற்ற பெரியவர்கள் பலரும் உள்ளனர். நாட்டிற்கும், வாழும் மாநிலத்திற்கும், பழகும் மக்களுக்கும்  விசுவாசமாக நடக்கும் தேசிய அபிமானிகள் எம்மக்கள்.

இப்படிப்பட்ட ஒரு சிறிய சமூகத்தைப் பற்றி அறிந்து அதனைப் பற்றி ஆராய ஜப்பானிலிருந்து வந்தவர் தான் டாக்டர். நொரிஹிகோ உச்சிதா. அவர் பிளா குடும்பங்களுடன் நெருங்கிப் பழகி, ஒரு சௌராஷ்ட்ராவாக வாழ்ந்து எங்களுடைய பழக்க வழக்கங்களை, வரலாறுகளை ஆராய்ந்து மிகப்பெரிய தொகுப்புகளை எழுதியுள்ளார். என் கணவர் மூலம் இந்த தகல்வல்கள் எனக்குத் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் மதுரையில் சந்தித்துமிருக்கிறார்கள்.

ஜப்பானில் இருந்த ஒருவருக்கு பல மைல்களுக்கு அப்பால் மதுரையில் இருக்கும் ஒரு சமூகத்தினரைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற உந்துதல் எதுவாக இருந்திருக்கும்? அதிசயம் தானே?! அப்பேர்பட்ட நல்ல மனிதர் இறந்து விட்டார் என்ற தகவல் வருத்தமாக இருந்தாலும் நிறைவாக வாழ்ந்த அந்த ஆத்மா சாந்தி பெற இறைவன் அருளட்டும்.

டாக்டர். நொரிஹிகோ உச்சிதா பற்றின கணவரின் சிறு குறிப்பு.
Dr Norihiko Uchida, a scholar from Japan, and who did significant research in finding and compiling the literature of the sourashtrians, passed away yesterday. He also compiled a Sourashtra dictionary, which is a remarkable feat for any foreigner to the sourashtra language. That dictionary is in fact the only one ever put together!

I have seen him once at Madurai thirty years or so before when he used to regularly visit and spent an evening with him. I have his book ‘the oral literature of the sourashtrians’ and in fact set to tune too one of the marriage songs he had collected in his search of the literature of sourashtrians. I remember with pleasure the splash it made among those who listened to my version of that song. It begins with caricaturing the bridegroom as ‘dhovro novro’ (a very old bridegroom) and making fun of him in the entire song in such a playful manner that it would have brought only joy and laughter on a happy occasion as the marriage ceremony.

That such lively folk songs which were sung in sourashtra by the Sourashtrians in various occasions as marriages, even on first nights, was entirely unknown to me till I came across him and this book. The sourashtrians of today have no such singing and dancing in their marriages or other ceremonies. There are many other songs for many other occasions too, in that book! He took the efforts of traveling to many unknown cities forty years before in his search of the sourashtra literature. That no other sourashtrian took any such efforts after him makes even more remarkable his achievements.

Om shanthi.



Sunday, May 17, 2020

உலக குடும்ப தினம்


புளியைக் கரைத்து புளிக்காய்ச்சல் செய்யும் பொழுதே வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்து விடும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வெந்தயப்பவுடர், மஞ்சள் பவுடர், பெருங்காயத்தூள், சிறிது இஞ்சி சேர்க்க காற்றில் மணம் வீச, நாக்கும் ஏங்க ஆரம்பிக்கும். எண்ணெயில் வறுத்த வத்தல்கள் புளிக்கரைசலில் நாட்டியமாட, மணம் சேர்க்கும் கருவேப்பிலையும்.

அதற்குள் உதிரி உதிரியாய் வெந்த சோறும் வடிக்கத் தயாராகி விட, பொங்கல் தட்டில் ஆற விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, வத்தல், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி புளிக்காய்ச்சலைச் சேர்த்து அம்மா பிசைய, உப்பு சரிபார்க்க தட்டைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்களுக்கு கைப்பிடி உருண்டை.... ம்ம்ம்... காரமா புளிப்பா ... யம் யம் யம்... அம்பட்பாத்💕

கூடவே வேக வைத்த
தட்டைப்பயறு
கருப்பு சுண்டல்

தேங்காயும் கொழிஞ்சியும் கொசுறு❤️

இனிப்பாக
சேமியா கேசரி
ரொட்டி ஹல்வா

இப்படி குடும்பமாக பாட்டி, மாமாக்கள், அத்தைகள், பெரியம்மாக்களுடன் உண்டு மகிழ்ந்ததொரு காலம் இனி வாரா. மகிழ்ந்திருந்த பொழுதுகள் மட்டுமே நினைவினில் என்றென்றும்ம்ம்ம்💕💕💕

குடும்ப உறவுகள் வாழ்வை வளமாக்கும் அற்புத படைப்புகள். உணர்ந்து கொண்டாடுவோம். உள மகிழ்வோம்.

அனைவருக்கும் குடும்ப தின நல்வாழ்த்துகள்🙌


Tuesday, June 11, 2019

வளரட்டும் கொடையுள்ளங்கள்

ஒவ்வொரு சமூகமும் தனக்கென ஒரு தொழில் அடையாளத்தைக் கொண்டிருந்தது போல நான் பிறந்த சௌராஷ்ட்ரா சமூகமும் நெசவுத் தொழிலையும் நூல் விற்பனை செய்வதையும் தொழிலாகக் கொண்டிருந்தது. இன்று வரை அது தொடர்ந்தும் கொண்டிருக்கிறது. சோம்நாத் கோவிலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கொடூர இஸ்லாமியர்களிடமிருந்து தப்பித்து பல்லாண்டுகளுக்கு முன்னால் குஜராத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்களில் சிலர் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தங்கி விட, திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை, பரமக்குடி, திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர் பகுதிகளுக்குப் பலரும் புலம்பெயர்ந்தார்கள்.

இச்சமூகத்து மக்களுக்கு கல்வியறிவை வளர்க்க 1886ல் ஆரம்ப பள்ளி ஒன்று சமூக ஆர்வலர் திரு. L.K. துளசிராம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.1904ல் அரசின் உதவியுடன் மேல்நிலைப்பள்ளி ஒன்றையும் தொடங்கினார். நூற்றாண்டுகளுக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் கற்கட்டிடம் இன்று பல்வேறு துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் பல மாணவர்களுக்கு கல்வியறிவை ஊட்டிய இடம். கலையுணர்வுடன் கட்டப்பட்டிருக்கும் இப்பள்ளியின் கற்கட்டிடத்தை பாராட்டாதவர்களே கிடையாது. எம்முன்னோர்களால் அக்காலத்திலேயே வழங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடிய இப்பள்ளியின் பெருமைகளுள் ஒன்று. உணவிற்காக வேலை செய்ய வேண்டிய நிலையில் இருந்த பல குடும்பங்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர வைக்கப் பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பின்னாளில் தமிழக முதலமைச்சர் காமராஜரைக் கவர்ந்து அவர் தமிழக அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அவருக்குப் பின் MGR அவர்களும் நெறிப்படுத்தினார். இன்று வரை இம்மதிய உண்வுத் திட்டத்தால் பல ஏழை மாணவர்களும் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். இப்பள்ளியில் படித்த மாணவர்கள் மேலை நாடுகளில் இருந்தும்  இத்திட்டத்திற்கு இன்று வரை பணஉதவி செய்தும் வருகிறார்கள்.


பெண்கல்வியின் அவசியத்தையும் உணர்ந்த முன்னோர்கள் பெண்களுக்காக 1947ல் ஆரம்பப் பள்ளி ஒன்றையும் பிறகு முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மேல்நிலைப்பள்ளி ஒன்றையும் துவங்கி இன்று வரை பல பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளார்கள்.

மேற்படிப்பிற்காக வேறு கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில் 1967ம் வருடம் சமூக ஆர்வலர்களாலும் நன்கொடையாளர்களாலும் மதுரை விளாச்சேரியில் சௌராஷ்ட்ரா கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில் படித்த பல மாணவர்களும் தாங்கள் உயர்ந்தது மட்டுமில்லாமல் தங்கள் குடும்பத்தையும் உயர்த்தினார்கள். பயன் பெற்றோர் எண்ணற்றோர்!

எப்பேர்ப்பட்ட தொலைநோக்கு பார்வையுடன் சுயநலமற்ற எம்முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள்! இன்று வாழ்க்கையில், பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கும் பலரும் உயர் அந்தஸ்து பதவிகளில் இருப்பவர்களும் கல்விக்கூடங்களை அமைத்த பெரியவர்களை நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்றே நம்புகிறேன். எட்டு வருடங்கள் இக்கல்லூரியில் கணினியியல் துறையில் விரிவுரையாளராக வேலை பார்த்த பெருமிதமும் எனக்கு உண்டு.

மக்களுக்கு குறைந்த செலவில் நிறைவான மருத்துவம் வழங்க சமீபத்தில் 'பாதே' குடும்பத்தினர்(ரமோலா பெய் & விவேக் பாவா) மதுரையிலிருக்கும் தங்கள் இடத்தை நன்கொடையாக வழங்கி இருப்பதை அறிந்தேன். இதனால் பலரும் பயனடைவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. உதவும் உள்ளங்கள் இருக்கும் வரை சமூகத்திற்கு நன்மையே! 

தற்பொழுது பொறியியல், நர்சிங், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பெண்கள் கலைக்கல்லூரி என்று வளர்ந்து கொண்டே இருக்கிறது. இவையெல்லாம் சமூக மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல நன்கொடையாளர்களாலும், ஆர்வலர்களாலும் சாத்தியப்படுகிறது. சமூகத்திலிருந்து பெற்ற பலன்களைச் சிறிதேனும் சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்த நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம். முடிந்தவரையில் அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம். பெரியவர்கள் நமக்காக விட்டுச் சென்றுள்ள கல்வி நிலையங்களை மேலும் வளர்த்து நல்வழியில் செலுத்திடவும் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுத்திடவும் இணைந்து செயல்படுவோம்.

கொடையுள்ளங்களை வாழ்த்துவோம்! வணங்குவோம்! நன்றியுடன் இருப்போம்!


Friday, October 11, 2013

தெற்கு கிருஷ்ணன் கோவில்

'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்டாசி சனிக் கிழமைகளில் இன்னும் விஷேசமாய் இருக்கும். துளசி, பச்சைக் கற்பூரம், பூமாலைகள் மணக்க கோலாகலமாய் பூஜைகள் நடக்கும். என் சிறு வயதில் பாட்டி வீட்டிலிருந்து அடிக்கடி விஜயம் செய்த கோவில்களில் இதுவும் ஒன்று.

சென்ற முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கோவிலில் புதிதாக தங்கரதப் புறப்பாடு நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருப்பதாகவும், முடிந்தால் நீயும் செய்யலாம் என்று அக்கா சொல்லி இருந்ததால், என் மகளின் பிறந்த நாளை ஒட்டி கோவில் நிர்வாகத்திடம் நாள், நேரம் எல்லாம் கேட்டு விட்டு அப்படியே சிறிது எக்ஸ்ட்ரா பிரசாதத்திற்கும், ஹனுமாருக்கு வடைமாலைக்கும் சேர்த்துப் பணம் கட்டி விட்டு வந்தோம்.

ஒரு சனிக்கிழமை அன்று புறப்பாடு என்று முடிவாயிற்று. மாலையில் அர்ச்சனைக்கு வேண்டிய சாமான்கள் சகிதம் உறவினர்கள் சிலருடன் கோவிலுக்குப் போனோம். என் மகளுக்கு அந்தக் கோவில் புதிது! கும்பாபிஷேகம் முடிந்த கோபுரங்கள் 'பளிச்' என்று வண்ண மயமாக!

கோவில் வாசலில் பூ வியாபாரம், காலணிகளைப் பார்த்துக் கொள்பவர்கள், திருவோடு ஏந்தியவர்கள்!, கோவில் வாசலில் உடைக்கும் சிதறு தேங்காய்க்கு என்று எப்போதும் போல் ஒரு சிறு கூட்டம்!

கருப்பண்ணச்சாமியை கும்பிட்டு விட்டுக் கோவில் உள்ளே சென்றவுடன் இடப்பக்கத்தில் நவக்கிரகங்களுக்கு அருகில் சுடச்சுட நெய் வழிய வெண்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள் என் கணவரின் நண்பர்கள் சிலர். எங்களை அந்த இடத்தில் எதிர்பார்க்காத அவர்களிடம் சென்று , என்ன எப்படி இருக்கிறீர்கள் என்றவுடன் நீங்களா, இங்கே எப்படி, எங்கே விஷ்வேஷ் என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டுத் தொன்னையில் பொடித்துப் போட்ட மிளகு, வறுத்துப் போட்ட முந்திரி, கருவேப்பிலை, குழைய விட்ட அரிசியில்...என்று வாயில் வைத்தாலே கரையும் வெண்பொங்கலை கொடுக்க நானும் என் மகளும் அனுபவித்துச் சாப்பிட்டு விட்டு, ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் கூட கொடுத்திருக்கலாம் என்று எங்களுக்குள் சொல்லிக் கொண்டு அவர்களையும் சுவாமி புறப்பாட்டிற்கு அழைத்து விட்டு உள்ளே சென்றோம்.

கோவில் சுத்தமாகத் தூண்கள் எல்லாம் விபூதி, குங்குமம் என்று பக்தர்களால் அலங்கரிக்கப்படாமல் பார்க்க நன்றாக இருந்தது. வலப்பக்கத்தில் நாமம் போட்ட கணபதி !!!, நன்றாகத் தலையில் குட்டிக் கொண்டு, அப்படியே ஸ்ரீராமஜெயம், வெற்றிலை, வடை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட என்னுடைய அபிமான ஹனுமார் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்க, அவரை வணங்கிச் சுற்றி வந்தோம். ஹனுமாரைச் சுற்றி வர இருக்கும் மிகவும் குறுகலான இடத்தில் இன்றும் என்னால் சுற்றி வர முடிகிறது என்று சந்தோஷமாக இருந்தது! அதை விட அவரைச் சுற்றி இருக்கும் சுவர்களில் எண்ணைப் பிசுக்கு இல்லாமல் இருந்ததைப் பார்க்க டபுள் சந்தோஷம்! எங்கள் முறை வந்து அர்ச்சனை, வடை மாலை பூஜைகள் முடிந்தவுடன்,

தங்கரதப் புறப்பாட்டை முடித்து விடலாம் என்று சொல்ல, மேலேறிக் கோவிலுக்குள் சென்றோம். அதற்குள் தாயார், சக்கரத்தாழ்வார், ராமர், லக்ஷ்மணர், சீதா தேவி, பள்ளிகொண்ட பெருமாள், பளிங்கினால் செய்த ராதா கிருஷ்ணா, லட்டு கோபால், லக்ஷ்மி ஹயக்ரீவர், நரசிம்மர், கருடர் என்று சந்நிதிகளைச் சுற்றி வந்து விட்டோம்.


அழகிய புதிய ஜொலிக்கிற தங்கரதத்தில் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவிகளுடன் மலர் அலங்காரத்தில் இருக்க, அர்ச்சகர்களும் கோத்திரம், நட்சத்திரம், பெயர்களைக் கேட்டு அர்ச்சனை செய்ய, என் தம்பிகளும் மாலை, பரிவட்ட மரியாதைகளை ஏற்றுக் கொண்டு அர்ச்சனையும் முடிய,

நாதஸ்வரம், தவில் இன்னிசை முழங்க தேர் புறப்பாடு பெருமாள், தாயார் சந்நிதி வழியாக அருமையாக நடந்தது. அனைத்து பூஜைகளும் மனநிறைவுடன் நடக்க, சந்நிதிகளை வலம் வந்து பிறகு பூக்கள் , தீர்த்தம், பிரசாதங்கள் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள உட்கார, அதற்குள் பிரசாதம் கேட்டு ஒரு கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விட்டது.

அம்மாவும் வடை, சக்கரைப் பொங்கல் பிரசாதங்களை கோவிலுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க ஆரம்பிக்க கூட்டம் திடீரென்று அதிகமாகி விட்டது :(

ஒரு வழியாக அதை முடித்து விட்டு வந்திருந்த உறவினர்களுக்கும் கொடுத்து விட்டு, நிமிர்ந்தால் பூஜை செய்த அர்ச்சகர்களுக்கு, தவில், நாதஸ்வரம், தீவட்டி எடுத்து வந்தவர், அவர், இவர் என்று கோவில் வாசலில் இருப்பவர் வரை வரிசையாகப் பணம் கேட்டு நொச்சு. அன்பாக கொடுப்பதை வாங்கிக் கொள்ளாமல் அடாவடியாக கேட்டதால் கொஞ்சம் தாராளமாகவே கொடுக்கும் எனக்கு எரிச்சல் தான் வந்தது.



அதே போல், புறப்பாடு செய்பவர்கள் நிம்மதியாகத் தங்கரதம் இழுக்க முடியவில்லை. அன்று ஏகப்பட்ட பூஜைகள் என்று நல்ல கூட்டம். நான் நீ என்று அவர்களும் சேர்ந்து ஓராயிரம் கைகள் வந்து விழுந்து ரதம் இழுக்க, பாவம் ரதம்! ஒரே இழுபறியாகி கடைசியில் கூட்டத்திற்குப் பயந்து நாங்கள் ஒதுங்க வேண்டியதாகி விட்டது!

இதையெல்லாம் கோவில் நிர்வாகம் கவனித்தால் தேவலை. காசு வாங்குவதோடு கடமை முடிந்து விட்டது என்று அலவலகத்தில் ஒதுங்கி இராமல், கோவிலுக்குள் நடப்பதையும் கண்டு கொண்டால் நலம்.

ஹரி ஓம் !!!!



Thursday, February 28, 2013

மகாத்மா முதியோர் இல்லம்

இந்த முறை ஊருக்கு சென்றிருந்த பொழுது மகாத்மா முதியோர் இல்லம் சென்று வந்தோம். பரபரப்பான வில்லாபுரத்தில்,மீனாக்ஷிநகரில், சஞ்சீவி தெருவில் இந்த இல்லம் இருக்கிறது. நாங்கள் வருவதை முன் கூட்டியே சொல்லி அங்கு இருப்பவர்களுக்கு மதிய உணவு என்ன வேண்டும் என்று கேட்டு தக்காளி சாதம், ரவா கேசரி, பஜ்ஜி, தயிர் சாதம், குருமா மற்றும் தயிர் வெங்காயம் ரெடிமேட் சொல்லிவிட, அவர்களும் சரியான நேரத்திற்கு அனுப்பி விட்டார்கள்.
வெளியில் மகாத்மா முதியோர் இல்லம் என்று ஒரு போர்டு வைத்திருக்கிறார்கள். அது மாடியுடன் கூடிய வீடு. தரைத்தளம் மட்டும் இல்லத்திற்கு வாடகை விட்டிருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன் ஒரு சின்ன வரவேற்பறை/அலுவலக அறை என்று ஒரு மேஜை, நாற்காலியுடன். இன்னொரு மூலையில் தொலைக்காட்சி பெட்டி ஒன்று வைத்திருந்தார்கள். உள்ளே கொஞ்சம் இருட்டாக இருந்தது. அதை அடுத்து ஒரு பெரிய ஹால், ஹால் முடியும் இடத்தில் சுவரை ஒட்டி நான்கு சிறிய அறைகள். ஹால் முழுவதும் சிறு இடைவெளி விட்டு இருபத்தி நான்கு கட்டில்கள் இருந்தது.அலுவலக அறையை தாண்டி இடப்பக்கம் திரும்பியவுடன் ஒரு பெரிய கிரைண்டர், பழைய பிரிட்ஜ், சில வேண்டாத, வேண்டிய சாமான்கள் என்று வரிசையாக. அதை தாண்டி உள்ளே போனால் ஒரு சமையல் அறை. ஒரு காஸ் சிலிண்டர், பெரிய பாத்திரங்கள், இத்யாதிகள். ஹால் நல்ல சூரிய வெளிச்சத்துடன் இருந்தது. அங்கு பொறுப்பிலிருக்கும் செக்ரட்டரி வெளியில் சென்றிருந்ததால் அவர் வரும் வரை, அங்கிருந்து இல்லத்தை கவனித்து வருபவருடன் பேசிக்கொண்டிருந்தோம். அவரும் எங்களுடன் பேசிக் கொண்டே மதிய உணவை சின்ன பாத்திரங்களில் மாற்றினார்.


நான் முதலில் அந்த இல்லம் யாரோ ஒருவருடைய சொந்த வீட்டில் இருக்கிறது என்று நினைத்திருந்தேன். பிறகு தான் தெரிந்தது, அவர்கள் வாடகை கொடுப்பது. மொத்தம் 24 முதியோர்கள் இருந்தார்கள். அவர்களில் பத்து பேர் வயதான ஆண்கள். மீதம் பெண்கள். அதில் இரு பெண்கள் மட்டும் மற்ற மொழி பேசுபவர்கள். அவர்களைத் தவிர அனைவருமே சௌராஷ்டிரா பேசுபவர்கள். ஒவ்வொருவரும் மாதம் ரூபாய் 2500 கொடுக்கிறார்கள். அங்கிருக்கும் சிறிய அறையில் தங்குபவர்களுக்கு மாதம் 3000 என்று சொன்னதாக ஞாபகம். இரண்டு அறைகளில் ஒரு வயதான பெண்மணியும், ஒரு வயதானவரும் இருந்தார்கள். நிறைய காத்தாடிகளும், விளக்குகளும் இருந்தது. ஆனால், கரண்ட் தான் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது. ஹாலின் ஒரு மூலையில் பாத்ரூம், டாய்லெட் இருந்தது.

நாங்கள் போன மதிய நேரம் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வயதான ஆண்கள் முகச் சவரம் செய்யாத முகங்களுடனும் ஒரு விட்டேத்தியான பார்வைகளுடனும்- பலரும் ஒல்லியாகவே இருந்தார்கள். பெண்களில் நடுத்தர வயது, கொஞ்சம் வயதானவர்கள், நன்கு வயதானவர்கள் என்று இருந்தார்கள். ஒரு சிலருக்கு முதுமையின் காரணமாக கண்பார்வை, காது கேளாமை குறைபாடு என்றிருந்ததை பார்க்க முடிந்தது. ஒரு சிலர் கூட்டமாக நாங்கள் வந்ததை பார்த்து, எழுந்து உட்கார்ந்து பேசினார்கள்.
அங்கிருந்த அநேகமானவர்கள் முகத்தில்/கண்களில் ஒரு வெறுமை இருந்தது. சிலர் சாந்த முகத்துடன், சிலர் சிரித்த முகத்துடன், சிலர் எரிச்சல் முகத்துடன்.. வயதான ஆண்கள், வாழ்க்கையில் பற்றே இல்லாமல் ஏதோ உயிருடன் இருக்கிறேன் என்பது போல் இருந்தார்கள். அவரவர் கட்டில்களுக்கடியில் அவர்களுக்கு வேண்டிய தின்பண்டங்கள், மருந்து மாத்திரைகள், துணிமணிகள் வைத்திருக்கிறார்கள். ஆளுக்கொரு ஓலை விசிறி வைத்திருக்கிறார்கள்.


இல்லத்தை கவனிப்பவருடன் பேசும் பொழுது அவர், சில பாட்டிகள் அநியாயத்திற்கு சண்டை போடுவார்கள். அதனால் தான் அவர்களை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் வீட்டில் வைத்து சமாளிக்க முடியாது. நானும் அடிக்கொருதரம் சத்தம் போட வேண்டியிருக்கிறது என்று சொல்லும் போது ஏனோ கொஞ்சம் நெருடலாக இருந்தது. சில பெண்கள் சமையலுக்கு உதவுவார்கள் என்று சொன்னார்.

சிலருடன் பேசும் பொழுது அவர்கள் கண்களில் சொல்ல முடியாத ஏக்கம்/துக்கம்/வருத்தம். சிலர் அமைதியாக இது தான் விதி என்று ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை ஒருவர் சத்தமாக பேசிக்கொண்டு கலகலப்பாக்கி கொண்டிருந்தார்! ஒரு பாட்டி, தன் மகன் போன பிறகு மருமகள் வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி மருமகன் தன்னை அங்கு சேர்த்து விட்டதாகவும், அடிக்கடி பேத்திகளும், மருமகனும் வந்து பார்த்து விட்டு போவார்கள் என்று வருத்தத்துடன் சொன்னார். அவர் என் மாமியார் வழியில் தூரத்து சொந்தம் கூட. அவரை அங்கு பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக கூட இருந்தது! நிறைய பழைய விஷயங்களை பேசினார். என் கணவர், அவர் வீட்டு ஆட்களை பற்றி அக்கறையோடு கேட்டுக் கொண்டார். கணவனை இழந்த படித்த பெண்மணி ஒருவர் ஒரு அறையில் தங்கியிருந்தார். சிரித்த முகத்துடன் அன்பாக பேசினார். என் மகளிடம் அவள் படிப்பு பற்றிய விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய கணவருடன், மகளுடன் சேர்ந்து எடுத்திருந்த படங்களை காட்டினார். நல்ல வசதியாக வாழ்ந்திருக்கிறார்! இன்னொரு அறையில் நன்கு படித்த, ஜாதகம் பார்க்கிறவர் இருந்தார். இப்போது பார்க்கிறாரா என்று தெரியவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார் போல.

இதற்குள் சாப்பிடும் நேரமாகி விட்டதால் அனைவருக்கும் வாழை இலை போட்டு பரிமாறினோம். நன்றாக விரும்பி  சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டு முடித்த இலைகளை எடுத்து விட்டு நாங்களும் அங்கு வேலை பார்ப்பவர்களுடன் சாப்பிட்டு முடித்தோம். அங்கிருப்பவர் டீ போட்டுத் தருகிறேன், இன்னும் கொஞ்ச நேரம் இவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள் என்று சொல்ல, நாங்கள் விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தோம். உடம்புக்கு ஏதாவது என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் குடும்பத்திற்கு சொல்லி விடுவோம். அவர்கள் வந்து அழைத்துப் போவார்கள் என்று சொன்னார்கள். நல்லது கெட்டதிற்கும் போய் வருகிறார்கள். சிலர் காலை சாப்பாடு முடித்த பிறகு வெளியில் காலாற நடக்க போவார்களாம். மதியம் சிறிது நேரம் சீரியல்கள் பார்க்கிறார்கள். மாலை வேளையில் அருகிலிருக்கும் கோவிலுக்கு சிலர் போகிறார்கள். அவர்களுக்கு பொழுது போவது தான் கொடுமையான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தால் என்ன வாழ்க்கை!

நாங்கள் அங்கு இருக்கும் பொழுதே ஒரு சௌராஷ்டிரா மற்றும் தமிழ் பேசுபவர் வந்து அவர்கள் குழந்தைகள் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு உணவு கொண்டு வரலாமா என்று கேட்டு கொண்டிருந்தார்கள்.

அங்கு இருப்பவர்களுடன் என் அம்மா, பெரியம்மா, தம்பி, பெரியம்மா மகள், அத்தை, என் மகள், தம்பி மனைவி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது சுடச்சுட டீயும் வர குடித்து முடித்து விட்டு எல்லோருக்கும் செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து விட்டு வரும் பொழுது 'கொடிது கொடிது முதுமை கொடிது, அதை விட முதியோர் இல்லத்தில் இருக்கும் நிலைமை இன்னும் கொடிது' என்று தோன்றியது.

ஒவ்வொருவரும் பல சூழ்நிலைகளின் காரணமாக அங்கே வந்திருக்கலாம். சிலருக்கு அருகில் இருந்து பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாததால், சிலர் அவர்களுடைய காலத்தில் செய்த தவறுக்கு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கலாம். கொடுமை என்னவென்றால், பலரின் குழந்தைகள் அந்த இல்லத்தின் அருகிலேயே இருந்து கொண்டு அம்மா/அப்பாவை இங்கு விட்டு வைத்திருப்பது தான். ஒருவேளை தன்னுடன் இருந்து கஷ்டப்படுவதை பார்க்க சகிக்காமல் தான் இங்கே கொண்டு வந்து விட்டுப் போனார்களோ என்னவோ!

இன்று நினைத்தாலும் அந்த கண்களில் இருந்த வெறுமை, முகத்தில் தெரிந்த ஏக்கம்/விரக்தி ...மனம் கனக்கிறது! மனிதம் மெதுவாக செத்துக் கொண்டிருக்கிறது.


மனிதன் மாறி விட்டான்....



Friday, November 16, 2012

ஐயப்பன் பூஜை


கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து, விரதமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து...

என்று காலை வேளைகளில் காபி கடைகளிலும், வீடுகளிலும் வீரமணி/ஜேசுதாசின் குரல்களில் ஐயப்ப பக்திபாடல்கள் ஒலிக்கும் நாட்கள் இது. பலரும் மாலையணிந்து, விரதம் ஆரம்பிப்பார்கள். வீடுகளிலும் பூஜை, புனஸ்காரம் என்று ஐயப்ப மந்திரம் ஒலிக்கும். பக்தர்களும் துளசி மாலை,காவி, கருப்பு வேட்டி அணிந்து, செருப்பு போடாமல் செல்வதைப் பார்க்கலாம். பலரும் முறையாக 48 நாட்கள்( ஒரு மண்டலம்) விரதமிருந்து குருசாமியின் அருளுடன் இருமுடி எடுத்துக் கொண்டு ஐயப்ப கோவிலுக்கு குழுக்களாக பஸ்ஸில் செல்வார்கள். பல இடங்களிலும் எப்படி சாமி இருக்கிறீங்க, சாமி சரணம் என்று ஒருவருக்கொருவர் பார்த்து வணங்குவதையும் இந்த மாதத்தில் பார்க்கலாம்.

என் பெரியப்பா இருபது வருடங்களுக்கும் மேலாக தவறாமல் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வந்தார். அவருடைய குருசாமியின் காலம் முடிந்தவுடன் இவர் பொறுப்பேற்றார். இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடக்கும் அன்று பந்தடி ஏழாவது தெருவில் இருந்த அவர் வீட்டில் பஜனை, பூஜை, பக்தர்களுக்கு சாப்பாடு என்று களை கட்டும். நாங்களும் தவறாமல் போய் விடுவோம். மாலையில் இருட்டிய பிறகு தான் பூஜை ஆரம்பிக்கும். பெரிய ஐயப்பன் சுவாமி படத்தை மலர்மாலைகளால் அலங்கரித்து, பதினெட்டுப் படிகள் வைத்து, திருவிளக்குகள் இரு புறமும் ஏற்றி பூஜைகள் ஆரம்பிப்பார்கள்.

ஒரு பக்கம் இருமுடிக்கான தேங்காய்கள் குடுமிகள் இல்லாமல், ஒரு கண் மட்டும் துளையிட்டு நெய்க்காக காத்திருக்கும். மிகப் பெரிய பாத்திரங்களில் நெய், தட்டுகளில் பழங்கள், ஜவ்வாது, சந்தனம், குங்குமம், சாம்பிராணி வாசனையுடன் அந்த இடமே பரவசமாக இருக்கும். ஐயப்பன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடனும், குடும்பங்களுடனும் வர ஆரம்பிக்க,

உள்ளே ஒரு பெரிய பாயில் சாதம் ஆற வைத்து, புளிக் கரைசல் கொட்டி, புளியோதரை மணக்க மணக்க தயார் ஆகி கொண்டிருக்கும். வருகிறவர்களை போய் சாப்பிட்டு வாருங்கள் என்று பெரியம்மாவும், அவர் குடும்பமும் சொல்ல, அனைவரும் எழுந்து சென்று புளியோதரை, சுண்டல், தேங்காய் சட்னி, சேமியா கேசரி சாப்பிட்டு விட்டு பூஜை செய்யும் இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொள்வார்கள். மெதுவாக கூட்டம் சேர ஆரம்பிக்கும்.

எல்லா பக்தர்களும் வந்தவுடன், ஸுவாமியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் சரணம் ஐயப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்ற நீண்ட முழக்கத்துடன் இருமுடி பூஜை ஆரம்பிக்கும். மார்கழி மாதம் இளங்குளிருடன் இருக்கும் அந்த மாலைவேளையில், கோவிலுக்குச் செல்பவர்கள் நாற்பத்தியெட்டு நாட்கள் விரதமிருந்து தாடி வளர்த்துக் கொண்டு திருநீறு, சந்தனம், குங்குமம் பூசிக் கொண்டு பக்திப் பழமாக இருப்பார்கள். முதலில் குழந்தைசாமிகளும், பிறகு கன்னிசாமிகளும் (திருமணமாகதவர்கள், முதல் முறை போகிறவர்கள்), என்று வரிசைக் கிரமமாக நெய் நிரப்ப வருவார்கள்.

மறுபக்கம் மைக், தபேலா, ஆர்மோனியம் பெட்டியுடன் பாடுபவர்கள் கூட்டம். அவரும், ஸுவாமியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் என்று சொல்ல, பக்தர்களும், கூட்டமும்,சரணம் ஐயப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று சொல்லி முடிக்க, பள்ளிக்கட்டுச் சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சுவாமியே ஐயப்போ என்று ஆரம்பமாகும் கச்சேரி, அனைவரையும் கட்டுப் போட்டு வைத்திருக்கும். பொதுவாகவே, இந்த பாடல்கள் எல்லாம் எளிய நடையில், பாமரரும் பாடும் வண்ணம் இருப்பதால் பலரும் இந்த பாடலை பாடிக் கொண்டே இருப்பார்கள்.

அந்த பக்கம், குருசாமியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு, மனையில் அமர்ந்து, ஐயப்ப கோஷத்துடன் நெய்யை எடுத்துத் தேங்காய்களில் ஒவ்வொருவராக நிரப்பிக் கொண்டே வர, ஒருவர் துளைகளை மூடி, இருமுடி பையுனுள் வைக்க, அதனுடன் மற்ற பூஜை சாமான்களையும் வைத்துக் கட்டி, நிரப்பியவர் தலையில் வைக்க, அவரும் மூன்று முறை சுவாமியே சரணம் அய்யப்பா சொல்லி குருசாமியிடம் கொடுக்க, என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

அதற்குள், பகவான் சரணம், பகவதி சரணம், தேவன் பாதம், தேவி பாதம், பகவானே, பகவதியே... என்று வீரமணி, மற்றும் ஜேசுதாஸ் பாடிய பிரபலமான பாடல்கள் பாடிக் கொண்டிருப்பார்கள். பாடகர்களும் மாற, மாற கூட்டத்தை உற்சாகப்படுத்தும் வண்ணம் வில்லாளி வீரனே, வீரமணி கண்டனே, யாரைக் காண, சுவாமியைக் காண  என்று எல்லோரும் பாடும் வண்ணம் பாட, நேரம் போவது தெரியாமல், பூஜையின் கடைசி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் போது மணி இரவு பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருக்கும்.

நடுநடுவில் ஆண்கள் கூட்டம் மெதுவாக தவிட்டுச் சந்தை காபி கடைக்குப் போய் சூடாக காபியும் குடித்து விட்டு வர, குருநாதரும் இருமுடி கட்டி விட்டு, கடைசி நிமிட ஆரத்தி பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருப்பார்.

பாட்டு கச்சேரியும் முடிந்து விட்ட நிலையில், பதினெட்டு படிகளிலும் தீபங்கள் ஏற்றி, மற்ற அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, எண்ணை விளக்கொளியில் எரியும் தீபங்கள் மட்டும் ஒளிர, ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா, சுவாமி பொன் ஐயப்பா, என் ஐயனே பொன் ஐயப்பா என்று மொத்த கூட்டமும் பாடிக் கொண்டே வர, பெரியப்பாவும் ஒவ்வொரு படிகளின் தீபங்களையும் ஏற்றிக் கொண்டே வர, பதினெட்டாம் படி வந்தவுடன் பாடலின் வேகமும் அதிகரித்து, அந்த இடமே கற்பூர வாசனையுடன் பக்தி மணம் கொண்டு கமழும்.

அதற்குள் பஸ்சும் வாசலில் வந்து விட, ஆரத்தி எடுத்து முடித்தவுடன், பெரியப்பா அவரவர் இருமுடி எடுத்து பக்தர்கள் தலையில் வைக்க, அவர்களும் அவரிடம் ஆசி வாங்கி குடும்பத்தினரிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு,உறவினர்கள் போட்ட மாலைகளுடன் பஸ்ஸில் ஏற, தேங்காய் உடைத்த பிறகு, அனைவரையும் ஏற்றிக் கொண்டு பஸ்சும் புறப்பட, நாங்களும் பெரியம்மவிடமும், அக்காக்களிடமும் விடை பெற்றுக் கொண்டு நல்ல பூஜையை பார்த்த திருப்தியில் வீடு போய் சேர்வோம். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பிறகு, நெய் பிரசாதம் வீடு வந்து சேரும். கமகமக்கும் பிரசாத நெய் கையில் வைத்து சப்புக் கொண்டு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

நான்கு வருடங்களுக்கு  முன்பு, என் கணவர் மாலையிட்டு, கனடாவில் இருக்கும் scarborogh நகரத்திலிருக்கும் ஐயப்பன் கோவிலிலிருந்து இருமுடி எடுத்துக் கொண்டு, டிசம்பர் மாத குளிரில் செருப்பு போடாமல், மேல் சட்டை அணியாமல், ஐநூறு பக்தர்களுடன், பெரும்பாலும் ஸ்ரீலங்கா தமிழ் மக்கள், போன பொழுது, அந்த பஜனை, பூஜைகள், கற்பூர வாசனை என்று மதுரையை நினைவுப்படுத்தியது. அதற்கு அடுத்த வருடங்களில், பனிப் பொழிவின் காரணமாக, லோக்கலில் இருக்கும் கோவிலிலேயே பூஜையை செய்து விடுகிறோம். இங்கும் மலையாளிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் பூஜை செய்கிறார்கள். கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ஐயப்பன் கோவிலுக்குப் போக இந்தியா வருகிறவர்களும் இருக்கிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலும் வாஷிங்டன் DC யில் உள்ள ஐயப்ப கோவிலுக்கு போகிறார்கள்.

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால், ஐயனை நீ காணலாம், சபரி ஐயனை நீ காணலாம்  ... ,

ஹரிஹராசனம் விஷ்வமோகனம், ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்....

என்று ஜேசுதாஸ் உருகி உருகிப் பாடும் பாடல்கள் இன்னும் காதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Monday, September 17, 2012

புரட்டாசி மாதம்

இன்று தமிழ் மாதம் புரட்டாசி தொடங்குகிறது. பல சௌராஷ்டிரா மக்களுக்கு மிகவும் புரதான மாதம் இது. பெருமாள் குடும்ப கடவுளாக இருக்கும் பட்சத்தில், புண்ணிய மாதமும் கூட. அந்த குடும்பங்கள் எல்லாம் இந்த ஒரு மாத காலத்திற்கு எந்த ஒரு அசைவ உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ளாமல்(மிகவும் கஷ்டமான ஒன்று!) , சைவ உணவு சாப்பிட்டு சனிக்கிழமைகளில் அல்லது ஒரு சனிக்கிழமையாவது பெருமாள் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அதிகாலையில் பல வீடுகளிலும் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசர்தூல கர்த்தவ்யம் தெய்வமானிக்ஹம்
என்று திருமதி. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரலுடன் அன்றைய பொழுது புலர ஆரம்பிக்கும். எங்கள் வீட்டிலும் புரட்டாசி மாதம் விரதம் இருப்போம்.

சனிக்கிழமைகளில், வீடு முழுவதும் பத்தி, சாம்பிராணி, சூடம், துளசி, பூக்கள் மணம் கமழ ஒரே பக்தி மயமாக இருக்கும். வாசலில் செம்மண் கோலமிட்டு ஸ்பெஷல் நாள் என்று தெருவில் இருப்பவர்களை உணர்த்தும். இந்த மாதத்தில் ஏதாவதொரு சனிக்கிழமையில், என் தம்பிகளும், அப்பாவும் காலையில் எழுந்து, தலைக்கு குளித்து விட்டு, வேட்டி கட்டிக்கொண்டு , நெற்றியில் பளிச்சென நாமம் போட்டுக் கொண்டு, நன்கு துலக்கிய நாமம் போட்ட மூன்று பித்தளை சொம்புகளில் துளசி மாலை சூடி, வீட்டில் பூஜை செய்து விட்டு, கோவிந்தலக்ஷம் கோவிந்தா, வெங்கட்ரமணா கோவிந்தா என்று மூன்று முறை உரக்கச் சொல்ல, அம்மாவும் மூன்று முறை அரிசி எடுத்து கோவிந்தா கோவிந்தா, கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே சொம்புகளில் அரிசி போடுவார். நாங்களும் ஒரு கைப்பிடி அரிசி போடுவோம். அவர்களும் தெருவில் இருக்கும் வீடுகளின் முன் சென்று கோவிந்தலக்ஷம் கோவிந்தா, வெங்கட்ரமணா கோவிந்தா என்று சொல்ல, அவர்களும் கைப்பிடி அரிசி போடுவார்கள். வீடுகளில் குழந்தைகள் இருந்தால், அவர்களை மதியம் எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்து விட்டு வருவார்கள். சொம்பு நிறைய அரிசியுடன் வீட்டுக்கு வர, அந்த அரிசியுடன் வீட்டு அரிசியும் சேர்த்து, சுவையான சமையல் செய்து சுவாமிக்குப் படைத்து விட்டு, குழந்தைகள் எல்லோரையும் அமர வைத்து, இலையில் சாதம், கீரைப் பொரியல், காய்கறிகளுடன் சூப்பரான சாதமும், குழம்பும், ரசமும், தயிரும், பாயசமும் என்று சாப்பிட்டு முடிக்க, எல்லோர் இலையிலும் காசும், வெத்திலைப் பொட்டி, பூவும் வைத்து விருந்து சுபமாக முடியும். சாப்பிடுவதற்கு முன், இலையில் பரிமாறிய பிறகு, எல்லோரும் கோரசாக கோவிந்தா கோவிந்தா என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு தான், சாப்பிட விடுவார்கள் :)

எனக்குப் பிடித்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மதியம் ஒரு வீட்டில் நன்றாக சாப்பிட்டு விட்டு அவர்கள் கொடுக்கும் காசையும் எடுத்துக் கொண்டு, பல வீடுகளுக்கும் சென்று வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு!!!! காசை எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். சில வீடுகளில், எங்களைப் பார்த்தவுடனே, சாப்பிட்டு முடித்து விட்டீர்களா? என்று கேட்டு விட்டு, காசு கொடுத்து அனுப்பி விடுவார்கள். ஹையா, இன்று எனக்கு ஒன்னாரூவா கிடைச்சிருச்சு , ஒன்னரைரூவா கிடைச்சிருச்சு என்று வயிறும், மனமும் துள்ள யார் எவ்வளவு கலெக்க்ஷன் செய்திருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டே வருவோம். எந்தெந்த வீடுகளில் நல்ல சாப்பாடு, யார் நிறைய காசு கொடுக்கிறார்களோ அவர்கள் வீட்டில் குழந்தைகள் கூட்டம் நிறைய இருக்கும். எல்லா வீடுகளிலும் அருமையாக,சுவையாக சமைத்திருப்பார்கள். சில வீடுகளில் சிம்பிளாக வெண்பொங்கல், சாம்பார், ரவா கேசரி, சில வீடுகளில் தக்காளிப் பொங்கல், ஸ்வீட், சில வீடுகளில் சாதம், காய்கறிகள், பாயசம் என்று விதவிதமாக இருக்கும். நினைத்தாலே இனிக்கிறது அந்த பருவம்:)   கிருஷ்ணாபுரத்தில் ஆரமபித்து கான்பாளையம் வரை சாப்பிட்டு, காசு பார்த்ததுண்டு! புரட்டாசி மாத சனிக்கிழமைகள், குழந்தைகளுக்கு மகிழ்ச்சிகரமான நாட்கள். காலையிலிருந்தே கோவிந்தா கோஷம் தெருக்களில் கேட்க ஆரம்பிக்கும். ஒரு சனிக்கிழமை பாட்டி வீட்டு கோவிந்தா, ஒரு சனிக்கிழமை பெரியம்மா வீட்டு கோவிந்தா என்று பிஸியான சனிக்கிழமைகளாக போகும் புரட்டாசி மாதம்!

இப்பொழுதும் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. நண்பர்களின் குடும்பங்கள், பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்று உற்சாகமான விருந்து நாள். அமெரிக்கா, கனடாவிலும் கூட சௌராஷ்டிரா நண்பர்கள் மறக்காமல் கடைப்பிடிக்கிறார்கள். என்ன, மதிய விருந்துக்கு போகும் பொழுது நாம் அரிசி எடுத்துக் கொண்டு போய் விட வேண்டும். அங்கு அவர்கள் பூஜை அறையில் வைத்து கோவிந்தலக்ஷம் கோவிந்தா, வெங்கட்ரமணா கோவிந்தா என்று அரிசி கேட்க, நாங்களும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே அரிசி போட, அதை வைத்து அவர்கள் சுவையான சக்கரைப் பொங்கல் பண்ண என்று விருந்துடன் சுபமாக முடியும் அன்றைய தினம்  :)


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...........


Monday, July 2, 2012

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்


என் மாமாவிடமிருந்து பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு முடிந்த அளவு நன்கொடைகளைத் தருமாறும், நண்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியும் வந்த கடிதத்தைப் பார்த்தவுடன் இக்கோவிலைப் பற்றிய என் நினைவுகள்.

தெற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயரும் இந்தக் கோவிலுக்கு உண்டு.

என் பாட்டி வீடு தென்னோலைக்காரத் தெருவில் இருந்த காலங்களில் இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சௌராஷ்ட்ரா மத்திய சபையின் கீழ் இந்த கோவில் வருவதால் விசேஷங்களுக்கும் குறைவில்லை. கோவில் நுழைவாயிலின் இடதுபுறம் கருப்பசாமி வீச்சரிவாளுடன் மஞ்சள்/சந்தனம் பூசியபடி காட்சி தருகிறார். நான் கருப்பண்ணச்சாமி ஒரு கிராமத்துக் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். திருமணமான பிறகு என் கணவர் ஒப்லா குடும்பக் கடவுள் என்ற விஷயம் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பொதுவாக, பெருமாள் அல்லது முருகக் கடவுள் தான் பெரும்பாலான சௌராஷ்ட்ரா குடும்பங்களுக்கு குடும்பக் கடவுளாக கேள்விப்பட்டிருக்கிறேன்! 

கோவில் வாசல் என்றால் பூக்கடைகாரர், செருப்பு பார்த்துக் கொள்பவர், மிட்டாய் விற்பவர்கள் இருக்க வேண்டும் என்பது எழுதாத சட்டம். இங்கும் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி உள்ளே சென்றால்  வைஷ்ணவ விநாயகரைத் தரிசித்தப் பிறகு ஆஜானுபாகான ஆஞ்சநேயர். மக்கள் எண்ணெய் விளக்கு ஏற்றி ஏற்றி அந்த இடம் முழுவதும் ஒரே எண்ணெய் பிசுக்கு. சில நேரங்களில், துளசி மாலையுடனும், பக்தர்களின் ராமஜெயம் மாலையுடனும், பல நேரங்களில் வடை மாலையுடனும் 😃 அழகாக காட்சி அளித்துக் கொண்டிருப்பார். அவரைத் தாண்டி படியேறி மேலே போனால் அழகான லட்டு கோபால்!

அவரைத் தொடர்ந்து மூலவர் பெருமாளின் அழகான திவ்ய தரிசனம். பெருமாளை விதவிதமாக அலங்காரம் செய்து பக்தர்களை பரவசமூட்டுவது இங்குள்ள அர்ச்சகர்களின் சிறப்பு. காலை, மாலை, இரவு நேர பூஜைகளை சிறு வயதில் பாட்டி, பெரியம்மா, பெரியம்மா மகளுடன் கண்டு களித்திருக்கிறேன். அம்மனும் மங்களகரமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அந்தக்  கோவிலில் சிறு வயதில் நான் ரசித்தது, அங்கிருக்கும் பெரிய பெரியவண்ண கண்ணாடி குடுவை விளக்குகள் தான். பார்ப்பதற்கு மிகவும்அழகாக இருக்கும். இப்போது அவை எல்லாம் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. கோவில் சுவரில் வரைந்திருக்கும் ஓவியங்களும் அழகு.

பெருமாள் கோவிலுக்கே உரித்த துளசி, பச்சைக் கற்பூரம் வாசனையுடன் தீர்த்தம் திவ்யமாக இருக்கும். அப்படியே கீழிறங்கினால் சுவாமி புறப்பாட்டிற்க்கான அனைத்து வாகனங்களும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். அங்கு தான் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு காட்சி தரும் பரமபத வாசல். அதன் பிறகு நவக்கிரகங்களை வழிப்பட்டு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு அங்கிருக்கும் பெரிய நாமம் போட்ட உண்டியலில் காணிக்கையைப் போட்டு திருப்தியுடன் வெளியே வந்து மிட்டாய் வாங்கி சாப்பிட்டு விட்டு கோவிலைச் சேர்ந்த இடத்தில் கோவிலுக்கான யானை இருக்கும் இடத்திற்கு சென்று யானையைச் சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு வர என்று நன்கு பொழுது போகும்.

இந்தக் கோவிலில் பங்குனித் திருவிழா, கோலாட்டம் எல்லாம் மிகவும் விமரிசையாக நடக்கும். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோலாட்ட நிகழ்ச்சியில் அனைத்து இளம் வயது பெண்களும் கோலாட்ட குச்சியுடன் வந்து வளைத்து வளைத்து ஆட கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சின்னக் குழந்தைகள் கோலாட்ட குச்சியின் முனையில் ரோஸ் கலர் ஜவ்வு மிட்டாயை வைத்துக் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

பங்குனி திருவிழாவின் போதும் 'ஜேஜே' என்ற திருவிழா கூட்டத்துடன் சுவாமி ஊர்வலம் கோலாகலமாக நடக்கும். சௌராஷ்டிரா மக்களின் ஆஸ்தான கோவில்களுள் இதுவும் ஒன்று. இன்றும் பலர் தங்கள் பெற்றோர்களின் திதியன்று சுவாமி புறப்பாடு, சிறப்பு பூஜைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பிரசாதமும் சூப்பராக இருக்கும் 😊



கண்ணுக்குத் தெரியாத AI முத்திரை: நம்பகத்தன்மைக்கான தீர்வா, புதிய பிரச்சினையா?

கண்ணுக்குத் தெரியாத AI முத்திரை: நம்பகத்தன்மைக்கான தீர்வா, புதிய பிரச்சினையா? – சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026 “உள்ளங்கையில் உலகம். நுனிவி...