Thursday, October 10, 2019

World Mental Health Day 2019


ஐந்தில் ஒரு நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலரும் அதற்கான மருத்துவத்தையோ ஆலோசனைகளையோ முறையாக பெறுவதில்லை என்றும் அதனைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10 அன்று உலக மனநல விழிப்புணர்வு தினமாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்நாளில் மக்களிடையே கருத்தரங்குகளும் மருத்துவர்களின் ஆலோசனைகளும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகளும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கம் பல நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் செய்து வருகிறது.

இன்று பலரும் மன அமைதியின்றி சோகங்களையும் துக்கங்களையும் யாருக்கும் தெரியாதவாறு சுமந்து கொண்டு விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்ற அச்சமும், சமூகத்தின் நிராகரிப்பும், கிண்டல் கேலிகளை நினைத்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத சோகங்கள் மன அழுத்தத்தில் வந்து முடிகிறது. குழந்தைகளின் படிப்பு, கணவரின் வருமானம், உடல்நலம், குடும்பப்பிரச்னைகள், வேலையிடத்து நிர்பந்தங்கள், ஏற்றத்தாழ்வுகள், சமூகவலைத்தளத்தின் கணிசமான பங்குகள், தன்னைத் தவிர மற்றவர் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்ற தாழ்வுமனப்பான்மையில் தொடங்கும் மன அழுத்தம் நிம்மதியற்ற குடும்பத்தை உருவாக்குகிறது. இதில் அந்த குடும்பமே பாதிக்கப்பட்டாலும் அதற்கான தீர்வை நோக்கி யாரும் செல்வதில்லை. மேலும் மேலும் பிரச்னைகளை வளர்த்து ஏதோ பிறந்து விட்டோம் வாழ்கிறோம் என்ற ரீதியில் தான் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தீவிர மனஅழுத்தம் தற்கொலைக்கும் வித்திடுகிறது. இந்நாளில் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிவருவது பற்றின விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்கொலையால் பாதிக்கப்படப்போவது அவரின் நெருங்கிய குடும்பம் தான். அதிலிருந்து மீள அவர்கள் போராடுவதைப் பார்ப்பதற்கு தான் அவர்கள் இருப்பதில்லை. எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்று நம்புபவர்களும் அத்தீர்வினை நோக்கிச் சிந்திப்பவர்களும் தான் மன வியாதியிலிருந்து வெளிவருகிறார்கள்.

அமெரிக்கா வந்த பிறகு தான் வெளிபப்டையாக பாதிக்கப்பட்டவர்களையும் அதற்கான தீர்வுகளையும் அறிந்து கொண்டேன். இந்தியாவில் நான் இருந்தவரையில் மனநல மருத்துவரிடம் செல்வதை தவிர்த்தவர்களே அதிகம். இன்று அதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. உடல்நலத்திற்கான மருத்துவ ஆலோசனை போலவே மனநலத்திற்கான ஆலோசனைகளும், மருத்துவமும், மருந்துகளும். புரிந்து கொண்டால் யாவருக்கும் நலம்.

மன அழுத்ததிலிருந்து வெளிவர தடையாக இருப்பது பாதிக்கப்பட்ட நபர் வெளிப்படையாக பேசாததும் புரிந்து கொள்ளாத சுற்றமுமே! தன்னுடைய மனஅமைதியையும் குலைத்து தான் செய்வது தவறு தன்னைச் சுற்றி இருப்பவர்கள் காயப்படுகிறார்கள் என்று தெரிந்தும் மென்மேலும் வார்த்தைகளாலும் செயல்களாலும் சாடுபவர்களைத் தக்க மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று அந்நோயிலிருந்து மீள வழி செய்ய வேண்டும்.

இன்று பலருக்கும் மன அழுத்தம் பல்வேறு காரணங்களால் அதிகரித்து இருக்கிறது. கணவரால் 46% பெண்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் , 75% குடும்ப பொறுப்புகளைப் பெண்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் இதைத்தவிர பணிச்சுமை , நண்பர்களின் போர்வையில் வருபவர்கள் தரும் துன்பங்கள் தங்களைத் துயரப்படுத்துகிறதென ஆய்வில் கூறியிருப்பதாக வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். முடிவில், மனச்சோர்வுடன் இருப்பது குற்றமல்ல. அக்குறையை போக்கிக் கொள்ள தகுந்த மருத்துவ ஆலோசனையும்,மருந்துகளும், உடனிருப்பவர்களின் அன்பும், கரிசனமும் இருந்தால் போதும். தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளோரையும் மிகவும் பாதிக்கும். மனவருத்தத்துடன் இருப்பவர்களுக்காக பல ஹெல்ப்லைன்களை அணுகி ஆலோசிக்கவும் என்று கூறி பேச்சை முடித்தார்கள்.

வீட்டில் போதிய ஆதரவும் புரிந்து கொள்ளலும் கிடைக்காத பள்ளிகளில் தடுமாறும் குழந்தைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பள்ளிகளும் பெற்றோர்களும் அதிக கவனம் எடுத்து வழிநடத்திச் செல்ல வேண்டிய பருவம் இது. இங்கு பள்ளிகளில் கூட தகுந்த மன ஆலோசகர்கள் மாணவர்களை கண்காணித்து வழிநடத்துகிறார்கள். இருந்தும் பல வேதனை மிகுந்த சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. பள்ளியிலிருந்து ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்குத் தியானம், யோகா போன்றவற்றை அறிமுகப்படுத்தி மனதை ஒருமைப்படுத்தும் வழிகளைப் பள்ளிகளில் ஆரம்பிக்க வேண்டும். சில பள்ளிகளில் வெற்றிகரமாக செய்தும் விட்டார்கள் என்று கூறினார்.

இன்றைய அவசர உலகில் நமக்கான நேரத்தை ஒதுக்கி நம்மை பல வழிகளில் மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மனம் வாடி வருந்தி இருப்போருக்குத் தேவை ஆறுதலும், மனம் விட்டுப்பேச மனிதர்களும், நல்வழிகாட்டுதலும் தான். நமக்குள் இருக்கும் மனநோயை கண்டறிவோம். துன்புறும் நம் நண்பர்களுக்குத் தோள் கொடுத்து உதவுவோம்.

செவி சாய்த்து ஆறுதல் அளிக்கும் மனிதர்களாவோம்.

#worldmentalhealthday

Tuesday, October 8, 2019

இலையுதிர்கால பயணம் - லேக் ஜார்ஜ்


அதிகாலைப்பயணங்கள் ஆனந்தமானவை. அதிலும் குளிர் சேர்ந்து கொண்டால் நடுக்கத்துடன் பயணிப்பதும் சுகம். வார இறுதியில் குழந்தைகள் இல்லாமல் இலையுதிர்கால அழகைக் காண ஆரம்பித்த முதல் பயணம். அவர்கள் இருந்திருந்தால் சொன்ன நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டிருப்போம். அவர்களுக்கு வேண்டியததை மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டேனா, மருந்துகள், வழியில் கொறிக்க தின்பண்டங்கள் என்று பார்த்து பார்த்து யோசித்துப் புறப்பட வேண்டிய அவசியமில்லாத பயணம். வெயில், மழை, குளிர் என்று அனைத்துக்கும் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு குறித்த நேரத்தில் கிளம்ப முடிந்தது.


விடியாத விடியலில் லேக் ஜார்ஜ் நோக்கிப் பயணம். கிழக்கில் வான் வசீகரன் செந்நிறக்கதிர்களுடன் வலம் வர, விண்ணில் ஒரு மாயாஜாலமாய் மூடு பனி. வழியெங்கும் நீர்நிலைகளில் குளிர் பனியின் கைங்கரியம். புற்களில் வெண்ணிறத்தில் பனி படர்ந்திருக்க உறைநிலைக்கும் கீழே வெப்பம் சென்று கொண்டிருந்ததை வண்டியில் இருந்து இறங்கியவுடன் உடலைத் தழுவிய குளிர் ஜில்லென்று உரைத்தது.



ஓரிருவர் நடந்து கொண்டிருக்க, அமைதியான ஏரியை அதுவும் காலைப்பனியுடன் வலம் வரும் ஏரியைக் காண அழகோ அழகு. அந்த ஜில்ல்ல்ல்ல்ல் ஏரியில் ஒருவர் மெதுவாக உள்ளிறங்கி மீன் பிடிக்க ஆரம்பித்தார். பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குத் தான் குளிர ஆரம்பித்தது. பனிக்காற்றும் வீச, நிற்க முடியாமல் வண்டிக்குள் தஞ்சமடைந்தோம்.

புத்தம் புது காலை
பனிபொழியும் வேளை
என் வானிலே ...


Thursday, October 3, 2019

Growing Up Wild



அலாஸ்காவில் ஆரம்பித்து ஆப்பிரிக்கா ஸ்ரீலங்காவில் பயணிக்கும் அழகிய ஆவணப்படம் Growing Up Wild. கண்கவர் இயற்கைச்சூழலில் ஐந்து விலங்குகள்  தங்கள் குட்டிகளை வளர்க்கப் போராடும் கணங்களில் எதிர்கொள்ளும் அபாயங்களை  அருமையாக எடுத்துளார்கள்.

பனிசூழ் குகையிலிருந்து நீண்ட உறக்கம் கலைந்து தாய்க்கரடி பல மைல்கள் தன் குட்டிகளுடன் அலைந்து பசியுடன் உணவுக்காகப் போராடுவதையும், மற்ற கரடிகளிடமிருந்து குட்டிகளைக் காப்பாற்றுவதையும், உணவு தேடும் வித்தையை குட்டிக்கரடிகள் கற்றுக் கொள்வதையும் அலாஸ்காவில் அழகாகப் படம் பிடித்துள்ளார்கள்.

ஆப்பிரிக்காவில் தன் சிங்கக்குட்டிகளுடன் தாய் சிங்கம் வேட்டையாடி உணவளித்து அவர்களைப் பாதுகாக்கப் போராடுவதும் சோம்பேறி ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்கள் வேட்டையாடியதை உண்டு களித்து, வளரும் இளம் ஆண் சிங்கங்களைத் தங்கள் எல்லையிலிருந்து விரட்டி அடிப்பதும், அவர்களும் கூட்டாக அலைந்து பருவம் வந்தவுடன் மீண்டும் திரும்பி வருவதும் காடுகளின் ராஜா, ராணி வாழ்க்கையை அற்புதமாகக் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

தன் மூன்று குட்டிகளைக் குழுவாக வேட்டையாட வரும் கழுதைப்புலி (hyena)களிடமிருந்து பாதுகாக்க தாய் சிறுத்தை பதறுவதும் கண்முன்னே குட்டிகளை இழப்பதும், எதிரி விலங்குகளிடமிருந்து குட்டிகளைப் பதுக்கி வைப்பதும், உணவுக்காக அலைவதும் சிறுத்தையின் ஓட்டம் போலவே மனமும் பதைபதைத்துப் போய் விடுகிறது.

மனித குழந்தைகள் போலவே சிம்பன்சி குட்டிகளின் சேட்டைகளும், உணவைத் தேடும் வித்தையையும் எவ்வாறு உண்பதென்பதையும் பெரியவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதும் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது.

ஸ்ரீலங்கா காட்டில் பாழடைந்த கோவில் மண்டபங்களில் வாழும் குரங்கினங்களைப் பற்றிய பகுதியில் மனிதர்களைப் போலவே குரங்கினத்திலும் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற சமூக வரிசை முறை இருக்கிறதென்று ஆவணப்படத்தில் கண்டு கொண்டேன். தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தேடிச் சென்று உண்பதும், குட்டிக் குரங்குகள் தாயிடமிருந்து உணவைத் தேடும் முறையை கற்றுக் கொள்வதும் குடும்பங்களாக காட்டில் அலைவதும் அழகாகப் படமெடுக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குட்டிக் குரங்கு ஒன்று மரத்தில் கூட ஏறாமல் தனியாக உட்கார்ந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்க, மரக்கிளை மேல் அமர்ந்து பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த உயர் இன குரங்குகள் தூக்கியெறிந்த மிச்ச மீதிகளைப் பயத்துடன் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. மழையில் தனியாக நனைந்தபடி அமர்ந்திருக்க அதனுடன் சண்டையிட்டுக் காயப்படுத்தும் மற்ற குரங்குகள் வெறுத்து ஒதுக்கும் பொழுது குரங்கினத்தலைவன் ஆதரவாக அரவணைத்துச் செல்ல அப்பாடா என்றிருந்தது. அந்த தலைவன் குரங்கும் சண்டையில் இறந்து விட, மீண்டும் அனாதையாகிப் பாவப்பட்டு... வேறொரு குரங்கிடம் தஞ்சம் புகும் வரை..

வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது!
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும்!

குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் பங்கு அதிகமாகவும், பொறுப்புள்ளதாகவும் விலங்குகளின் உலகிலும் இருக்க ஹாயாக உலா வரும் ஆணினம் மேல் கோபம் வருவது இயற்கை 😡குழுவாக வாழும் குரங்கு, சிங்கம், சிம்பன்சிகள் குட்டிகளுக்கு ஒன்று என்றால் திரள்வதும், தாயின் அரவணைப்பில் மட்டுமே வாழும் விலங்குகளின் பரிதவிப்பையும் விளக்கும் அருமையான காட்சிகளுடன் காடுகளில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் 'Growing Up Wild'.

நெட்ஃப்ளிக்ஸ்ல் காணக் கிடைக்கிறது.

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...