Friday, September 28, 2012

பயணக் குறிப்புகள் - Prague , Czech Republic


 Library Museum
நாங்கள் பார்த்த மற்றொரு அழகான ஐரோப்பிய நகரம் Prague, Czech Republic. முருகன் வீட்டிலிருந்து இரண்டரை மணிநேரத் தொலைவில் இருந்தது. ஒரு காலை வேளையில் உணவை முடித்துக் கொண்டு, நாங் களும், குழந்தைகளும், முருகனின் GPS உதவியுடன் கிளம்பினோம். வழி முழுவதும் ஆல்பே ஆறும் எங்களுடன் பயணித்துக் கொண்டே வந்தது. Czech Republic எல்லையைத் தொட்டவுடன், கொஞ்சம் அழுக்காக, குப்பையாக ஒரு ஊர். ஜெர்மனிக்கும் அந்த ஊருக்கும் மிகவும் வித்தியாசம் இருந்தது. ஆள் அரவமற்ற பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு, உள்ளே போய் என் கணவர் அவர் கிரெடிட் கார்டு கொடுக்க அது வேலை செய்யவில்லை. அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. அவர்கள் பேசுவது எங்களுக்குப் புரியவில்லை. பெட்ரோல் போட்டாகி விட்டது. நல்ல வேளை, என்னிடம் இருந்த கார்டு வேலை செய்து அங்கிருந்து தப்பித்து வந்தோம். வழி முழுவதும் பலவிதமான தானியங்கள், சூரியகாந்தி பூச்செடிகள், மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார்கள். நல்ல வெயில் கூட. ஒரு வழியாக Prague வந்து சேர்ந்தோம். அங்கு நகர நெரிசலை காண முடிந்தது. அழகுப் பதுமைப் பெண்கள் கண்கவர் உடையில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்!

காரை ஓரிடத்தில் நிறுத்தி, அருகிலிருந்த சப்வே வழியாக கீழிறங்கிப் போனோம். படி முழுவதும் சிறுநீர் நாற்றம். அழுக்குப் படிகள். மூக்கைப் பொத்திக்கொண்டு வந்தால் அழகிய, ரயில், பஸ் ஸ்டேஷன். உள்ளே சிறிய, பெரிய கடைகள். கடைகளை பார்த்தவுடன் தான் நமக்கு பசிக்குமே. உடனே, ஒரு கடையின் உள்ளே நுழைந்து ரொட்டிகள், பழங்கள், சிப்ஸ், சாக்லேட்ஸ் வாங்கி கொண்டோம். பக்கத்திலிருந்த கடையில் காபி வாங்கி குடித்துக் கொண்டே, அங்கிருந்த போலீஸ்காரரிடம் வழியை கேட்டு தெரிந்து கொண்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தோம். இந்த நகரம் Czech Republic இன் தலைநகரம். மிகவும் அழகாக,ஏதோ ஒரு மாயஉலகம் போல இருந்தது. மிகவும் பழமையான, புரதான இடமாக இருந்தது. நாங்கள் சாலையில் நடந்து வரும் பொழுதே, பெரிய பெரிய கல் கட்டிடங்களும், பிரமாண்ட சிலைகளும், நேர்த்தியான கட்டிடங்களும் பார்த்து மலைத்துப் போயிருந்தோம்.
View from the Museum

முதலில், நாங்கள் பார்த்தது நகரின் நடுவில் இருக்கும் பழமையான லைப்ரரி மியூசியம் ஒன்று. இந்த ஊரிலும் போரினால் ஏற்பட்ட பாதிப்புகள்  கட்டிடங்களில் நன்கு தெரிந்தது. பெரிய பெரிய செயற்கை நீரூற்றுகளும், குதிரை மேல் மாவீரன் சிலைகளும், அழகிய பெண்கள் சிலைகளும் என்று நகர் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. மியூசியம் பார்க்கவே ஒரு நாள் ஆகி விடும் அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று முன்பே செல்வி சொல்லி இருந்தார். இந்த மியூசியத்தில் எல்லா நாட்டு கலாச்சார விஷயங்கள் மிகவும் நல்ல முறையில் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லியதால் ஆவலுடன் பார்க்க வந்திருந்தோம். ஆனால், உள்ளே வேலை நடந்து கொண்டிருந்ததால், 2013 வரை அது மூடப்பட்டுள்ளதாக சொன்னதால் ஏமாற்றத்துடன் நகர்வலம் போக ஆரம்பித்தோம். அதற்குள் மக் டொனல்ட்ஸ் கடையை பார்த்து விட்ட என் மகன், பசிக்கிறது என்று கச்சேரியை ஆரம்பித்து விட்டான். இன்னும் ஊருக்குள் போகவே இல்லை, சிறிது நேரம் கழித்து தான் சாப்பிடப்போறோம் என்று சொல்லி நடக்க ஆரம்பித்தோம். அவனும் மூஞ்சியை தொங்கப் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்:(
Indian Restaurant


மியூசியத்தின் வாசலில் இருந்து பார்த்தால், ஒரு அரை மைல் தூரத்திற்கு அகலமான சாலை, அதன் இருபுறங்களிலும், நெருக்கமான கட்டிடங்கள், கடைகள், சாலை நடுவே உணவகங்கள். அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் கூட்டம் என்று பார்ப்பதற்கே உற்சாகமாக இருந்தது. நடுநடுவில் உயரமான சிலைகள். நாங்களும் ஒவ்வொன்றாக பரவசமாக பார்த்துக் கொண்டே போனோம். நடுவில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று காலில் செருப்பில்லாமல், குடுமி வைத்துக் கொண்டு வெள்ளைக்காரகள் கூட்டம் ஒன்று உரத்த குரலில் பாடி ஆடிக் கொண்டே, கிருஷ்ணர் படத்தை வைத்துக் கொண்டு போனார்கள். எங்களைப் பார்த்தவுடன் புன்னகையுடன் பிரசாதம் கொடுத்து விட்டு, நாங்களும் அவர்களுடன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று பாட குஷியாகி போனார்கள். அவர்களை அந்த இடத்தில் பார்த்தது அதிசயமாக இருந்தது.
நடுவில் ஒரு கடையில் நுழைந்து நினைவுப் பொருட்களையும், குழந்தைகளுக்கு சுவெட் ஷர்ட்டும் வாங்கிக் கொண்டோம். நம்மூர் T -நகர் நினைவிற்கு வந்தது! சாலை நடுவே ரயில்வே கம்பார்ட்மெண்டில் ரெஸ்டாரெண்ட் இருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், படங்களை எடுத்துக் கொண்டும் நடந்து போய்க் கொண்டிருந்தோம். என் பையனும் இங்கே சைனீஸ் உணவகம் இருக்கிறது, அங்கே பர்கர் இருக்கிறது என்று அறிவிப்பு செய்து கொண்டே வந்து கொண்டிருந்தான். ஒரு இந்திய உணவகமும் இருந்தது.நடுவில் ஒரு குறுகிய சாலை. கல் ரோடுகள். சின்ன சின்ன கடைகள். நானும் என் பெண்ணும் விடாமல் ஏறி இறங்கி சாமான்கள் வாங்கிக் கொண்டே வந்தோம். மீனாக்ஷி அம்மன் கோவில் பக்கம் இருக்கும் குறுகலான தெருக்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.
Market
வழியில், பழங்கள், இனிப்புகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் சில பழங்களை வாங்கிக் கொண்டு சாப்பிட்டபடியே மீண்டும் பல தெருக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம். Old Town Square என்ற இடத்தில் நல்ல கூட்டம். என்னவென்று பார்த்தால், உயரமான கட்டிடத்தில் கோவில் மணி ஒன்று. இது ஒரு ஸ்பெஷல் மணிக் கூண்டு. இதை astronomical clock tower என்கிறார்கள். மணிக்கொருதரம், சின்ன ஜீசஸ் உருவம் வர, அவரை தொடர்ந்து அவரது சீடர்கள், எலும்புக்கூடு மணியடிக்க இவர்கள் சுற்றி வர , அதற்கு கீழே பன்னிரண்டு ராசிகளுக்கு என்று ஒரு கடிகாரம் என்று சுற்ற, முடியும் பொழுது ஒருவர் மேலிருந்த படியே, வாத்தியம் வாசிக்க என்று ஒட்டு மொத்தக் கூட்டமே அண்ணாந்து பார்த்து களிப்புறும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருக்கிறது. முடிந்தவுடன் அனைவரும் கைத்தட்ட, கூட்டம் கலைகிறது.
Old Town Square

அந்த இடம் முழுவதும் உணவகங்களால் நிரம்பி வழிகிறது. பெரிய கோப்பைகளில் மதுவுடன், கூட்டம் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மருந்துக்கு கூட மசாலா வாசனை இல்லை:( அங்கே அழகிய ஒரு தேவாலயம். உள்ளே போய் சுற்றிப் பார்த்து விட்டு, சிறிது நேரம் அவர்கள் பியானோவில் வாசித்த இசையை கேட்டு விட்டு வெளியே வந்தோம். அதற்குள் பொறுமை இழந்த என்மகனும், சாப்பாடு இல்லையென்றால் எங்கும் வர மாட்டேன் என்று அடம் பிடிக்க, மீண்டும் பல தெருக்களைத் தாண்டி, ஒரு சைனீஸ் உணவகத்தில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, உண்ட மயக்கத்தில் அவனும் தெம்பாக நடக்க ஆரம்பிக்க, இப்பொழுது மிக,மிகப் பழமையான Charles Bridge என்ற கல் பாலத்தை பார்க்க கிளம்பினோம்.
 மீண்டும் old town வழியே குறுகிய கற்தெருக்கள் வழியாக பாலத்தை அடைந்தோம். பல்லாயிரக்கணக்கான வருட பழமையான பாலத்தின் இருபக்கங்களிலும் சிறு இடைவெளியில் முப்பது கரிய கிருத்துவத்துடன் தொடர்பு கொண்ட பெரிய பெரிய சிலைகள். சிலைகளின் கீழே வாசகங்கள். நடைபாதையில் சிறு சிறு கடைகள். நல்ல அகலமான, நீளமான பாலம். பாலம் முழுவதும் ஊரைச் சுற்றிப் பார்க்க வந்த கூட்டம். அங்கிருந்து Vtlava ஆறும், நகரமும் பார்க்க அழகாக இருந்தது.
View of Charles Bridge

அங்காங்கே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தோம். பாலத்தின் முகப்பிலும், முடிவிலும் gothic architecture என்று சொல்லப்படுகிற கட்டிட வகையில் பிரமாண்ட நுழைவாயில் அமைப்புகள். அப்படியே நடந்து,நடந்து பாலத்தின் மறு எல்லைக்கு வந்து விட்டோம்.


அங்கும் ஒரு இந்திய உணவகம், கோபால் என்ற பெயருடன். குறுகிய கல்தெருவின் வழியே அங்கிருக்கும் பிரபல மலைக்கோட்டைக்கு மூச்சு வாங்க ஏறிக் கொண்டிருந்தோம். நடுநடுவே கடைகளின் விசிட்டும், தண்ணீர் பாட்டிலும் வாங்கிக் கொண்டு ஒரு வழியாக கோட்டை வந்து சேரும் பொழுது சாப்பிட்டதெல்லாம் ஜீரணமாகி விட்டது:( இன்னும் சிறிது நேரத்தில், என் பையன் பழைய பல்லவியை ஆரம்பித்து விடுவான் அதற்குள் சுற்றிப் பார்த்து விடவேண்டும் என்று கோட்டைக்குள் நுழைந்தோம்.

அது ஒரு சிறு நகரம் போல இருந்தது. உலகத்திலேயே மிகப் பெரிய கோட்டை என்று படித்த ஞாபகம். உள்ளே நிறைய நீண்டு வானுயர்ந்த தேவாலாயங்கள், பிரமாண்ட இசைக்கருவிகளுடன். பல இடங்களிலும் அருமையான இசை ஒலித்துக் கொண்டிருந்தது. உள்ளே பார்வையாளர்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் வண்ணம் இருந்தது. சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இசையை கேட்டு விட்டு, வெளியே வந்து பார்த்தால், ஓடு வேய்ந்த அழகிய நகரம். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.

Prague city view from the Castle
To Castle
அங்கு தண்ணீரின் விலை, பியரின் (Beer ) விலையைவிட இருமடங்கு!
அங்கேயே சிறிது நேரம் குட்டிப் போட்ட பூனை மாதிரி போக மனமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தோம்.வேறு வழியில் கீழிறங்க, வழியில் உருளையில் மாவைச் சுற்றிப் போட்டு, ரெடியானதும் சக்கரையை தூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். பார்ப்பதற்கே நன்றாக இருந்தது. வரிசையில் நின்று அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.

Yummy snack!
விசித்திரமான, வேடிக்கையான சிலைகள் வழியில். பெண்கள் தான் கூட்டம் கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தார்கள்:) என் பையனோ, சீ சீ என்று ஒதுங்கி எப்படி இதை ரசிக்கிறார்கள் என்று ஆச்சரியத்துடன் அவர்களை கடந்து சென்று கொண்டிருந்தான். சிறு சிறு தெருக்களின் வழியே மீண்டும் மெயின் ரோடுக்கு வந்து அகலமான அந்த சாலையில் மேலே ஏறி, சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, சப்வே வழியாக, கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மாலை வேலை முடித்து வருகிற கூட்டமும் சேர்ந்து கொள்ள, நெரிசலில் இருந்து மீண்டு ஒரு வழியாக முருகனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஒரு அழகிய நகரத்தை பார்த்த திருப்தியில், இரவு உணவு முடித்து விட்டு தூங்கப் போனோம்.

Tuesday, September 18, 2012

விநாயகர் சதுர்த்தி

விநாயகனே  வினை தீர்ப்பவனே , வேழ முகத்தோனே ஞான முதல்வனே என்று சீர்காழி கோவிந்தராஜன் குரல் பல இடங்களிலும் இன்று ஒலித்துக்  கொண்டிருக்கும். ஆடி முடிந்து ஆவணி மாதம் வந்தாலே, விநாயகர் சதுர்த்திக்கான விழா களை கட்ட ஆரம்பித்து விடும். இந்த வருடம் என்னடாவென்றால் புரட்டாசியும் வந்து விட்டது. இப்போது தான் விநாயகர் சதுர்த்தி வருகிறது. இது தான் பிள்ளையார் சுழி, வரப் போகின்ற கொலு, தீபாவளி, ஐயப்பன் விரதம், வைகுண்ட ஏகாதேசி, பொங்கல் என்று மதுரையில் விழாக்கோலம் ஆரம்பமாகிவிடும். ஒவ்வொரு மாதமும் இனி திருவிழா மாதங்கள் தான். மதுரை மதுரை தான்:) அதுவும்  அரசமரம் பிள்ளையார் கோவில் பக்கம் இருந்திருந்தால் விநாயகர் சதுர்த்தி அனுபவம் மிகவும் நன்றாகவே இருந்திருக்கும். விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அரசமரம் பக்கம் ஜேஜே என்று தள்ளுவண்டிக் கடைகள் முளைக்க ஆரம்பிக்கும். விநாயகர் சதுர்த்தி அன்றோ, அதற்கு முன் தினமோ பூஜைக்குத் தேவையான சாமான்கள் வாங்க அம்மா கடைக்குப் போக, நானும் பலமுறை அவருடன் போயிருக்கிறேன்.

வீட்டிலிருந்து மூன்றாம் தெருவில் ஆரம்பிக்கும் கூட்டமும், கடைகளும், அரசமரம் வரை நீண்டிருக்கும். அங்கேயே களிமண்ணால் செய்த பிள்ளையார், அழகான சிவப்பு நிற மணிகள் வைத்த கண்கள், மூஞ்சுருக்கு மட்டும் கருப்பு வண்ணம் அடித்து, பல உருவங்களில், பல சைசுகளில், பூணூல் போட்ட, இடம், வலம் என்று திசைகளில் தும்பிக்கையுடன் காட்சி தரும் பிள்ளையார் என்று வண்டிகளில் வைத்திருப்பார்கள். பேரம் பேசி எல்லோரும் தங்களுக்குப் பிடித்த பிள்ளையாரை வாங்கிக் கொண்டு போவார்கள். பெரிய பிள்ளையார், சுளகு காதுகளுடன் ஜம்மென்று நடுவில் இருக்க, அவரைச் சுற்றி குட்டி குட்டி பிள்ளையார்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும். அம்மாவுக்குப் பிடித்த பிள்ளையார் ஒன்று வாங்கி, பக்கத்து கடையிலேயே ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, நவ்வாப்பழம், மாம்பழம், விளாம்பழம் (இதை தரையில் உருட்டிப் போட்டுப் பார்த்து வாங்குவார்கள். நல்ல எடையுடன் ஒரே இடத்தில் இருந்தால் நல்ல பழம், காதில் வைத்து ஆட்டிப் பார்த்து லொட, லொடவென்று சத்தம் வருகிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்), தேங்காய், வாழைப்பழம், வெத்திலை, பாக்கு, வாழைக் கன்றுகள், அருகம்புல், எருக்கம்பூ மாலை, பூக்கள், செம்மண் உருண்டை, வாழை இலை, நாட்டுச்சக்கரை, பொரி, அவல், பொரிகடலை, கடலை என்று கூடை கனக்க வாங்கிகொண்டு வருவோம். எல்லா மக்களும் பேரம் பேசி வங்கி கொண்டு போவது தான் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். இப்ப என்னம்மா சொல்றே, வேணுமா வேண்டாமா என்றவுடன் பணிந்து சொல்ற விலைக்கு வாங்குபவர்களும், ஏன், கொஞ்சம் விலைய கொறைச்சு குடுத்தா தான் என்னா என்று எதிர் கேள்வி கேட்பவர்களும் என்று சுவாரசியமாக இருக்கும். வியாபாரிகளுக்கும் நன்கு தெரியும். எப்படியும் மக்கள் வாங்கித் தான் ஆகணும் என்று முடிந்தவரை லாபம் பார்க்க நினைப்பார்கள். பேரம் பேசியே பழகிய மக்களும் முடிந்தவரை மல்லுக்கு நிற்பார்கள். அந்த சிறிய இடத்தில் மழைக்கு முளைத்த காளான்கள் மாதிரி பல கடைகளும், ரோட்டில் போகும் வாகனங்களும், மக்கள் கூட்டமும், தெரிந்தவர்களைப் பார்த்தவுடன் சுற்றுப்புறம் மறந்து குசலம் விசாரிக்கின்ற கூட்டமும் என்று வண்ணமாக இருக்கும். மக்களின் முகத்தில் ஒரு வித சந்தோஷமும் நன்கு தெரியும்.


பூஜை தினத்தன்று, வாசல் தெளித்து, தண்ணீரில் கரைத்த செம்மண் உருண்டையை வாசலில் அழகாக இழுத்துக் கொண்டே வர, சிறிது காய்ந்ததும், அதன் மேல் கோலம் போட, அந்த நிமிடமே, வீட்டுக்கு ஒரு விழா களை வந்து விடும்.அம்மா பூஜை அறையில் இருக்கும் எல்லா சுவாமி விக்கிரகங்களையும் சுத்தமாக விளக்கி விட்டு, படங்களையும் துடைத்து விட்டு, மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி வைக்க, அந்த இடமும் பளிச்சென்று இருக்கும். எல்லா சுவாமி படங்களுக்கும், விக்கிரகங்களுக்கும் பூக்கள் வைத்து பார்க்கவே பளிச் சென்றிருக்கும். தரையில் சின்னக் கோலம் போட்டு, உட்காரும் பலகை மேல் அருகம்புல் பரப்பி, அதன் மேல் புதிதாக வாங்கிய பிள்ளையார் அழகாக உட்கார்ந்திருப்பார். அவரின் இருபுறமும் மஞ்சள் கிழங்கு செடியும், கழுத்தில் ஊதாப் பூ மாலையும், தலை மேல் பூவும் வைத்து அழகாக இருப்பார். நல்ல நேரம் பார்த்து, இருபுறமும் விளக்கேற்றி விட்டு, பெரிய தட்டில் இல்லையென்றால் வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, நவ்வாப்பழம், மாம்பழம் எல்லாம் வைத்து ஒரு ஓரத்தில் பொரி, பொரிகடலை, நாட்டுச் சக்கரை கலந்து வைத்து விடுவார். விளாம்பழத்தை உடைத்து அதனுடன் நாட்டுச்சக்கரையை கலந்து, அதுவும் கொஞ்சம் இலையில் இருக்கும். சில நேரங்களில், வீட்டில் செய்த அப்பமும், வெளியில் வாங்கிய
கொழுக்கட்டையும் (கந்துளோ -சௌராஷ்ட்ராவில்), வடையும் படையலுக்கு காத்திருக்கும். பிள்ளையாருக்கு நாங்கள் எல்லோரும் எப்படா பூஜை முடியும், போட்டுத் தாக்கலாம் என்று காத்திருப்போம் :)

அதற்குள் கனலைப் போட்டு, சுவாமி முன் வைக்க, ஒரு டம்ளரில் பாலும் நாட்டுச்சக்கரையும் கலந்து வைக்க, இன்னொரு டம்ளரில் தண்ணீரும் வைப்பார். நாங்களும் குளித்து முடித்து நன்றாக உடை உடுத்திக் கொண்டு வர, அப்பாவும் வந்தவுடன், சுவாமி கும்பிட்டு விட்டு, தேங்காயை எடுத்து விளக்கில் காண்பித்து விட்டு, வராந்தாவில் போய் உரலின் மேல் போட்டு உடைத்து அந்த தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொண்டு வர, அதை குடிக்க நாங்கள் அப்போதே போட்டிபோட ஆரம்பித்து விடுவோம். ஒருவர் மணி அடிக்க, முதலில் சாம்பிராணி போட்டு மணக்க மணக்க தூபபூஜை. வீடு முழுவதும் அப்பா எடுத்துக் கொண்டு போக, பின்னாடியே மணியடித்துக் கொண்டே எங்களில் ஒருவர் செல்வோம். மற்றவர்கள் இலையை பார்த்து இந்த பழம் எனக்கு, இந்த ஸ்வீட் எனக்கு என்று அடுத்தவரை கடுப்பேற்றிக் கொண்டிருப்போம். பிறகு பத்தி, சூடம், பிரசாதங்கள் என்று எல்லா பூஜைகளும் முடிந்த பிறகு, எல்லோரும் விழுந்து கும்பிடுவோம். ஹ்ம்ம், நல்லா படிக்கணும், பெரியவங்க சொல்றத கேக்கணும், நல்லா பெயர் எடுக்கணும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட மறக்காமல் செய்வோம்:) பிறகு விபூதி, சந்தனம், குங்குமம் பூசிக் கொண்டு பக்திப்பழமாய் பொறுமையாக காத்திருப்போம். சூடம் அணைந்த பிறகு, அம்மா அவர் சொல்லவேண்டிய மந்திரங்களை எல்லாம் சொல்லி முடித்த பிறகு, கத்தியை கொண்டு வரச் சொல்லி தேங்காயை சில்லுகளாக போட, வாழைப்பழத்தை சிறுசிறு வில்லைகளாக போட்டு கொடுக்க, முதலில் தேங்காய், பழம் எடுத்துக் கொள்வோம். பால், தேங்காய் தண்ணீர் என்று எல்லோரும் சிறிது சிறிதாக குடிக்க, பழங்கள் எல்லாம் சிறுசிறு துண்டுகளாக கட் பண்ணி, அதையும் சாப்பிட்டுக் கொண்டே, இனிப்பான விளாம்பழக் கலவையை கையில் வைத்து சிறிது சிறிதாக சாப்பிட(நல்ல நார்ச்சத்துள்ள பழம்), இனிப்பு பத்தவில்லைஎன்றால், இன்னும் கொஞ்சம் சீனியை போட்டுக் கொண்டு சாப்பிட, நவ்வாப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு, நாக்கு ஊதா கலருக்கு மாறி விட்டதா என்று நாக்கை துருத்தி பார்த்துக் கொண்டே, அப்பம், அதிரசம், போளியல், கொழுக்கட்டையையும் ஒரு கை பார்த்து விட்டு, அவல், பொரி,கடலை கலவையை சிறிது நேரம் கழித்து சாப்பிடலாம் என்று வைத்துவிட்டு,

அதற்குள் அம்மாவும் நெய் சாதம்(தூப்பு பொங்கல்), எலுமிச்சைபழ சாதம்(லிம்பு பொங்கல்), வாழைத்தண்டு போட்ட சாம்பார் மணக்க, மணக்க ரெடியாக, இலையிலோ, தட்டிலோ பாட்டி, அப்பா, நாங்கள் எல்லோரும் என்று குடும்பமாக சாப்பிட என்று அன்றைய தினம் வீடு மணக்க, வயிறு முட்ட வித விதமான பிடித்த உணவுகளை உண்டதால் ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம், மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும். வீட்டில் சாயப்பட்டறை இருந்ததால் அங்கு வேலை செய்தவர்களுக்கும் பூஜை பிரசாதங்கள் கொடுக்க அவர்களுக்கும் சந்தோஷம். பாட்டி வீட்டிலிருந்து பிரசாதமும் வர, நாங்களும் இங்கிருந்து கொடுக்க, பக்கத்து வீட்டிலிருந்து சீயம், வடை என்று விதவிதமாக பிள்ளையார் பெயரைச் சொல்லி அந்த நாள் இனிய நாளாக பொழுது போகும்:) பழைய பிள்ளையார் கிணற்றுத் தண்ணீரில் கரைய, புதுப் பிள்ளையார் ஒரு வருடம் கொலு வீற்றிருப்பார்.பிள்ளையாருக்கு பிடிக்கும் நிவேதனங்கள் அனைத்தும் எனக்கும் பிடிக்கும் :)

புதிதாக திருமணம் நடந்த வீடுகளில் அதுவும் பெண் வீட்டில், முதல் விநாயகர் சதுர்த்தி ரொம்பவுமே ஸ்பெஷல் ஆனது. மாப்பிள்ளை வந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட, விருந்து, கும்மாளம் என்று உறவினர்களுடன் களை கட்டும் :)

நான் இருக்கும் ஊரிலிருக்கும் கோவிலிலும் மிக விமரிசையாக விநாயகர் சதுர்த்தி பூஜைகள் நடக்கும். நியூயார்க்கில் Flushing கோவிலைச் சுற்றி தெரு முழுவதும் விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் நடக்கிறது.


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா...

ஸ்ரீகணேசா... சரணம்!

Monday, September 17, 2012

புரட்டாசி மாதம்

இன்று தமிழ் மாதம் புரட்டாசி தொடங்குகிறது. பல சௌராஷ்டிரா மக்களுக்கு மிகவும் புரதான மாதம் இது. பெருமாள் குடும்ப கடவுளாக இருக்கும் பட்சத்தில், புண்ணிய மாதமும் கூட. அந்த குடும்பங்கள் எல்லாம் இந்த ஒரு மாத காலத்திற்கு எந்த ஒரு அசைவ உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ளாமல்(மிகவும் கஷ்டமான ஒன்று!) , சைவ உணவு சாப்பிட்டு சனிக்கிழமைகளில் அல்லது ஒரு சனிக்கிழமையாவது பெருமாள் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அதிகாலையில் பல வீடுகளிலும் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசர்தூல கர்த்தவ்யம் தெய்வமானிக்ஹம்
என்று திருமதி. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரலுடன் அன்றைய பொழுது புலர ஆரம்பிக்கும். எங்கள் வீட்டிலும் புரட்டாசி மாதம் விரதம் இருப்போம்.

சனிக்கிழமைகளில், வீடு முழுவதும் பத்தி, சாம்பிராணி, சூடம், துளசி, பூக்கள் மணம் கமழ ஒரே பக்தி மயமாக இருக்கும். வாசலில் செம்மண் கோலமிட்டு ஸ்பெஷல் நாள் என்று தெருவில் இருப்பவர்களை உணர்த்தும். இந்த மாதத்தில் ஏதாவதொரு சனிக்கிழமையில், என் தம்பிகளும், அப்பாவும் காலையில் எழுந்து, தலைக்கு குளித்து விட்டு, வேட்டி கட்டிக்கொண்டு , நெற்றியில் பளிச்சென நாமம் போட்டுக் கொண்டு, நன்கு துலக்கிய நாமம் போட்ட மூன்று பித்தளை சொம்புகளில் துளசி மாலை சூடி, வீட்டில் பூஜை செய்து விட்டு, கோவிந்தலக்ஷம் கோவிந்தா, வெங்கட்ரமணா கோவிந்தா என்று மூன்று முறை உரக்கச் சொல்ல, அம்மாவும் மூன்று முறை அரிசி எடுத்து கோவிந்தா கோவிந்தா, கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே சொம்புகளில் அரிசி போடுவார். நாங்களும் ஒரு கைப்பிடி அரிசி போடுவோம். அவர்களும் தெருவில் இருக்கும் வீடுகளின் முன் சென்று கோவிந்தலக்ஷம் கோவிந்தா, வெங்கட்ரமணா கோவிந்தா என்று சொல்ல, அவர்களும் கைப்பிடி அரிசி போடுவார்கள். வீடுகளில் குழந்தைகள் இருந்தால், அவர்களை மதியம் எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்து விட்டு வருவார்கள். சொம்பு நிறைய அரிசியுடன் வீட்டுக்கு வர, அந்த அரிசியுடன் வீட்டு அரிசியும் சேர்த்து, சுவையான சமையல் செய்து சுவாமிக்குப் படைத்து விட்டு, குழந்தைகள் எல்லோரையும் அமர வைத்து, இலையில் சாதம், கீரைப் பொரியல், காய்கறிகளுடன் சூப்பரான சாதமும், குழம்பும், ரசமும், தயிரும், பாயசமும் என்று சாப்பிட்டு முடிக்க, எல்லோர் இலையிலும் காசும், வெத்திலைப் பொட்டி, பூவும் வைத்து விருந்து சுபமாக முடியும். சாப்பிடுவதற்கு முன், இலையில் பரிமாறிய பிறகு, எல்லோரும் கோரசாக கோவிந்தா கோவிந்தா என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு தான், சாப்பிட விடுவார்கள் :)

எனக்குப் பிடித்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மதியம் ஒரு வீட்டில் நன்றாக சாப்பிட்டு விட்டு அவர்கள் கொடுக்கும் காசையும் எடுத்துக் கொண்டு, பல வீடுகளுக்கும் சென்று வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு!!!! காசை எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். சில வீடுகளில், எங்களைப் பார்த்தவுடனே, சாப்பிட்டு முடித்து விட்டீர்களா? என்று கேட்டு விட்டு, காசு கொடுத்து அனுப்பி விடுவார்கள். ஹையா, இன்று எனக்கு ஒன்னாரூவா கிடைச்சிருச்சு , ஒன்னரைரூவா கிடைச்சிருச்சு என்று வயிறும், மனமும் துள்ள யார் எவ்வளவு கலெக்க்ஷன் செய்திருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டே வருவோம். எந்தெந்த வீடுகளில் நல்ல சாப்பாடு, யார் நிறைய காசு கொடுக்கிறார்களோ அவர்கள் வீட்டில் குழந்தைகள் கூட்டம் நிறைய இருக்கும். எல்லா வீடுகளிலும் அருமையாக,சுவையாக சமைத்திருப்பார்கள். சில வீடுகளில் சிம்பிளாக வெண்பொங்கல், சாம்பார், ரவா கேசரி, சில வீடுகளில் தக்காளிப் பொங்கல், ஸ்வீட், சில வீடுகளில் சாதம், காய்கறிகள், பாயசம் என்று விதவிதமாக இருக்கும். நினைத்தாலே இனிக்கிறது அந்த பருவம்:)   கிருஷ்ணாபுரத்தில் ஆரமபித்து கான்பாளையம் வரை சாப்பிட்டு, காசு பார்த்ததுண்டு! புரட்டாசி மாத சனிக்கிழமைகள், குழந்தைகளுக்கு மகிழ்ச்சிகரமான நாட்கள். காலையிலிருந்தே கோவிந்தா கோஷம் தெருக்களில் கேட்க ஆரம்பிக்கும். ஒரு சனிக்கிழமை பாட்டி வீட்டு கோவிந்தா, ஒரு சனிக்கிழமை பெரியம்மா வீட்டு கோவிந்தா என்று பிஸியான சனிக்கிழமைகளாக போகும் புரட்டாசி மாதம்!

இப்பொழுதும் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. நண்பர்களின் குடும்பங்கள், பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்று உற்சாகமான விருந்து நாள். அமெரிக்கா, கனடாவிலும் கூட சௌராஷ்டிரா நண்பர்கள் மறக்காமல் கடைப்பிடிக்கிறார்கள். என்ன, மதிய விருந்துக்கு போகும் பொழுது நாம் அரிசி எடுத்துக் கொண்டு போய் விட வேண்டும். அங்கு அவர்கள் பூஜை அறையில் வைத்து கோவிந்தலக்ஷம் கோவிந்தா, வெங்கட்ரமணா கோவிந்தா என்று அரிசி கேட்க, நாங்களும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே அரிசி போட, அதை வைத்து அவர்கள் சுவையான சக்கரைப் பொங்கல் பண்ண என்று விருந்துடன் சுபமாக முடியும் அன்றைய தினம்  :)


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...........


Tuesday, September 4, 2012

ஆசிரியர் தினம்

மறைந்த ஜனாதிபதி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் நினைவாக இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது . எனக்குப் பிடித்த ஆசிரியைகள் எல்லாம் என் பள்ளி ஆசிரியைகள் தான். பள்ளி ஆசிரியர்கள் தான் மாணவர்களோடு அதிகம் பழகுகிறார்கள், மாணவர்களும் அவர்களுடன் மனதால் நெருங்குகிறார்கள். சில ஆசிரியர்களைப் பார்த்தவுடன் பிடித்து விடும், சிலருடன் பழக, பழகத்தான் பிடிக்கும். அதனால், அவர்கள் கற்றுத் தரும் பாடங்களையும் படிக்கும் ஆவல் வரும்! கல்லூரியில், ஆசிரியர்கள் ஏதோ கடமைக்கு வந்தோமோ, வகுப்பெடுத்தோமா என்றிருந்தார்கள். நம் படிப்பின் மேலும், நடத்தையின் மேலும் மிகுந்த அக்கறை காட்டியவர்கள் பள்ளி ஆசிரியர்களே. அதுவும் நடுநிலைப் பள்ளி வரை, எனக்கு நடனம் சொல்லிக் கொடுத்த சுகந்தி டீச்சர், சூசை ரத்தினம் டீச்சர், லூர்து டீச்சர், வகுப்பெடுத்த நிர்மலா டீச்சர், ஸ்டெல்லா சிஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர் ஜேம்ஸ் சிஸ்டர் எல்லாம் என்றும் நினைவிலிருக்கும் ஆசிரியர்கள். அந்த வயதில் ஆசிரியைகளுக்கு ரோஸ் பூ கொடுத்து நம் அன்பை வெளிப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஆசிரியைகளும் மாணவிகளின் அன்பில் திக்கு முக்காடிப் போவார்கள்.

மேல் நிலைப்பள்ளியில் வேதியியல் எடுத்த கமலா டீச்சர், தமிழ் எடுத்த சுகந்தி டீச்சர், வரலாறு எடுத்த ரெஜினா டீச்சர், கணிதம் எடுத்த Ms .ஆக்னெஸ், உயிரியல் மற்றும் தாவரவியல் எடுத்த டீச்செர்களும் மற்றும் பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்த ஒரு ஆசிரியையும் எனக்குப் பிடித்தவர்கள். பாடத்தின் மேல் பற்று வரச் செய்து, நன்கு படிக்க வேண்டும், ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று மனதில் பதிய வைத்தவர்கள். குழந்தைகளின் படிப்பில், வளர்ச்சியில் ஒரு ஆசிரியர் எவ்வளவு முக்கியமானவர் என்று புரிய வைத்தவர்கள். இவ்வளவு நல்ல ஆசிரியைகள் எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான்.

அவர்கள் எங்கிருந்தாலும் என்னைப் போல் அவர்களை நினைத்துக் கொள்ளும் மாணவர்களும் உலகெங்கிலும் இருப்பார்கள்.

வாழ்க ஆசிரியர் தினம்!

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...