Saturday, November 26, 2022

தேவிப்பட்டினம்

திருப்புல்லாணி பெருமாள் கோவில் தரிசனம் முடித்ததும் நவபாஷண நவக்கிரக கோவில் இருக்கும் தேவிப்பட்டினத்திற்குச் சென்றோம். தூறலும் நின்று போக, சூரியபகவான் வெளியே தலைகாட்ட வருணபகவானின் அருளுக்கு காத்திருந்தது போல கருமேகங்களுடன் வானம் உலா வந்துகொண்டிருந்தது. கடலோரம் அமைந்துள்ள இத்தலத்தில் ஸ்ரீராமன், சிவனையும் நவக்கிரகங்களையும் வழிபட்டதாக ஐதீகம். பரிகாரம் , பித்ருக்கடன்களைச் செய்ய அதிகளவில் மக்கள் இங்கு வருகிறார்கள். 2011ல் வந்திருந்த பொழுது நல்ல கூட்டம். தண்ணீரில் இறங்கி நவக்கிரகங்களுக்குப் பூஜைகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்த முறை கூட்டம் இல்லை. 

கோவில் அருகே வண்டியை நிறுத்திய ஒருவர், " நேர்த்திக்கடன் செய்ய உதவுவதாக ஏமாற்றுபவர்கள் இங்கு அதிகம். போலிகளிடம் ஏமாற வேண்டாம்" என்று எச்சரிக்கை செய்தார். ஒலிபெருக்கியிலும் அதே வசனத்தைத் தொடர்ந்து ஓட விட்டிருந்தார்கள். பரவாயில்லையே என்று தோன்றியது! அத்தனை ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள் போல! வைத்தீஸ்வரன் கோவில் அருகே இப்படித்தான் நாடி ஜோதிடம் பார்க்கலாம் என்று புற்றீசல் போல ஒரு கூட்டம் வரும். அதில் எத்தனை பேர் உண்மையானவர்கள் என்று தெரியாது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை மக்களின் நம்பிக்கையை, அறியாமையை ஏமாற்றும் வித்தகர்கள் எல்லா துறைகளிலும் இருக்கத்தான் செய்வார்கள். நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தேவிப்பட்டினம் அழகிய சிறு கிராமம். கோவில் எதிரே பரந்து விரிந்த அமைதியான கடல். மண்டபத்தில் பரிகார பூஜைகள் செய்ய தயராகிக் கொண்டிருந்தனர். சலனமில்லாத ஆழமான கடல் ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுத்தது. அமைதியாக சிறிதுநேரம் அதை ரசித்து விட்டு ராமேஸ்வரத்திற்குப் பயணம் செய்தோம்.  

காணொளி இங்கே:மதுரை-ராமநாதபுரம்


Friday, November 18, 2022

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவில்


உத்தரகோசை மங்கை கோவிலில் இருந்து வெளியே வரும் பொழுது மழை தூற ஆரம்பித்து விட்டது. அங்கிருந்து திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவிலுக்குச் செல்வதாக திட்டம். 2011ல் ராமேஸ்வரத்திற்கு குழந்தைகள், நண்பர் முருகன்-செல்வி குடும்பத்துடன் சென்றிருந்த பொழுது அவசரஅவசரமாக இரவில் நடையைச் சாத்துமுன் ஓடிச்சென்று தீபஒளியில் திவ்யமாக காட்சியளித்த பெருமாளைப் பார்த்ததும் பெருமாள் கோவில்களில் கிடைக்கும் மணமுள்ள 'காரசார' புளியோதரை பிரசாதம் சாப்பிட்டதும் மட்டுமே நினைவில் இருந்தது. கோவில் கோபுரம், பிரகாரங்கள், தாயார் சந்நிதி எல்லாம் எப்படி இருந்தது என்று கூட நினைவில் இல்லை. அதனால் இந்த திவ்யதேசத்திற்கு மீண்டும் சென்று வர தீர்மானித்தோம்.

தூறல் வருவதும் போவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. 15 நிமிடத்திற்குள் திருப்புல்லாணி வந்து சேர்ந்தோம். காலை நேரப்பயணத்தின் குளுமையும் தூறலும் வசீகரன் இல்லாத வானமும் சமீப மழையில் பசுமைப் போர்த்திய ராமநாதபுரமும் கொள்ளை அழகு! 108 திவ்யதேசத்தில் 44வது திவ்யதேசம் இத்திருக்கோவில். புரட்டாசி மாதத்தில் சென்றிருந்தாலும் வார நாள் அதுவும் அதிகாலை என்பதால் கூட்டம் அதிகமில்லை. வாசலில் துளசி மாலையையும் தாமரைப்பூவையும் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றோம். அங்கும் காலை நேர நைவேத்ய பூஜை நடந்து கொண்டிருந்தது. மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் இருப்பதைப் போலவே இங்கும் பெருமாள் நின்ற, அமர்ந்த, சயன கோலங்களில் காட்சியளிக்கிறார்.

அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மூலவர் ஆதிஜெகந்நாதப் பெருமாள். உற்சவர் கல்யாண ஜெகந்நாத பெருமாள். தாயார் சந்நிதியில் பேரழகுடன் பத்மாசனித் தாயார். உற்சவர் கல்யாணவல்லித் தாயார். என்ன அழகான அலங்காரம்! பெருமாள் கோவில்களில் கரிய பெருமாளுக்கும் தாயாருக்கும் என்றுமே அலங்காரம் திவ்யமாக இருக்கும். இங்கும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அனந்த சயன கோலத்தில் தர்ப்ப சயன ராமர். இலங்கையிலிருந்து சீதா தேவியை அழைத்து வர கடல் அரசனிடம் சரணடைந்து ராமர் வேண்டி வணங்கிய சரணாகதி தலம். நின்ற கோலத்தில் பட்டாபிராமர். இலங்கையிலிருந்து ஸ்ரீராமன் திரும்பிய போது மீண்டும் இங்கு வந்து பக்தர்களின் வேண்டுதலின்படி பட்டாபிஷேகம் செய்து கொண்டதால் பட்டாபிஷேக ராமர். சந்தான கோபால கிருஷ்ணர் சந்நிதியில் தசரதர் குழந்தை வரம் வேண்டி பெருமாளை வணங்கி யாகம் செய்ததால் புத்திரபாக்கியம் வேண்டி பலரும் இக்கோவிலுக்குச் செல்கிறார்கள். இக்கோவிலின் தல விருட்சம் அரசமரம். மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் புத்திரப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம். மரக்கிளைகளில் பக்தர்கள் கட்டிய சிறு தொட்டில்களும் மரத்தைச் சுற்றி நிறைய நாகர் சிலைகளும் இருந்தது. நீர் நிரம்பிய மிகப்பெரிய தெப்பக்குளம்.

அதிகாலையில் சென்றதால் அனைத்து சந்நிதிகளிலும் நடந்த பூஜைகளை திவ்யமாக பார்க்க முடிந்தது. இக்கோவிலின் சுவையான பாயசம் 9.30 மணிக்கு மேல் தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்😑

இனிமையான திருப்தியான தரிசனம் கிடைத்த திருப்தியுடன் தேவிப்பட்டினத்திற்குச் சென்றோம்.

படங்கள்: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவில்


உத்தரகோச மங்கை திருக்கோவில்



மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது உத்தரகோச மங்கை திருக்கோவில். இந்தக் கோவிலைப் பற்றி படித்தவுடன் ஊருக்குச் செல்லும் பொழுது கண்டிப்பாக அங்கு சென்று வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த முறை அதற்கான சந்தர்ப்பமும் வாய்த்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். நெரிசல் இல்லாத நெடுஞ்சாலைப் பயணம். முன்பை விட இப்பொழுது மதுரையைச் சுற்றி அதிகளவில் பைபாஸ் சாலைகள்! இந்த முறை வருணபகவானின் கருணையால் வறண்ட மதுரையும் பசுமையுடன் இருந்ததைப் பார்க்க அழகு.

மாரியம்மன் தெப்பக்குளம் தாண்டியதும் விரகனூர் வரை விரவியிருந்த நகரம் இப்பொழுது அதையும் தாண்டி வளர்ந்திருக்கிறது. கிராமங்களின் சுவடுகள் மறைந்து சிறுசிறு நகரங்களாக மாறிவிட்டிருக்கிறது. விரகனூர் பகுதிகளில் அதிகளவில் இருந்த செங்கற்சூளைகள் குறைந்து விட்டது போல் தோன்றியது. பள்ளிகளும் கல்லூரிகளும், மதுரைக்கே உரிய காபிக்கடைகளும் குறைவில்லாமல் இருக்கிறது. நாங்களும் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி காபி குடித்தோம். அந்த அதிகாலை வேளையிலும் மணக்க மணக்க நெருக்கித் தொடுத்த மல்லிகைப்பூ விற்றுக் கொண்டிருந்தவரிடம் பூக்களை வாங்கிச் சூடிக்கொண்டேன். மதுரை மல்லிக்கே உரிய மணம் ! ம்ம்ம்ம்ம் 💗

வானம் மழை மூட்டமாய் இருந்தாலும் தூரத்தில் தலையை நீட்டும் சூரியபகவான். விடியல் கொள்ளை அழகு. வழியெங்கும் கருவேல மரங்களுக்கு குறைச்சல் இல்லை. ஆங்காங்கே மூட்டம் போட்டு செங்கற்களால் மூடி இந்த மரத்தினை எரித்து கரியாக்குகிறார்கள் . "கறுப்புத்தங்கம்" என்று ஒருகாலத்தில் மிகவும் பிரபலமாக இருந்ததாக வண்டியோட்டியவர் கூறினார். வயல்வெளிகளில் நெல் பயிரிட்டிருந்தார்கள். தண்ணீருக்கும் குறைவில்லை போல பசுமை கண்களை நிறைத்தது. சிவகங்கை, திருப்புவனம், பரமக்குடி தாண்டி ராமநாதபுரம் செல்வதற்கு முன்பாக ஒரு சாலை பிரிந்து செல்கிறது. பிரிந்து செல்லும் சாலையில் ஊருக்கு அருகே செல்கையில் அழகான கோவில் கோபுரம் தெரிகிறது. கோவிலின் முன்பு பரந்த வெற்று நிலம். சுற்றிலும் கடைகள். கோவிலின் இடப்பக்கத்தில் தேரை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

பழமையான கோவில் என்பதை உள்ளே சென்றவுடன் உணர முடியும். இரண்டு கோபுரங்கள் உள்ளது. ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைய வேண்டும். இரண்டாவது மொட்டைக்கோபுரமாக காட்சியளிக்கிறது. இராமநாதபுரம் சமஸ்தானத்திற்குரிய திருக்கோயில். சேதுபதி மகாராஜா குடும்பத்தினரின் சிலைகள் கோவில் மண்டபங்களில் உள்ளது. விநாயகர் , பலிபீடம், கொடிமரம், நந்தியை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் மங்களேசுவரர் காட்சி தருகிறார். சமஸ்தானம் இன்றும் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறது என்றார் அங்கிருந்த அய்யர். காலை நைவேத்ய பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவிலில் எங்களைத் தவிர அப்பொழுது வேறு யாரும் இல்லை. சுற்றுப் பிரகாரம் ராமேஸ்வரத்தின் பிரகாரத்தை நினைவூட்டியது. அக்னிதீர்த்தத்தின் எதிரே நடராஜருக்குத் தனி சந்நிதி. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்குச் செய்யப்படும் அபிஷேகம் மிகவும் பிரபலம். சஹஸ்ரலிங்க சந்நிதியும் உள்ளது.

"மூலவர் மங்களநாதர். உத்தரம்னா உபதேசம். கோசம்னா ரகசியம். மங்கை, பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம்ங்கறதால உத்தரகோசமங்கைன்னு இந்த ஊருக்குப் பேர். ஒரு காலத்தில் கடல் இக்கோவில் வரை இருந்திருக்கிறது. திருவிளையாடற் புராணத்தில் வரும் வலைவீசின படலம் இங்கு அரங்கேறியதாக ஐதீகம். அம்பாள் மங்களேசுவரி. இங்குள்ள இரத்தின சபாபதி மிகவும் பிரபலம். வருடத்தில் ஒரு நாளைத் தவிர மற்ற நாட்களில் உடல் முழுவதும் சந்தனம் பூசி காட்சி தரும் மரகத நடராஜரை ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டும் அலங்காரங்களுடன் பார்க்கலாம் என்பதால் கூட்டம் அலைமோதும். அங்கே இருப்பது அக்னி தீர்த்தம்." என்று பூஜைகள் செய்து கோவிலைச் சுற்றிக் காண்பித்தார் அய்யர். மக்களின் ஆதரவால் கோவில் கட்டுமானப்பணிகள் நடப்பதாகவும் கூறினார்.

பழமையான அமைதியான கோவில்கள் தரும் மனநிறைவை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அனுபவித்தே அறிய வேண்டிய அனுபவம் அது. இன்னும் சில மணிநேரங்கள் அங்கு செலவிட ஆசை தான். ஆனால் அருகிலிருக்கும் திவ்யதேசத்திற்குச் செல்ல வேண்டும். சிவனை மனதார வணங்கி விடைபெற்று வந்தோம்.

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி 
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி 
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி 
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி 
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி





நானே நானா யாரோ தானா

இன்று மாலை கோவிலுக்குச் சென்றிருந்தோம். உள்ளே நுழைந்தவுடன் என்னடா இத்தனை ஜோடி செருப்புகள் இருக்கிறதே என்று ஆச்சரியமாக இருந்தது. இந்தக் குளிரிலும் பள்ளி நாளிலும் இத்தனை பேர் கோவிலுக்கு வந்திருக்கிறார்களே ஏதாவது விசேஷமா என்று உள்ளே சென்று பார்த்தால்,
ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. பத்து மலையாளி குடும்பங்கள் அங்கிருந்தன. "இன்னிக்கு மண்டல பூஜை ஆரம்பம்" என்று அய்யர் கூறவும், நாளைக்குத் தானே கார்த்திகை மாசம் என்று குழப்பமாகிவிட்டது எனக்கு😕

சுவாமிக்கு மாலைத் தொடுக்க உதவிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சுருட்டைமுடி அழகி மை தீட்டிய கண்களுடன் 'பளிச்'சென்று சிரித்துக் கொண்டே "துளசி கல்யாண பூஜை எப்படி நடந்தது" என்று கேட்டார். இதற்கு முன் இவரை நான் பார்த்தது கூட இல்லை. துளசி கல்யாண பூஜையைப் பற்றி இவர் ஏன் என்னிடம் கேட்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவரே, "நீங்கள் தானே பூஜைக்கு என்னை வரச் சொன்னீர்கள்" என்று அடுத்த குண்டைப் போட்டார். நானா? எப்போது? என்றவுடன் 
"நீங்கள் இல்லையா? சாரி! அவர் உங்களைப் போலவே இருந்தார். அதான்..." வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே நகர்ந்தார் மலையாளக் கரையோரம் இசை பாடும் அழகி.😍

அடடா! ஆல்பனியில என்னைய போல எத்தனை பேரும்மா இருக்கீங்க?😉

இங்கே தான் இந்தக் கதை என்றால் கேதார்நாத் செல்கிற வழியில சந்தித்த செட்டியார்கள் குடும்பத்தில் ஒருத்தரும் "இவங்க சிரிக்கிறது பேசுறத பார்த்தா யார் பெயரையோ சொல்லி அவங்க மாதிரி இல்ல" என்று...😟😆

இப்படித்தான் நியூயார்க் விநாயகர் கோவில் உணவகத்தில் வரிசையில் காத்திருந்த பொழுது பின்னாடி நின்றிருந்தவர்கள் அட! நம்ம ஆல்பனி மக்கள். வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு அவர் வேறு பெயரில் என்னை அழைத்தார். நான் திரும்பிப் பார்க்கவில்லை. இரண்டாவது முறையும் யாரையோ அழைக்கிறார் போல என்று நினைத்துத் திரும்பினால் "சாரி! இவரோட மன்னி அப்படியே உங்களை மாதிரியே இருப்பா. அதான் லதான்னு பேரு கூட மறந்துடுச்சுப் பாருங்க." என்றார். பிள்ளையாரப்பா...அந்த மன்னி யாரப்பா?😝

நியூஜெர்ஸியியில் நண்பர் ஒருவரின் மகன் திருமணத்திற்குச் சென்றிருந்த பொழுது அவர்களுடைய பழக்க வழக்கங்களைக் காணும் ஆசையில் முதல் வரிசையில் உட்கார்ந்து திருமண வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல உயரமான அழகான பெண்மணி இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார். நானும் அவர் கட்டியிருந்த சேலை நன்றாக இருக்கிறதே? நல்ல வடிவாக வேறு இந்தப் பெண்மணி இருக்கிறாரே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென திரும்பிப் பார்த்தவர் சிரித்துக் கொண்டே அருகில் வந்து அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு
"உமாவோட சிஸ்டரா நீங்க?" என கேட்க,
"உமாவா ? அவங்க யாரு?" என நான் "திருதிரு"வென முழிக்க,
"பொண்ணோட அம்மா தான் உமா. என் ஃபிரெண்ட்." என்றார்.
"அப்படியா? நான் மாப்பிள்ளை வீட்டுச் சார்பா வந்திருக்கேன்" என்றவுடன், பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "உங்க ஊர்ல இருக்கிற இவரைத் தெரியுமா?" என்று ஆல்பனியில் பிரபலமான மருத்துவரைக் கேட்டார்.
"ஓ! நல்லா தெரியுமே. நல்ல மனிதர். நன்கொடையாளர். என் கணவருக்கு நல்ல பழக்கம்." என்றவுடன் 'டபக்'கென்று ஃபோனில் அவரை அழைத்து அவரும் ஃபேஸ்டைமில் வர, சிறிது நேரம் பேசினோம். பிறகு அந்தப் பெண்மணி என்னை அழைத்துக் கொண்டு போய் அங்கிருந்த அவருடைய அம்மா, அப்பாவை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும், "நாங்க உன்னைய கோவில்ல பார்த்திருக்கிறோம்மா" என்றார்கள். இந்தப் பெண்மணியின் தங்கை எங்கள் ஊரில் இருக்கிறாளாம்.
அப்பப்பா! சிறிது நேரத்தில் என்னமாய் பேசிவிட்டாள் அழகி😊

நண்பர்களுடன் டொரோண்டோ கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது பெருமாள் சந்நிதியில் பட்டர்,
"என்ன இப்பல்லாம் கோவில்ல சுத்தமா பார்க்க முடியறதுல்ல?" என கேட்கவும் யாரைக் கேட்கிறார் என்று சுற்றிப் பார்த்தால் அவர் என்னைத் தான் கேட்டுக் கொண்டிருந்தார்.
"என்னையா? நான் ஆல்பனியிலேருந்து வந்திருக்கேன்." ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். ஆஹா! டொரொன்டோல இருக்கிற என்னோட 'டூப்' யாருன்னு தெரியலையே?😛

ஒரு முறை ஆல்பனி கோவிலில் நான் பாட்டுக்கு சிவனே என்று சாமி கும்பிட்டுத் திரும்புகையில்
"நேத்து நீங்க ரொம்ப நல்லா பாடினீங்க?" என்று அப்பாவியாக ஒரு பெண் சொல்லவும்,
"நானா? பாடினேனா?" நமக்குத் தான் சங்கீதம்னாலே கிலோ என்ன விலையாச்சே என்று யோசித்து
"நீங்க என்னைய மாதிரி வேற யாரையோ பார்த்திருக்கீங்க" என்றவுடன் "அப்படியே உங்களை மாதிரியே இருந்தாங்க" என்றார். ஒரு பாடகி பேர வச்சது என் குத்தமா உன் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல...😜

கல்லூரியில் என்னைப் போலவே ஒரு சீனியர் மாணவி இருந்தாள். பார்க்க கொஞ்சம் அவளும் என்னைப் போல இருப்பாள். பள்ளியில் இருந்தே அவள் தான் என் அக்கா என்று பலரும் நினைத்திருந்தார்கள். கல்லூரியிலும் பலர் கேட்டார்கள். எனக்கு வகுப்பெடுத்த விரிவுரையாளர் ஒருவரையும் என் அக்காவா என்று கேட்பார்கள். கொஞ்சம் ஒத்துக்கலாம்.

எங்கள் சமூகத்து மக்கள் சிலர் நான் குப்பா வீட்டுப்பெண் என்பதை மறந்து "அவங்க வீட்டுப்பெண்ணா? இவங்க வீட்டுப்பெண்ணா?" என்று வேறு வேறு குடும்ப பெயர்களைச் சொல்லிக் கேட்பார்கள். அதிலாவது கொஞ்சம் நியாயம் இருக்கிறது. எங்கள் சமூகத்தில் கொஞ்சம் முகம் ஒத்துப்போகும்.

ஆனால் மற்றவர்கள் கேட்கையில் 'நவராத்திரி' சிவாஜி மாதிரி மற்ற கெட்டப்களையும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொள்வேன்😇😇😇

ஒரு முகம்
ஒவ்வொருக்கும் புதுமுகமாக
தெரிவது ஏனோ?






Friday, November 11, 2022

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்

சிறுவயதில் இருந்தே கோபுரங்களை வேடிக்கைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கழுத்தை வளைத்து உயர்ந்த மீனாட்சி அம்மன் கோபுரங்கள் அதுவும் தெற்கு, மேற்கு கோபுரங்களைப் பார்க்க அத்தனை கடவுள் உருவச்சிலைகள் வண்ணங்களுடன் இருக்கும். ஆனால், ஓரளவுக்கு மேல் தெரியாது. அதை விட கோபுரத்தின் உச்சியில் இருக்கும் யாளியின் உருவம் கீழிருந்து பார்க்கும் பொழுதே பெரிதாக தெரியும் என்றால் உச்சியில் எத்தனை பெரிய உருவமாக இருக்கும் என்று யோசித்ததுண்டு.

தெற்கு கோபுரத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட சுதைச்சிற்பங்கள் இருப்பதாக அறிந்து கொண்டேன். சமீபத்தில் கேமரா உதவியால் பார்க்கையில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களைப் பற்றி யாரவது எழுதியிருந்தால் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கூடியுள்ளது. அப்படி ஏதாவது புத்தகம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி.

படங்களுக்கு மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்



 

வாயில்லா ஜீவன்கள்

மதுரையில் மக்களின் எண்ணிக்கை மட்டுமல்ல தெருக்களில் நாய்களின் எண்ணிக்கையும் பெருகி விழிபிதுங்கி நிற்கிறது. அதுவும் சில நாய்கள் நம்மைத் துரத்தும் கொடுமையும் வேறு! ஏற்கெனவே நாய்களைக் கண்டால் பயம் அதுவும் தெருநாய்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அது மனதில் என்ன ஓடுகிறது என்று யாருக்குத் தெரியும்? நன்கு பழகிய மனிதர்களையே இந்த காலத்தில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இவர்கள் வேறு பயமுறுத்துகிறார்கள். தெருவுக்கு இரண்டு மூன்று குறையாமல் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கருகில் புதிதாக ஒரு கட்டடம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதன் வாசலில் இரவானால் குறைந்தது ஏழு நாய்கள் வந்து படுத்துக் கொள்ளும். அவர்களுக்குப் பயந்தே இரவில் சீக்கிரமாக வீடு திரும்புவது உண்டு.

காலையில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி சித்திரை வீதிகளில் நடந்து செல்கையில் சில சோம்பேறி நாய்கள் ஊருக்கேற்றபடி எனக்கென்ன என்று தூங்கிக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கலாம். சோம்பல் முறித்துக் கொண்டும் மக்களோடு மக்களாக குரைக்காமல் நடந்து செல்லும் சில நாய்களையும் கண்டோம். காஃபி, பலகாரக் கடைகளில் அங்கிருப்பவர்களின் முகத்தைப் பார்த்தபடி பரிதாபமாக நிற்கிறது.

அப்படி ஒரு நாயைப் பார்த்தோம். ஏதாவது பிஸ்கட் வாங்கிப் போடலாம் என்று கடைக்காரரிடம் கேட்க அவரும் ஒரு பாக்கெட்டைத் தந்தார். எடுத்துப் போட்டால் முகர்ந்து பார்த்து விட்டு இது எனக்குப் பிடிக்காது என்று சொல்லாமல் தள்ளி நின்றது😒 சாலையோரக் கடைகளை வைத்திருந்தவர்கள்,"வாடா வந்து சாப்பிடு." என்று குழந்தையிடம் பேசுவது போல பேசியதும் "எல்லாம் சாப்பிடுவான். கொஞ்ச நேரம் ஆகட்டும்." என்று எங்களிடமும் கூற ஆச்சரியமாக இருந்தது.

"என்ன சாப்பிடுவான்?" என்று கேட்க, பால் வேண்ணா வாங்கிக்கொடுங்க" என கூற, ஈஷ்வரும் பால் வாங்கிக் கொண்டு வந்தார். அதுவோ 'சுடச்சுட' இருந்தது. அதற்குள் ஒரு பெண்மணி, "இந்தப் பாத்திரத்துல தான் நாங்க தண்ணி வைப்போம் இதுல ஊத்திடுங்க." என்று சொட்டை விழுந்த அலுமினிய சட்டியைக் கொடுத்தார். பாலை ஊற்றியவுடன் அவரே சிறிது நேரம் ஆற்றி அங்கு வைத்து விட்டார். சமீபத்தில் குட்டிப் போட்ட நாய் ஒன்று வேகமாக வந்து ரொட்டிகளைத் தின்று பால் குடிக்க சென்றது. இன்னும் ஆறவில்லை போல. காத்திருந்தது. "இது குட்டிங்க எல்லாம் அந்த குப்பைதொட்டிக்குப் பின்னால தான் இருக்கு." அந்த நாயும் நிமிடத்திற்கொருமுறை குப்பைத்தொட்டிப் பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தது. அம்மா அல்லவா?

அங்கிருந்தவர்கள் நேரத்துக்கு இந்த நாய்களுக்கு ரொட்டிகளையும் பாலையும் கொடுத்து வளர்த்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டோம். அவர்களே சிறு கடைகளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள். ஆனாலும் ஒரு ஜீவன் பசியோடு அலைவதைப் பொறுக்காமல் உதவுகிறார்கள் என்பதைக் கேட்க ஆறுதலாக இருந்தது.

அடுத்த நாள் அம்மன் சன்னதி அருகே படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். கழுத்தில் காலருடன் பார்க்க வீட்டில் வளர்க்கும் நாய் போல நன்றாக இருந்தது. அதற்கும் ரொட்டி வாங்கிப் போட்டோம். ஒன்றிரண்டைத் தின்று விட்டு ஈஷ்வரைத் தொடர்ந்து புதுமண்டம் வந்தது. அங்கிருந்து நாங்கள் தெற்குச் சித்திரை வீதி செல்ல, அதுவும் எங்களைத் தொடர்ந்து பின்னாடியே வந்தது. மேற்குச் சித்திரை வீதிக்குத் திரும்பியவுடன் சுற்று முற்றும் பார்த்து விட்டு வந்த வழியே போய் விட்டது.

இட்லி, பன் என்று ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்திருக்கலாமோ என்று பிறகு தான் தோன்றியது. அதற்குள் அவன் போய்விட்டிருந்தான்.

இந்த முறை தான் தெருவில் கத்திக் கொண்டு மூர்க்கமாகத் தொடரும் நாய்களைப் பார்க்கவில்லை. ஆனாலும் நாய்களைக் கண்டால் பயம் தான். இவர்களின் எண்ணிக்கையை குறைக்க வழியில்லையா? பாவம் இந்த வாயில்லா ஜீவன்கள்!



Sunday, November 6, 2022

புதுமண்டபம்

புதுமண்டபம் என்றதும் உடனே நினைவிற்கு வருவது மின்னொளியில் ஜொலிக்கும் கடைகளும் மக்கள் வெள்ளமும் தான்! சிறுவயதில் ஸ்லோகம், கோலப்புத்தகங்கள் முதல் கோனார் தமிழ் உரை வரை வாங்க அங்குள்ள கடைகளுக்கு அம்மாவுடன் செல்வது வாடிக்கை. கிழக்குச் சித்திரை வீதி வழியாக உள்ளே நுழைகையில் வெளிச்சுற்றில் இடப்பக்கத்தில் புத்தகக்கடைகள்! அந்தச் சிறு கடைகளில் அத்தனை புத்தகங்களை அழகாக அடுக்கி கேட்கும் புத்தகங்களை அவர்கள் எடுத்துக் கொடுக்கும் பொழுது எப்படி இத்தனைப் புத்தங்கங்களை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டதுண்டு. வலப்பக்கத்தில் பித்தளை, இரும்பு, தாமிர பாத்திரக்கடைகள். பெரும்பாலும் மதுரையைச்சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் குடும்பங்களுடன் வந்து சீர் பாத்திரங்களை வாங்கிச் செல்வார்கள். அதுவும் சுபமுகூர்த்த நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். விதவிதமான வடிவங்களில் பாத்திரங்களை வேடிக்கைப் பார்ப்பதும் நன்றாகத் தான் இருக்கும். 

இடப்பக்க உள்சுற்றுக்கடைகளில்  நூல், பூஜைக்குத் தேவையான மங்கலப் பொருட்கள் முதல் பெண்களின் அலங்கார பொருட்கள் வரை கிடைக்கும். எதிர்வரிசையில்  "தடதட" வென ஒலியெழுப்பும் தையல் எந்திரங்களின் ஓசை. அங்கு தான் திருவிழா, பரதநாட்டியம்,  கோவில் திரைச்சீலைகள் என்று வண்ணமயமான துணிகளைத் தைத்துக் கொண்டிருப்பார்கள். தைத்து முடித்த துணிகளைப்  பின்னால் இருக்கும் சிலைகளின் மேல் போட்டு வைத்திருப்பார்கள்! சிலைகளுக்கும் அழகாக துணிகளைத் தைத்து தங்கள்  கைத்திறமையைக் காட்டியிருக்கும் தையற்கலைஞர்கள் அனைவரும் ஆண்களே!

நடுவில் வசந்த மண்டபம் வருடத்தில் இருநாட்கள் மட்டுமே அம்மையப்பனுக்காக திறக்கப்பட்டிருக்கும். ஒரு முறை அதைக் காணும் வாய்ப்பும் எங்களுக்கு கிட்டியது. இப்பொழுது யாருக்காக முழுநேரமும் திறந்து வைத்திருக்கிறார்கள்😠😠😠 

கடைசிவரை சென்றால் எழுகடல் தெருவில் போய் முடியும் புதுமண்டபம். அங்கே பெரிய நந்தீஸ்வரர் கிழக்கு கோபுரத்தை நோக்கி அமர்ந்தவண்ணம் இருப்பது அழகு. அவரது கொம்புகளின் வழியே அம்மனின் திருக்கல்யாண கோல சிற்பம் பார்க்க பரவசம். 

வாசலில் பழங்கள்,பூக்கள், தட்டுமுட்டுச்சாமான்களை விற்பவர்களும்  இருப்பார்கள். காலையில் சென்றால் ஒருவித அழகுடன் இருக்கும் அதே புதுமண்டபம் மாலையில் வண்ண விளக்குகளுடன் ஜொலித்துக் கொண்டிருக்கும்.

புதுமண்டபத்தில் 124 தூண்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கிறதென்று கேள்விப்பட்டேன். ஆனால் இதுநாள் வரையிலும் அதனைப் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. அங்கிருந்த கடைகள் உள்ளிருந்த தூண்களை முழுவதுமாய் மறைத்து விட்டிருந்தது. பொறுப்பில்லாதவர்களால் பல தூண்களும் சேதமடைந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தி அருகிலேயே ஒரு இடத்தில் மாற்றி விட்டிருக்கிறார்கள். ஆனால் பழைய கடைகளின் வியாபாரமோ உற்சாகமோ இன்றி சோபித்துப் போய்க் கிடக்கிறது புதுக்கட்டடம்! 

சரி கடைகளை அப்புறப்படுத்தி விட்டார்கள். இனி  புதுமண்டபத்தின் அழகைக் காணலாம் என மிகவும் ஆவலுடன் இந்த வருடம் அங்கே சென்றால் பலத்த ஏமாற்றம்😔 மொத்தமாக மூடிவிட்டிருக்கிறார்கள். முன்புறம் கூட்டி குப்பையில்லாமல் கொஞ்சம் பார்க்கும் படி இருக்கிறது.  அழுக்குப்படிந்து குப்பைகள் சூழ, மழை நீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. முடை நாற்றம் வேறு. பார்க்கவே வருத்தமாக இருந்தது. 

திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட அரிய கலைப்பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் நமக்கு இல்லை. முறையாகப் பராமரித்து வரும் தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் பெருமைமிகு ஆட்சி, அரசியல், கலைத்திறன்களை சொல்ல வழியேதும் செய்யாமல் பொய்ப் பிரச்சாரங்களில் மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். நம் இனத்தின் மேல் நமக்கே வெறுப்பு வரும் வகையில் அரசியல் நாடகம் அரங்கேறிவருவது தான் வேதனை.

இன்று மாலுக்குச் செல்லும் கூட்டம் அறியுமோ புதுமண்டபம் மதுரையின் பழமையான வணிகவளாகம் என்று! நான் கொண்டாடிய ஒவ்வொன்றும் இன்று சிறிது சிறிதாக சிதைந்து கொண்டிருக்கிறது😔

பழமையைத்  தன்னுள்ளே கொண்ட மதுரை அருமையான கோவில்களின் நகரம்.  புதுமண்டபத்தின் வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ள மாநகராட்சி மனது வைக்க வேண்டும். கோவில் வருமானத்தில் இந்து அறநிலையத்துறை மனச்சாட்சியுடன் நடந்தால் அம்மன் கோவில் மற்றும் அதனைச் சார்ந்த கோவில்கள், புதுமண்டப சிற்பங்களையும் சிலைகளையும் பாதுகாத்து மக்கள் கண்டு செல்ல வழி செய்யலாம். 

அம்மன் கோவிலில் தீப்பற்றி எரிந்த இடத்தையே வருடங்கள் கடந்தும் இன்னும் ஒன்றும் செய்யாமல் இருட்டடிப்பு செய்வதாக உள்ளூர் மக்கள் வேதனையில் கொந்தளிக்கிறார்கள். கோவில் கோபுரங்கள் பொலிவிழந்து புனரமைக்கப்படாமல் கோவில் வருவாயைக் குறி வைத்தே ஆட்சி நடத்துபவர்களிடமிருந்து என்று விமோச்சனம் கிடைக்குமோ?

அவளுக்கே வெளிச்சம்!

கடைகளுடன் இருந்த நேரத்துப் புகைப்படங்களும், சமீபத்தில் எடுத்த புகைப்படங்களும் இங்கே 

புதுமண்டபம், மதுரை


Wednesday, November 2, 2022

பாடவா உன் பாடலை ...

"பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ..." 
என டிக்டாக்கில் தந்தையும் மகனும் பாடி மனதைக் கவர்ந்தனர். அதைத் தொடர்ந்து பல பாடல்கள்.  தனியாகவும் பலருடனும் அபி (அபிஷேக் வெங்கட்) என்ற இளைஞன் சிரித்த முகத்துடன் பாடி பலரையும் கவர்ந்திருக்கிறான் என்று அந்த ஐடியைப் பின்பற்றுபவர்களையும் அவர்களின் பின்னூட்டங்களையும் பார்த்தால் தெரிந்தது. இந்த வயதில் இத்தனை இசை ஞானமா! ? அனாயாசமாக கர்னாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, தமிழ், மலையாளம், ஹிந்தி, பெங்காலி திரைப்பட பாடல்கள், மேற்கத்திய இசை என்று கலந்து கட்டி ரசிகர்களைத் தன் வசம் ஈர்த்தவரைப் பார்த்தால்  மேலைநாட்டவர் போல் தோற்றம். வட இந்தியரோ என்றும்  நினைக்கத் தோன்றும். அதுவும் அவர் தந்தையுடன் பாடியதால் பெயரை வைத்து  தென்னிந்தியர் என்று தெரிந்தது. தமிழ் உச்சரிப்புகள் எல்லாம் தெள்ளத்தெளிவாக! ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. சமூக ஊடகங்களில் அவரை நானும்  பின்தொடர, 73 ராகங்களைப் பாடியதன் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார். 

"AIM for Seva" அமைப்பிற்காக இந்த வருடம் அமெரிக்காவில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார் என்றவுடன் ஆனந்தமாக இருந்தது. நேரடியாகவே அவர் பாடுவதைக் கேட்கும் சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது என்று விடுமுறை முடிந்து ஊரில் இருந்து வந்த அடுத்த நாளே என்றாலும் தூக்கமும் கண்களைத் தழுவினாலும் கிளம்பி சென்று விட்டோம் நானும் ஈஷ்வரும்!

அபியின் அறிமுகப்படலம் முடிந்ததும் ஓடி வந்து மேடையில் எற, ரசிகர்களின் ஏகோபித்த ஆரவாரம் ! வணக்கம் தெரிவித்து விட்டு விநாயகர் துதியில் ஆரம்பித்த நொடியில் கூட்டம் அவர் குரலுக்கு அடிமையானது. அவருடன் சேர்ந்து பலரும் பாட, அபிக்கும் உற்சாகம். ஆல்பனி சிறிய ஊர் என்றாலும் ஏகப்பட்ட கர்நாடக சங்கீத ஆசிரியர்களும், பாடகர்களும் மாணவர்களும் உள்ளனர். அனைவருக்கும் குஷி. அவருடைய இசைக்குழுவினர் இல்லாமல் முன்னேற்பாடாக இசைக்கோர்வையுடன் தயாராக வந்திருந்தார். அமெரிக்காவில் இன்னும் கொரோனா கெடுபிடியால் விசா பிரச்னை தொடருகிறது போல 😐 அரங்கில் தமிழ் மக்கள் கூட்டம் அதிகம் என்று நினைக்கிறேன். தமிழில் பாட வா என கேட்டவுடன் பலத்த கரகோஷம்.

ஒவ்வொரு பாடலைப் பாடும் பொழுது அதனுடன் தொடர்புடைய அவருடைய அனுபவங்களைச் சுவையாக பகிர்ந்து கொண்ட விதம் அழகு! பெற்றோர், குறிப்பாக அவருடைய தந்தை அவருடைய இசைத்திறமையைச் செப்பனிட்டு வளர்த்து இருக்கிறார் என்பதை மறவாமல் குறிப்பிட்டதும் தன்னுடைய குருக்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதாக நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

தன்னுடைய "73 ராகங்கள்" நிகழ்ச்சியைக் கேட்டு திரு.எஸ்.பி.பி அவர்கள் கைப்பட எழுதிய கடிதத்தில் பாராட்டுக்களுடன் இன்னும் தன்னை மெருகேற்ற அறிவுரைகளையும் அன்பாக தெரிவித்திருந்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அவரைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை. அதே போல் லதா மங்கேஷ்கர் வீட்டைப் பார்த்தும் நேரில் சந்திக்க முடியாமல் போனது. அவருடைய பாடலைப் பாடப் போகிறேன் என்றவுடன் அந்தப் பாடலாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்த்தபடி எனக்கு மிகவும் பிடித்த பாடலைப் பாடினார். ஆஹா! இது போதும் எனக்கு இது போதுமே! வேறென்ன வேண்டும் இந்தப் பாட்டு போதுமே என்று மனதிற்குள் பட்டாம்பூச்சி! அதே போல், தனக்கு மிகவும் பிடித்த எஸ்.பி.பி பாடல் என்று பாடியதும் ஆஹா! எனக்கு ஒரே கொண்டாட்டம். என்ன தான் சங்கீதம்னா கிலோ என்ன விலை என்றிருந்தாலும் சதா எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கும் எனக்கு அபி பாடிய தமிழ் பாடல்கள் சில ஹிந்தி பாடல்கள் எல்லாம் பிரபலமான பாடல்கள் தான் என்றாலும் நேரில் பாடுவதைக் கேட்க சுகமாக இருந்தது. அவருடைய தந்தைக்கு திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் திரு.டிஎம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று ஆரம்பித்து துவக்கத்தில் நான் சொன்ன பாடலை "என்னோடு சேர்ந்து பாடுபவர்கள் விருப்பம் தெரிவிக்கலாம்" என்றவுடன் ஈஷ்வரும் வேறு சில நண்பர்களும் பாட நிகழ்ச்சி களைகட்டியது.

ராகங்கள் பெயரைச் சொல்ல அவர் பாடிக் காண்பித்து அதே ராகத்தில் அமைந்திருந்த பாடல்களைப் பாடியது சிறப்பு. தான் பாடியது மட்டுமில்லாமல் அரங்கத்தில் இருந்தவர்களையும் பாட உற்சாகமூட்டினார். சிரித்த முகத்துடன் அவர் நிகழ்ச்சியை வழங்கியதில் ரம்மியமான பொழுதாக இனிதே கரைந்தது  ஞாயிறு மாலை.

"AIM for Seva" சமூக அமைப்பு செய்யும் மகத்தான பணிகளையும் நேரில் அவர்களின் பள்ளிக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் பாடியதையும் அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியுடன் இசை, விளையாட்டு என்று பல்வேறு திறமைகளை ஊக்குவிக்கும் வகுப்புகளும் வழங்கப்படுவதற்கு நன்கொடைகள் எவ்வளவு உதவுகிறது. அதற்கு தானும் ஒரு விதத்தில் உதவிபுரிவது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று தொடர்ந்து அமைப்பிற்கு உதவுமாறு வேண்டிக்கொண்டார். பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமி அவர்கள் இயற்றிய சில பாடல்களையும் பாடி மகிழ்வூட்டினார்.

உடல்நலம் சுகமில்லாமல் இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல் பாடி மகிழ்வித்ததைப் பாராட்டியே ஆக வேண்டும். அமெரிக்காவில் 27 நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்னும் 10 ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்றார். அவருக்கு எல்லாம் வல்ல கடவுள் துணை புரியட்டும்.

ஆல்பனி அன்பர் ஒருவரின் மூலமாகத் தான் இந்த நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனாலேயே ஆல்பனி தனக்கு மிகவும் நெருக்கமான நகரம் என்று கூறவும் அரங்கம் அதிர கைத்தட்டல் தான். வீ லவ் யூ அபி 💞💞💞

"The greatest musical instrument given to a human being is the voice."
-தயானந்த சரஸ்வதி

தன் குரலால் பலரையும் மகிழ்விக்கும் அபியின் இசைப்பயணம் மென்மேலும் உயர வாழ்த்துகள்! 





ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...