Sunday, November 30, 2014

அன்புள்ள அப்பா...

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் வரும் அதே குழப்பம் எனக்கும். புகுந்த வீட்டில் மாமியார் கிடையாது. மாமனாரை எப்படி அழைப்பது? சரி, சம்பிரதாயப்படி மாமா அல்லது பாவா என கூப்பிடுவது என்று நினைத்திருந்தேன்.

கணவரின் அண்ணிகள் மாமனாரை அப்பா என்று அழைப்பதை பார்த்து எனக்கு ஒரே கவலை. என் அப்பாவை விட 20 வயது மூத்தவர். அவ்வளவு வயதான மனிதரைப் போல் எங்கள் குடும்பத்தில் யாரையும் நான் பார்த்தது கிடையாது. எனக்கு தாத்தா மாதிரி இருக்கிறார். இவரைப் போய் எப்படி அப்பா என்று அழைப்பது? அதுவுமில்லாமால் என் அப்பாவைத் தவிர யாரையும் அப்பா என்று கூப்பிடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று.

ஆனா, என்ன பண்றது?

அவரை பார்க்கச் செல்லும் போதெல்லாம் என்னம்மா, எப்படி இருக்கே? வேலை எல்லாம் எப்படிபோகுது? உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க என்று கேட்கும் பொழுது பதில் சரியாகச் சொல்லி முடிக்க ஒரு குழப்பத்துடன் மாமா, பாவா... கடைசியில் மைண்ட் வாய்சில் அப்பா என்று எனக்குள் நானே கூறிக் கொள்வேன்.

இதில் கணவருக்கு மிக்க வருத்தம். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகள்கள் அப்பா என்று கூப்பிடுவது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். அண்ணிகளும் அப்படித் தானே கூப்பிடுகிறார்கள்? நீயும் அப்படியே கூப்பிட்டால் நன்றாக இருக்கும். அண்ணிகள் என் அம்மாவையும் அம்மா என்று தான் அழைத்தார்கள் என்றார்.

நானும், என் அப்பாவைத் தவிர யாரையும் என்னால் மனதார அப்பா என்றெல்லாம் கூப்பிட முடியாது. உதட்டளவில் அப்பா  என கூப்பிடுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. நீங்கள் என் அப்பாவை என்ன அப்பா என்றா கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டு விட்டு அப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம். well, எனக்கு என் நியாயம்!

திருமணம் முடிந்த நான்கைந்து மாதங்களில் எங்களுடன் வந்து தங்க மாமனாரை மச்சினர் வீட்டில் இருந்து அழைத்து வந்திருந்தோம். மச்சினர் வீட்டின் மாடியில் ஆபிஸ் இருந்ததால் அங்கு வேலை செய்ய வருபவர்கள், பிசினஸ் ஆட்கள் என்று பலருடனும் பேசி நன்கு நேரத்தைப் போக்கியவர். மாலையில் வாக்கிங் சென்று ஒரு பேக்கரி கடையில் அவர் வயதையொத்த நண்பர்களுடன் பேசி விட்டு அவருக்குப் பிடித்த சமோசா , கேக் என்று மாலைப் பொழுதுகளை போக்கி விட்டு இருந்தவருக்கு எங்கள் வீட்டில் பொழுதைப் போக்குவது மிகவும் சிரமமாக இருந்தது.

நான் என்ன செய்ய முடியும்? பார்க்க எனக்குத் தான் வருத்தமாக இருந்தது.

என் ஆரம்ப கால சமையல் கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய துர்பாக்கியம் வேறு அவருக்கு :(`

அரசியல் என்று பேச்சு வந்தால் காங்கிரஸ் தான் என்று மாமனார் ஆரம்பிக்க, உங்கள மாதிரி ஆட்கள் இருக்கிற வரை இந்தியா உருப்படற மாதிரி தான் என்று அரிவாள் சுத்தியல் எடுக்காத குறையாக மகனுக்கும் அவருக்கும் வாக்குவாதம். குடும்ப பிசினஸ் பற்றி பேச்சு வந்தால் அதற்கும் ஒரே கலவரம். சரி, நீங்க வேலைக்கு கிளம்புங்க . காலணா பெறாத விஷயத்துக்கெல்லாம் இப்பிடியா? எப்ப பாரு வெட்டி பேச்சு பேசிக்கிட்டு என்று கணவரை அவசரஅவசரமாக வெளியில் அனுப்புவதற்குள் போதும்போதுமென்றாகி விடும்.

இவன் இப்படித்தாம்மா! ஆ ஊன்னா கோபம் வந்துடும்(ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்ங்கறது இது தான் போல ... ) நீ தான் நல்ல வார்த்தை சொல்லி அவன் கோபத்தை குறைக்கணும். (ம்ம்ம். அதுக்கு நான் தான் உங்களுக்கு கெடைச்சேனா ??)

ஓரிரு நாட்கள் அப்பாவிடம் பாராமுகம் தொடரும். அச்சமயங்களில் அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும். மகள் என்று ஒருத்தி இருந்திருந்தால் அவர் நிலைமை இப்படி இருந்திருக்காது என்று நினைத்துக் கொள்வேன்.

காலையில் நான் எழுவதற்கு முன்பே எழுந்து பால் வாங்கி டீ போட்டு வைப்பது, கீரை வாங்குவது , வீட்டு வேலைக்காரம்மா வந்தால் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைப்பது என்று வேலைகளை அவர் செய்த போது எனக்குப் பதறி விட்டது. என் அம்மாவிற்குத் தெரிந்தால் அவ்வளவு தான்! நீங்கள் செய்யாதீர்கள் .....அப்பா(மைண்ட் வாய்சில்) என்று சொன்னாலும் காலையில் எழுந்திருக்க என்னால் முடியவில்லை. கருவுற்றிருந்த நேரம். மார்னிங் சிக்னஸ் :(

அவரோ, நீ சின்ன பொண்ணு. உன் உடம்பை பார்த்துக்க என்று சொல்லி மேலும் கில்ட்டியாக்க...எனக்கு மேலும் தர்ம சங்கடம். நீங்க சீக்கிரம் எந்திரிக்கணும், உங்க அப்பா பாவம்! எல்லா வேலையையும் செய்றது எனக்கு கஷ்டமா இருக்கு என்றவுடன் இவர் சிறிது நாட்கள் பார்த்துக் கொண்டார்.

ஒரு வழியாக காலையில் நான் எழ ஆரம்பித்ததும் பால்காரர், அப்பா இல்லியாம்மா? அவர் தான கொஞ்ச நாளா வந்தாரு? ஊருக்குப் போய் விட்டாரா என்று கேட்க, வேலைக்கார அம்மாவோ, அப்பாருட்ட நான் சொல்லி இருந்தேனே என்று சொல்லும் பொழுது அவர் என் மாமனார் என்று சொன்னால் இவர்கள் என்னை தப்பாக நினைத்து விடுவார்கள் போலிருக்கே! என சிறிது அச்சம். பின்னே, எந்த வீட்டில் மாமனார் வேலை செய்வார்?
எனக்குத் தெரிந்து இல்லை. மெதுவாக அவர் மேல் எனக்கு கூடுதல் மரியாதை ஏற்பட்டது.

மாலையில் வாக்கிங் முடிந்து வரும் போது எனக்கும்சேர்த்து சமோசா, கேக் கொண்டு வந்து கொடுக்க .. என் அப்பா மாதிரி அவரும் என்னை மகள் போல் நடத்த...என்னைச் சுற்றி இருந்த ஒருவித இறுக்கம் மெல்ல தளர்ந்து நானும் சகஜமாக இருக்க ஆரம்பித்தேன். அவருடைய பழங்கதைகளைச் சொல்லுங்கள் என்று அவருடைய தனிமையை என்னால் முடிந்த வரையில் கலகலப்பாக்க முயற்சித்தேன்.

அவர் அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள், வாழ்க்கையில் நடந்த நல்ல, கெட்ட விஷயங்கள் என்று அவரும் ஆர்வமாக பேச ஆரம்பித்தார். மதுரையில் அவர்கள் வீட்டுச் சொத்து எங்கெல்லாம் எவ்வளவு இருந்தது என்று பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, இப்பொழுது உங்களிடம் என்ன இருக்கிறது? போன கதைகளை ஏன் பேசி வெறுப்பேற்றுகிறீர்கள் என்று நெற்றிக்கண் திறக்க கோபக்கனலுடன் அப்பாவுக்கு எதிராக மகன் நிற்கும் போதெல்லாம், நான் தானே அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்? உங்களுக்கென்ன வேலை? அவருக்குப் பிடித்த விஷயங்களைப் பேசினால் அவருக்கும் நன்றாக இருக்கும் என்று கணவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறேன்.

பழைய நினைவுகள் தரும் சுகத்தைப் போல் வேறு எதுவுமில்லை என்று தினமும் மாலையில் அவருடன் பேசுவது , டிவி பார்ப்பது என்று எனக்கும் பொழுது போனது.

குடும்பத்தில் நடந்த பல விஷயங்களைக் கூறினார். கணவரிடம் இப்படி எல்லாம் நடந்ததா என்று கேட்கும் பொழுது அவர் பதறிக் கொண்டே உனக்கு எப்படித் தெரியும் என கேட்க . ம்ம்ம். ஓப்லா வீட்டு ரகசியம் இப்ப எனக்கும் தெரியுமே என்று அவரை கலவரப்படுத்த எனக்கும் அவையெல்லாம் தோதாக இருந்தது.

மனைவியை இழந்த துயரம், அன்று கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் கணவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு, இன்று வரை மகன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் என அவர் கலங்கியபடி சொல்லும் பொழுது எனக்கும் வேதனையாகி விட்டது.

மூத்த மகனை இழந்த சோகம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அதற்குப் பிறகு மனதுக்கு விரும்பாத நிகழ்வுகள், வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் அதனால் உடல்பாதிப்பு என்று மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது என்றால் என்னிடம் கூறுங்கள் என்று சொல்லும் பொழுது கூட, நீயோ இன்னும் சிறிது நாளில் கைக்குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மருமகள்கள் அனைவரும் வேலை செய்கிறீர்கள், நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லைம்மா என்று சொல்லும் பொழுது உண்மையாகவே என் கண்கள் கலங்கி விட்டது.

மனைவியை இழந்த கணவரின் நிலைமை மிகவும் கொடுமையானது போல!

என் குடும்பத்தின் மீதும் மிகுந்த மரியாதை அவருக்கு என்று பேசும் பொழுது புரிந்து கொண்டேன். தம்பிகள், அப்பா, அம்மா வரும் பொழுது அன்பாக பேசுவார்.

எங்களுக்கு மகள் பிறந்தவுடன் மகாராணி என்று அழைத்து தன் மகன் ஒருவழியாக வாழ்க்கையில் செட்டிலாகி விட்டான் என்ற மனநிறைவுடன் அவரின் விருப்பபடி யாருக்கும் தொந்தரவு தராமல் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

அன்பு தாத்தாவின் அறிமுகம் என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் என்றுமே எனக்கு உண்டு. அட்லீஸ்ட் மகளுடன் இருப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றாவது இருக்கிறது. மகனின் பல குணங்கள் தன் அப்பாவை நினைவுறுத்துகிறது என்று கணவர் கூறும் போதெல்லாம் பெருமையாக இருக்கும்.

யாருக்கும் தீங்கு நினைக்காத, பணத்தின் மேல் பற்றில்லாத, தனக்கு தீங்கிளைத்தவர்களையும் மன்னிக்கும் நல்ல பண்பான அமைதியான மனிதர்.

பழகிய சிறிது நாட்களில் என்னையும் அறியாமல் 'அப்பா' என்று சொல்ல வைத்த பெருமையுடன் அவரின் சகாப்தமும் முடிந்தது !






Tuesday, November 4, 2014

Woodstock , NY

இலையுதிர்கால வார விடுமுறையில் ஏதாவது ஒரு மலைப்பகுதிக்குச் செல்லலாம் என நினைத்து வீட்டிலிருந்து தெற்கே ஒரு மணிநேர தொலைவில் உள்ள Woodstock என்ற ஊருக்குச் சென்றோம்.

Woodstock-ஓவியர்களுக்கும், ஓவியக்கூடங்களுக்கும், கைவினைப்பொருள் வல்லுநர்களுக்கும், இசை விழாக்களுக்கும் புகழ் பெற்ற ஒரு குக்கிராமம் என்று கூடச் சொல்லலாம். இங்கு நடந்த இசைவிழாவால் இவ்வூர் மிக்க பிரபலமடைந்தது என கேள்விப்பட்டேன். குறுகலான தெருக்களில் சிறுசிறு கடைகள், நூலகம், போலீஸ், தீயணைப்பு நிலையங்கள்... என்று அழகு மிளிரும் ஊர். இம்மாதிரி சிற்றூர்கள் நகரங்களை விட அமெரிக்காவின் அழகை இன்னும் மெருகேற்றி காட்டுகிறது. வழியெங்கிலும் விளைநிலங்கள், சிற்றூர்களில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சிகள், வண்ண வண்ண இலைகளுடன் மரங்கள் அடர்ந்த மலைகள் என்று ரசித்துக் கொண்டே போக முடியும் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தமான இடமும் கூட!

நாங்கள் சென்ற அன்று அதிகக் குளிருமில்லாமல் வெயிலுமில்லாமல் 'குளுகுளு'வென்றிருந்தது. கார் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பித்தோம். குழந்தைகளுடன் குதூகலமாக செல்லும் குடும்பங்கள், கணவன், மனைவி, காதலனுடன் கைகளை கோர்த்துக் கொண்டு காதலி , நண்பர்களுடன் வந்தவர்கள் என்று அனைவரும் வண்டியைத் தொலைவில் நிறுத்தி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

கோடை முடிவடைந்ததை ஒட்டி பல கடைகளிலும் தள்ளுபடி விற்பனை வேறு! வேடிக்கை பார்த்துக் கொண்டே சில பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வதும் சுகம். உணவகங்களில் மிதமான ஒலியில் பாடல்கள் இசைக்க, கண்ணாடி கோப்பைகளில் மதுவை பருகி ருசித்தபடி உரக்கப் பேசி சிரித்துச் சாப்பிடும் மக்கள் கூட்டம்! தெருக்களில் பீட்ஸா , சாண்ட்விட்ச், பழங்கள் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். என்ன தான் வீட்டிலிருந்து சாப்பிட்டு விட்டு வந்தாலும் இவற்றையெல்லாம்  பார்த்தவுடன் மகனும் எனக்குப் பீட்ஸா வாங்கிக் கொடுத்தால் டோனட் வாங்கிக் கொடுக்கத் தேவை இல்லை என்று பேரம் பேச, வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று அவனை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.

முதலில் கண்ணில் பட்ட கடையில் நான் நுழைய, மகள் என்னுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற நினைவுடன் அவளுக்காக சில பொருட்களை வாங்கிக் கொண்டு அடுத்தடுத்த கடைகளுக்கும் விஜயம் செய்ய, மகனோ நிழலில் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டான். அவ்வப்போது அப்பாவிடம் ஏன் எங்கு போனாலும் அம்மா ஷாப்பிங் செய்கிறாள் என்று கேட்டது காதில் விழுந்தாலும் என் வேலையை நான் பார்த்துக் கொண்டே தானிருந்தேன்.


விதவிதமான வடிவங்களில் மெழுகுகள், நகைகள், ஆடைகள் , தேநீர் குடுவைகள் என்று பல கடைகள். எனக்குப் பிடித்த பேக்கரி ஒன்றில் நல்ல கூட்டம். அவர்கள் விற்கும் கேக் வகையறாக்கள் நல்ல சுவையுடன் இருக்கும். அங்கு 1968-ல் நடந்த உலகப்புகழ் பெற்ற இசை நிகழ்ச்சி சம்பந்தமாக பல படங்கள் இருக்கும். பண்டிட் ரவிசங்கர் படத்தையும் முதல் முறை வந்த போது பார்த்ததாக ஞாபகம். இப்போது வேறு சில படங்களை மாட்டியிருந்தார்கள். சில 'ஹிப்பி'களும் அங்கே இருந்தார்கள்! முதன் முதலில் இங்கு தான் ஒருவர் எங்களைப் பார்த்தவுடன் புத்தர் கோவிலுக்கு வந்தீர்களா என்று கேட்டு , அடடா! அப்படி ஒன்று இங்கு இருக்கிறதா என்ன? எங்கே என அவரிடமே விவரங்கள் கேட்டு பிரமாண்ட அந்த கோவிலையும் தரிசித்து விட்டு வந்தது நினைவிற்கு வந்தது.

அதே தெருவில் பாண்டிச்சேரி , மீராபாய் என்ற இரு கடைகளிலும் நம்மூர் கைவினைப்பொருட்கள், யோகா, தியானம், ஸ்ரீ அரவிந்தர், கடவுள்கள் பற்றிய புத்தகங்கள், சுவாமி சிலைகள் என்றுகிடைக்கிறது. இந்தியர்கள் என்றவுடன் ஒரு சிநேக சிரிப்பு. செல்ல குசல விசாரிப்பு!

வழியில் ஒரு ஹிப்பி கும்பல் தங்களை மறந்து 'புகைத்துக்' கொண்டிருந்தார்கள்!

மீண்டும் வந்த வழியே திரும்பும் பொழுது மறக்காமல் பீட்ஸா ஆர்டர் பண்ண, அங்கிருந்தவரும் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, ஆல்பனி என்றதும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தனக்குச் சிவகுமார் என்று ஒரு சவுத் இந்திய நண்பன் இருப்பதாகவும், தோசை மிகவும் பிடிக்கும் என்று சொன்னார். பீட்ஸா நன்றாக இருக்கு என்று மகனும் சாப்பிட்டுக் கொண்டே வர,

அருகிலிருக்கும் மாதாகிரி என்ற தியான மையத்திற்குச் சென்றோம். ஸ்ரீஅரவிந்தர், அன்னை மேல் ஈடுபாடு கொண்டவர்களால் நடத்தப்படும் இந்த இடத்திற்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தியானம் செய்து விட்டு வரலாம். அங்கிருக்கும் அமெரிக்கர்கள் அடிக்கடி பாண்டிச்சேரி விசிட் செய்பவர்கள். நன்றாக அன்புடன் பேசுவார்கள். அருகிலிருக்கும் நகரங்களில் இருந்தும் பலர் வந்து செல்கிறார்கள். ஒரு சிறிய அறையில் ஸ்ரீஅரவிந்தர், அன்னை படங்களை வைத்து நாற்காலிகளையும் போட்டு வைத்திருக்கிறார்கள். என் கணவர் சிறிது நேரம் தியானம் செய்ய நாங்களும் அமைதியாக இருந்தோம்.

அப்பப்பா! வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருப்பது தான் எவ்வளவு கடினமான வேலை!!!

சிலுசிலுவென்ற காற்று, உறுத்தாத வெயில், அழகான மலைகள் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டே மகனும், நானும் சிறிது நேரம் வெளியில் அமர்ந்திருந்தோம்.

சரி, பதினைந்து நிமிட தொலைவில் இருக்கும் புத்த மடாலயம் செல்லலாம் என்று கிளம்பி வழியைத் தவற விட்டு, அங்கேயும் இங்கேயும் கேட்டுக் கொண்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். வழியைத் தவற விடுவதிலும் ஒரு வசதி. உள்ளூர் சாலைகளில், ஆள்அரவமற்ற தெருக்களில், பெரிய பெரிய வீடுகளில் தங்கியிருப்பவர்களையும், அழகிய பழங்காலத்து வீடுகளையும் பார்த்துக் கொண்டே வரலாம். எப்படித்தான் இப்படித் தனியாக ஒதுங்கி இருக்கிறார்களோ என்றுயோசிக்க வைக்கும்! வீடுகள் ஒவ்வொன்றும் ஏக்கர் பரப்பில் இருக்கிறது.  வீட்டுக்குள் என்ன நடந்தாலும் வெளியில் தெரிவதற்கு சான்ஸே இல்லை!  மக்கள் புடைசூழ வாழ்ந்து பழகி விட்டதால் இவர்களுக்கு ஒன்று என்றால் எப்படி வெளி உலகத்தைத் தொடர்பு கொள்வார்கள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது!

சிறிது தொலைவில் மலை மீது திபெத்திய புத்த மடலாயம் அதற்கே உரிய கோபுர அழகுடன் தெரிய நிம்மதி ஆயிற்று. இது வடஅமெரிக்காவின் மிகப் பெரிய மடாலயம் என்றும் மலைகளும், ஆறு, ஏரி, குளங்களும் சூழ இருக்கும் இந்த இடத்தைத் தலைமை புத்தகுரு தேர்ந்தெடுத்ததாகவும் முதல்முறை அங்குச் சென்றிருந்த பொழுது நிர்வாகிகளுள் ஒருவரான ஓர் அமெரிக்கப் பெண்மணி கூறினார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை. வண்ண வண்ணத் துணிகளாலான கொடிமரங்கள் மலைகள் சூழ அந்த இடம் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது. பல அமெரிக்கர்களும், சில ஆசியர்களும் வந்திருந்தார்கள். அனைவர் முகங்களிலும் ஒரு வித அமைதி அல்லது என் பிரமை?
கோவில் முழுவதும் சிவப்பு, மஞ்சள், நீலம் என்று வண்ணக் கலவையாகக் கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தீப ஒளியில் விளக்குகள் ஜெகஜோதியாக மின்ன தியான நிலையில் பிரமாண்ட புத்தர்! அவர் எதிரே அமர்ந்து தியானம் செய்ய குஷன் நாற்காலிகள் நேர்த்தியான வரிசையில்! அங்கு நிலவிய மௌனமே அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி விடும் போல!

புத்தரின் காலடியில் தற்போதைய மட நிர்வாகியின் படமும் வைக்கப்பட்டிருந்தது. லக்ஷ்மி, விஷ்ணு, சிவன் வடிவில் பல புத்தர்கள்! அலங்காரங்களோ மனதையும் கண்களையும் கொள்ளைகொள்ளும் விதத்தில்! துறவிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்கிறார்கள். அவர்களுடைய இசைக்கருவிகளும் கேட்பதற்கு வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருக்கிறது. மலர்கள், சர்க்கரை, அரிசி இன்னும் பல பிரசாதங்கள் கிண்ணங்களில் அழகாக வைக்கப்பட்டிருந்தது.

வெளியில் மந்திரங்கள் எழுதிய உருளைகளை உருட்டி விட்டு வந்தோம். வார இறுதியில் கோவிலில் தொண்டு செய்ய கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள். தியான வகுப்புகளும் அங்கிருந்து தங்கி மனம் இளைப்பாறவும் வசதிகள் இருக்கிறது. அதற்கென்று தனிக் கட்டணமும் வசூலிக்கிறார்கள்! மரங்கள் அடர்ந்த காடுகள், மலைகள் நிறைந்த சூழ்நிலையில் அங்கிருப்பது நிச்சயம் மன அமைதியைத் தரலாம்.

அமைதியான சூழலில் சிறிது நேரம் அங்கே அமர்ந்து என் கணவர் தியானம் செய்ய, நானும் மகனும் வெளியில் வந்து அங்கிருந்த வயதான புத்தத் துறவியுடன் பேசிக் கொண்டிருந்தோம். ஹிந்தி தெரியுமா என்று அவர் எங்களை கேட்க, ஹ்ம்ம், நம்பள பார்த்தா ஹிந்தி பேசுற மூஞ்சி மாதிரியா இருக்குதுன்னு கேட்க ஆசை தான். ஒரு அசட்டு சிரிப்புடன் சிரித்துக் கொண்டே ஹிந்தி நஹி மாலும், தோடா தோடா என்று மேஜர் சுந்தரராஜன் ஸ்டைலில் ஆங்கிலத்திலும் சொல்ல, உங்களைப் பார்த்தால் ஹிந்திக்காரர்கள் மாதிரி இருக்கிறீர்கள் என்றால் என்ன பதில் சொல்ல முடியும்? இப்பிடித்தான் ஊர்ல பலரும் நெனச்சுக்கிட்டு ஹிந்தியில பேசி கொல்றாய்ங்க...ம்ம்ம்!

இந்தியாவில் எந்தப் பகுதி என்று எங்களை கேட்க, மதுரை, தமிழ்நாடு என்றவுடன், ஓ! சென்னை, பாண்டிச்சேரிசென்றிருக்கிறேன். தோசை மிகவும் பிடிக்கும் என்று சொன்னார் அந்த வயதான துறவி! (ஹ்ம்ம். தோசை பிடிக்கும்னு சொன்ன இரண்டாவது நபர் இவர்! ) பனாரஸ் பல்கலையில் சம்ஸ்க்ருதம் படித்தாகவும், நான்குவகையான புத்த பிரிவில், இவர்கள் கர்மபா என்ற பிரிவைச் சார்ந்தவர்கள், தலாய்லாமா வேறொரு பிரிவைச் சார்ந்தவர் என்றும் சாந்தமாக சிரித்துக் கொண்டே பேசினார். இந்த மடத்திற்கு தலாய்லாமாவும் ஒரு முறை வந்திருக்கிறார்.

சிங்களத்தில் இருப்பவர்கள் எந்த பிரிவு என்று கேட்க நினைத்து விட்டு விட்டேன்.

அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வர,  கணவரும் படங்கள் எடுத்து முடித்து விட, வீடு நோக்கிப் புறப்பட்டோம் 






























ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...