Tuesday, December 26, 2023

நட்சத்திரம் நகர்கிறது?

சொல்வனம் இதழ் 308ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை.

நட்சத்திரம் நகர்கிறது? 

அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்குள் ‘தடாலடி’ அரசியல் நிகழ்வுகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதால் நீதிமன்றங்களில் நடக்கும் முன்னாள் அதிபர் மீதான வழக்கு, விசாரணைகள் விவாதப்பொருளாக மாறி வருகிறது. மக்களிடையே அதிபர் ஜோ பைடனின் ஆதரவு குறைந்து வரும் வேளையில் எதிர்க்கட்சியில் நடக்கும் களேபரங்களுக்கும் குறைவில்லை. அரசியல் வரலாற்றில் இன்றைய தலைமுறையினர் கேட்டிராத நிகழ்வு ஒன்று டிசம்பர் 1, 2023 அன்று அரங்கேறி அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

2022, நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் நியூயார்க்கில் குடியரசுக்கட்சி தன்னுடைய எண்ணிக்கையை எட்டு உறுப்பினர்களில் இருந்து 11ஆக அதிகரித்ததில் இருந்தே அவர்கள் பெற்று வரும் செல்வாக்கை ஜனநாயகக்கட்சியினர் விமரிசித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில் தான் நியூயார்க்கின் லாங் ஐலண்ட் மக்கள் பிரதிநிதி, குடியரசுக்கட்சியின் ‘ஜார்ஜ் சாண்டோஸ்’ காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Progressive activists fly a 15-foot-tall inflatable balloon of Rep. George Santos on Capitol Hill on Tuesday, demanding his expulsion.

இந்த வெளியேற்றம் என்பது சபை விதிக்கக்கூடிய மிகக் கடுமையான தண்டனை முறையாகும். அமெரிக்க அரசியலில் அவையிலிருந்து நீக்கப்பட்ட ஆறாவது பிரதிநிதி மற்றும் முதல் குடியரசுக் கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் சபையிலிருந்து ஒருவரை வெளியேற்றுவது என்பது சாதாரணமான செயல் அல்ல. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது முதல் உள் விதிகளை மீறி “ஒழுங்கற்ற நடத்தையில்” ஈடுபட்டால், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர் வாக்குகளுடன் குற்றம் சாட்டப்பட்ட பிரதிநிதியைச் சபையிலிருந்து வெளியேற்ற அமெரிக்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது. அதன்படி, சாண்டோஸ் அவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு மூன்று கூட்டமைப்பு கிளர்ச்சியாளர்கள், இரண்டு குற்றவாளிகள் மற்றும் இன்னும் விசாரிக்கப்படாத பல குற்றங்களில் தொடர்பு கொண்டிருந்த மக்களின் பிரதிநிதி என 1861ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஆறு காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே அவையிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வழிமுறையாக வெளியேற்றத்தை வடிவமைத்திருந்தாலும் கட்சியினரைப் பிளவுபடுத்தும் செயலாக இருப்பதால் இந்த நடவடிக்கை அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.

அப்படி என்ன குற்றம் செய்து விட்டார் சாண்டோஸ்? ஓரினச்சேர்க்கையாளாரான ‘ஜார்ஜ் சாண்டோஸ் தேர்தலில் நின்ற நாள் முதலே பல புகார்களும் விமரிசனங்களும் அவர் மீது எழுந்தன. வெற்றி பெற்று ஜனவரி, 2023ல் பதவியேற்றபின் அவரது கல்வி, மதம், தாயின் மரணம், பிரச்சார நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, வேலை வரலாறு உட்பட அவரது பின்னணியின் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றிய அப்பட்டமான பொய் அறிக்கைகளின் காரணமாக 2023, மார்ச் மாதம் காங்கிரசின் நெறிமுறைக் குழு (Ethics Committee) ஆரம்பகட்ட விசாரணையைத் தூண்டியது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, ஃபெடரல் கிராண்ட் ஜூரி 23 வழக்குகளில் அவர் மீது குற்றஞ்சாட்டி மே 10, 2023 அன்று காவலில் வைக்கப்பட்டார்.

தனது அரசியல் பிரச்சாரத்திற்காகப் பெற்ற நன்கொடைகளைத் தனிப்பட்ட செலவுகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் செலவழிப்பதற்கு முன்பு அவர் கட்டுப்படுத்திய வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றியதற்காகவும் அவர் மீது பணப்பரிமாற்ற மோசடி குற்றம் சாட்டப்பட்டது. அதற்காக அவர் நிறுவிய நிறுவனம் ஒரு சமூக நல அமைப்பு என்று பிரச்சார நிதியளிப்பவர்களிடம் பொய் கூறியதும் அம்பலமாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றுப்பரவல் காலத்தில் வேலையிழந்தவர்களுக்கு அரசு வழங்கிய சலுகைகளைப் பெற விண்ணப்பித்து மோசடி செய்ததாகவும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தவறான நிதி அறிக்கைகளை அளித்ததற்காகவும் வழக்குகள் தொடரப்பட்டன.

“பிரச்சாரத்திற்காக இருவரிடமிருந்து பெறப்பட்ட $50,000 நன்கொடையை தன்னுடைய வங்கிக்கணக்கிற்கு மாற்றி உயர்தர ஆடைகள், பயணங்கள், கடன் அட்டைகள், அழகுசாதனப் பொருட்கள், ஆபாச தளங்கள், போட்டாக்ஸ் உட்பட பல்வேறு தனிப்பட்ட செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான டாலர்களை தேர்தல் நிதியிலிருந்து செலவிட்டதாக” அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 22 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இதையடுத்து அவரை அவையிலிருந்து வெளியேற்ற ஜனநாயக கட்சியினர் நடவடிக்கை எடுத்தனர். நெறிமுறைக் குழு அதன் இறுதி முடிவுகளை வெளியிடும் வரை காத்திருப்பது சிறந்தது என்று குடியரசுக்கட்சியினர் வாதிட்டு தற்காலிகமாக வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தினர். நவம்பரில், அடையாள திருட்டு மற்றும் கிரெடிட் கார்டு மோசடி உள்ளிட்ட கூடுதல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு,சாண்டோஸை அகற்றுவதற்கான இரண்டாவது முயற்சியும் நியூயார்க் குடியரசுக்கட்சியினரால் தடுக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் அவையின் குடியரசுக்கட்சி உறுப்பினர் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என்பதில் கட்சி மிக கவனமாக இருந்தது.

அவையின் தலைவரான குடியரசுக் கட்சியின் மைக் ஜான்சன், சாண்டோஸை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார். மனைவியை அடிப்பவர்களும் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைச் செய்பவர்களும் காங்கிரசில் இருக்கும் பொழுது தான் செய்தது பெரிய குற்றமல்ல என்று சாண்டோஸ் நிராகரித்தார். இறுதியில், மூன்றாவது முறையாக விவாதம் நடந்து 311 அவை உறுப்பினர்கள் அவரை நீக்குமாறு வாக்களித்தனர். 114 உறுப்பினர்கள் இந்த முடிவை எதிர்த்தனர். ஜான்சனும் மற்ற மூத்த குடியரசுக்கட்சியினரும் அவையிலிருந்து வெளியேற்ற வேண்டாம் என்று வாக்களித்திருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாண்டோஸ் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

“பெரும்பாலான குடியரசுக் கட்சியினர் அவரை வெளியேற்றுவதற்கு எதிராக வாக்களித்தனர். நெறிமுறைகள் அல்லது சட்டத்தைப் பற்றி குடியரசுக்கட்சி எப்பொழுதுமே கவலைப்படுவதில்லை. அதிகாரம் மட்டுமே அவர்களின் குறியாக உள்ளது.” என்று பெர்க்லி பல்கலை பேராசிரியரும், முன்னாள் அமெரிக்கத் தொழிலாளர் செயலாளரும், கார்டியன் கட்டுரையாளருமான ராபர்ட் ஹெய்ச் கூறியுள்ளார்.

சாண்டோஸ் இடத்தை நிரப்ப 90 நாட்களுக்குள் சிறப்புத் தேர்தலை நடத்த வேண்டும். நியூயார்க்கின் ஜனநாயகக்கட்சி கவர்னர் கேத்தி ஹோக்குல், விரைவில் லாங் ஐலேண்டில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு இடைத்தேர்தலில் நியூயார்க் குடியரசுக் கட்சியின் “சிவப்பு அலையின்” ஒரு பகுதியாக சாண்டோஸ் வெற்றி பெற்றார். இதனால் ஜனநாயகக் கட்சியினர் சபையின் கட்டுப்பாட்டை இழந்தனர். குடியரசுக்கட்சியின் பெரும்பான்மையைக் குறைக்க, ஜனநாயகக்கட்சியினர் இப்போது சாண்டோஸின் இடத்தை மீண்டும் கைப்பற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள். அதற்காகத்தான் இந்த வெளியேற்றம் என்றே குடியரசுக்கட்சியினர் கூறிவருகிறார்கள்.

“அவர் தானாகவே ராஜினாமா செய்து காங்கிரசைக் காப்பாற்றியிருக்க வேண்டும். உள்நாட்டுப் போருக்குப் பிறகு வெளியேற்றப்பட்ட காங்கிரஸின் மூன்றாவது உறுப்பினராக இப்போது அவர் நினைவுகூரப்படுவார்.” என்று கட்சி சார்பற்ற பிரச்சார சட்ட மையத்தின் சட்ட இயக்குனர் ஆதவ் நோட்டி கூறியுள்ளார். மேலும், “சாண்டோஸின் வெளியேற்றத்தின் மூலம் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. நெறிமுறைகள், அமலாக்கத்தின் சக்தி மற்றும் திறன் என்பதைக் காட்டுகிறது. அமெரிக்கர்களிடமிருந்து பெற்ற பிரச்சார நிதியைப் பற்றின நேர்மையான அறிக்கையை அறிந்து கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. அந்த உரிமையைப் பறிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக திறம்படச் செயலாற்ற அமலாக்கத்துறைக்கு உரிமை உண்டு.” என்றும் கூறியுள்ளார்.

அவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் பிரதிநிதிகள் பெரும் ஓய்வூதியம் உட்பட சலுகைகள் அனைத்தையும் இழக்கிறார் சாண்டோஸ். குற்றம் சாட்டப்பட்டவராயினும் மீண்டும் தேர்தலில் போட்டியிட எந்தத் தடையும் இல்லை. அதில் தனக்கு நாட்டமில்லை என்று சாண்டோஸ் கூறியுள்ளார். அமெரிக்க அரசியலில், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்குக் கூட பெரும்பாலும் இரண்டாவது ஆட்டம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்தில் பதவியோ இல்லையென்றால் ரியாலிட்டி டிவி அல்லது பெரிய திரையில் படமாகவோ ஒரு வாய்ப்பைக் கொடுத்து விடுகிறார்கள். இவருக்கும் அப்படியொரு வாய்ப்பு காத்திருக்கிறது!

தனக்குப் பதிலாக அப்பதவியில் முன்னாள் காவல்துறை அதிகாரியும் பாதுகாப்பு நிபுணருமான ‘மைக் சப்ரைகோன்’ சிறந்த தேர்வாக இருப்பார் என்று சாண்டோஸ் கூறியுள்ளார். சட்ட அமலாக்கம் மற்றும் வணிக உலகில் அவரது அனுபவம் எதிர்க்கட்சி வேட்பாளரான சூசியுடன் மோதுவதற்கு உதவும் பெருகாராணிகளாக இருக்கும். மீண்டும் குடியரசுக்கட்சியினரே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். ஜனநாயகக்கட்சியினரும் இழந்த எண்ணிக்கையைப் பெறுவதில் குறியாக உள்ளனர்.

ஆனாலும் அவருடைய வெளியேற்றம் என்பது மிகப்பெரிய தண்டனை என்று ஆதரவுக்குரல்களும் ஒலிக்கத்தான் செய்கிறது! இதைவிடப் பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள். சாண்டோஸுக்கு ஒரு வருடத்திற்குள் தண்டனை சாத்தியமானது போல சட்டத்தை மீறிய, மீறும் சட்ட நாயகர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்குமா? என்பதே மில்லினியல்களின் மில்லியன் டாலர் கேள்வி!

தவறு செய்தவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் நியதி. ஏழைக்கொரு நீதி. ஆட்பலம், அதிகாரம், பண பலம் கொண்டவர்களுக்கு ஒரு நீதி என்று தினமும் அரங்கேறும் அறமற்ற காட்சிகள் “அரசியல் ஒரு சாக்கடை” என்பதைத்தான்  நிரூபித்துக் கொண்டிருக்கிறது. “இதெல்லாம் அரசியல்ல…” என மிகச்சசாதாரணமாக இரு கட்சிகளும்.கடந்து சென்று விடுகிறது. மீண்டும் குடியரசுக்கட்சியினரே அந்தத் தொகுதியில் ஜெயிக்கிறார்களா என்பதில் இருக்கிறது அரசியல் விளையாட்டு.

George Santos on a Cameo for Shawn McCreesh, December 8, 2023.


The Hundred-Foot Journey


எதையோ தேடிக் கொண்டிருந்த பொழுது கண்ணில் பட்ட இப்படத்தில் ஜூஹி சாவ்லா, ஓம்பூரி மற்றும் சில இந்திய நடிகர்களும், உணவைப் பற்றினதாகவும்😃 இருக்கவே பார்க்கலாமென ஆரம்பித்தேன். மும்பையில் உணவகம் நடத்திய குடும்பம் ஒன்று அரசியல் வன்முறையாளர்கள் நடத்திய தீவிபத்தில் குடும்பத்தலைவியை இழந்த பிறகு லண்டனுக்கு குடிபெயர்ந்து பிறகு பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்கிறார்கள். அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் அவர்களுடைய கதையைக் கேட்டு அனுமதிக்க(!), உணவகம் துவங்கும் ஆசையில் அப்பாவும், அரைகுறை மனதுடன் இளைய மகனும் இந்திய உணவின் சுவையை அறிந்திராத பிராந்தியத்தில் எப்படி உணவகம் வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற தயக்கத்துடனும் கேள்வியுடனும் விருப்பமில்லாமல் மூத்த மகனுடன் வந்து சேர்கிற ஊரின் அழகு, ஓவியமாக கண்களுக்கு விருந்தளிக்கிறது. அச்சிறு நகரில் பிரபலமாக இருக்கும் அந்நாட்டு உணவகத்திற்குப் போட்டியாக ஆரம்பித்து எப்படி வெற்றிப் பெறுகிறார்கள் என்பதே கதை.

அம்மாவின் கைப்பக்குவமும், குறிப்புகளும் இயற்கையாகவே உணவுத்தயாரிப்பின் மேல் இருக்கும் ஈர்ப்பும் இரண்டாவது மகனைப் பிரபலமாக்கி போட்டியாக நினைத்தவர்களுடன் கரம் கோர்க்க வைத்து இறுதியில் சுபம்.

புலம் பெயர்ந்து செல்பவர்களின் கனவு அம்மண்ணில் நனவாவதென்பது அத்தனை எளிதல்ல. அதுவும் அந்நாட்டு மொழி அறியாமல், அவர்களுடைய உணவு விருப்பத்திற்கு முற்றிலும் வேறுபட்ட சுவை கொண்ட இந்திய உணவை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதென்பது சவாலான வேலை தான். தன்னாட்டிற்கு வந்தவர்களை வேற்றுப்படுத்திப் பார்க்காமல் அவர்களுடைய உரிமைகளையும் காக்கும் மேயர், தொடக்கத்தில் வித்தியாசமாகப் பார்த்து பின் அவர்களையும் ஏற்றுக் கொள்ளும் அவ்வூர் மக்கள் என அயல் நாட்டிற்குச் செல்லும் பலரும் எதிர்கொள்வதை நன்கு காட்டியிருந்தார்கள். புலம்பெயரும் அயல்நாட்டவர்களை வெறுப்புடன் பார்க்கும் உள்ளூர் மனிதர்கள் எங்குமிருக்கிறார்கள். இதிலும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடந்து தன்னுடைய திறமையினால் சமையல் விற்பன்னர்களுக்கான உயர் விருதைப் பெறுகிறான் இரண்டாவது மகன் என்பதில் முடிகிறது கதை.

ஃப்ரெஞ்ச் மக்களுக்கே உரிய திமிருடன் ஹெலன் மிர்ரன் ஆரம்ப காட்சிகளில் வந்தாலும் கதை இப்படித்தான் போகும் என்று தெரிந்தாலும் புறநகரின் மக்கள் வாழ்க்கை, எழில் கொஞ்சும் காட்சிகள் கண்ணுக்கு விருந்து.

படம் ஒகே ரகம்.

'நூறு-அடி பயணம்' என்பது ஒரு புதிய இந்திய சமையலறைக்கும் பாரம்பரிய ஃப்ரஞ்சுக்கும் இடையிலான நூறு அடி தூரம். வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் விருப்பங்களுக்கு இடையிலான இடைவெளியை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றிய புதினத்தின் அடிப்படையில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

சுவையான உணவின் வெற்றி என்பது அன்புடன், காதலுடன் உணவைத் தயாரிப்பதிலும் புதுச்சுவையை அளித்து மனமகிழ வைப்பதிலும் தான். தினம் தினம் அதைச் செய்யும் நாமெல்லாம் பல மிஷெல்லின் விருதுக்குரியவர்கள் தான் என்று நினைத்துக் கொண்டேன் 😉😉😉




Friday, December 22, 2023

கீதா ஜெயந்தி


இன்று "கீதா ஜெயந்தி". பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதை உரைத்த நன்னாள். குருஷேத்திரத்தில் போர் நடக்கவிருந்த சூழலில் எதிர்க்களத்தில் நிற்பவர்களைப் பார்த்து கண்கலங்கி நிற்கும் அர்ஜுனனுக்கு வாழ்வின் தத்துவத்தை, ஆழமான ஞானத்தை போதனைகளின் வாயிலாக கிருஷ்ணர்  எடுத்துரைத்தது தான் நமக்கு கிடைத்த பொக்கிஷமான "பகவத் கீதை". இன்று கோவில்களில் பகவத் கீதை பாராயணம் செய்வார்கள்.

என் கணவர் கீழ்கண்ட சுட்டியை அனுப்பியிருந்தார். அதில் மகாகவி பாரதியாரர் 'கீதை முன்னுரை'யில் பகவத் கீதையைப் பற்றி மிக அழகாக எழுதியுள்ளார். கீதையின் சாராம்சத்தை அவருடைய பாணியில் விளக்கியுள்ளது சிறப்பு. கீதையை நிந்திப்பவர்கள் எத்தகைய மூடர்கள் என்று பாரதியார் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார். இதை வாசித்தால் நமக்குள் ஓராயிரம் கேள்விகள் எழலாம். அதுவே தொடக்கம்.

பாரதியின் கீதை முன்னுரை | சங்கதம் (sangatham.com)  இந்தச் சுட்டியில் விரிவாக வாசிக்கலாம். அதிலிருந்து சில துளிகள்:

1. ஹிருதயம் சுத்தமானால், தெளிந்த புத்தி தோன்றும். பகவான் சொல்லுகிறார் :- ‘அந்த அறிவுத் தெளிவிலே நிலைபெற்று நில், அர்ஜுனா’ என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும் அது நற்செய்கையாகும். நீ ஒன்றும் செய்யாதே மனம் போனபடியிருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும், உனக்குப் புத்தி தெளிந்து விட்டதன்றோ? புத்தி தெளிவுற்ற இடத்தே, உனக்குத் தீயன செய்தல் ஸாத்தியப் படாது. ஆதலால், நீ நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம் வேலை செய்யலாம்.’

ஆதலால், கடவுள் சொல்லுகிறார்:- ‘கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி, அவனே யோகி’ என்று.

2. நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.

எல்லாத் துயரங்களும் எல்லா அச்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்தபோதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. ‘கடவுளுடைய செய்கை’ என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.) ‘ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது. அதாவது :‘இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது’ என்று பொருள்படும்.

இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில், ‘இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்’ என்று சொல்லுகிறார்.

3. எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று சமர்ப்பித்துவிட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலை மீது நீர் போலே.

4. எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான்? ‘ஸர்வமிதம் ப்ரஹ்ம, பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்’, இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.

5. பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி – இதுதான் முக்கியமான பாடம்.

“ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக.” இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிடவேண்டும். இந்த விஷயத்தை பகவத் கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீட்டும் மீட்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக்கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.

6. ஒரு குழந்தையைக் கொல்லுவதும், சிவ பூஜை செய்வதும் இரண்டும் கடவுளுக்கு ஒரே மாதிரிதான். அவன் எல்லா இயக்கங்களும், எல்லாச் செயல்களும் தன் வடிவமாக உடையவன், எனினும், மனித விதிப்படி சிசு ஹத்தி பாவமென்பதையும், சிவபூஜை புண்ணியமென்பதையும் கண்ணபிரான் மறுக்கவில்லை. மனிதன் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டும், என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகின்றான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்டமேனும் நஷ்டமேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேணவேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்த பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்துகொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கின்றார்.

“ஞானக் நிஸ் ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே” – ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்தவேண்டும். கடவுள் நம்மை உலகமாச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அக வாயிலாவேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோ மாதலின். அவனன்றி ஓரணுவுமசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான். தீங்கு செய்யவல்லான் அல்லன். ஏன்? நாம் அவனை முழுவதும் நம்பிவிட்டோ மாதலின்.

“கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” – இதுவே பக்தி.

அந்தக் கடவுள் எத்தன்மையுடையான்? எல்லா அறிவும், எல்லா இயக்கமும், எல்லாப் பொருளும், எல்லா வடிவமும் எல்லாம் தானேயாகி நிற்பான். அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? எதற்கும் துயரப்படாதிருத்தல். எதற்கும் கலவைப்படாதிருத்தல். எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல். “ஸம்சயாத்மா விநச்யதி” ஐயமுடையோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான்.

7. குளிர் – வெம்மை, இன்பம் துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருபையால் சாசுவதமல்ல. அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப்படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடைக் கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத் கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்திரம்.

8. துரியோதனாதிகள் காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

க்ஷத்திரிய அரசர் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலின் விசேஷ நோக்கம். பூ மண்டலத்தாரனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை. இதில் ஐயமில்லை. எனினும், இந்த நூல் க்ஷத்திரிய மன்னருக்கு விசேஷமாக உரியது. இது அவர்களுக்குள்ளேயே அதிகமாக வழங்கி வந்தது. வேதங்கள், எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயினும், பிராமணர்களுக்கு விசேஷமாக உரியனவோ, அதுபோலே புராணங்கள் க்ஷத்திரியர்களுக்கு உரியன.

இது ஞான சாஸ்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

9. ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.

10. ‘தன்னைத்தான் வென்றவன் தனக்குத்தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத்தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.

11 . ‘அஞ்ஞானமும் கடவுள் மயந்தானே? அதை ஏன் தொலைக்க வேண்டும்?’ என்று கேட்டால் -நீ ‘எல்லாம் கடவுள், ஞானமும் கடவுள், அஞ்ஞானமும் கடவுள்’ என்பதை உண்மயாகத் தெரிந்த அளவில் உன்னைப் பரம ஞானம் எய்திவிட்டது. உனக்கு அஞ்ஞானமும் நீங்கிப் போய்விட்டது. அஞ்ஞானமும் அதனாலாகிய இன்பமும் கடவுள் மயம் என்பது மெய்யே எனில் பின்னர் அவை நீங்கி, நீ ஞானமும் இன்பமும் எய்தியதும் கடவுள் செயலென்பதை மறந்து விடாதே. அவ்விடத்து அஞ்ஞானம் நீங்கியது பற்றி வருத்தப்படாதே.

12. எந்த ஜந்துவுக்கும் இம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார். எந்த ஜீவனையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருததத் தகார். மாமிச போஜனம் பண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார்.

நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக்கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக்கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டு மிருப்போமாயின் – அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் – நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.

13. உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் – கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.

இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது. 

தன்னுடைய பங்காளிகளையும், குருக்களையும், சகோதரர்களையும் உறவுகளையும் போர்க்களத்தில் எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அர்ஜுனன், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளைக் கேட்டுத் தெளிவுற்றான். ஐயம் நீங்கியவன் போருக்குத் தயாரானான். நம் ஐயங்களைப் போக்கி நல்வாழ்வை அருளும் கீதையை அனைவரும் படித்துத் தெளிவு பெறுவோம். 

இனி ஒவ்வொரு சுலோகங்களையும் விரிவாக கற்றுக் கொள்ள வேண்டும்.



சென்னை புத்தகக் கண்காட்சி



2023 ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் என் எழுத்தில் வெளிவந்த 'மகாபாரதக் கிளைக் கதைகள்' புத்தகம் சுவாசம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இது என்னுடைய முதல் புத்தகம். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் என்னுடைய இரண்டாவது புத்தகம் 'ராமாயணக் கதைகள்' வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி மாதம் 'புத்தரின் ஜாதகக் கதைகள்' புத்தகம் வெளிவரவிருக்கிறது. இவை அனைத்தும் சுவாசம் பதிப்பகத்தில் கிடைக்கும்.


இந்தப் புத்தகங்களின் நோக்கமே எளிய நடையில் தமிழில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்து இன்புறுவதே.

இந்தியாவில் புத்தகங்களை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

https://www.swasambookart.com/books/author/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/1

அமேசானில் வாங்க ,

https://www.amazon.in/-/hi/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-Latha-Kuppa/dp/B0CMHSQRX9

https://www.amazon.com/Mahabharatha-Kilai-Kathaigal-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-ebook/dp/B0C2M3NNFZ


நன்றி!


Wednesday, December 20, 2023

திருவரமங்கை திருக்கோவில்


நம்மாழ்வாரால் மங்களாசாசனம்(பாடல்) பெற்ற மற்றுமொரு திவ்யதேசம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் தெற்கே அமைந்துள்ள திருவரமங்கை திருக்கோவில். நாங்குநேரி, வானமாமலை, தோத்தாத்திரி என வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயாருடன் வீற்றிருக்கிறார். தினமும் பெருமாளுக்கு தைல அபிஷேகம் நடைபெறுகிறது. அந்த எண்ணெயை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர்.

வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது. கோவில் கருவறையில் ஆதிசேஷன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகிறனர். இவர்களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும் ஐதீகம்.

பழமையான இத்திருக்கோவிலில் நீண்ட பிரகாரங்களுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் மண்டபங்கள் இருக்கிறது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவினை ஒட்டி பகல் பத்து, ராப்பத்துநாட்களில் இம்மண்டபங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பகல் பத்து விழா நடைபெறும் 10 நாட்களும் அறையர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருமொழி பாசுரங்களையும், ராப்பத்து விழா நடைபெறும் 10 நாட்களும் திருவாய் மொழி பாசுரங்களையும் பாடி பெருமாளை பரவசப்படுத்துகிறார்கள்.

அழகான மற்றுமொரு திவ்யதேச தரிசனம் 🙂

திருவரமங்கை திருக்கோவில்

Monday, December 18, 2023

சில நேரங்களில் சில மனிதர்கள்


படத்தலைப்பைப் பார்த்தவுடன் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' புத்தகத்திலிருந்து தான் கதையை எடுத்திருப்பார்களோ என்று தோன்றியது. அப்படியெல்லாம் எடுத்து சொதப்பி வைக்காமல் விட்டுவிட்டார்கள். நல்ல வேளை! இதே தலைப்பில் ஏற்கெனவே ஒரு தமிழ்ப்படம் வந்திருக்கிறது. எப்படி அதே தலைப்பு என்ற கேள்வியுடன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். 

கதாநாயகன் அசோக் செல்வன். நான் பார்த்த இவர் படங்கள் இதுவரை நன்றாகத்தான் இருக்கிறது. நடிக்கவும் செய்வார். அமைதியான கதாபாத்திரங்களில் பார்த்து இந்தப்படத்தில் கோவக்கார 'விஜி'யாக பார்க்க வித்தியாசமாக இருந்தது. சிறிது நேரமே வந்தாலும் நாசர் உள்ளூர் பாஷையைப் பேச முயற்சி செய்ததால் வழக்கமான குரலைக் கேட்க முடியவில்லை. நாயகனின் நண்பனாக வருபவர், 'குட் நைட்' படத்தில் நடித்த மணிகண்டன் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள். 

அடுத்தவருக்காக ஆடமபரமாக வாழும் இளைஞன், தன் குறைகளை உணராமல் திருத்திக் கொள்ளாமல் உயர துடிக்கும் இன்னொருவன்,  விபத்தில் காயம்பட்டு கிடப்பவரைக் காப்பாற்ற நினைத்து பழியைச் சுமந்து அதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் மற்றொருவன்  இவர்களுடன் தான் விரும்பும் நேசிக்கும் மனிதர்களைத் தன் பேச்சுக்களால் செயல்களால் தொடர்ந்து காயப்படுத்தும் கதாநாயகன். இந்த நான்கு குடும்பங்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என்று காட்சிகள் நகர்ந்து ஓரிடத்தில் நடக்கும் விபத்தில் அனைவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவரவர் தவறுகளை உணர்ந்து திருந்துகிறார்கள். 

தவறு செய்யாத மனிதர்கள் யார் தான் இருக்கிறார்கள்? செய்த தவற்றைத் திருத்திக் கொள்பவர்கள் தான் அதிகம் இல்லை. அதைத்தான் இப்படம் கூறுகிறது. மேல்தட்டு, கீழ் தட்டு, நடுத்தர வர்க்கம் என்று நகர்கிறது. 

சமூக வலைதளத்தின் அழுக்குப்பக்கத்தை, அறமற்ற ஊடகவியலாளர்களின் அநாகரீகப் போக்கையும் நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள். படக்குழுவினருக்குப் பாராட்டுகள்.

நல்ல படம். 




தூதா

தெலுங்கில் இருந்தாலும் கதை புதுமையாக இருக்கவே நெட்ஃப்ளிக்ஸ்ல் வந்துள்ள 'தூதா' தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் சில பாகங்களில் வன்முறை கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் ஏதோ மர்மத்தொடர் போல இருக்கிறதே என்று பார்க்காமலும் இருக்க முடியவில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புடைய மரணங்களின் முடிச்சு அவிழும் நேரத்தில் முழுக்கதையும் புரிகிறது. கடைசி வரை அந்த ஆவலைத் தக்க வைத்துக்கொண்டதில் கதாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

நாக சைதன்யா தனக்கான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். நடிகை பார்வதியும் அவருடைய துப்பறியும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நாக சைதன்யாவின் மனைவியாக பிரியா பவானியும் ஓகே.

சில இடங்களில் கதை இப்படித்தான் போகப் போகிறது என்று கணிக்க முடிந்தாலும் கதை மாந்தர்களை ஓரிடத்தில் கொண்டு வந்து முடித்த விதம் அருமை. மழையும் ஒரு கதாபாத்திரமாய் தொடர் முழுவதும் வருவது அழகு.

வெட்டி செண்டிமெண்ட் சீன்கள் இன்றி பெண்கள் புகைபிடிப்பது, மது அருந்துவது, படுக்கை அறைக்காட்சிகள், சரளமாக கெட்ட வார்த்தைகள் என்று ஹிந்தி, தமிழ் தொடர்களைப் போல் இல்லாததும் இத்தொடரின் சிறப்பம்சம்.

நம்மூர் பசுபதி தான் அந்த ஆவியோ?

ஜனநாயகத்தின் நான்காவது தூண் இன்று ஊழலுக்கும் ஊழல் கறைபடிந்த அரசு அதிகாரிகளுக்கும் சாமரம் வீசினால் உண்மையிலேயே இப்படி மர்மச்சாவுகள் நிகழ்ந்தாலும் ஏற்றுக்கொண்டு விடும் மனப்பக்குவத்திற்கு நம்மை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இன்று அரசு அதிகாரத்திற்குப் பயந்து தங்களுடைய தார்மீக பொறுப்பை மறந்து மக்களை மடைமாற்றும் திறனற்ற, பண்பற்ற ஊடகங்கள், ஊடகவாசிகளுக்கு இந்தத் தொடரை அர்ப்பணம் செய்யலாம்.

திருந்துங்கடே!

Friday, December 8, 2023

தி சீக்ரெட்: டேர் டு ட்ரீம்

ரோண்டா பைரனின் 'தி சீக்ரெட்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படம் 'தி சீக்ரெட்: டேர் டு ட்ரீம்'. தற்பொழுது நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளிவந்துள்ளது. எளிமையான கதை தான். அதைச் சொல்லிய விதமும் அழகான படக்காட்சிகளும் இந்தப்படத்தை அழகிய பொழுதுபோக்குப் படமாக்கியுள்ளது. நடிப்பவர்கள் மெனக்கெட்டு இயற்கையாக நடிக்கிறேன் பேர்வழி என்று செயற்கையாக நடிக்காமல் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடித்திருப்பது சிறப்பு.

மூன்று குழந்தைகளுடன் தனியாளாகப் போராடும் கதாநாயகி. யதார்த்த அமெரிக்க வாழ்க்கை. இங்கு நான் பழகிய நண்பர்கள் பலரும் வீடு, வண்டிகளுடன் வசதியாக வாழ்வது போல இருந்தாலும் அந்தந்த வார/மாதச் சம்பளத்தை எதிர்பார்த்துதான் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டே செலவு செய்வார்கள். அப்படித்தான் கதாநாயகியின் வாழ்க்கையும். குழந்தைகள் கேட்கும் பீட்ஸா கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழலில் இருப்பாள். அவள் வாழ்வில் வரமாக வருகிறான் கதாநாயகன். அதனால் வரும் மாற்றங்கள் தான் கதை.

கன்னக்குழி அழகன் ஜாஷ் லூகாஸ் கதாநாயகன்😍. மென்மையான கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக பொருந்தும் முகமும், குரலும், நடிப்பும். 98களில் பிரபலமான 'டாசன்ஸ் க்ரீக்' தொடரின் நாயகி கேட்டி ஹோம்ஸ். டாம் குரூயிஸின் முன்னாள் மனைவி. அநியாயத்திற்கு இளைத்து வயதானவர் போல இருந்தாலும் கதாபாத்திரத்திற்குப் பொருந்துகிறார்.

நீண்ட பாலம், கதாநாயகியின் வீடு, மாலை நேரம், மழை என்று அழகுக்காட்சிகள்! பொதுவாகவே சிறுநகரங்களில் நடக்கும் கதைக்களங்களில் ஒரு ஜீவன் இருக்கும். இந்தப்படத்திலும் இருந்தது.

காதல் என்பது உணர்வுப்பூர்வமானது. அவரவர் வசதிக்காகவோ நிர்பந்தத்தினாலோ வருவது அல்ல. என்பதை அழகாகச் சொல்கிறது படம். ஏதோ ஒரு சொல்லவியலாத ஈர்ப்பு இருவருக்கும் இடையே. அவனிடமிருந்து அவளுக்கும் அவளிடமிருந்து அவனுக்கும் குறுஞ்செய்திகள் வந்துவிடாதா என்ற பரிதவிப்பு. இருவரும் ஒருவரை ஒருவர் காணச் சென்று சந்திக்க முடியாமல் சாலைகளில் பயணிக்கும் பொழுது அசடு வழிந்து செல்போனில் உரையாடி 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்ம்ம்ம்ம்...' என்று தொடரும் காட்சிகள் 💖💖💖

படம் முழுவதும் கதாநாயகன் மிகவும் நேர்மறையாகப் பேசி மற்றவர்களைக் கவருவான். பார்க்கும் நம்மையும் தான். நிஜ வாழ்க்கையில் இப்படியான அரிதான மனிதர்கள் கிடைப்பது வரம்! ஹ்ம்ம்! நம் எண்ணங்களே நம் வாழ்க்கையாகிறது. நேர்மறை எண்ணங்களும் நேர்மறை வார்த்தைகளும் நம் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதாக கதை. 

இனி  'தி சீக்ரெட்' புத்தகத்தைப் படிக்க வேண்டும்😎

“The more you think about something, the more you draw it to you.”

Tuesday, December 5, 2023

மகான்கள் அவதரித்த புண்ணிய தேசம்



இன்று ஸ்ரீஅரவிந்தர் மரணித்த நாள்.

பாரத தேசம் பல மகான்களைக் கண்ட தேசம். அந்தப் புண்ணிய பூமியில் பிறந்தவர்கள் நமக்கு கொடையாக வழங்கிய செல்வங்களைக் கற்று நற்சிந்தனைகளுடன் கூடிய எதிர்கால சந்ததியினரை வளர்த்தெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. அதுவும் வெறுப்பினால் மனிதர்களைக் கொல்லவும் துணிந்திருக்கும் கீழான சமூகத்தில் இத்தைகைய மகான்கள் நமக்கு கிடைத்த வரம். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றிருந்த பொழுது அந்த மகான் வசித்த அறையில் சிறிது நேரம் அமர்ந்து தியானிக்கும் அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஆரோவில்' அனுபவம் மறக்க முடியாத ஒன்று. இன்று நாங்கள் இருக்கும் நகரிலிருந்து ஒரு மணிநேரத் தொலைவில் அன்னையின் ஆசிரமம் உள்ளது. நேரம் கிடைக்கும் பொழுது அங்கு அடிக்கடி சென்று வருவது உண்டு.
 
கலிஃபோர்னியாவில் 'லொடி' என்னும் ஊரில் அமைதியான இடத்தில் இருக்கும் ஸ்ரீஅரவிந்தர் சாதனா பீடத்திற்கு ஈஷ்வரின் அண்ணன் மகள் அழைத்துச் சென்றிருந்தாள். ஆல்பனி அருகே அன்னையின் ஆசிரமம் ஒன்று கேட்ஸ்கில் மலையில் இருக்கிறது. அடிக்கடி அங்கு சென்று வருவது உண்டு. ஆனால் கலிஃபோர்னியாவில் 'சாக்ரமெண்டோ' அருகில் இப்படி ஒரு ஆசிரமம் இருப்பது அன்று தான் தெரியும். வயல்வெளிகள் சூழ்ந்த புறநகர்ப்பகுதியைக் கடந்து வந்தால் ஒரு குட்டி நகரம்/கிராமம். அங்கு தான் இந்த ஆசிரமத்தைக் கட்டியுள்ளார்கள். நாங்கள் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம். நாய்கள் தான் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. மனிதர்களையே காணவில்லை. ஆசிரமத்து பைரவர் வாலாட்டிக் கொண்டே முகர்ந்து பார்த்துச் சென்று விட்டது. நமக்குத்தான் பயம்! பயப்படாதது போல தலையைத் தடவிக் கொடுக்க, அதுவும் தன்மையாக கூடவே நடந்து வந்தது.

 

மாடிப்படிகளில் ஏறி உள்ளே சென்றால் அமைதியான ஆசிரமம் வரவேற்கிறது. கதவுகளில் பார்க்கும் இடங்களில் எல்லாம் ஸ்ரீஅரவிந்தரின் வாசகங்களை மேற்கோள் காட்டியிருந்தார்கள். அன்னை, ஸ்ரீஅரவிந்தர் படங்கள் முன்பே பூக்களை வைத்து அலங்கரித்து இருந்தார்கள். அங்கே அமர்ந்து தியானம் செய்யும் வசதிகளும் இருந்தது. இரைச்சல்களில் இருந்து தப்பித்து அமைதியான இடத்திற்குள் நுழைந்தவுடன் துவக்கத்தில் இருக்கும் தடுமாற்றம் மெல்ல மறைந்து அமைதிக்குள் செல்ல எத்தனிக்கும். உடல் படபடப்பு குறைந்து சில்லிடுவதை உணர முடியும். கீழே பெரிய புத்தக அறை உள்ளது. அன்னை, ஸ்ரீஅரவிந்தர் எழுதிய அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கிறது. அங்கேயே தங்கி இளைப்பாற , மனம் அமைதி கொள்ள வார இறுதி நிகழ்ச்சிகள், தியானப்பயிற்சிகள், நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் வசதிகளும் இருக்கிறது. வெளியே அழகான காய்கறி, மலர்த்தோட்டங்கள். காயம் பட்ட மனதை மயிலிறகால் வருடுவது போல இருந்தது அங்கிருந்த ஒவ்வொரு நொடிகளும். அனுபவித்தே அறிய வேண்டிய தருணம். யார் வேண்டுமானாலும் சென்று வரலாம்.


ஈஷ்வர் தன்னுடைய ஆராய்ச்சிப்படிப்பிற்காக ஶ்ரீஅரவிந்தரின் “சாவித்ரி”யைத் தேர்ந்தெடுத்திருந்தார். அதற்கான முதற்கட்ட வேலைகளில் தீவிரமாக படித்து எழுதி வைத்திருந்ததெல்லாம்…


“All can be done if the god-touch is there.”
-Sri Aurobindo, Savitri: A Legend and a Symbol




ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...