Showing posts with label தமிழ்ப்படம். Show all posts
Showing posts with label தமிழ்ப்படம். Show all posts

Sunday, August 16, 2026

இதயம் முரளியும் நூறுசாமியும்

80களில் காதலைச் சொல்லத் தெரியாமல் அலைந்த முரளிகள் உண்டு தான். அதுக்காக இப்படியா? பாவம் அதர்வா. செயற்கையான நடிப்பில் ஒரு பள்ளி ஆசிரியை. பரிதாப கதாபாத்திரத்தில் ஒரு நல்ல மலையாள நடிகரை வீண்டித்திருக்கிறார்கள். நண்பர்கள் என்று ஒரு பரிதாப கோஷ்டி. ஐயோ பாவம் தமன். ஏன் ப்ரோ? மியூசிக் மட்டும் போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான? இந்த பரிதாபங்கள் சுதாகர்லாம்… அதே கோணல்மூஞ்சி சேட்டைகள். சுத்தமாக எடுபடவில்லையா அல்லது ரீல்ஸ் பார்த்து பழகிப்போனதால் பிடிக்கவல்லையா🥱 

தேவையற்ற பாடல் காட்சிகள். பாவம் ஒட்டாத கதையில வேற என்னத்த பண்ண முடியும்? எனக்கென்னன்னு செலவழிச்சிருக்காங்க. ஊழல் பணம் படுத்தற பாடு  இந்‌த கண்றாவில்லாம் படமா வருது. முற்போக்கு பெண்கள் என்றால் குடி, புகை என்றிருக்க வேண்டும் தீராவிடம் என்றால் பிராமணரை இழிவுப்படுத்த வேண்டும். அதற்கேற்றாற்போல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் சில காட்சிகள்.

இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள். கல்லூரி காலத்திலிருந்து ஒரு தலைக் காதலைச் சுமந்து கொண்டு இன்று வரை அலைபவர்கள் ஒரு முறையேனும் தங்களுடைய காத்லைச் சொல்லிவிட மாட்டோமோ என்று கல்லூரி கெட்டுகதர்களுக்குப் போகிறார்கள். அவனும் சொல்லிவிட மாட்டானா என்று பெண்களும் ஒன்றும் தெரியாத மாதிரி செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் காலமிது. ஒருவேளை, அவர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ?

ஒரு காதல் முறிந்தவுடன் அடுத்த காதலை நோக்கி் நகர்ந்து கொண்டேயிருக்கும் தலைமுறை இது. இப்ப போய்🥱🥱🥱

“அய்யோ கொல்றாங்களே” அன்றே அலறினார் ஒருவர். அவர் பேரன் பலரையும்😏😏😏

மொக்கையிலும் மொக்கை சூர மொக்கை ‘இதயம் முரளி’ படம்.

😆😆😆

மனசு கேட்கலைன்னு அடுத்தநாள் ‘நூறுசாமி’ன்னு ஒரு படம். உண்மையில் நடந்த கதை. என்னதான் இந்த மண்ணு, அந்த மண்ணெண்ணெய்னு சொன்னாலும் கணவனை இழந்தப் பெண்களின் மறுமணம் என்பது இன்னும் சமூக அவலமாகவே பார்க்கப்படுகிறது. கௌரவக்கொலை வரைக்கும் செல்கிறது! கொடுத்த கதாபாத்திரத்திற்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார் சுவாசிகா. இளம்வயதில் கணவனை இழந்தப் பெண்களைப் புரிந்து கொள்ளாத சமூகம். ஏக்கமும், பொறுப்புகளும், ஏச்சுபேச்சுகளைச் சுமக்கும் பெண்களுக்குப் பெண்களும் எதிரிகளாக இருப்பது சாபம். கடைசி சில நிமிடங்களே வந்தாலும் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் இப்பேர்ப்பட்ட ஆண்களும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறது. ஆணினத்தால் ஏற்பட்ட அவலத்தை ஆணினம் தான் சரி செய்யணும். அப்படி ஒரு சாமி முன்வந்த கதை. பார்க்கலாம்.

🙂🙂🙂

Saturday, May 30, 2026

'கர'

ரொம்ப நாளாச்சே! ஏதாவது தமிழ் படம் பார்க்கலாம்னு நெட்ஃப்ளிக்ஸ்ல தேடினப்ப முன்னாடி வந்து விழுந்தது 'கர' படம். அதுவரைக்கும் தனுஷ் அதுல நடிச்சிருக்கார்னு கூட தெரியாது. ஆனால் ஒரு விழாவில் அவரும் மமிதா பைஜூவும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தப்ப சரி அடுத்த படத்துல ஜோடி போலிருக்குன்னு நினைத்தேன். ஏற்கெனவே இட்லிக்கடை பார்த்து சட்னி ஆனதால நானே இங்கிபாங்கி போட்டுட்டு இருக்கிறப்ப என்ன படம்னு ஈஷ்வர் கேட்கவும் தனுஷ் படமாம்னேன். என் போறாத நேரம், ஈஷ்வரும் படம் பார்க்க உட்கார்ந்துட்டார்!

முன்னாள் மாமனார் கண்ணம்மா, கண்ணம்மான்னு ஒரு பாட்டுல உருகினா முன்னாள் மருமகனுக்கும் அப்படியே ஒரு பாட்டு வைக்கணும்னு திராவிட தமிழ் உலகம் நினைச்சிருக்கு. பாவம், மமிதா. என்ன நினைச்சு இந்தப் படத்துல நடிச்சாரோ தெரியல. கொடுத்த கதாபாத்திரத்துக்குப் பாத்திரம் தேய்க்கிற காட்சிகள் தான். இதெல்லாம் ஒரு படம்னு வழக்கம் போல திட்டிட்டு கிளப்பிட்டார் ஈஷ்வர். தலைவலி வந்தாலும் மாத்திரை போட்டாவது படத்த பார்ப்போர் சங்கத்து ஆளு நான்😁தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

வறண்ட நிலம்னாலே பின்னணியில் இந்தக்குரலெடுத்து பாட்டு போட்டு அனத்துறது. ஒரு தடவை அவார்ட் கொடுத்துட்டா போதும். அதே ஃபார்முலா. போதும்பா!

அது என்ன எல்லார் நிலத்துலேயும் ஒரு ட்ராக்டர்? ஒரு சமாதி. நானும் ராமநாதபுரம் பக்கம் போயிருக்கேன். இப்படிலாம் பார்த்ததே இல்லை. நடைமுறைக்கு கொஞ்சம் கூட ஒத்து வராத காட்சிகள்னா தமிழ்ப்படங்கள்ல கொட்டிக் கிடக்கும். ஏமாற்றின வங்கியிலருந்து பணத்தைத் திருடி ஏமாந்தவங்களுக்கு கொடுக்குற ராபின்ஹூட் தனுஷ். அதுக்கு பண்ற கூத்துகள். இதுதான் படம்.

சமீபமா, கருப்பசாமிய வச்சு பாடல்கள் என்ன? படங்கள்ல குலசாமியா காமிச்சு காட்சிகள் என்ன? இந்தப்படத்திலும் அப்படித்தான். ஏதாவது அஜெண்டா கிஜண்டா இருக்குமோ?இயக்குநர் ரவிக்குமார் நல்லா நடிச்சிருந்தார். வடிவேலு ஒரு பேட்டியில் இந்த மதுரைக்காரனுங்க கோவக்காரனுங்க. எப்பவும் முறைச்சுக்கிட்டே 'உர்ர்ர்ர்ர்ர்'னு இருப்பாங்க. அப்படிதான் படம் முழுவதும் கோவக்கார தனுஷ். கொஞ்சம் எடை கூடினதால வேற மாதிரி தெரிஞ்சாரோ என்னவோ! மாமாவா கருணாஸ். கொடுத்த கதாபாத்திரத்திற்கு அவரும் நல்லாவே நடிச்சிருக்கார்.

என்ன? கேட்ட வார்த்தைகள் கிடையாது. கவர்ச்சி, குத்தாட்டம் கிடையாது. படம் முழுவதும் ஓராயிரம் கதாபாத்திரங்கள் இல்லை.வெட்டு, குத்து, ரத்தம் கபளீகரம்னு ஓவர் வன்முறை இல்லை. தனுஷ் தனுஷ் தனுஷ் மட்டும் தான்.

மலையாள நடிகர்களை மீண்டும் தமிழ்ப்படங்களில் பார்க்க முடிகிறது. கதையில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருந்தாலும் பொறுமையாகப் பார்ப்பவர்களுக்கு ஏதாவது இனாம் கொடுக்கலாம். நாங்களும் பாவம் தான😂

மணிரத்னம் குப்பை மாதிரி படத்தை எடுத்தாலும் அவருடைய ரசிகர்கள் 'ஆகா, ஆகா' என்று பாராட்டுவார்கள். ரஜினி கேவலமான கதையில் சொரித்தனமா நடிச்சிருந்தாலும் வெட்கமே இல்லாம நல்லாருக்கு தலைவான்னு சொல்ற மாதிரி இங்கேயும்...

இதுக்கு கே-ட்ராமா பார்த்திருக்கலாமேன்னு தோணுச்சுன்னா நீயும் என் இனமே!




Sunday, January 18, 2026

Haq

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் மிகவும் கவனத்தை ஈர்த்த படம் என்றால் அது தற்பொழுது நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகியிருக்கும் 'Haq' இந்தி திரைப்படம் தான்! ஒரு படம் பிடித்துப் போக ஒரு சில காரணங்கள் இருக்கலாம். இந்தப் படம் உண்மையில் நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் எளிதில் ஒன்றிவிடும் பாணியில் மிக அழகாக, எதார்த்தமான வசனங்களுடன், கதைக்கேற்ற இசையுடன் ரம்மியமாக எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. 

படம் முடியும் பொழுது தோன்றியதெல்லாம் தன்னுடைய உரிமைக்காக ஒரு பெண் எப்படியெல்லாம் போராடியிருக்கிறாள்? இன்றும் கூட எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது? பெரும்பாலானவர்களுக்குத் தத்தம் உரிமைகள் என்பது என்னவென்பதே தெரிவதில்லை. பெண்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் அவர்களை எப்படியெல்லாம் தரக்குறைவாக நடத்துமோ அப்படித்தான் காலம்காலமாக ஆணாதிக்க உலகம் நடந்து வருவது கண்கூடு. அதிலும், ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து கொண்டால்? பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை? ஐயோ பாவம் தான். ஆனால் அதையெல்லாம் எதிர்கொண்டு ஒரு பெண் போராடுகிறாள் என்றால் எத்தனை மனத்துயர் இருக்க வேண்டும்? கூடவே, தைரியமும் போராட்டக்குணமும் இருந்தால் ஒழிய, ஆணாதிக்க வர்க்கத்தினரை எதிர்கொள்வது சாத்தியமல்லவே? அதைத்தான் இந்தப் படம் உணர்த்துகிறது. அவளின் போராட்டத்திற்கு துணையாக நிற்கும் அவளின் அப்பா போன்ற ஆண்கள் தான் இத்தகைய போராடும் பெண்களின் பலம்.

இந்தப் படம் பார்ப்போரை சில கேள்விகள் கேட்கத்தான் செய்கிறது. மதத்தை காரணமாகக் காட்டி ஒரு ஆண் என்ன வேண்டுமானால் செய்யலாம் என்ற அதிகாரத்தை உண்மையில் யார் கொடுத்தது? மதக் காவலர்களின் போர்வையில் நடமாடும் காட்டுமிராண்டிகளா? ஆண் செய்தால் ஏற்றுக்கொள்ளும் உலகம் பெண்ணிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் ஏன் விதிக்க வேண்டும்? மதம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்பவர்களை அவர்கள் துணைக்கு அழைக்கும் புத்தகத்தில் சொல்லியிருப்பதை மேற்கோள் காட்டி நன்றாகவே கேள்வி கேட்கிறாள் பாதிக்கப்பட்ட கதாநாயகி. உடனே வழக்கை ஷரியா நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அடுத்த அக்கப்போர். இப்படி பெண்களை வஞ்சிக்கும் சட்டங்களை எதிர்த்துப் போராடி எப்படி வெற்றி பெறுகிறாள் என்பதை மிக நேர்த்தியாக அனாவசியமான கூச்சல்கள் இல்லாமல் அவள் படும் மனவதைகளையும் குழந்தைகள், குடும்பம் என்று அவளைச் சார்ந்தவர்கள் படும் அவதிகளையும் கணவன், மாமியாரின் அடாவடித்தனத்தையும் மிக இயல்பாக கடத்துகிறது இப்படம்.

அழுகையும் மௌனமும் வசனங்களை விட ஆழமாக சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறது. ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதோ அல்லது அமைப்பால் அவர் கண்ணுக்குத் தெரியாதவராக நடத்தப்படும்போதோ, அது ஒரு தனிப்பட்டவரின் துயரம் மட்டுமல்ல அரசியலமைப்புச் சிக்கலுமாகும்.

"வாழ்வு" என்பது வெறும் உயிர் வாழ்வது மட்டுமல்ல. மனித கண்ணியம், வாழ்வாதாரம், உறைவிடம், உணவு, நீதி பெறுவதற்கான அணுகல் என அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை இந்தியச் சட்டம் வலியுறுத்துவதை இப்பெண்ணிற்கான நீதி தெளிவுபடுத்தியுள்ளது. பாலினம், சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படும் பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பு அளித்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் காட்டுகிறது. 

ஷாஜியா பானோவாக மிக அருமையாக தன்னுடைய கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்திருந்தார் யாமி கவுதம். அவளது கணவனாக இம்ரான் ஹாஷ்மியின் நடிப்பும் அருமை. 

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும். திருந்த வேண்டியவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். திருந்துவார்களா?

இப்படி ஒரு கதையை, அதுவும் உண்மையில் நடந்த கதையை அப்படியே படமாக்க தமிழில் யாரும் இல்லாதது துரதிர்ஷ்டமே!

நமக்கு வாய்த்ததெல்லாம் திருட்டு, புரட்டு, உருட்டுகள் தான்😏😏😏


Monday, November 11, 2024

அமரன்


'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு பெரும்பான்மை மக்கள் கண்டுகளித்த சில படங்களில் அதுவும் நல்ல இடத்தைப் பிடித்து விட்டது. நண்பர்களுடன் சேர்ந்து நானும் சென்று பார்த்தேன்.

'பயோபிக்' என்பதால் கதையில் சொதப்பல் இல்லை. என்ன அதிசயம்! ராணுவ காட்சிகளை மிகத் தத்ரூபமாக எடுத்திருந்தார்கள். 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்குப் பிறகு கண்கலங்க வைத்த படம்.

'மேஜர் முகுந்த் வரதராஜன்', ஒரு நல்ல மகன், காதலன், கணவன், மிக முக்கியமாக, படைத்தலைவன். தன் குழுவில் இருப்பவர்களின் உயிருக்காக எந்த எல்லை வரைக்கும் சென்ற மகத்தான மனிதன்! முப்பது வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த அற்புத மனிதன்.

உயிருக்கு உத்தரவாதமற்ற நாட்டுப்பணியில் சேர நம்மில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்? மனசு வரும்? அதுவும், சாதாரண அரசு சம்பளத்தில்! சுயநலம் பிடித்தவர்கள் நாம். வெகு சிலருக்கே, தன்னையும் தன் குடும்பத்தையும் மீறி, தான் பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கும் துணிவு இருக்கும். அது 'மேஜர் முகுந்த் வரதராஜனின்' வாழ்க்கையைப் பார்க்கும் போது எத்தனை கடினமான மனதையும் அசைத்து விடுகிறது.

முப்பது வயது மகனை இழந்த பெற்றோர்களின் வலி, கணவனுடன் முழுதாக வாழ்ந்த சில அரிய கணங்களைத் தவிர, அவன் நினைவிலே வாழ்ந்த அவனின் மனைவியின் ஆறாத வலி, தந்தைக்கு என்ன ஆனதே என்று தெரியாத ஒரு மகளின் பெரும்வலி. அது தான் இன்று பலரையும் அழ வைத்திருக்கிறது.

ஒரு நல்ல மகனாக, காதலனாக, கணவனாக, தன் படையினரைக் காக்க, எதிரிகளைத் தைரியத்துடன் எதிர்கொள்ளும் படைத்தலைவனாக, தன் தேசத்தைக் காக்க, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 'மேஜர் முகுந்த் வரதராஜன்' ரியல் ஹீரோ! ராயல் சல்யூட்!

சிவகார்த்திகேயனின் படங்களிலேயே முத்தாய்ப்பாக அவருக்குக் கிடைத்த வாய்ப்பை மிக அருமையாகப் பயன்படுத்தி, நன்றாக நடித்து, தன்னை நிரூபித்திருந்தார். சாய் பல்லவி, ஆஸ்கார் விருதுக்குத் தகுதியானவராகத் தன்னை நிரூபித்து விட்டார். அருமையான நடிப்பு!

முகுந்தின் அம்மாவாக நடித்திருந்தவரின் கேலி வசனங்களுக்குப் பின்னால் இருக்கும் வலி, படைவீரர்களின் அம்மாக்களுக்கே உரித்த வலி. என்ன அதிசயம்! கமல் தயாரிப்பு, ரகுமானை/அனிருத்தை இசை அமைக்கக் கேட்காமல், ஜிவிபிரகாஷிடம் கேட்டிருக்கிறது. காது சவ்வு கிழியாமல் படத்தோடு ஒன்றிப் போன இசையை அளித்த ஜிவிபிரகாஷிற்கு ஒரு சபாஷ்! படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.

தான் செய்த பாவங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் பரிகாரம் தேடிக்கொள்வது மனித இயல்பு. அப்படித்தான் கமலுக்கும் இந்தச் சந்தர்ப்பம். மற்றவர்களுக்கும்.

வட இந்தியர்கள் அளவிற்குத் தமிழ்நாட்டில் ராணுவத்தினைப் பற்றிய அறிவும் ஈடுபாடும் சற்றே குறைவாக இருந்தாலும் ஒரு திரைப்படமாகத் தமிழில் அழகான படத்தைக் கொடுத்திருப்பது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். ஹிந்தியில் ஏராளமான படங்கள் வந்துகொண்டிருக்கிறது.

நம்மிடையே 'முகுந்த் வரதராஜன்கள்' வாழ்ந்து வருவது நமக்குப் பெருமை. இந்தியர்கள் என்ற உணர்வு இருக்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நெஞ்சைத் தொடும்.

ஜெய் ஹிந்த்!

ஜெய் பஜ்ரங்பலி!


Monday, December 18, 2023

சில நேரங்களில் சில மனிதர்கள்


படத்தலைப்பைப் பார்த்தவுடன் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' புத்தகத்திலிருந்து தான் கதையை எடுத்திருப்பார்களோ என்று தோன்றியது. அப்படியெல்லாம் எடுத்து சொதப்பி வைக்காமல் விட்டுவிட்டார்கள். நல்ல வேளை! இதே தலைப்பில் ஏற்கெனவே ஒரு தமிழ்ப்படம் வந்திருக்கிறது. எப்படி அதே தலைப்பு என்ற கேள்வியுடன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். 

கதாநாயகன் அசோக் செல்வன். நான் பார்த்த இவர் படங்கள் இதுவரை நன்றாகத்தான் இருக்கிறது. நடிக்கவும் செய்வார். அமைதியான கதாபாத்திரங்களில் பார்த்து இந்தப்படத்தில் கோவக்கார 'விஜி'யாக பார்க்க வித்தியாசமாக இருந்தது. சிறிது நேரமே வந்தாலும் நாசர் உள்ளூர் பாஷையைப் பேச முயற்சி செய்ததால் வழக்கமான குரலைக் கேட்க முடியவில்லை. நாயகனின் நண்பனாக வருபவர், 'குட் நைட்' படத்தில் நடித்த மணிகண்டன் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள். 

அடுத்தவருக்காக ஆடமபரமாக வாழும் இளைஞன், தன் குறைகளை உணராமல் திருத்திக் கொள்ளாமல் உயர துடிக்கும் இன்னொருவன்,  விபத்தில் காயம்பட்டு கிடப்பவரைக் காப்பாற்ற நினைத்து பழியைச் சுமந்து அதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் மற்றொருவன்  இவர்களுடன் தான் விரும்பும் நேசிக்கும் மனிதர்களைத் தன் பேச்சுக்களால் செயல்களால் தொடர்ந்து காயப்படுத்தும் கதாநாயகன். இந்த நான்கு குடும்பங்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என்று காட்சிகள் நகர்ந்து ஓரிடத்தில் நடக்கும் விபத்தில் அனைவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவரவர் தவறுகளை உணர்ந்து திருந்துகிறார்கள். 

தவறு செய்யாத மனிதர்கள் யார் தான் இருக்கிறார்கள்? செய்த தவற்றைத் திருத்திக் கொள்பவர்கள் தான் அதிகம் இல்லை. அதைத்தான் இப்படம் கூறுகிறது. மேல்தட்டு, கீழ் தட்டு, நடுத்தர வர்க்கம் என்று நகர்கிறது. 

சமூக வலைதளத்தின் அழுக்குப்பக்கத்தை, அறமற்ற ஊடகவியலாளர்களின் அநாகரீகப் போக்கையும் நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள். படக்குழுவினருக்குப் பாராட்டுகள்.

நல்ல படம். 




Thursday, November 9, 2023

இறுகப்பற்று


கணவன்-மனைவி உறவில் உள்ள சிக்கல்களை உளவியலாளர்/மனோதத்துவ நிபுணர் வாயிலாக பேசுவதைப் போல இதுவரையில் தமிழில் இதற்கு முன் படங்கள் வந்த மாதிரி தெரியவில்லை. அந்த வகையில் 'இறுகப்பற்று' படத்தைப் பாராட்டலாம். இருப்பதிலேயே மிகவும் சிக்கலான உறவு என்றால் அது தம்பதியருக்குள்ளே இருக்கும், அந்த நாலு சுவற்றுக்கு மட்டுமே தெரிந்த உறவு. கணவனைப் புரிந்து கொள்ளாத மனைவியும் மனைவியைப் புரிந்து கொள்ளாத கணவனும் இருக்கும் குடும்பத்தில் தினம் ஒரு சண்டை தான். இருவரின் எதிர்பார்ப்புகளும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், உட்கார்ந்து மனம்திறந்து பேசுவதற்கு அங்கே 'ஈகோ' இடம் கொடுப்பதில்லை.

அம்மா-அப்பா வாழ்ந்த காலங்களைப் போல இல்லையே என்று ஆண்கள் பலரும் ஏங்குகிறார்கள். காலம் மாறிவிட்டது. அம்மாக்களைப் போல இன்றைய பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்யவில்லை. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்திருக்கும் காலத்தில் புது பிரச்சினைகள் முளைக்கிறது. அதனைக் கையாளத் தெரியாமல் சின்ன சின்ன சண்டையில் ஆரம்பித்து, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருகட்டத்தில் விலகிச் செல்வதே நல்லது என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பாதிப்பு இருவருக்கும் தான் என்றாலும் பெண்களுக்குத் தான் துயரம் அதிகம். ஒரு சில இடங்களில் மட்டும் ஆண்களும் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

மாறிவரும் காலத்தில் எதிர்பார்ப்புகள் கூடி வருவது இயற்கை என்றாலும் குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கிறதென்றால் எதிர்பார்ப்புகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும் தானே? செய்கிறோமோ? இல்லையே?

படத்தில் ஒரு தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினை மிகவும் சாதாரணமான ஒன்று. திருமணத்திற்கு முன் உலக அழகி ஐஸ்வர்யாராயாகவே இருந்தாலும் குழந்தைப் பிறப்பிற்குப் பின் உடல் எடை கூடுவது பெண்ணின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான மாறுதல். அந்த பத்து மாதங்கள் அவள் கடந்து வரும் மிகக்கடினமான பயணம். அதனால் ஏற்படும் உடல், மனச்சோர்வு. அவளுக்கு வேண்டிய ஆறுதலையும் தூக்கத்தையும் கொடுத்து அவளுடைய உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய கடமை கணவனுக்கும் உண்டு. மனைவி குண்டானால் விவாகரத்து கேட்பேன் என்றால் பெண் கிடைக்காமல் அலையும் மில்லினியல்கள் 'டர்ர்ர்ர்ர்ர்'ராகி விடுவார்கள்.

வேலையிடத்து நிர்பந்தங்கள், சுற்றத்தின் அழுத்தத்தால் வீடு, நகை இத்யாதிகள் வாங்க, பிடிக்காத வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். இதனால் ஏற்படும் மன அழுத்தம் வீட்டில் வெடிக்க, பிரச்சினை முளைக்கத்தான் செய்யும். நமக்கு என்ன வேண்டும் என்பதில் இருக்கிறது நம்முடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியும். அடுத்தவருக்காக வாழும் வாழ்க்கையில் தன்னைத் தொலைத்து அவதிப்படுவதில் தொடங்குகிறது ஒருவரின் குழப்பங்கள். தீர்வு காண முடியாமல் விஸ்வரூபமெடுக்கிறது அதிருப்திகள். முடிவில், ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீச, அமைதியற்ற மனது. நிம்மதியற்ற குடும்பம் உருவாகிறது.

இன்னொரு தம்பதியரின் பிரச்னை. காதலியாக இருக்கும் வரை இனித்தவள், மனைவியான பின் கசக்க ஆரம்பித்து விடுகிறாள். காரணத்தை ஆராய்ந்தால் அவளைப் பற்றி முழுமையாக உணரும் பொழுது தான் தன்னை விட பல மடங்கு திறமைசாலியாக இருப்பது பொறுக்காமல் எடுத்ததற்கெல்லாம் சண்டை. பெண்களும் சளைத்தவர்கள் அல்ல. டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் போட்டது போட்டபடி, தொலைபேசியை நோண்டிக்கொண்டே அலுவலக வேலையைப் பார்ப்பது, என் சம்பாத்தியத்தில் வெளியில் உணவை வாங்கிச் சாப்பிடுகிறேன் என்று ஆரம்பித்து ஆளை விடுடா சாமி என்று அம்மா வீட்டிற்குள் பத்திரமாகப் போய் விடுகிறார்கள். தன் பிழையை உணருபவர்கள் மிகவும் அரிது. உணர்ந்து மன்னிப்பு கேட்டுச் சேர்ந்து வாழ நினைப்பவர்களைப் புரிந்து கொள்பவர்கள் அரிதினும் அரிது.

இவர்களுக்கெல்லாம் வைத்தியம் பார்க்கும் அந்த உளவியலாளருக்கே சிக்கல் வந்தால், அதுதான் 'இறுகப்பற்று' படத்தின் கதை.

இத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இத்தனை தூரம் நடக்க வேண்டும். இவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் நொடிக்கொரு தடவை தொலைபேசியைப் பார்த்துச் செய்யுமளவிற்கு மூளை அடிமைப்பட்டுப் போயிருக்கிறது. கணவன்/மனைவி உறவில் விரிசல்கள் இல்லாமல் இருக்க, அதற்கும் ஒரு ஆப் வந்தாலும் வந்து விடும். இந்தப்படத்தில் வருகிறது. இருவரும் அவரவர் தனித்தன்மையுடன் அடுத்தவரை மதித்து நடக்கத் தெரிந்தாலே போதும். அங்கு தான் தவறுகிறோம். கோபத்தை மனதில் போட்டு வைத்துக் கொண்டால் ஒருநாள் வெடித்துச் சிதறும். குடும்பமும் கலைந்து விடும்.

இன்று திருமணமானவர்கள் 'கவுன்சிலிங்' செல்வது அதிகரித்து விட்டது. ஒன்று, குடும்பப் பெரியவர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லை. இந்தப் படத்தில் கூட பெரியவர்கள் அறிவுரை கூறுவது போல எந்தக் காட்சிகளும் இல்லை. முதல் காட்சியிலேயே பெற்றோர்களால் தான் பல மறைமுகப் பிரச்சினைகள் என்று கூறுவதும் சில பல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது.

இரண்டாவதாக, 'ஈகோ' பிடித்துக்கொண்டு அலையும் கூட்டம் அதிகமாகி விட்டது.  

இந்தப் படத்திற்குப் பிறகு பெண் உளவியலாளர் என்றால் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் தயங்குவார்கள். அத்தனை டார்ச்சர் செய்கிறாள் அந்தப் பெண்😖

முடிவில், 'பரஸ்பர புரிதல்' தான் உறவின் அடிப்படை.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடியும். ஏமாற்றம் கோபமாக மாறும். கோபம் வந்தால் கண்ணெதிரே இருக்கும் நல்லது கூட காணாமல் போய்விடும். இதைத்தான் எதிர்பார்க்காதே. ஏமாறாதே! என்பார்கள். ஆனால், நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் தானே? எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போவதே வேலையாக வைத்திருக்கிறோம். ஒரு கட்டத்தில் சலிப்பு வந்து புத்தி மட்டையாகி தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்.

கணவன் மனைவி இருவரும் தனித்தனி மனிதர்கள். வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்கள் சேர்ந்து வாழ்வதென்பது அத்தனை எளிதல்ல. புரிந்துகொள்ளலும், விட்டுக்கொடுத்தலும், பொறுமையும் இருந்தால் மட்டுமே இல்லறம் இனிதாகும். நல்ல தாம்பத்தியத்திற்கு இருவரும் மனம் ஒத்து இருக்க வேண்டும். சில உறவுகள் பிரிவதே நல்லது. அங்கு உடல், மன ரீதியான வன்முறையால் யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். ஊருக்காக வேஷம் போட்டுக் கொண்டு இயல்பைத் தொலைத்து விட்டு செயற்கையாக வாழ்வதில் ஒன்றும் சாதிக்க முடியாது.

இன்று உறவுகளுக்குள் இடைவெளி வர பல காரணங்கள். அருகில் இருக்கும் மனிதர்களிடம் பேசுவதை விட, யாரோ முகம் தெரியாத மனிதர்களுடன் பேசுவதை மனம் விரும்புகிறது. சமூக வலைதளங்கள் அதனைச் செவ்வனே செய்து வருகிறது. இங்குள்ள மருத்துவர்கள் பலரும், மனநிம்மதியின்றி இருப்பவர்களுக்குக் கூறும் முதல் அறிவுரை. "ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸப்" இத்யாதிகளில் இருந்து வெளியே வாருங்கள் என்பது தான். அது ஒரு மாய உலகம். தன்னைத்தவிர அனைவரும் கவலையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் முதலிடமும் அதுதான். அங்கே பிரபலமாக இருப்பவர்கள் பலரும் தங்களுடைய கவலைகளை, இழப்புகளை, ஏமாற்றங்களை, துன்பங்களை மறைத்து இன்பமாகவே உலவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பலரும் நிம்மதியை இழக்கிறார்கள்.

மனிதர்கள் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதன் அளவுகோல்கள் வேண்டுமானால் மாறலாம். அதனால் நமக்கு மட்டும் தான் கவலைகள், துன்பங்கள் என்று புலம்புவதை விட வேண்டும். மனிதர்களைப் புரிந்து கொண்ட, வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரிந்த வெகுசிலரே அமைதியுடன், மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.  

உறவுகளுக்குள் தேவையற்ற பிரிவுகளைத் தடுக்க, மனந்திறந்து பேச, பெற்றோர்களின் முறையான வழிகாட்டல் இல்லையென்றால் 'திருமண ஆலோசனை' நல்லது. உடல்நலத்தைப் பேணுவது போல மனநலத்தைப் பேணுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

காலத்திற்கேற்ற படம். எதற்காக இத்தனை மெதுவாக காட்சிகள் நகருகிறது? எத்தனை பாட்டுகள்! பொறுமையாகப் பார்க்க வேண்டும்.

சமீபகாலமாகத் தமிழில் வெளிவரும் வெட்டு, குத்து, ரத்தக்களறி, இரைச்சல் படங்களை விட நல்ல படம். இயக்குனருக்குப் பாராட்டுகள்!

Saturday, August 12, 2023

ஜெயிலர்

 


'ஜெயிலர்' பத்தி விமரிசனம் பண்ணவில்லையென்றால் சமூகவலைத்தளத்தில் இருந்து என்ன பிரயோஜனம்? இல்லையா மக்களே😎 எத்தனை வயதானாலும் நண்பர்களோடு படம் பார்க்கிறதென்பது ஒரு ஆனந்தம் தான். அதுவும் ரஜினி படமென்றால் அது ஒரு படி மேல் ஜாலி. அதுவும் நியூயார்க்லன்னா சொல்லவே வேண்டாம் 😊 மாலை 7.20காட்சிக்கு முன்பதிவெல்லாம் செய்துகொண்டு ஏழு மணிக்குத் திரையரங்கில் கூடி பார்க்கவேண்டுமே எல்லார் முகத்தையும்! மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 'போக்கிரி ராஜா', சிவம் திரையரங்கில் 'முரட்டுக் காளை', நடனாவில் 'தம்பிக்கு எந்த ஊரு' படங்கள் நினைவிற்கு வந்தது. முன்பதிவு செய்யும் வசதிகள் இல்லாத காலத்தில் கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் கைக்கு கிடைத்தவுடன் வரும் உற்சாகம் இருக்கிறதே! அது தனி சுகம்! பிறகு கல்லூரி படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் போகும் பொழுது என்று அந்தச் சின்ன சின்ன சுகங்கள் எல்லாம் தொலைந்து விட்டது. அதனால் கூட்டமாக நண்பர்களுடன் திரையரங்கிற்குச் சென்று பார்ப்பதே சுகானுபவம் ஆகிவிட்டிருக்கிறது!

கையில் செல்ஃபோன் வைத்திருந்தால் அடிக்கடி படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாடி நரம்புகளில் ஏறிவிட்டிருக்கிற உணர்வு. மறக்காமல் குழுப்படங்கள் எடுத்தாகி விட்டது. என்ன! பெரிய ரஜினி படச் சுவரொட்டிகள் தான் மிஸ்ஸிங்.

அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். ஆளுக்கொரு சீட்டியுடன். பொண்ணுங்க இப்படியெல்லாம் ரவுடி மாதிரி விசில் அடிக்கக் கூடாதுன்னு அடிச்சு வளர்த்ததால இயற்கையா விசிலடிக்கிறதும் மறந்து போய் விட்டது. சே! விசில் அடிச்சே பாட்டுப்பாடும் பாடகியை இந்த உலகம் இழந்து விட்டது! என்னத்த சொல்ல😉 இன்று வரையில் தொடருகிறது அதற்கான முயற்சிகள் என்பது வேறு விஷயம்.

கொஞ்ச நேரம் விளம்பரங்கள் போட்டு கழுத்தறுப்பான்னு பார்த்தா... டபக்குன்னு ஐங்கரன் படத்த போட்டுட்டான்! அவ்வளவு தான் விசிலு சத்தம்!! பாவம் ஈஷ்வர்! முன்வரிசையில் மீனா கையைத் தட்டிக் கொண்டு செம உற்சாக ஆட்டம்.

படத்தின் முதல் பாதி தாத்தாவாக பேரனுடன் ரஜினிக்கே உரிய ஜாலி குட் ஃபெல்லொ ஆக்ட். படுகச்சிதமாக இருந்தது. பேரனாக நடித்த சின்னப்பையன் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம். அவனைப் பார்த்தவுடனே அனைவருக்கும் ஒரே சந்தோஷம். அழகான குடும்பமாக காண்பிக்கிறார்கள் அதுவும் ஒரு காவல் அதிகாரி வீடு என்றால் கதை எப்படி போகும் என்பது தமிழ்ப்படங்களைப் பார்ப்பவர்கள் எளிதில் கற்பனை செய்து கொண்டுவிடலாம். நாமெல்லாம் புள்ளி வைத்தால் கோலம் போடுபவர்களாச்சே😉

கதை ஆரம்பமானது. இத்தனை வன்முறை தேவையா? என்னாயிற்று தமிழ் திரையுலகிற்கு! பில்லா,காளி படங்களும் பழிவாங்கல் படங்கள் தான். ஆனால் வன்முறையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்திற்கு நல்லதா? இதைப் பொழுதுபோக்கு என்று கடந்து செல்லவே முடியவில்லை. இதை ஆதரித்து உற்சாகப்படுத்துகிறோமோ என்று தான் தோன்றியது. நேற்று நாங்குநேரியில் பள்ளிக்கூட மாணவர்களிடையே நடந்த கத்திக்குத்து சம்பவம் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பயத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்திய வன்முறைப் படங்கள் எத்தகைய தாக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? வன்முறையைக் குறைத்திருக்க வேண்டும். அதுவும் மிக நெருக்கத்தில் காதை அறுப்பது, இளநீரைச் சீவுவது போல தலையைச் சீவுவது, கழுத்தை அறுப்பது என்று ரத்த சகதி. சை! நான் தான் தமிழ்ப்படங்களில் இருந்து விலகி விட்டேனோ? ஐயோ! இந்த கொரியன் நாடகங்களைப் பார்த்து இப்படி ஆயிட்டேனா😍

இனி தான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறேன்னு ரஜினி கிளம்பிய பிறகு அதுவும் அந்த திகார் சிறைக்காட்சிகள் 'மூன்று முகம்' ரஜினி அப்படியே ஸ்டைலாக நடந்து வந்தது போல் இருந்தது. ரம்யாகிருஷ்ணனின் படையப்பா வசனம் படம் முழுவதும் ஞாபகத்திற்கு வந்தால் நீயும் ரஜினி ரசிகனே😍 72 வயதிலும் இந்த மனிதரால் ரசிகர்களை உற்சாகப்படுவதால் தான் 'ரஜினி' இன்றும் முன்னணியில் இருக்கிறார்😍 இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அந்த மனுஷன நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறோம்😔 இந்தா! அடுத்த படத்துக்கு கமிட் ஆயிட்டாராம்! என்னவோ போடா மாதவா!

பின் இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் 'எண்டே' தேசத்தைச் சேர்ந்தவர்கள் போல. மோகன்லால் வரும்பொழுதெல்லாம் ஒரே கைத்தட்டல் தான். ரஜினி மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்குன்னு பேசி வியாபாரத்துக்கும் வியாபாரம் ஆச்சு. சன்டிவிக்காரனுக்குப் பணமும் ஆச்சு.

ஒரு நேர்மையான அதிகாரி யாருக்கும் பங்கம் வராமல் தந்திரமாக வில்லன்களை அழிப்பது தான் கதை. தன் கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் அது அவனது மகனாகவே இருந்தாலும் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பான்ங்கிற கதையை ரஜினி ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் நெல்சன். ரஜினிய வச்சு சமூகநீதிப்படங்கள்னு அவரை கீழே இழுத்துவிட்ட ரஞ்சித் கும்பல் கொஞ்சம் இந்த இயக்குநர்ட்ட கத்துக்கலாம்.

பொழுதுபோக்கிற்காகத் தான் திரைப்படங்கள் எல்லாம். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் பணம் கிடைக்கிறது என்பதற்காக வன்முறையைத் தூண்டிவிடும் காட்சிகளில் நடிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கும் சமூக வெறியைத் தூண்டும் அரசியல்வியாதிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

அந்தப்பாட்டைப் பற்றிச் சொல்லவில்லையென்றால் தெய்வ குற்றமாகி விடும். ஐயோ! தமன்னாவா அது? பாவம்! இப்படி "மெகபூபா மெகபூபா" குத்துப்பாடல் ரேஞ்சிற்கு இறங்கிட்டாரே! செம ட்ரெண்டிங்கில் இருக்கு அந்தப்பாடல்! அதிலும் ஒரு சிலர் ஆட்டம் எல்லாம் கிளாஸ். பலர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்தால் 'பகீர்' என்று இருக்கிறது. அரைகுறை ஆடைகள் உடுத்திய சிறு வயதுப் பெண்களுடன் டூயட், ரொமான்ஸ், தேவையில்லாத 'பஞ்ச்' டயலாக் என்றில்லாமல் நல்ல கதை, ரஜினிக்கேற்ற படம், அதை ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி எடுத்து வெற்றி கண்டுள்ளது 'ஜெயிலர்' படம்.

 அப்புறம், ஆங்! யோகிபாபு! அவரைப் பார்த்தவுடனேயே சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்! அதிகம் மெனக்கெடமால் உடல்மொழியிலேயே நடிக்கிறார். பரோட்டா சூரிக்குப் பிறகு இப்போதைக்கு சிரிப்பிற்கு இவர் ஒருத்தர் தான் போல. அப்புறம் குடும்பத்தலைவியாக ரம்யாகிருஷ்ணன். இருவரும் கொடுத்த பாத்திரத்திற்கு நடித்திருக்கிறார்கள். வில்லன் நடிகர் அந்த கதாபாத்திரத்தைப் பார்த்து அவரே மிரண்டு விட்டார் போல✌

இந்தப்படத்தை நண்பர்களுடன் டொரோண்டாவில் பார்த்திருந்தால் அந்த அனுபவமே அலாதியாக இருந்திருக்கும். 'பவர்பாண்டி' படத்தை நண்பர்களுடன் டொரோண்டா திரையரங்கில் பார்த்த பொழுது இலங்கைத்தமிழ் மக்கள் அடித்த கமெண்ட்கள் கேட்க ரகளையாக இருந்தது. இந்தப்படத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இன்னும் ஜாலியாக இருந்திருக்கும். அது ஒன்று தான் எனக்கு மிஸ்ஸிங் ஆக இருந்தது.

மற்றபடி, "காதலின் தீபம் ஒன்று ஏற்றினானே என் நெஞ்சில்" என்று இன்றும் ரசிப்பவர்கள் சொல்வதெல்லாம் "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையவே இல்லை."

Tuesday, July 11, 2023

Good night


ஒரு வாழ்வியல் பிரச்னையை மையமாக வைத்து சம காலத்தில் நடக்கும் வேறு பல பிரச்சினைகளுடன் அழகாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். குறட்டை ஒலிக்காத வீடுகள் அருகி வரும் காலத்தில் இப்படியொரு படம் தேவை தான். பொதுவாகவே, குறட்டை விடுபவர்கள் ஒன்று தாங்கள் குறட்டை விடுவதே இல்லை என்று சாதிப்பார்கள் இல்லையென்றால் அவ்வளவு மோசமில்லை என்று வாதிடுவார்கள். எல்லாரும் தான் குறட்டை விடுகிறார்கள் என்று கூட நான்கு பேரை அழைத்துக் கொள்வார்கள்.

அமெரிக்காவில் சில விவாகரத்து வழக்குகளுக்கு காரணமே கணவரின் தாங்க முடியாத குறட்டையால் சரியாக தூங்க முடியாமல் உடல்நலன் கெட்டது போன்றவை. இதில் உண்மையும் இருக்கிறது. பலரும் இன்று ஆளுக்கொரு அறையில் தூங்கி தப்பித்துக் கொள்கிறார்கள். அது தான் ஒரே வழி? ஒரு அறையில் குடித்தனம் பண்ண வேண்டியவர்கள் நிலைமையோ பரிதாபம் தான்.

இந்தப்படத்தில் வரும் கதாநாயகன் வேலைக்குச் செல்லும் வழியில் தூங்கி குறட்டை விட்டு காதலியை இழக்கிறான். அவனைப் பற்றித் தெரியாத பெண்ணை மணந்து அவதிப்பட்டு இறுதியில் சமரசம் ஆகிறார்கள் கணவனும் மனைவியும். வேறு வழி? அந்தப் பெண்ணும் தியாகியாகி... என்னவோ போடா மாதவா...😕 இந்தப் படத்தின் அழகே நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் தான். ஏதோ பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போல எளிதில் கதையுடன் ஒன்ற அவர்கள் பெரிதளவில் உதவுகிறார்கள்.

அலுவலகங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்கள், திருமணமான பெண்ணிற்கு குழந்தை இல்லை என்றால் எப்படியெல்லாம் சமூகம் ஒருவரை சித்திரவதைக்குள்ளாக்கும், வீட்டிற்கு வேலை செய்ய வருபவர்களை வேலைக்காரர்களாக நடத்தாமல் மனிதாபிமானத்துடன் நடத்துவது என்று அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

குறட்டை விடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியங்கள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 'ஸ்லீப் ஆப்னியா' என்ற பெயருடன் வலம் வரும் இந்தப் பிரச்னைக்கு 'ஸ்கூபா டைவிங்' செய்வது போல  சில முகமூடிகள் போன்ற உபகரணங்களை அணிந்து தூங்கச் சொல்கிறார்கள். சரியாக தூங்கவில்லையென்றால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் என்று ஒவ்வொன்றாக கிளம்பி விடும் என பயந்து பலரும் முயற்சிக்கின்றனர்.

இப்படத்தில் வரும் 'மோட்டார்' மோகனைப் பல பல மோகன்கள் உலகில் இருக்கிறார்கள். இது சர்வதேச பிரச்னையாக்கும்😔ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் உண்டு. உடல் பருமன் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் குறட்டை விடும் நபருக்கு மூக்கெலும்பில், மூச்சுக்குழாயில் பிரச்னை இருக்கலாம். அதனால் மருத்துவரை அணுகி தெளிவு பெறலாம். இல்லையென்றால் பொறுமைசாலி குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றியுடன் இருக்கலாம்.

சென்னை-மதுரை செல்லும் ரயிலில் சிலபல டெசிபல்களில் மக்கள் விதவிதமாக ஸ்வரங்கள் வாசித்துக் கொண்டிருந்த அந்த இரவைத் தான் மறக்க முடியுமா? இப்பொழுதெல்லாம் பிரயாணங்களில் குறட்டை விடாதவர்கள் பக்கத்து இருக்கையில் கிடைக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது.

குறட்டைச் சத்தம் கேட்காத வீடுகளே இல்லை. குறட்டை விடாத கணவனோ/மனைவியோ வேண்டாம் என்றால் இன்று பலரும் சிங்கிளாகத் தான் திரிந்து கொண்டிருப்பார்கள். நமக்கெல்லாம் 'பேசும் படம்' கமல் மாதிரி😝

கொடுமையான உலகமப்பா😴😴😴😴😴


Monday, July 3, 2023

தீராக்காதல்

சமீபத்தில் பார்த்த தமிழ்ப்படங்களில் 'பரவாயில்லை' என்று சொல்ல வைத்த படம் 'தீராக்காதல்'. காதலித்தவர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ளவது இல்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் சிலர் கடைசி வரை சேர்ந்து வாழ்வது இல்லை. விடுகிறார்கள். அப்படியே சேர்ந்து வாழ்ந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்பது அரிது தான். அது எல்லா திருமணங்களுக்கும் பொருந்தும் என்றாலும் காதல் திருமணங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கியமான அம்சம்.

கல்லூரியில் நிறைவேறாத காதல் '96' படத்தில் வந்தது போல அவரவர் வாழ்க்கையில் நினைவுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கும். எங்கும் எப்பொழுதும் மனதின் அடிஆழத்தில் சுகமான நினைவுகளாக காதலித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கும். முக்கியமாக கணவனுக்கோ, மனைவிக்கோ தெரியாது பொக்கிஷமாக பொத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள்.

சமூகவலைதள காலத்தில் பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்திப்பதும் பேசிக்கொள்வதும் நடந்து வருகிறது. அந்த எல்லைக்குள் இருக்கும் வரை பிரச்னையில்லை. எல்லை மீறும் பொழுது ஏற்படும் மன வருத்தங்களைத் தான் இந்தப்படம் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறது. இன்னும் கூட நன்றாக எடுத்திருக்கலாம். கதாநாயகி 'சைக்கோ'வாக மாறும் அளவிற்கு உண்மைக்காதலா? அப்படி ஒன்றும் கதை நிரூபித்த மாதிரி தெரியவில்லை. நல்லவேளையாக சரியான நேரத்தில் படத்தை முடித்திருந்தார்கள். 

கதாநாயகனின் பாத்திரப்படைப்பு உண்மையாக இருந்தது. ஜெய்யும் நன்றாக பொருந்தியிருந்தார். நிறைவேறாத காதல், கண்டுகொள்ளாத மனைவி ஆனாலும் வாழ்க்கை வாழ வேண்டியது தான். உண்மையான காதல் அன்று இருந்தது. எப்பொழுதும் இருக்கிறது. சிறிது தடுமாற்றம் இருந்தாலும் முன்னாள் காதலியின் சைக்கோத்தனம் அவளிடமிருந்து பிரியும் காரணத்தை வலுவாக்குவது போல் காட்சிகளை அமைத்திருந்தார்கள். பழைய காட்சிகள் என்ற அபத்தங்கள் இல்லாமல் காட்சிகளை அமைத்திருந்தது சிறப்பு.

இதையே காதலன் சைக்கோவாக காதலியின் குடும்ப நிம்மதியைத் தொலைக்கிற மாதிரி இருந்தால் எப்படி முடித்திருப்பார்களோ ?

உண்மையான காதல் என்பது என்றுமே உயிர்ப்புடன் தான் இருக்கும். படத்தின் முடிவில் வருவது போல் காதலர்கள் எங்கிருந்தாலும் காதல் வாழும். 

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சுட்டிக்குழந்தை, சுவேதா, நண்பன் கதாபாத்திரம் என்று அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்கு நடித்திருக்கிறார்கள். தேவையற்ற குறியீடுகள், பாடல்கள் போன்ற இம்சைகள் இல்லாதது மிகச்சிறப்பு. 

அமேசான் ப்ரைமில் இப்படத்தைப் பார்க்கலாம்.



Wednesday, February 5, 2020

கே.டி


பெற்றவரே ஆனாலும் மூப்பும் நோயும் வந்த பிறகு யார் அவரைப்  பார்த்துக் கொள்வது, செலவுகளைச் சமாளிப்பது என்பதில் ஆரம்பித்து சொத்து பத்திரத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு அவர் கதையை முடித்து விட வேண்டும் என்ற கொடிய எண்ணம் பெற்ற குழந்தைகளிடையே வருவதை எண்ணி வெட்கி தலைகுனிய வைக்கிறது இப்படம்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெற்றவர்களைப் புறக்கணிக்க ஆயிரம் காரணங்கள். திருமணமான மகனோ, மகளோ தத்தம் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய நிர்பந்தம். பெற்றோர்களுடன் செலவிடும் நேரங்களும் குறைவு. அவர்களுடைய ஆசைகள், விருப்பங்களைக் கேட்டுக் கொள்வதுமில்லை. அப்படியே கேட்டுக் கொண்டாலும் இந்த வயதில் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று அவர்கள் வாயை எளிதில் கட்டிப்போட முடிகிறது. நாளைக்கு நமக்கும் அது தான் நிலைமை என்று யோசிக்காமலே!

துணையை இழந்த மனிதர்கள் அதுவும் மனைவியை இழந்த கணவர்களின் நிலைமை மிகவும் கொடூரம் தான். இப்படத்தில் அந்த முதியவர் தான் விரும்பிச் சாப்பிடும் பிரியாணியை ரசித்து ருசித்து உண்பது, தன்னுடைய சிறுவயது ஆசைகள் நிறைவேறுகையில் குழந்தையைப் போல் துள்ளிக் குதித்து மனம் திறந்து சிரிப்பது... வயதானவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது இப்படம்.

முதுமையில் அவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் கனிவான பேச்சும், அனுசரணையும், அன்பும் ஆதரவும் தான். நாளை நம்முடைய நிலைமையும் இதுதான். யோசித்து நடப்போமா?

படம் முழுவதும் கூடவே பயணிக்கும் இயற்கை எழில் சூழ்ந்த கிராமம், வெள்ளந்தி மனிதர்கள், கோவில், குளம், மலைகளும் அழகு.










அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...